search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காரைக்குடி"

    காரைக்குடியில் இருதய பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
    காரைக்குடி:

    காரைக்குடி காவேரி மருத்துவமனை சார்பில் உலக இருதய தினத்தையொட்டி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. மாரத்தான் போட்டியில் ஆண்களுக்கு 16 வயது முதல் 25 வயது வரையும், 26 முதல் 50 வயது வரையும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என 3 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. இதேபோல் 16 முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் முன்னிலையில் ஆண்களுக்கான 16-25 வயது மற்றும் 26-50 வயது பிரிவுகளுக்கான போட்டியை காரைக்குடி சிக்ரி இயக்குனர் விஜயமோகனன் கே.பிள்ளை கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஆண்களுக்கான 50 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவு போட்டியை இலுப்பக்குடி துணை ராணுவ பட்டாலியன் சீனியர் கமாண்டர் அஜய் ஜோஷியும், பெண்களுக்கான பிரிவு மாரத்தான் போட்டியை சிவகங்கை அரசு மருத்துவமனை டீன் வனிதாவும் தொடங்கி வைத்தனர். 50 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் கலெக்டர் ஜெயகாந்தன் கலந்துகொண்டு ஓடினார்.

    இருதய பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில் ஆண்களுக்கான 16-25 வயது பிரிவில் லிங்கேசுவரன் முதலிடத்தையும், வெங்கடேஷ் 2-ம் இடத்தையும், கஜேந்திரன் 3-ம் இடத்தையும் பிடித்தனர். 26-50 வயது பிரிவில் மணிகண்டன், குல்தீப்குமார், பட்டாணி ஆகியோர் முதல் 3 இடங்களையும், 50 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் முத்துவிநாயகம், வள்ளியப்பன், அஜய் ஜோஷி ஆகியோர் முதல் 3 இடங்களையும் பிடித்தனர். பெண்களுக்கான பிரிவில் ஏன்சலின்ஸ், நீது, லட்சுமி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.

    முடிவில் போட்டியில் வென்றவர்களுக்கு கலெக்டர் ஜெயகாந்தன் பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கினார். இதில் காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் முருகன், காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் சலீம், டாக்டர் காமாட்சி சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரிக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
    தஞ்சாவூர்:

    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரிக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், துணை தலைவர் வக்கீல் அன்பரசன் ஆகியோர் இணைந்து மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ்கோயலுக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    பட்டுக்கோட்டை- காரைக் குடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் போக்குவரத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி மற்றும் காரைக் குடி பகுதிகளை சேர்ந்த ரெயில் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    எனவே நிறுத்தப்பட்ட ரெயில்போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும். பட்டுக்கோட்டை முதல் காரைக்குடி வரையில் உள்ள ரெயில்வே கேட்டுகளில் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

    பட்டுக்கோட்டையில் இருந்து திருவாரூர் வரையிலான அகல ரெயில் பாதை பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு காரைக்குடியில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு ரெயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும். அதுவரையில் தற்காலிகமாக பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி, திருச்சி, தஞ்சை வழியாக சென்னைக்கு ஒரு விரைவு ரெயில் இயக்க வேண்டும்.

    மேலும் கிடப்பில் போடப்பட்டுள்ள மன்னார்குடி-பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை-தஞ்சாவூர், தஞ்சை-அரியலூர், கும்பகோணம்-விருத்தாச்சலம் அகல ரெயில் பாதை பணிகளுக்கு உடனடியாக தேவையான அளவு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    காஞ்சி வீரன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு பந்துவீச்சாளர்களே காரணம் என காரைக்குடி அணியின் கேப்டன் ஸ்ரீநிவாசன் கூறியுள்ளார். #TNPL2018 #KKvVKV #Srinivasan
    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று 8-வது லீக் ஆட்டத்தில் காஞ்சி அணி நிர்ணயித்த 146 ரன் இலக்கை எடுத்து காரைக்குடி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி குறித்து அந்த அணி வீரர் ஸ்ரீநிவாசன் கூறியதாவது:-

    இந்த வெற்றிக்கு அனைத்து பெருமைகளும் பந்து வீச்சாளர்களையே சாரும். அணி வீரர்கள் விவாதத்தின் போது என்று திட்டமிட்டோமோ அதை அப்படியே செயல்படுத்தினோம். இது போன்ற ஆடுகளத்தில் எதிரணியை 145 ரன்னுக்குள் கட்டுபடுத்துவது என்பது பெரிய வி‌ஷயம் தான். எங்களது பந்து வீச்சு அற்புதமாக இருந்தது.

    திண்டுக்கல் மைதானத்தில் அனிருதா தொடர்ச்சியாக 4-வது அரைசதம் அடித்து உள்ளார். அவர் நல்ல பார்மில் இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNPL2018 #NammaOoruNammaGethu #KK #Srinivasan
    காரைக்குடி அருகே காலத்தால் அழியாத மற்றும் 400 ஆண்டு கால வரலாற்று புகைப்படங்களை நகரத்தார் மாளிகை முழுவதும் வைத்து கண்காட்சி கூடமாக முதியவர் ஒருவர் மாற்றியுள்ளார்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ளது கானாடுகாத்தான். இங்குள்ள து.க.தெருவில் வசித்து வருபவர் குப்பன் செட்டியார்(வயது 65). இவர் காரைக்குடியில் உள்ள தபால் நிலையத்தில் முகவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 40 ஆண்டுகளாக தனது சேகரிப்பின் மூலம் காணக்கிடைக்காத அரிய பொக்கிஷ களஞ்சியத்தை தனது வீட்டில் சேகரித்து வருகிறார். எளிதில் கிடைக்கப்பெறாத 400 ஆண்டு கால பழமைவாய்ந்த புகைப்படங்கள், ஓலைச்சுவடி உள்ளிட்டவற்றை காட்சிக்கு வைத்துள்ளார். இதுதவிர இந்தியாவை ஆண்ட வெள்ளையர்களின் ஆங்கிலத்தை தமிழர்கள் கற்க பயன்படுத்திய முதல் புத்தகம் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் பயன்படுத்திய டைரி, சுதந்திரம் கிடைத்தபோது அவற்றை கொண்டாடிய விதம், ஒருவருக்கொருவர் அனுப்பிய வாழ்த்து அஞ்சல் அட்டை, கலை, இலக்கியம், புராணம் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த காணக்கிடைக்காத பொக்கிஷங்களும் இவரது சேகரிப்பில் அடங்கியுள்ளள. மேலும் மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தமிழர்கள் தொழில் செய்தபோது அவர்கள் எழுதிய 100 ஆண்டுகள் பழமையான வரவு-செலவு புத்தகம், முதன்முதலில் வெளியான தமிழ், ஆங்கிலம் அகராதி தொகுப்புகள், இதழ்கள் குறித்த விவரங்கள் உள்ளன.

    இதுகுறித்து குப்பன் செட்டியார் கூறியதாவது:- கானாடுகாத்தான் பகுதியில் உள்ள இந்த நகரத்தார் வீட்டை வாடகைக்கு எடுத்து இதில் கடந்த 40 ஆண்டுகாலமாக அரிய வகை பொக்கிஷங்களை சேகரித்து வருகிறேன். மழைநீர் சேகரிப்பு முற்றம் தோற்றம் உள்ள இந்த பிரமாண்ட வீட்டின் உள்பகுதியில் 2 பெரிய அரங்கு மற்றும் ஒரு பெரிய அரங்கு முழுவதும் சேகரிக்கப்பட்ட அரிய வகை புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை வரிசைப்படுத்தி கண்காட்சிக்காக வைத்துள்ளேன். இதில் முக்கியமாக கடந்த 1884-ம் ஆண்டு நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகள் பயன்படுத்திய தபால் தலைகள், லண்டன் ராணி பயன்படுத்திய தபால் தலைகள், பண்டைய இயல், இசை, நாடகம் குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகம், 400 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள திருவிளையாடல் புராணம், 120 வருடத்திற்கு முன்பு நமது தமிழர்கள் பயன்படுத்திய பனை ஓலையால் ஆன அரிச்சுவடிகள், பண்டைய காலத்தில் தமிழர்களின் திருமணம் குறித்த தகவல்கள் உள்ளன. இதுதவிர கடந்த 1910-ம் ஆண்டு முதல் 1920-ம் ஆண்டு வரை ஆங்கிலேயர்கள் புகைப்படம் எடுத்த நெல்லை நெல்லையப்பர் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் கோவில், திருவாரூர் தேரோட்டம், குற்றாலம் அருவிகள், சென்னை எழும்பூர் ரெயில் நிலையம், மெரினா பீச், மவுண்ட் ரோடு, ஐகோர்ட்டு கட்டிடம் உள்ளிட்ட அரிய வகை புகைப்படங்களும் உள்ளன.

    மேலும் 400 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கிறிஸ்த ஆலயங்களின் புகைப்படங்கள், உலக அளவில் காணப்பட்ட பறவைகள் குறித்த படங்கள், கடந்த 1800-ம் ஆண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் எழுதிய சுதந்திர போராட்டம் குறித்த டைரிகள், புகைப்படங்கள், இந்திய ராணுவத்திற்கு அப்போதே சுமார் ரூ.2 லட்சம் வரை அதிக அளவில் பண உதவி செய்த தமிழர்கள் குறித்த தகவல்கள், தமிழர்கள் வெளிநாட்டில் செய்த வாணிபம், இன்று அழைக்கப்படும் வியட்நாம் குறித்த அரிய தகவல்கள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளன. மேலும் கடந்த 1900-ம் ஆண்டு முதல் 1923-ம் ஆண்டு வரை காரைக்குடியில் தயாரிக்கப்பட்ட அப்போதைய சொகுசு கார்களின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். 
    காரைக்குடி-பட்டுக்கோட்டை ரெயில் மதுரை வரை நீட்டிக்கப்படும் என்றும், இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் கொடுப்பேன் என்றும் செந்தில்நாதன் எம்.பி. கூறினார்.
    காரைக்குடி:

    காரைக்குடியை அடுத்த குன்றக்குடியில், குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள் விழா செய்தி-மக்கள் தொடர்பு துறையின் சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு செந்தில்நாதன் எம்.பி., கலெக்டர் லதா, கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ., குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மணி மண்டபத்தில் குன்றக்குடி அடிகளார், முக்கிய பிரமுகர்களுடன் அரசு விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் அடங்கிய புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. அதனை எம்.பி., கலெக்டர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    இந்த விழாவில் செய்தி-மக்கள் தொடர்பு துறை அலுவலர் பாண்டி, திருப்பத்தூர் தாசில்தார் தங்கமணி, முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ, கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் அசோகன், குன்றக்குடி ஆதீன மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழா முடிந்தபின்பு நிருபர்களுக்கு பேட்டியளித்த செந்தில்நாதன் எம்.பி. கூறும்போது, காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையேயான ரெயில் வழித்தடத்தில் ஆளில்லாத ரெயில்வே கேட்டுகளில் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையிலான ரெயில் பயண நேரத்தை மேலும் குறைக்க முயற்சி எடுக்கப்படும். இத்துடன் அந்த ரெயிலை மதுரை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகத்திடம் முறையிடப்படும். மேலும் வாரம் இருமுறை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்படும். இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்துவேன் என்றார். 
    காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே செல்லும் பயணிகள் ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று காரைக்குடி பொதுநல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி வள்ளல் அழகப்பர் நடையாளர் சங்கம், அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம், தொழில் வணிக கழகம், அரிமா சங்கம், ரெயில் பயணிகள் பாதுகாப்பு கழகம் ஆகிய பொதுநல சங்கத்தினர் திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையேயான அகல ரெயில் பாதை பணி கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ரூ.700கோடி மதிப்பீட்டில் தொடங்கி நிறைவு பெற்றது. இதையொட்டி சுமார் 73 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த ரெயில் பாதையில் கடந்த மார்ச் மாதம் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது.

    பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, காரைக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த ரெயிலை அதிகஅளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பஸ் கட்டணம் தற்சமயம் அதிகஅளவு உள்ளதால் மேற்கண்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள், மாணவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    குறிப்பாக காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தினசரி சென்று வருகின்றனர். காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தினந்தோறும் சுமார் 70 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய பகுதியில் உள்ள மாணவர்கள் காரைக்குடி மற்றும் மதுரைக்கும் கல்லூரி படிப்பிற்கு சென்று வருகின்றனர். தற்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிகஅளவு கட்டணம் உள்ளதால் ஏழை, எளிய மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே காரைக்குடி-பட்டுக்கோட்டை பயணிகள் ரெயிலை தினந்தோறும் சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரை வரை நீட்டித்து இயக்கினால் அதிகஅளவில் இப்பகுதி மக்கள் பயனடைவார்கள். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர். 
    காரைக்குடியில் நடந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், அடுத்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. முறையை திருத்தி அமைப்போம் என தெரிவித்தார். #Congress #PChidambaram #GST
    காரைக்குடி:

    காரைக்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த நான்கு ஆண்டுகளாக மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் மத சிறுபான்மையினர் அச்சத்தில் உள்ளனர்.

    இந்தி திணிப்புக்கும், இந்துத்துவாவுக்கும் தமிழகத்தில் இடமில்லை. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுமேயானால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். #Congress #PChidambaram #GST
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை, காரைக்குடியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் இறந்துபோனார்கள். இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் சிவகங்கையில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த கணேசன்(வயது 40), மாரிமுத்து(45), அழகர்சாமி(48), ராஜேந்திரன்(45), சுரேஷ்கண்ணன்(46), பால முருகன்(40), தங்கவேல்(50) ஆகிய 7 பேரை சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மோகன் கைது செய்துள்ளார்.

    இதேபோன்று காரைக்குடியில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த கல்யாணகுமார், முத்துமாணிக்கம் ஆகிய 2 பேரை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வடக்கு போலீசார் கைதுசெய்தனர். 
    காரைக்குடியில் பெய்த கனமழையால் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #rain

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.

    நேற்றும், நேற்று முன் தினமும் சிவகங்கை, காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழை காரணமாக கோடை உழவுப் பணியை தொடங்குவதில் விவசாயிகள் மும்முரமாக உள்ளனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருப்புவனம்- 62.6

    சிவகங்கை- 57.5

    திருப்பத்தூர்- 51.3

    மானாமதுரை- 34.4

    தேவகோட்டை- 33.4

    காளையார்கோவில்- 11.6

    மதுரை மாவட்டம் மேலூரிலும் இடி-மின்னலு டன் மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 57 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. #rain

    மொபட் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார். இது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    சிவகங்கை:

    காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் அழகு (வயது 39). இவர் நேற்று மாலை தனது மொபட்டில் வெளியே புறப்பட்டார்.

    செட்டிநாடு அருகே உள்ள வடுகனேந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து வந்த கார் மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அழகு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த காரைக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அழகுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாபன் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த பொன்னம்பலம் (50) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

    ×