search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓணம்"

    திருநெல்வேலி மாவட்டம் பண்பொழி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருவோண பண்டிகையையொட்டி அத்திப்பூ கோலமிட்டு பக்தர்கள் கொண்டாடினர்.
    செங்கோட்டை:

    திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள பண்பொழி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் திருவோண திருவிழா நடைபெறும். இந்தாண்டும் பக்த பேரவை சார்பில் 7-ம் ஆண்டு திருவோண திருவிழா நடந்தது.

    விழாவையொட்டி காலையில் அத்திப்பூ கோலமிடுதல் நிகழ்ச்சி மற்றும் அம்பாள், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவு 7 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பக்த பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    விழாவில் பண்பொழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசித்து பிரசாதம் பெற்று சென்றனர்.

    சுரண்டை எஸ்.ஆர். பள்ளியில் ஓணம் பண்டிகை மற்றும் ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு குழல்வாய் மொழியம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனர் சிவபபிஷ்ராம் தலைமை வகித்தார். மேலும் பள்ளி செயலர் சிவடிப்ஜினிஸ்ராம், பள்ளி முதல்வர்கள் பொன் மனோனியா, புஷ்பா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.

    ஓணம் பண்டிகையையொட்டி மாணவ, மாணவிகள் வண்ண வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டனர். ஓணம் பற்றிய பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. மாணவ -மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி, ராக்கி கயிறு கட்டி ரக்ஷா பந்தனை கொண்டாடினர்.
    ஜாதி, மதம், மொழி தாண்டி கேரளத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் வண்ணமிகு திருவிழா ‘ஓணம்’ பண்டிகையாகும். இந்த பண்டிகையின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
    சக்கரவர்த்தியாக பிறந்த எலி

    ஜாதி, மதம், மொழி தாண்டி கேரளத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் வண்ணமிகு திருவிழா ‘ஓணம்’ பண்டிகையாகும். தமிழ்நாட்டில் சித்திரை போன்று, கேரளத்தில் சிங்கம் (ஆவணி) மாதம் தான் முதல் மாதமாக உள்ளது. எனவே ஓணம் பண்டிகையை புத்தாண்டு கொண்டாட்டமாகவும் சிறப்பிக்கின்றனர்.

    சிவன் கோவில் ஒன்றில் இருந்த விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அப்போது கோவிலுக்குள் நுழைந்த எலியானது, அந்த விளக்கின் மீது ஏறி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது எலியின் வால் திரியின் மீது பட்டு திரி தூண்டப்பட்டது. இதனால் அந்த விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. தன்னையும் அறியாமல் செய்த இந்த நற்காரியத்திற்காக அந்த எலியை அடுத்த பிறவியில் சக்கரவர்த்தியாக பிறக்க சிவபெருமான் அருள்புரிந்தார். தெரியாமல் செய்யும் நல்வினைக்கும் கடவுளின் அருள் மிகப்பெரியதாக அமையும் என்பதையே இந்த புராணக் கதை விளக்குகிறது.

    சக்கரவர்த்தியாக பிறந்து நாடு போற்றும் அளவுக்கு இருந்த அந்த சக்கரவர்த்தியை மகாவிஷ்ணு ஆட்கொண்டு அருள்புரிந்து வையகம் போற்றும் விதமாக செய்த தினத்தையே கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். சிங்கம் மாதத்தின் அஸ்தம் நட்சத்திரத்தில் இருந்து திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் தொடர்ச்சியாக இந்த விழா கேரள மக்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.

    யானைக்கு சிறப்பு

    கேரள விழாக்களில் யானைகளுக்கு தனி இடம் உண்டு. அந்த வகையில் ஓணம் திருவிழாவிலும் யானைத் திருவிழா நடத்தப்படுகிறது. 10-ம் நாளான திருவோணம் அன்று, விலை உயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன கவசங்களாலும், பூ தோரணங்களாலும் யானைகளை அலங்கரித்து வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வருவார்கள். இந்த விழாவில் யானைகளுக்கு சிறப்பு உணவும் உண்டு.

    கடுவக்களி

    மலையாளத்தில் ‘களி’ என்பது நடனத்தை குறிக்கும். ‘புலிக்களி’ அல்லது ‘கடுவக்களி’ என்று அழைக்கப்படும் நடனம் ஓணம் பண்டிகையின் 4-ம் நாள் விழாவில் நடைபெறும். இந்த நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி ஊர்வலமாக வருவார்கள். புலிக்களி நடனம் 200 ஆண்டுகளுக்கு முன்பு கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராமவர்ம சக்தன் தம்புரான் என்பவரால் ஓணம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது.

    இது தவிர கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனம் என 10 நாட்களும் பல போட்டிகள் நடத்தப்படும். இதில் படகுப்போட்டியின் போது அனைவரும் மலையாள பாடலை பாடியபடி துடுப்பை செலுத்துவார்கள்.

    ஓணம் சத்யா

    ‘கானம் விற்றாவது ஓணம் உண்’ என்ற பழமொழி ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ‘ஓண சத்யா’ என்ற நிகழ்ச்சியின் சிறப்பை உணர்த்துவதாகும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகை உணவு தயாரிக்கப்படும். புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெற்றிருக்கும். வகை வகையாக செய்யப்படும் உணவு செரிமானம் ஆவதற்காகத்தான் உணவில் இஞ்சிக்கறி, இஞ்சிப்புளி போன்றவை சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    அழகூட்டும் அத்தப்பூக் கோலம்

    ஓணம் திருவிழாவினை 10 நாட்களும் வண்ணமயமாக மாற்றுவது அத்தப்பூக் கோலம் என்றால் அது மிகையாகாது. ஓணம் பண்டிகையில் அத்தப்பூக் கோலம் முக்கிய இடம் வகிக்கும். மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அத்தப்பூக் கோலம் போடப்படும். ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும். அதனால் ஓணத்தையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண் பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வருவார்கள். பூக்கோலத்தில் அதை தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவார்கள். முதல் நாள் ஒரே வகையான பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் இந்த அத்தப்பூக் கோலம் அழகுபடுத்தப்படும்.

    அறுவடை திருநாள்

    பருவ மழைக்காலம் முடிந்து எங்கும் பசுமையும், செழுமையும் நிறைந்து காணப்படும் சிங்கம் மாதத்தை கேரள மக்கள் ‘அறுவடைத் திருநாள்’ என்றும் போற்றி வழிபட்டு சிறப்பிக்கின்றனர். முன் காலத்தில் ஓணம் பண்டிகை தினம் அறுவடைத் திருநாளாகவே கொண்டாடப்பட்டு வந்துள்ளதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர்.

    குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் எந்த கிரகத்தைப் பார்த்தாலும், அந்த கிரகம் சுப பலன்களைத் தந்து விடும். நவக்கிரகங்களில் பூரண சுபகிரகமாக குரு திகழ்கிறார். அந்த குருவின் அம்சமாகத் திகழ்பவர் வாமனர். வியாழ திசை, வியாழ புத்தி நடப்பில் உள்ளவர்கள், குரு தோஷத்தால் திருமணம், புத்திரப்பேறு தடைபடுபவர்கள் வியாழக் கிழமைகளில் வாமனமூர்த்தியை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெறலாம். வாமனமூர்த்திக்கு வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு. வாமனருக்குரிய கோவில் கேரள மாநிலம் திருக்காட்கரையில் உள்ளது. வாமனரை மனதில் எண்ணி மற்ற பெருமாள் கோவில்களிலும், திருவிளக்கின் முன்னும் கூட தீபம் ஏற்றி வழிபடலாம். அதன் மூலம் அனைத்து சிறப்புகளும் வந்து சேரும்.

    கேரளாவில் மழை வெள்ளத்தால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளை இன்று முதல் படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் அந்த மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை உருவானது.

    இதனால் ஏராளமான பொதுமக்கள் வீடுகளை இழந்தனர். அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள முகாம்களில் தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை மாநில அரசு மேற்கொண்டது. மேலும் வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை முப்படையை சேர்ந்த வீரர்களும் மீட்கும்பணியில் ஈடுபட்டனர். இயல்பு நிலை திரும்புவதை தொடர்ந்து 13 பட்டாளியன் ராணுவ வீரர்கள் தங்கள் முகாம்களுக்கு திரும்பி விட்டனர்.

    கடந்த 3 நாட்களாக கேரளாவில் மழை ஓய்ந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டு வருகிறார்கள். முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்களும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.

    வெள்ளத்தில் மூழ்கிய பலரது வீடுகள் முற்றிலுமாக இடிந்து சேதம் அடைந்து விட்டதால் அவர்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். வெள்ளத்தில் தப்பிப் பிழைத்த வீடுகளும் உடனடியாக மக்கள் குடியேற முடியாதபடி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இவற்றை தூய்மை செய்து மக்கள் குடியேறி வருகிறார்கள்.

    இதனால் முகாம்களில் தங்கி உள்ளவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. சுமார் 50 சதவீத மக்கள் முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பிவிட்டனர்.

    கேரளாவில் மழை வெள்ளத்தால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளை இன்று முதல் படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் உள்ள முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்கள் திருமண மண்டபம், சமூகநலக்கூடங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள்.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பத்தனம் திட்டா பகுதியில் உள்ள கோலஞ்சேரி முகாமில் தங்கி உள்ள பொதுமக்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் மாநில அரசு தொடர்ந்து செய்யும் என்று உறுதி அளித்தார்.

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் ஓணம் பண்டிகைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. பம்பை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு காணப்படுவதால் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. சபரிமலையில் மழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இவற்றை மண்டல பூஜைக்கு முன்பு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான திட்ட மதிப்பீடுகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தயார் செய்து வருகிறது.

    கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் நாளை கொண்டாடப்படுகிறது. இன்று முதல் அதற்கான கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. முகாம்களில் தங்கி உள்ளவர்கள் ஓணம் ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தனர். மழை காரணமாக ஓணம் உற்சாகம் குறைந்தே காணப்படுகிறது.  #KeralaFloods
    திருவோணப் பண்டிகையை கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Onam #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஓணம் திருநாள் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    திருவோணப் பண்டிகையை கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    வரலாறு காணாத கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாக பாசத்தோடும், நேசத்தோடும், தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் நிதியுதவி அளித்ததுடன், பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அரிசி, பால் பவுடர், ஆடைகள், போர்வைகள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளது.

    மேலும், சகோதர உணர்வுமிக்க தமிழ்நாடு மக்களிடமிருந்து பலகோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டு கேரள மாநிலத்திற்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. கனமழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்கள் அப்பாதிப்பிலிருந்து மீண்டெழுந்து, விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பிட தமிழ்நாட்டு மக்களின் சார்பில் எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த ஓணம் திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #Onam #TNCM #EdappadiPalaniswami
    ×