என் மலர்
நீங்கள் தேடியது "பெண் போலீஸ்"
- குழந்தையை மீட்க சென்ற குழுவில் இருந்த பெண் போலீஸ் ரம்யா, அதிகாரிகள் அனுமதியுடன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார்.
- அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உயிரை காப்பாற்றிய பெண் போலீஸ் ரம்யாவுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பிறந்து 12 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை கடத்தப்பட்டது.
இதுபற்றி அந்த பெண் போலீசில் புகார் செய்தார். அதில் தனது கணவரே குழந்தையை கடத்தி சென்றதாக கூறினார். உடனே போலீசார் அதிரடியாக களத்தில் இறங்கினர். இதில் அந்த குழந்தையை பெண்ணின் கணவர் ரெயிலில் பெங்களூருவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது.
இதை அறிந்த தனிப்படை போலீசார் விரைந்து சென்று வழியிலேயே பெண்ணின் கணவரை மடக்கி பிடித்து குழந்தையை மீட்டனர்.
மீட்கப்பட்ட குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு அழுதுகொண்டே இருந்தது. அந்த குழந்தை தாய்ப்பாலுக்கு ஏங்குவதை அறிந்த போலீசார் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்றனர்.
அப்போது குழந்தையை மீட்க சென்ற குழுவில் இருந்த பெண் போலீஸ் ரம்யா, அதிகாரிகள் அனுமதியுடன் அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உயிரை காப்பாற்றிய பெண் போலீஸ் ரம்யாவுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
இதற்கிடையே பெண் போலீஸ் ரம்யாவை கேரள ஐகோர்ட்டும் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளது. ஐகோர்ட்டு நீதிபதி தேவன் ராமச்சந்திரன் இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி.க்கு எழுதியுள்ள கடிதத்தில், பெண் போலீஸ் ரம்யா கடமை உணர்வும், தாயுள்ளமும் கொண்டவர். அவரை பாராட்டுவதில் பெருமைப்படுகிறேன்.
மனித நேயத்துடன் நடந்துகொண்ட அவரை எத்தனை முறை பாராட்டினாலும் தகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐகோர்ட்டின் பாராட்டு சான்றிதழ் குறித்து பெண் போலீஸ் ரம்யா கூறும்போது, சமீபத்தில் தான் மகப்பேறு விடுப்பு முடிந்து பணியில் சேர்ந்தேன். அழுத குழந்தையை பார்த்தபோது அதனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்பட்டது.
எனவே தான் வேறு எதை பற்றியும் கவலைப்படாமல் அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தேன். இதற்காக எனக்கு கிடைத்த பாராட்டு மகிழ்ச்சியை அளிக்கிறது, என்றார்.
- செல்போனை பறிகொடுத்தவர் அதே எண்ணில் தொடர்பு கொண்டபோது, அவரிடம் போலீசார் விவரங்களை தெரிவித்து போலீஸ் நிலையம் வரவழைத்தனர்.
- தாம்பரம் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் போலீசாரும் காளீஸ்வரியை சால்வை அணித்து பாராட்டினர்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த தாம்பரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசாக பணியாற்றி வருபவர் காளீஸ்வரி. இவர், தாம்பரம் பஸ் நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கூடுவாஞ்சேரி செல்லும் அரசு பஸ்சில் ஏறிய வடமாநில வாலிபர், சிறிது நேரத்தில் கீழே இறங்கினார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த பெண் போலீஸ் காளீஸ்வரி, அந்த வாலிபரிடம் விசாரிக்க முயன்றார். ஆனால் அந்த வாலிபர், தப்பி ஓடினார். உடனே காளீஸ்வரி விரட்டிச்சென்று அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து சோதனை செய்தார். அதில் அந்த வாலிபரின் சட்டை பையில் விலை உயர்ந்த செல்போன் இருந்தது.
அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று நடத்திய விசாரணையில் அவர், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சோட்டோ (வயது 19) என்பதும், கூடுவாஞ்சேரி அரசு பஸ்சில் இருந்த பயணி ஒருவரின் விலை உயர்ந்த செல்போனை திருடியதும் தெரிந்தது.
இதற்கிடையில் செல்போனை பறிகொடுத்தவர் அதே எண்ணில் தொடர்பு கொண்டபோது, அவரிடம் போலீசார் விவரங்களை தெரிவித்து போலீஸ் நிலையம் வரவழைத்தனர். விசாரணையில் அவர் ஆண்டிமடத்தை சேர்ந்த மாயவேல் (30) என தெரியவந்தது. அவர் அளித்த புகாரின்பேரில் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போனை திருடிய சோட்டோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். துரிதமாக செயல்பட்டு செல்போன் திருடனை விரட்டிப்பிடித்த பெண் போலீஸ் காளீஸ்வரிக்கு பொதுமக்கள் பலரிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. தாம்பரம் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் போலீசாரும் காளீஸ்வரியை சால்வை அணித்து பாராட்டினர்.
- விருதுநகர் அருகே பெண் போலீசை ஆபாசமாக திட்டியவர் கைது செய்யப்பட்டார்.
- பழைய பஸ் நிலையம் தாய்மார்கள் பாலூட்டும் அறையில் ஒரு வாலிபர் படுத்திருந்தார்.
விருதுநகர்
விருதுநகர் லட்சுமிநகரைச் சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 21). இவர் அதிகாலையில் விருதுநகர் பழைய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு தாய்மார்கள் பாலூட்டும் அறையில் ஆலங்குளம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (26) என்ற வாலிபர் படுத்திருந்தார். அதைப்பார்த்த சிவானந்தம் வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளார்.
அப்போது அங்கு வந்த பெண் போலீஸ் ஒருவரும் அவரை வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் ரஞ்சித் அவர்கள் இருவரையும் ஆபாசமாக பேசி திட்டியுள்ளார். மேலும் பாலூட்டும் அறையின் கண்ணாடியை உடைத்து சிவானந்தத்தையும் அடித்து உதைத்தார். இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீஸ்நிலையத்தில் சிவானந்தம் அளித்த புகாரின் பேரில் ரஞ்சித்குமார் கைது செய்யப்பட்டார்.
- தினேஷ் இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். இவர்களது மோட்டார் சைக்கிள் அஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- தாயார் மற்றும் சகோதரி கண் எதிரே நடந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் புதுக்கடை பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி :
புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மனைவி ராஜ குமாரி. இவர்களது மகள் அஜிதா (வயது 29).
இவர், நாகர்கோவில் ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார்.இவரது சகோதரர் அஜின் (27). நேற்று மாலை அஜின் தனது மோட்டார் சைக்கிளில் சகோதரி அஜிதாவை அழைத்துக் கொண்டு தேங்காய் பட்டினத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
முஞ்சிறை பகுதியில் சென்று கொண்டிருந்த போது உறவினர் வீட்டிற்கு சென்று இருந்த தாயார் ராஜகுமாரி வந்து கொண்டிருந்தார். இதையடுத்து அஜின் மோட்டார் சைக்கிளை ரோட்டோரமாக நிறுத்தி தாயாரிடம் பேசி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த எட்வின், தினேஷ் இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். இவர்களது மோட்டார் சைக்கிள் அஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் அஜினுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அஜிதாவும் படுகாயம் அடைந்தார். ராஜகுமாரி,எட்வின், தினேஷுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. உடனே 5 பேரையும் சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அஜிதா திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அஜினை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும் சிகிச்சை பலனின்றி அஜின் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயார் மற்றும் சகோதரி கண் எதிரே நடந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் புதுக்கடை பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போக்குவரத்து போலீசார் வைத்துள்ள சாலை தடுப்பை மீறி லாரி ஓன்று பல்லடம் நகருக்குள் நுழைய முயற்சித்தது.
- பல்லடம் நகருக்குள் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது.
பல்லடம் :
பல்லடம் பகுதியில் கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால், பல்லடம் நகருக்குள் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது. மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதித்தனர்.
ஆங்காங்கே விளம்பரப் பதாகைகள் வைத்து அறிவிப்பு செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் பல்லடம் பச்சாபாளையம் பகுதியில், போக்குவரத்து போலீசார் வைத்துள்ள சாலை தடுப்பை மீறி லாரி ஓன்று பல்லடம் நகருக்குள் நுழைய முயற்சித்தது. அங்கு பணியில் இருந்த போக்குவரத்து பெண் போலீஸ் லாரியை தடுத்து நிறுத்தி, இந்த வழியாக செல்லக்கூடாது மாற்று பாதையில் செல்ல வேண்டும் என அறிவுறித்தினார். ஆனால்அந்த லாரி டிரைவர் அவர் மீது மோதுவது போல் லாரியை ஓட்டி நிற்காமல் சென்றுள்ளார்.
இதையடுத்து செல்போன் மூலம் அருகிலுள்ள நால்ரோடு பகுதியில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்த போலீசாரிடம், அந்தப் பெண் போலீஸ், லாரி அத்துமீறி வருவதை கூறியுள்ளார். இதையடுத்து அந்த லாரியை போக்குவரத்து போலீஸ்காரர் மடக்கி, ஏன் மாற்றுப்பாதையில் செல்லாமல், பெண் போலீஸ் மீது மோதுவது போல் லாரியை ஓட்டினாய் எனக் கேட்டுள்ளார். இதற்கு அந்த டிரைவர் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை லாரியிலிருந்து இறங்கும்படி போலீஸ்காரர் அறிவுறுத்தியதாகவும், ஆனால் அந்த டிரைவர் இறங்க மறுத்ததாகவும், அவரது கையைப் பிடித்து போலீசார்இழுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை, அந்த வழியாக சென்ற பயணி ஒருவர் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அது தற்போது பல்லடம் பகுதியில் வைரலாகி வருகிறது.
- பெரியார் பஸ் நிலையத்தில் செல்போன் திருடனை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் விரட்டி பிடித்தார்.
- சார்ஜ் போடப்பட்டு இருந்த செல்போனை நைசாக திருடிக் கொண்டு தப்பி ஓடினார்கள்.
மதுரை
தேனி மாவட்டம் கூட லூரை சேர்ந்தவர் ராஜா (வயது 29). புரோட்டா மாஸ்டர். ராஜா தனது உறவினர் விஜயகுமார் என்பவருடன் நேற்று இரவு மதுரை வந்தார். அவர்கள் பெரியார் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
ராஜா முதல் பிளாட்பாரத்தில் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு அருகில் உட்கார்ந்து இருந்தார். அப்போது அங்கு 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் சார்ஜ் போடப்பட்டு இருந்த செல்போனை நைசாக திருடிக் கொண்டு தப்பி ஓடினார்கள். அதனை கண்ட ராஜா, திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். இதனை கண்ட திடீர்நகர் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி திருடர்களை விரட்டிச்சென்றார்.
அப்போது ஒருவன் தவறி கீழே விழுந்தான். அவனை லோகேஸ்வரி மடக்கி பிடித்தார். அவனிடம் இருந்து ராஜாவின் செல்போன் மீட்கப்பட்டது.
விசாரணையில் செல்போனை திருடியவர் கேரள மாநிலம் கொட்டாளி கிராமத்தைச் சேர்ந்த ஜெனிபர் (வயது 38) என்பது தெரிய வந்தது. அவர் மதுரையில் கடந்த சில நாட்களாக தனது கூட்டாளி ஒருவருடன் தங்கி இருந்து திருட்டி ஈடுபட்டு வந்துள்ளார். தப்பி சென்ற அவரது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
செல்போன் திருடனை விரட்டி பிடித்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை பயணிகள் பாராட்டினர்.
- போலீசார் பாதுகாப்புடன் ஜே.சி.பி பொக்லைன் எந்திரத்துடன் சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டனர்.
- செந்தாமரை (அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த அம்மு என்ற பெண் காவலரை கன்னத்தில் பளார் என்று 2 முறை அடித்தார்.
விழுப்புரம் :-
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே செக்கடிக்குப்பம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியும்,விவசாயம் செய்து வருவதாக புகார் மனு அளிக்கப்பட்டது.கன்னத்தில் அறைஇதனை தொடர்ந்து மேல்மலையனூர் தாசில்தார் அலெக்ஸாண்டர் தலைமை யிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியில் நில அளவீடு செய்து ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்றுவதற்காக அவலூர்பேட்டை போலீசார் பாதுகாப்புடன் ஜே.சி.பி பொக்லைன் எந்திரத்துடன் சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டனர்.
அப்போது மணி என்பவரின் மனைவி செந்தாமரை (அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த அம்மு என்ற பெண் காவலரை கன்னத்தில் பளார் என்று 2 முறை அடித்தார். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த சக போலீசார் பெண் காவலர் அம்முவை அங்கு இருந்து அழைத்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.இதுபற்றி விசாரணை நடத்த ப்பட்டதில் விசாரி த்ததில் அந்த பெண்ணுக்கு சாமி வந்தால் எதிரில் இருப்ப வர்களை அடிப்பார்களாம். நேற்று அதே போல் சாமி வந்ததால் அடித்திருக்கலாம் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து செந்தாமரை மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.
- வாலிபர் பெண் போலீசை தகாத வார்த்தைகளால் பேசி கன்னத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.
- காயமடைந்த பிஸ்மி அல்மேரிஸ் தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் ஜீப் டிரைவராக பணிபுரிந்து வருபவர் பிஸ்மி அல்மேரிஸ்.
நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். எதிரில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் ஒரு வாலிபர் நேராக மோதுவது போல வந்துள்ளார்.
இதனை பிஸ்மி அல்மேரிஸ் அவரை தடுத்து நிறுத்தி கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் பெண் போலீசை தகாத வார்த்தைகளால் பேசி கன்னத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த பிஸ்மி அல்மேரிஸ் தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அவர் அரூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பெண் போலீசை தாக்கியவர் அரூர் அருகேயுள்ள பொய்யப்பட்டியை சேர்ந்த கருணாநிதி (எ) காளிதாஸ் (வயது 29) என்பதும், ராணுவ வீரரான அவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் போலீசை ராணுவ வீரர் தாக்கிய சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சென்னை வேப்பரி கமிஷனர் அலுவலகத்தில் பணியில் இருந்து வந்துள்ளார்.
- மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் பாணாம்பட்டு பகுதி நடராஜன் மனைவி மணிமேகலை (வயது 39). பெண் போலீஸ். இவரும் நடராஜனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நடராஜன் தனியாரில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. பெண் போலீஸ் மணிமேகலை சென்னை வேப்பரி கமிஷனர் அலுவலகத்தில் பணியில் இருந்து வந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு முதல் கணவன் மனைவியிடையே பிரச்சனை இருந்தது. அதனால் நடராஜன் குழந்தைகளை அவருடன் அழைத்து கொண்டு வந்து விழுப்புரம் அருகே பாணாம்பட்டு கிராமத்தில் வாடகை வீடு எடுத்து தங்கி வந்துள்ளார்.
கணவருடன் சேர்ந்து வாழ வேண்டுமென எண்ணிய மணிமேகலை அலுவலகத்தில் பணிமாறுதல் கோரியதன் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் விழுப்புரம் மாவட்ட ேபாலீஸ் துறைக்கு மாற்றப்பட்டார். நேற்று மாலை வீட்டிற்க்கு சென்ற மணிமேகலை, தன்னுடைய உறவினர் திருமணத்திற்க்கு வருமாறு நடராஜனை அழைத்துள்ளார். இதில் இவ்விருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனஅழுத்தத்தில் இருந்த பெண் போலீஸ் மணிமேகலை இரவு 2 மணிக்கு மேல் வீட்டிலிருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு முழித்த நடராஜன், மணிமேகலையை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். இவருக்கு 90 சதவீதம் தீக்காயம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள். இதனால் பெண் போலீஸ் மேல்சிகி ச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தமிழகத்தில் பெண் போலீசார் 34 ஆயிரத்து 329 பேர் உள்ளனர்.
- ரவுடிகளே, பெண் போலீசாரை பார்த்து பயந்து ஓடி செல்கின்ற நிலை உள்ளது.
மதுரை :
மதுரை விமான நிலையம் அருகே வலையபட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் போலீசாரின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இதில், தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முகாமில், தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு, இளைஞர்களை உற்சாகப்படுத்தி பேசினார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் போலீசார் இருக்கின்றனர். அவர்களுக்கு ஒரே கவலை, அவர்களது குழந்தைகளுக்கு தகுந்த வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான். அதில் பலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதி பெரிய ஆளாக வருகின்றனர். சிலர் வேலைக்காக தனியார் நிறுவனத்தை நம்பியுள்ளனர். இதற்காக தனியார் வேலை வாய்ப்பு முகாம் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அதில், சுமார் ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கப்பட்டது. அதில் 800 பேர் வேலை பார்த்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இந்தாண்டு வேலை வாய்ப்பு முகாம் தமிழகம் முழுவதும் நடக்கிறது.
தமிழகத்தில் பெண் போலீசார் 34 ஆயிரத்து 329 பேர் உள்ளனர். அவர்கள், பெரிய, பெரிய ரவுடிகளை எல்லாம் பிடித்து வருகின்றனர். தற்போது ரவுடிகளே, பெண் போலீசாரை பார்த்து பயந்து ஓடி செல்கின்ற நிலை உள்ளது. தவறான எண்ணம் கொண்ட குற்றவாளிகள், பெண் போலீசாரை தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி பெண் போலீசாருக்கு தொல்லை கொடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலை செய்யும் இடத்தில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் பற்றி புகார்கள் வருகிறது. காவல்துறையினரும் அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெண் போலீஸ் நிலையங்கள் இந்தியாவில் தமிழகத்தை தவிர வேறு எங்கேயும் இல்லை. பெண் போலீஸ் நிலையங்களில், சென்ற ஆண்டு 75 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் விசாரணை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு நியாயம் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு, மகளிர் போலீஸ் நிலையங்கள் குறைகளை தீர்க்கக்கூடிய இடமாக இருப்பதால், பெண்கள் தற்போது தைரியமாக புகார் அளிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, வேலைவாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
- நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட நாங்களும் மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து பணியாற்ற விரும்பினோம்.
கோவை:
கோவை மாநகர காவல்துறையில் துப்பறியும் மோப்பநாய் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 7 மோப்ப நாய்கள் உள்ளன.
போதை பொருட்களை கண்டறிவதற்காக புதிதாக பெல்ஜியம் மெலானாய்டு வகையை சேர்ந்த மதனா என பெயரிடப்பட்ட 8 மாதமே ஆன மோப்ப நாய் சேர்க்கப்பட்டு தற்போது 8 மோப்பநாய்கள் உள்ளன.
இதுதவிர திண்டுக்கல், பாளையங்கோட்டை மத்திய சிறை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அம்பலவாணன் தலைமையில் இந்த பிரிவு இயங்குகிறது. இங்கு உள்ள போலீஸ் மோப்ப நாய் பயிற்சி பிரிவில் கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை ஆண் போலீசார் மட்டுமே மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை மோப்ப நாய் பிரிவில் நாய்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய திருப்பூரை சேர்ந்த கவிப்பிரியா (வயது25), தேனியை சேர்ந்த பவானி(26) ஆகிய 2 பெண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் வில்மா என்றபெயர்கொண்ட லேப்ரடார் வகை நாய், பெல்ஜியம் மெலானாய்டு நாய் உள்ளிட்ட மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே மோப்ப நாய் பிரிவில் நியமிக்கப்பட்ட பெண் போலீசார் எவ்வாறு பயிற்சி அளிக்கிறார்கள் என்பதை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து பெண் போலீசார் கவிப்பிரியா, பவானி ஆகியோர் கூறியதாவது:-
நாங்கள் கடந்த 2022-ம் ஆண்டு கோவை மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியில் சேர்ந்தோம். நாங்கள் ஏற்கனவே வீடுகளில் நாய்களை வளர்த்து வருகிறோம். இதனால் எங்களுக்கு நாய்கள் மீது அலாதி பிரியம் உண்டு.
நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட நாங்களும் மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து பணியாற்ற விரும்பினோம். அப்போது தான் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீஸ் மோப்ப நாய் பிரிவில் சேர பெண் போலீசாரிடம் ஆர்வம் உள்ளதா? என கேட்டிருந்தார்.
இதையடுத்து நாங்கள் எங்களின் ஆர்வத்தை கூறவே, எங்களை தற்போது மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்க நியமித்துள்ளனர். மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து நாய்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற எங்களுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- தாமதமாக வந்த சரஸ்வதி என்ற பயணி ஒருவர் ஓடும் ரெயிலில் ஏற முயன்றார்.
- பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
தெலுங்கானா மாநிலம், பேகம்பேட்டையில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாக சுனிதா என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு லிங்கம் பள்ளியில் இருந்து பலக்கணுமா செல்லும் எம்.எம்.டி. எஸ் ரெயில் பேகம் பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தது.
பயணிகள் ஏறிய பின்னர் சிறிது நேரம் கழித்து ரெயில் மீண்டும் மெதுவாக கிளம்பியது. தாமதமாக வந்த சரஸ்வதி என்ற பயணி ஒருவர் ஓடும் ரெயிலில் ஏற முயன்றார்.
அப்போது சரஸ்வதியின் கால் தவறி ரெயிலுக்கும் பிளாட் பாரத்திற்கும் இடையே சிக்கியது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் சுனிதா இதனைக் கண்டு திடுக்கிட்டார். ஓடி சென்று துரிதமாக செயல்பட்டு சரஸ்வதியை பிடித்து இழுத்து காப்பாற்றினார். இதனை கண்ட பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். இதனால் சரஸ்வதி காலில் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பினார்.
சரஸ்வதியின் உயிரை காப்பாற்றிய பெண் போலீசுக்கு பயணிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.