search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 162808"

    • போலியாக கணக்கை உருவாக்கி ரூ. 25 கோடி வரை மோசடி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
    • துணை செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய் தலைமறைவாக இருந்து வந்தார்.

    குரும்பூர்:

    குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மற்றும் சார்பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நகைக்கடன் தள்ளுபடிக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி மற்றும் 13-ந்தேதி நகைக்கடன்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

    ரூ.25 கோடி மோசடி

    அப்போது 548 நகை பைகளில் 261 நகை பைகள் மாயமானது தெரியவந்தது. இதேபோல் வைப்புநிதியும் இருப்பில் இருப்பது போன்று போலியாக கணக்கை உருவாக்கி ரூ. 25 கோடி வரை மோசடி செய்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

    இதுதொடர்பாக வங்கி செயலாளர் தேவராஜ், துணை செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் வங்கி தலைவர் தலைவர் முருகேசப்பாண்டியன் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில் செயலாளர் தேவராஜ் உடல்நிலை சரியில்லை என்று கூறி முன்ஜாமீன் பெற்றார்.

    துணை செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. குமரேசன், இன்ஸ்பெக்டர் பத்திரகாளி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தேடி வந்தனர்.

    இந்நிலையில் அவர் குற்றாலத்தில் சொகுசு பங்களா ஒன்றில் இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து பாளை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    இதனைத்தொடர்ந்து அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதையடுத்து, அவர் கொக்கிரகுளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    • சிறப்பு முகாம்களை நாம் தவறாமல் பயன்படுத்தி வாக்காளர் சேர்ப்பு பணிகளில் ஈடுபடவேண்டும் என்றார்.

    தூத்துக்குடி:

    தே.மு.தி.க. தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது தொடர்பாக நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தயாளலிங்கம் பேசியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதன்படி சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி எண்கள் அடிப்படையில் வழங்கப் பட்டுள்ள புதிய வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது, இடமாற்றம் செய்வது, இறந்தவர்கள் மற்றும் நிரந்தரமாக வெளியூர்களிலுள்ள வாக்காளர்களை நீக்கம் செய்வது ஆகிய பணிகளை நிர்வாகிகள் தவறாமல் மேற்கொள்ளவேண்டும்.

    நமது கட்சியினர் வருகிற ஜனவரி 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தியாகி உள்ள புதிய வாக்காளர்களை இப்பட்டியலில் அவசியம் சேர்க்கவேண்டும். புதியதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6, ஆதார் விபரம் சேர்ப்பதற்கு 6பி, பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7, எழுத்துப்பிழை, முகவரி மாற்றம் செய்தல் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு படிவம் 8 பூர்த்தி செய்து வரும் டிசம்பர் 8-ந் தேதி வரை வாக்குச்சாவடி மையங்கள் அல்லது வாக்காளர் சேர்ப்பிற்கான தாசில்தார் அலுவலகத்தில் வழங்கலாம்.

    மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக புதிய வாக்காளர் சேர்த்தல், இடம் மாறுதல், நீக்கம் செய்தல் போன்ற பணிகளை செய்வதற்கு தேர்தல் ஆணையம் நவம்பர் 12, 13 மற்றும் 26, 27 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்களை நடத்துகிறது.

    இந்த சிறப்பு முகாம்களை நாம் தவறாமல் பயன்படுத்தி வாக்காளர் சேர்ப்பு மற்றும் இதர பணிகளில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள், வார்டு, வட்ட செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆகியோர் இணைந்து இப்பணியை சிறப்பாக மேற்கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இதில் மாவட்ட கழக பொருளாளர் விஜயன், பகுதி செயலாளர்கள் சின்னதுரை, நாராயணமூர்த்தி, தங்க முத்து, வல்லரசுதுரை, ராஜா முகமது, மாவட்ட நிர்வாகிகள் சின்னதுரை, செல்வம், சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 80 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சீருடைகள், 209 பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
    • 1,410 பயனாளிகளுக்கு ரூ.450 கோடிக்கான கடன் உதவி வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 101-வது நிறுவன தின விழா தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது. முன்னாள் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கே.வி. ராமமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    நிறுவன தின விழாவில் ஒரு பகுதியாக வங்கி பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை நடத்திய வங்கியின் நிறுவனர்களுக்கு தூத்துக்குடியில் உள்ள தலைமை அலுவலகத்தில் மரியாதை செலுத்தப் பட்டது.

    வங்கியின் 'மேன்ட் இ-லாபி'-யை வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியு மான எஸ்.கிருஷ்ணன், செயின்ட் மேரிஸ் கல்லூரி பேராசிரியர் ஷிபானா முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 80 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சீருடைகள், பல்வேறு இடங்களில் கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு 209 பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது. ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து தூத்துக்குடி யில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.

    முகாமை நிர்வாக இயக்குனர் எஸ்.கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பொது மேலாளர் (கடன் பிரிவு) நாராயணன் வரவேற்றார். இதில் மருத்துவ கல்லூரி டீன் சிவகுமார், தொழில திபர்கள் தங்கவேல் நாடார், டேவிட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கடனாளிகளுக்கு கடன் தொகைக்கான கடிதங்களை வழங்கினர்.

    வங்கியின் கடன் பிரிவு துணை பொது மேலாளர் விஜயன் நன்றி கூறினார். இந்த கடன் வழங்கும் முகாம் வங்கியின் 12 மண்டலங் களிலும் நடைபெற்றது. இதில் மொத்தமாக 1,410 பயனாளிகளுக்கு ரூ.450 கோடிக்கான கடன் உதவி வழங்கப்பட்டது.

    தொடர்ந்து மாலையில் 101-வது நிறுவன தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிறுவனர்களின் குடும்ப உறுப்பினர்கள், வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியால் கவுரவிக்கப்பட்டனர்.

    பொது மேலாளர் (இயக்கம் மற்றும் சேவைகள் பிரிவு)சூரியராஜ் வரவேற்றார். அப்போது வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்த வங்கியின் முன்னாள் இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கே.வி. ராமமூர்த்தியை வரவேற்று கவுரவித்தார். தொடர்ந்து இருவரும் சிறப்புரை ஆற்றினர்.

    முன்னாள் இயக்குனர் சி.எஸ்.ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். பின்னர் வங்கியின் கால் சென்டரை சிறப்பு விருந் தினர் கே.வி.ராமமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    நிறுவன தின விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    முடிவில் கடன் மீட்பு துறை பொது மேலாளர் இன்பமணி நன்றி கூறினார்.

    • பசுவந்தனை போலீசார் ராஜீவ் நகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • 3 பேரையும் போலீசார் கைது செய்து, 36 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்

    புதியம்புத்தூர்:

    பசுவந்தனை இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் பசுவந்தனை -கோவில்பட்டி ரோட்டில் ராஜீவ் நகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது29), மேல முடிமன் வடக்கு தெருவை சேர்ந்த லட்சுமண பெருமாள் (42), துரைசாமி புரம் தெற்கு தெருவை சேர்ந்த அழகுராஜ் (35) ஆகியோர் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகை யிலையை கடத்திச் சென்றது தெரியவந்தது.

    இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.13,200 மதிப்புள்ள 36 கிலோ புகையிலை பொருட்களையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

    • தூத்துக்குடி மாநகர் முழுவதும் அமைச்சர், மேயர், அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
    • மழைநீர் தேங்காதவாறு பாதுகாக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மழையின் காரணமாக மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் பல்வேறு கட்ட முன்னெச் சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு பாதிப்பை போல் இந்த ஆண்டு மழைகாலங்களில் அது போன்ற நிலை வரக்கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி மாநகராட்சி பகுதி முழுவதும் புதிய கால்வாய் சாலை வசதி என கட்டமைப்பு பணிகளை விரைவாக செய்துகொடுக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை மாநகர் முழுவதும் அதிகாரிகள் உள்பட அமைச்சர், மேயர் கண்காணித்து வருகின்றனர்.

    50-வது வார்டு என்.ஜி.ஓ. காலனி கிழக்கு தாழ்வான பகுதிகளில் மழைநீர் கடந்த காலங்களில் தேங்கியதையடுத்து இந்த ஆண்டு அது போல் நடைபெறாமல் பாதுகாத்து கொள்ளும் வகையில் 50-வது வார்டு கவுன்சிலர் சரவணக்குமாரிடம் பகுதி சபா கூட்டத்தின் போது பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனையடுத்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதியில் சாலையை உயர்த்துவது, மணல் சரல் போன்றவற்றை நிரப்பி மழைநீர் தேங்காதவாறு பாதுகாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    ஆய்வின் போது மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் சரவணக்குமார், வட்டப்பிரதிநிதிகள் வேல்மணி, ராஜேந்திரன், செல்வம், ராஜேஷ், சங்கரநாராயணன், பகுதி சபா உறுப்பினர் சிவசங்கர், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • கொலை வழக்கில் சுடலை என்ற சுடலை மகாலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார்.
    • 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    சாத்தான்குளம் பள்ளங்கிணறு பகுதியைச் சேர்ந்த ரேவந்த்குமார் (வயது27) என்பவர் கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த சுடலை என்ற சுடலை மகாலிங்கம் (28) என்பவர் கைது செய்யப்பட்டார்.

    தாளமுத்துநகர் பூபாண்டியபுரம் பகுதியை சேர்ந்த அழகுமுத்து, முருகன் மற்றும் தூத்துக்குடி சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த சாலையப்பன் (38) என்பவர் கைது செய்யப்பட்டார்.

    தாளமுத்துநகர் மெயின்ரோடு பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் ராதாபுரம் பகுதியை சேர்ந்த செல்வமுருகன் என்ற செல்வம் (34) என்பவர் கைது செய்யப்பட்டார்.

    இதைத்தொடர்ந்த இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன், நாரைக்கிணறு இன்ஸ்பெக்டர் தர்மர் ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தனர்.

    அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு எஸ்.பி. பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 38 பேர் உட்பட 233 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • நேற்று 5 -வது நாள் திருவிழாவை முன்னிட்டு இரட்டை திருப்பதி கோவிலில் கருடசேவை நடந்தது.
    • மாலையில் உற்சவர்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதி தலங்களில் 4-வது தலமான தொலைவில்லிமங்கலத்தின் உள்ள இரட்டை திருப்பதி கோவிலில் பிரமோற்சவ திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 5 -வது நாள் திருவிழாவை முன்னிட்டு கருடசேவை நடந்தது. காலை 8 மணிக்கு விஸ்வரூபம். யாகசாலை ஹோமம் முடிந்து 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், நாலாயிர திவ்ய பிரபந்தம் கூறப்பட்டு தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு உற்சவர் செந்தாமரைக் கண்ணன். உற்சவர் தேவர் பிரான் ஆகியோர் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    தொடர்ந்து 16-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதற்கான அலங்காரம் ஏற்பாடுகள் அர்ச்சகர்கள் சுந்தர ராஜன், ரகு செய்திருந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ராமானுஜ சுவாமிகள், நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், ஆய்வாளர் லோகநாயகி, ஸ்தலத்தார்கள் ஸ்ரீதர், சந்தானம், வாசு, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி. உபயதார் திருமலை, சீனிவாச சேவைகள் அறக்கட்டளை முதுநிலை செயல் அலுவலர் கசங்காத்த பெருமாள், கள இயக்குனர் விஜயகுமார், பொறியாளர் சுப்பிரமணியம் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.
    • மாணவர்களுக்கு இடையே விளம்பரம் மற்றும் பத்திரிகை தயாரிக்கும் போட்டிகள் நடந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. முள்ளக்காடு சாண்டி தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எனது வாக்கு எனது உரிமை,ஒரு வாக்கின் பலம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு இடையே விளம்பரம் மற்றும் பத்திரிகை தயாரிக்கும் போட்டி நடைபெற்றது.

    கல்லூரியின் நிர்வாக குழு தலைவர்கள் ஸ்டீபன்,வினோத் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கல்லூரியின் நிர்வாக அதிகாரி வீரராஜன், கல்லூரி முதல்வர் ஜோஸ் சஜிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரியின் விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • நட்டாத்தி பட்டாண்டி விளையில் செபத்தையாபுரம் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழப்புணர்வு முகாம் நடந்தது.
    • முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி ஊசி போடப்பட்டது.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி பட்டாண்டி விளையில் செபத்தையாபுரம் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழப்புணர்வு முகாம் நடந்தது.இதில் தோல் கழலை நோய் விழிப்புணர்வு முகாமிற்கு நட்டாத்தி பஞ்சாயத்து தலைவர் சுதாகலா தலைமை தாங்கினார்.நட்டாத்தி ஊராட்சி செயலர் முத்து‌ராஜ் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குனர் ஜோசப்ராஜ், கால்நடை உதவி மருத்துவர் வேல்மாணிக்க வள்ளி, கால்நடை ஆய்வாளர்கள் சாந்தி சுப்பிரமணியன், கால்நடை பராமரிப்பு உதவி ஆய்வாளர்கள் கோமதி லெட் சுமி, பேச்சியம்மை, டி.வி.எஸ். தொண்டு நிறுவனத்தில் இருந்து செல்வி, வார்டு உறுப்பினர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கால்நடை சுகாதாரம் மற்றும் பராமரிப்பு பற்றி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி ஊசி போடப்பட்டு சத்துமாவுகள் மாத்திரைகள் வழங்கப்பட்டது. சிறந்த முறையில் கால்நடைகளை பராமரிப்பவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் நட்டாத்தி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கால்நடை வளர்க்கும் மக்கள் கால்நடையுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை செபத்தையாபுரம் கால்நடை மருத்துவமனை ஏற்பாடு செய்து இருந்தது.

    • பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் சண்முகையா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
    • மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ ஆலோசனை நடத்தினார்.

    ஓட்டப்பிடாரம்:

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த அனைத்துதுறை அதிகாரி களுடனான ஆலோசனை கூட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது. சண்முகையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

    டெங்கு, மலேரியா

    மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவாமல் பார்த்து கொள்ள வேண்டும். குளங்கள் உள்ளிட்ட இடங்களில் உடைப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி போதுமான உரங்களை வினியோகிக்கப்படுகிறதா? என வேளாண்மை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ ஆலோசனை நடத்தினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், தாசில்தார்கள் நிஷாந்தினி, செல்வகுமார், ராதாகிருஷ்ணன், யூனியன் ஆணையாளர் பாண்டியராஜன், யூனியன் கூடுதல் ஆணையாளர் வெங்கடாசலம், ஸ்ரீவைகுண்டம் யூனியன் ஆணையாளர் சுரேஷ், வேளாண்மை துறை உதவி இயக்குனர்கள் சிவகாமி, சந்திரகலா, தோட்டக்கலை அலுவலர்கள் ஆசிப், ஜெயந்தன், விஜய், மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் பிரேம், சித்தி விநாயகமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • காளிமுத்து பால்பாண்டி நகர் 4 -வது தெருவில் தனது மொபட்டை நிறுத்தி விட்டு சாலை ஓரம் அமர்ந்திருந்தார்.
    • மொபட்டை கார்த்திக் என்பவர் திருடிச்சென்றது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    புதியம்புத்தூர் புதுச்சேரி காலனி தெருவை சேர்ந்தவர் காளிமுத்து ( வயது 62). விவசாயி. இவர் தூத்துக்குடி பால்பாண்டி நகர் 4 -வது தெருவில் தனது மொபட்டை நிறுத்தி விட்டு சாலை ஓரம் அமர்ந்திருந்தார். பின்னர் பார்த்தபோது மொபட்டை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மொபட்டை தூத்துக்குடி ராஜகோபால் நகர் 4 -வது தெருவை சேர்ந்த கார்த்திக் (27) என்பவர் திருடிச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • பவுர்ணமியை முன்னிட்டு சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் அபிஷேகம் நடைபெற்றது.
    • பிரத்தியங்கிராதேவி, காலபைரவருக்கு யாகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர் நகர் சித்தர் பீடத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது.

    இந்த ஆலயத்தில் ஜப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு குருமகாலிங்கேஸ்வரரான சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து குருமகாலிங்கேஸ்வரர் அன்னாபிஷேகத்துடன் பழங்களால் கூடிய சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அன்னாபிஷேக வழிபாடுகள் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.

    தொடர்ந்து, பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கவேண்டியும், உலக மக்கள் யாவரும் நோய் தாக்கம் எதுவுமின்றி நலமுடன் மனநிம்மதியுடன் வாழ்ந்திடவும், பக்தர்கள் வாழ்வில் செல்வங்கள் பெருகிடவும் வேண்டி ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவருக்கு யாகம் மற்றும் மஞ்சள், சந்தனம், இளநீர், பால் உள்ளிட்ட 16வகையான அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். அன்னாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

    அன்னாபிஷேக வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில், சித்தர் பீடத்தினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    ×