search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்யுத்தம்"

    • பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார்.
    • இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று இந்தியாவின் வீர மகளுக்கு முன்னால் வீழ்ந்துவிட்டது

    ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில், கியூபா வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெற்றிபெற்றார். இதன்மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார்.

    வரலாற்றுச் சாதனை படைத்த வினேஷ் போகத்திற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷண் சிங் வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய வீராங்கனைகள் பலர் டெல்லியில் பல வாரங்களாகப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களில் முன்னிலையில் நின்றவர் வினேஷ் போகத். இதனால் அவர் பெற்றுள்ள இந்த வெற்றி அவரை அவமதித்தவர்களுக்கு எதிரான அடி என்று சக விளையாட்டு வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

     

    அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரே நாளில் உலகின் தலைசிறந்த மூன்று மல்யுத்த வீராங்கனைகளை வினேஷ் போகத் வீழ்த்தியுள்ளார். வினேஷ் மற்றும் அவரது சக வீராங்கனைகளின் போராட்டத்தை விமர்சித்தவர்கள், அவர்களின் எண்ணம் மற்றும் திறன் குறித்து கேள்வி எழுப்பியவர்கள் ஆகிய அனைவருக்கும் தற்போது பதில் கிடைத்துள்ளது.

    இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று இந்தியாவின் வீர மகளுக்கு முன்னால் வீழ்ந்துவிட்டது. இதுதான் சாம்பியன்களின் அடையாளம், அவர்கள் களத்தில் இருந்துதான் பதிலளிப்பார்கள்.

     

    வாழ்த்துகள் வினேஷ். பாரிஸ் நகரில் உங்கள் வெற்றியின் எதிரொலி டெல்லி வரை தெளிவாகக் கேட்கிறது" என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, சொந்த நாடே உதறித்தள்ளியது இப்போது அவர் உலகையே ஆளப்போகிறார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதினர்.
    • வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63 ஆவது இடத்தில் உள்ளது.

    இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதினர்.

    பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனை வினேஷ் போகத் ஆதிக்கம் செலுத்தி வந்தார். அடுத்தடுத்து ஸ்கோர் செய்து வந்த வினேஷ் போகத் இறுதியில் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.

     


    இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகி விட்டது. இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.

    இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருக்கிறார். இந்த போட்டி, இந்திய நேரப்படி இன்றிரவு 11.23 மணிக்கு துவங்க உள்ளது. 

    • காலிறுதிக்கு முந்திய சுற்றில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி வினேஷ் போகத் காலிறுதிக்கு தகுதிபெற்றார்.
    • யூ சுசாகி நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் மற்றும் 4 முறை உலக சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யூ சுசாகியை எதிர்கொண்டார்.

    இதில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வினேஷ் போகத் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    தொடர்ந்து மாலையில் நடைபெற்ற காலிறுதியில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்திய வினேஷ் போகத் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    இந்நிலையில், இதுவரை சர்வதேச போட்டிகளில் யாராலும் தோற்கடிக்கப்படாத நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானின் யூ சுசாகியை முதன்முதலாக தோற்கடித்த பெருமையை பெற்றுள்ளார் வினேஷ் போகத்.

    யூ சுசாகி இதுவரை தான் விளையாடிய 82 சர்வதேச போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்றவர் என்பதும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் மற்றும் 4 முறை உலக சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யு சுசாகியுடன் மோதினார்.
    • இதில் வினேஷ் போகத் 2-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், மல்யுத்தத்தில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யு சுசாகியுடன் மோதினார்.

    இதில் வினேஷ் போகத் 3-2 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    யு சுசாகி 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜப்பான் வீராங்கனையை இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறார்.
    • 50 கிலோ எடைப்பிரிவில் ஷிவானி பவார் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் களம் காண்கிறார்.

    சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தம் கிர்கிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ராதிகா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோநோகா ஒசாக்கியை எதிர்கொள்கிறார். 23 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த வருடம் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். கடந்த வருடம் நடைபெற்ற சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் 2-வது இடம் பிடித்தார். கஜகஸ்தான், கிர்கிஸ்தான் வீராங்கனைகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    50 கிலோ எடைப்பிரிவில் ஷிவானி பவார் காலியுறுதியில் தோல்வியடைந்தார். ஆனால் அவரை வீழ்த்திய வீராங்கனை இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் களம் இறங்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

    அதேபோல் 55 கிலோ எடைப்பிரிவில் தமன்னா 0-9 என தோல்வியடைந்த நிலையில், அவர் வீழ்த்திய வீராங்கனை இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் பதக்கத்திற்கான போட்டியில் நீடிக்கிறார்.

    அதேபோல் புஷ்பா யாதவ் (59 கிலோ), பிரியா (76 கிலோ) ஆகியோரும் தோல்வியடைந்தாலும் பதக்கப் போட்டிக்கான வாய்ப்பை பெற்றுள்ளனர். இவர்களை வீழ்த்திய வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

    • ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சோதனைகளை தற்காலிக குழு மேற்பார்வையிட்டு நடத்தி முடித்தது.
    • இந்திய மல்யுத்த விளையாட்டின் நிர்வாகம் மீண்டும் தேசிய மல்யுத்த கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்க 3 பேர் கொண்ட இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் கடந்த ஆண்டு இறுதியில் அமைத்தது.

    இதில், இந்திய உசூ சம்மேளன தலைவர் பூபிந்தர் சிங் பஜ்வா கமிட்டியின் தலைவராகவும், முன்னாள் ஆக்கி வீரர் எம்.எம். சோமயா, முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை மஞ்ஜூஷா கன்வார் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இந்த கமிட்டியில் இருந்தனர்.

    வீரர்கள் தேர்வு, சர்வதேச போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதற்கான பதிவை சமர்ப்பிப்பது, போட்டிகளை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பு, வங்கி கணக்கு விவரங்களை கையாள்வது, இதன் இணையதளத்தை நிர்வகிப்பது உள்ளிட்ட பணிகளை எல்லாம் இடைக்கால கமிட்டி மேற்கொண்டு வந்தன. 

    இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் இன்று கூட்டமைப்பின் தற்காலிகக் குழுவை கலைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

    தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் இடைநீக்கம் நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட பிறகு, மற்றொரு குழு கொண்டு நிர்வகிக்க வேண்டிய அவசியம் இல்லை என இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது.

    அடுத்த மாதம் கிர்கிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சோதனைகளை தற்காலிக குழு மேற்பார்வையிட்டு நடத்தி முடித்தது.

    அந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த விளையாட்டின் நிர்வாகம் மீண்டும் தேசிய மல்யுத்த கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தான் வென்ற விருதுகள் அனைத்தையும் ஒப்படைப்பதாக தெரிவித்தார்
    • இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் தனது பதவியில் இருந்து விலகினார்

    இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது குற்றம் சாட்டிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    இதன் காரணமாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் தனது பதவியில் இருந்து விலகினார்.

    இதனையடுத்து இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர்கள் போட்டியிட அனுமதி வழங்கக்கூடாது என்று மல்யுத்த வீராங்கனைகள் வலியுறுத்தினர். எனினும், தேர்தலில் களம் கண்ட பிரிஜ் பூஷணின் ஆதரவாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதை அறிந்து அதிர்ச்சி தெரிவித்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்களது பதக்கங்களை ஒப்படைப்பதாகவும், மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாகவும் அறிவித்தனர்

    அந்த வரிசையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தான் வென்ற விருதுகள் அனைத்தையும் ஒப்படைப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.

    அந்த கடிதத்தில், "ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு கலைகிறது. ஒவ்வொரு பெண்ணும் கண்ணியத்துடன் வாழ விரும்புவர். ஆனால் கண்ணியத்துடன் வாழும் வாழ்க்கையில் விருதுகள் சுமையாக கூடாது என்பதால், நான் வாங்கிய விருதுகளை திரும்ப கொடுக்கிறேன்," என்று எழுதியிருந்தார்.

    இதனையடுத்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தனது கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை திருப்பி அளித்தார். தனது விருதுகளை பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்க முனைந்த அவருக்கு, தில்லி காவல்துறையினர் அனுமதி மறுத்து வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் அந்த விருதுகளை பிரதமர் அலுவலகம் செல்லும் சாலையின் நடுவில் வைத்துவிட்டுத் திரும்பினார். பின்னர் காவல்துறையினர் அதை கைப்பற்றினர்.

    மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வீரேந்தர் சிங் யாதவ் ஆகியோரும் தங்களது விருதுகளை திருப்பி அளித்துள்ளனர்.

    இந்நிலையில், இதை விமர்சிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வினேஷ் போகத் படத்தை மோடி பார்க்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது.

    அந்த பதிவில், என் உயிரை பணயம் வைத்து பாலியல் பலாத்காரம் செய்பவர்களை காப்பாற்றுவேன் என்று நரேந்திர மோடி கூறுகிறார் என்று பதிவிட்டுள்ளது.

    • வீராங்கனைகள் நீண்ட கால போராட்டம் நடத்தி வந்தனர்.
    • மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாக அறிவித்தார்.

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்து பாலியல் குற்றச்சாட்டு காரணமாக அந்த பதவியில் இருந்து விலகியவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நீண்ட கால போராட்டம் நடத்தி வந்தனர்.

    மேலும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர்கள் போட்டியிட அனுமதி வழங்கக்கூடாது என்று மல்யுத்த வீராங்கனைகள் வலியுறுத்தினர். எனினும், தேர்தலில் களம் கண்ட பிரிஜ் பூஷணின் ஆதரவாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதை அறிந்து அதிர்ச்சி தெரிவித்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்களது பதக்கங்களை ஒப்படைப்பதாகவும், மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாகவும் அறிவித்து வருகின்றனர்.

     


    அந்த வரிசையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தான் வென்ற விருதுகள் அனைத்தையும் ஒப்படைப்பதாக தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

    இது தொடர்பான கடிதத்தில், "ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு கலைகிறது. ஒவ்வொரு பெண்ணும் கண்ணியத்துடன் வாழ விரும்புவர். ஆனால் கண்ணியத்துடன் வாழும் வாழ்க்கையில் விருதுகள் சுமையாக கூடாது என்பதால், நான் வாங்கிய விருதுகளை திரும்ப கொடுக்கிறேன்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்தே ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தான் வென்ற பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தார்.

    மல்யுத்த வீரர்களின் இந்த அறிவிப்புகளை தொடர்ந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்வதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. எனினும், இது தொடர்பாக தங்களுக்கு எழுத்துப்பூர்வமாக எந்த அறிக்கையும் வழங்கப்படவில்லை என்றும் சஞ்சய் சிங் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டாரா அல்லது மற்றவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்களா என்பது எனக்கு தெரியாது என சாக்ஷி மாலிக் தெரிவித்து இருந்தார். 

    • இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பை மத்திய அரசு இடைநீக்கம்.
    • மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பெண்ட் தொடரும் என அறிவிப்பு.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாடப் பணிகளை கண்காணிக்க தற்காலிக குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்காலிக குழு அமைக்க கோரி இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பை மத்திய அரசு இடைநீக்கம் செய்துள்ள நிலையில், தற்காலிக குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும், மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பெண்ட் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
    • பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மாலிக் மற்றும் பிற விளையாட்டு வீரர்கள் பிரிஜ் பூஷன் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

    புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

    தேர்தல் முடிவுகள் வெளியானதும் செய்தியாளர்களைச் சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறுகையில், "குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை என்னால் ஏற்க முடியாது. எனவே நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இதைதொடர்ந்து பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக பஜ்ரங் புனியா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு எனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன்" என காட்டமாக பதிவிட்டார்.

    பஜ்ரங் புன்யாவை தொடர்ந்து, மல்யுத்த வீரர் விரேந்தர் சிங்கும் தடகள வீராங்கனை சாக்ஷி மாலிக்கிற்கு ஆதரவு அளிக்கும் வகையில், பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து விரேந்தர் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், "எனது சகோதரியும், நாட்டின் மகளுக்காக, பிரதமர் நரேந்திர மோடியிடம் பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கிறேன். உங்கள் மகள் மற்றும் எனது சகோதரி சாக்ஷி மாலிக்கைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். ஆனால், தங்களின் முடிவையும் முன்வைக்க வேண்டும் என நாட்டின் முன்னணி வீரர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று சச்சின் டெண்டுல்கர் மற்றும் நீரஜ் சோப்ராவை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

    • 22 மாவட்டங்களைச் சேர்ந்த 214 வீரர்-வீராங்கணைகள் கலந்து கொண்டனர்.
    • ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற அணிகளுக்கு பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன.

    கன்னியாகுமரி :

    தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் மாநில அளவிலான கடற்கரை மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் குமரி மாவட்டம் பள்ளம்துறை ஊராட்சிக்குட்பட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது. பல்வேறு பிரிவுகளின் கீழ் 2 நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கடலூர் உள்பட 22 மாவட்டங்களைச் சேர்ந்த 214 வீரர்-வீராங்கணைகள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்க பொதுச்செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். பள்ளம்துறை ஊராட்சி மன்ற தலைவர் ஆன்றனிமுன்னிலை வகித்தார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், போட்டியை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பள்ளம் ஊர் தலைவர் சார்லஸ், செயலாளர் ரெனிஸ்டன், பொருளாளர் சகாய ஜார்ஜ், முன்னாள் தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், சீனியர் கூட்டுறவு ஆய்வாளர் பினு, கன்னியாகுமரி விளையாட்டு அலுவலர் ராஜேஷ், மாவட்ட மல்யுத்த சங்க செயலாளர் ரஞ்சித், பயிற்சியாளர் நிகேஷ் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகள் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற அணிகளுக்கு பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன.

    • பிரிஜ்பூஷன் சரண் சிங் மற்றும் பிற அதிகாரிகளுக்கு எதிராக 30 மல்யுத்த வீரர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அதிகாரிகளால் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்

    புதுடெல்லி:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என இரண்டிலும் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமை பெற்றவர் வினேஷ் போகத். இவர், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மீதும், அதன் தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங் மற்றும் பயிற்சியாளர்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பிரிஜ்பூஷன் சரண் சிங் மற்றும் பிற அதிகாரிகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் வினேஷ் போகத், உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற சரிதா மோர், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை பஜ்ரங் புனியா உட்பட 30 மல்யுத்த வீரர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 4 மணி நேரம் நடந்த இப்பேராட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகத், தேசிய பயிற்சியாளர்களால் பல ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, அதன் தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்கை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்திய வினேஷ் போகத், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அதிகாரிகளால் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.

    'இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரால் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் அத்துமீறல் பற்றி குறைந்தது 10-12 மல்யுத்த வீராங்கனைகளை என்னிடம் கூறி உள்ளனர். அவர்களின் பெயர்களை என்னால் இப்போது கூற முடியாது. ஆனால், பிரதமர், உள்துறை மந்திரியை நாங்கள் சந்திக்க நேர்ந்தால் நிச்சயம் பெயர்களைச் சொல்வேன்' என்றார் வினேஷ் போகத்.

    பின்னர் பேசிய பஜ்ரங் புனியா, ``எங்கள் போராட்டம் அரசாங்கத்துக்கோ அல்லது இந்திய விளையாட்டு ஆணையத்துக்கோ எதிரானது அல்ல. இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிரானது இது. கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்படும்வரை இந்தப் போராட்டம் தொடரும்" என்று கூறினார்.

    வீராங்கனைகள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல என பிரிஜ்பூஷன் சரண் சிங் பதில் அளித்துள்ளார். ``உங்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால், 10 ஆண்டுகளாக ஏன் யாருமே இதுபற்றி பேசவில்லை? விதிமுறைகள் வகுக்கப்படும்போதெல்லாம் இதுபோன்ற பிரச்னைகள் வருகின்றன. என் மீதான ஒரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு நிரூபிக்கப்பட்டாலும் நான் தூக்கில் தொங்க தயாராக இருக்கிறேன். நான் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலக மாட்டேன். ஆனால் சிபிஐ அல்லது போலீஸ் விசாரணைக்கு தயாராக இருக்கிறேன்" என பிரிஜ்பூஷன் சரண் சிங் தெரிவித்தார்.

    ×