search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி அருகே குடியிருப்புக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை
    X

    ஊட்டி அருகே குடியிருப்புக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை

    • உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் வருவது வாடிக்கையாகி விட்டது.
    • குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சிறுத்தை நாயை வேட்டையாடியதால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் பசுந்தீவன தட்டுப்பாடு, அதிகரித்து வரும் கட்டிடங்களால் வனப்பகுதி பரப்பளவு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் சில நேரங்களில் வனவிலங்கு-மனித மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

    இந்தநிலையில் ஊட்டி மிஷ்னரி ஹில் புதிய ரேஷன் கடை பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை சுற்றித்திரிந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. ஊட்டியை சேர்ந்த லாரன்ஸ் என்பவரது வீட்டில் சங்கிலியால் கட்டி போடப்பட்டு இருந்த நாயை வேட்டையாடி விட்டு சென்றது.

    இந்தநிலையில் நேற்று காலையில் அப்பகுதி மக்கள் பார்த்தபோது, சங்கிலியால் கட்டி போட்ட நாய் வேட்டையாடப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் அருகில் சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகி இருந்தது. இதை அவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

    இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சிறுத்தை நாயை வேட்டையாடி உள்ளதால், அப் பகுதி பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊட்டி தமிழகம் சாலையில் வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை புகுந்தது. அங்குள்ள சுற்றுச்சுவரை தாண்டி குதித்து வீட்டுக்குள் நுழைந்து, வீட்டு முன்பு வராண்டா பகுதியில் படுத்து கிடந்த வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்வி சென்றது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×