search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223297"

    • வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிவது அதிகமாக காணப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள் புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

    ஊட்டி,

    முதுமலை புலிகள் காப்ப கத்தில் காட்டுயானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள், செந்நாய்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது.

    கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும், வறட்சி ஏற்பட்டதாலும் வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிவது அதிகமாக காணப்பட்டது. மேலும் வனவிலங்குகள் வேறு பகுதிக்கும் இடம் பெயர்ந்தும் வந்தன.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முதுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமானது முதல் கன மழையும் பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் பசுமை திரும்பி உள்ளது.இதன் காரணமாக தற்போது முதுமலை பகுதிகளில் வனவி லங்குகளின் நட மாட்டம் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் முதுமலை. புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் புலி ஒன்று புல்லில் படுத்து இருந்தது. இதை அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் வீடியோ எடுத்தனர்.

    நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து வீடியோவுக்கு போஸ் கொடுத்த புலி, பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதனை சுற்றுலா பயணிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது மழை பெய்துள்ளதால் வனவிலங்குகள் சாலையை யொட்டி வருகின்றனர். எனவே கோடை சீசனை அனுபவிக்க நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், முதுமலை சாலைகளில் தங்களது வாகனங்களை அதிவேகமாக இயக்கக்கூடாது. வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைக்கக்கூடாது. வனவிலங்குகளை தொந்தரவு செய்ய கூடாது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • மகா சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
    • நாட்டுப்புற கலைஞர்கள் புலி வேஷ நடனம் ஆடியவாறு சென்றனர்.

    கோத்தகிரி கடைவீதியில் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி தினமும் பல்வேறு உபயதாரர்கள் சார்பில், திருவீதி உலா நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் திருவிழாவின் 15-வது நாளான நேற்று காலை 9 மணிக்கு டானிங்டன் மகா சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    இதில் ஏராளமான பெண்கள் பால்குடங்களை தலையில் ஏந்தியவாறு கடைவீதி மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இதில் ஏராளமான நாட்டுப்புற கலைஞர்கள் பொய்க்கால் நடனம், புலி வேஷ நடனம் ஆடியவாறும், அம்மன் வேடமணிந்தும் ராம்சந்த் சதுக்கம், காமராஜர் சதுக்கம், பஸ் நிலையம் வழியாக மாரியம்மன் கோவில் முக்கிய சாலைகள் வழியாக சென்றடைந்தனர்.

    மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜை நடந்தது. மாலை 3 மணிக்கு கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஓதுவார் மூர்த்தி, தேவார இசைமணி ஞானசம்பந்தன் ஓதுவார் கலந்துகொண்டு தேவார திருப்புகழ் பண்ணிசை நிகழ்ச்சியை நடத்தினர். மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தாமரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர் 

    • பலத்த மழையால் சாலையில் மண் திட்டுகள் சரிந்தது.
    • வாகனங்கள் மரம் மண் திட்டுக்கள் சாலையில் விழுந்ததால், அணிவகுத்து நின்றது.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர், முள்ளி, வெள்ளியங்காடு மார்க்கமான கோவை மூன்றாவது மாற்று பாதை உள்ளது.

    இவ்வழித்தடத்தில் கெத்தை ஏழாவது கொண்டை ஊசி வளைவில் நேற்று பெய்த பலத்த மழையால் சாலையில் மண் திட்டுகள் சரிந்தது. மேலும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் மஞ்சூரில் இருந்து கோவை சென்ற பேருந்தும் கோவையிலிருந்து மஞ்சூர் நோக்கி வந்த பேருந்துகளும் பள்ளி பேருந்து தனியார் வாகனங்கள் சுற்றுலா வாகனங்கள் என பல வாகனங்கள் மரம் மண் திட்டுக்கள் சாலையில் விழுந்ததால், அணிவகுத்து நின்றது.

    நெடுஞ்சாலை துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த நெடுஞ்சாலை துறையினர் மண் திட்டுகளையும் மரத்தையும் அப்புறப்படுத்தினார்கள் பின்பு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

    • கர்நாடகா மாநில முன்னாள் காவல்துறை டி.ஐ.ஜி சங்கர் பிகாரியும் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
    • கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 110 பக்தர்கள் பிரதிநிகளாக பங்கேற்றனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் உதகை தீட்டுகல் ஜே.எஸ்.எஸ் பள்ளி அரங்கில் மைசூர் சுத்தூர் மடம் சார்பில் கோடைகால ஆன்மீக கலாச்சார பயிற்சி முகாமின் நிறைவு விழா நடைபெற்றது. விழாவுக்கு சிறப்பு விருந்தினராக மைசூர் சுத்தூர் மடம் தலைவர் ஜகத்கு ரு ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர மகா ஸ்வாமிகள் பங்கேற்று சிறப்புரை யாற்றினார்.

    இதில் கர்நாடகா மாநில முன்னாள் காவல்துறை டி.ஐ.ஜி சங்கர் பிகாரியும் பங்கேற்று சிறப்புரையா ற்றினார்.இந்த கோடைகால ஆன்மீக பயிற்சி முகாம் 6 நாட்கள் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆன்மீக சிறப்பு பயிற்சி பெற்ற பேச்சாளர்கள் ஆன்மீக சொற்பொழிவு, நல்ல ஆலோசனைகளை வழங்கினர். இதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 110 பக்தர்கள் பிரதிநிகளாக பங்கேற்றனர். பக்தி சொற்பொழிவுகள், பிரார்த்தனை, தியானம், யோகா, பாரம்பரிய விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.ஆன்மீக பயிற்சி நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜே.எஸ்.எஸ்.கல்லூரி முதன்மை அலுவலர் பசவன்னா, மோகன், ஜே.எஸ்.எஸ். பள்ளி பொறுப்பாளர் சிவகுமார், ஜே.எஸ்.எஸ் கல்லூரி பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • அழுகிய நிலையில் இருந்த சுமார் 12 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
    • 5 பழக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் செயற்கையாக கார்பைடு கற்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களை பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றனவா என்பதை கண்டறிந்து, இயற்கையான முறையில் பழுத்த பழங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன என்பதை அதிகாரிகள் உறுதி செய்யுமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ், உணவுப் பாதுகாப்பு அலுவலர் சிவராஜ், ஊட்டி வட்டாட்சியர் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய குழுவினர், ஊட்டி பழ மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால் அழுகிய நிலையில் இருந்த சுமார் 12 கிலோ மாம்பழங்கள், 5 கிலோ வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் 5 பழக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப் பட்டது.

    இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறும்போது, செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மற்றும் இதர பழங்களை உண்ணும்போது வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி போன்ற உடல் உபாதைகளால் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

    எனவே செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்யும் பழ வியாபாரிகள் மீது உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    • முதல்-அமைச்சரின் காலை உணவு, திட்டமானது 2 கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.
    • முதற்கட்டமாக 01.06.2023 அன்று குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய 2 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சி கள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் (ஆதிதிராவிடர் பள்ளிகள் உட்பட) 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு, திட்டமானது 2 கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.

    இந்த திட்டமானது நமது மாவட்டத்தில் முதற்கட்டமாக 01.06.2023 அன்று குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய 2 வட்டாரங்களிலும், இரண்டாம் கட்டமாக 15.07.2023 அன்று ஊட்டி வட்டாரத்திலும் செயல்படுத்தப்படும்.

    இந்த திட்டத்திற்கு என ஊராட்சி, பேரூராட்சி அளவில் முதன்மை குழு ஊராட்சி மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் ஒரு பிரதிநிதி, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பின் அலுவலக நிர்வாகிகளில் ஒருவரை கொண்டு அமைக்கப்படும்.

    மேலும், மகளிர் சுய உதவிக் குழு, ஊராட்சி, பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்களை தேர்வு செய்திடும் போது குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ள உறுப்பினராகவும், அதே பகுதியை சேர்ந்தவராகவும், குறைந்த பட்சம் கல்வி தகுதியாக 10-ம் வகுப்பு வரை படித்தவராகவும், சமையல் திறன் கொண்டவராகவும் உறுப்பினர் பெயரில் ஆன்ராயிடு மொபைல்போன் வைத்திருப்பவராகவும், அவரது குழந்தைகள் அதே பள்ளியில் படிப்பவராகவும் இருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற முதன்மை பயிற்று நர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவு துறை மூலம் கொள்முதல் செய்யப்படும். இத்திட்டத்தினை நமது மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திட அனை வரும் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) பாலகணேஷ், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வகுமரன், கோட்டாட்சியர்கள் துரைசாமி (ஊட்டி), முகம்மது குதுர துல்லா(கூடலூர்), வருவாய் உதவி இயக்குநர்கள் சாம்சாந்த குமார்(ஊராட்சிகள்), இப்ராகிம் ஷா(பேரூ ராட்சிகள்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோல்டிசாராள்(சத்துணவு), மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ், உதவி திட்ட அலுவலர்கள் ஜெயராணி, சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கூடலூர்,

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நீலகிரி கிழக்கு சரிவு சரகம் தெங்குமரஹடா கல்லாம்பாளையம் வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண் காட்டு யானை இறந்து கிடந்தது.

    இதைத்தொடர்ந்து புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் மணி வெங்கடேஷ் மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    பின்னர் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்த யானைக்கு 50 வயது இருக்கும். வயது முதிர்வு காரணமாக இறந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் மசினகுடி சரகத்துக்கு உட்பட்ட அவரல்லா பிரிவு மாவனல்லா பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை இறந்து கிடந்தது. இதைத்தொடர்ந்து வனச்சரகர் பாலாஜி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் காட்டு யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

    பின்னர் வயது முதிர்வு காரணமாக காட்டு யானை இறந்தது என தெரிய வந்தது. பின்னர் முக்கிய உடற்பாகங்கள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து பிற வன உயிரினங்களுக்கு இரையாகும் வகையில் யானையின் உடல் அப்பகுதியில் விடப்பட்டது. இதுகுறித்து மசினகுடி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானை தொடர்ந்து உயிரிழந்து வருவது வன ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    • நல்லதம்பி டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • ரூ.2 லட்சம் நகைகள், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் திருட்டு போனது.

    ஊட்டி,

    ஊட்டி தலைகுந்தா பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 30). இவர் அங்கு டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். தனது பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் நல்லதம்பியின் சகோதரி விபத்தில் சிக்கியதால், அவரை பார்ப்பதற்காக பெற்றோருடன் உடுமலைக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நல்லதம்பி உள்ளே சென்று பார்த்தார். அப்போது ரூ.2 லட்சம் நகைகள், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் திருட்டு போனது. இதுகுறித்து அவர் புதுமந்து போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் ஊட்டி தலைகுந்தாவை சேர்ந்த டிரைவர் சாகுல் ஹமீது என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்லட்டி கிராம சாலையினை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
    • ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடத்தினையும் திறந்து வைத்தார்.

    கோவை,

    நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடுஹட்டி ஊராட்சி பகுதியில், ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்லட்டி கிராம சாலையினையும், கெங்கரை ஊராட்சி பிக்கட்டி கிராமத்தில், ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடத்தினையும், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

    பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    குறிப்பாக, ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், நடுஹட்டி ஊராட்சிப்பகுதியில் 2021-2022 -ம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பாண்டியன் நகர் மற்றும் குண்டுபெட் காலனி பகுதியில் ரூ.26.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடமும், 2022-2023-ம் ஆண்டில் ரூ.12 லட்சம் மதிப்பில் கல்லட்டி சாலை பணிகள், ரூ.5 லட்சம் மதிப்பில் பையங்கியில் சமையற் கூடத்தினையும், கட்டபெட்டு பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பில் கலர்செட், பெப்பேனில் ரூ.5 லட்சம் மதிப்பில் சமையற்கூடத்தினையும் மற்றும் இதர திட்டங்களாக 39 பணிகள் ரூ.1.13 கோடி மதிப்பிலும், 2022-2023 ஆம் ஆண்டிற்கு 16 பணிகள் ரூ.59 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் இரண்டு ஆண்டுகளில் இவ்வூராட்சி பகுதியில் ரூ.1.72 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது.

    மேலும், கோத்தகிரி பேரூராட்சி பகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கடந்த ஆண்டு ரூ.46 லட்சமும், நடப்பு ஆண்டில் ரூ50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், நடுஹட்டி ஊராட்சியில் 14 -வது மத்திய மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் தரைமட்ட நீர் தேக்க தொட்டி அருகில் கட்டப்பட்டு வரும் பாதுகாப்பு சுவர், கோத்தகிரி பேரூராட்சி பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ், குரூஸ்லி முதல் குண்டுபெட் பிரிவு வரை ரூ.96.20 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்படவுள்ள சாலை பணியினையும், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராஹிம்சா கோத்தகிரி வட்டாட்சியர் காயத்ரி, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தன், அனிதா, கோத்தகிரி பேரூராட்சி (செயல் அலுவலர்) மணிகண்டன், கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, ஊராட்சித்தலைவர்கள் கிருஷ்ணன் (நடுஹட்டி), முருகன்(கெங்கரை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தினமும் சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு வருகின்றனர்.
    • காரில் இருந்த வாலிபர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

    கூடலூர்,

    கோடை சீசன் தொடங்கி விட்டதால் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பல மணி நேரம் தாமதமாக தங்களது ஊர்களுக்கு செல்லும் நிலை காணப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக கேரள மாநிலம் வயநாடுக்கு சுற்றுலா பயணிகள் கார் சென்று கொண்டிருந்தது. பாடந்தொரை பஜார் அருகே வந்தபோது சாலையோர தடுப்பில் கார் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த வாலிபர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தேவர்சோலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் வருவது வாடிக்கையாகி விட்டது.
    • குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சிறுத்தை நாயை வேட்டையாடியதால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் பசுந்தீவன தட்டுப்பாடு, அதிகரித்து வரும் கட்டிடங்களால் வனப்பகுதி பரப்பளவு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் சில நேரங்களில் வனவிலங்கு-மனித மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

    இந்தநிலையில் ஊட்டி மிஷ்னரி ஹில் புதிய ரேஷன் கடை பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை சுற்றித்திரிந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. ஊட்டியை சேர்ந்த லாரன்ஸ் என்பவரது வீட்டில் சங்கிலியால் கட்டி போடப்பட்டு இருந்த நாயை வேட்டையாடி விட்டு சென்றது.

    இந்தநிலையில் நேற்று காலையில் அப்பகுதி மக்கள் பார்த்தபோது, சங்கிலியால் கட்டி போட்ட நாய் வேட்டையாடப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் அருகில் சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகி இருந்தது. இதை அவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

    இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சிறுத்தை நாயை வேட்டையாடி உள்ளதால், அப் பகுதி பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊட்டி தமிழகம் சாலையில் வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை புகுந்தது. அங்குள்ள சுற்றுச்சுவரை தாண்டி குதித்து வீட்டுக்குள் நுழைந்து, வீட்டு முன்பு வராண்டா பகுதியில் படுத்து கிடந்த வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்வி சென்றது குறிப்பிடத்தக்கது.

    • பஸ் பழுதாகி நின்றதால், பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர்.
    • கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் சரக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.

     கூடலூர்,

    கேரளா-கர்நாடகா மற்றும் தமிழகம் என 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் சரக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல் கேரள மாணவர்கள், பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக கர்நாடகாவுக்கு பயணம் செய்து வருகின்றனர்.

    தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில வாகனங்கள் கூடலூர்-முதுமலை புலிகள் காப்பகம் வழியாக கர்நாடகாவுக்கு சென்று திரும்புகிறது. இந்தநிலையில் நேற்று திருச்சூரில் இருந்து 65 பயணிகளுடன் மைசூருவுக்கு கேரள அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது தமிழக-கர்நாடகா எல்லையான கக்கநல்லா செல்லும் சாலையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் பஸ் திடீரென பழுதடைந்து நடுக்காட்டில் நின்றது.

    இதனால் பழுதை சரிசெய்யும் பணியில் டிரைவர், கண்டக்டர் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதனால் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் மற்றும் பெண்கள் கைக்குழந்தைகளுடன் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் பயணிகளை வேறு பஸ்களில் அனுப்புவதற்கான நடவடிக்கையில் டிரைவர், கண்டக்டர் ஈடுபட்டனர். மேலும் நடுவழியில் பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

    அடர்ந்த வனப்பகுதி என்பதால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வர வாய்ப்பு இருந்ததால், கைக்குழந்தைகளுடன் நின்றிருந்த பெண்கள், பயணிகள் அவதி அடைந்தனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து வாகனங்கள் அதிகமாக இயக்கப்படுவதால் பஸ் தாமதமானது. தற்போது முதுமலை வனப்பகுதிக்குள் பழுதாகி நின்று விட்டதால் குழந்தைகளுடன் பரிதவிக்க வேண்டிய நிலை உள்ளது என்றனர். இந்தநிலையில் கர்நாடகா மற்றும் கேரள பஸ்களில் பயணிகள் மைசூருவுக்கு மிக தாமதமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ×