search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில்"

    • ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஆர்வம் இருக்கும்.
    • பெண்கள் வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்வதற்கான சில டிப்ஸ் இதோ.

    பெண்களுக்கு தகுந்த மரியாதை, இடம் மற்றும் வாய்ப்பை அளித்தால், அவர்கள் நிச்சயம் வளர்ச்சிப்பாதையில் செல்வார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. வீடு, தெருவைத் தாண்டி நாட்டையே வளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை. வீட்டில் இருந்தபடியே சுயதொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள், இப்போது அவர்களது தேவைக்கேற்ப, புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

    படைப்பாற்றலுடன் கூடிய புதிய சிந்தனைகளோடு, அவர்களது உழைப்பை பொருளாதாரப் பலன்களாக மாற்றி, குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப, தொடர்ந்து பொருள் ஈட்டும் வகையில் செயல்படுகின்றனர். சமூகத்தின் தேவையோடு, மக்களின் அவசியத்தை உணர்ந்து உத்திகளை வகுத்து வருகின்றனர்.

    பெண்கள் அம்மா, அக்கா, தங்கை, மனைவி இப்படி அனைத்து நிலையிலும் சிறந்து விளங்குகிறார்கள்.சில பெண்களின் குடும்ப சூழ்நிலையால் அவர்களால் பணியிடத்திற்கு சென்று வேலை செய்ய முடியவில்லை. அப்படிப்பட்ட பெண்கள் வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்வதற்கான சில டிப்ஸ் இதோ.

    ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஆர்வம் இருக்கும்.அந்த வகையில் தையல் தொழில், கேக் செய்வது, ஊர்காய் தயாரிப்பது, ரெடிமேட் சப்பாத்தி, மாவு வியாபாரம்,விஜிடபிள்ஸ் பேக்கிங், மசாலா பொடி செய்யும் தொழில் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.இதில் நீங்கள் உங்களுக்கு நன்கு தெரிந்ததை தேர்வு செய்து கொள்ளலாம்.அதில லாபம் ஈட்டக்கூடிய குறிப்பிட்ட ஐந்து தொழில்களுக்கான சில டிப்ஸ்களை இங்கே காண்போம்.

    தையல் தொழிலை பொறுத்தவரை நன்கு சம்பாதிக்க கூடிய தொழில் என்று தான் கூற வேண்டும்.ஒரு நாளைக்கு ஒரு பிளவுஸ் தைத்தால் 60 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.அதிலேயே வி ஷேப், யூ ஷேப், நாட் மாடல், டிசைன்ஸ் வைத்து தைத்தால் 200 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்.பெண்களுக்கான சுடி தைத்தால் 400 ரூபாய் வரை கிடைக்கும். தையல் தொழிலை பொறுத்தவரை டிசைன் சுடி, டிசைன் பிளவுஸ்,திருமணத்திற்கான ஆரி ஒர்க் பிளவுஸ் மூலம் நீங்கள் அதிக லாபத்தை ஈட்ட முடியும்.

    இன்றைய பரபரப்பான உலகில், வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது வீட்டில் காலையில் எழுந்து காய்கறிகள் வெட்டி சமைப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும்.எனவே சிலர் வெட்டி வைக்கப்பட்டிருக்கும் காய்கறிகளை வாங்கி சட்டென்று சமைத்து விடுகின்றனர்.அந்த வகையில் பூண்டு, வெங்காயம், பீன்ஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ ஆகியவற்றை சமைப்பதற்கு ஏற்றவாறு பாக்கெட்டில் பேக் செய்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

    மாவு வியாபாரம் தொழிலை பொறுத்தவரை ஒரு கிலோ இட்லி அரிசி 34 ரூபாயாகும்.அதனுடன் உளுந்து 200 கிராம் சேர்த்து அறைத்தால் 3 கிலோ மாவு கிடைக்கும்.ஒரு கிலோ மாவு ரூ.40 க்கு விற்றால் ரூ.120 ஒரு நாளைக்கு எளிதாக சம்பாதிக்க முடியும்.நீங்கள் வீட்டிலேயே இட்லி மாவு தயாரித்து வீட்டின் அருகில் உள்ளவர்கள் மற்றும் தெரிஞ்சவர்களிடம் கூறியும் விற்பனை செய்யலாம்.

    வீட்டில் இருக்கும் நிறைய பெண்கள் அவர்களின் பாட்டியிடம் ஆலோசனை கேட்டு விதவிதமான மசாலாக்களை தயாரித்து வருகின்றனர்.அந்த வகையில் இட்லி பொடி, சாம்பார் பொடி, மல்லி பொடி, கரமசாலா பொடி,பூண்டு பொடி, ரசப்பொடி, கறிவேப்பிலை பொடி இப்படி பொடி வகைகளை செய்து அருகில் இருக்கும் மளிகைக்கடை அல்லது அக்கம் பக்கத்தினரிடமும் கூறி விற்பனை செய்யலாம். இதற்கான விலையை உங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.அதே சமயத்தில் வாங்குபவர்களுக்கும் ஏற்ற விலையில் கொடுத்தால் சில நாட்களிலே உங்கள் பிஸ்னஸ் சூடு பிடித்துவிடும். பெண்களால் முடியாதது ஏதும் இல்லை. நம்மை நாமே நம்ப வேண்டும். விடா முயற்சியும், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் எல்லோரும் சாதிக்கலாம்''

    • அலுவலகத்திலேயே எல்லா வேலைகளையும் சரியாக செய்துவிட முடியாது.
    • இயற்கையான சூழலால் உடலும், மனமும் ரிலாக்ஸாக வேலை செய்யும்.

    ஒரே மாதிரியான ஆபீஸ் கேபின் செட்டப், ஏ.சி. காற்று... எத்தனை நாள் இப்படியே வேலை செய்வீர்கள்? அதனால்தான் அவுட்டோர் ஆபீஸ் முறையை கொண்டு வந்திருக்கிறார்கள். அவுட்டோர் ஆபீஸ் என்றால் அங்கேயும் வயர்லெஸ் இன்டர்நெட், லேப்டாப் சார்ஜிங் பாயிண்ட் என எல்லாமே இருக்கும். என்ன ஒன்று...? அலுவலகம் இயற்கை நிறைந்த திறந்தவெளியில் இருக்கும்.

    "அலுவலகத்திலேயே எல்லா வேலைகளையும் சரியாக செய்துவிட முடியாது. அதை எதிர்கால சந்ததியினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என பேசும் ஜெர்ரி டாடே இதை வெறுமனே பேசவில்லை. கட்டிட வடிவமைப்பாளரான ஜெர்ரி, 2005-ம் ஆண்டே இயற்கையோடு இணைந்த வெளிப்புற அலுவலகத்தை லண்டனின் ஹோக்ஸ்டன் சதுக்கத்தில் கட்டமைத்தவர்.

    பணியாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க சோதனை முறையில் உருவாக்கப்பட்டதே எட்டு நபர்கள் மட்டும் பணிபுரியும் இந்த அவுட்டோர் ஆபீஸ். ஹியூமன் ஸ்பேஸ் குளோபல் ரிப்போர்ட் ஆய்வுப்படி, இயற்கையோடு இணைந்த அலுவலகத்தின் மூலம் பணியாளர்களின் திறன் 15 சதவீதம் உயர்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

    "இயற்கையான சூழலால் உடலும், மனமும் ரிலாக்ஸாக வேலை செய்யும். பணியாளர்களின் செயல்பாடுகளில் கிரியேட்டிவிட்டி மெல்ல அதிகரிக்கும்" என உறுதியாகப் பேசுகிறார் ஜெர்ரி.

    தற்போது அமெரிக்காவின் மேரிலேண்டில் தொடங்கப்பட்டுள்ள அவுட் பாக்ஸ் என்ற வெளிப்புற அலுவலகத்தில் வை-பை, டேபிள்கள், அலங்காரங்கள் என அனைத்தும் உண்டு. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இவற்றை இலவசமாக பயன்படுத்தலாம். இது கோடை காலத்திற்கு மட்டும்தான்.

    "சலிப்பூட்டும் அலுவலக கேபின்களிலிருந்து மனிதர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் விடுவிக்க நினைத்தே இதனை உருவாக்கினோம்" என்கிறார் அவுட்பாக்ஸை உருவாக்கிய பீட்டர்சன் நிறுவனத்தின் லாரி யான்கோவ்ஸ்கி.

    வெளிப்புற அலுவலகம் கோடை காலத்தில் மட்டும் அமைக்கப்படுவதற்கு முக்கிய காரணம், மழை. ஏனெனில் அலுவலக கட்டமைப்பு பெருமளவு சூரிய வெளிச்சத்தை நம்பியே இருப்பதால், மழை வரும்போது அலுவலகத்தை முழுக்க தார்பாயால் மூடுவது போன்ற ஏற்பாடுகள் தேவை. இதற்கடுத்து இரைச்சல். ஒரு பூங்காவில் அலுவலகம் போன்று வேலை செய்தாலும், ஏ.சி. மட்டுமே உறுமும் அலுவலக அமைதி கிடைக்காது.

    "வெளிப்புற அலுவலகத்தைச் சுற்றி மெஸ், கடைகள், பஸ்கள் என செல்வதால் தனிமையில் பணியாற்ற விரும்புபவருக்கு இச்சூழல் சிரமம்தான்" என்கிறார் யான்கோவ்ஸ்கி.

    கூகுள், ஸ்பாட்டிபை போன்ற நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்காக 'அவுட்டோர் ஆபீஸ்' முறையை பயன்படுத்தினாலும் பல்வேறு நிறுவனங்களுக்கு இது புதுசுதான். எதிர்காலத்தில் இந்த அவுட்டோர் ஆபீஸ் சாத்தியமாக அதிக வாய்ப்புண்டு.

    • சிறிய சந்தையாக இருந்தாலும் போட்டி இல்லாத சந்தையை தேர்ந்தெடுங்கள்.
    • முடிவை மனதில் வைத்துக்கொண்டு, உத்வேகத்துடன் தொழில் தொடங்குங்கள்.

    நீங்கள் புதிய தொழில் தொடங்கும் சிந்தனையில் உள்ளீர்களா? அப்படி என்றால் உங்களுக்கான யோசனைகள் தான் இவை. இதை பின்பற்றினால், வெற்றிக்கொடி பறக்க விடலாம். அப்படி என்னதான் தெரிந்து கொள்ள போகிறீர்கள் என்பதை வாருங்கள் பார்க்கலாம்.:-

    சந்தையை தேர்வு செய்தல்

    சிறிய சந்தையாக இருந்தாலும் போட்டி இல்லாத சந்தையை தேர்ந்தெடுங்கள். அப்போது தான் நீங்கள் அதில் ஏகபோகமாக இருக்க முடியும். கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இன்று மிக பெரிய அளவிற்கு வளர காரணம். அந்தந்த துறையில் அது தான் முதல் நிறுவனமாக இருந்தது.

    எடுத்துக்காட்டாக கூகுள் 90-களில் தொடங்கும் பொழுது அதன் சந்தை மிக சிறியது மற்றும் வேறு எந்த நிறுவனமும் அதற்கு போட்டியாக இல்லை. இது அவர்களின் மொத்த சந்தையையும் அவர்களுக்கே சொந்தமாக்கியது. இதே கதை தான் பேஸ்புக், மைக்ரோசாப்ட் மற்றும் பேபால் நிறுவனங்களின் இமாலய வளர்ச்சிக்கு காரணம். நீங்கள் தொடங்கும் தொழில் அந்த இடத்தில் முதலாவதாக இருக்கட்டும். ஒரு இடத்தில் இருக்கும் 4-வது உணவகமாகவோ, 10-வது கைபேசி கடையாகவோ இருக்க முயற்சிக்காதீர்கள்.

    சிறியதாக தொடங்குங்கள்

    சிறிதாக தொடங்கினாலும் அதில் உங்களை விட சிறந்த பொருட்களை அல்லது சேவையை தர முடியாத அளவுக்கு சிறப்பாக இருங்கள். எடுத்துக்காட்டாக, அமேசான் நிறுவனர் ஜெப் பீசோஸ் தனது இலக்காக உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் ஆக வேண்டும் என தீர்மானித்தார்.ஆனால் அவர் எடுத்த உடனேயே அனைத்து பொருட்களையும் விற்கும் சில்லறை விற்பனையாளர் ஆகவில்லை. முதலில் புத்தகங்கள் மட்டும் விற்கும் தலமாக தான் அமேசானை தொடங்கினார். பின்னர் உலகிலேயே சிறந்த புத்தக கடையாக அதை மாற்றினார். அதன் பிறகு தான் அனைத்து பொருட்களையும் விற்கும் தலமாக அமேசானை மாற்றினார்.

    புதிய சிந்தனை

    அடுத்த பில் கேட்ஸ் ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கிக் கொண்டிருக்க மாட்டார். அடுத்த ஸுக்கர்பேர்க் ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கிக் கொண்டிருக்க மாட்டார். நாம் அவர்களை பின்பற்றினால் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். இது வரை யாரும் செய்திராத ஒரு விஷயத்தை செய்யுங்கள். ஏனென்றால் ஒரே ஆற்றில் இரண்டு முறை அடியெடுத்து வைக்க முடியாது.

    கடைசியாக இருங்கள்

    ஒரு பொருள் இந்த உலகத்தில் இருந்து அழிய போகிறதென்றால், உங்கள் பொருள் தான் கடைசியாக அழிய வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மைக்ரோசாப்ட் தான் பல ஆண்டுகளுக்கு கடைசி ஆப்பரேட்டிங் ஸிஸ்டெமாக இருந்தது. கூகுள் தான் கடைசி தேடு தலமாக இருந்தது. எனவே முடிவை மனதில் வைத்துக்கொண்டு, உத்வேகத்துடன் தொழில் தொடங்குங்கள். நிச்சயம் சாதிக்கலாம்.

    • அலுவலகத்திற்கு சீக்கிரம் வருவது, உங்கள் மதிப்பை உயர்த்தும்.
    • வேலையில் சில நேரங்களில் நம்மையும் அறியாமல் தவறு செய்வது தவறல்ல.

    சில நேரங்களில் நிர்ணயிக்கப்படாத வேலைகளைச் செய்ய அலுவலக அதிகாரிகள் அல்லது முதலாளிகள் உத்தரவிடலாம். அலுவலக நேரம் கடந்தும் வேலை செய்யும்படி சில நேரங்களில் கூறலாம். விடுமுறை நாள்களிலும் வேலை செய்ய அறிவுறுத்தப்படலாம். வேறொருவரின் வேலையை செய்யவும் கேட்டுக் கொள்ளலாம். புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர், அவற்றை மறுக்காமல் ஏற்று செயல்படுத்துவது வேலையில் முன்னேற்றமடைய உதவும்.

    எந்த துறை சார்ந்த அலுவலகமாக இருந்தாலும், ஊழியர்களின் நடத்தைகளில் சில பொதுவான எதிர்பார்ப்புகள் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு இருப்பது இயல்பானது. கடைநிலை ஊழியர் முதல் மேல் அதிகாரி வரையில் சீரான நடத்தைகள் காணப்படும்போது, நிறுவனங்கள் தழைக்கும். அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும், ஊழியர்களின் நடவடிக்கைகள் ஒரு நிறுவனத்தை வளர்ச்சி சார்ந்த பாதையில் பயணிக்க வழிவகுக்கும்.

    ஊழியர் தாம் செய்யும் வேலையில் அக்கறையோடு ஈடுபடுவதும், உண்மையான உழைப்பை வழங்குவதும் நிறுவனத்தின் பணிகளின் தரத்தை மேம்படுத்துவதோடு, நிறுவனம் உயர்நிலையை அடைவதற்கும் படிக்கல்லாக அமையும். ஏற்றுக்கொண்ட பணி அல்லது வேலையில் முன்னேறுவதற்கு சில ஒழுக்கநெறிகள் அல்லது நடத்தை விதிகளை ஊழியர்கள் தவறாமல் கடைப்பிடிப்பது அவசியம்.

    ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களிடம் பலரும் பொதுவாகக் கூறும் அறிவுரை, 'மேலதிகாரி அல்லது முதலாளி அலுவலகம் வருவதற்கு முன்பு நீங்கள் சீக்கிரமாக அலுவலகம் வந்துவிடுங்கள்; அவர் சென்ற பிறகு அலுவலகத்தில் இருந்து புறப்படுங்கள்' என்பதுதான். இது இக்காலத்துக்கும் பொருந்தும். அலுவலகத்திற்கு சீக்கிரம் வருவது, உங்கள் மதிப்பை உயர்த்தும்.

    'தான் உண்டு தன் வேலை உண்டு' என்று வேலையில் மனதை கூர்மையாக செலுத்தி, குறித்த நேரத்தில் வேலையைத் திறம்பட முடிப்பது பாராட்டத்தகுந்தது. அதே நேரத்தில் அலுவலகத்தின் மூத்தவர்கள், அனுபவசாலிகளை அவ்வப்போது சந்தித்து வேலை நுணுக்கங்களை அவர்களிடம் இருந்து அறிந்து கொள்வது சிறப்பானது. அது வேலைத்திறனை மேம்படுத்த உதவும். சக ஊழியர்களுடன் நல்லமுறையில் பழகுவது அலுவலக சூழலை இனிமையாக்குவதோடு வேலை தொடர்பான அறிவைப் பெறவும் உதவியாக இருக்கும்.

    தனது பணியை முடிப்பதற்காக சக ஊழியர் உதவி கேட்டால், உடனடியாக இணங்குவது நல்ல பண்பாகும். பிறருக்கு உதவுவது உங்களிடம் இருக்கும் திறமையை வெளிப்படுத்தவும், வளர்த்துக்கொள்ளவும் உங்களுக்கு உதவும். பிறருக்கு நீங்கள் உதவினால் எதிர்காலத்தில் அவர் உங்களுக்கு உதவக் கூடும்.

    வேலைநேரம் முடிந்தபிறகு அல்லது வார இறுதி நாட்களில் சக ஊழியர்களோடு தகவல்களைப் பகிர்ந்துகொள்ள அலுவலக மின்னஞ்சலை பயன்படுத்தாமல், தனி மின்னஞ்சலை உருவாக்கி, சக ஊழியர்களோடு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வது நல்லது.

    நீங்கள் இதுவரை செய்திராத வேலையைச் செய்யுமாறு உங்களது மேலதிகாரி அல்லது சக ஊழியர் உங்களிடம் கேட்டுக்கொள்ளும்போது, பதற்றமடைவது இயல்பானது. வேலையில் இருந்து ஒதுங்கிக்கொள்ள அது காரணமாகிவிடக்கூடாது. புதிய வேலை அல்லது பணியை ஏற்று செயல்படும்போது தான் உங்களுடைய திறன் மேம்படும். உங்கள் மீது நம்பிக்கை இருப்பதால், அந்த பணியை உங்களிடம் மேலதிகாரி ஒப்படைத்திருக்கலாம். அந்த நம்பிக்கை உங்களுடைய எதிர்காலத்துக்கு உதவும்.

    வேலை செய்யும் இடத்துக்கு பொருத்தமான ஆடைகளை அணிவது அவசியமானது. பிறரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், பிறர் முகம் சுழிக்காத வகையிலும் ஆடைகளை அணிவது நல்லது.

    புதியவேலையில் ஈடுபடும்போது, புதிய உறவுகளைக் கட்டமைக்கும் போது, வேலையில் உயர்படிநிலைகளில் முன்னேறும்போது எல்லோருடைய கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளும் திறந்த மனநிலையை பேணுவது நல்லது. மாற்றங்களை ஏற்க தயாராக இருங்கள். நேர்மறை சிந்தனைகளை கொண்டிருப்பதும், எப்போதும் முகமலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதும் அவசியம். வேலையில் சில நேரங்களில் நம்மையும் அறியாமல் தவறு செய்வது தவறல்ல. அந்த தவறுகளை திருத்திக் கொள்வதும், அதே தவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்வதும் நல்லது. தவறுகள், புதியனவற்றைக் கற்க உதவும்.

    • அலுவலகத்தில் குழு சரியாக அமையாவிட்டால் வேலை ஒழுங்காக நடைபெறாது.
    • எல்லோரும் தங்களது வேலையை முடித்தபின் 'மீட்டிங்'கை நடத்துங்கள்.

    விளையாட்டாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, குழுவாகச் சேர்ந்து செயல்படுவது என்பது அவசியம். அதிலும் அலுவலகத்தில் குழு சரியாக அமையாவிட்டால் வேலை ஒழுங்காக நடைபெறாது. அலுவலகத்தில் நீங்கள் ஒரு சிறந்த குழுவை அமைத்துச் செயல்படுவது எப்படி?

    * நன்றாகப் பணிபுரியக்கூடியவர்கள் என்று உங்களுக்கு தோன்றக்கூடியவர்களை உங்கள் குழுவில் சேர்ப்பது நல்லது. சாதாரணமாக பிறருடன் நீங்கள் கலந்து பழகி மற்றவர்களை அறிந்திராதவர் என்றால், யார் உங்கள் குழுவில் சேர்வதற்கு ஆர்வமும், விருப்பமுமாக இருக்கிறார்கள் என்று பார்த்துச் சேர்க்கலாம். சும்மா உட்கார்ந்தபடி அதுவாகவே குழு உருவாகட்டும் என்று இருக்காதீர்கள். குறிப்பிட்ட ஒரு குழுவின் அங்கத்தினராக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுங்கள்.

    * உங்கள் குழுவுக்கான பொறுப்புகள் அளிக்கப்பட்டபின், அதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுங்கள். குழு அமைக்கப்பட்ட உடனே அவசர அவசரமாக அடுத்தடுத்து 'மீட்டிங்' போடாதீர்கள். குழு உறுப்பினர்கள் அவரவர் சொந்த வேகத்துக்கு ஏற்ப, தங்களால் ஒதுக்க முடிந்த நேரத்துக்கு ஏற்ப வேலை செய்யட்டும். வாய்மொழிப் பரிமாற்றங்கள் போதும். எல்லோரும் தங்களது வேலையை முடித்தபின் 'மீட்டிங்'கை நடத்துங்கள்.

    * வேலையை முடித்த அறிக்கையை அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என்றால், நீங்கள் முதலில் போக வேண்டாம். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். பிற குழுக்கள் எப்படி வேலை அறிக்கை அளிக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள். அதன் பிறகு நீங்கள் உங்கள் வேலை அறிக்கையை வித்தியாசமாக அளிக்கலாம்.

    * குழுவில் பிரச்சினைகள் வரலாம். சிலரிடம் 'ஈகோ' தலைதூக்கலாம். சிலர் சோம்பேறித்தனமாக இருக்கலாம். எனவே உங்கள் குழுவில் வேலையில் பலவீனமாக இருப்பவரைக் கண்டு பிடித்து, அவருக்கு ஏற்ப எளிதான வேலையைக் கொடுங்கள். உங்கள் குழுவில் ஒழுங்கீனமாக ஒருவர் இருந்தால், அவரது வேலையை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையை முடிக்கப் பாருங்கள். வேலை அறிக்கை அளிப்பதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன்பே அதைத் தயார் செய்துவிடுங்கள்.

    உங்கள் குழு உறுப்பினர்கள் சரியில்லா விட்டால், அது நீங்கள் கையில் எடுத்திருக்கும் பொறுப்பை ஏன் பாதிக்க வேண்டும்? அதில், எல்லாவற்றையும் உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால், இறுதி முடிவையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம். யாருமே வேலை செய்யாதபோது நீங்கள் பொறுப்பாகச் செயல்பட வேண்டும் என்பது வித்தியாசமாகத் தோன்றலாம். ஆனால் குழுவில் ஒன்றுமே செய்யப்படாமல் இருப்பதை விட, ஏதோ உங்களால் அதிகபட்சமாக செய்யக்கூடியதை செய்வது சிறப்பானது. வேலையின் முழுக் கட்டுப்பாட்டையும் உங்களுக்குக் கீழே கொண்டுவந்து வெற்றி பெற்றுக் காட்டுங்கள்.

    • இது போன்சாய் போன்ற தொழில்நுட்பம் தான்.
    • இதை ஏழைகளின் போன்சாய் (poor mans bonsai) என்றே சொல்லலாம்.

    நம்மில் பலருக்கு அலங்கார செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் இருக்கும். ஆனால் அதில் உள்ள வாய்ப்புகள் தெரிவதில்லை. அழகு செடிகள் வளர்ப்பதில் பல தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அதில் மிக எளிமையாகவும் அழகாகவும் செய்ய கூடிய ஒன்று தான் கொக்கிடமா (kokedama).

    அது என்ன கொக்கிடாமா என்று பார்க்கிறீர்களா? இதுவரையில் பெரிய அளவில் கேள்விகள் எழுப்பப்படாவிட்டாலும், இந்த யோசனை முதன்முதலில் தொடங்கியது ஜப்பானில் தான்.

    இது போன்சாய் போன்ற தொழில்நுட்பம் தான். ஆனால் போன்சாய் செய்வதற்கு அதிக செலவு ஆகும். கொக்கிடமா செய்வதற்கு மண் மற்றும் பாசி (peat moss) இவை இரண்டும் இருந்தாலே போதும். அதனால் இதை ஏழைகளின் போன்சாய் (poor mans bonsai) என்றே சொல்லலாம்.

    கொக்கிடமா என்பது தாவரத்தின் வேர் பாகத்தை மண் பந்தினுள் நிறுத்தி அதற்கு மேல் மென்மையான பசுமையான பாசியை வைத்து அழகுபடுத்துவதுதான். பின்னர் இந்த அமைப்பை குறிப்பிட்ட இடத்தில் அழகுக்கு வைப்பதற்கு ஏற்ப நூலினை வைத்து வடிவமைக்க வேண்டும்.

    உகந்த தாவரங்கள்

    நிழலில் வளரக்கூடிய, நிழலை அதிகம் விரும்பக்கூடிய தாவரங்கள் இதற்கு பொருத்தமானதாகும். கொக்கிடமா செய்வதற்கு பொருத்தமான சில தாவரங்களின் பெயர்கள்,

    *சென்சிவேரியா

    *ஜாமியோகல்காஸ் ஜாமிபோலியா (Zamioculcas zamiifolia Zz)

    *மணி பிளான்ட் (money plant)

    *அந்தூரியம் (anturium)

    * பிலோடென்ரான் (philodendron)

    *டிராசியேனா (Dracaena)

    இவை மட்டுமில்லாமல் வீட்டினுள் வளர்ப்பதற்கு ஏற்ற தாவரங்களும், சதைப்பற்று அதிகம் உள்ள அழங்கார தாவரங்களையும், சிறிய வேர்த்தொகுப்பு உள்ள தாவரங்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.

    எப்படி செய்வது?

    முதலில் மண் மற்றும் பாசி (peat moss) 2-யும் சேர்த்து நாம் எடுக்கும் தாவரத்தை பொறுத்து சிறிய பந்து போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும். பின்னர் அதனுள் நாம் தேர்ந்தெடுத்த தாவரத்தின் வேர்பகுதியை அந்த பந்தின் நடுப்பகுதியில் வைத்து நூலினால் கட்டவேண்டும். மேலும் அழகு சேர்க்க பசுமையான பாசியினை அதன் மேல் வைக்கலாம். பின்னர் அதை பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ளலாம்.

    இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சதைப்பற்று அதிகம் உள்ள தாவரங்களுக்கு மண்ணின் விகிதம் அதிகமாகவும் பாசி (peat moss) குறைவாகவும் இருக்க வேண்டும். அதே தண்ணீர் அதிகம் தேவைப்படும் தாவரங்களுக்கு மண்ணின் விகிதம் குறைவாகவும் பாசி (peat moss) அதிகமாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்தால் போதுமானது. நாம் செய்யக்கூடிய பூச்சட்டிக் கலவை நன்கு காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    வியாபார வாய்ப்பு

    இன்றயை சூழலில் திருமண நிகழ்வுகளில் தாம்பூலங்கள் வழங்குவது மக்களிடையே பிரபலமாகி வருகிறது. திருமண தாம்பூல பரிசாக இனிப்பு மற்றும் காரங்களை தருவதே வழக்கமாக உள்ளது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே விதைகளையும் மரக்கன்றுகளையும் பரிசாக தருகின்றனர். நாம் சற்று வித்தியாசமாக அழகு தாவரங்களையும் பரிசளிக்கலாம். இது நம் உறவினர்களுக்கு நினைவு சின்னமாகவும் மனநிம்மதி தரும் வகையிலும் அமையும்.

    மேலும், கார்பொரேட் கம்பெனிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் ஒப்பந்த அடிப்படியில் இதை நாம் அவர்களுக்கு அமைத்துக் கொடுத்து லாபம் பார்க்கலாம். இதன் நுணுக்கங்களை நாம் நன்றாக கற்று கொண்டால் மற்றவர்களுக்கு கற்று கொடுத்தும் லாபம் பார்க்கலாம்.

    அதோடு இன்றைய இணைய உலகில், சந்தை வாய்ப்புகளை அங்கிருந்தே தொடங்கி, நமது வலைதளம் மூலமாகவும் விற்பனை செய்து நல்ல வருவாய் பெற முடியும்.

    • நவீன காலத்திலும் கூட குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய தொழில்களும் சில உள்ளன.
    • எந்த ஒரு தொழில் செய்து வந்தாலும் அதை விளம்பரம் செய்ய வேண்டும்.

    வேலைக்கு செல்லும் பலரின் கனவு சொந்தமாக தொழில் தொடங்கி நாமும் முதலாளியாக வேண்டும் என்பதாக இருக்கும். அப்படி இருந்தாலும் பலர் அதற்கு நிறைய முதலீடுகள் வேண்டும் அல்லது தங்களுக்கு ஒவ்வொரு மாதம் குறிப்பிட்ட அளவு பணம் தேவை என தொழில் தொடங்கும் கனவை ஓரம் வைத்துவிட்டு வேலைக்கு சென்று மாதம் சம்பளம் வாங்குவதையே குறிக்கோளாக வைத்து இருப்பார்கள். ஆனால் நவீன காலத்திலும் கூட குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய தொழில்களும் சில உள்ளன.

    டிஜிட்டல் கல்வி

    வேகமாக வளர்ந்து வரும் ஐ.டி. உலகில் பலரும் வேலை செய்யும் இடங்களில் பல்வேறு மென்பொருளில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். அதையே ஒரு படிப்பாக மாற்றி ஆன்லைனில் வீடியோவாக வெளியிடுவது அல்லது ஆன்லைனில் கற்றுக்கொடுப்பதன் மூலம் பெரும் முதலீடு இல்லாமல் தொழில் தொடங்கலாம்.

    கைவினை பொருட்கள்

    உங்களுக்கு கைவினை பொருட்கள் செய்யும் திறன் உள்ளது என்றால், அதை உற்பத்தி செய்துவிட்டு ஆன்லைனில் விற்கலாம். இதற்காக பல்வேறு இணையதளங்கள் செயலிகள் உள்ளது. இதற்கும் பெரிய முதலீடுகள் தேவை இருக்காது.

    பேக்கரி

    உங்களுக்கு சமையல் செய்ய பிடிக்கும் என்றால் பேக்கரி அல்லது சிறிய அளவில் உணவை வீட்டிலேயே தயாரித்து விற்கலாம். இதுபோன்றவர்களை ஊக்குவிக்கவும் ஆன்லைனில் பல்வேறு இணையதளங்கள் உள்ளது.

    டிஜிட்டல் மார்க்கெட்டிங்

    எந்த ஒரு தொழில் செய்து வந்தாலும் அதை விளம்பரம் செய்ய வேண்டும். நிறைய மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அது உங்களுக்கு தெரியும் என்றால் அதற்கான சேவையை நீங்கள் வழங்கலாம். பல்வேறு சிறு நிறுவனங்கள் தங்களது பொருட்களை சந்தையில் மக்களிடம் கொண்டு செல்ல டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவையை நாடுகின்றனர். இதன் மூலமும் வருமானம் ஈட்டலாம்.

    இதுபோன்று குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.

    • இணை இயக்குனர் தகவல்
    • 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அவ்வை மீனாட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட மூலம் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்த வேலையில்லா இளைஞர்களை தொழில் முனைேவாராக்கும் திட்டம் இந்த ஆண்டில் செயல்படுத்தப்படுகிறது. இதில் அக்ரி கிளினிக் (வேளாண்) அல்லது வேளாண் தொழில் தொடங்க வேளாண் பட்டதாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும்.

    பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்ப டுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி திட்டம் மூலம் பயனடைய தகுதியான பயனாளிகளுக்கு 25 சதவீத மானியம் அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் வேளாண், தோட்டக் கலை, வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    எனவே இதற்கான விண்ணப்பங்களை கல்வி தகுதி ஆவணங்களுடன் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்துக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் இது தொடர்பாக குமரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அல்லது அந்தந்த தாலுக்காக்களில் செயல்பட்டு வரும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் நேரில் அணுகி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 120 வீடுகளில் 400 பேர் வசித்து கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகிறோம்.
    • கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் எங்கள் ஊரில் உள்ள அனைத்து வீடுகளும் சேதமடைந்துவிட்டது.

    தரங்கம்பாடி:

    சீர்காழி தாலுக்கா வெள்ள மணல் மீனவ மக்கள் சார்பில் கிராமத் தலைவர் வீரபாண்டியன், துணைத்தலைவர் புகழேந்தி ஆகியோர் கலெக்டர் லலிதாவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்களது கிராமம் கொள்ளிடம் ஆற்றின் கழிமுகத்தின் படுகையில் அமைந்துள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 120 வீடுகளில் 400 பேர் வசித்து கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகிறோம்.

    இந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தின் ஏற்பட்ட தொடர் மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் எங்கள் ஊரில் உள்ள அனைத்து வீடுகளும் சேதமடைந்து விட்டது.

    தொடர் வெள்ள நீரினால் மண் அரிப்பு ஏற்பட்டு படுகை பகுதி பாதிப்புக்குள்ளாகியது. எனவே எங்களுக்கு ஆற்றின் கரையோரம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கி, அதில் வீடு கட்டிதர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அனைவரும் வேறு இடத்துக்கு வருவார்களேயானால் இடம் ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் லலிதா கூறினார்.

    • கல்குவாரிகளில் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தி வைக்க சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.
    • கல்குவாரி தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.

    பல்லடம் :

    பல்லடம் கல்குவாரி தொழிலுக்கு இடையூறு செய்வதை கண்டித்து இன்று முதல் காரணம்பேட்டையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் பாலசுப்பிரமணியம் கூறுகையில்:- திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் என்ற போர்வையில் சிலர் கல்குவாரி தொழில்களை நலிவடைய செய்யும் வகையில் இயங்கி வருபவர்களை கண்டித்து இன்று மற்றும் நாளை 13 ந்தேதி (செவ்வாய்க்கிழமை ) ஆகிய 2 நாட்களும் திருப்பூர் மாவட்ட சங்கத்தின் சார்பாக கல்குவாரிகளில் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தி வைக்க சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.

    மேலும் இன்று சங்க உறுப்பினர்களின் லாரி, டிப்பர் வாகனங்களை காரணம்பேட்டையில் சங்கத்தின் மூலம் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் கொண்டு வந்து வரிசையாக நிறுத்தி வைக்கவும், கல்குவாரி தொழிலாளர்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து கல்குவாரி தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.அதன் பின்பு நாளை மாநில சங்கத்தலைவர் கே.சின்னச்சாமி தலைமையில் காரணம்பேட்டையில் சங்கத்தின் மூலம் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் அனைத்து உறுப்பினர்களும், தொழிலாளர்களும் குடும்பத்துடன் பங்கேற்கும் உண்ணாவிரதம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. அதில் சங்க உறுப்பினர்கள், கல்குவாரி தொழிலாளர்கள், விவசாயிகள், கட்டட கட்டுமான தொழிலாளர்கள், தொழில் துறையினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு ஆதரவு தர வேண்டுகிறோம். சங்கத்தின் மூலம் 2 நாட்கள் நடைபெற உள்ள போராட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்க அமைப்புகளும், கல்குவாரி தொழில் சார்ந்த அனைத்து அமைப்புகளும், ஆர்.எம்.சி. உரிமையாளர்களும், மற்றும் அனைத்து மாவட்டத்தில் உள்ள கல் குவாரி மற்றும் கிரசர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர் .இந்த மாபெரும் உண்ணாவிரத போராட்டம் வெற்றி அடைய அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • எஸ் இந்தியா கேன் அமைப்பு மூலமாக 1 லட்சம் தொழில் முனைவோரை உருவாக்க முயற்சி.
    • ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முயற்சியை கையில் எடுத்துள்ளது.

     திருப்பூர் :

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வால்ரஸ் நிறுவனம் பின்னலாடை தொழிலுக்கு தேவையான பாலியஸ்டர் துணிகளை திருப்பூர் மட்டுமின்றி, நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. மேலும் வால்ரஸ் நிறுவனத்தின் மற்றொரு அங்கமான எஸ் இந்தியா கேன் அமைப்பு மூலமாக 1 லட்சம் தொழில் முனைவோரை உருவாக்கும் முயற்சியிலும், திருப்பூர் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது.

    இதற்காக அனைத்து தரப்பினருக்குமான ரெடிமேடு ஆடைகளை தயாரித்து, வால்ரஸ் நிறுவனத்திடமே வழங்கும் தொழில் வாய்ப்பையும் வால்ரஸ் நிறுவனம் நடைமுறைபடுத்தி வருகிறது. தமிழகத்தின் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தாய்வீடு மற்றும் எஸ் இந்தியா கேன் அமைப்புகள் இணைந்து ஏழை, எளியோர் மற்றும் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளனர்.

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தாய்வீடு அமைப்பின் நிறுவனத்தலைவர் ஜான்பாண்டியன் திருப்பூரில் உள்ள வால்ரஸ் நிறுவனத்திற்கு சென்றார். அங்கு விற்பனை செய்யப்படும் துணிகள் மற்றும் ஆடைகளை பார்வையிட்ட பின்பு, வால்ரஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டேவிட்டுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    வால்ரஸ் நிறுவனம் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது. அந்த முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில் தாய்வீடு அமைப்பு வால்ரஸ் நிறுவனத்தின் எஸ் இந்தியா கேன் அமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளது. தென் மாவட்டங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் அதிகமானவர்கள் உள்ளனர். அதில் வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறவர்களை தேர்வு செய்து, அவர்கள் எந்த தொழில் செய்ய விரும்பினாலும் அவர்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளோம்.

    மாணவர்கள், பெண்கள், இல்லத்தரசிகள் யார் வேண்டுமானாலும் தொழில் செய்ய முன்வரலாம். குறிப்பாக குடும்பத்தை முன்னேற்றும் இடத்தில் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முதற்கட்டமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இந்த தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டு, பின்னர் இந்தியா முழுவதும் விரிவுப்படுத்தப்படும். தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள் தாய்வீடு, வால்ரஸ் எஸ் இந்தியா கேன் அமைப்புகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • யார் வேண்டுமானாலும், எங்கிருக்கும் நிறுவனத்திற்கு வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்ற புதிய கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது.
    • கொரோனா, ஆரம்பத்தில் சில தொழில்வாய்ப்புகளை முடக்கியது.

    கொரோனாவிற்கு பிறகான வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது?, கூடுதலான வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளதா?, தொழில்துறையிலும் - வேலைவாய்ப்பிலும் கொரோனா ஏதாவது மாற்றத்தை உண்டாக்கி இருக்கிறதா?... இதுபோன்ற பல கேள்விகள் நம்மிடைய எழுகின்றன. இவை அனைத்திற்கும் பதிலளிக்கிறார், பிச்சுமணி துரைராஜ். சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவரான இவர், மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பல ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றியவர். இப்போது, அதை சொந்த முயற்சியாக முன்னெடுத்திருக்கிறார். கூடவே தன்னுடைய அனுபவம் மூலம், நேர்காணலில் வெற்றி பெற வழிகாட்டுகிறார். அவர் தொழில்துறையின் நகர்வு பற்றியும், வேலைவாய்ப்பு குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

    *கொரோனா தாக்கத்திற்கு பிறகான தொழில்வாய்ப்புகள் எப்படி உள்ளன?

    கொரோனா, ஆரம்பத்தில் சில தொழில்வாய்ப்புகளை முடக்கியது. ஆனால் இப்போது தொழில்வாய்ப்புகளை இரு மடங்காக்கி உள்ளது. முடங்கியிருந்த எல்லா துறையும், இப்போது இருமடங்கு - மும்மடங்காக வளர்ச்சி பெற்று, பரபரப்பாக இயங்கி வருகின்றன.

    * எந்தெந்த துறை வளர்ச்சி கண்டிருக்கிறது?

    ஐ.டி.துறை கொரோனா காலத்திலும் சுணங்கவில்லை . அதனால் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. அதே போல மெடிக்கல், ஹெல்த்கேர், கட்டுமானம், சுற்றுலாதுறை , ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம், உற்பத்தி துறை, வீடு தேடி பொருள் சேர்க்கும் ஈ-காமர்ஸ் போன்றவை எதிர்பார்த் ததை விட, அதிகம் வளர்ச்சி பெற்றுள்ளன.

    * 'ஒர்க் பிரம் ஹோம்' முறை தொழில்துறையினருக்கும், பணியாளர்களுக்கும் வசதியாக இருக்கிறதா ?

    நேரடியாக பணியாற்றும் அளவிற்கு வசதியாக இல்லாவிட்டாலும், பணி செய்யமுடியாத நிலையில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை சிறப்பாகவே வழங்குகிறது. அதே போல வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளும் (ஜூ ம் கால், டீம் மீட்டிங்) ஐ.டி.பணியாளர்களுக்கு ஏற்ப , முன்னேறி கொண்டே இருக்கிறது.

    * ஒர்க் பிரம் ஹோம் முறையில் இருந்து அவசர அவசரமாக ஐ.டி. துறையினர் பணிக்கு அழைக்கப்படுவார்களா?

    இல்லை. 'ஒர்க் பிரம் ஹோம்' முறையில் இருந்து அலுவலக வாழ்க்கைக்கு மாற குறைந்தது ஓரிரு ஆண்டுகள் ஆகும். நகரங்களில் வாழும் ஊழியர்களை தவிர்த்து, வெளியூரில் வசிக்கும் ஊழியர்களும் ஒர்க் பிரம் ஹோம் முறையையே விரும்புகிறார்கள். 'ஒர்க் பிரம் ஹோம்' முறையில் இருந்து அவசர அவசரமாக அலுவலக வாழ்க்கைக்கு அழைக்கப்பட்டால், அசவுகரியம் காரணமாக ஊழியர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறிவிடுவார்களோ என்ற அச்சம் எல்லா நிறுவனங்கள் மத்தியிலும் நிழலாடுகிறது.

    அதனால் பகுதி-பகுதியாகவே அழைக்கப்படுவர். உள்ளூர் ஊழியர்கள், பக்கத்து ஊர்களில் வசிப்பவர்கள்... இப்படி 100 சதவிகித அலுவலக வாழ்க்கையை எட்ட , 2 ஆண்டுகள் ஆகலாம்.

    * ஒர்க் பிரம் ஹோம் மாதிரியில் சமீபகாலமாக ஆன்லைன் முறையிலேயே நேர்காணல்கள் நடத்தப்படுகின்றன. இதை நடத்துவதும், கலந்து கொள்வதும் சுலபமானதாக இருக்கிறதா ?

    நேரடி நேர்காணல்களை விட, நேர்காணல் நடத்தும் நிறுவனங்களுக்கும், கலந்து கொள்பவர்களுக்கும் இது மிகவும் சுலபமானது. மிக குறைந்த நேரத்திலேயே அதிகமானோரை நேர்காணல் செய்து விட முடிகிறது. அதே போல நேர்காணலில் கலந்து கொள்பவர்களும், ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டே 4 முதல் 5 நேர்காணல்களில் கலந்து கொள்ள முடிகிறது. சொந்த ஊரில் இருந்து நேர்காணல் நடக்கும் நகரங்களுக்கு செல்ல வேண்டிய தேவையும் இல்லை . புதிய இடத்தில் வழி தேடி அலைந்து, டென்ஷனாக வேண்டிய சூழலும் இல்லை . அமர்ந்த இடத்தில் இருந்தே , அமைந்தகரையில் நடக்கும் நேர்காணலிலும் கலந்து கொள்ளலாம். அமெரிக்காவில் நடக்கும் நேர்காணலிலும் கலந்து கொள்ளலாம்.

    முன்பெல்லாம் ஒரு மாதத்திற்கு 300 நபர்கள் வரை நேர்காணல் செய்வதே கொஞ்சம் கடினமாக இருக்கும். இப்போது 3 ஆயிரம் நபர்கள் வரை மிக சுலபமாக ஆன்லைனில் நேர்காணல் செய்துவிடலாம். பல ஐ.டி.நிறுவனங்கள் இந்த வேலையை, அவுட்சோர்ஸிங் முறையில் எங்களிடம் பிரித்து கொடுத்திருக்கின்றன.

    * கொரோனாவினால் நிகழ்ந்த நன்மைகள் என்ன?

    பணிவாய்ப்பிற்கான வரையறையை தகர்த்து எறிந்திருக்கிறது. அதாவது கொரோனாவிற்கு முன்பு சில நிறுவனங்கள் அந்தந்த நகரங்களில் வசிப்பவர்களை மட்டுமே பணியமர்த்தி வந்தது. பிறமாவட்ட, மாநில பணியாளர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா தாக்கத்தினால், ஒர்க் பிரம் ஹோம் முறை இத்தகைய வரையறையை முற்றிலுமாக நீக்கி இருக்கிறது. யார் வேண்டுமானாலும், எங்கிருக்கும் நிறுவனத்திற்கு வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்ற புதிய கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. அதே போல, வெளியூர் பணியாளர்கள் சென்னை , பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களில் வந்து தங்கியிருந்துதான் பணியாற்ற வேண்டிய நிர்பந்தமும் இப்போது இல்லை ஆன்லைன் நேர்காணல் என்ற நிலை உருவாகியுள்ளது.

    * ஆன்லைன் நேர்காணலில் கலந்து கொள்பவர்கள் இழைக்கும் தவறுகள் என்னென்ன ?

    ஆன்லைன்/ஆப்லைன் இவ்விரண்டுமே நேர்காணல்கள்தான். இவ்விரண்டிற்குமே, உங்களை பற்றிய நல்ல - கெட்ட புரிதலை உருவாக்கும் சக்தி உண்டு. அதனால் ஆன்லைன் நேர்காணல் என்று மெத்தனம் காட்ட வேண்டாம். குறித்த நேரத்திற்கு முன்பே ஸ்கைப்/டீம் மீட்டிங்/ ஜூ ம் போன்ற ஆன்லைன் தளங்களில் காத்திருங்கள். நீங்கள் இருக்கும் இடத்தை பிரகாசமாக வைத்திருங்கள். தடையில்லா இணைய வசதி அவசியம். அதே போல தேவையில்லாத போன் அழைப்புகளை தவிர்த்து விடுங்கள். உங்களை நோக்கி கேட்கப்படும் கேள்விகளுக்கு தெரிந்த பதில்களை மட்டும் கூறுங்கள். ஆன்லைனில் தானே நேர்காணல் நடக்கிறது, இணையத்தில் பதில் தேடி விடை கூறலாம் என்பது போன்ற வீண் முயற்சிகளை கைவிடுங்கள். ஏனெனில் பெரும்பாலான தொழில்நுட்பங்கள் நீங்கள் விடைதேடும் முயற்சிகளை கூட கண்டறிந்து கூறிவிடும். அதே போல, இரைச்சல் இல்லாத அமைதியான இடத்தை தேர்வு செய்யுங்கள். இந்த குறிப்புகளை எல்லாம் தவறவிடும்போது தான், தவறுகள் இழைக்கப்படுகின்றன. வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன.

    ×