search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டிவனம்"

    திண்டிவனம் அருகே தனியார் பஸ் டிரைவர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவன்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நல்லதம்பி நகரை சேர்ந்தவர் கணேசன். இவர் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். இதை அறிந்த மர்ம மனிதர்கள் நள்ளிரவில் கணேசன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்பு அவர்கள் பீரோவில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்தனர்.

    அதன்பின்பு கொள்ளையர்கள் அருகில் உள்ள ஓய்வு பெற்ற கிராம அலுவலரான பாண்டுரங்கன் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து பணம் ஏதும் உள்ளதா? என தேடி பார்த்தனர். அங்கு பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுவிட்டனர்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கணேசன் வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இதுகுறித்து திண்டிவனம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த கணேசன் வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் இதுகுறித்து கோவையில் உள்ள கணேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்த பிறகுதான் வீட்டில் எவ்வளவு நகை-பணம் கொள்ளை போனது என்பது தெரியவரும். அவர் உடனடியாக திண்டிவனத்துக்கு வந்து கொண்டிருக்கிறார். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    திண்டிவனம் அருகே குடும்ப தகராறு காரணமாக சத்துணவு அமைப்பாளரை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கள்ளக்கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் வளர்குமார். இவரது மனைவி பூங்கொடி (வயது 38).

    இவர் கொணக்கம்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

    பூங்கொடிக்கும், கள்ளக்கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஒருவாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதத்துக்கு முன்பு அந்த வாலிபரை வளர்குமார் அரிவாளால் வெட்டியுள்ளார்.

    இது தொடர்பாக மயிலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பின்னர் இந்த புகார் வாபஸ் பெறப்பட்டது.

    இந்த நிலையில் பூங்கொடிக்கும், கணவர் வளர்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று காலையும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வளர்குமார், மனைவி பூங்கொடியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

    மனைவி இறந்து விட்டாள் என்று நினைத்த வளர்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த பூங்கொடியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வளர்குமாரை தேடிவருகின்றனர்.
    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிளாப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வவிநாயகம் (வயது 25).

    இவருக்கும் வடநெற்குணம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் முருக்கேரியில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இது குறித்து திண்டிவனம் சப்-கலெக்டர் மெர்சி ரம்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்அடிப்படையில் திண்டிவனம் சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி. ஏட்டு ராதா, சமூகநலத்துறை ஊர்நல அலுவலர் சரோஜா, விரிவாக்க அலுவலர்கள் ஜான்சிராணி, வசந்தகுமாரி ஆகியோர் அங்கு சென்றனர்.

    அவர்கள் மணமகன், மணமகளின் பெற்றோரை சந்தித்தனர். 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்று கூறினர்.

    இதையும் மீறி திருமணம் செய்து வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதையடுத்து அந்த சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. #Tamilnews
    மணப்பாறை, திண்டிவனம் அருகே புதிதாக 2 தொழில்பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalanisamy
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தால் (சிப்காட்) திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டத்தில் உள்ள கண்ணுடையான்பட்டி, கே.பெரியபட்டி மற்றும் சத்திரப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் சுமார் 1,077 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் சுமார் 5,000 நபர்கள் வேலை வாய்ப்பு பெறுவர். இப்பூங்காவில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான உட்புறச் சாலைகள், தண்ணீர் வழங்குவதற்கான வசதிகள், மழைநீர் வடிகால் வசதி, சாலையோர மரங்கள் மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற வசதிகள் 96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும்.

    சிப்காட் நிறுவனத்தால், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் உள்ள பெலாப்குப்பம், கொல்லார் மற்றும் வெண்மணியாத்தூர் ஆகிய வருவாய் கிராமங்களில் சுமார் 720 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 5,000 நபர்கள் வேலை வாய்ப்பு பெறுவர். இப்பூங்காவில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான உட்புறச் சாலைகள், தண்ணீர் வழங்குவதற்கான வசதிகள், மழைநீர் வடிகால் வசதி, சாலையோர மரங்கள் மற்றும் தெரு விளக்குகள் போன்ற வசதிகள், 52 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனத்தால் உருவாக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலம் செயல்படுத்தப்படவிருக்கும் பின்வரும் அறிவிப்புகளை இப்பேரவையில் வெளியிடுகின்றேன்.

    தொழில்நுட்பம் சார்ந்த புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப பொருட்கள் மேம்படுத்துதலுக்கு உதவி செய்யவும், தொடக்க நிலை தொழில் முனைவோருக்கு ஆரோக்கியமான சூழலை உறுதிப்படுத்தவும், “தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை 2018-2023”ஐ உருவாக்கி, தமிழ்நாடு அரசு நடை முறைப்படுத்த உள்ளது.

    இக்கொள்கையினால், அனைத்துத் துறைகளிலும் உள்ள திறமையுள்ள தனி நபர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் தங்களுடைய புத்தாக்க எண்ணங்களை செயல்படுத்தி, சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாக்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முடியும். “தமிழ்நாடு தொலை நோக்குப் பார்வை 2023”-ல் குறிப்பிடப்பட்டுள்ள, ஆண்டுக்கு 11 சதவீத மாநில மொத்த உள்நாட்டு வளர்ச்சி வீதத்தினை அடையும் வகையில் இக்கொள்கை அமையும்.

    குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வரும் முதலீட்டு மானியச்சலுகைக்கு இணையாக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கும், அதிகபட்ச மானியத் தொகை 25 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

    2018-2019-ம் நிதியாண்டில், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், ஆலத்தூர் கிராமத்தில், 70.33 ஏக்கர் நிலப்பரப்பில், 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சிட்கோ தொழிற்பேட்டைபகுதி 2 நிறுவப்படும்.

    புத்தாக்க பற்றுச் சீட்டு திட்டம் மூலமாக புத்தாக்கம் சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு புத்தாக்கம், தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்கள் மூலமாக புத்தாக்கத்தினை உருவாக்குதல் அல்லது கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு பரிசோதனைக் கூடங்கள் மூலமாக முன்மாதிரி மேம்பாடு மற்றும் பொருட்கள் பரிசோதனை செய்வதற்காக மானியம் வழங்கப்படும். உலக அளவில் பல நாடுகளில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் புத்தாக்கத் திறனை அதிகரித்தல் ஆகும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு 400 தொழில் முனைவோர்களுக்கு புதுமைகளை புகுத்து வதற்காகவும் மற்றும் சிறிய அளவிலான தொழில்நுட்ப சிக்கல்களை அறிவுசார் ஆலோசகர்களுடன் இணைந்து சரி செய்வதற்காகவும், அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக 20 கோடி ரூபாய் செலவிடப்படும்.



    5.6.2018 அன்று இப்பேரவையில் நான் அறிவித்த “ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை” அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் விதமாக, எளிதில் மக்கக் கூடிய மாற்றுப் பொருட்களை கண்டறியவும் இத்திட்டம் பெரிதும் உதவும்.

    தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை பன்னாட்டு மயமாக்கவும், வெளிநாட்டு ஒத்துழைப்பைப் பெறவும், தமிழ்நாட்டில் முதலீட்டை ஈர்க்கவும், “குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு” ஒன்று உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கு விரைவாகவும், உரிய காலத்திலும் அனுமதி வழங்கவும், ஒற்றைச்சாளர முறையை செயல்படுத்துவதற்காக வேண்டி ஒருங்கிணைப்பு முகமையாகவும் இது விளங்கும்.

    மேலும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான முதலீடுகளை மேம்படுத்துதல், வணிக அமைப்புகள், தொழிலக அமைப்புகள் மற்றும் முதலீட்டுக் கொள்கையை முன் மொழிபவர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் படிப்படியாக ஒப்பந்தங்கள் செய்து கொள்ளுதல் ஆகியவற்றையும் ஒருங்கிணைக்கும் முகமையாகவும் இந்த அமைப்பு செயல்படும் என்பதை இப்பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalanisamy
    திண்டிவனம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் கடத்தப்பட்ட 735 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்து காரில் இருந்த 5 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வழியாக 2 கார்களில் எரிசாராயம் கடத்தப்படுவதாக திண்டிவனம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சீனிபாபு, பாபு மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவில் திண்டிவனம்-மரக்காணம் சாலை சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அந்த காரில் இருந்த 21 கேன்களில் 735 லிட்டர் எரிசாராயம் இருப்பதை கண்டறிந்தனர்.

    இதைதொடர்ந்து காரில் இருந்த 5 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காரில் வந்தவர்கள் திண்டிவனம் கூட்டேரிப்பட்டு பகுதியை சேர்ந்த அய்யனார் (50), ராவணாபுரத்தை சேர்ந்த தாமோதரன்(32), ஆறுமுகம்(30), முருகன்(32), கீழ்இடையாளம் பகுதியை சேர்ந்த தனலட்சுமி(50) என்பதும் தெரியவந்தது.

    தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எரிசாராயம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் 735 லிட்டர் எரிசாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    திண்டிவனம் அருகே இன்று நடைபெற இருந்த சிறுமி திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஊரல் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது.

    இதையொட்டி திருமண ஏற்பாடுகளில் மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் நடத்தி வைப்பதாக சைல்டுலைன் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, திண்டிவனம் தாசில்தார் கீதா, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜி ஆகியோர் ஊரல் கிராமத்துக்கு விரைந்து சென்று மணமகளின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

    18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் நடத்தி வைப்பது சட்டப்படி குற்றமாகும். அதையும் மீறி திருமணம் நடத்தி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவுரை கூறினர்.

    இதனையேற்ற மணமகளின் பெற்றோர், திருமணத்தை நிறுத்திக்கொள்வதாக அதிகாரிகளிடம் கூறியதோடு எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து, அந்த சிறுமியை மீட்டு சமூக நலத்துறை மூலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதன் மூலம் இன்று நடைபெற இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

    திண்டிவனத்தை சேர்ந்த சாராய வியாபாரியை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் மயிலம் போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியை சேர்ந்தவர் பிரேம்நாத் (வயது 35). சாராய வியாபாரியான இவர் மீது சாராயம் விற்பனை செய்தல், கடத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கடந்த மாதம் மயிலம் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டதாக பிரேம்நாத்தை மயிலம் போலீசார் கைது செய்தனர். இவர் சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் பிரேம்நாத்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து பிரேம்நாத்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்பேரில் சாராய வியாபாரி பிரேம்நாத்தை மயிலம் போலீசார் நேற்று தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.  #Tamilnews
    திண்டிவனம் அருகே சாலையின் தடுப்புக்கட்டையில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.
    திண்டிவனம்:

    நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த ஆணைக்குளம் பகுதியை சேர்ந்தவர் பீர்முகமது(வயது 57). இவரது மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

    அந்த திருமண பத்திரிகையை சென்னையில் உள்ள உறவினர்களுக்கு கொடுப்பதற்காக பீர் முகமது தனது உறவினர்களான அகமது உசேன்(65), அப்துல் ரகுமான்(27) ஆகியோருடன் காரில் சென்னைக்கு புறப்பட்டார்.

    காரை அப்துல் ரகுமான் ஓட்டினார். அந்த கார் இன்று காலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பாதிரி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது கார் அப்துல் ரகுமானின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மோதுவதுபோல் சென்றது. அந்த பஸ் மீது மோதாமல் இருக்க காரை அப்துல்ரகுமான் வலதுபக்கமாக திருப்பினார். அப்போது அங்கிருந்த சாலையின் தடுப்புக்கட்டையில் மோதி கார் கவிழ்ந்தது.

    இதில் அப்துல்ரகுமான் மற்றும் அகமது உசேன் ஆகியோர் காரின் இடிபாட்டுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பீர்முகமது பலத்த காயம் அடைந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்த பீர்முகமதை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அரசு பஸ் மோதியதில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டிவனம்:

    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ் இன்று காலை 6 மணி அளவில் திண்டிவனம் அருகே புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது 60 வயது மதிக்க தக்க முதியவர் ஒருவர் சைக்கிளில் கீரைக்கட்டுகளை ஏற்றிக்கொண்டு அங்குள்ள வளைவில் திரும்பினார். அப்போது அவர் மீது அரசு பஸ் மோதியது.

    இதில் முதியவர் உடல்நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திண்டிவனம் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு விபத்தில் இறந்தவர் யார்? எந்த ஊர்? என விசாரணை நடத்திவருகிறார்கள்.
    திண்டிவனம் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அச்சிறுமி விழுப்புரம் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே பாமூண்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 28). இவர் புதுவையில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் ஊரல் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் வருகிற 25-ந் தேதி திண்டிவனம்-செஞ்சி ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் தீவிரமாக செய்து வந்தனர்.

    இந்நிலையில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக திண்டிவனம் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, ரோசனை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மற்றும் போலீசார், வருவாய் ஆய்வாளர் விஜயபாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் உமாராணி, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் கமலாட்சி ஆகியோர் 17 வயது சிறுமியின் வீட்டுக்கு சென்று, அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது 18 வயதுக்குட்பட்ட சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதையடுத்து, சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. 17 வயது சிறுமி விழுப்புரம் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
    கிருஷ்ணகிரி - திண்டிவனம் வரை தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.262 கோடியே 67 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அசோக்குமார் எம்.பி. கூறினார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சாலை பாதுகாப்பு கண்காணிப்புக்குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கண்காணிப்புக்குழுத் தலைவர் கே.அசோக்குமார் தலைமையில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், பர்கூர் சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அசோக்குமார் எம்.பி. பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் 6 வழிச்சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை தடுக்க விபத்து நடைபெறும் இடங்களில் சாலையை அகலப்படுத்துதல், மேம்பாலங்கள், உயர்மட்ட நடைபாதைகள், மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.262 கோடியே 67 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் பணிகள் தொடங்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி அளித்துள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 5 தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் உள்ள 191.20 கிலோ மீட்டர் சாலையில் விபத்துகள் ஏற்படாத வகையில் மேம்பாலங்கள், உயர் மின்கோபுரங்கள், சர்வீஸ் சாலைகளில் வேகத்தடைகள் போன்ற பணிகள் விரைந்து மத்திய அரசின் அனுமதி பெற்று செய்து தரப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் தேவையான இடங்களில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர்கள் சிவாஜி, நாராயணன், ரிலையன்ஸ் மேலாளர் முத்துகுமார், மண்டல போக்குவரத்து ஆணையர் செந்தில்நாதன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அசோகன், செந்தில்வேலவன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன் (கிருஷ்ணகிரி), சங்கர் (தேன்கனிக்கோட்டை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×