search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடைமழை"

    • கோடை மழை வழக்கத்தை விட சற்று அதிகமாகவே பெய்துள்ளது.
    • விவசாய பணிகளுக்கும் தண்ணீர் திறக்கப் படுகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த ஆண்டு கோடை மழை வழக்கத்தை விட சற்று அதிகமாகவே பெய்துள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

    நெல்லையில் மீண்டும் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு படை யெடுத்து வருகின்றனர். பாபநாசம் அகஸ்தியர் அருவி, களக்காடு தலையணை, பணகுடி குத்திரபாஞ்சான் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் குளித்து மகிழ குடும்பம் குடும்பமாக சென்று வருகின்றனர்.

    மேலும் மாஞ்சோலை தேயிலை தோட்டம் விரைவில் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருப்பதால் அதற்கு முன்பே மாஞ்சோலையை பார்வையிட்டு வந்துவிட வேண்டும் என்று அங்கும் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கால்நடைகள் பகல் நேரங்களில் குளம், குட்டைகளில் இருக்கும் தண்ணீருக்குள் தஞ்சம் அடைவதை காண முடிகிறது.

    இன்று காலை நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் மூலக்கரைப் பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மட்டும் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கடுமையான வறட்சியை நோக்கி சென்ற பிரதான அணைகளின் நீர்மட்டம் கோடை மழை காரணமாக வெகுவாக உயர்ந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உள்ள தோடு, விவசாய பணிகளுக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு கோடை மழை நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு பெருமளவு கை கொடுத்து உள்ளது என்றே கூறலாம்.

    கடந்த ஆண்டு இதே நாளில் பிரதான அணை யான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் நீர் இருப்பு 29.75 அடி மட்டுமே இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 74.20 அடியில் உள்ளது.

    118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு 62.15 அடியாக இருந்த நிலையில் தற்போது 83.53 அடியாக உள்ளது. மேலும் சேர்வலாறு அணை நீர்மட்டம் இந்த ஆண்டு இன்று 90 அடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் அந்த அணையில் 48.75 அடி மட்டுமே நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாபநாசம் அணை நீர்மட்டம் 2 மடங்கும், சேர்வலாறு அணை நீர் இருப்பு ஒரு மடங்கும் உயர்ந்து இருக் கிறது.

    இதற்கிடையே நீர் போதிய அளவு இருப்பதால் அணைகளில் இருந்து முன் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு விடும் என்பதால் விவசா யிகள் தற்போது நெல் நடவு பணிகளை தொடங்கி உள்ளனர். பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், முக்கூடல், அரியநாயகிபுரம், கல்லூர், சுத்தமல்லி உள்ளிட்ட இடங்களில் நெல் நடவுக்காக பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் சில நாட்களாகவே மழை இல்லை. அதேநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் சாரல் மழையால் குற்றா லத்தில் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குறைந்த அளவில் தண்ணீர் விழுகிறது. அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருவதால் நீண்ட வரிசையில் நின்று குளிக்கின்றனர்.

    கோடை மழையால் பாவூர்சத்திரம், செங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கிணறுகளில் நீர்மட்டம் அதிகரிப்பால் விவசாயிகள் கத்தரிக்காய், தக்காளி, சின்ன வெங்காயம், மிளகாய், மல்லி இலைகளை பயிரிட்டுள்ளனர். சங்கரன்கோவில் சுற்று வட்டாரத்தில் மானாவாரி பயிர்களான உளுந்து, சோளம் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் நேற்று திடீர் சாரல் மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 12 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. காடல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 13 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. எட்டயபுரம், விளாத்திகுளத்திலும் லேசான சாரல் அடித்தது.

    ×