search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 130486"

    • மாற்று தேதிகளில் ஜல்லிக்கட்டை நடத்த விழா கமிட்டியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் விழா கமிட்டியினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை முறையாக அமல்படுத்தவில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியர், இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். மாற்று தேதிகளில் நடத்தவும் விழா கமிட்டியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் விழா கமிட்டியினர் கடும் அதிருப்தி அடைந்தனர். விழா கமிட்டியினரும், பொதுமக்களும் அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏறபட்டது.

    • கிராம ஜல்லிக்கட்டு கமிட்டினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கிராமம் ஜல்லிக்கட்டு கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

    அவனியாபுரம்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15-ந் தேதி அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

    அவனியாபுரத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதற்கு முன்பு அவனியாபுரம் பகுதியில் அயன்பாப்பாக்குடி கிராம ஜல்லிக்கட்டு, அய்வேத்தனந்தல் ஜல்லிக்கட்டு, உடைக்காலம் கண்மாய் ஜல்லிக்கட்டு, தாவரஏந்தல் கிராம ஜல்லிக்கட்டு,தெங்கால் கண்மாய் கிராம ஜல்லிக்கட்டு என 5-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வந்தன.

    பின்னர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அவனியாபுரத்தில் ஒரே ஜல்லிக்கட்டு போட்டியாக அவனியாபுரம் திருப்ப ரங்குன்றம் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியை நடத்தி யவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் அதிகாரம் கொண்டவர்களாக இருப்பதாக குற்றம் சாட்டி அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டி தொடங்கப்பட்டு இதில் அனைத்து சமுதாய மக்களையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அந்த பேச்சுவார்த்தை முடிவு பெறாத நிலையில் நீதிமன்றம் வரை அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டியும், தெங்கால் விவசாய கமிட்டியும் சென்றது. நீதிமன்றம், 2 ஜல்லிக்கட்டு கமிட்டிகளும் இணைந்து செயல்படுங்கள் என அறிவுறுத்தியது.

    இதை ஏற்க மறுத்த 2 ஜல்லிக்கட்டு கமிட்டிகளும் மேல்முறையீடு வரை சென்றது. பின்னர் மாவட்ட நிர்வாகம் அழைத்துப் பேசியும் சமாதானமாகாத நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற நீதிபதி தலை மையில் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் நடைபெற்றது.

    பின்னர் வருடந்தோறும் தை மாதம் 15-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டியை தாங்கள் தான் நடத்துவோம் என்று 2 கமிட்டினரும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து ஆண்டு தோறும் அரசு சார்பில் மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உத்தரவிடப்பட்டு அதன்படி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நாங்கள் தான் நடத்துவோம் என 2 ஜல்லிக்கட்டு கமிட்டினரும், அமைச்சர் மூர்த்தியிடம் முறையிட்டனர். இதற்கு அவர் 2 கமிட்டினரும் ஒன்றாக இணைந்து வந்தால் நான் ஆதரவு தருகிறேன் என்றும், இல்லையென்றால் எனது ஆதரவு இல்லை என்றும் தெரிவித்து விட்டார். இதனால் இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் நிலை உள்ளது.

    இந்த நிலையில் இன்று (5-ந் தேதி) அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பாக அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டி சார்பாக மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர். இதில் கமிட்டி தலைவர் முருகன் தலைமையில் நாட்டாமை கண்ணன், வழக்கறிஞர் அன்பரசன், தீத்தி பிச்சை, சிவமணி,முனியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் இன்குலப், ம.தி.மு.க. கவுன்சிலர் அய்யனார், ஜெயசந்திரன், காங்கிரஸ் கஜேந்திரன், குமரையா, கம்யூனிஸ்டு கட்சி சார்பாக தனபாலன், அ.தி.மு.க. சார்பில் கார்த்திகேயன், பா.ஜ.க. சார்பில் சடாசரம், பாலன், மக்கள் நீதி மய்யம் சார்பாக சிவகுமார் உள்பட 300 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கிராமம் ஜல்லிக்கட்டு கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

    • ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு நடத்தினார்.
    • உலகப்புகழ்பெற்ற பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

    அலங்காநல்லூர்

    உலகப்புகழ்பெற்ற பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் இன்று அலங்காநல்லூர் வாடிவாசலை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது டி.எஸ்.பி பாலசுந்தரம், அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன் மற்றும் விழா குழுவினர், போலீசார் கலந்து கொண்டனர்.

    ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், பார்வையாளர் கேலரி அமைப்பது, காளைகள் நிறுத்தப்படும் இடம், காளைகள் வந்து சேரும் இடம், வாடி வாசல் உள்ளிட்ட இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைதொடர்ந்து பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளையும் போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெறும் காளையுடன் அதன் உரிமையாளர் மற்றும் உதவியாளர் ஒருவர் மட்டுமே கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும்.
    • ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகள் போட்டிகளில் பங்கேற்கும் முன்பு அதன் உரிமையாளர் கண்டிப்பாக காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அதற்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி மாவட்டத்தில் வருகிற 2023-ம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நேர அவசரம் தவிர்க்கும் பொருட்டும், அரசிதழ்களில் அறிவிப்புகள் வெளியிடும் பொருட்டும் எதிர்வரும் 2023-ம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்களை போட்டி நடத்தப்படும் 15 தினங்களுக்கு முன்னதாக மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சு விரட்டு, எருது விடும் விழா போட்டிகளை நடத்தும் விழா குழுவினர் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசாணை எண்: 7 நாள் 21.07.2017-ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி போட்டியினை நடத்துவதற்கு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    அரசிடம் முன் அனுமதி பெற்று மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும். அரசாணை வெளியிடப்பட்டு கடந்த ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற கிராமங்களில் மட்டுமே தற்போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும்.

    அரசாணை வெளியிடப்படாமல் கடந்த காலங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி வேண்டுமெனில், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றதற்கான புகைப்படங்கள், நாளிதழ்களில் வரப்பெற்ற செய்தி, கல்வெட்டு மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல் போன்ற ஆதாரங்களுடன் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

    ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெறும் காளையுடன் அதன் உரிமையாளர் மற்றும் உதவியாளர் ஒருவர் மட்டுமே கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகள் போட்டிகளில் பங்கேற்கும் முன்பு அதன் உரிமையாளர் கண்டிப்பாக காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அதற்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் காளை பங்கேற்று முடிந்த பிறகு அதன் உரிமையாளர் காளையினை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியில் காளை பங்கேற்று முடிந்த பிறகு அதன் உரிமையாளர்கள் கண்டிப்பாக காளைகளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற்ற காளைகளுக்கு போதிய அளவு ஓய்வளித்து, காளைகளை உடனடியாக வீடுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்தும் விழாக்குழுவினர் மற்றும் போட்டியில் பங்குபெற காளைகளை அழைத்து வரும் காளையின் உரிமையாளர் மற்றும் போட்டியில் பங்குபெறும் அனைத்து வீரர்களும் கண்டிப்பாக கோவிட்-19 தடுப்பூசி இரண்டு தவணைகளும் செலுத்தியிருக்க வேண்டும்.

    மேலும், விழாவில் பங்கு பெறுவோர் கோவிட்-19 பரிசோதனையினை விழா நடைபெறும் இரண்டு தினங்களுக்கு முன்பு மேற்கொண்டு கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றினை மருத்துவக் குழுவினரிடம் வழங்க வேண்டும்.

    அரசிடமிருந்து முன் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்குறித்த அறிவுரைகளை பின்பற்றி உறுதிமொழிகளுடன் போட்டி நடத்த உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அளித்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு கலெக்டர் மா.பிரதீப் குமார் அதில் தெரிவித்துள்ளார்.

    • கலெக்டர் கவிதா ராமு அறிவிப்பு
    • ஜல்லிக்கட்டு நடத்த புதிய நிபந்தனைகள் விதிக்கபட்டது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023ம் ஆண்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சி நடத்த விழா ஒருங்கிணைப்பாளர்கள் 1 மாதத்திற்கு முன்னதாகவே விண்ணப்பம் செய்ய வேண்டும். அனுமதி கோரி வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, அரசிதழில் பதிவு செய்ய விழா நடைபெறுவதற்கு 20 தினங்களுக்கு முன்னதாக சம்மந்தப்பட்ட கிராமம் மற்றும் விழா நடைபெறும் நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு அரசாணை பெறுவதற்கு கால்நடை பராமரிப்புத் துறை ஆணையருக்கு கருத்துரு அனுப்பப்பட வேண்டும் என அரசால் ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை முறையாக பின்பற்றப்பட வேண்டும். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கான முன்பதிவு முறையை மாவட்ட நிர்வாகம் நிர்ணயிக்கும் எண்ணிக்கையில் இணையதளம் வாயிலாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதனை காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பம் செய்துகொள்ள வேண்டும். அதன்பேரில், உரிய ஆவணங்கள் மற்றும் மருத்துவச் சான்றின் அடிப்படையில், பரிசீலனை செய்து தகுதியான மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை மாடுகளுக்கு முறைப்படி அனுமதி வழங்கப்படும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்களும் மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்தவர்களும் அரசின் நிலையான வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடித்து ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போன்ற நிகழ்ச்சிகளை பாதுகாப்பாகவும் அரசின் வழிகாட்டுதல்களின்படியும் சிறப்பாக நடத்திட போதிய ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.


    • பேட்டகாளி, சோழன், அணில், கரிசல், கரிகாலன், புல்லட் என இவர் வளர்க்கும் காளைகளுக்கு செல்ல பெயர் வைத்துள்ளார்.
    • ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஒவ்வொரு காளையும் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகிறது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இலங்கையின் முன்னாள் முதலமைச்சரும், இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் திருப்பத்தூர் அருகே ஆளவிளாம்பட்டி கிராமத்திலுள்ள அவரது தோப்பில் தமிழகம் மற்றும் வெளி மாநில காளைகளை வாங்கி பராமரித்து வருகிறார்.

    ஜல்லிக்கட்டில் ஆர்வம் உள்ள செந்தில் தொண்டமான் தன்னுடைய காளைகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வைப்பது வழக்கம். அவருடைய காளைகள் பரிசுகளை குவித்து நம்பர் ஒன் காளைகளாக திகழ்ந்து வருகின்றன.

    பேட்டகாளி, சோழன், அணில், கரிசல், கரிகாலன், புல்லட் என இவர் வளர்க்கும் காளைகளுக்கு செல்ல பெயர் வைத்துள்ளார். சீறிப்பாய்வதில் அசாத்திய திறமை, பெருத்த திமில், கூரிய கொம்புகள், ராஜநடையோடு கம்பீரமாக வலம் வரும் இந்த காளைகள் களத்தில் வீரர்களை மிரள வைக்கும் அளவிற்கு சிறப்பு பயிற்சிகளை அளித்து வருகிறார் செந்தில் தொண்டமான்.

    பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக எனது தோட்டத்திலேயே வாடிவாசல் ஏற்பாடு செய்து அதன் வழியாக பாய்ந்தோட பயிற்சி வழங்குதல், சீறிப்பாய்ந்து மணற்மேடுகளை முட்டுதல், மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் இருக்க தனி பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் காளையின் உடல் வலிமைக்காக வழக்கமான உணவுகளை தவிர்த்து பேரிச்சம் பழம், பருத்தி விதை, புண்ணாக்கு, முட்டை, கோதுமை தவிடு போன்ற ஊட்டமளிக்கும் உணவுப் பொருள்களை வழங்குகின்றோம்.

    காளைகளுக்கு தினமும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஒவ்வொரு காளையும் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகிறது.

    ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டிக்கும் சென்றுவர கேரவன், தனித்தனி அறைகளில் பேன், ஏர்கூலர், வசதியுடன் கூடிய தங்குமிடம் என இந்த காளைகளுக்கு அனைத்து வசதிகளோடு கூடிய பராமரிப்பும் தீவிர பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
    • இந்த போட்டிக்கு ஒருதரப்பினருக்கு ஆதரவாக கிராம நிர்வாக அதிகாரி செயல்படுவதாக கூறி முற்றுகையிட்டனர்.

    அவனியாபுரம்

    பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரத்தில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

    இந்த போட்டி நடத்துவது தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இரு பிரிவுகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு பின்னர் இரு பிரிவுகளும் நீதிமன்றம் சென்றனர்.

    நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 4 ஆண்டுகளுக்கு ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இரு பிரிவினர்களையும் அழைத்து கலெக்டர் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தியும் பலனில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக இருதரப்பினரும் கலெக்ட ரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஒருதரப்பினருக்கு ஆதரவாக கிராம நிர்வாக அதிகாரி செயல்படுவதாக கூறி இன்று அவனியாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தை அனைத்து சமுதாய பொதுமக்கள் கமிட்டியினர் முற்றுகையிட்டனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • அனல் பறக்கும் வகையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வருவது மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருவார்கள்.
    • வாடிவாசலில் இருந்து பாய்ந்து வரும் காளையை எவ்வாறு பிடிப்பது? காளைகளை எப்படி அடக்க வேண்டும்? போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தமிழர்களின் வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்படும் போட்டி ஜல்லிக்கட்டு. பொங்கல் பண்டிகை நேரத்தில் நடத்தப்படும் இந்த போட்டியில் இளைஞர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள்.

    தமிழகத்தில் பல மாவட்டங்களில் நடந்த போதிலும் மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது. இங்கு நடக்கும் ஜல்லிக்கட்டில் மதுரை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் வளர்க்கப்படும் காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்து பங்கேற்க செய்வார்கள்.

    களத்தில் திமிறிக்கொண்டு ஓடும் காளைகளை இளைஞர்கள் போட்டி போட்டு அடக்குவார்கள். போட்டியில் காளைகளை அடக்கக்கூடிய இளைஞர்களுக்கும், வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் சேர், கட்டில், பீரோ, சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், மோட்டார் சைக்கிள், தங்க காசு என தொடங்கி பம்பர் பரிசாக கார் வரை வழங்கப்படுகிறது. இதனால் காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்க வரும் வீரர்களுக்கும் களத்தில் கடும் போட்டி நிலவும்.

    அனல் பறக்கும் வகையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வருவது மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருவார்கள். இதனால் ஜல்லிக்கட்டு நடைபெறும் நேரத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகள் களை கட்டும்.

    இப்படிப்பட்ட ஜல்லிக்கட்டு கொரோனா பரவல் காரணமாக 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் நடத்த முடியாமல் போனது. ஆனால் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடத்தப்பட்டது. ஆனால் வீரர்கள் மற்றும் காளைகள் பங்கேற்பு, பார்வையாளர்கள் பங்கேற்பு என அனைத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் குறைவான அளவிலேயே காளைகள், வீரர்கள், பார்வையாளர்கள் பங்கேற்க முடிந்தது. இருந்தபோதிலும் வழக்கமான உற்சாகத்துடனே கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டுக்கு மாடுபிடி வீரர்கள் தயாராகி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஜனவரி மாத தொடக்கத்தில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலேயே ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது என்று தமிழக அரசு வாதாடி வருகிறது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மாடுபிடி வீரர்களும், காளை உரிமையாளர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் நீச்சல், ஓட்டம், மண் குத்துதல், ஆரஞ்சு-எலுமிச்சம்பழம் போன்ற பழங்களை தரையில் உருட்டிவிட்டு அதனை கொம்பால் குத்த செய்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

    அதேபோன்று ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை திருப்பாலை பகுதியில் முடக்கத்தான் மணி என்ற மாடுபிடி வீரரின் தலைமையில் ஏராளமான வீரர்கள் காளைகளை அடக்குவதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாடிவாசலில் இருந்து பாய்ந்து வரும் காளையை எவ்வாறு பிடிப்பது? காளைகளை எப்படி அடக்க வேண்டும்? போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக ஒரு மைதானத்தில் வாடிவாசல் போன்று செயற்கையாக அமைத்து வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    50-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகிறார்கள். இதே போல் மதுரை மாவட்டத்தில் பல இடங்களிலும் மாடுபிடி வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு மற்றும் பல்வேறு இடங்களில் காலை-மாலை நேரங்களில் ஜல்லிக்கட்டு காளைகள் சாலைகளில் ஓட்டப்பயிற்சி அளிக்கப்படுவதையும், வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவதையும் காண முடிகிறது.

    • அனைவரும் பங்கேற்கும் வகையில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி மனு அளித்தனர்
    • அரியலூர் கோக்குடியில் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், கோக்குடியில் அந்தோனியார் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்குமாறு கலெக்டர் ரமணசரஸ்வதியிடம் கிராம நாட்டாமைகள் செல்வராஜ், சவரிராஜ் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ஆண்டு தோறும் தைமாதம் 5-ந் தேதி அந்தோனியார் பொங்கலை முன்னிட்டு அரியலூர் கோக்குடியில் ஜல்லிக்கட்டு நடைபெறும். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் காரணமாகவும், 2022 ஆண்டு முதல் மாடு யார் விடுவது என்பது காரணமாகவும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. தற்போது ஜல்லிக்கட்டு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக எங்களுக்குள் பிரிவிவாக பிரிந்திருக்கிறோம். கடந்த 5 தேதி அன்று ஒரு பிரிவினர் தாங்கள் தான் கோக்குடி என்று சொல்லி ஜல்லிக்கட்டு நடத்த மனு அளித்துள்ளார்கள். ஜல்லிக்கட்டு விழா ஒரு பிரிவினருக்கோ அல்லது இயக்கங்களுக்கோ வகையராகவுக்கோ கோக்குடி ஜல்லிக்கட்டு சொந்தமில்லை. எனவே அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் முதல் மாடு அல்லது பொது மாடு விட்டு ஜல்லிக்கட்டு நடத்த ஆவனம் செய்ய வேண்டும் அல்லது மனுவில் அளித்துள்ள விதிமுறைகளின் படி ஜல்லிக்கட்டு நடந்தால் நன்றாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள கால்நடை ஆராய்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கால்நடைத்துறை அலுவலர்கள் அதிகாரிகளுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விரிவான ஆலோசனை நடத்துகிறார்.
    • கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு போட்டி புதிய விதிமுறைகள் என்னென்ன என்பது தெரியவரும்.

    சென்னை:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அலங்காநல்லூர், வாடிவாசல், புதுக்கோட்டை, விராலிமலை உள்பட பல ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதன் மீதான தீர்ப்பு விரைவில் வர உள்ளது.

    இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மதுரை மாவட்ட கலெக்டரை சந்தித்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி மனு அளித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள், நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்க கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை மறுநாள் (22-ந்தேதி) ஆலோசனை நடத்த உள்ளார்.

    சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள கால்நடை ஆராய்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கால்நடைத்துறை அலுவலர்கள் அதிகாரிகளுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விரிவான ஆலோசனை நடத்துகிறார்.

    கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு போட்டி புதிய விதிமுறைகள் என்னென்ன என்பது தெரியவரும்.

    • தமிழக கலாச்சாரம், பாரம்பரியம் காளைகளை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது
    • காலம் காலமாக விவசாயத்துடன் ஜல்லிக்கட்டு ஒன்றி போய் இருக்கிறது.

    புதுடெல்லி:

    தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி மனுதாரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் தரப்பு வாதங்களை ஒரு வாரத்துக்குள் தொகுத்து எழுத்துப்பூர்வமாக அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டதுடன் தீர்ப்பையும் ஒத்திவைத்தனர்.

    இந்த நிலையில் தமிழக அரசின் வாதம் எழுத்துப்பூர்வமாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:

    தமிழக கலாச்சாரம், பாரம்பரியம் நாட்டு காளைகளை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டின்போது எந்த விதிமீறல்களும் இல்லை. காளைகளின் உயிர், நல்வாழ்வை உறுதி செய்யும் விதமாக அனைத்து வழிமுறைகளும் கடைபிடிக்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி பொழுதுபோக்குக்காக நடத்தப்படும் விளையாட்டு அல்ல. ஜல்லிக்கட்டு தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிப்போன ஒன்று. காளைகளை பெருமைப்படுத்தவும், கவுரவிக்கவும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. காலம் காலமாக விவசாயத்துடன் ஜல்லிக்கட்டு ஒன்றி போய் இருக்கிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது.
    • ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வருவதுண்டு. 

    சென்னை:

    தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது.

    மக்களால் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு ஜல்லிக்கட்டு என்பதால் அதனை நல்ல முறையில் கொண்டு வர அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது.

    இந்த ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வருவதுண்டு. 

    இந்த நிலையில், ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த 2017-ம் ஆண்டு தெரிவித்த அதே சட்டத்திட்டம் படி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜல்லிக்கட்டு போட்டிகள் வரும் ஆண்டு கட்டாயம் நடத்தப்படும் எனவும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    ×