search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 179048"

    • வன்முறைக்கும், படுகொலைகளுக்கும் பெயர் போன சீர்குலைவு சக்திகள் தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுக்கப் பார்க்கின்றன.
    • கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டை காவிமயமாக்கிப் பின்னோக்கி இழுத்துச் செல்ல முயல்கின்றன.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சங்க காலம் முதல் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' என்ற உலகளாவியப் பார்வையோடும், பரந்த மனப்பான்மையோடும் வாழ்ந்து செழித்த சமூகம் தமிழ்ச் சமூகமாகும். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு வானளாவிய கோபுரங்கள் கொண்ட திருக்கோவில்கள் நிறைந்த இந்த மண்ணில்தான் சமணமும், பவுத்தமும் நீண்ட நெடுங்காலம் வேரோடித் தழைத்திருந்தன. சமயக் காழ்ப்பு இல்லாமல் அனைவரும் சேர்ந்து வாழும் அமைதியான வாழ்க்கைக்குச் சான்றாக திகழும் நிலம் தமிழ் நிலம் ஆகும்.

    சமய சச்சரவுகளுக்கு இங்கே என்றும் இடம் இருந்ததில்லை. தமிழ்ச் சமூகத்தில் பின்பற்றப்பட்டு வரும் ஆன்மீகம் என்பது அனைத்து உயிர்களின்மீதும் அன்பு செலுத்துவது, உயர்வு தாழ்வு பார்க்காதது, தமர்-பிறர் எனப் பேதம் பாராட்டாதது. இப்படி அமைதியோடும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வரும் இந்த மண்ணில் அரசியல் உள்நோக்கத்தோடு சில பிரிவினைவாத சக்திகள் அண்மைக்காலமாக இந்தியாவின் வட மாநிலங்களில் இருப்பதைப் போல வன்முறையைத் தூண்டி, சாதி, மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் செய்ய முற்படுகின்றன.

    வன்முறைக்கும், படுகொலைகளுக்கும் பெயர் போன சீர்குலைவு சக்திகள் தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுக்கப் பார்க்கின்றன. கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டை காவிமயமாக்கிப் பின்னோக்கி இழுத்துச் செல்ல முயல்கின்றன.

    இது தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுப்பது மட்டுமின்றி வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்கான சதித்திட்டமாகும். இந்தப் பிளவுவாத சக்திகளைத் தடுத்து நிறுத்தித் தமிழ்நாட்டைக் காக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.

    இன்றைய புதுமை வாய்ந்த ஊடக தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டு பொய்களைப் பரப்புகிற இந்தப் பிரிவினைவாதிகள் தமிழ்நாட்டை வெறுப்பின் விளைநிலமாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். அவர்களது வெறுப்புப் பரப்புரைக்கு எதிராக அன்பை, அமைதியை, நல்லிணக்கத்தை முன்னெடுப்போம்.

    அண்ணல் காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2-ம் நாள், அன்பையும், அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தித் தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் விதமாகத் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சமூக நல்லிணக்கப் பேரணிகளை நடத்துவது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது. இந்தப் பேரணியில் கட்சி வேறுபாடு பார்க்காமல் சனநாயக சக்திகள் அனைவரும் பங்கேற்று தமிழ்ச் சமூகத்தின் தனித்துவத்தை உலகுக்கு எடுத்துக்காட்ட முன்வரும்படி அன்புடன் அழைக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காங்கிரஸ், தி.மு.க.வுக்கு நிகரான வாக்கு வங்கி இல்லாவிட்டாலும் அவர்களோடு சேர வேண்டும்.
    • தற்காலிக வெற்றிக்காக நிரந்தர தோல்வியை நான் எதிர்கொள்ள தயாரில்லை.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை பார்த்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்...

    எனக்கு தி.மு.க.வும் வேண்டாம்... அ.தி.மு.க.வும் வேண்டாம். காங்கிரசும் வேண்டாம். பி.ஜே.பி.யும் வேண்டாம். இப்படி எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு என்னத்தை சாதிக்க போகிறீர்கள்? இதைவிட முட்டாள்தனமான முடிவு வேறெதுவும் இருக்காது.

    எங்களுக்கும் எல்லா கட்சிகளோடும் முரண்பாடு இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் நாங்கள் ஏன் சேருகிறோம்? பகைவர் பலர் இருக்கலாம் அதில் முதலில் காலி செய்ய வேண்டியது யாரை என்பதை பார்க்க வேண்டும்.

    இப்போது சனாதன தர்மத்தை தலைதூக்கவிடக்கூடாது. 2024 தேர்தலில் பி.ஜே.பி.யை ஜெயிக்க விடக்கூடாது. அதற்காக பிடிக்காவிட்டாலும் நாமெல்லாம் ஒன்றுசேர வேண்டும். நமக்குள் இருக்கும் பகையை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

    காங்கிரஸ், தி.மு.க.வுக்கு நிகரான வாக்கு வங்கி இல்லாவிட்டாலும் அவர்களோடு சேர வேண்டும். ஒரு ஏழே முக்கால் கிராம் தங்கம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நாமும் கால் கிராம் சேர்ந்தால்தான் ஒரு சவரன் ஆக முடியும்.

    அண்ணன் சொல்றது சரிதான். அதை நான் ஏற்கவில்லை. ஆனால் அண்ணன் ஏற்கனவே சொன்னது மறந்துவிடவில்லை. 4 சீட்டுக்கு நடையாய் நடக்க வேண்டியுள்ளது. மண்டியிட வேண்டியுள்ளது, கெஞ்ச வேண்டியுள்ளது என்றீர்களே? அண்ணன் பட்ட அந்த அசிங்கத்தை நானும் படணுமா?

    அவரால் முடியாது என்றால் இருக்கட்டும். தம்பி நான் போராடி பார்க்கிறேன். கெஜ்ரிவால் பஞ்சாபிலும், டெல்லியிலும் போராடி வெற்றி பெறவில்லையா? வெற்றி பெற முடியாது என்று சொல்லக்கூடாது. தம்பியாலும் முடியும். தற்காலிக வெற்றிக்காக நிரந்தர தோல்வியை நான் எதிர்கொள்ள தயாரில்லை.

    நான் இப்பவே சொல்கிறேன். 2024 தேர்தலிலும் தனித்துதான் நிற்பேன். 2026 தேர்தலிலும் தனித்துதான் நிற்பேன்.

    • நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகள் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன.
    • தூத்துக்குடி படுகொலை என்பது நமது ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கிய ஒன்றாகும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தையொட்டி நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் கடந்த மே மாதம் 18ஆம் தேதி தனது அறிக்கையைத் தமிழக அரசிடம் அளித்தது.

    சுமார் 3000 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதை இன்னும் அரசு வெளியிடவில்லை. இந்நிலையில் ஃபிரண்ட்லைன் ஆங்கில இதழில் அதன் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    துப்பாக்கிச் சூடு தேவையில்லாமல் நடத்தப்பட்டது என்றும் கலைந்து ஓடிய மக்களைத் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்து இருக்கிறார்கள் என்றும், இதில் உயர் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக ஈடுபட்டு இருக்கிறார்கள் என்றும் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக ஃபிரண்ட்லைன் ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

    இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக இல்லாமல் இவ்வாறு அந்த ஆங்கில இதழ் இச்செய்தியை வெளியிட வாய்ப்பில்லை. அத்தகைய நம்பகத் தன்மைக்குரிய ஒரு ஏடு என்பதால், அச்செய்தியைப் புறம்தள்ள இயலவில்லை.

    எனவே, ஆணையத்தின் அறிக்கையில் கூறியுள்ளவாறு அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, காவல்துறை உயர் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்தவர் மீதும் உரிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன .

    தொலைதூரத்திலிருந்து குறிபார்த்து சுடும் துப்பாக்கிகளை கொண்டு சுட்டிருக்கிறார்கள் என்றும் கலைந்து ஓடியவர்கள் மீது பின்னால் இருந்து தலையில் சுட்டுப் படுகொலை செய்து இருக்கிறார்கள் என்றும் உடல் கூராய்வு அறிக்கையில் நிரூபிக்கப்பட்டிருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

    சுடலைக்கண்ணு என்ற போலீஸ் கான்ஸ்டபிள் தொலைதூரத்தில் இருந்து சுடும் எஸ். எல். ஆர் துப்பாக்கியைக் கொண்டு பல பேரை சுட்டுக் கொலை செய்திருப்பதை ஆணையம் தனது அறிக்கையில் உறுதிப்படுத்தி இருக்கிறது.

    அதுபோலவே மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த மகேந்திரன் தனது பாதுகாவலர் ஸ்டாலின் என்பவரின் கைத்துப்பாக்கியை எடுத்து 25 வயது இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்றிருப்பதையும் அறிக்கை சுட்டிக் காட்டி இருக்கிறது.

    அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு எந்த உருப்படியான முயற்சியையும் செய்யவில்லை என்பதையும் ஆணையம் சுட்டிக் காட்டி அவர்மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருக்கிறது.

    சிறப்பு நிர்வாக மாஜிஸ்ட்ரேட் அதிகாரம் கொண்ட சேகர், கண்ணன் மற்றும் சந்திரன் ஆகியோர் துப்பாக்கிச் சூடு நடத்த எளிதாக அனுமதி வழங்க வேண்டும் என்பதற்காகவே காவல்துறையினர் சொன்ன இடங்களுக்கெல்லாம் சென்றிருக்கிறார்கள் என்பதை சுட்டி காட்டியுள்ள ஆணையம் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

    அதிர்ச்சியளிக்கும் உண்மைகளையும், கடுமையான பரிந்துரைகளையும் கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை மீது தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குற்றம் சாட்டப் பட்டிருக்கும் காவல்துறை , வருவாய்த்துறை அதிகாரிகளை உடனடியாகப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கும் அப்போது ஆட்சியில் இருந்த  அதிமுக அமைச்சர்கள் சிலருக்கும் இருந்த நெருக்கமான உறவே இத்தகைய படுகொலை நடப்பதற்குத் தூண்டுகோலாக இருந்தது என ஊடகங்கள் அப்போது செய்தி வெளியிட்டன.

    அந்த அம்சம் குறித்து விசாரணை ஆணையம் ஏதும் தெரிவித்திருக்கிறதா என்பதைத் தமிழ்நாடு அரசு விளக்க வேண்டும். தூத்துக்குடி படுகொலை என்பது நமது ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கிய ஒன்றாகும்.

    அது தொடர்பான அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு அரசு தாமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இந்திய கம்யூனிஸ்டு கட்சி 25-வது மாநாடு நாளை நடக்கிறது.
    • ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    திருப்பூர்

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில 25-வது மாநாடு திருப்பூர் தாராபுரம் சாலை வித்யா கார்த்திக் திருமண மண்டப வளாகத்தில் நாளை நடக்கிறது.இதையொட்டி நாளை மாலை 4மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மற்றும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் தமிழ்வேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., நாளை மாலை 4மணிக்கு திருப்பூர் வருகிறார். அவருக்கு திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும் திருப்பூர் மாநகராட்சி அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    பின்னர் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் விடுதலைசிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.  

    • தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
    • நிஷாந்தி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம், வயலப்பாடி அருகே உள்ள கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி நிஷாந்தினி நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவலறிந்து மிகுந்த வேதனையும் துக்கமும் மேலிடுகிறது. அவரது குடும்பத்தை எண்ணி வெகுவாகத் துயரப்படுகிறேன்.

    மருத்துவம் படிப்பது தான் மானத்திற்குரியது என்று இந்த பெண் பிள்ளைக்கு யார்தான் கற்பித்தது? நீட் தேர்வில் தேர்ச்சியடையா விட்டாலும்; அல்லது தேர்ச்சிப் பெற்றாலும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கா விட்டால் அப்படி என்ன இழுக்கு ஏற்பட்டு விடும்?

    இத்தனை இளங்குருத்து கள் நீட் என்னும் கொடிய நஞ்சினால் அவிந்து போயுள்ள நிலையிலும் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களின் நெஞ்சில் ஒருதுளியும் ஈரமில்லை என்பது பேரதிர்ச்சியை அளிக்கிறது.

    அனிதா முதல் நிஷாந்தி வரை இதுவரையில் 17 பேரை தமிழ்நாடு நீட்டுக்குப் பறிகொடுத்துள்ளது. ஆனால், இந்திய ஆட்சியாளர்கள் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை.

    ஒருமுறைக்கு இருமுறை நீட் விலக்கு மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, தமிழ்நாடு அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தும் பா.ஜ.க. அரசு மெத்தனம் காட்டிவருகிறது. அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இன்னும் காலம் தாழ்த்தி வருவதன் விளைவாகவே அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள் பலியாக நேர்ந்துள்ளது.

    தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    நிஷாந்தி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அக்குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ. 1 கோடி வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • ஜனாதிபதி வேட்பாளரை ஏன் எதிர்க்கிறோம் என்று திருமாவளவன் பேசினார்.
    • கொள்கை அடிப்படையில்தான் யஷ்வந்த் சின்காவிற்கு ஆதரவு அளிக்கிறோம்.

    மதுரை

    மதுரை புதூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மேலவளவு போராளிகள் 25-ம் ஆண்டு நினைவு நாள் வீர வணக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    அலங்கை செல்வரசு வி.பி. இன்குலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ப.கதிரவன் வரவேற்று பேசினார்.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விடுதலை சிறுத்தைகள் மாறி இருக்கிறது. எங்களை புறம் தள்ளிவிட்டு, தமிழக அரசியல் இல்லை என்ற நிலை தற்போது உள்ளது. அம்பேத்கரை ஒழுங்காக படித்தவர்கள் யாரும் சாதியை பற்றி பேசமாட்டார்கள்.

    அவர்களுக்கு ஒரே எதிரி அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தான். ஜனாதிபதி பதவிக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்முவை எதிர்ப்பதற்கு காரணம், அவர் எந்த கட்சியின் பின்னணியில் இருக்கிறார் என்பதே.

    மக்களை ஏமாற்றுவதற்காக பா.ஜ.க., இஸ்லாமியர், தலித் பழங்குடியினருக்கு உயர்ந்த பதவிகளை அளித்து அவர்களையும் தங்கள் கைப்பாவையாக வைத்துக் கொள்கிறது. இதன் காரணமாகத்தான் அவரை எதிர்க்கிறோம். அவருடைய கொள்கை எங்களுக்கு எதிரானது. கொள்கை அடிப்படையில்தான் யஷ்வந்த் சின்காவிற்கு ஆதரவு அளிக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மதுரை கிழக்கு தொகுதி செலயாளர் கார்வண்ணன், வழக்கறிஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் மாதவன், இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் அரச.முத்து பாண்டியன், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் மணிகண்டன் மற்றும் மாவட்ட, பேரூர், வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மேலூர் அருகே மேலவளவில் கொலை செய்யப்பட்ட 7 பேர் நினைவிடத்தில் திருமாவளவன் மரியாதை செலுத்தினர்.
    • மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது மேலவளவு. இங்கு ஊராட்சி மன்ற தலைவராக இருந்த முருகேசன் உட்பட 7 பேர் கடந்த 1997ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் நாள் படுகொலை செய்யப்பட்டனர்.

    அதனை அடுத்து மேலவளவில் விடுதலை களம் அமைக்கப்பட்டு அங்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசனுக்கு சிலை மற்றும் அவருடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இன்று அவர்களுடைய 25-வது நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. நேரில் வந்து நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    இதில் மேலூர் தொகுதி செயலாளர் அய்யாவு, நிர்வாகி ஆற்றல் அரசு மதுரை கிழக்கு தொகுதி செயலாளர் கார்வண்ணன், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மாதவன், மாவட்ட அமைப்பாளர் இ.எ.பாசறை, அரச. முத்துப்பாண்டியன், கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் மணிகண்டன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க.வில் ஒற்றை, இரட்டை, கூட்டுத் தலைமை ஒருபுறம் இருந்தாலும், அதிமுகவுக்கு பாஜக தலைமை இருக்கக்கூடாது.
    • குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை பாஜக உடைத்து, எம்.எம்.எல்.க்களை குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்கி வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஆணழகன் சீனிவாசனின் தாயார் படத்திறப்பு மற்றும் குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.

    அப்போது, திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஆர்.கே. பேட்டை ராஜா நகரம் பகுதியில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், பட்டியலின மக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் வீடு கட்டி குடியேறுவதற்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். அ.தி.மு.க.வில் ஒற்றை, இரட்டை, கூட்டுத் தலைமை ஒருபுறம் இருந்தாலும், அதிமுகவுக்கு பாஜக தலைமை இருக்கக்கூடாது. அது அதிமுகவுக்கும், தமிழகத்துக்கும் நல்லதல்ல குடியரசுத்தலைவர் தேர்தல், அம்பேத்கருக்கும் சங்பரிவர் அமைப்பின் நிறுவனருக்கும் இடையிலான யுத்தம் என நினைக்கிறேன்.

    குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை பாஜக உடைத்து, எம்.எம்.எல்.க்களை குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்கி வருகிறது. அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பெரும்பான்மையான இந்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம், பா.ஜ.க. அரசு, இந்துகளுக்கு விரோதமான அரசு என்பதை அறிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகள் நீல வானத்து நிலவன், பாலசிங்கம், மாவட்ட செயலாளர் சித்தார்த்தன், தளபதிசுந்தர், அருண் கவுதம், செஞ்சிசெல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அக்னிபாத் திட்டத்தை ஒத்திவைத்து விட்டு, பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற முப்படை அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும்.
    • தரம், செயல் திறன் மற்றும் பொருளாதாரம் ஆகிய 3 விஷயங்களில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் புதிய திட்டத்தை வகுக்க வேண்டும்.

    சென்னை:

    மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அக்னிபாத் திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் ஆபத்தானது என்று இளைஞர்கள் அஞ்சுவதால் தான் தன்னெழுச்சியோடு இன்றைக்குத் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    எனவே, அக்னிபாத் திட்டத்தை ஒத்திவைத்து விட்டு, பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற முப்படை அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும். தரம், செயல் திறன் மற்றும் பொருளாதாரம் ஆகிய 3 விஷயங்களில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் புதிய திட்டத்தை வகுக்க வேண்டும்.

    இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி அவர்களது எதிர்காலத்தை உறுதி செய்யாமல், தொடர்ந்து அவர்களுக்கு எதிரான தாக்குதலில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதையே அக்னிபாத் திட்டம் வெளிப்படுத்துகிறது.

    இளைஞர்கள் தேன்கூடு போன்றவர்கள். அவர்கள் எதிர்காலம் மீது நீங்கள் தொடர்ந்து கல் எறிந்தால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலை வாய்ப்பின்றி அல்லாடும் கோடிக்கணக்கான இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கி அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் 'அக்னிபாத்' என்னும் திட்டத்தை மோடி அரசு அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    'அக்னிபாத்' என்ற மோசடி திட்டத்தை உடனடியாக மோடி அரசு திரும்பப் பெற வேண்டும். காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்தலில் வாக்குறுதி அளித்தது போல எஞ்சியுள்ள இந்த இரண்டு ஆண்டுகளிலாவது ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வர வேண்டும்.

    அக்னிபாத் என்னும் இந்து விரோத-வெகுமக்கள் விரோத ஆளெடுப்புத் திட்டத்தை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், பிற மாநிலங்களிலும் இந்தக் கிளர்ச்சி மாபெரும் புரட்சியாக வெடிப்பதை எவராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காமராசர் கதிர் விருது-வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம்
    • காயிதேமில்லத் பிறை விருது-எஸ்.டி.பி.ஐ தலைவர் தெகலான் பாகவி

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டு தோறும் பல்வேறு சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டிற்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் விவரங்களை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார்.

    இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு "அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு " ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

    இந்த ஆண்டு முதல் கூடுதலாக 'மார்க்ஸ் மாமணி' விருதும் வழங்குகிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொகிறோம்.

    முத்தமிழறிஞர் முனைவர் கலைஞர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா,

    ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருதினை கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு வழங்குவதில் பெருமைபடுகிறோம்.

    விருது பெறுவோர் பட்டியல்

    அம்பேத்கர் சுடர் விருது - கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா

    பெரியார் ஒளி விருது-எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை

    காமராசர் கதிர் விருது-வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம்

    அயோத்திதாசர் ஆதவன் விருது-இந்திய ஆட்சிப்பணி அதிகாரி செல்லப்பன்

    காயிதேமில்லத் பிறை விருது-எஸ்.டி.பி.ஐ தலைவர் தெகலான் பாகவி

    செம்மொழி ஞாயிறு விருது-தொல்லியல் அறிஞர் பேரா.கா.ராசன்

    மார்க்ஸ் மாமணி விருது-மறைந்த எழுத்தாளர் ஜவஹர்

    விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாங்கள் தான் எதிர்க்கட்சி என்று காட்டிக் கொள்ளுவதற்காக அண்ணாமலை இதுபோன்று செயல்படுகிறார் என திருமாவளவன் கூறியுள்ளார்.
    • தி.மு.க.வுக்கு மாற்று பா.ஜனதா தான் என்கிற பிம்பத்தை உருவாக்க அக்கட்சியின் மேலிட திட்டத்தை அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.

    சென்னை:

    சென்னையில் இன்று காயிதே மில்லத் நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அவருடன் கட்சி நிர்வாகிகள் பால சிங்கம், தமிழேந்தி, செல்லத்துரை, இரா.செல்வம், எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் திருமாவளவன் நிர்வாகிகளிடம் கூறியதாவது:-

    காயிதேமில்லத் தமிழை ஆட்சி மொழியாக்க குரல் கொடுத்தவர். அவர் பெடரில் தமிழக அரசு விருது வழங்க வேண்டும். காயிதே மில்லத் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்குவதுடன், அவரது பிறந்தநாளை மதநல்லிணக்க நாளாகவும் கடைபிடிக்க வேண்டும்.

    பா.ஜனதா தலைவர் அண்ணாமலை விளம்பரத்துக்காக தி.மு.க. அரசு மீது குற்றம் சாட்டி வருகிறார். நாங்கள் தான் எதிர்க்கட்சி என்று காட்டிக் கொள்ளுவதற்காக அவர் இதுபோன்று செயல்படுகிறார்.

    தி.மு.க.வுக்கு மாற்று பா.ஜனதா தான் என்கிற பிம்பத்தை உருவாக்க அக்கட்சியின் மேலிட திட்டத்தை அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். 2024 தேர்தலை மனதில் வைத்து பா.ஜனதா இப்படி செயல்படுகிறது. அவர்களின் கனவு பலிக்காது. அ.தி.மு.க. தற்போது விழித்துக்கொண்டு செயல்பட தொடங்கி விட்டது.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

    தமிழக பாஜக சார்பில் நாளை நடக்க உள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவேந்தல் கூட்டத்தில், அமைச்சர் ஜெயக்குமார், கனிமொழி எம்.பி, திருமாவளவன், திருநாவுக்கரசர் ஆகியோர் பங்கேற்று பேச உள்ளனர். #Vajpayee #BJP
    சென்னை:

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நாளை சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கத்தில் புகழ் அஞ்சலி கூட்டம் நடக்க உள்ளது. தமிழக பாஜக சார்பில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், அமைச்சர் ஜெயக்குமார், திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

    மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பாமக தலைவர் கோ.க மணி, விசிக தலைவர் தொல்.திருமாவளனன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, தமாகா துணைத்தலைவர் ஞானதேசிகன், மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, முஸ்லிம் லிக் கட்சி எம்.எல்.ஏ அபு பக்கர், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சன்முகம், இந்திய கம்யூ. மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், மா. கம்யூ. மத்திய குழு உறுப்பினர் சம்பத், லோக் ஜனசக்தி தலைவர் வித்யாதரன் ஆகியோரும் கலந்து கொண்டு பேச உள்ளனர். 
    ×