search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர்பு"

    போலி பாஸ்போர்ட் வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் விமான நிலைய ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    பிரான்ஸ் நாட்டில் இருந்து கடந்த மே மாதம் போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை வந்த தேனியை சேர்ந்த தேவராஜன் என்பவர் குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கினார். இதையடுத்து விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப் படுத்தியதில், போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய 5 பேர் அடுத்தடுத்து பிடிபட்டனர்.

    அவர்களில் சிலர் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இயங்கி வரும் துருக்கி போன்ற நாடுகளுக்கு சென்றுவந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் போலி பாஸ்போர்ட் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    விசாரணையில், சென்னை திருவல்லிக்கேணியில் செயல்பட்டு வந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் போலி பாஸ்போர்ட் சப்ளை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் கடந்த திங்கட்கிழமை மத்திய குற்றப்பிரிவு போலீசார் குறிப்பிட்ட டிராவல்ஸ் நிறுவனத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    இதில் 80 இந்திய போலி பாஸ்போர்ட்களும், 12 இலங்கை போலி பாஸ்போர்ட்களும் சிக்கின. இதையடுத்து போலி பாஸ்போர்ட் கும்பலை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். போலி பாஸ்போர்ட் தயாரிக்க பயன்படுத்திய எந்திரங்கள், அச்சு முத்திரைகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பலிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ‘தமிழகம் முழுவதும் பயனற்ற, காலாவதியான பாஸ்போர்ட்களை பெற்று, அதில் இருக்கும் புகைப்படத்தை எடுத்துவிட்டு போலி பாஸ்போர்ட் தயாரிக்கப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

    தற்போது இந்த விவகாரத்தில் விமானநிலைய ஊழியர்கள் உடந்தையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மத்திய குற்றப் பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிவைத்ததாக சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தரகர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது போலி பாஸ்போர்ட் கும்பலுக்கு உடந்தையாக இருந்த சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் ஜெயசிங், ஸ்டீபன், மத்திய ஆயுதப்படை போலீஸ்காரர் கிரிதரபிரசாத், தற்காலிக ஊழியர் மணிவண்ணன் ஆகிய 4 பேர் சிக்கினர்.

    தற்போது சிக்கியுள்ள போலி பாஸ்போர்ட் கும்பலிடம் இருந்து இலங்கை தமிழர்கள் அதிகளவில் பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. போலி பாஸ்போர்ட் மூலம் பெங்களூரு, ஐதராபாத் போன்ற விமான நிலையங்களில் இருந்து இலங்கைக்கு சென்றுவந்துள்ளனர்.

    எனவே இந்த விவாகரத்தில் விமான நிலைய ஊழியர்களும் உடந்தையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள போலி பாஸ்போர்ட் கும்பலிடம் தீவிரமாக விசாரிக்கப்படுகிறது.

    வெளிநாடு சினிமா படப் பிடிப்புகளுக்கு சென்றுவர திரைப்பட துறையினர் போலி பாஸ்போர்ட்களை பயன்படுத்தியதாக வெளியான தகவல்கள் தவறானவை.

    இவ்வாறு அவர் கூறினார். 
    கோவை கள்ளநோட்டு கும்பலுடன் அரசியல்பிரமுகர்கள், தொழில் அதிபர்களுக்கு தொடர்பு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. #fakecurrency
    கோவை:

    கோவை சாய்பாபா காலனியில் கடையை வாடகைக்கு எடுத்து கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பல் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கடந்த 2 மாதமாக இங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை அச்சடித்துள்ளனர். பின்னர் தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    இந்த கும்பலில் ஏஜெண்டுகள் பலர் உள்ளனர். அவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கும் பிரிந்து சென்று ஒரிஜினல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் கள்ள நோட்டுகளையும் கலந்து புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஊட்டியில் கோடை சீசன்களை கட்டி இருந்தது. நாடு முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்ததால் அங்கு கூட்டம் அலைமோதி காணப்பட்டது. இதை பயன்படுத்தி கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    இதற்காக கோவையில் இருந்து கள்ளநோட்டுகளை ஐஸ் வியாபாரிகள் போல நடித்து மோட்டார் சைக்கிள்கள் மூலம் ஐஸ்கிரீம் டப்பாவுக்குள் மறைத்து வைத்து கடத்தி சென்றுள்ளனர். சில நேரங்களில் பஸ்களில் சாதாரண பயணிகள் போல பயணம் செய்தும் கள்ளநோட்டுகளை கொண்டு சென்று ஊட்டியில் புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    கிதர் முகமது

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிதர் முகமதுவின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அரசியல்பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் எண்கள் இருந்துள்ளது. அவர்கள் யார்-யார்? எந்தெந்த வகைகளில் இவர்களுக்கு உதவி செய்தார்கள்? என விசாரணை நடந்து வருகிறது.

    கோவையில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகள் ஏஜெண்டுகள் மூலம் கர்நாடகாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தல் நேரத்தில் புழக்கத்தில் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கும்பல் தலைவனான சுந்தருக்கு சர்வதேச அளவில் கள்ளநோட்டு கும்பல் மற்றும் கேரளாவை சேர்ந்த ஹவாலா கும்பலுடன் தொடர்பு இருந்துள்ளது. அதன் மூலம் குஜராத்தில் இருந்து நவீன வெள்ளை காகிதங்களை வரவழைத்து கள்ளநோட்டுகளை அச்சடித்துள்ளனர்.

    சுந்தர் பிடிபட்டால் கள்ளநோட்டு கும்பலின் மொத்த நெட்வொர்க் பற்றியும் தகவல் கிடைக்கும் என போலீசார் கருதுகின்றனர். எனவே சுந்தரை கைது செய்வதற்காக கூடுதல் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சுந்தர் மீது கேரளாவில் கள்ளநோட்டு வழக்கு, யானை தந்தம் கடத்திய வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. தனிப்படை போலீசார் கேரளாவில் உள்ள அவரது நண்பர்கள் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரமடையில் அவர் தங்கி இருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு கள்ளநோட்டுகளோ, அச்சடிக்க தேவையான பொருட்களோ இல்லை.

    கைதான கிதர் முகமது இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இவரையும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஆனந்தையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர். #fakecurrency
    ×