search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்துல்கலாம்"

    மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
    காரைக்குடி:

    காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் கல்லூரி முதல்வர் கணேசன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயமணி உள்பட பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம், கனவு நாயகன் கலாம் என்ற தலைப்புகளில் கட்டுரைப்போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ் அலுவலர் ஜெயமணி செய்திருந்தார்.



    மானாமதுரை செயிண்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடந்த விழாவில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் பள்ளி தாளாளர் கிறிஸ்து ராஜா, கலாமின் அறிவியல் கண்டுபிடிப்புகள், அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். முடிவில் பள்ளி துணை முதல்வர் சாலமன் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

    இதேபோல திருப்பத்தூர் அமிர்பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பள்ளி தாளாளர் ஹாஜி பாபா அமிர்பாதுஷா அப்துல் கலாமை பற்றிய அறிவு சார்ந்த கருத்துக்களை எடுத்து கூறினார். பள்ளி முதல்வர் கவிதாமேரி வரவேற்றார். இதில் அப்துல்கலாமை பற்றி பாடல்கள் பாடப்பட்டன. பெற்றோர் சங்கத்தின் சார்பில் ஹேமலதா வாழ்த்தி பேசினார். முடிவில் ஆசிரியை முத்துக்குமாரி நன்றி கூறினார்.

    கிறிஸ்துராஜா மெட்ரிக்குலேசன் பள்ளியில் இளைஞர் எழுச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிர்வாகி விக்டர் தலைமை தாங்கினார். இதில் திருப்பத்தூர் ஆறுமுகம் நகர் லயன்ஸ் சங்கத் தலைவர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் ரூபன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் ‘விஷன்2020‘ என்ற தலைப்பில் பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நகர் வர்த்தக சங்கத் தலைவர் லட்சுமணன், பொருளாளர் சிவராஜ், கல்வியாளர் ரங்கசாமி, முகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாணவர் தலைவர்கள் ஜெப்ரீ, முத்துமீனா ஆகியோர் செய்திருந்தனர்.

    ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் நடைபெற்ற அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவை இளைஞர்கள் எழுச்சி நாளாகக் கொண்டாடும் வகையில் ஓய்.ஆர்.சி., என்.சி.சி., என்.எஸ்.எஸ்., அப்துல்கலாம் கிளப் சார்பாக ரத்ததான முகாம் மற்றும் ரத்த வகை கண்டறிதல் முகாம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு கல்லூரி செயலாளர் ராமேஸ்வரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சூசைமாணிக்கம் முன்னிலை வகித்தார். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் வழங்கியும், 1,800 மாணவ- மாணவிகள் ரத்தம் தரம் அறிதல் முகாமிலும் பங்கு கொண்டனர். சிவகங்கை அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் விமலாதேவி வித்யா, காரைக்குடி ரத்த வங்கி மருத்துவர் அருள்தாஸ் மற்றும் நெற்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அபிநயா உள்பட 50-க்கும் மேற்பட்ட நர்சுகள் முகாமில் பணியாற்றினர். இதில் கல்லூரி துணை முதல்வர்கள் கோபிநாத், ஸ்ரீதேவி, சுயநிதிப் பாடப்பிரிவு இயக்குனர் பேராசிரியர் ராஜமாணிக்கம், பேராசிரியர்கள் மாரியப்பன், இளங்கோவன், வானதி, ஜெயக்குமார், சிவக்குமார், வேல்முருகன், தனலெட்சுமி, காளிதாஸ், நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் மரியரத்தினம், பெலிஜியாஞானதீபம், காசிவயிரவன், இளையராஜா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் முகாம் அமைப்பாளர் அய்யப்பன் நன்றி கூறினார். 
    மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை போற்றும் வகையில் அவரது உருவப்படம் டெல்லி சட்டசபையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. #AbdulKalam
    புதுடெல்லி:

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை போற்றும் வகையில் அவரது உருவப்படம் டெல்லி சட்டசபையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால், சபாநாயகர், ராம் நிவாஸ் கோயல் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

    லால்பகதூர் சாஸ்திரியின் உருவப்படமும் திறந்து வைக்கப்பட்டது. விழாவில் இரு தலைவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். #AbdulKalam
    அரியலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. கல்லூரியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் செந்துறை சாலை வழியாக சென்று அரியலூர் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் அப்துல்கலாம் பொன்மொழி வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கருணாகரன் செய்திருந்தார்.

    இதேபோல் அரியலூர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். ஆர்.எஸ்.மாத்தூர் பஸ் நிலையம் அருகே 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பொதுமக்கள் நல்லுறவு கமிட்டி மற்றும் மக்களாட்சி பேரவை சார்பில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். அரியலூர் ஒன்றியம் கல்லக்குடி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அப்துல்கலாம் உருவப்படம் முன்பு பள்ளி மாணவ-மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

    ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பணி புரிகின்ற ஆட்டோ, ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சார்பில் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் ஜெயங்கொண்டம் நகர பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளிலும் அரசு சார்ந்த அலுவலகங்களிலும் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
    முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். #AbdulKalam
    மானாமதுரை:

    மானாமதுரை புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியில் மேலாளர் சுஜய் தலைமையில் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பள்ளியில் வைக்கப்பட்டிருந்த அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அப்துல்கலாம் குறித்த சொற்பொழிவு, கவிதை, பாடல் உள்ளிட்டவற்றை மாணவர்கள் படைத்தனர். முடிவில் அதில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    திருப்பத்தூர் நேஷனல் கேட்டரிங் சமுதாயக்கல்லூரியில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு முதல்வர் சுரேஷ்பிரபாகர் தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் மரம் நடுவதின் அவசியத்தை வலியுறுத்தி நினைவு அஞ்சலி செலுத்த வந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

    இதேபோல் கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் பள்ளியில் தாளாளர் எஸ்.எம்.பழனியப்பன் தலைமையில் மாணவர்கள், ஆசிரிய-ஆசிரியர்கள் அப்துல்கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முதல்வர் எஸ்.பழனியப்பன் முன்னிலை வகித்தார். மேலாளர் ஜோதிராஜா வரவேற்றார். பின்னர் ‘கலாம் இறக்கவில்லை, சற்று இளைப்பாறுகிறார்’ என்ற தலைப்பில் மாணவ-மாணவிகள் கலாமின் சாதனைகளை விளக்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மலேசியவாழ் தமிழர்கள் காயத்ரி, மணிகண்டன், சஞ்சய்காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா முடிவில் பள்ளிச் செயலாளர் குணாளன் நன்றி கூறினார்.

    தேவகோட்டை அருகே புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை பஞ்சு தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள் அப்துல்கலாம் படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர் ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் ‘மாமனிதர் அப்துல்கலாம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    காரைக்குடி ராகவேந்திரா பள்ளியில் அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி செயலாளர் கார்த்திக், முதன்மை முதல்வர் நாராயணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பின்னர் மாணவர்கள் அப்துல்கலாம் வேடமணிந்தும், அவரது முகமூடி அணிந்தும் வந்தனர். 
    ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அஞ்சலி செலுத்தி மணிமண்டபத்தை சுற்றி பார்த்தனர். #AbdulKalam #AbdulKalamMemorial
    ராமேசுவரம்:

    நாட்டின் 11-வது குடியரசு தலைவராக பணியாற்றி மறைந்த அப்துல்கலாமின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள ஷில்லாங்கில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்த போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்துல்கலாம் மரணமடைந்தார்.

    சொந்த ஊரான ராமேசுவரம் பேக்கரும்பில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இங்கு மத்திய பாதுகாப்பு துறையின் சார்பில் அப்துல் கலாமிற்கு பிரமாண்டமான மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது.

    3-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று அவரது சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    இன்று காலை பேக்கரும்பு நினைவிடத்துக்கு கலாமின் அண்ணன் முகமது முத்து மீரான் மரைக்காயார், பேரன் ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் வருகை தந்தனர். தொடர்ந்து அங்கு ஜமாத் தலைவர் சாகுல் அமீது தலைமையில் துஆ ஓதப்பட்டு நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அப்துல்கலாம் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    ராமேசுவரத்துக்கு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினமும் ஏராளமானோர்வந்து செல்கின்றனர்.

    அப்துல்கலாம் நினைவு தினமான இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக ராமநாதபுரம், ராமேசுவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அப்துல்கலாம் மணி மண்டபத்துக்காக வந்து அஞ்சலி செலுத்தி மணிமண்டபத்தை சுற்றி பார்த்தனர். #AbdulKalam  #AbdulKalamMemorial
    ×