search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர்"

    படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சாந்தாவிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். கூட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ் பேசுகையில், படைப்புழு தாக்குதலினால் பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தரமற்ற மக்காச்சோள விதைகளை விற்ற நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் வழக்கு தொடர்ந்து விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் படைப்புழுவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் அரசிடம் நிவாரணமாக வாங்கி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    போதிய மழை பெய்யாததாலும், படைப்புழுவாலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அவர்கள் வங்கிகளில் வாங்கியுள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனமாக மாவட்டத்தில் அதிகமாக உள்ள மக்காச்சோள தோகைகளை மாவட்ட நிர்வாகமே கொள்முதல் செய்து விற்பனை செய்யலாம் என்றார்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செல்லத்துரை பேசுகையில், எறையூர் சர்க்கரை ஆலை மூலமாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பாக்கி தொகையினை ரூ.31 கோடியே 93 லட்சம் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்படும் மின்மாற்றிகள் அடிக்கடி பழுதாகிறது. அதனை பழுது செய்ய கால தாமதம் ஆகுவதால் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே பெரம்பலூர் நான்கு ரோட்டில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் மின்மாற்றிகளை பழுது செய்ய தொழில் பிரிவு பணிமனை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னமுட்லு நீர்த்தேக்கம் விரைவாக அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    தமிழ்நாடு பாமாயில் மர சாகுபடியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் முருகேசன் பேசுகையில், அதிகமாக பால் உற்பத்தியாகும் பெரம்பலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தி ஒன்றியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட பத்திரவு பதிவுத்துறை அலுவலகம் திறக்க வேண்டும். மக்காச்சோளத்திற்கு ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் ராஜேந்திரன் பேசுகையில், போதிய அளவு மழை பெய்யாததால் பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அறிவிக்கப்படாத மின்வெட்டை தடுக்க வேண்டும் என்றார்.

    தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் பேசுகையில், சுமார் 65 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர் படைப்புழுவினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் அரசிடம் நிவாரணம் கேட்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் மனுக்கள் அளித்துள்ளனர். எனவே உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரணம் அரசிடம் இருந்து பெற்று தர வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வழங்க வேண்டும் என்றார்.

    இதையடுத்து கலெக்டர் சாந்தா கூட்டத்தில் பேசுகையில், விவசாயிகள் மாற்று பயிர்களாக உளுந்து பயிர்களை சாகுபடி செய்யவும், மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் அதிகமாக இருப்பதால் வேளாண் துறையினர் மூலமாக கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் குறித்து கணக்கெடுப்பு செய்து நிவாரண நிதி வேண்டி அறிக்கையினை வேளாண்மை இயக்குனரகத்திற்கும், வருவாய்த்துறை ஆணையருக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சின்ன முட்லு அணை கட்டுவதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) கலைவாணி, வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) சந்தானகிருஷ்ணன், ஊராட்சிகள் மற்றும் தணிக்கை உதவி இயக்குனர் பாரதிதாசன் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  #tamilnews
    ஆந்திர மாநிலத்தை சூறையாடிய பேத்தாய் புயலின் கோரத்தாண்டவத்துக்கு மூன்றரை லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் இருந்த பயிர்கள் அழிந்து, நாசமடைந்தன. #CyclonePhethai #Andhracrops ##Andhracropsdamage
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தை நேற்று சக்தி வாய்ந்த பேத்தாய் புயல் தாக்கியது. இதனால், விசாகப்பட்டினம், குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு மற்றும் வடக்கு கோதாவரி மாவட்டங்கள் பெரும் பாதிப்புள்ளாகின.

    புயலை தொடர்ந்து பெய்த கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மூழ்கி சுமார் மூன்றரை லட்சம் ஏக்கர் விளைநிலத்தில் இருந்த நெல், சோளம், மிளகாய் பருத்தி உள்ளிட்ட பயிர்கள் நாசமடைந்தன.

    குறிப்பாகம் குண்டூர் மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் ஏக்கரில் இருந்த நெல்பயிர்கள் அறுவடை முடிந்து உலர வைப்பதற்கான நேரத்தில் நாசமாகின. மேலும், சுமார் 20 ஆயிரம் ஏக்கர் அளவிலான புகையிலை, சோளம், மிளகாய் போன்ற பணப்பயிர்கள் நாசமடைந்தன,

    கிருஷ்ணா மாவட்டத்தில் சுமார் 1.50 லட்சம் ஏக்கர் அளவிலான நெல், சோளம், மிளகாய் மற்றும் வாழை பயிர்கள் நாசமாகின. கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் புயல் காற்றில் பல ஏக்கர்களில் இருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    மேற்கண்ட 5 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக செய்யப்பட்ட ஆரம்பகட்ட மதிப்பீட்டில் பேத்தாய் புயலால் சுமார் 450 கோடி ரூபாய் அளவிலான பயிர்கள் அழிந்துப் போனதாக தெரியவந்துள்ளது.

    மேலும், குளிர் தாங்க முடியாமல் சுமார் 800 ஆடுகள் மற்றும் சில கால்நடைகளும் இறந்தன. புயல் பாதித்த பகுதிகளை இன்று வான்வழியாக பறந்து சென்று ஆய்வு செய்த முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு விரைவில் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளர்.



    புயல் பாதித்த 14 மண்டலங்களில் உடனடியாக மின்சார வினியோகம் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சுமார் 32 ஆயிரம் மக்கள் 187 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #CyclonePhethai #Andhracrops ##Andhracropsdamage
    கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராமல் பயிர்கள் கருகியதால் நாகை விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் நாகை மாவட்ட விவசாயிகளை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    நாகப்பட்டினம்:

    கர்நாடக மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    பின்னர் அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் இன்று வரை தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடைமடை வரை செல்லவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே விவசாயிகள் மறியல், ஆர்ப்பாட்டம் என நடத்தி வருகின்றனர்.

    கடைமடை பகுதியில் உள்ள வாய்க்கால், ஏரி- குளங்களை தூர் வாராததால் சம்பா பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. காவிரியில் வெள்ளம் வந்தும் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. வறட்சி காலத்தை போல பம்புசெட் மூலம் தான் சம்பா சாகுபடி செய்ய வேண்டியது உள்ளது என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியில் பிடியில் சிக்கிய விவசாயிகள் தற்கொலை செய்த சம்பவம் டெல்டா மாவட்டங்களில் அதிகமாக நடந்தது.

    தற்போது மேட்டூர் அணை 4 முறை நிரம்பியும் நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயி ஒருவர் தற்கொலை செய்தது விவசாயிகளிடையே மீண்டும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    நாகை மாவட்டம் கீழையூர் அருகே தலையாமழை பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது48). விவசாயியான இவர் குத்தகைக்கு நிலம் எடுத்து நெல் சாகுபடி செய்து வந்தார்.

    இந்தநிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான தலையாமழை பகுதிக்கு வந்து சேரவில்லை. இதனால் நெற்பயிர்கள் கருகின. இந்தநிலையில் கருகிய நெற்பயிர்களை கண்டு மனமுடைந்த ராமமூர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன் வி‌ஷத்தை குடித்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி இறந்தார்.

    கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராமல் பயிர்கள் கருகியதால் நாகை விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் நாகை மாவட்ட விவசாயிகளை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    தற்கொலை செய்த ராமமூர்த்திக்கு, ரேவதி என்ற மனைவியும் கருணாகரன், கதிர்வேல் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
    ×