search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமராஜர்"

    ஆட்சியாளர்கள் காமராஜர் போன்று உழைத்தால் தமிழ்நாட்டில் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட நாடார் சங்கம் சார்பில் காமராஜரின் 116-வது பிறந்த நாள் விழா, சங்கத்தின் 28-வது ஆண்டு விழா மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா தர்மபுரி டி.என்.சி. விஜய் மஹாலில் நடைபெற்றது.

    விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். மேலும் ஸ்கேட்டிங் போட்டியில் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர் பரிசு வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தை ஆண்ட காமராஜர் மக்களின் மனதை அறிந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சி காலத்தில் தான் கல்லூரிகளில் மாலை நேர வகுப்புகள் தொடங்கப்பட்டது. பெரும்பாலான அணைகள் கட்டப்பட்டது. ஊழல் இல்லாத ஆட்சியை நடத்திய காமராஜர் தற்போதும் அனைத்து தரப்பு மக்கள் மனதிலும் வாழ்ந்து வருகிறார்.

    பட்டதாரி இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு தமிழ்நாட்டு மக்களின் கல்வி அறிவை உயர்த்த காரணமாக இருந்தவர் கமராஜர். மேலும் இங்கு இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் காமராஜர் போன்று உழைத்தால் தமிழ்நாட்டில் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும். இதனால் தமிழகமே விவசாய பூமியாக செழிக்கும். ஆனால் தற்போது உள்ள ஆட்சியாளர்கள் ஊழல் செய்து பணத்தை கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். மக்களின் மன நிலையை அறிந்து ஆட்சியாளர்கள் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

    இந்த காலத்து இளைஞர்களுக்கு செல்போன் மட்டுமே உறவாக உள்ளது. எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கவனிக்க வேண்டும். இளைஞர்கள் தங்களின் உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வணிகர்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் முதலில் நாம் முன்வந்து உதவி செய்ய தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    கரூரில் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலை, படத்திற்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    கரூர்:

    பெருந்தலைவர், கர்மவீரர், ஏழைபங்காளர், கருப்பு வைரம், தமிழக கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட படிக்காத மேதை என எல்லோராலும் போற்றப்படும் காமராஜரின் பிறந்தநாள் விழா நேற்று கரூரில் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த தினத்தை கரூர் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கருதி மாணவ- மாணவிகளுக்கு கருத்துரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அந்த வகையில் கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அதன் தலைமை ஆசிரியை சண்முக வடிவு தலைமையில் ஆசிரிய- ஆசிரியைகள், மாணவிகள் ஆகியோர் காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர், தமிழக முதல்- அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை காமராஜர் வகித்தாலும் பொதுவாழ்வில் நேர்மையையும், எளிமையையும் கடைபிடித்து அவர் ஆற்றிய தொண்டுகள் குறித்து நடத்தப்பட்ட பேச்சுபோட்டியில் காமராஜர் பற்றி பல்வேறு சுவாரசியமான தகவல்களை மாணவிகள் பேசினர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் அந்த பள்ளியின் பிளஸ்-2 மாணவி லட்சுமி பிரபா கல்வியில் மட்டும் அல்லாமல் விளையாட்டு உள்ளிட்டவற்றில் திறமையை வெளிப்படுத்தியதால் அவருக்கு அரசு சார்பில் காமராஜ் விருது வழங்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் போது அந்த மாணவிக்கு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து கூறி பாராட்டினர். இதேபோல் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலும் நேற்று காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்டத்திலுள்ள தெருக்களிலும் ஆங்காங்கே பொதுமக்கள் சார்பில் காமராஜரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியதையும் பார்க்க முடிந்தது.

    இதற்கிடையே கரூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர தலைவர் ஸ்டீபன் பாபு தலைமையில் சுரேகா பாலசந்தர், குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் கரூர் நாடார் மஹாஜன சங்கம் சார்பில் நாடார் குழும தலைவர் நாடார் பைனான்ஸ் கூடலரசன், மாநில இணைச்செயலாளர் ஜீவிதா ஸ்டோர் சண்முக நாதன், மாவட்ட செயலாளர் நஞ்சை சதீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். கரூர் மாவட்ட நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் அகஸ்டின் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். கரூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் கட்சி அலுவலகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் பி.எம்.குப்புசாமி தலைமையில் அரசியல் உயர்மட்டக்குழு தலைவர் முன்னாள் எம்.பி. நாட்ராயன் உள்ளிட்டோர் காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கரூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 
    காமராஜர் விட்டுச்சென்ற கல்வி கருவூலத்தை போற்றி பாதுகாக்க உறுதி ஏற்போம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.#HBDKamarajar #MKStalin

    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கல்வி வளர்ச்சியின் இரு கண்களாக விளங்கிய பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15 அன்று மாணவர் சமுதாயம் பெருமகிழ்ச்சியுடனும் பெருமிதத்தோடும் கொண்டாடிட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வேண்டுகோள் விடுக்க கடமைப்பட்டுள்ளேன். தமிழ்நாடு கல்வியில் முன்னேறவும், மாணவர் சமுதாயம் விழிப்புணர்வு பெற்று மேம்பாடடையவும் தன் வாழ்நாளில் அரும்பாடுபட்ட பெருந்தலைவர் அவர்களின் அரிய சேவையை தமிழ்ச் சமுதாயம் எந்நாளும் மறக்க முடியாது.

    கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்கள் கட்டுவதில் புரட்சியை ஏற்படுத்திய கர்ம வீரரின் அருமை பெருமைகளை கல்விக்கண் பெற்ற ஒவ்வொருவரும் நினைத்துப் பெருமிதம் கொள்ள வேண்டிய நன்னாள் இந்த ஜூலை 15 ஆம் நாள்.

    அரசியலில் நேர்மை, பொது வாழ்வில் தூய்மை என்பதற்குச் சான்று காட்டும் அடையாளமாக விளங்கிய காமராஜர் அவர்களின் பிறந்த நாளை “கல்வி வளர்ச்சி நாளாக” அறிவித்து, அதைக் கொண்டாட அரசு ஆணை மட்டும் போடாமல் சட்டமாகவே இயற்றியவர் தலைவர் கலைஞர் என்பதை இந்த நேரத்தில் நினைவுகூற விரும்புகிறேன்.


    அந்த கல்வி வளர்ச்சி நாளில் சத்துணவுடன் இரு முட்டை வழங்கிடும் திட்டத்தை அறிவித்து, முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் வழங்கும் திட்டத்தையும் அமல்படுத்தி மாணவ-மாணவியர் உடல் நலத்துடன் பள்ளி சென்று கல்வி கற்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்திக் கொடுத்தவர் தலைவர் கலைஞர்.

    பெருந்தலைவர் காமராஜரின் கனவுகளை நனவாக்கும் வகையில் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாட புத்தகங்கள் வழங்குவது, இலவசக் கல்வி வழங்குவது, இலவச பஸ் பாஸ் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து, ஏழை எளிய குடும்பத்தில் பிறந்தவர்களுக்கும் கல்வி கிடைக்கப் பாடுபட்டது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.

    பெருந்தலைவர் காமராஜர் திறந்து வைத்த அந்த கல்விக்கண் இன்று தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் நல்ல ஒளி வீசிக் கொண்டிருப்பது மட்டுமின்றி ஒப்பற்ற நிர்வாகத் திறன் படைத்த இளைஞர்களையும், நேர்மையாளர்களையும் உருவாக்க காரணமாக இருக்கிறது என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்துள்ள பரிசு என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சாதனைத் தமிழர்கள் உருவாகக் காரணமாக இருந்த கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாளான இன்று அவர் விட்டுச் சென்ற “கல்வி” என்ற கருவூலத்தைப் போற்றிப் பாதுகாக்கும் செயலில் ஒவ்வொருவரும் ஈடுபடுவோம் என்று உறுதி மொழி எடுத்து, பெருந்தலைவரின் பிறந்த நாளை மாணவச் செல்வங்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாடிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    என்றும் இந்த மண்ணில் நம் பெருந்தலைவர் வாழ்ந்த காலம்தான் தமிழர் வாழ்வில் ஒரு பொற்காலம்.
    உயரிய அறம் சார்ந்த காந்திய அரசியலில் அழுத்தமான நம்பிக்கை கொண்ட கடைசி அரசியல்வாதி காமராஜர். அதனால் தான், “காலத்தின் கடைசிக் கருணை காமராஜர்” என்றார் கண்ணதாசன்.

    காமராஜர் வாழ்ந்த விதத்தை, இப்பொழுது நினைத்தால் நம்ப முடியாத ஓர் அதிசயக் கனவு போல் கண் சிமிட்டுகிறது. காந்தியத்தைக் காதலித்து, காந்தியத்தையே கைப்பிடித்து, காந்தியத்திற்காகவே வாழ்ந்து, காந்தி பிறந்த நாளில் கண்மூடிய ‘அத்வைதி’ காமராஜர்.

    காமராஜரை நம் மக்கள் ஏன் வணக்கத்திற்குரிய தலைவராக வழிபடுகிறார்கள்? அவருடைய வரலாறு படைத்த ஒன்பதாண்டு ஆட்சிச் சாதனைகளுக்காகவா? ஊழலின் நிழல்படாத உயரிய நிர்வாகத்தை அவர் உருவாக்கித் தந்ததற்காகவா?

    அறியாமை இருட்டில் அழுந்திக் கிடந்த பாமரர்களின் இதயத்தில் கல்வி வெளிச்சத்தைப் பாய்ச்சியதற்காகவா? ஆறுகள் ஓடும் இடங்களில் எல்லாம் அணைகளை எழுப்பி விவசாயத்தை வளர்த்ததற்காகவா? தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை இந்திய மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தலைநிமிரச் செய்ததற்காகவா?

    இவையெல்லாம் அவருடைய தனிப்பெரும் ஆட்சி சாதனைகள்தான். ஆனால் எளிமையும், உண்மையும், நேர்மையும் நிறைந்த அவருடைய தன்னலமற்ற வாழ்க்கைதான் என்றும் வணக்கத்திற்குரியது.

    காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சராக 1954-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் பொறுப்பேற்ற பின்பும் சென்னை திருமலைப்பிள்ளை வீதியில் இருந்த வாடகை வீட்டிலேயே தொடர்ந்து வசித்தார்.

    அவருடைய அன்னையார், “நீ இருக்கும் வீட்டில் ஒரு மூலையில் உனக்கு எந்தச் சிரமமும் தராமல் உன் முகத்தைப் பார்த்தபடி எஞ்சிய காலத்தைக் கழித்து விடுகிறேன்” என்று கண்ணீர் ததும்பச் சொன்ன போதும் அவருடைய கோரிக்கையை மறுதலித்துவிட்டவர் காமராஜர்.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இரா.கிருஷ்ணசாமி நாயுடுவிடம், “தந்தையில்லாப் பிள்ளையாய் என் தாயார் எவ்வளவு சிரமப்பட்டு என்னை வளர்த்தார்கள் என்பதை நானறிவேன். பாசத்தில் அவரை நான் பக்கத்தில் வைத்துக் கொண்டால் அவரைப் பார்க்க அடிக்கடி பத்து பேர் வருவார்கள். அத்தையைப் பார்க்க வந்தேன், ஆத்தாவைப் பார்க்க வந்தேன் என்பார்கள். ஏதாவது ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள, முதல்-அமைச்சர் வீட்டிலிருந்து பேசுகிறேன் என்று அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்வார்கள். அதனால்தான், அம்மா ஊரிலேயே இருக்கட்டும் என்கிறேன். அவர்கள் தேவைக்குத்தான் மாதம் ரூ.130 அனுப்பி வைக்கிறேனே” என்று சொன்னவர் காமராஜர்.

    முற்றும் துறந்த ஆதி சங்கரரும், பட்டினத்தாரும் கூடத் துறக்க விரும்பாத உறவு, தாயின் உறவு. அந்தத் தாயின் உறவையும் பொது வாழ்க்கைத் தூய்மைக்காகத் தள்ளி வைத்த அதிசயமான தலைவர் காமராஜர்.

    காமராஜர் தன் அமைச்சரவையில் ஏழு பேரை மட்டும் சேர்த்துக் கொண்டார். தலித்துகளின் தலைவர் இரட்டைமலை சீனிவாசனின் பேரன் பரமேஸ்வரன் என்பவர் அந்த ஏழு அமைச்சர்களில் ஒருவர். சமூக நீதியைச் செயற்படுத்துவதற்காக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த காமராஜர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த அமைச்சரிடம் அறநிலைத்துறையை அளித்தார்.

    “ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரரை அமைச்சராக்கிவிட்டால் எந்த நாலாஞ் சாதியை உள்ளே விடமாட்டோம்னு சொன்னார்களோ, அதே நாலாஞ் சாதிக்காரருக்குப் பரிவட்டம் கட்டிப் பூரண கும்ப மரியாதையுடன் அவர்கள் பணிவோடு கோவிலுக்குள் அழைத்துப் போவார்கள் என்றுதான் பரமேஸ்வரனை நான் இந்து அறநிலைத்துறைக்கு அமைச்சராக்கினேன்” என்று காமராஜர் வாய்வேதம் பேசாமல் சமூக நீதிக்குச் செயல் வடிவம் தந்த தலைவர்.

    ஒரு நாள் கவிஞர் எஸ்.டி.சுந்தரம் காமராஜரைச் சந்தித்த போது, ‘உங்கள் ஆட்சிச் சாதனைகளை என்றும் மக்கள் நினைவில் நிறுத்துவதற்காக ஒரு நியூஸ் ரீல் எடுத்தால் நல்லது’ என்றார்.

    ‘நாம் ரோடு போட்டோம். அதன் மேல்தான் மக்கள் நடக்கிறார்கள். பள்ளிக்கூடம் கட்டினோம். அதில்தான் அவர்களுடைய பிள்ளைகள் படிக்கிறார்கள். அணைகளைக் கட்டினோம். அந்தத் தண்ணீரில்தான் விவசாயம் செய்கிறார்கள். இதில் வேறு, விளம்பரப் படம் எதற்கு வீண் செலவு?” என்று கவிஞரின் கருத்தை மறுத்தார் கர்மவீரர்.

    “மூன்று லட்சம் ரூபாய் இருந்தால் போதுமய்யா! தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க உதவுகிறார் போல் நல்ல செய்திப் படம் எடுத்து விடலாம்” என்று கவிஞர் சொன்னதும், “அடப்பாவி படமெடுக்கும் மூன்று லட்சத்தில் இன்னும் பத்து ஊர்களில் நான் பள்ளிக்கூடம் கட்டுவேன். பிள்ளைகள் படிக்க வழி சொல்லாமல் ‘நியூஸ் ரீல்’ எடுக்கச் சொல்கிறாயா? முதலில் இங்கிருந்து நடையைக் கட்டு” என்று கொதித்தார் அந்தக் கருப்புக் காந்தி. அப்படி ஒரு தலைவரை இப்பொழுது பார்க்க முடியுமா?

    விருதுநகரில் சுலோச்சன நாடார் தெருவில் உள்ள சாதாரண வீட்டில் தான் காமராஜரின் தாயும் தங்கையும் வாழ்ந்து வந்தனர். அந்த வீட்டில் குடிநீர்க் குழாய் இல்லை. அடுத்த தெருவில் இருந்த ‘முனிசிபாலிடி’ குழாயில் வரிசையில் நின்று தான் காமராஜரின் தங்கை நாகம்மை தண்ணீர் பிடிப்பது வழக்கம்.

    உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மஜீத் இந்த நிலையை அறிந்து காமராஜர் வீட்டில் குழாய் இணைப்புக்கு வழிசெய்துவிட்டுக் கோட்டைக்குத் திரும்பினார்.

    இதைக் கேள்வியுற்ற காமராஜர் அமைச்சர் மஜீத்தை அழைத்து, “என் வீட்டுக் குழாய் இணைப்புக்கு முறைப்படி நான் முனிசிபாலிடியிடம் விண்ணப்பம் கொடுத்தேனா? அதற்கு 18 ரூபாய் கட்டணம் கட்டினேனா? எப்படி வந்தது குழாய் இணைப்பு? உங்களை நான் நாட்டைப் பார்க்கச் சொன்னேனா, என் வீட்டைப் பார்க்கச் சொன்னேனா? 24 மணி நேரத்திற்குள் அந்தக் குழாய் இணைப்பு துண்டிக்கப்படவேண்டும். பதவியைப் பயன்படுத்தி அவரவர் வீட்டு வேலையைப் பார்த்தால் நாடு உருப்பட்ட மாதிரிதான்” என்று கடும் கோபத்துடன் கண்டித்தார்.

    உடனே குழாய் இணைப்பு அறுபட்டது. மீண்டும் முதல்வரின் தங்கை குடத்துடன் அடுத்த தெருவில் தண்ணீருக்காக வரிசையில் நின்றார். பெருந்தலைவரின் வாழ்க்கை முறை இன்று பொய்யாய், கனவாய், பழங்கதையாய் போய்விட்டது.

    நாட்டு விடுதலைப் போரில் ஒன்பது ஆண்டுகள் கடுங்காவல் சிறைவாசம்; பன்னிரண்டு ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர்; ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினர்; நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினர்; ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வர்; ஐந்து ஆண்டுகள் அகில இந்திய காங்கிரசின் தலைவர்; இரண்டு முறை இந்தியப் பிரதமர்களை உருவாக்கிய ஒரே தமிழர். இத்தனை பெருமைகளுக்குப் பின்பும் தனிவாழ்வில் அந்த பெருந்தலைவனுக்கு மிஞ்சியது 60 ரூபாய்; பத்து கதர் வேட்டி சட்டை.

    காமராஜர் கண் மூடினார். அவர் வாழ்ந்த வீட்டை அதன் உரிமையாளர் எடுத்துக்கொண்டார். அவர் பயன்படுத்திய காரை கட்சி எடுத்துக்கொண்டது. அவரது உடலை நெருப்பு எடுத்துக்கொண்டது. அவரது பெயரை வரலாறு எடுத்துக் கொண்டது. என்றும் இந்த மண்ணில் நம் பெருந்தலைவர் வாழ்ந்த காலம்தான் தமிழர் வாழ்வில் ஒரு பொற்காலம்.

    இன்று (ஜூலை 15-ந் தேதி) காமராஜர் பிறந்த தினம். 
    காமராஜர் கண்ட கனவு பலித்துள்ளது. அவர் வழங்கிய இலவச உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகள் இன்று ஆசிரியர்களாகி இந்த சாதனை மாணவர்களை உருவாக்கி உள்ளனர் என்று விருதுநகரில் கமல்ஹாசன் பேசினார்.
    விருதுநகர்:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 2 நாட்களாக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்தார்.

    நேற்று விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகரில் பொதுமக்களை சந்தித்தார்.

    சிவகாசியில் பஸ் நிலையம் அருகே திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசும் போது, இப்போது இங்கு பெய்துள்ள மழையில் நீங்கள் நனைந்துள்ளீர்கள். நான் உங்கள் அன்பு மழையில் நனைகிறேன். இந்த அன்பை தரிசிக்கத்தான் நான் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.

    வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் நீங்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். நமது அமைப்பின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள விசில் செயலி அமைப்பை நீங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    அதைத் தொடர்ந்து விருதுநகர் தேசபந்து திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசும்போது, நான் விருதுநகர் வரும் போது ஒரு நல்ல மகிழ்ச்சியான செய்தியை கேட்டேன். இந்த மாவட்ட மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது தான் அந்த செய்தி. இதன்மூலம் காமராஜர் கண்ட கனவு பலித்துள்ளது. அவர் கண்ட கனவுகள் மீண்டும் பலிக்கும். அவர் வழங்கிய இலவச உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகள் இன்று ஆசிரியர்களாகி இந்த சாதனை மாணவர்களை உருவாக்கி உள்ளனர்.

    நான் தற்போது காமராஜர் வீட்டுக்கு சென்று வந்தேன். சிறிய தெருவில் அவரது வீடு உள்ளது. ஆனால் விசாலமான பாதையை அவர் மாணவர்களுக்கு காட்டியுள்ளார். கல்விக்கு காமராஜர் செய்த சேவை மகத்தானது. காமராஜர் நமக்கு காட்டிய பாதையை தற்போது செப்பனிட வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. நானும், மக்கள் நீதி மய்ய தொண்டர்களும் அதனை செய்வோம்.

    இங்கு என்னைவிட மூத்தவர்கள் உள்ளனர். அவர்கள் காமராஜர் கண்ட கனவு பலிக்குமா? பலிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் இருந்த நிலை மாறி இன்று அவர்கள் முகத்தில் புன்னகை தெரிகிறது. கால சுழற்சியில் காமராஜர் கண்ட கனவு பலிக்கும் நிலை ஏற்படும்.

    நாம் மேற்கொள்ளும் பணியில் பல்வேறு இடையூறுகள் வரலாம். அதனை எதிர்கொண்டு நாம் வெற்றிபெற வேண்டும். இங்கு திரண்டுள்ள உங்களை பார்க்கும்போது எனக்குள் உத்வேகம் பிறக்கிறது. உங்களது ஆசியுடன் லட்சியங்களை நிறைவேற்றுவேன்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.


    ×