search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்சரிக்கை"

    • ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் தானாகவோ அல்லது உணவுக்கான கட்டணத்துடன் இணைத்தோ சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது,
    • 1915 என்ற தேசிய நுகர்வோர் உதவிஎண் மூலமாகவோ அல்லது தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் மொபைல் செயலிலோ மூலமாகவோ புகார்அளிக்கலாம்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் சேவைக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் நுகர்வோர் உரிமை மீறல்களை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் தானாகவோ அல்லது உணவுக்கான கட்டணத்துடன் இணைத்தோ சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது, அத்துடன் வேறு பெயர்களிலும் சேவைக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.சேவைக் கட்டணம் செலுத்துமாறு வாடிக்கையாளரை ஓட்டல்கள் நிர்பந்திக்கக்கூடாது. சேவைக் கட்டணம் என்பது விருப்பத்தின் பேரிலானது அல்லது நுகர்வோரின் விருப்பத்தை சார்ந்தது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

    சேவைக் கட்டணத்தின் அடிப்படையில் சேவைகளை வழங்குவதில் எந்தத் தடையும் நுகர்வோர் மீது விதிக்கக்கூடாது.மேலும் உணவு கட்டணத்துடன் சேர்த்தோ அல்லது மொத்த தொகைக்கு ஜி.எஸ்.டி. விதிப்பதன் மூலமோ சேவைக் கட்டணத்தை வசூலிக்க முடியாது. இந்த வழிகாட்டுதல்களை மாறாக எந்தவொரு உணவகமோ, ஓட்டலோ சேவைக் கட்டணம் வசூலித்தால் பில் கட்டணத்தில் இருந்து அதை நீக்குமாறு சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் வாடிக்கையாளர் அறிவுறத்தலாம்.

    அத்துடன் 1915 என்ற தேசிய நுகர்வோர் உதவிஎண் மூலமாகவோ அல்லது தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் மொபைல் செயலிலோ மூலமாகவோ புகார்அளிக்கலாம்.விரைவான குறைதீர்வு நடவடிக்கைகளுக்கு நுகர்வோர் ஆணையத்தின் இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம். மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் அளிக்கலாம். மேலும் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு நுகர்வோர் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கு நேரடியாக புகார் அளிக்கலாம்.

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தால் வெளியிட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக கடைபிடிக்குமாறும், இதனை மீறும் உணவகங்கள் மீது சட்டபடி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    மேலும் உணவகங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் நுகர்வோர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றிடவும் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    • பல தரப்பினரும் அவதிக்குள்ளாகின்றனர்.
    • முழுமையாக பணியை முடித்த பின் அடுத்த 100 மீட்டர் அளவுக்கு பணிகளை துவங்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அம்ரூத் திட்டத்தில் 4வது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் ஆகிய இரு முக்கிய பணிகள் பெரும்பாலான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வகையில் குமார் நகரிலிருந்து, வளையன்காடு, சாமுண்டிபுரம் வழியாக ஏறத்தாழ 3.5 கி.மீ., தொலைவுக்கு இப்பணிகள் நடக்கிறது.

    இதில் பாதாள சாக்கடை குழாய் பதித்தல், வீட்டு இணைப்பு வழங்குதல், 4வது குடிநீர் திட்டத்தில் பிரதான குழாய் பதித்தல், சப்ளை குழாய் பதித்தல் ஆகிய 4 பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2 ஆண்டாக இப்பணி ஆமை வேகத்தில் மேற்கொள்ளப்படுகிறது.மாநகராட்சி கூட்டத்தில் பேசிய 4 கவுன்சிலர்கள், இவ்வாறு ரோடு மோசமாக உள்ளதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பஸ்களும் இயக்கப்படுவதில்லை. பல தரப்பினரும் அவதிக்குள்ளாகின்றனர் என்றனர்.

    இதையடுத்து மேயர் தினேஷ்குமார், கமிஷனர் கிராந்திகுமார் ஆகியோர் ஆய்வு செய்ததில், டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் அப்பணியை வேறு ஒருவரிடம் கொடுத்ததும், இதனால் பணிகள் முறையாக நடக்காததும் தெரிந்தது. ஆகஸ்டு மாத இறுதிக்குள் பணிகள் முழுமையாக முடித்து ஒப்படைக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறின்றி தலா 100 மீட்டர் அளவுக்கு முழுமையாக பணியை முடித்த பின் அடுத்த 100 மீட்டர் அளவுக்கு பணிகளை துவங்க வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் பணி முடியாவிட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என ஒப்பந்ததாரரிடம் மேயர், கமிஷனர் ஆகியோர் எச்சரித்தனர்.

    • தென் மேற்கு பருவ மழை காலத்தில், அமராவதி அணை நிரம்பியுள்ளது.
    • மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    மடத்துக்குளம்:

    உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஆற்றின் வழியோர கிராமங்களின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும் உள்ளது. மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம், மூணாறு, தலையாறு, மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. கடந்த ஒரு வாரத்தில் அணை நீர்மட்டம் 15 அடி வரை உயர்ந்தது.கடந்த 14ந் தேதி, முழு கொள்ளளவை எட்டும் நிலையில் ஆற்றின் வழியோரத்திலுள்ள இரு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. 15-ந் தேதி, காலை 8 மணி முதல் உபரி நீர், பிரதான மதகு வழியாக ஆற்றிலும், பிரதான கால்வாயிலும் திறக்கப்பட்டு வருகிறது.

    ஜூன் முதல் மே வரையிலான நீர் ஆண்டில், முதல் முறையாக தென் மேற்கு பருவ மழை காலத்தில், அமராவதி அணை நிரம்பியுள்ளது. கடந்தாண்டு அணை நிரம்பிய போது உச்ச அளவாக வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி வெளியேற்றப்பட்டது.ஆனால், நடப்பாண்டு உச்ச அளவாக 12 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அணை பாதுகாப்பு கருதி உபரியாக வெளியேற்றப்படுகிறது.இவ்வாறு கடந்த 4 நாட்களாக அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில்நீர்வரத்தும், வெளியேற்றமும் குறைந்துள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, அணை நீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 88 அடியாகவும், நீர்இருப்பு மொத்த கொள்ளளவான 4,047 மில்லியன் கனஅடியில், 3,903.98 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது.

    அணையிலிருந்து வினாடிக்கு 6,500 கனஅடிக்கு குறைவாக 24 மணி நேரமும் நீர் திறக்கப்பட்டால், வெள்ள அபாய எச்சரிக்கையின் நிறம் நீலமாக இருக்கும். இதனால் ஆற்றின் வழியோரத்திலுள்ள பகுதிகள் பாதிக்காது.இதே சமயத்தில் வினாடிக்கு 6,500 கனஅடிக்கு மேல் திறக்க ஒரு மணி நேரம் திறக்கப்பட்டாலும், ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுகிறது. இதனால் மண்டலம் 'ஏ' வில் வழியோரத்திலுள்ள கல்லாபுரம், எலையமுத்தூர், கொழுமம் ஆகிய கிராமங்கள் பாதிக்கும் வாய்ப்புள்ளது.அதே போல் 13 ஆயிரம் கனஅடிக்கு மேல் அரை மணி நேரத்திற்கு கூட நீர் திறக்கப்பட்டாலும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுகிறது. இதனால் மண்டலம், 'ஏ' மற்றும் 'பி' என இரு பகுதிகளும் பாதிக்கும் வாய்ப்புள்ளது.

    ஆற்றின் வழியோர கிராமங்களான, கல்லாபுரம், எலையமுத்தூர், கொழுமம் மட்டுமின்றி, மடத்துக்குளம், கணியூர், காரத்தொழுவு ஆகிய கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களில் ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தும் என அறிவிக்கப்படுகிறது. அணையிலிருந்து 20 ஆயிரத்து 175 கன அடி மற்றும் அதற்கு மேல் திறக்கப்பட்டால் வழியோரத்திலுள்ள உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், அரவக்குறிச்சி, கரூர் என அனைத்து வழியோர கிராமங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதாக எச்சரிக்கை விடப்படுகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அமராவதி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் போது, வெளியேற்றப்படும் நீரின் அளவை பொறுத்து, பாதிப்புகள் அறியப்படுகிறது. இதற்காக வண்ண எச்சரிக்கை குறியீடுகள் உள்ளன.அதன் அடிப்படையில், வழியோர கிராமங்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் வாயிலாக எச்சரிக்கை வழங்கப்படுகிறது. பொதுவாக, வெள்ள காலங்களில் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ போகக்கூடாது. வழியோரத்தில், ஆற்றின் கரையில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர வேண்டும். கால்நடைகள், விவசாய பொருட்கள் இருந்தால், அவற்றையும் அகற்றிக்கொள்ள வேண்டும்.மழையின் தீவிரத்தை பொறுத்து வெள்ள நீர் வரும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
    • அமராவதி ஆற்று நீர் திறப்பு அதிகரித்துள்ளது

    கரூர்:

    காவிரி மாயனூர் கதவணைக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு நொய்யல் பகுதியில் தண்டோரா மூலம் எச்சரிக்கை வி டுக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணை நேற்று காலை 8 மணிக்கு நிரம்பியது. அணைக்கு நீர்வரத்து 1,24,113 கன அடி நீர் வரும் நிலையில், 1.23 லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று முன்தினமே மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    மாயனூர் கதவணைக்கு நேற்று முன்தினம் 17,784 கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருந்த நிலையில் அவை காவிரி மற்றும் வாய்க்கால்களில் திறக்கப்பட்டது. மாயனூர் கதவணைக்கு நேற்று காலை 6 மணிக்கு நீர் வரத்து 66,867 ஆக அதிகரித்தது. காலை 10 மணிக்கு 82,422 கன அடியாகவும், மதியம் 12 மணிக்கு 92,942 கன அடியாகவும், மதியம் 2 மணிக்கு இது 1,00,896 கன அடியாக அதிகரித்தது.

    இதில் 99,876 கன அடி காவிரி ஆற்றிலும், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் தென்கரை வாய்க்கால் ஆகியவற்றால் தலா 400 கன அடியும, கட்டளை மேட்டு வாய்க்காலில் 200 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

    காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து நேற்று படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில் காவிரி ஆற்றில் யாரும் இறங்கவேண்டாம் என தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் கடந்த 13ம் தேதி மதியம் 1 மணியளவில் 82 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 12,500 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அமராவதி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படும் சூழ்நிலை இருப்பதாகவும் எனவே, அமராவதி ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வுடன் இருக்கும்படி எச்சரிக்கப்பட்டது.

    கடந்த 14ம் தேதி அமராவதி ஆற்றில் 1,025 கன அடியாக இருந்த நீர் திறப்பு, 15ம் தேதி 1,746ஆகவும், 16ம் தேதி 2,905ஆகவும் அதிகரிக்கப்பட்டது. அமராவதி ஆற்றில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் யாரும் ஆற்றுக்குள் இறங்கவேண்டாம் என கரூர் கொளந்தானூர் பகுதியில் நேற்று முன்தினம் அறிவிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் அமராவதி ஆற்று நீர் திறப்பு நேற்று 2,973ஆக அதிகரித்துள்ளது.

    • காவிரி ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரி–கள் அறிவுறுத்தி உள்ளனர்.
    • நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல் மற்றும் துணி துவைத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது.

    பரமத்திவேலூர்:

    மேட்டூர் அணை நிரம்பியதை தொடர்ந்து பரமத்தி வேலூர், மோகனூர் தாலுகாவுக்கு உட்பட்ட காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரி–கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    பரமத்தி வேலூர், மோகனூர் தாலுகாவிற்கு உட்பட்ட காவிரி கரையோரம் உள்ள பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல் மற்றும் துணி துவைத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது.

    நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து பொதுமக்களுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும்.

    மேலும், பாதிக்கப்படக்–கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், அவசர கால உதவிக்கு, மாவட்ட அவசர கால நடவடிக்கை மையம்-1077, காவல் துறை-100, தீயணைப்பு துறை-101, மருத்துவ உதவி-104, ஆம்புலன்ஸ் உதவி-108 ஆகியவற்றிற்கும் மற்றும் பரமத்திவேலூர் வட்டத்திற்கு 94450 00546, மோகனூர் வட்டத்திற்கு 99524 12755, ஆகிய எண்களில் சம்மந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    • காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட எவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைபடங்கள் எடுப்பதையோ, முற்றிலும் தவிர்க்கவேண்டும்
    • வெள்ள நீர் புகும் அபாயமுள்ள காவிரி கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    கரூர், ஜூலை.17-

    காவிரியில் அதிகளவு நீர் திறக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிவுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணியளவில் 119.29 அடியாக உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த ஓரிரு நாட்களுக்குள் அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை எட்டும்.

    மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் 50,000 கனஅடி முதல் 1 லட்சம் கனஅடி வரை எந்த நேரத்திலும் திறந்துவிடப்படலாம். திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும்,

    எனவே, காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட எவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைபடங்கள் எடுப்பதையோ, முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

    வெள்ள நீர் புகும் அபாயமுள்ள காவிரி கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மேலும், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் சார்பிலும், தண்டோரா, ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

    • மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.
    • இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் 16 கண் மதகு வழியாக உபரி நீராக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வரும் நிலையில், காவிரி கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.

    எடப்பாடி:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால், அங்குள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், காவிரியில் அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1 லட்சம் கன அடிக்கு மேலாக இருந்து வரும் நிலையில், தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.

    இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் 16 கண் மதகு வழியாக உபரி நீராக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வரும் நிலையில், காவிரி கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூலாம்பட்டி பகுதியில் தண்டோர மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை ஒடுக்கப்பட்டு வருகிறது.

    அதில் காவிரியில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் சூழலில், கரையோர பகுதி மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றினை கடக்கவோ, மீன் பிடித்தல், துணி துவைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும், காவிரி வடிகால் பகுதியில் உள்ள மணல் தீட்டுகளில் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும், விளைபொருட்களை உலர்த்தவும் கூடாது எனவும், கரையோர நீர் பிடிப்பு பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    • குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் படிக்கட்டுக்கு மேலே தண்ணீர் சென்று கொண்டுள்ளது.
    • தேவையான இடங்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். நாங்களும், நகராட்சி பணியாளர்களும் தீவிர கரையோர ரோந்து பணி மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

    குமாரபாளையம்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் அதிக அளவிலான தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் படிக்கட்டுக்கு மேலே தண்ணீர் சென்று கொண்டுள்ளது.

    அதனால் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தண்டோரா போட்டு விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டது.இது குறித்து வருவாய்த்துறையினர் கூறும்போது காவிரியில் அதிக நீர் வந்து கொண்டிருப்பதால் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் மேடான இடங்களுக்கு செல்ல வேண்டி கூறி வருகிறோம்.

    மேலும் தங்குவதற்கு தேவையான இடங்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். நாங்களும், நகராட்சி பணியாளர்களும் தீவிர கரையோர ரோந்து பணி மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

    • அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு கலெக்டர் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • 12,500 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது

    கரூர்:

    அமராவதி ஆற்றில் உபரி நீர் திறக்கும் சூழ்நிலை உள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் நேற்று மதியம் 1 மணியளவில் 82 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 12,500 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அமராவதி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படும் சூழ்நிலை இருப்பதாக நீர் வளத்துறை அமராவதி வடிநில உட்கோட்டம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். எனவே, அமராவதி ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வினை ஏற்படுத்திடவும், தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். 

    • திருச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்
    • சமூக இடைவெளிகளை கடைபிடிக்காத பொது மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

    திருச்சி:

    திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது தங்களின் குறைகளை திருச்சி மாவட்டம் மக்கள் மனுவாக எழுதிக் கொண்டு வந்து கலெக்டரிடம் கொடுப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    இதில் பங்கேற்ற பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளிகளை கடைபிடிக்காமலும் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த கலெக்டர் மா.பிரதீப் குமார் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களிடம் திடீரென உள்ளே இருந்து வெளியே வந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் குழந்தை ஒன்றுக்கு தாமாக முகக்கவசத்தை முகத்தில் அணிய வைத்தார்.

    அதனை தொடர்ந்து சமூக இடைவெளிகளை கடைபிடிக்காத பொது மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    திருச்சி மாவட்டத்தில் தற்போது கொரோனா பரவல் லேசாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. தேவையான அளவிற்கு ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் திருச்சி அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் இருக்கிறது. அதனால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்.

    தற்போது பொதுமக்கள் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளிகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். அதனை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்காவிட்டால் அபராதம் விதிப்பு தீவிரப்படுத்தப்படும்.

    ஆடி மாதம் வந்து கொண்டிருப்பதால் கோவில் திருவிழாக்கள் அதிகமாக நடைபெறும் காலமாகும். ஆகவே அரசு வழிகாட்டுதலின் பேரில் கோவில் திருவிழாக்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    விழாக்களில் கூட்டம் கூடுகின்ற பொழுது சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.

    தனியார் நிறுவனங்கள் வேலை செய்யும் ஊழியர்களை சானிடைசர் பயன்படுத்துதல் மற்றும் முகக்கவசம் அணிந்து வர கட்டாயப்படுத்துங்கள்.

    முக்கியமாக பள்ளி மாணவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படாமல் இருக்கிறது. அதை செலுத்துவதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெங்கு காய்ச்சல் வந்தால் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
    • வீட்டை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒருவார காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது, ஆகையால் பொதுமக்கள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் புழுக்கள் இல்லாத அளவிற்கு பார்த்துக் கொள்ளவேண்டும். வீட்டை சுற்றி உள்ள பழைய டயர், தேங்காய் மட்டைகளில் நீர் தேங்காமல் கொசு உற்பத்தி ஆகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் டெங்கு காய்ச்சல் வந்தால் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் குழந்தைகள், பெரியோர், கர்ப்பிணி பெண்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆகையால் வீட்டை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டுமாறு வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.

    • ரெயில்வே தண்டவாளம் பகுதியில், மது, கஞ்சா பயன்படுத்தும் நபர்கள் தேவையில்லாமல் சுற்றி வந்தால், அவர்கள் கைது செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
    • ஒதுக்குப்புறமான பகுதியாக உள்ளதால் கஞ்சா ஆசாமிகளும், சட்ட விரோத செயல்களும் அதிகரித்து வருகிறது.

    உடுமலை:

    கோவை- திண்டுக்கல் வழித்தடத்தில்உடுமலை- கொழுமம் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாள சந்திப்பு பகுதியில் சிறிய அளவிலான ஜல்லி கற்கள் காணப்பட்டது. இதனை கண்ட ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக கற்களை அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் ரெயில்வே போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. இது குறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது: -

    ரெயில்வே வழித்தடம் அருகில், டாஸ்மாக் கடை உள்ளதால், தண்டவாளம் பகுதியில் அமர்ந்து பலர் மது அருந்தி வருகின்றனர். மேலும் ஒதுக்குப்புறமான பகுதியாக உள்ளதால் கஞ்சா ஆசாமிகளும், சட்ட விரோத செயல்களும் அதிகரித்து வருகிறது. இது சதிச்செயலாக இருக்க வாய்ப்பில்லை. தண்டவாளத்திற்கு மேல் பெரிய அளவிலான கல் வைத்தால் மட்டுமே, சதிச்செயலாக கருத முடியும். கேட் பகுதியில், தண்டவாளம் மற்றும் ரோட்டில் உள்ள இரும்பு பகுதிக்கு இடையில் ஜல்லிக்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால், போதை குடிமகன்கள் யாராவது இதனை செய்திருக்கலாம். ரெயில்வே வழித்தடத்தில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். ரெயில்வே தண்டவாளம் பகுதியில், மது, கஞ்சா பயன்படுத்தும் நபர்கள் தேவையில்லாமல் சுற்றி வந்தால், அவர்கள் கைது செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். கற்களை அகற்றும் வகையில், ரெயில்வே கேட் சிறிது நேரம் மூடப்பட்டதால் சாலை போக்குவரத்து பாதித்தது.

    ×