search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி"

    • அய்யாக்கண்ணு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்.
    • போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    திருச்சி:

    விவசாயிகளின் விளை பொருள்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    விவசாயிகளின் வேளாண் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்.

    அந்த வகையில் தியானம் இருக்கும் நரேந்திர மோடியை கண்டித்து கன்னியாகுமரியில் போராட்டம் நடத்த புறப்பட்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து உதவி போலீஸ் கமிஷனர் தலைமையிலான போலீசார் இன்று காலை திருச்சி மலர் சாலை அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டுக்கு சென்றனர்.

    பின்னர் அவரை அங்கிருந்து வெளியில் செல்ல விடாமல் வீட்டு காவலில் சிறை வைத்தனர். இதில் மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் உள்ளிட்ட சில விவசாயிகள் சிக்கியுள்ளனர்.

    மேலும் அந்த பகுதியில் 20-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • முன்பதிவு இல்லாத பெட்டிகளில் உட்கார கூட பலருக்கு இடம் கிடைக்காத சூழல் உள்ளது.
    • திருச்சியில் இருந்து இரவு முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு ரெயில் புறப்படுகிறது.


    கோடை விடுமுறை என்பதால் பஸ், ரெயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் புக் செய்பவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் உட்கார கூட பலருக்கு இடம் கிடைக்காத சூழல் உள்ளது.

    இந்த நிலையில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு முற்றிலும் முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு ரெயிலை இயக்க திருச்சி ரெயில்வே கோட்டம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி திருச்சியில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு ரெயில் புறப்படுகிறது.

    இந்த ரெயில் திருவரும்பூர் (இரவு 11.20 மணி), பூதலூர் (11.36), தஞ்சை (11.57), பாபநாசம் (நள்ளிரவு 12.21), கும்பகோணம் ( 12.34), மயிலாடுதுறை (12.54), வைத்தீஸ்வரன்கோயில் (1.13), சீர்காழி (1.20), சிதம்பரம் (1.33), கடலூர் துறைமுகம் (2.06), திருப்பாதிரிபுலியூர் (2.13), பண்ருட்டி (2.42), விழுப்புரம் (அதிகாலை 3.40), திண்டிவனம் (4.13), செங்கல்பட்டு (5.18) வழியாக நாளை காலை (திங்கள்கிழமை) 6.05 மணிக்கு தாம்பரம் சென்று அடையும்.

    இந்த சிறப்பு ரெயில் இன்று ஒரு நாள் மட்டும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    எனவே இந்த சிறப்பு முன்பதிவு இல்லாத ரெயிலை பயணிகள் பயன்படுத்தி கொள்ள கேட்டுகொள்ளப்படுகிறது.

    • காணொளிகளை ரிலீஸ் செய்வது இன்று பேஷனாகிவிட்டது.
    • லைக்ஸ் வாங்குவதற்காக எல்லை மீறும் ஒழுங்கீனங்களும் வெளியாகி வருகின்றன.

    திருச்சி:

    சமூக வலை தளங்களில் 'ரீல்ஸ்' மூலம் காணொளி களை ரிலீஸ் செய்வது இன்று பேஷனாகிவிட்டது. இன்ஸ்டாகிராமைத் தொடர்ந்து பேஸ்புக்கிலும் ரீல்சுக்கான பார்வைகளும் பதிவிடும் காணொளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

    இந்தச் சூழலில் ரீல்சுக்காகவும் லைக்ஸ் வாங்குவதற்காகவும் எல்லை மீறும் ஒழுங்கீனங்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

    திருச்சியில் 3 இளம் பெண்கள் கவர்ச்சி ஆடையில் நடமாடி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். சிக்கென ஜீன்ஸ், கவர்ச்சி பொங்கும் கருப்பு பனியன் அணிந்து அவர்கள் நடனம் ஆடும் ரீல்ஸ் வீடியோ பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

    மே மாதம் 98-ல் மேஜர் ஆனேனே என்ற பாடல் பின்னணியில் இளம்பெண்களின் அமர்க்களமான நடனம் தற்போது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

    தாளம் தப்பாமல் 3 இளம் பெண்கள் ஆடும் வீடியோவை இளைஞர்கள் ரசித்து வந்தாலும், இதனை கண்ட திருச்சி ரெயில்வே போலீசாருக்கு சுருக் என்றது. காரணம் அவர்கள் நடனமாடி வீடியோ எடுத்தது திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில்.

    மத்திய அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள், பொது இடங்களில் தனிப்பட்ட முறையில் புகைப்படம் வீடியோ எடுக்க வேண்டும் என்றால் அதற்குரிய முன் அனுமதி பெற்று, கட்டணம் செலுத்தி படம் பிடிக்க வேண்டும் என்பது விதிமுறை.

    குறிப்பாக பேருந்து, ரெயில் மற்றும் விமான நிலையம் போன்ற பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக நடனம் மற்றும் நாடகம் போன்றவை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை அனுமதி பெற்று நடத்தப்படுவது வழக்கம்.

    ஆனால் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள ரெயில் நிலையத்தில் யார் அனுமதி பெற்று 3 இளம் பெண்கள் கவர்ச்சி ஆடையில் நடனம் ஆடினார்கள்? என்பது பற்றி கேள்வி எழுந்துள்ளது.

    எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் நடனம் ஆடி ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர் இந்த இளம் பெண்கள் யார்? அனுமதி இன்றி வீடியோ எடுக்கும் வரை இதனை பார்த்த ரெயில்வே அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்பது குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிர்வாகம் சார்பில் தெற்கு கோபுர வாசலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பெருமாள் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

    திருச்சி:

    ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பெருமாள் புகைப்படம் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    ஜார்க்கண்ட் மாநில ஆளுநரும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி பொறுப்பு ஆளுனருமான சி.பி.ராதாகிருஷ்ணன் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இன்று காலை வந்தார்.

    அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தெற்கு கோபுர வாசலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் கோவிலில் இருக்கும் கருடாழ்வார், மூலவர், பெரிய பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார், இராமானுஜர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு நடந்தே சென்று தரிசனம் செய்தார்.

    கோவிலுக்கு வருகை தந்த ஆளுநருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் அர்ச்சகர்கள் மரியாதை செய்யப்பட்டு பெருமாள் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

    • விமானங்கள் வரைவில் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • ஜூலை மாதம் முதல் இந்த விமான இயக்கம் தொடங்கும் என கூறினார்.

    சேலம்:

    சேலம் விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத், கொச்சி, பெங்களூரு நகரங்களுக்கு அலையன்ஸ் ஏர், இண்டிகோ விமான சேவை தற்போது தினமும் நடைபெறுகிறது.

    இதில் உதான் அல்லாத திட்டத்தில் இண்டிகோ நிறுவனம், சென்னைக்கு விமானத்தை இயக்கி வருகிறது. இந்த நிலையில் ஏர்சபா விமான நிறுவனம் மதுரை, திருச்சி, திருப்பதி, மும்பை, சென்னை, புதுச்சேரி, பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவையை இயக்க விமான போக்குவரத்து ஆணையத்தில் அனுமதி பெற்றுள்ளது. இந்த விமானங்கள் வரைவில் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது குறித்து விமான நிலைய இயக்குனர் விஜய் உபாத்யாயா கூறுகையில், சேலத்தில் இருந்து ஏர்சபா நிறுவனம் பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை தொடங்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளன. ஜூலை மாதம் முதல் இந்த விமான இயக்கம் தொடங்கும் என கூறினார் .

    • ஏராளமானோர் விமான சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
    • விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது.

    கோடை விடுமுறையையொட்டி தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வுகளும் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதனையடுத்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கும், விடுமுறையை கழிக்க மலைப்பிரதேசங்களுக்கும் படையெடுத்து வருகின்றனர். வெயில் வாட்டி வதைப்பதால் ஏராளமானோர் விமான சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

    குளிர்சாதன வசதியுடன், குறைந்த மணி நேரத்தில் இடத்தை சென்றடைய ஏதுவாக விமான பயணத்தை மக்கள் தேர்வு செய்கின்றனர்.

    இதனால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது.

    சென்னை விமானநிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    ஐதராபாத், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சுமார் 40-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை அதிகரிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை-தூத்துக்குடி இடையே தினசரி 6 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 8 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை-கோவை இடையே தினமும் 12 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 16 விமானங்களும், சென்னை-மதுரை இடையே 10 விமானங்களுக்கு பதில் 14 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை-பெங்களூரு இடையே 16 விமானங்களுக்கு பதில் 22 விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை-ஐதராபாத் இடையே 20 விமானங்களுக்கு பதில் 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    • அரசு போக்குவரத்துக் கழகங்களில் 6 ஆண்டு கடந்த பேருந்துகளை மாற்றி புதியவற்றை வாங்க வேண்டும்
    • பழைய பேருந்துகளை பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும்

    திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துனர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "திருச்சியில் திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுனர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துனர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இவை தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

    புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளை பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • திருச்சி நகரப் பேருந்தில் இருக்கையுடன் நடத்துநர் வெளியே விழுந்தது அதிர்ச்சி அளிக்கிறது
    • அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்

    திருச்சி நகரப் பேருந்தில் இருக்கையுடன் நடத்துநர் வெளியே விழுந்தது அதிர்ச்சி அளிக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துனர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தியிருந்தேன்.

    ஆனால் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

    எனவே, இனியாவது இந்த விடியா திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • சொத்துக்குவிப்பு வழக்கில் திருச்சி முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமனின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • முன்னாள் சார் பதிவாளர் ஜானகிராமன் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு

    1989-1993 காலகட்டத்தில் துறையூர், உறையூர், முசிறி, அட்டுவம்பட்டடி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய முக்கிய இடங்களில் சார்பதிவாளராக ஜானகிராமன் என்பவர் பொறுப்பு வகித்துள்ளார்.

    மேற்கண்ட இடங்களில் இவர் பணிபுரிந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சட்டவிரோதமான வகையில் இவரது பெயரிலும், இவரது மனைவி வசந்தி பெயரிலும் அப்போதைய மதிப்பில் 32 லட்சத்திற்கும் அதிகமான சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக 2001 ஆம் ஆண்டு புகார் எழுந்தது.

    இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று முடிவுற்ற நிலையில், முதல் குற்றவாளி ஜானகிராமன் மற்றும் இரண்டாம் குற்றவாளியான வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.

    மேலும் குற்றவாளிகள் இருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், மேற்படி வருமானத்திற்கு அதிகமாக குற்றவாளிகளால் சேர்க்கப்பட்ட 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுக்கு ஒப்படைக்குமாறும் நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

    • கண்டக்டருக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது
    • சம்பவம் நடந்த இடத்தில் வளைவில் சாலையில் பள்ளம் உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கே.கே.நகருக்கு நேற்று முன்தினம் அரசு டவுன் பஸ் புறப்பட்டது. பஸ்ஸை பாஸ்கரன் ஓட்டிச் சென்றார். இதில் கண்டக்டராக எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் பணியில் இருந்தார்.

    இந்த பஸ் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கலையரங்கம் திருமண மண்டபம் வழியாகச் சென்று ஒரு திருப்பத்தில் சற்று வேகமாக திரும்பியபோது, கண்டக்டரின் இருக்கை கழன்று முன்பக்க படிக்கட்டு வழியாக இருக்கையுடன் சேர்ந்து கண்டக்டர் முருகேசனும் சாலையில் விழுந்தார்.

    இதில் அவருக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த பஸ்ஸில் வந்த பயணிகள் வேறொரு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இந்த பஸ்சினை பராமரிக்கும் போக்குவரத்துக் கழக தீரன் நகர் கிளை பணிமனை மேலாளர் ராஜசேகர், பொறியாளர் மற்றும் பராமரிப்பு பணியாளர் ஆகிய 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மேலும் இன்று போக்குவரத்து கழக பொது மேலாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சாலையை பார்வையிட்டனர்.

    பின்னர் அவர்கள் கூறும்போது, சம்பவம் நடந்த இடத்தில் வளைவில் சாலையில் பள்ளம் உள்ளது. இதில் பஸ்ஸில் சக்கரம் இறங்கும்போது பஸ் சரிகிறது. இந்த சாலையை சீர் செய்வது தொடர்பாக கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம் என்றனர்.

    • காயத்துடன் கிடந்த கண்டக்டரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • ஓடும் பஸ்சில் இருக்கை கழன்று கண்டக்டர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருச்சி:

    திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ், பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது.

    அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் கண்டக்டர் இருக்கை நெட்டு போல்டு கழன்று அதில் அமர்ந்திருந்த கண்டக்டர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட்டனர். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த கண்டக்டரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அந்த பஸ்ஸில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு டவுன் பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் டிரைவர் ரோட்டில் கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார்.

    அதிர்ஷ்டவசமாக கண்டக்டர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர்.

    ஓடும் பஸ்சில் இருக்கை கழன்று கண்டக்டர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.
    • கடந்த ஆண்டு டின் பீர் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

    திருச்சி:

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரிக்கிறது. பொதுவாக அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்தரி வெயில் காலமான மே மாதத்தில் தான் வெயிலின் உக்கிரம் இந்த அளவுக்கு இருக்கும். ஆனால் முன்பாகவே மேலும் தாக்கம் கடுமையாக உள்ளது.

    அதிலும் திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அதிகம் நாடி வருகின்றனர்.

    ஆனால் மது பிரியர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஜில் பீர் அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இதனால் டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் ஜில் பீர் விற்பனை 2 மடங்காக அதிகரித்து உள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஜில் பீருக்காக கூட்டம் அலை மோதுகிறது.

    இதுபற்றி திருச்சி மண்டல டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த 2 மாதங்களில், பீர் விற்பனை 8 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாயிலாடுதுறை, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 18 ஆயிரம் பீர் பெட்டிகள் விற்பனை ஆகியுள்ளது.

    வருகிற மே மாதத்தில் விற்பனை 18 முதல் 20 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கிறோம். மேலும், கடந்த ஆண்டு டின் பீர் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது 8 டிப்போக்களிலும் தேவைக்கு ஏற்ப பீர் பாட்டில்கள் வழங்கப்படுகின்றன.

    பாராளுமன்றத் தேர்தல் கட்டுப்பாடுகள் காரணமாக சில நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் விற்பனை மந்தமாக இருந்தது. தற்போது விற்பனை சூடு பிடித்துள்ளது என தெரிவித்தார்.

    திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மேற்பார்வையாளர் கூறும் போது, சமீபத்தில் சாதாரண பீர் பாட்டில்களின் விலை ரூ.170லிருந்து ரூ.230 ஆக உயர்ந்துள்ளது. விலை உயர்ந்தாலும் அது விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பகலில் பீர் விற்பனை அதிகமாக நடக்கிறது என்றார்.

    ×