search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனிமூட்டம்"

    கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவால் இரவில் நடமாட்டம் குறைந்துள்ளது. சளி மற்றும் காய்ச்சலால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாகவே கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. மேலும் நாள் முழுவதும் பகலில் குளிர் காற்று வீசுகிறது. இதன் காரணமாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரமாகவே மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை கடும் குளிர் மற்றும் மூடுபனி காணப்படுகிறது. இந்த கடும் குளிரால் பொதுமக்களுக்கு காய்ச்சல் இருமல், சளி, சரும நோய் போன்றவை அதிகரித்துள்ளது. இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    ஓசூர் அரசு மருத்து வமனைக்கு நாள்தோறும் 1200 முதல் 1500 புற நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதேபோன்று தனியார் மருத்துவமனைகளிலும், குளிர்க்கால நோயால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    கடந்த ஒரு வார காலமாக ஓசூரில் குறைந்தபட்ச சீதோஷ்ணமாக ஞாயிற்றுக் கிழமை 11 டிகிரி செல்சியஸ் பதிவாகின. குறிப்பாக ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை மக்களின் நடமாட்டம் குறைவாக உள்ளது. குறிப்பாக நகரத்தைக் காட்டிலும், கிராமத்தில் மக்கள் நடமாட்டம் இரவு நேரங்களில் குறைவாக உள்ளது. இந்தக் குளிர் மேலும் ஒரு வாரம் தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

    தொப்பூர் - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை கடும் பனி கொட்டுகிறது. குறிப்பாக தொப்பூர் மலைப்பாதையில் மூடு பனி அதிகமாக உள்ளது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றன.

    மூடு பனியால் தொப்பூர் - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் வாகனங்கள் மோதிக் கொள்ளும் நிகழ்வுகள் நடந்துவருகின்றன. நேற்று அதிகாலை தருமபுரி குமாரசாமிப்பேட்டையை அடுத்த பென்னாகரம் மேம்பாலம் அருகே லாரியின் பின்னால் கேரளாவில் இருந்து மாணவர்கள் வந்த சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது. மூடு பனி காரணமாக இப்படி விபத்துக்கள் நடப்பது அதிகமாகி விட்டது.
    கடும் பனிமூட்டம் காரணமாக இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. #DelhiAirport #FlightsDelayed
    புதுடெல்லி:

    டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விடிந்து வெகுநேரம் ஆகியும் பனி விலகாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்குகின்றனர்.

    பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக டெல்லியில் இன்று விமான போக்குவரத்து முடங்கியது. காலை 7.30 மணி முதல் டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. டெல்லிக்கு வந்த மூன்று விமானங்கள் திருப்பி விடப்பட்டன.



    டெல்லியில் இருந்து வெளியூர் செல்வதற்கு முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு அந்தந்த விமான நிறுவனங்கள் சார்பில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. பயணிகள் விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக, பயணம் செய்யவேண்டிய விமானத்தின் நிலவரத்தை சரிபார்த்துக்கொள்ளும்படி கூறப்பட்டுள்ளது. வானிலை சீரடைந்ததும் விமானங்கள் இயக்கப்படும்.

    இதேபோல் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 12 ரெயில்களின் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. #DelhiAirport #FlightsDelayed
    திருச்சியில் இன்று காலை திடீரென லேசான தூரலுடன் சாரல் மழை பெய்தது. பெண்கள் மழையில் நனையாமல் இருக்க சேலையாலும் சுடிதார் துப்பட்டாவாலும் தலையை மூடியபடி சென்றனர்.
    திருச்சி:

    திருச்சியில் தினமும்  காலையில் பனிமூட்டம் நிலவி வருகிறது. பகலில் வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை  திடீரென லேசான தூரலுடன் சாரல் மழை பெய்தது.  

    மேலும் வானமும் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பகல் 12  மணியளவில் வெயில் அடிக்க ஆரம்பித்தது. திடீரென பெய்த மழையின் காரணமாக குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். திடீரென்று பெய்த மழையால் பொதுமக்கள் மழையில் நனைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பெண்கள் மழையில் நனையாமல் இருக்க  சேலையாலும் சுடிதார் துப்பட்டாவாலும் தலையை மூடியபடி சென்றனர். 
    மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் பகுதியில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனர்.

    மாமல்லபுரம்:

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த படி பெய்யவில்லை. தற்போது வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்த நிலையில், மாமல்லபுரம்-கல்பாக்கம் பகுதியில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை கடலோரப் பகுதிகளான கோவளம், வட நெம்மேலி, தேவநேரி, பூஞ்சேரி, கடம்பாடி, மணமை, வெங்கம்பாக்கம், புதுப்பட்டினம், வாயலூர், கூவத்தூர், காத்தாங்கடை, வடபட்டிணம், பாண்டூர், முகையூர், தென்பட்டினம், அடையாளச்சேரி, நடுக்குப்பம் போன்ற பகுதிகளில் இன்று காலை 8 மணி வரை பனிமூட்டம் காணப்பட்டது.

    சாலைகளில் பனி சூழ்ந்ததால் வாகன ஓட்டிகளுக்கு சாலைகள் தெளிவாக தெரியவில்லை. இதனால் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனர்.

    மார்கழிக்கு முன்னரே கடும் பனிப்பொழிவு துவங்கி விட்டது. எனவே மார்கழி மாதம் இதைவிட அதிகமாக இருக்கலாம் என இந்த பகுதி மீனவர்களும், விவசாயிகளும் தெரிவித்தனர்.

    திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டத்தால் விபத்துக்குள்ளான லாரி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதனால் 12 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஈரோடு :

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு கிரானைட் கற்கள் ஏற்றிய லாரி ஒன்று வந்துகொண்டு இருந்தது. இந்த லாரியை பெரியசாமி (வயது 40) என்பவர் ஓட்டினார். இந்த லாரி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் உள்ள 9-வது கொண்டை ஊசி வளைவில் வந்துகொண்டு இருந்தது.

    அப்போது திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் லாரி வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் பாய்ந்தது.

    பள்ளத்தில் பாய்ந்த லாரி அங்கிருந்த ஒரு மரத்தில் மோதி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. விபத்து நடந்தபோது டிரைவர் வெளியே குதித்ததால் உயிர் தப்பினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். மரத்தில் மோதாமல் லாரி பாய்ந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். விபத்து ஏற்பட்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், படுகாயம் அடைந்த பெரியசாமியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    லாரியின் பின்பகுதி நடுரோடு வரை தூக்கியபடி இருந்ததால், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் மேற்கொண்டு செல்ல முடியாமல் வரிசையாக அணிவகுத்தபடி விடிய-விடிய நின்றன. மேற்கொண்டு எந்த வாகனமும் திம்பம் மலைப்பாதைக்கு வராமல் ஆசனூர் மற்றும் பண்ணாரி சோதனைச்சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சத்தியமங்கலத்தில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் பாய்ந்து நின்ற லாரி மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் 12 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீராகி வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

    இதுகுறித்து அந்த வழியாக கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சென்ற பயணிகள் கூறும்போது, ‘27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கனரக வாகனங்களால் தான் விபத்து ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், உணவு கிடைக்காமல் இரவு முழுவதும் கடும் பனிப்பொழிவில் மிகவும் அவதிப்பட்டோம். எனவே அதிகாரிகள் கனரக வாகனங்களை திம்பம் மலைப்பாதை வழியாக செல்ல அனுமதிக்கக்கூடாது’ என்றார்கள்.
    ×