search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமமுக"

    • தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 700 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் திருச்சி தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் சூடு பிடித்துள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாஜக மாநில தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை உட்பட 700 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அண்ணாமலை நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது இரவு 10 மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை, அமமுக வேட்பாளர் செந்தில் நாதன், அமமுக அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் உட்பட 700 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் திருச்சி தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து 2-வது கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
    • 3-ந்தேதி மதுரை, திருச்சி தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    சென்னை:

    அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து 2-வது கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். 1-ந்தேதி தூத்துக்குடி, நெல்லை தொகுதிகளிலும், 2-ந்தேதி தென்காசி, விருதுநகர் தொகுதிகளிலும், 3-ந்தேதி மதுரை, திருச்சி தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    4-ந்தேதி மயிலாடுதுறை, தஞ்சாவூர் தொகுதிகளிலும், 6-ந்தேதி கோயம்புத்தூர் தொகுதியிலும், 7-ந்தேதி வேலூர் தொகுதியிலும், 8-ந்தேதி திருச்சி தொகுதியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேட்பு மனு தாக்கலின் போது 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று போலீசார் அறிவுறுத்தியதால் மற்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
    • போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேர்தல் பணியில் ஈடுபட்ட புதிய கண்காணிப்பு அலுவலர் நீதிநாதன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. சார்பில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். இவர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் திரண்டு உள்ளே செல்ல முயன்றனர்.

    போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திய போது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத்தனர். அன்னஞ்சி விலக்கில் இருந்து 70 கார்கள், 3 ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களில் கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    வேட்பு மனு தாக்கலின் போது 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று போலீசார் அறிவுறுத்தியதால் மற்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேர்தல் பணியில் ஈடுபட்ட புதிய கண்காணிப்பு அலுவலர் நீதிநாதன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் டி.டி.வி. தினகரன் மற்றும் அக்கட்சி நிர்வாகி ராம்பிரசாத் உள்பட பலர் மீது 5 பிரிவுகளின் கீழ் தேனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தேனியில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகப்படும்படியான வெளியூர் நபர்கள் தங்கி இருந்து தேர்தல் பணியில் ஈடுபடுவதாக மாவட்ட கலெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விடுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தங்கி இருந்தார். அ.ம.மு.க. நிர்வாகியான அவர் தேர்தல் செலவுக்காக ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்து 500 பணத்தை வைத்திருந்தது தெரியவரவே அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தை பெரியகுளம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    • பாஜக கூட்டணியில் அமமுக தேனி மற்றும் திருச்சி தொகுதிகளில் போட்டியிடுகிறது.
    • தேனி, திருச்சி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அறிவித்தார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் அ.ம.மு.க., த.மா.கா., இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதிக்கட்சி, அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆகியவை அங்கம் வகித்துள்ளன.

    பாஜக கூட்டணியில் அமமுக தேனி மற்றும் திருச்சி தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    இந்நிலையில் தேனி, திருச்சி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அறிவித்தார்.

    தேனி தொகுதியில் டிடிவி தினகரன், திருச்சி தொகுதியில் செந்தில்நாதன் போட்டியிடுகின்றனர்.

    அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:

    3-வது முறையாக மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பார். தமிழகத்திற்கு தேவையான அனைத்து வளர்ச்சிகளையும் திட்டங்களையும் பெற்றுத்தருவேன் என்று கூறினார்.

    • பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
    • அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, தமிழக மக்கள் முன்னேற்றம் கழகம், புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தரப்பில் 3-ல் இருந்து 4 தொகுதிகள் கேட்ட நிலையில் இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என பாஜக தெரிவித்ததால் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என தகவல் வெளியானது.

    இந்நிலையில், பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேறக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ஜான் பாண்டியனும் அண்ணாமலையும் கையெழுத்திட்டனர்.

    ஆனால் எந்த தொகுதியில் தமிழக மக்கள் முன்னேறக் கழகம் போட்டியிடும் என அறிவிக்கப்படவில்லை. ஆனால் தென்காசி தொகுதியில் அக்கட்சி போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. 

    • எண்ணிக்கை முக்கியமல்ல, கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம் என்றார்.
    • பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 24-ந்தேதி முதல் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்ய உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தரப்பில் 3-ல் இருந்து 4 தொகுதிகள் கேட்ட நிலையில் இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என பாஜக தெரிவித்ததால் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என தகவல் வெளியானது.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.


    தி.நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன் கூறியதாவது:-

    * நாங்கள் கேட்ட 2 தொகுதிகளை பா.ஜ.க. வழங்கியுள்ளது.

    * எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை பாஜக தலைமை அறிவிக்கும்.

    * எண்ணிக்கை முக்கியமல்ல, கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம் என்றார்.

    இதனிடையே, 2 தொகுதிகளில் ஒன்றில் போட்டியா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நான் தேனியில் போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என சூசகமாக பதில் அளித்தார்.

    முன்னதாக, பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 24-ந்தேதி முதல் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்ய உள்ளார். வருகிற 24-ந்தேதி அன்று தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

    • முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதாலும் அ.ம.மு.க.வுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும் என்று கட்சி தலைமை கணக்கு போட்டுள்ளது.
    • அ.ம.மு.க. இந்த தொகுதியில் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது அரசியல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சி கள் கூட்டணிகளை உறுதிப் படுத்துவதிலும் தொகுதி பங்கீட்டிலும் அதிக தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்க தமிழக அரசியல் கட்சிகள் அதிக அக்கறை காட்டி வருகிறது.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பா.ஜனதா கூட்டணியில் இந்த தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி பா.ஜனதா கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளரை நிறுத்தும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தினகரனே போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பும் மேலோங்கி உள்ளது.

    சிவகங்கை தொகுதியை பொருத்தவரை முக்குலத்தோர் அதிகம் உள்ள தொகுதியாகும். இந்த தொகுதியில் கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. தனித்து போட்டியிட்டு ஒரு லட்சத்து 22 ஆயிரம் வாக்குகள் பெற்றது. தற்போது பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதாலும், முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதாலும் அ.ம.மு.க.வுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும் என்று கட்சி தலைமை கணக்கு போட்டுள்ளது.

    அதன் காரணமாக இப் போதிலிருந்தே தொகுதி முழுவதும் அ.ம.மு.க.வினர் குக்கர் சின்னத்தை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் அனைத்து பகுதிகளிலும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். சிவகங்கை தொகுதியை பொருத்தவரை தி.மு.க-காங்கிரஸ் கூட்ட ணியில் கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? அதுபோல பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீண்டும் பா.ஜனதா சார்பில் களம் இறக்கப்படுவாரா என்ற பரபரப்பு ஏற்பட் டுள்ள நிலையில் அ.ம.மு.க. இந்த தொகுதியில் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது அரசியல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பா.ஜனதா கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளின் தலைவர்களையும் இந்த மேடையில் அமர வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
    • பா.ஜனதா டெல்லி தலைவர்கள் இன்னும் அ.தி.மு.க. உறவுக்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். பல்லடத்தில் நடைபெறும் "என் மண் என் மக்கள்" யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.

    பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தை பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமாகவே நடத்துகின்றனர். இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை திரட்டுகிறார்கள்.

    இதற்கிடையில் பா. ஜனதா கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளின் தலைவர்களையும் இந்த மேடையில் அமர வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    பா.ஜனதாவுடன் கூட்டணி பேசி வரும் ஓ.பன்னீர்செல்வம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அதே போல் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் பங்கேற்கவில்லை.

    இதுபற்றி கட்சி வட்டாரத்தில் இரு விதமான தகவல்கள் பரவி வருகிறது. அதாவது பா.ஜனதா டெல்லி தலைவர்கள் இன்னும் அ.தி.மு.க. உறவுக்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு நாம் கூட்டணியை உறுதிப்படுத்தலாம் என்று இருவரும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இன்னொரு தகவல், சிங்கிள் தொகுதி போதாது. குறைந்தபட்சம் இரண்டு தொகுதி வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும் 'சீட்' உறுதியான பிறகு செல்லலாம் என்றும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆனால் மோடியை வரவேற்க விமான நிலையத்துக்கு செல்லலாம் என்று கூறப்படுகிறது.

    பா.ஜனதா-த.மா.கா. கூட்டணி உறுதியாகி இருப்பதால் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார். அதே போல் ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், தேவநாதன், தமிழருவி மணியன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    • எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும்.
    • வாக்காளர்களை வாக்குறுதிகளால் ஏமாற்றும் இயக்கம் தி.மு.க. என்பதை நிரூபித்துவிட்டது.

    நெல்லை:

    நெல்லையில் நடந்த அ.ம.மு.க. பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

    தமிழகத்தில் இளைஞர் படை அதிகம் உள்ள கட்சி அ.ம.மு.க. ஜெயலலிதாவின் கொள்கைகளை நூற்றாண்டுகளுக்கு எடுத்துரைப்பதே எங்களின் லட்சியம். தேர்தல் வெற்றி, தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் கொள்கையை தாங்கி பிடிப்போம். நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் அதற்கான பலனை அனுபவித்தே தீருவார்கள்.

    எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும். கவர்னரின் தயவினால் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தப்பித்து வருகின்றனர். அவர்களை பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தண்டிப்பார்கள்.

    எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக சீர்கேட்டினாலும், தி.மு.க. திருந்தியிருக்கும் என்றும் நினைத்து கடந்த சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் தி.மு.க.விற்கு வெற்றிக்கனியை தந்தனர். வாக்காளர்களை வாக்குறுதிகளால் ஏமாற்றும் இயக்கம் தி.மு.க. என்பதை நிரூபித்துவிட்டது. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தற்போதைய நிதிநிலை அறிக்கையில் பல்வேறு ஏமாற்று திட்டங்களை தி.மு.க. அறிவித்துள்ளது.

    மகளிர் உரிமை திட்டம் தகுதியான பலருக்கும் கிடைக்கவில்லை. சிறு-குறு தொழில் முனைவோர் கடுமையான மின்கட்டண உயர்வால் திணறி வருகின்றனர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம் ரத்தாகி உள்ளது. அரசின் கடன் சுமையை குறைப்போம் என்ற தி.மு.க.வின் வாக்குறுதி மறக்கப்பட்டு கடன் சுமை அதிகரித்துள்ளது.

    கூட்டணி பலத்தால் வெற்றியாளர்களை போல் காட்டி வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் தி.மு.க. உள்ளது. அதற்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வின் வெற்றி கணக்கை தொடங்க வேண்டும். வருகிற தேர்தலில் தி.மு.க. மற்றும் எடப்பாடி பழனிசாமியை தோற்கடிப்பதே அ.ம.மு.க. வின் இலக்கு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, பொருளாதாரத் துறையில் சமதர்மம் என்பதை குறிக்கோளாய் கொண்டு இயங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுதினம் இன்று.
    • எதிரிகள் தாக்கித் தாக்கி தங்களின் வலுவை இழக்கட்டும்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று முக்கிய கொள்கைகளை முன்னிறுத்தி முழங்கியதோடு, ஆதிக்கமற்ற சமுதாயம், ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, பொருளாதாரத் துறையில் சமதர்மம் என்பதை குறிக்கோளாய் கொண்டு இயங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுதினம் இன்று.

    "எதிரிகள் தாக்கித் தாக்கி தங்களின் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கி தாங்கி வலுவைப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்ற பேரறிஞர் அண்ணாவின் வரிகளுக்கேற்ப நம்முடைய எதிரிகளும் துரோகிகளும் நம்மை எவ்வளவு பலவீனமாக்க முயற்சி செய்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்கொண்டு அண்ணாவின் கனவுகளை, லட்சியங்களை நிறைவேற்ற உறுதியேற்போம் என கூறியுள்ளார்.

    • இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும். இல்லாத பட்சத்தில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடும்.
    • தமிழகத்தில் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி குறித்து பா.ஜ.க.வினரிடம் தான் கேட்க வேண்டும். அ.ம.மு.க. கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அ.ம.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற வதந்திகளுக்கெல்லாம் நான் பதில் கூறமுடியாது. இந்தத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக சில கட்சிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். உறுதியான பின்பு சொல்வது தான் நாகரிகம், அதன் பின் சொல்கிறேன்.

    கூட்டணியிலோ அல்லது தனித்தோ போட்டியிடுவோம். உறுதியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இந்த தேர்தலில் வெற்றி முத்திரை பதிக்கும். ஓ.பி.எஸ்.சுடன் தேர்தல் வெற்றி தோல்வி எல்லாம் தாண்டி அரசியல் ரீதியாக நாங்கள் இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்து பயணிக்கிறோம். அது வருங்காலத்தில் எந்த அளவு பலன் தரும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

    அ.தி.மு.க. இந்த தேர்தலில் பெரிதாக சாதித்து விட முடியாது என்பது தான் என்னுடைய கருத்து. கவர்னரின் செயல்பாடு என்பது அந்த பதவியின் மாண்புக்கு இழுக்கு வராமல் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த பதவிக்கு நல்லது, அவர் அதனை பின்பற்றுவார் என்று நம்புகிறோம்.


    அ.தி.மு.க. ஒன்றிணையும் என்று சசிகலா தொடர்ந்து கூறி வருகிறார். பழனிசாமியோடு சேர்ந்து பயணிப்பது என்பது வாய்ப்பில்லை. அ.ம.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், எனக்கும் விருப்பம் இல்லை. அ.தி.மு.க. இணைப்பு குறித்து அவர் எதன் அடிப்படையில் சொல்கிறார் என தெரியவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி முடிவெடுக்கவில்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. எங்கள் நிர்வாகிகளும், எனது நண்பர்களும், தொண்டர்களும் நான் போட்டியிட வேண்டும் சொல்கிறார்கள். அதனை நான் பரிசீலிப்பேன் என்று சொல்லி இருக்கிறேன்.

    கூட்டணி என்பது உறுதியான பிறகு தான் நாங்கள் சொல்ல முடியும். இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும். இல்லாத பட்சத்தில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடும்

    தமிழகத்தில் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எதிரான மனநிலை மக்களுக்கு உள்ளது. அதனை அறுவடை செய்யும் பணியை நாங்கள் மேற்கொள்வோம்.


    ராமர் கோவில் என்பது அத்வானி காலத்தில் இருந்து யாத்திரை நடத்தி அரசியல் நோக்கமாக இருந்தாலும் ஆன்மிக விஷயம். இந்தியாவில் உள்ள அனைவரும் மதங்களை தாண்டி ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதில் விருப்பமாக இருந்தனர், கட்டப்பட்டதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் தான் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ராமர் கோவில் விவகாரம் எப்படி இருக்க வேண்டும் என்பது தேர்தலுக்குப் பின்பு தான் தெரியவரும்.

    எந்த கட்சியும் தாங்கள் வளர வேண்டும் என்பதற்காகத்தான் தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். இந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. உள்பட அனைத்து கட்சிகளின் பலம் தெரிந்து விடும். பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ச்சி அடைந்திருக்கிறதா, இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கும் தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும்.
    • திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பே புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளை காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தும் என்ற கர்நாடக மாநில கவர்னரின் குடியரசு தின உரை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கும் தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும்.

    காவிரியின் குறுக்கே கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருந்தாலும், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பே புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    போதிய நீர் இருப்பு இருந்தும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசினாலும், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் உரிய நீரை பெற்றுத்தர முடியாத திமுக அரசினாலும் டெல்டா பகுதி விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

    எனவே, தமிழகத்தை பாலைவனமாக்கும் நோக்கில் கட்டப்படும் மேகதாது அணைக்கான பூர்வாங்கப் பணிகளை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்தி, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

    ×