search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225466"

    • இந்த விரதத்தை, ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரும் கடைப்பிடிக்கலாம்.
    • இந்த விரதமானது நம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும்.

    'காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை' என்பது ஆன்றோர் வாக்கு. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகியோர் ஏகாதசி விரதமிருந்து, விஷ்ணுவின் அருள் பெறும் பேறு பெற்றார்கள். பொதுவாக, ஒவ்வொரு மாதத்துக்கும் இரண்டு ஏகாதசிகள் வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அமாவாசைக்கு அடுத்து வரும் ஏகாதசி சுக்லபட்ச ஏகாதசி (வளர்பிறை ஏகாதசி) என்றும்; பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஏகாதசி கிருஷ்ணபட்ச ஏகாதசி (தேய்பிறை ஏகாதசி) என்றும் பெயர். சித்திரை மாத தேய்பிறை ஏகாதசிக்கு 'பாப மோசனிகா ஏகாதசி' என்று பெயர். பாவங்கள் அனைத்தையும் போக்கும் ஏகாதசி என்ற பொருளில் இந்த ஏகாதசிக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. இன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். தவறவிடக் கூடாத விரத நாள் இது. இந்த விரதத்தை, ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரும் கடைப்பிடிக்கலாம். மேலும், இந்த விரதமானது நம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப் படுத்தும்.

    பாப மோசனிகா ஏகாதசியன்று விரதமிருந்து சாபம் நீங்கப் பெற்ற மஞ்சுகோஷை என்ற தேவகன்னியின் கதையை அறிந்துகொள்வோம்.

    சைத்ரதம் என்பது ஓர் அழகிய வனம். அங்கு முனிவர்கள் பலர் தனிக் குடில் அமைத்துத் தவம் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது மஞ்சுகோஷை எனும் அழகிய தேவகன்னி வானுலகில் வலம் சென்றுகொண்டிருந்தபோது, சைத்ரதத்தின் வனப்பைக் கண்டு கீழே இறங்கினாள். அங்கு தவம் செய்துகொண்டிருந்தவர்களில் மேதாவி எனும் முனிவரைக் கண்டாள். அழகிய முகம், திரண்ட தோள், அடர்ந்த கூந்தல் ஆகியவற்றுடன் விழிகளை மூடித் தவம் செய்துகொண்டிருந்த மேதாவியைப் பார்த்ததுமே காதலில் விழுந்துவிட்டாள்.

    மஞ்சுகோஷை, தவம் செய்துகொண்டிருந்த மேதாவியைத் தனது இனிமையான குரலில் அழைத்தாள். யாழின் இசையையும் பழிக்கும்படி ஒலித்த அவளுடைய குரலில் மயங்கிய மேதாவி, மெள்ள விழிகளைத் திறந்தார். அவளுக்கு முன் நின்றுகொண்டிருந்த மஞ்சுகோஷையின் அழகிய வனப்பில், பார்த்ததுமே சொக்கிப்போனார். ஆனானப்பட்ட விசுவாமித்திரரே மேனகையின் அழகில் மயங்கியபோது, மேதாவியைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன. மஞ்சுகோஷையின் பேரழகில் மனதைப் பறிகொடுத்தவர், தவம் செய்வதை விடுத்து, அவளுடன் சேர்ந்து தனது குடிலிலேயே வசிக்கத் தொடங்கினார். ஆண்டுகள் பல கடந்தன. தான் தேவருலகம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டபடியால், மேதாவியின் பாதங்களைப் பணிந்து வணங்கி, "தான் மேலுலகம் செல்ல வேண்டும். விடைகொடுங்கள் சுவாமி" என்று வேண்டினாள். ஆனால், அவளுடைய அழகிலும் அவளிடம் கொண்டிருந்த மோகத்திலும் சிக்குண்ட மேதாவி காலம் கடந்ததை உணராதவராய், "நீ இப்போதுதானே வந்தாய், அதற்குள் என்ன அவசரம்? இன்னும் சிறிது காலம் என்னுடன் இருந்துவிட்டுப் போ" என்று தெரிவித்தார் .

    மீண்டும் இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். மேலும் பல ஆண்டுகள் கடந்தன. ஒரு நாள் அவளுடைய மடியில் தலை சாய்த்துப் படுத்துக்கொண்டிருந்தபோதுதான் ஞானோதயம் ஏற்பட்டது மேதாவிக்கு. ஓடிச்சென்று, சந்தியாவந்தனம் செய்துகொண்டு வந்தார். மஞ்சுகோஷைக்கு எதுவும் புரியவில்லை. அவள், "இத்தனை ஆண்டுகளாக எதையும் கடைப்பிடிக்காத தாங்கள் இப்போது அவசரமாகச் சந்தியாவந்தனம் செய்கிறீர்களே" என்று வினவியபோதுதான் மேதாவிக்குப் புரிந்தது.

    தனது தவம் கலைந்தமைக்கும் இத்தனை ஆண்டுகளாகச் சுயநினைவை இழந்து வாழ்ந்தமைக்கும் காரணம் மஞ்சுகோஷைதான் என்று நினைத்த மேதாவி, "உன் அழகிய உருவம் மறைந்து பேயாக மாறுவாயாக..." என்று கோபத்தில் சபித்துவிட்டார். அதன் பிறகு, இதில் தனது தவறும் இருக்கிறது என்பதை உணர்ந்தவர், "சித்திரை மாதம் தேய்பிறை சர்வ ஏகாதசியன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் உனது சாபம் விலகும்" என்று அருள்புரிந்தார்.

    மஞ்சுகோஷையும் தான் அறிந்தோ அறியாமலோ செய்த தவற்றைப் பாப மோசனிகா ஏகாதசியன்று விரதமிருந்து போக்கி, சுய உருவத்தை அடைந்தாள். தவற்றினால் தனது தவ வலிமையை இழந்துவிட்டதைத் தன் தந்தையிடம் கூறி வருத்தப்பட்டார் மேதாவி. அவருடைய தந்தையும், இதே பாப மோசனிகா ஏகாதசி விரதத்தின் பெருமையைக் கூறி அதையே உபாயமாகத் தெரிவித்தார். மேதாவியும் அந்த விரதத்தை மேற்கொண்டு தனது தவ வலிமையை மீண்டும் பெற்றார்.

    நாம் தெரிந்தும் தெரியாமலும்; அறிந்தும் அறியாமலும் செய்யும் பாவங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமையுடையது இந்த ஏகாதசி விரதம்.

    ஏகாதசி விரதத்துக்கு பாவங்களைப் போக்கும் சக்தி எப்படியுண்டோ, அதே மாதிரி எண்ணிய காரியங்களை நிறைவேற்றும் சக்தியும் உண்டு. அசுவமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெற முடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று கூறுகின்றன புராணங்கள்.

    ஏகாதசி விரதமிருப்பவர்கள் முதல் நாளான தசமியன்று ஒரு பொழுது மட்டுமே உணவு உண்ண வேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும் உறங்காமலும் விரதமிருந்து நாராயண நாமத்தைப் பாடியபடி, பெருமாளுக்குத் துளசி மாலையிட்டு வழிபட வேண்டும். மறுநாள் துவாதசியன்று சூரியோதயத்துக்குள் நீராடி துளசி தீர்த்தத்தை அருந்த வேண்டும். அதன் பிறகு 'பாரணை' என்னும் பல்வகை காய்கறிகளுடன்கூடிய உணவை உண்ண வேண்டும். உணவில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் இருப்பது அவசியம். பெருமாளுக்கு நைவேத்யம் செய்து அதை ஒரு ஏழைக்குத் தானம் செய்த பிறகு உணவு உட்கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் பாவங்கள் அனைத்தும் விலகி நன்மை ஏற்படும் என்பது ஐதிகம்.

    • ஒரு வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகிறது.
    • ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர்.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ஆம்நாள் ஏகாதசி வருகிறது. ஒரு வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகிறது. அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர்.

    புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி "பத்மநாபா'' ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்று விரதம் இருப்பதன் மூலம் இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம். நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "அஜா'' ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

    இந்த நாளில்தான் அரிச்சந்திரன் விரதம் இருந்து தாம் இழந்த நாடு , மனைவி மற்றும் மக்களை திரும்ப பெற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான். எனவே நாமும் இவ்விரதநாளில் விரதம் கடைபிடித்தால், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம். புரட்டாசி மாத ஏகாதசியன்று கண்டிப்பாக தயிர் உபயோகிக்க கூடாது. அதில் மட்டும் கவனமாக இருங்கள்.

    • ஒவ்வொரு ஏகாதசி திதியும் தனித்துவம் வாய்ந்தது.
    • அஜா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

    புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசிக்கு "அஜா ஏகாதசி" என்று பெயர். "அஜா" என்றால் வருத்தத்தை நீக்குவது என்று பொருள். உயிர்களின் வருத்தத்தை நீக்கி, உயர்நிலைக்குக் கொண்டு செல்லுகின்ற ஆற்றலைத் தருகிறது இந்த ஏகாதசி.

    இந்த ஏகாதசியை பெருமாளுக்குரிய புரட்டாசி மாதத்தில், நம்மால் இயன்ற அளவு அனுஷ்டித்தால், நாம் இழந்ததை மீண்டும் பெறலாம். இதனால் மன கவலை நீங்கும்.

    அஜா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும். பொதுவாக விரத முறைகள் வழிபாடுகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வாய்ப்பில்லாதவர்கள் இந்த அஜா ஏகாதசி அன்று வெறும் உபவாசம் இருந்தாலே முழு விரத பலன்களைப் பெறுவார்கள்.

    அஜா ஏகாதசி விரதத்தின் பெருமைகளைத் தமக்கு விளக்கி அருளுமாறு யுதிஷ்டிரர் பகவான் கிருஷ்ணனிடம் கேட்கிறார். கிருஷ்ணரும் அஜா ஏகாதசி விரதத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார்.

    "தர்ம புத்திரரே, அஜா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும். பொதுவாக விரத முறைகள் வழிபாடுகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வாய்ப்பில்லாதவர்கள் இந்த அஜா ஏகாதசி அன்று வெறும் உபவாசம் இருந்தாலே முழு விரத முறையையும் ஆச்ரயித்த பலன்களைப் பெறுவார்கள். மேலும் ரகுவம்சத்தில் தோன்றிய ஹரிச்சந்திரன் இந்த விரதத்தை அனுஷ்டித்து தன் துன்பம் நீங்கப் பெற்றான்" என்று ஹரிச்சந்திரனின் கதையினை எடுத்துக்கூறினார்.

    உலகம் போற்றும் சத்தியசந்தனாக விளங்கிய ஹரிச்சந்திர மகாராஜா தன் முன்வினைப்பயன்களால் தன் நாட்டை இழந்தான். மேலும் தன் மனைவி, மகனையும் பிரியும் நிலை வந்தது. ஆனாலும் தன் இயல்பில் மாறாது சுடுகாட்டைக் காக்கும் வேலையைச் செய்து சத்தியத்தையே கடைப்பிடித்துவந்தான். ஒருநாள் ரிஷி கௌதமரை சந்தித்தான். ரிஷியின் பாதங்களைப் பணிந்த ஹரிச்சந்திரன் தன் வாழ்க்கையில் நடந்த துயரங்களை எடுத்துக்கூறினான். அவற்றைக் கேட்ட முனிவர் மிகவும் மனம் வருந்தி, "நல்லவர்களும் துன்பப்படுகிறார்கள் என்றால் அதன்காரணம் அவர்களின் முன்வினைப்பயன்தான்.

    அதை அழிக்கும் சக்தியுடைய விரதம் அஜா ஏகாதசி விரதம். அடுத்து வரும் ஏகாதசி அஜா ஏகாதசிதான். அந்த நாளில் நீ முழு உபவாசம் இருந்து, ஹரியை நாள்முழுவதும் மனதாலும் வாக்காலும் துதிப்பாயாக. அப்படிச் செய்வதன் மூலம் ஹரி மகிழ்ந்து உன் வினைப்பயன்களை நீக்குவார். மேலும் நீ விரைவில் நன்னிலை அடைவாய். நீ அடையும் நன்னிலையே இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும்" என்று உபதேசித்தார்.

    ஹரிச்சந்திரனும் அதன்படி விரதமிருந்து உபவாசம் அனுஷ்டிக்க விரைவில் அவன் வினைப்பயன்கள் நீங்கின. அவனோடு வாதம் செய்தவர் தோற்றார். அவன் துன்பங்கள் யாவும் நீங்கின. தன் பிள்ளையோடும் மனைவியோடும் இணைந்தான். அவன் ராஜ்ஜியம் மீண்டது என்று பகவான் கிருஷ்ணர் அவற்றை எடுத்துரைத்தார்.

    மேலும் அஜா ஏகாதசியின் சிறப்புகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறினாலும் அதைக் கேட்டாலும் சகல நன்மைகளும் உண்டாகும். கலியுகத்தில் சில யாகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட யாகங்களில் ஒன்று அஸ்வமேத யாகம். அந்த யாகம் செய்வதால் உண்டாகும் புண்ணிய பலனை நாம் அஜா ஏகாதசி விரத்தைக் கடைப்பிடித்து, அதன் பலனை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதன் மூலம் பெறலாம் என்கிறது ஏகாதசி புராணம்.

    இத்தகைய சிறப்புகளையுடைய அஜா ஏகாதசி இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே தவறாமல் இந்த நாளில் உபவாசம் இருந்து ஹரியை வழிபட வேண்டும். இந்த நாளைத் தவறவிடாமல் பகவான் விஷ்ணுவை வழிபட்டு சகல நலன்களையும் பெறுவோம்.

    • இன்று மாலை லட்சுமி, மகாவிஷ்ணுவுக்கு பசும்பால் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
    • பரிவர்த்தன ஏகாதசி விரதம் இருப்பதால் சகல தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும்.

    சயன ஏகாதசி தினத்தன்று படுக்கையில் படுத்த மகா விஷ்ணு சற்று புரண்டு படுப்பதை பரிவர்த்தனை ஏகாதசி என்று சொல்வார்கள். இன்று (செவ்வாய்க்கிழமை) பரிவர்த்தன ஏகாதசி தினமாகும். இன்று மாலை லட்சுமியுடன் மகாவிஷ்ணுவுக்கு பசும்பால் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

    இந்த ஏகாதசி திதியில்தான் பகவான் வாமன அவதாரம் எடுத்தார். எனவே இன்று அவசியம் எல்லோரும் ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது நல்லது. விஷ்ணுவின் அனுக்கிரகத்தை பெற்றுத் தரும் இந்த பரிவர்த்தன ஏகாதசி விரதத்தை குழந்தைகள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள், திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆனவர்கள், துறவிகள் என அனைவரும் அனுஷ்டிக்கலாம்.

    இதற்கு பத்ம ஏகாதசி என்றும் ஒரு பெயர் உண்டு. இன்று மாலை 4.46 மணி வரை பூராட நட்சத்திரத்தில் வருவதால் ஸ்ரீமகாலட்சுமி தாயாரையும் அர்ச்சனை செய்து வணங்க வேண்டும். இன்று பரிவர்த்தன ஏகாதசி விரதம் இருப்பதால் சகல பாவங்களையும், தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும்.

    ஏகாதசி இரவு பெருமாள் ஆலயங்களுக்கு சென்று வணங்கி, ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு புராணம் முதலிய நூல்களை வாசித்து, அடுத்த நாள் (புதன்கிழமை) துவாதசியில் தூய்மையான உணவு சமைத்து, பெருமாளுக்கு படைத்து விட்டுச் சாப்பிட வேண்டும்.

    இதற்கு துவாதசி பாரணை என்று பெயர். ஏகாதசி விரதம், துவாதசி பாரணையோடுதான் முடிகிறது. இந்த துவாதசி, சகல வெற்றிகளையும் கொடுப்பது என்பதால், விஜய துவாதசி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

    • தவறாமல் காமிகா ஏகாதசி அன்று துளசி கொண்டு பூஜிக்க வேண்டும்.
    • காமிகா ஏகாதசியின் கதையைக் கேட்பது ஒரு யாகத்தை நிகழ்த்துவதற்கு சமம்.

    தமிழ் மாதத்தின் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு இரண்டு வீதம் மொத்தம் 24 ஏகாதசி உள்ளது. சில வருடங்களில் மட்டும் 25 ஏகாதசி வரும். அதனை சுக்லபட்ச ஏகாதசி மற்றும் கிருஷ்ணபட்ச ஏகாதசி எனக் குறிப்பிடுகின்றனர். சுக்லபட்சம் என்பது வளர்பிறை ஏகாதசி ஆகவும், கிருஷ்ணபட்சம் என்பது தேய்பிறை ஏகாதசி ஆகவும் குறிக்கிறார்கள். ஏகாதசி என்பது ஏக் (ஒன்று) தஸ் (பத்து) அதாவது ஒன்று + பத்து = பதினொன்று. அமாவாசை முடிந்து 11-வது நாள் வளர்பிறை ஏகாதசி, பவுர்ணமி முடிந்து 11-வது நாள் தேய்பிறை ஏகாதசி ஆகும்.

    விஷ்ணுவின் உபேந்திர அவதாரம் இந்த நாளில் வழிபடப்படுகிறது. இந்த ஏகாதசிக்காக உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் முந்தைய வாழ்க்கையின் தடைகள் நீக்கப்படும். இந்த புனிதமான ஏகாதசி விரதத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான பசுவை தானம் செய்த பலன் கிடைக்கும். காமிகா ஏகாதசி தினத்தன்று விஷ்ணுவை வணங்குவதால் முடிக்கப்படாத அனைத்து பணிகளும் நிறைவேறும்.

    இந்த நாளில் விஷ்ணுவை வணங்குவது ஒரு பக்தருக்கு லாபம் தருவது மட்டுமல்லாமல், அவரது முன்னோர்களின் துன்பங்களையும் முடிவுக்குக் கொண்டுவருகிறது. காமிகா ஏகாதசி தினத்தன்று ஒரு ஏரி, நதி அல்லது குளத்தில் யாத்ரீக இடங்களில் குளித்துவிட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும் . காமிகா ஏகாதசியின் கதையைக் கேட்பது ஒரு யாகத்தை நிகழ்த்துவதற்கு சமம்.

    மகாபாரத காலத்தில் தர்மராஜ் யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷ்ணரிடம், "ஆண்டவரே தயவுசெய்து ஏகாதசியின் கதையையும் முக்கியத்துவத்தையும் சொல்லுங்கள்" என்றார் கடவுள் கிருஷ்ணர் கூறினார். "இந்த ஏகாதசியின் கதையை தேவர்ஷி நாரதிடம் பிரம்மா விவரித்தார். எனவே நானும் இதைத்தான் கூறுவேன்". பிரம்மாவிடமிருந்து காமிகா ஏகாதாசியின் கதையைக் கேட்க நாரதர் தனது விருப்பத்தை வெளிப்படுத்திய ஒரு காலம் இருந்தது.

    காசி, நைமிஷாரண்யா, கங்கா, புஷ்கர் போன்ற யாத்திரைகளில் குளிப்பதன் மூலம் கிடைக்கும் பலன்களும் விஷ்ணுவை வழிபடுவதிலிருந்து பெறப்படுகின்றன. தனது பாவங்களுக்கு பயப்படுபவர் காமிகா ஏகாதசி வேகமாக செய்ய வேண்டும். காமிகா நோன்பை நிகழ்த்தும் மக்கள் தாழ்ந்த வாழ்க்கையில் பிறப்பதில்லை என்று கடவுளே கூறியுள்ளார். இந்த ஏகாதசி விரதத்தில் விஷ்ணுவிடம் பக்தியுடன் துளசி இலைகளை வழங்கும் எந்தவொரு பக்தரும் நல்ல முடிவுகளையும் அதிர்ஷ்டத்தையும் பெறுகிறார்.

    காமிகா ஏகாதசி அன்று ஸ்ரீஹரியை துளசி கொண்டு அர்ச்சித்து வழிபடுபவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபடுவர். மதிக்க முடியாத தங்கத்தையும் வைர வைடூரியங்களையும் கொண்டு அர்ச்சிப்பதை விட ஒரே ஒரு துளசி இலை சமர்ப்பித்து வழிபடுவது மேன்மையுடையது. துளசிச் செடியில் துளசி மாதா வாசம் செய்வதாக ஐதிகம். எனவே, காமிகா ஏகாதசி அன்று துளசிச் செடியை தரிசனம் செய்வதே புண்ணியம் தரும்.

    துளசிச் செடிக்கு நீரூற்றி அருகே ஓர் விளக்கேற்றிக் கோலமிட்டு நமஸ்காரம் செய்து வழிபட்டால் நோய் நொடிகள் நம்மை அணுகாது. மேலும், இந்த நாளில் புதிதாகத் துளசிச் செடி நடுவது மிகவும் மங்களமானது. அவ்வாறு செய்பவர்களுக்கு யம வாதை இருக்காது.

    தினமும் துளசி மாதாவின் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுபவர்களின் புண்ணியக் கணக்கை சித்திர குப்தனாலும் அளவிட முடியாது என்று துளசியின் பெருமையையும் அதைக் கொண்டு செய்யும் வழிபாட்டின் மகிமைகளையும் பிரம்ம தேவர் விவரிக்கிறார். வேறெந்த ஏகாதசியின் மகிமைகளைக் குறிப்பிடும்போதும் இந்த அளவுக்கு துளசியின் பெருமைகளை பிரம்ம தேவர் எடுத்துரைக்கவில்லை. எனவே, தவறாமல் காமிகா ஏகாதசி அன்று துளசி கொண்டு பூஜிக்க வேண்டும்.

    ஏகாதசி விரதமுறை

    ஏகாதசி விரதம் என்பதில் உபவாசம் ஒரு நாள் என்றாலும் விரதமுறை மூன்று நாள்கள் சேர்ந்தது. தசமி திதி அன்றே விரதம் தொடங்கிவிடுகிறது. தசமி திதி அன்று இரவு உணவைத் தவிர்க்க வேண்டும். ஏகாதசி திதி அன்று செய்ய வேண்டிய பூஜைகளுக்காகவும் தீர்த்தத்தில் சேர்ப்பதற்காகவும் வேண்டிய துளசி இலையை தசமி அன்றே பறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று துளசி இலையைப் பறிப்பது பாவம் என்கின்றது சாஸ்திரம். மறுநாள் ஏகாதசி அன்று நாள் முழுவதும் உபவாசம் இருப்பது உத்தமம். இயலாதவர்கள் முழு அரிசி சோற்றைத் தவிர்த்து ஒரு வேளை உணவு உட்கொள்ளலாம். பழம் அல்லது பால் ஆகியவற்றை பகவானுக்குப் படைத்து உண்ணலாம். ஏகாதசி நாள் முழுவதும் இறைவழிபாட்டிலும் நாம ஜபத்திலுமே செலவிட வேண்டும். துவாதசி அன்று காலை பாரனை முடித்து விரதத்தை முடிக்கலாம்.

    • நாளைய ஏகாதசி விரதத்தின் பின்னணியில் புராண நிகழ்வு ஒன்று சொல்லப்படுகிறது.
    • நாளை வயதானவர்களுக்கு தானங்கள் செய்வது நல்லது.

    ஒவ்வொரு மாத ஏகாதசி விரதத்துக்கும் ஒரு பலன் உண்டு. அந்த வகையில் நாளை (திங்கட்கிழமை) ஏகாதசி விரதம் குழந்தை பாக்கியம் தரும் மகத்துவம் உள்ளதாகும். இதன் பின்னணியில் புராண நிகழ்வு ஒன்று சொல்லப்படுகிறது.

    நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு பணக்காரர் தனது குறையை முனிவர் ஒருவரிடம் தெரிவித்து, அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்' என்று கேட்டாராம். அதற்கு அந்த முனிவர், 'கடந்த ஜென்மத்தில் தாகத்தோடு வந்த பசுவையும், கன்றையும் நீ அடித்து விரட்டிவிட்டாய். அதனால்தான் குழந்தை பாக்கியம் இல்லை. இந்தமாத வளர்பிறை ஏகாதசியில் விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்' என்றார்.

    அதன்படி அந்த பணக்காரர் ஏகாதசி விரதம் கடை பிடித்து குழந்தை பாக்கியத்தை பெற்றார். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் நாளை ஏகாதசி விரதத்தை கடைபிடித்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும். நாளை இந்த விரதத்தை மேம்படுத்த வயதானவர்களுக்கு தானங்கள் செய்வது நல்லது.

    திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்தில் இன்று கலிய நாயனார் குருபூஜை. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கேட்டை நட்சத்திர தினத்தன்று அவரது குருபூஜை நடத்தப்படுகிறது.

    • இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது.
    • கோவில்களில் தரப்படும் பிரசாதத்தை சாப்பிடக்கூடாது.

    ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவு நாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசி அன்று நடத்த வேண்டும்.

    அன்று கோவில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமான வரை கோவில்களில் பிரசாதம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்).

    ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக் கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது.

    தேவையானதை முதல் நாளே பறித்து வைத்துவிட வேண்டும்.

    • விரதங்களில் வருதினி ஏகாதசி விரதம் தனித்துவம் வாய்ந்தது.
    • ஏகாதசி அன்று உபவாசம் இருப்பது உத்தமம்.

    வைகாசி மாதம் தேய்பிறையில் வருகிற ஏகாதசிக்கு வருதினி ஏகாதசி என்ற பெயர். இந்த ஏகாதசி விரதம் எல்லா வகையான பாவங்களையும் போக்கி பாக்கியத்தைத் தரக்கூடியது.

    ஏகாதசி விரதத்தை மாந்தாதாவும், தந்து மாறனும் அனுசரித்து மேல் உலகம் அடைந்தார்கள். பிரம்ம தேவனின் 5-வது தலையைக் கொய்த சிவபெருமானே வருதினி ஏகாதசி விரதம் இருந்து பாவவிமோசனம் பெற்றார் என்கிறது ஏகாதசி புராணம்.

    வித்யா தானப் பலனை அளிக்கக்கூடியது வருதினி ஏகாதசி விரதம் அன்று செய்யும் சிறிய தானமும் ஆயிரம் மடங்கு பலன்களை அளிக்கும்.

    வருதினி ஏகாதசி விரதத்தின் மகிமைகளை பகவான் கிருஷ்ணனே பார்த்தனுக்குச் சொல்வதுபோல ஏகாதசி புராணம் விவரிக்கிறது. அதில் கிருஷ்ணன்,

    விரதங்களில் வருதினி ஏகாதசி விரதம் தனித்துவம் வாய்ந்தது. பொதுவாக ஏகாதசி விரதம் இருந்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதிகம். வருதினி ஏகாதசியோ பாவங்களைத் தீர்ப்பதோடு சகல செல்வ வளங்களையும் மேற்கொள்பவர்களுக்கு அருளும். இஷ்வாகு குலத்தில் பிறந்த தந்துமாரா என்னும் மன்னன் சிவபெருமானால் சபிக்கப் பெற்றான். அவன் பின்னாளில் தன் தவற்றை உணர்ந்து வருத்தினி ஏகாதசி விரதம் இருந்து வழிபட அவன் சாபம் நீங்கி நன்னிலை அடைந்தான்.

    இந்த விரதம் துன்பப்படும் இல்லத்தரசிகள் மேற்கொண்டு பயன்பெற வேண்டிய விரதம். வீட்டில் தொடர்ந்து தொல்லைகளை அனுபவித்துவரும் பெண்கள் இந்த வருதினி ஏகாதசி அன்று விரதமிருந்தாலோ, பெருமாளை அன்றைய தினம் மனதால் நினைத்து வழிபட்டாலோ விரைவில் துன்பங்கள் தீர்ந்து நன்மைகள் சேரும்" என்கிறார் கிருஷ்ணபரமாத்மா.

    ஏகாதசி அன்று உபவாசம் இருப்பது உத்தமம். இயலாதவர்கள் முழு அரிசிச் சோற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலும், இந்த நாள் முழுவதும் விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது ஆழ்வார் பாசுரங்கள் பாராயணம் செய்யலாம்.

    ×