search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப்பொருள்"

    • போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கு தொடர்பு இருக்கலாமோ? என்கிற சந்தேகத்தின் பேரிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
    • ஜாபர் சாதிக்கின் சாந்தோம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    சென்னை:

    டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருட்களை கடத்திய வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

    ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளை கடத்தி ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் பணத்தை சுருட்டியது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜாபர் சாதிக் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். தற்போது அவர் சிறையில் உள்ளார்.

    போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அது தொடர்பான தகவல்கள் மற்றும் ஆதாரங்களையும் திரட்டி வந்தனர்.

    இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் நண்பரும், தொழில் பங்குதாரருமான டைரக்டர் அமீரிடம் கடந்த 2-ந்தேதி டெல்லியில் விசாரணை நடத்தப்பட்டது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி அமீரை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். 10½ மணி நேர விசாரணைக்கு பிறகு அமீர் விடுவிக்கப்பட்டார்.

    இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தங்களது நேரடி விசாரணையை இன்று தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக சென்னையில் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவ படை பாதுகாப்புடன் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


    ஜாபர் சாதிக்குடன் இணைந்து ஓட்டல் ஒன்றை நடத்தி வந்த இயக்குனர் அமீர் 'இறைவன் மிகப்பெரியவன்' என்கிற சினிமா படத்தையும் எடுத்து வந்தார். இந்த படத்தின் தயாரிப்பாளராக ஜாபர்சாதிக்கும், இயக்குனராக அமீரும் இருந்தனர். இந்த படத்துக்கான படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில்தான் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினார்.

    இதனால் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கும் தொடர்பு இருக்கலாமோ? என்கிற சந்தேகத்தின் பேரிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தங்களது முதல்கட்ட விசாரணையை நடத்தி முடித்து உள்ள நிலையில்தான் சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று காலையில் 7 அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர். தி.நகரில் உள்ள அமீரின் அலுவலத்திலும் சோதனை நடந்தது.

    இந்த சோதனையின் போது அமீரின் வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. அவைகளை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜாபர்சாதிக்கின் சாந்தோம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த வீட்டில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி வீட்டை பூட்டி 'சீல்' வைத்திருந்தனர்.

    கோர்ட்டு உத்தரவின்பேரில் 2 நாட்களுக்கு முன்பு தான் 'சீல்' அகற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜாபர் சாதிக்கின் வீட்டிலும் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையிலும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள புகாரி ஓட்டல் உரிமையாளர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

    பெரம்பூர் பொன்னப்பன் தெருவில் உள்ள முகேஷ், யுகேஷ், லலித்குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் நிதி நிறுவனத்தையும், கெமிக்கல் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்கள்.

    புரசைவாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஓட்டலில் ஜாபர் சாதிக் பங்குதாரராக இருப்பதாக கூறப்படுகிறது.

    இதேபோன்று ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த தொழில் அதிபர்கள் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் பணப்பட்டுவாடாவை தடுக்க வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல இடங்களில் சோதனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அடுத்தக்கட்டமாக அமலாக்கத்துறையினர் மேலும் பல முக்கிய பிரமுகர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • உலக கோட்டீஸ்வரர்கள் வரிசையில் 2014 ஆம் ஆண்டு 609 இடத்தில் இருந்த அதானி, இன்றைக்கு 13-வது இடத்தில் உயர்வதற்கு யார் காரணம்? யார் பொறுப்பு?
    • தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் மூலம் ரூபாய் 6572 கோடி குவித்த பிரதமர் மோடி ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பா.ஜ.க. அரசு எப்போதும் செயல்பட்டதில்லை என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

    கடந்த 9 ஆண்டுகளில் மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் சொத்து 2229 சதவிகிதமும், அம்பானியின் சொத்து 400 சதவிகிதமும் அதிகரித்து இருக்கிறது. உலக கோட்டீஸ்வரர்கள் வரிசையில் 2014 ஆம் ஆண்டு 609 இடத்தில் இருந்த அதானி, இன்றைக்கு 13-வது இடத்தில் உயர்வதற்கு யார் காரணம்? யார் பொறுப்பு? மோடி ஆட்சியால் கார்ப்பரேட்டுகள் பயனடைந்தார்கள். அதனால் தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் மூலம் ரூபாய் 6572 கோடி குவித்த பிரதமர் மோடி ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.

    போதை பொருள் தடுப்புக்காக கொண்டு வரப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு பா.ஜ.க. பயன்படுத்தி வருகிறது. இத்தகைய பாசிச, சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிற பிரதமர் மோடி வருகிற மக்களவை தேர்தலில் மக்கள் உரிய தீர்ப்பை வழங்கி ஜனநாயகத்தை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜாபர் சாதிக்கை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவரது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்த அமீரையும் விசாரணை செய்ய முடிவு செய்தனர்.
    • போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய நிலையை விளக்குவேன் என்று அமீர் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

    டெல்லியில் 3 தமிழர்கள் போதைப் பொருளுடன் பிடிபட்ட நிலையில் அதற்கு மூளையாக இருந்து செயல்பட்டது தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது தெரிய வந்தது.

    இதனை அடுத்து தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவரது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்த அமீரையும் விசாரணை செய்ய முடிவு செய்து ஏப்ரல் 2-ந்தேதி அமீர் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.

    இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய நிலையை விளக்குவேன் என்று அமீர் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் சற்றுமுன் டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்கறிஞர் பிரபாகரனுடன் ஆஜராகியுள்ளார்.

    • 2021-ம் ஆண்டு முதல் போதை மாத்திரைகள் விற்பனை தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகிறது.
    • போதை மாத்திரைகளுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் அது கட்டுக்குள் வராமலேயே உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகரில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக கஞ்சா விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வாகனங்களில் கடத்தப்படும் கஞ்சா பொட்டலங்களை ரகசிய தகவலின் பேரில் போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள். பஸ்கள் மற்றும் ரெயில்கள் மூலம் கடத்தப்படும் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டு வருகிறது. இப்படி வாகன சோதனையின் மூலமாக போதைப்பொருட்கள் பிடிபடுவதால் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்கி சென்னையில் விற்பனை செய்து வருகிறார்கள்.

    படித்த இளைஞர்களும் இதில் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்கள். கூரியர் சர்வீஸ் மூலமாக இந்த மாத்திரைகளை போதை கும்பலிடம் இருந்து குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாங்கி சப்ளை செய்து வருகிறார்கள். மருத்துவத் துறையில் தூக்கமின்மை மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளாக பயன்படுத்தப்படும் இந்த மாத்திரைகளை மருந்து சீட்டுகள் இல்லாமல் கொடுக்கக்கூடாது.

    இதுதொடர்பாக போலீசார் அனைத்து மருந்து கடைகளுக்கும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். இதனால் மருந்து கடைகளில் இந்த போதை மாத்திரைகளை நேரடியாக வாங்குவது சிரமமான விஷயமாகவே இருந்து வருகிறது. அதே நேரத்தில் சட்ட விரோதமாக இந்த போதை மாத்திரைகள் பார்சல்கள் மூலமாக அனுப்பப்பட்டு சென்னையில் கல்லூரி மாணவர்கள், வாலிபர்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது என மருந்து கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, டாக்டர்களின் பரிந்துரை மருந்து சீட்டு இல்லாமல் மேற்கண்ட மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என்கிற சட்டத்தையும் மீறி போதைக்காக மாத்திரைகளை ஆன்லைனில் விற்று வருகிறார்கள். அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    மற்ற போதைப்பொருட்களை பயன்படுத்தும்போதும் மது குடித்த பிறகும் தலை சுற்றல் உள்ளிட்ட போதைக்கான அறிகுறிகள் காணப்படும் என்றும் ஆனால் இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதால் அதுபோன்ற அறிகுறிகள் எதுவும் இருக்காது. உள்ளுக்குள் இருந்தே இந்த போதை மாத்திரை வேலை செய்யும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் போதை மாத்திரைகளை பயன்படுத்தி இருப்பவர்களை வீட்டில் இருக்கும் பெற்றோரால் கூட கண்டுபிடிக்க முடியாது என்பதால் இளைஞர்கள் அதிக அளவில் அதனை பயன்படுத்தி வரும் அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது. இப்படி சென்னை மாநகரில் சத்தம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் போதை மாத்திரைகள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அதிக அளவில் பிடிபட்டுள்ளன. 23 வழக்குகள் போடப்பட்டு 40 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 2000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இந்த 40 பேரின் வங்கி கணக்குகளையும் முடக்குவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். போதை மாத்திரைகளை வாங்குவதற்கு ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    2021-ம் ஆண்டு முதல் போதை மாத்திரைகள் விற்பனை தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகிறது. இதுவரை 1243 வழக்குகள் போடப்பட்டு 2423 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படி தொடர்ச்சியாக போதை மாத்திரைகளுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் அது கட்டுக்குள் வராமலேயே உள்ளது. போதை மாத்திரைகளை பொடியாக்கி அதனை தண்ணீரில் கரைத்து நரம்பு வழியாக ஊசி மூலம் உடலில் ஏற்றுக் கொள்கிறார்கள். இதனை ஏதாவது ஒரு இடத்தில் இருந்தே பயன்படுத்தி விடவும் முடிகிறது. இப்படி போதை மாத்திரைகள் சென்னை மாநகர இளைஞர்களின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரும் நிலையில் அதனை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • செல்போன்களில் இருந்து வாட்ஸ்அப் வழியாக ஜாபர் சாதிக் யார்-யாருக்கு என்னென்ன தகவல்களை அனுப்பி உள்ளார் என்பது பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
    • ஜாபர் சாதிக்கின் காவல் முடிவடைந்ததும் போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

    சென்னை:

    தி.மு.க. அயலக அணியில் பொறுப்பு வகித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை முதலில் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணை முடிந்து நேற்று ஜாபர் சாதிக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் மேலும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். இதற்கு அனுமதி கிடைத்தது.

    ஜாபர் சாதிக்கின் இமெயிலில் உள்ள விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தப்பட இருப்பதாக கூறிய அதிகாரிகள் மேலும் 3 நாட்கள் விசாரணைக்கு அனுமதி கேட்டிருந்தனர்.

    இதன்படி ஜாபர் சாதிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் 7 செல்போன்களை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது. அந்த செல்போன்களில் இருந்து இ-மெயில் மூலமாக ஜாபர் சாதிக் பல்வேறு தகவல்களை வெளிநபர்களுக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

    அதுதொடர்பான தகவல்களை செல்போன்களில் இருந்து அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள். இதன் மூலமாக ஜாபர் சாதிக்குடன் போதைப்பொருள் கடத்தலில் யார்-யாருக்கு தொடர்புள்ளது என்பதை கண்டறிய டெல்லி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    செல்போன்களில் இருந்து வாட்ஸ்அப் வழியாக ஜாபர் சாதிக் யார்-யாருக்கு என்னென்ன தகவல்களை அனுப்பி உள்ளார் என்பது பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த சினிமா பிரபலங்கள், அரசி யல் பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்தி வரும் இந்த செல்போன் தகவல்கள் சேகரிப்பு போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இதனால் ஜாபர் சாதிக்கின் காவல் முடிவடைந்ததும் போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

    • போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி இருக்கும் ஜாபர் சாதிக் முதலமைச்சரின் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து உள்ளார் என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்தார்.
    • போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது குற்றம் சாட்டி இருந்தார்.

    சென்னை:

    தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    டெல்லியில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

    ஜாபர் சாதிக்குடன் சினிமா, அரசியல் வட்டாரத்தில் பலர் நெருக்கமாக இருந்திருப்பதாக கூறியிருக்கும் அவர்கள் அதில் தொடர்புடைய நபர்களையும் விசாரணைக்காக அழைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது இருவரும் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

    சென்னையில் கடந்த 8-ந்தேதி பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, போதைப்பொருட்களை தடுப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறி விட்டார் என்றும் எனவே அவர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.


    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி இருக்கும் ஜாபர் சாதிக் முதலமைச்சரின் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து உள்ளார் என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்தார்.

    போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது குற்றம் சாட்டி இருந்தார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகிய இருவர் மீதும் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் வக்கீல் தேவராஜன் சென்னை மாநகர குற்றவியல் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிக்க முதலமைச்சர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். போதைப்பொருள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை இருவரும் பேசியுள்ளனர். எனவே அவர்கள் மீது கிரிமினல் மற்றும் அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    • ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
    • ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் தலைமறைவாக உள்ளனர்.

    சென்னை :

    டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய சோதனையின் போது போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூளையாகச் செயல்பட்ட ஜாபர் சாதிக் தலைமறைவான நிலையில் அவரை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான மைதீன், சலீம் ஆகியோருக்கு எதிராக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

    ரூ.2000 கோடி போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது சகோதரர்கள் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக விளக்கமான அறிக்கையை கவர்னரிடம் அளித்துள்ளோம்.
    • போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கவர்னரிடம் வலியுறுத்தினோம்.

    கிண்டி:

    கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது அவருடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் உடன் இருந்தனர்.

    கவர்னரை சந்தித்து மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    * தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    * போதைப்பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. இதே நிலைமை தொடர்ந்தால் தமிழகம் சீரழிந்துவிடும்.

    * போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக விளக்கமான அறிக்கையை கவர்னரிடம் அளித்துள்ளோம்.

    * போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கவர்னரிடம் வலியுறுத்தினோம்.

    * போதைப்பொருள் புழக்கத்திற்கு திமுக தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

    • குஜராத், மகாராஷ்டிராவில் தான் அதிக போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • தி.மு.க. மீது அடிப்படை ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை :

    சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தி.மு.க.வை களங்கப்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. செய்யும் அரசியல் எடுபடாது.

    * வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை பயன்படுத்திய பா.ஜ.க. தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவையும் பயன்படுத்துகிறது.

    * பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க.வும் கைகோர்த்து செயல்படுகிறது.

    * தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. போதைப்பொருள் பயன்படுத்துவதை முழுமையாக தடுத்து வைத்துள்ளோம்.

    * குஜராத், மகாராஷ்டிராவில் தான் அதிக போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    * தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல.

    * தி.மு.க. மீது அடிப்படை ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    * போதைப்பொருள் தொடர்பான புகார் எழுந்தவுடனே ஜாபர் சாதிக்கை தி.மு.க.வில் இருந்து நீக்கிவிட்டோம். அவருக்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக தான் அரசியலுக்கு வந்துள்ளேன்.
    • மாற்றத்தை விரும்புபவர்கள் பாரதிய ஜனதா கட்சி பக்கம் வாருங்கள்.

    கோவை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மாற்றத்தை விரும்புபவர்களுக்கான ஒரே கட்சி பாரதிய ஜனதா மட்டும் தான். ஊழல் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும், தி.மு.க. இல்லாத ஒரு ஆட்சி தமிழகத்தில் வர வேண்டும் என்றால் அது பாரதிய ஜனதா கட்சியால் தான் முடியும் என்பதை மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். தமிழகத்தில் நிச்சயமாக ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி களமிறங்கி இருக்கிறது. அதனை 2024 பாராளுமன்ற தேர்தலில் நடத்திக் காட்டுவோம்.

    தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக தான் அரசியலுக்கு வந்துள்ளேன். என்னுடைய கொள்கையில் நான் உறுதியாக உள்ளேன். எம்.பி.யாக வேண்டும், எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. வருகின்ற காலங்களில் அதனை நீங்கள் பார்ப்பீர்கள்.

    2026 சட்டசபை தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல். அதற்கு தான் எனது முழு கவனமும் உள்ளது. மாற்றத்திற்கான அடித்தளமாக 2026 ஆண்டு இருக்கும்.

    நாங்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு எப்போதோ தயாராகி விட்டோம். தேர்தலை எதிர்நோக்கி காத்து கொண்டு இருக்கிறோம். பாரதிய ஜனதாவை பொறுத்தவரை 2024 பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் சரித்திர தேர்தலாக இருக்கும். இதனை உறுதியாக நம்புகிறோம்.

    பாரதிய ஜனதா 25 சதவீத வாக்கு வங்கியை எப்போதோ தாண்டி விட்டோம். 2024 தேர்தலை பாருங்கள். மாற்றத்திற்கான அறிகுறி அதில் இருக்கும். மாற்றத்தை விரும்புபவர்கள் பாரதிய ஜனதா கட்சி பக்கம் வாருங்கள். எல்லோரும் சேர்ந்து மாற்றத்தை கொண்டு வருவோம்.


    நடிகர் கமல்ஹாசன் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். தற்போது அவர் தி.மு.க. பக்கம் போய் இணைந்துள்ளார். இதுபற்றி மக்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு வருகிறார்கள். அரசியல் என்பது கடினமான ஒரு வேலை. அதிலும் கொள்கை அரசியல் என்பது இன்னும் கடினமானது. கொள்கையை விடாமல் அந்த கொள்கையிலேயே பயணம் செய்ய வேண்டும் என்பது மிகவும் கடினமானது. இதனை கடைபிடிக்க முடியாமல் கமல்ஹாசன் தி.மு.க.வோடு இணைந்திருப்பது நாம் அனைவருக்கும் தெரிகிறது. இது கமல்ஹாசனின் முடிவு. சினிமாத்துறையில் இந்த அளவுக்கு தி.மு.க.வின் ஆதிக்கம் உள்ளது. கமல்ஹாசன் தன்னை நம்பி வந்தவர்களை ஏமாற்றி உள்ளார். தி.மு.க. கொடுக்கும் மாநிலங்களவை எம்.பி. சீட்டில் நடிகர் கமல்ஹாசன் பாராளுமன்றம் செல்ல உள்ளது வேதனையை தருகிறது. நிர்பந்தத்தால் தி.மு.க. நிலைப்பாட்டிற்கு கமல்ஹாசன் சென்றிருப்பது கவலை அளிக்கிறது.

    நடிகர்கள் எல்லா பிரச்சனைக்கும் குரல் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நடிகர்கள் எதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். அவர்கள் என்ன சமூக ஆர்வலராக இருக்கிறார்களா, தொண்டு நிறுவனம் நடத்துகிறார்களா அல்லது உங்களை போன்று என்னை போன்று சாமானிய வாழ்க்கை நடத்துகிறார்களா, ரோட்டில் போய் மக்களின் கஷ்டத்தை பார்க்கிறார்களா?

    அதனால் நீங்கள் எதற்கெடுத்தாலும் நடிகர்கள் தான் முதலில் பேச வேண்டும் என்ற மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும். நடிகர்கள் ஒரு சிறு வட்டத்துக்குள் வாழ்கிறார்கள். ஒரு கட்டம் போட்டு அந்த கோட்டுக்குள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவ்வளவு தான்.

    இன்று சமுதாயத்தில் யார் பணி செய்கிறார்களோ அவர்களது குரல் கம்பீரமாக ஒலிக்க வேண்டும் என்று சாமானிய மக்கள் விரும்புகிறார்கள். அதனால் நடிகர்களின் வேலை நடிப்பது. அவர்கள் நடிக்கிறார்கள், பிடித்து இருந்தால் கைதட்டி விட்டு அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    கேரளாவில் பிரபல நடிகராக மம்முட்டி இருக்கிறார். அவர் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று கேட்டனர். அதற்கு அவர் அரசியல் வேறு, சினிமா வேறு என்று கூறினார். சினிமாவை கைதட்டி பார்ப்பவர்கள், அரசியலுக்கு வரும்போது கைதட்டுவார்களா என்று தெரியாது. அதனால் ஒதுங்கி இருப்பது நல்லது என்றார். ஆந்திராவிலும் இதைப்போன்று நிறைய நடிகர்கள் அரசியலுக்கு வந்தனர். தற்போது அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்கள். தற்போது அதற்கு கமல்ஹாசன் ஒரு சிறந்த உதாரணம். அரசியல் என்பது முழு நேரம் செய்யக்கூடிய ஒரு பணி. நான் அமெரிக்கா போவேன், சூட்டிங் போவேன். ஓய்வு எடுப்பேன், 4 நாள் அரசியல் செய்வேன் என்பது சாத்தியமில்லா ஒன்று. சமுதாய பிரச்சனைகளுக்கு எல்லாம் அவர்கள் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

    தி.மு.க. ஆட்சியில் ஒரு இடத்தில் டெக் பார்க் அமைக்கப் போகிறார்கள் என்றால் அந்த இடம் அருகே அவர்கள் இடம் வாங்கி இருக்கிறார்கள் என்று அர்த்தம். இதனால் தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சி என்பது கேலிக்கூத்து.

    போதைப்பொருளால் கிடைத்த பணத்தின் மூலம் ஜாபர் சாதிக் பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டுள்ளார். போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து மக்கள் முன் அவர்களை நிறுத்த வேண்டும்.

    போதைப்பொருளுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பானது நடைபெற்றது.
    • கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

    சென்னை:

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.

    கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பானது நடைபெற்றது. அப்போது கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

    சந்திப்பின் போது, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு என்றும் சமீபத்தில் பறிமுதலான போதைப்பொருள்களின் விவரங்கள் குறித்த பட்டியலையும் கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.

    • நாட்டில் பணத்தை மோசடி செய்து வைத்துள்ள பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கட்சி நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • பஸ்களில் ஓரளவாவது பயணிகள் வருகை இருந்தால் மட்டுமே பஸ்களை இயக்க முடியும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே புத்தேரி ஊராட்சி பகுதியில் சாலை பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    போதை பொருட்களை பொருத்தமட்டில் அதை ஒழிக்க வேண்டும் என்பதில் மாநில அரசு மிக உறுதியாக இருக்கிறது. அதற்கு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். குமரி மாவட்டத்தில் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஏராளமான கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் இந்த விவகாரத்தில் எந்த சமரசமும் இன்றி குற்றச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    எதிர்க்கட்சிகளை முடக்குவதில் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. மீண்டும் அதை நிரூபிக்கும் வகையில் அவர்களின் செயல்பாடு இருந்து வருகிறது. இந்த நாட்டில் பணத்தை மோசடி செய்து வைத்துள்ள பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கட்சி நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எதிர்க்கட்சிகளை குறிவைத்து அவர்கள் தாக்கி வருகிறார்கள். இது ஜனநாயகத்தை படுகுழிக்கு கொண்டு செல்லும் செயலாகும். குமரி மாவட்டத்தில் ஏராளமான புதிய வழித்தடங்களில் புதிதாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. ஒரு சில வழித்தடங்களில் பஸ்களை இயக்கும்போது அதற்கு போதுமான வரவேற்பு இல்லாத நிலை இருந்து வருகிறது. பஸ்களில் ஓரளவாவது பயணிகள் வருகை இருந்தால் மட்டுமே பஸ்களை இயக்க முடியும். கோவில் திருவிழாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×