search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 156390"

    இந்திய தலைநகர் டெல்லியில் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த, 15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகள் முடிவடைந்த டீசல் வாகனங்களுக்கும் தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SC #Delhi #AirPollution
    புதுடெல்லி:

    டெல்லியில் காற்று மாசு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு டெல்லி மாநகரில் 15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகள் முடிவடைந்த டீசல் வாகனங்களுக்கும் தடை விதித்தது.

    தடை விதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் பற்றிய விவரங்களை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் போக்குவரத்து கழகம் தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது. #SC #Delhi #AirPollution
    ஊட்டி மார்க்கெட் வளாகத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை என்று நகராட்சி அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.
    ஊட்டி:

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஊட்டி மார்க்கெட் தொடங்கப்பட்டது. இந்த மார்க்கெட்டில் ஆங்கிலேயர் அதிகமாக பயன்படுத்தும் சூப்புக்கான பாலக், கிளைக்கோஸ், டர்னீப் உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகள், கோழி, ஆடு, அணை மீன்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டது. கிராமப்புறங்களில் இருந்து பொதுமக்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு முக்கிய மார்க்கெட்டாக விளங்கியது.

    மலை மாவட்டமான நீலகிரியில் விளையும் மங்குஸ்தான், ரம்பூட்டான், பிளம்ஸ், பேரிக்காய் போன்றவை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டது. இதனை ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தற்போது அந்த மார்க்கெட் ஊட்டி நகராட்சிக்கு சொந்தமானது ஆகும். மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள், பூக்கள், துணிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மார்க்கெட்டில் சேகரமாகும் குப்பைகளை சேகரிக்க நகராட்சி வாகனம் உள்ளே சென்று வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகத்துக்குள் சிலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இதனால் குறுகிய பாதையில் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் சிலர் வேகமாக வாகனங்களை ஓட்டி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மார்க்கெட்டில் கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்பவர்கள், தங்களது கடைக்கு முன்பாக பொருட்களை வைப்பதாலும், வாகனங்களை முன்னால் நிறுத்துவதாலும் மக்கள் எளிதில் நடந்து செல்ல முடிவது இல்லை. இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.

    அதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் மார்க்கெட்டின் நுழைவுவாயில் பகுதிகளில் அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளனர். அதில் இங்கு வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. நகராட்சி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். இருப்பினும் மார்க்கெட் வளாகத்துக்குள் சிலர் மாற்று வழியாக வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மார்க்கெட்டுக்கு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க வாகனங்களில் வந்து செல்வது வழக்கம் தான். ஆனால் சிலர் இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பிக்கொண்டு குறுகிய பாதையில் செல்வதால், பொதுமக்கள் ஒதுங்க கூட இடம் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் பெண்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். எனவே அனுமதியின்றி மார்க்கெட் வளாகத்துக்குள் வாகனங்களில் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
    பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் சென்னை நகரம் போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
    சென்னை :

    மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டால் மட்டுமே அந்த நாடும், மாநிலமும் வளர்ச்சியடைந்த பாதையை நோக்கி செல்கின்றது என்று அர்த்தம். உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை என்றால் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கவேண்டியது என்பது தவிர்க்கமுடியாதது. சென்னை நகரத்தில் பெருகிவரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலை கட்டமைப்புகள் இல்லை என்பது கசப்பான உண்மை.

    அரசு போக்குவரத்துத்துறை பதிவேடுகளின்படி கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 847 ஆகும். இதில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 2 கோடியே 15 லட்சத்து 86 ஆயிரத்து 210 ஆகும். தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வாகனங்களில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 82 சதவீதம் ஆகும்.

    வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தலைநகர் சென்னையில் பிரதான சாலைகள் அனைத்திலும் வாகனங்கள் நிரம்பி வழிவதை காணமுடிகிறது. நடைபாதைகளே தெரியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் ஒரு பக்கம். இதனால் ‘நடைபாதை நடப்பதற்கே’ என்ற நிலை மாறி ‘நடைபாதை ஆக்கிரமிப்பதற்கே’ என்று ஆகிவிட்டது. இதுதவிர ‘நோ பார்க்கிங்’ என்று போக்குவரத்து போலீசார் வரையறுத்த இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.

    இதுபோன்ற காரணங்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன. இன்னொரு பக்கம் முக்கிய சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதால் ஆமை வேகத்திலேயே வாகனங்கள் முன்னேறி செல்ல முடிகிறது. சரியான இடத்துக்கு, உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மன உளைச்சலிலேயே வாகனங் களை இயக்கும் நிலை உள்ளது.

    பெசன்ட்நகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எழும்பூர், பிராட்வே, புரசைவாக்கம், சென்னை சென்டிரல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சாலை மற்றும் பசுமைவழிச்சாலை வழியாகவே வாகனங்களில் செல்லவேண்டிய நிலை உள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் அந்த சாலைகளை பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


    உயரம் குறைவாக உள்ள சென்னை பாடி மேம்பாலத்தில் உள்ள தடுப்பு சுவர்.

    இதனால் காலை நேரத்தில் பசுமை வழிச்சாலை சந்திப்பில் இருந்து அடையாறு பாலம் வரையிலும் வாகனங்கள் வரிசையாக நின்று செல்லவேண்டிய நிலை இருக்கிறது. பசுமை வழிச்சாலை சந்திப்பை கடந்து செல்வதற்கே சராசரியாக வாகன ஓட்டிகளுக்கு 10 முதல் 15 நிமிடம் வரையிலும் எடுத்துக் கொள்கிறது. இதனால் அலுவலகங்களுக்கு ஊழியர்களும், பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகளும் கால தாமதமாக செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

    சிக்னல் கடந்த சில நாட்களாகவே பழுதாகி கிடப்பதால், பசுமைவழிச்சாலை சந்திப்பில் சாலையை கடந்து செல்வதற்கு பொதுமக்கள், கல்லூரி மாணவிகள், ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் என பல்வேறு தரப்பினரும் கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் இடையூறு இல்லாமல் சாலையை கடந்து செல்வதற்கு ஆகாய நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கல்லூரி மாணவிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல அமைந்தகரை, கீழ்ப்பாக்கம் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் காலை மற்றும் மாலை நேரத்தில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நிற்பதை தினசரி காணமுடியும். அந்த பகுதியில் உள்ள சிக்னலும், கண்காணிப்பு கேமராவும் பழுதாகி பல நாட்கள் ஆகிறது. ஆனால் அதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    சிக்னல் பழுதாகி கிடப்பதால், மிக முக்கிய பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள் வரும் நேரங்களில் மட்டுமே போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்திவருகின்றனர். மற்ற நேரங்களில் ஒழுங்குபடுத்தாததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னரும், போக்குவரத்து நெரிசல் மட்டும் தீர்ந்தபாடு இல்லை. இதேபோல நகரின் பல்வேறு இடங்களிலும் நெரிசல் நிலவி வருகிறது.

    போக்குவரத்து நெரிசலால் சென்னை நகரமே திக்குமுக்காடி வருகிறது. சென்னை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மற்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை காட்டிலும் சுரங்கபாதைகள், மேம்பாலங்கள் கட்டுவதற்காகவும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காகவும் அதிக நிதி ஒதுக்கீடு செய்து உள் கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல அரசு பஸ் சேவைகள், மெட்ரோ ரெயில் மற்றும் மின்சார ரெயில் சேவை களை பல்வேறு அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தி, கட்டணத்தையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு செய்து, பொதுத்துறை போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவிப்பு செய்வதன் மூலம் தனிநபர் பயன்படுத்தும் வாகனங்களை கணிசமாக குறைக்கலாம் என்று போக்குவரத்து ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
    அரூர் பகுதியில் விதிமுறையை மீறி இயக்கிய 83 வாகனங்களுக்கு ரூ.2¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 283 பேரின் ஓட்டுனர் உரிமத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் ரத்து செய்தனர்.
    அரூர்:

    தர்மபுரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் மலர்விழி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் அலுவலர்கள் அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி கணவாய் ஆகிய இடங்களில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை மொத்தம் 328 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன.

    அப்போது சரக்கு வாகனங்களில் ஆட்கள் ஏற்றி வந்தது, அதிக பாரம் ஏற்றி சென்றது, அதிக ஆட்களை ஏற்றி வந்த ஆம்னி பஸ்கள், அதிக ஒலி எழுப்பிய வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை மீறி இயக்கிய 83 வாகனங்களுக்கு ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 500 அபராதம் விதித்து அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    மேலும் அதிக பாரம், ஆட்களை ஏற்றி வந்த வாகன டிரைவர்கள், மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக மொத்தம் 283 பேருக்கு 3 மாத காலத்திற்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது விதிமுறையை மீறிய வாகன ஓட்டிகளை மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் எச்சரிக்கை செய்து அனுப்பினர். 
    ×