search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரங்கிமலை"

    கோயம்பேடு மெட்ரோ ரெயில் பணிமனை, ஆலந்தூர், பரங்கிமலை ரெயில் நிலையங்களில் சூரிய சக்தி மின்தகடுகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. #SolarProject #MetroTrainStation
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர்- சின்னமலை-விமானநிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்டிரல், சைதாப்பேட்டை- ஏ.ஜி-டி.எம்.எஸ் வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் போக்குவரத்து சேவை நடந்து வருகிறது.

    பயணிகளின் வரவேற்பை பொறுத்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் திருமங்கலம், அண்ணா நகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர் ஆகிய 4 சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்விளக்குகள், ஏசி, ரெயில் இயக்கம் ஆகியவற்றின் மின் தேவைக்காக 103 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான மின்தகடுகள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.6.3 லட்சம் மின்சார செலவு குறைகிறது.



    தொடர்ந்து உயர் மட்ட பாதையில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையிலான மின்தகடுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்தவகையில் ஆலந்தூர், பரங்கிமலை மற்றும் கோயம்பேடு மெட்ரோ ரெயில் பணிமனையில் கூடுதலாக சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக 1,120 கிலோ வாட் சக்தி கொண்ட மின் தகடுகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 51 ஆயிரத்து 200 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.69 லட்சத்து 49 ஆயிரத்து 152 சேமிக்க முடியும். இதனுடன் சேர்த்து சென்னை மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகம், பணிமனை மற்றும் ரெயில் நிலையங்களில் 3 மெகாவாட் அளவில் சூரிய மின்சக்தி மின்தகடுகள் அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் 4.6 மெகாவாட் அளவில் சூரிய மின்சக்தி மின்தகடுகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அவையும் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.

    மேற்கண்ட தகவலை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். #SolarProject #MetroTrainStation
    பரங்கிமலை ரெயில் விபத்து விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. விபத்தில் தொடர்புடைய மின்சார ரெயில் டிரைவர், ‘கார்டு’ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Parangimalai #TrainAccident #StThomas
    சென்னை:

    சென்னை பரங்கிமலை ரெயில் விபத்து தொடர்பான விசாரணையை ரெயில்வே போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். ரெயில் விபத்தில் பயணிகள் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு எண் 174(மர்ம சாவு, சந்தேக மரணம்) பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பாக கடந்த 8-ந் தேதி (சனிக்கிழமை) முதற்கட்ட விசாரணை சென்டிரல் ரெயில்வே போலீஸ் டி.எஸ்.பி. இரா.ரவி தலைமையில் நடந்தது. இதில் ரெயில் விபத்து நடந்தபோது அந்த மின்சார ரெயிலை இயக்கிய டிரைவர், ‘கார்டு’ மற்றும் கடற்கரை, மாம்பலம், பரங்கிமலை ரெயில் நிலைய அதிகாரிகள் என 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அன்றைய தினம் ரெயில் விபத்து எப்படி ஏற்பட்டது? இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி நடந்து முடிந்த முதற்கட்ட விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அன்றைய தினம் நடத்தப்பட்ட விசாரணையில் ரெயில் டிரைவர், ‘ரெயிலை இயக்குவது மட்டும் தான் என்னுடைய வேலை. கூட்டம் அதிகமாக இருப்பது குறித்தும், பயணிகள் படிக்கட்டில் தொங்கி வருவது குறித்தும் ‘கார்டு’ தனக்கு தகவல் அளிக்கவில்லை என்றும், அவர் தகவல் அளித்து இருந்தால் பக்கவாட்டு சுவர் இருந்த இடத்தில் வேகத்தை குறைத்து இருப்பேன்’ என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இந்திய குற்றவியல் நடை முறைச் சட்டம் பிரிவு 174-ன் கீழான வழக்கை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304(ஏ)-க்கு (உள்நோக்கம் இல்லாமல் மரணத்தை விளைவித்தல்) மாற்றப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மின்சார ரெயில் டிரைவர், கார்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    இதையடுத்து வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) அடுத்தகட்ட விசாரணை நடைபெற இருக்கிறது. இதில் முதற்கட்ட விசாரணையில் ஆஜரான 5 பேரும் மீண்டும் ஆஜராகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அன்றைய தினம் சாதாரண பாதையில் இருந்து விரைவு பாதையில் செல்வதற்கு அதிகாரம் அளித்த அதிகாரியையும், மேலும் சிலரையும் விசாரணைக்கு அழைத்து இருக்கின்றனர்.

    இந்த விசாரணையில் ரெயில் விபத்து குறித்து முழு தகவல்களும், என்னென்ன மாதிரியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன என்ற தகவல்களும் வெளியாகும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 
    பரங்கிமலை ரெயில் விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் கே.ஏ.மனோகரன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். #Parangimalai #trainaccident
    சென்னை:

    கடந்த மாதம் 24-ந்தேதி சென்னை பரங்கிமலையில் புறநகர் மின்சார ரெயிலில் பயணம் செய்த 5 பேர் ரெயில் பாதை இடையே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் மீது மோதி கீழே விழுந்து உயிர் இழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் கே.ஏ.மனோகரன், விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்து முதல் கட்ட தகவல்களை திரட்டினார். விபத்தை நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகளுடனும் விசாரணை நடத்தினார். இதையடுத்து, இந்த விபத்து குறித்து முதல்கட்டமாக 26 பக்கங்கள் கொண்ட அறிக்கையை லக்னோவில் உள்ள ரெயில்வே தலைமை பாதுகாப்பு கமிஷனரிடம் அவர் தாக்கல் செய்தார்.

    அதில் கே.ஏ.மனோகரன் கூறியிருப்பதாவது:-

    பரங்கிமலை ரெயில் நிலையத் தில் பொறியியல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சரியில்லை. பயணிகள் பயணம் செய்த விதத்திலும் தவறு இருக்கிறது. இதனால் விபத்து நடந்துள்ளது. ரெயில் பெட்டிக்கு வெளியே தொங்கிக் கொண்டு பயணம் செய்த பயணிகள், பக்கவாட்டு சுவற்றில் மோதி கீழே விழுந்தபோது மற்ற பயணிகளையும் பிடித்து இழுத்துள்ளனர்.

    இந்த ரெயிலில் 1,168 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால், சம்பவத்தன்று சுமார் 2 ஆயிரத்து 200 பயணிகள் பயணித்திருக்கக் கூடும் என்று ரெயில்வே வணிகத்துறை கணக்கிட்டு உள்ளது.

    ரெயில் நிலையத்தில் ரெயில் நிற்பதற்காக வேகம் குறைக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. பயணிகள் ரெயில் பெட்டிக்கு வெளியே தொங்கிக் கொண்டு பயணம் செய்த காரணத்தால், இரண்டு ரெயில் பாதைகளுக்கு நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்த விபத்து காரணமாக ரெயிலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. சில பெட்டிகளில் மின் சாதனங்கள் சேதமடைந்த வகையில் ரூ.294 மட்டும் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.

    விபத்துகளை தவிர்க்க பரிந்துரைகள்

    வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க அவர் தெரிவித்துள்ள பரிந்துரைகள் வருமாறு:-

    * கூட்ட நேரங்களில் பயணிகள் நெரிசலை சமாளிக்க புறநகர் மின்சார ரெயில்களின் இருக்கைகள் கூடுதல் பயணிகளை ஏற்றுவதற்கு வசதியாக மெட்ரோ ரெயில்களில் இருப்பது போல் நீளவாக்கில் அமைக்க வேண்டும்.

    * ரெயில் பாதைகளை கடப்பதாலும், ரெயிலில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதாலும் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

    * பிரதான ரெயில் நிலையங் களிலும், நடைபாதைகளிலும் பயணிகள் கூட்டத்தை சமாளிக் கவும், பயணிகள் ரெயில் பெட்டிகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதைத் தடுக்கவும் ரெயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

    * படிகளில் பயணம் செய்பவர்களிடம் அபராதம் வசூலிப்பது தீவிரப்படுத்தப்பட வேண்டும். கடுமையாக்கப்பட வேண்டும்.

    * புறநகர் ரெயில்களில் தானாக கதவு மூடிக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

    * விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்த பயணிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஏனெனில் அவர்கள் உண்மையான பயணிகள். அவர்களின் பாதுகாப்பு ரெயில்வேயின் பொறுப்பு.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். 
    சென்னை பழவந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள ரெயில்வே தண்டவாளத்தின் தடுப்புச் சுவரை ரெயில்வே பொதுமேலாளரின் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டுள்ளன.
    சென்னை:

    சென்னை பரங்கிமலையில் கடந்த மாதம் மின்சார ரெயிலில் படியில் பயணம் செய்தவர்கள் ரெயில்வே தடுப்புகளில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளையும் கண்டனங்களையும் உருவாக்கியது. மேலும், ரெயில்வே தடுப்புகளை அகற்றுமாறு ரெயில்வே துறை அதிகாரிகாளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.



    இந்நிலையில், தெற்கு ரயில்வே பொதுமேலாளரின் உத்தரவின் பேரில், பழவந்தாங்கல் ரெயில்நிலையத்தில் உள்ள பக்கவாட்டு தடுப்புச் சுவர்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. மேலும், ரெயில் நிலையங்களில் உள்ள அபாயகரமான தடுப்புச் சுவர்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், விரைவில், பல்வேறு ரெயில் நிலையங்களில் உள்ள அபாயகரமான பக்கவாட்டு தடுப்புச் சுவர்கள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருந்த பரங்கிமலை விபத்து உண்டான அந்த தடுப்புச் சுவர் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதால், அந்த ஆய்வின் அடிப்படையில் அந்த பக்கவாட்டு தடுப்புச் சுவரும் நீக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    பரங்கிமலையில் தடுப்புச்சுவரில் மோதியதால் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். #ElectricTrain #Runway #Youth #death
    சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி விரைவு மின்சார ரெயில் நேற்று இரவு சென்று கொண்டு இருந்தது. சில குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரெயில் நின்று செல்லும் என்பதால் இந்த ரெயிலில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    மேலும் பணி முடிந்து அனைவரும் வீட்டிற்கு செல்லும் நேரம் இயக்கப்படுவதால் பயணிகள் படிக்கட்டில் தொங்கியபடி இந்த ரெயிலில் பயணம் செய்வார்கள். கிண்டி ரெயில் நிலையத்திற்கு இரவு 7.30 மணிக்கு வந்த இந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் ஏறினர். உடனே ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே சென்றபோது, திடீரென அங்கிருந்த தடுப்புச்சுவரில் ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 2 வாலிபர்கள் மோதினர்.

    இதில் தவறி கீழே விழுந்த இருவரும் படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். உயிரிழந்தவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டீபன் (வயது 23), தாம்பரத்தை சேர்ந்த விக்னேஷ் (20) என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோல் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கம்பத்தில் பை சிக்கியதால் செங்கல்பட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். அடிக்கடி பரங்கிமலையில் கம்பம், தடுப்புச்சுவரில் மோதி பயணிகள் இறக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. எனவே இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து விபத்தை தவிர்க்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.  #Tamilnews 
    பரங்கிமலையில் போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைதானார்கள். மேலும் தலைமறைவான ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ஆலந்தூர்:

    பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் உளவுத்துறை போலீஸ்காரராக பணிபுரிபவர் ராஜசேகர். அவர் நேற்று இரவு 10 மணியளவில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    மடுவாங்கரை மேம்பாலத்தின் சர்வீஸ் ரோட்டில் சென்ற போது 3 பேர் சேர்ந்து வடமாநில வாலிபர்கள் 2 பேரை அடித்து உதைத்து கொண்டிருந்தனர். அதை பார்த்த ராஜசேகர் தனதுமோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தாக்குதலில் இருந்து அவர்களை காப்பாற்றினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள், அவர்களை காப்பாற்ற நீங்கள் யார்? என கேட்டனர். அதற்கு அவர் தான் போலீஸ்காரர் என்றார்.

    உடனே அவரை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ அருகே இழுத்து சென்று 3 பேரும் தாக்கினர். மேலும் அவரிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். மர்ம நபர்கள் தாக்கியதில் காயம் அடைந்தார். அவர் குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆலந்தூர் சவுரி தெருவை சேர்ந்த வெங்கடேசன் (30), சந்திரன் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர். நவீன் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகின்றனர். #tamilnews
    ×