search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படிப்பு"

    • மதிப்பெண்களை வைத்து ஒருவரின் அறிவை மதிப்பிட முடியாது.
    • நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் நீட் தேர்வு தற்கொலைகள் அவ்வப்போது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. ஆனால் இன்னும் 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு தோல்விகளை கூட தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் மாணவ- மாணவிகள் இருப்பது கவலை அளிக்கிறது. அதற்கு வீடு மற்றும் சமூகத்தின் பார்வையால் எழும் அழுத்தமே காரணமாக கூறப்படுகிறது. மராட்டியத்தில் 1834 மாணவர்கள், மத்திய பிரதேசத்தில் 1308 மாணவர்கள் தற்கொைல செய்து உள்ளனர். தமிழகத்தில் 1246 மாணவர்கள் தற்கொைல செய்து உள்ளனர்.இந்தியாவில் மொத்தம் 13,089 மாணவர்கள் தற்கொைல செய்து உள்ளனர். இதில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 10,732 பேர். தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலை செய்தவர்கள் மட்டும் 864 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2020-ம் ஆண்டு 12,526 பேர் தற்கொலை செய்து உள்ள னர். இதில் ஆண்கள்- 55.62 சதவீதம். பெண்கள்- 44.38 சதவீதம். 2021-ம் ஆண்டு 13,089 பேர் தற்கொலை செய்து உள்ளனர். இதில் ஆண்கள்- 56.51 சதவீதம். பெண்கள்- 43.49 சதவீதம் என்று குறிப் பிடப்பட்டு உள்ளது. இதனால் மாணவிகளை விட மாணவர்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

    மதிப்பெண்களை வைத்து ஒருவரின் அறிவை மதிப்பிட முடியாது. ஆனால் மதிப்பெண்கள் தான் உயர் கல்விக்கும், நல்ல வேலை பெறவும் ஆதாரமாக இருக்கிறது. எனவே நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். தேர்வில் மதிப்பெண் பெற முடியாத நிலை ஏற்படும் போது குற்ற உணர்ச்சி கொள்ள எந்த அவசியமும் இல்லை. மீண்டும் படித்து தேர்ச்சி பெற முயற்சி செய்ய வேண்டும். இதற்கு மாணவர்- ஆசிரியர் இடையே உறவு மேம்பட வேண் டும். பாடம், படிப்பு, தேர்வு என்பதை தாண்டி உலகம் எவ்வளவு அதிசயங்களை உள்ளிடக்கியது என்பதை ஆசிரியர்கள் மாணவர் களுக்கு புரிய வைக்க வேண்டும் ஆசிரியர்கள், மாணவர்களை சமூகத்தில் தைரியமாக வாழத் தகுதி உடையவர்களாக உருவாக்க வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களை தொடர்ந்து வழங்க வேண்டும்.

    பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் தோல்வி அடைவது என்பது கவனக்குறைவால் ஏற்படும் சிறு சறுக்கல், தடுமாற்றம் தான் என்பதை மாணவர்கள், இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தவறுகள், தோல்விகள், இழப்புகள், பலவீனங்களில் இருந்து மீண்டும் வர முடியும். படிப்பு, தேர்வு உள்பட எந்த தோல்வியும் வாழ்க்கையை விட மேலானது, உயர்ந்தது அல்ல. எத்தனை தோல்வி அடைந்தாலும் வாழ்ந்து காட்ட வேண்டும். அது தான் ஒரு பிறப்பின் அர்த்தத்தை சமூகத்துக்கு விளக்கும் சான்றாக இருக்க முடியும்.

    • கையெழுத்து மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
    • மோசமான கையெழுத்தால் மதிப்பெண்களை இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    கையெழுத்து அழகாக இருந்தால் வாழ்க்கையும் அழகாக மாறும் என்பார்கள். அந்த அளவுக்கு கையெழுத்து மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கையெழுத்து மோசமாக இருந்தால் அதை படிப்பவர்கள் புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கும். தேர்வில் அதன் தாக்கம் வெளிப்படும்.

    மோசமான கையெழுத்தால் மதிப்பெண்களை இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பேனா கொண்டு எழுதும் நடைமுறை குறைந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் மாணவர்களை பொறுத்தவரை கையெழுத்து முக்கியமானது. அதுதான் அவர்களின் மதிப்பெண்ணையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். கையெழுத்தை மேம்படுத்துவதற்கு உதவும் சில டிப்ஸ்கள் குறித்து பார்ப்போம்.

    * தினமும் எழுதி பார்ப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அது கையெழுத்தை மேம்படுத்துவதற்கு சிறந்த தொடக்கமாக அமையும். குழந்தைகள், மாணவர்களை பொறுத்தவரை வீட்டு பாடங்கள் எழுதுவதுடன் நிறுத்திவிடக்கூடாது. படிக்கும் பாடங்களை எழுதி பார்க்கலாம். அது நன்றாக நினைவில் பதிவதற்கு வழிவகுக்கும். புத்தகங்கள், பத்திரிகை செய்திகளை எழுதி பார்த்தும் பயிற்சி பெறலாம். இந்த விஷயத்தில் குழந்தைகளின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்களுக்குள்ளாகவே ஆர்வம் எழ வேண்டும். அதற்கேற்ப அவர்களை கவரும் வகையிலான எழுது பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அவர்கள் எண்ணத்தில் உதிக்கும் வார்த்தைகளை எழுதுமாறு ஊக்குவிக்கலாம்.

    * இவ்வளவு நேரத்திற்குள் எழுதி முடிக்க வேண்டும் என்று கால நிர்ணயம் செய்யக்கூடாது. அவ்வாறு நிர்பந்திப்பது அவசர அவசரமாக எழுதி பார்க்கும் மன நிலைக்கு தயார்படுத்திவிடும். முக்கியமான தேர்வுக்கு தயாராகும்போது வேண்டுமானால் சற்று வேகமாக எழுதி பார்க்க அனுமதிக்க வேண்டும். அந்த வேகம் எழுத்தின் தரத்தை பாழ்படுத்திவிடக்கூடாது. கையெழுத்து எப்போதும் மாறாமல் ஒரே நிலையில் இருப்பதற்கு ஏதுவாக பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.

    * எழுதி பார்க்கும்போது குழந்தைகள் சரியான தோரணையில் அமர்ந்திருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். மேஜையில் கைகளை வைத்தபடி நிமிர்ந்த நிலையில் அமர்ந்து எழுதுவதுதான் சரியான தோரணையாகும். எழுதும்போது மணிக்கட்டு பகுதியைவிட கைவிரல்களுக்குத்தான் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். அதாவது பேனாவை கைவிரல்கள் அழுத்தி பிடித்திருக்க வேண்டும். அப்போதுதான் எழுத்து முழு வடிவம் பெறும். அழகாகவும் மாறும். கைவிரல்களும், பேனா முனையும் நேர் நிலையில் இருக்க வேண்டும். சில குழந்தைகள் எழுதும்போது கைகளை வளைப்பதுண்டு. இது சரியான தோரணை கிடையாது.

    * பேனா தேர்விலும் கவனம் தேவை. சரியான பேனாவை தேர்ந்தெடுத்தால்தான் எழுத்து வடிவம் அழகு பெறும். எழுத்தின் மீது ஈடுபாடும் அதிகரிக்கும். எழுதும்போது குழந்தைகளின் கைகள் நிதானமாக இருக்க வேண்டும்.

    * காகித தேர்வும் எழுத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கச் செய்யும். அடிக்கோடிட்ட வரிகள் கொண்ட பேப்பரில் குழந்தைகளை எழுத வைப்பது பொருத்தமாக இருக்கும். எழுத்துக்கள் நேர் வரிசையில் இருப்பது உறுதிப்படுத்தப்படும்.

    * இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து போய்விட்டது. காலங்கள் கடந்தும் நினைவுகளை அசைபோடவைக்கும் அசாத்திய ஆற்றல் கடிதத்துக்கு உண்டு. குடும்பத்தை பிரிந்து தொலைதூரத்தில் படிக்கும், வேலை பார்க்கும் இளம் வயதினர் குடும்பத்தினர், உறவினர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கத்தை பின்பற்றலாம். அது அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பை என்றென்றும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.

    • குழந்தைகள் சிலருக்கு, கணக்குப் பாடம் என்றால் மட்டும் அலர்ஜி.
    • கணக்கு தொடர்பான பயம், மற்ற விஷயங்களிலும் அவர்களின் ஞாபக சக்தியைக் குலைக்கிறது.

    மற்ற பாடங்கள் எல்லாவற்றையுமே ஆர்வத்தோடு படிக்கும் குழந்தைகள் சிலருக்கு, கணக்குப் பாடம் என்றால் மட்டும் அலர்ஜியாக இருப்பதுண்டு. இதை அலர்ஜி என்பதைவிட, 'ஃபோபியா' (பயம்) என்றே குறிப்பிட வேண்டும்.

    ஆம்...! அமெரிக்காவின் ஒஹையோவில் உள்ள கிளீவ்லேண்ட் ஸ்டேட் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் ஆஷ்கிராப்ட் இது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்திருக்கிறார். அதில் பல அதிர்ச்சியான தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

    கணித பயம் குறித்து பல்கலைக்கழக மாணவர்களிடம் அவர் செய்த ஆய்வில், கணக்கு தொடர்பான பயம், மற்ற விஷயங்களிலும் அவர்களின் ஞாபக சக்தியைக் குலைக்கிறது. கூடவே படிப்பு மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடுகிறதாம். இதனால், அவர்கள் மிகச் சாதாரணமான இரண்டு எண்களைக் கூட்டுவது போன்ற விஷயங்களுக்குக் கூட பதற்றமும், திணறலும் அடைகிறார்கள். சிலருக்கு ரத்த அழுத்தத்தின் அளவும், இதயத் துடிப்பின் அளவும் எகிறியதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

    இதற்கான காரணம் குறித்து விளக்குகையில், ''எண்களைப் பார்த்ததும் இவர்களது மனதில் ஏராளமான சிந்தனைகள் அலைமோதுகின்றன. அதனால் கணக்கிடத் தேவையான சிந்தனையோ, பொறுமையோ அவர்களிடம் இல்லாமல் போகிறது. இதனால் நாளடைவில் அவர்களின் தன்னம்பிக்கை தளர்ந்து போகிறது.

    இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி... கணிதம் தொடர்பான பயத்தை மழலை பருவத்திலேயே அகற்றி, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதுதான். கணக்கு என்றவுடனே, முகம் சுழிக்கும் குழந்தைகளுக்கு, அதை உற்சாகமாக எதிர்கொள்ளும் வழிமுறைகளை கற்றுக்கொடுங்கள். அப்போது அவர்களது பதற்றமும், கணக்கு பயமும் குறைந்துவிடும்'' என்கிறார் ஆஷ்கிராப்ட்.

    • என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் இன்றே தேர்வுக்கான பயிற்சியை தொடங்குங்கள்.
    • இந்த தேர்வுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் இலவச பயிற்சிகள் குறித்து காண்போம்.

    ஸ்டாப் செலக்சன் கமிஷன் - எஸ்.எஸ்.சி (Staff Selection Commission-S.S.C) என்ற அமைப்பு, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது 20 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வுக்கான (Combined Graduate Level Exam) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இந்த தேர்வு நடைபெறும் விதம் குறித்த தகவல்கள் கடந்த வாரம் வெளியானது. இந்த வாரம் இந்த தேர்வுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் இலவச பயிற்சிகள் குறித்து காண்போம்.

    மனத்தடையை அகற்றுங்கள்

    எஸ்.எஸ்.சி தேர்வுகள் கடினமானவை, ஆங்கிலப் பகுதிக்கு விடையளிப்பது என்னால் முடியாது, ஆங்கிலம் தெரியாது, கணிதம் எனக்கு வராது, ரீசனிங் (Reasoning) பகுதி எனக்குப் புரியாது.... போன்றவை இந்த தேர்வு எழுதாமைக்கு மாணவர்கள் சொல்லும் காரணங்கள்.

    பொதுவாக நமது மாணவர்கள், "எனக்கு கணக்கு வராது, ஆங்கிலம் புரியாது என தனக்குத்தானே மனத்தடைகளை (Mental Barriers) ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சிறு வயதில் அவ்வப்போது நாம் சந்தித்த சில தோல்வி களின் காரணமாக நமக்கு நாமே தடைகளையும், தவறான எண்ணங்களையும் உருவாக்கிக் கொண்டு அதை முழுமையாக நம்பி விடுகிறோம்.

    இதனால் கணக்கு பாடத்தை கண்டாலே வெறுப்பு வருவதுடன், அதில் தங்களால் நல்ல மதிப்பெண்கள் பெற முடியாது, தனக்கு அந்தப்பாடம் ஒத்துவராது என்ற எண்ணம் வந்துவிடுகிறது. இதனால் முயற்சியை கைவிடுகின்றனர். ஆனால் பயிற்சியின் மூலம் இந்த மனநிலையை மாற்ற முடியும்.

    1954-க்கு முன்பு வரை ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் ஓடிக் கடப்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகவே தடகள வீரர்களால் நம்பப்பட்டு வந்தது. ஆனால் 1954-ம் ஆண்டு மே மாதம் இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஜர் பெனிஸ்டர் ஒரு மைல் தூரத்தை 3 நிமிடங்கள் 59.4 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இதுபோல ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் புதிய சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. முடியும் என்ற நம்பிக்கையும், கவனக்குவிப்புமே, தடைகளைத் தாண்டி வெற்றி பெற வழி வகுக்கிறது.

    எனவே, என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் இன்றே தேர்வுக்கான பயிற்சியை தொடங்குங்கள். உங்களுக்கான பயிற்சிகளை நீங்கள் வீட்டில் இருந்தபடி அல்லது வேலை செய்துகொண்டு மற்ற நேரங்களில் எடுத்துக்கொள்ள முடியும். இந்த பயிற்சிகளை தமிழக அரசு இலவசமாக அளிக்கிறது. அதுதொடர்பான விவரங்கள் வருமாறு:-

    மெய்நிகர் கற்றல் வலைத்தளம்

    தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையானது அரசு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு உதவும் நோக்கில் இணைய வழியிலான மெய்நிகர் கற்றல் வலைத்தளத்தை (Virtual Learning Portal) செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற மாணவர்கள் உள்பட அனைத்துப் போட்டியாளர்களும் பயனடையும் வகையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் மெய்நிகர் கற்றல் (Virtual Learning) என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.

    இது TNPSC (Group I, Group II, Group IV and Group VIIB/VIII) TNUSRPB, UPSC, SSC, Airforce, IBPS, RRB போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகளை கொண்டுள்ளது.

    ஒருங்கிணைந்த இணைய வழியிலான மெய்நிகர் கற்றல் முறையின் மூலம் மாணவர்கள் எந்த இடத்திலிருந்தும் எந்த நேரத்திலும் கற்கும் சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். போட்டித் தேர்வுக்கு தயார் செய்துவரும் இளைஞர்கள் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் தங்கள் பெயரை கட்டணமின்றி இலவசமாக பதிவு செய்து பயன் பெறலாம்.

    சிறப்பம்சங்கள்

    கிராமப் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களின் தேவை அறிந்து தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் அனைத்து மென்பாடக்குறிப்புகளும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மேலும், இம்மென்பாடக்குறிப்புகளை ஆஃப் லைன் முறையிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில், மாதிரி தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டுத் தேர்வுகளை மேற்கொண்டு பயிற்சி பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் தினந்தோறும் எடுக்கப்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாத தொலைதூரத்தில் உள்ள இளைஞர்கள் பயனடையும் வகையில் பயிற்சி வகுப்புகளுக்கான காணொலி பாடக் குறிப்புகளும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

    தன்னார்வ பயிலும் வட்டம்

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், தன்னார்வ பயிலும் வட்டம் செயல்படுகிறது. இதில் அனைவரும் உறுப்பினராகலாம். கட்டணம் எதுவுமில்லை. போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து மாதாந்திர சஞ்சிகைகள், தினசரி நாளிதழ்கள் மற்றும் TNPSC, வங்கிப்பணி (IBPS), SSC, ரெயில்வே தேர்வாணையம் மற்றும் யு.பி.எஸ்.சி, என்ஜினீயரிங் துறை போன்ற அனைத்து வகை தேர்வுகளுக்கான புத்தகங்களும் இங்கே உள்ளன.

    இதைத் தவிர இப்போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும், நடத்தப்படுகின்றன. அனைத்து வகுப்பு (கம்யூனிட்டி) இளைஞர்களும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

    இத்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகும் விவரம், தேர்வு முடிவுகள், இதர துறை வேலைவாய்ப்புகள், ஒவ்வொரு வருடமும் எஸ்.எஸ்.சி, யு.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி போன்ற பலவகை தேர்வு வாரியங்களில் என்னென்ன தேர்வுகள் எந்த மாதத்தில் நடைபெறும் என்னும் கால அட்டவணை போன்ற வேலைவாய்ப்பு விவரங்களும் இந்த தன்னார்வ பயிலும் வட்டத்தில் கிடைக்கிறது.

    கல்வி தொலைக்காட்சி

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பாக டி.என்.பி.எஸ்.சி (TNPSC), ரெயில்வே தேர்வாணையம் (RRB), பணியாளர் தேர்வு குழுமம் (SSC), வங்கிப் பணியாளர் சேவைகள் குழுமம் (IBPS) உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தயாராகும் மாணவ - மாணவிகள் பயன்பெறும் வகையில் போட்டித் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக நடைபெறும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாதவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டு அரசுப் பணிக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தினமும் காலை 7 மணியிலிருந்து 9 மணி வரையிலும், இதன் மறு ஒளிபரப்பு இரவு 7 மணியிலிருந்து 9 மணி வரையிலும் ஊக்கவுரைகள், முந்தைய ஆண்டுகளில் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    மேலும், தினசரி நிகழ்ச்சிகளை TN Career Services Employment என்ற Youtube Channel - ல் அடுத்தடுத்த நாட்களிலும் காணலாம். எனவே, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் அனைத்து இளைஞர்களும் கல்வி தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சியினை கண்டு பயன்பெறலாம்.

    இந்த தேர்வுக்கு தயாராகும் முறைகள், மாதிரி வினாத்தாள்கள் குறித்த விவரங்களை அடுத்த வாரம் காணலாம்.

    எம்.கருணாகரன்,

    துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), கோவை.

    • கரைப்புதுார் ஊராட்சி காளிநாதம்பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.
    • 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதுார் ஊராட்சி காளிநாதம்பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

    6 முதல் 10ம் வகுப்பு வரை மொத்தம் மூன்று வகுப்பறைகள் மட்டுமே உள்ள சூழலில் இடப்பற்றாக்குறை உள்ளது. இதனால் போதிய இடம் இல்லாமல், தற்காலிகமாக அமைக்கப்பட்ட இரும்பு தகர ஷீட் கூரையின் கீழ் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: காளிநாதம்பாளையத்தில் அரசு ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் ஒரே வளாகத்தில் அமைந்து ள்ளன. போதிய கட்டட வசதி இல்லாமல் மாணவர்கள் திறந்த வெளியில் அமர வைக்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்படும்நிலை உள்ளது. பள்ளிக்கு மாற்று இடத்தில் கட்டடம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. இடப்பற்றா க்குறையால் மாணவர்களும், ஆசிரியர்களும் தவிர்த்து வருகின்றனர். போதிய இடம் இல்லாமல் அருகிலுள்ள ஊராட்சிக்கு சொந்தமான கட்டடமும் தற்காலிகமாக கல்வி கற்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. வகுப்பறை பற்றாக்குறையை கருத்தில் கொண்டு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் புதிதாக கட்டடம் கட்ட விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பிரகாஷ் என்ற மாணவன் நன்னிலம் அரசு கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பித்திருந்தார்.
    • கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் மாணவன் ஒருவன் தவித்துக்கொண்டிருந்தான்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள திருக்கண்ணமங்கையை சேர்ந்த பிரகாஷ் என்ற மாணவன் பிளஸ் 2 முடிந்த நிலையில், நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு, விண்ணப்பித்திருந்தார்.

    கல்லூரியில் சேர்வதற்கான அழைப்பானை வந்த நிலையில், கல்லூரி கட்டணம் செலுத்தாமல் தவித்திருந்த மாணவனுக்கு, நன்னிலம் ரோட்டரி சங்கம் சார்பில், கல்லூரியில் சேர்வதற்கான கட்டணத் தொகை செலுத்தப்பட்டது.

    மேலும் அம்மாணவனின் கல்லூரி படிப்புக்கான முழு செலவையும் நன்னிலம் ரோட்டரி சங்கம் ஏற்றுக்கொள்வதாக மாணவனின் பெற்றோரிடம், தெரிவிக்கப்பட்டது மாணவனுக்கான கல்லூரி செலவினை ரோட்டரி சங்க தலைவர் பாரி, முன்னாள் தலைவர் உத்தமன், ரோட்டரி சங்க உறுப்பினர் பரிமளா காந்தி ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.

    • கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் படிப்பவர்கள் வேலைவாய்ப்புகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை.
    • அரசு பணிவாய்ப்புகளும் நிறைய உண்டு.

    பொறியியல் படிப்பில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், ஐ.டி. எனப்படும் தகவல் தொழில் நுட்பம், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் போன்ற பாடப்பிரிவுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மவுசு இருந்துகொண்டுதான் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தொழில்நுட்பத்துறையில் தேக்க நிலை ஏற்பட்டபோதுகூட மாணவர்கள் ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் சேருவதை முற்றிலுமாக தவிர்த்துவிடவில்லை.

    பொறியியல் பாடப்பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் மற்றும் ஐ.டி. படிப்புகள் 'எவர் கிரீன்' படிப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இன்றைய தினம் அனைத்து துறைகளும் கணினிமயமாகிவிட்ட சூழலில் இந்த இரண்டு படிப்புகளுக்கும் எப்போதும் தேவை இருந்துகொண்டுதான் இருக்கும்.

    கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் கம்ப்யூட்டர் ஆர்க்கிடெக்சர், டேட்டா ஸ்ட்ரக்சர், டேட்டா பேஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம், டிசைன் மற்றும் அனலிசிஸ், ஜாவா மற்றும் இன்டர்நெட் புரோகிராமிங், ஆபரேட்டிங் சிஸ்டம், சாப்ட்வேர் என்ஜினீயரிங், மைக்ரோ புராசசர்ஸ் மற்றும் கண்ட்ரோலர்ஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், டிஜிட்டல் சிக்னல் புராசசிங் முதலிய பாடங்கள் இடம்பெறுகின்றன.

    பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் முடிப்பவர்கள், சாப்ட்வேர், எம்பெட்டட் சிஸ்டம்ஸ், கம்ப்யூட்டிங், நெட்வொர்க் மற்றும் டேட்டா பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் உள்ளிட்ட துறைகளிலும் தற்போது மிகவும் பிரபலமாகி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துறையிலும் பணியாற்றலாம். அவர்களுக்கு டெவலப்பர், குவாலிட்டி ஸ்பெசலிஸ்ட், கன்சல்டன்ட், கம்ப்யூட்டர் ஆர்க்கிடெக்ட், சாப்ட்வேர் என்ஜினீயர், டேட்டா பேஸ், சிஸ்டம் அனலிஸ்ட், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் உள்ளிட்ட பதவிகள் அளிக்கப்படுகின்றன. இப்போதும், வருங்காலத்திலும் அனைத்து துறைகளிலும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கு தேவை இருந்துகொண்டே இருக்கும்.

    எனவே, கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் படிப்பவர்கள் வேலைவாய்ப்புகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. தற்போது அரசு துறைகள் அனைத்தும் வேகமாக கணினிமயமாக்கப்பட்டு வருவதால் அரசு பணிவாய்ப்புகளும் நிறைய உண்டு. மேலும், பள்ளிகளில் ஆசிரியர், பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர், பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி என கற்பித்தல் துறைகளிலும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

    இப்போதெல்லாம் அரசு மற்றும் தனியார் வங்கிகள் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பட்டதாரிகளைச் சிறப்பு அதிகாரி பதவியில் அதிக எண்ணிக்கையில் பணியமர்த்தி வருகின்றன. எனவே, வங்கித்துறையில் பணியாற்ற விரும்புவோருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

    • குழந்தைகளுக்கு எதிலும் தீவிர கவனம் இருக்காது.
    • ஆசிரியர் பாடம் நடத்தும்போது அவர் சொல்வதை கவனமாக கேட்க வேண்டும்.

    மாணவர்கள் தங்கள் எண்ணங்களை கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தினால் தான் கல்வியில், வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும். குழந்தைகளுக்கு எதிலும் தீவிர கவனம் இருக்காது. அவர்களது மனம் அலைபாய்ந்துகொண்டே இருக்கும். அதுபோன்ற நிலையில் இருப்பவர்கள் தங்கள் எண்ணங்களை கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தினால் தான் கல்வியில், வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும். அவ்வாறு வெற்றிகளைப்பெற மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி என்பதை காண்போம்.

    1) இரவில் நிம்மதியான, ஆழ்ந்த உறக்கம் மிக அவசியம். அப்போது தான் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்த முடியும். மருத்துவ ரீதியல் ஒரு மனிதனுக்கு தினமும் குறைந்தபட்சம் 8 மணி நேர தூக்கம் அவசியம். சரியான உறக்கம் இல்லை என்றால் உடலும் மனமும் சோர்ந்து கல்வி கற்பதில் தடுமாற்றம் ஏற்படும். எனவே இரவில் நீண்ட நேரம் டெலிவிஷன் பார்ப்பது, திரைப்படங்கள் பார்ப்பது போன்றவற்றை தவிர்த்து சரியான நேரத்திற்கு உறங்கச்சென்று அதிகாலையில் விழித்து படிப்பது நல்லது.

    2) காலை உணவு மிக அவசியம். சிலர் பள்ளிக்குப்புறப்படும் அவசரத்தில் காலை உணவை தவிர்ப்பதுண்டு. இது ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இரவு நீண்ட நேரத்திற்கு பிறகு வயிறு காலியாக இருக்கும். எனவே காலை உணவு சாப்பிட்டால் தான் உடலும், மூளையும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். இல்லை என்றால் உடலும், மூளையும் சோர்ந்து போகும். ஆர்வமுடன் படிக்க முடியாது. படிப்பதும் மனதில் பதியாது.

    3) ஆசிரியர் பாடம் நடத்தும்போது அவர் சொல்வதை கவனமாக கேட்க வேண்டும். அவர் கரும்பலகையில் எழுதிப்போடும் குறிப்புகளை கவனமுடன் எழுதிக்கொள்ள வேண்டும். ஆசிரியர் பாடம் நடத்தும் போது மனதை அலைபாய விடுவது, கவனக்குறைவாக இருப்பது போன்றவை கூடாது.

    4) ஒவ்வொரு வகுப்பிற்கும் இடையில் சிறிதுநேரம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். அதாவது ஒரு சில நிமிடங்கள் கண்களை மூடி அமைதியாக இருந்தாலே போதும். இவ்வாறு செய்வதன் மூலம் அடுத்தடுத்த வகுப்புகளை ஆர்வத்துடன் கவனிக்க முடியும்.

    5) வகுப்பறையில் அமரும்போது எப்போதும் நேராக, நிமிர்ந்து அமருங்கள். உடலை வளைத்துக்கொண்டு அமரக்கூடாது.

    6) கவனம் தடைப்படும்போது உடலை அசைத்துக்கொள்ளலாம். கை, கால்களை அசைத்து உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து சுறுசுறுப்பை உருவாக்கலாம். கொஞ்சம் தண்ணீர் குடித்தாலும் உடலில் சுறுசுறுப்பு ஏற்படும்.

    • வெளிநாட்டுக்கு சென்று படிக்கும் ஆர்வமும், மோகமும் மாணவர்களிடம் மேலோங்கி உள்ளது.
    • வெளிநாட்டுக்கு செல்லும் முன் மாணவர்கள் சில விஷயங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

    வெளிநாட்டுக்கு உயர்கல்வி படிக்க செல்லும் ஆர்வமும், மோகமும் மாணவர்களிடம் மேலோங்கி உள்ளது. அங்குள்ள பல்கலைக்கழகங்களில் இணைந்து படிப்பை தொடர்வதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    வெளிநாட்டுக்கு சென்று படிக்க முடிவு செய்துவிட்டால் முதலில் மேற்கொள்ள வேண்டிய விஷயம் விசாவுக்கு விண்ணப்பிப்பதுதான். அங்கு எத்தனை ஆண்டு கல்வி கற்க போகிறீர்கள் என்பதை குறிப்பிட்டு கல்வி விசாவுக்கு விண்ணப்பித்துவிட வேண்டும். அதை விட முக்கியமான விஷயம் விசாவுக்கு விண்ணப்பித்திருக்கும் தகவலை பல்கலைக்கழகத்துக்கு தெரியப்படுத்துவதுதான்.

    ஏற்கனவே விசா பெற்றிருந்தாலோ, காலதாமதமாக விசா கிடைக்கும் என்றாலோ அது பற்றியும் பல்கலைக்கழகத்துக்கு உடனே தெரியப்படுத்திவிட வேண்டும். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் கிடைத்துவிட்டால் உடனே கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். அதற்கு தேவையான பணத்தை முன்கூட்டியே தயார் செய்துவிட வேண்டும். பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தவணை முறையில் பணம் செலுத்தும் வசதிகள் உள்ளன. அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    அங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்களுடனும், அவர்கள் பின்பற்றும் கலாசாரங்களுடன் இணைந்து வாழவும் பழகிக்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் அங்கு செல்வதற்கு முன்பே அங்குள்ள கலாசாரங்களை தெரிந்து கொள்வது சிறப்பானது. இணைய தளங்களும், யூடியூப் வீடியோக்களும் அதற்கு உதவும்.

    வெளிநாடுகளில் நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். பெரும்பாலான பல்கலைக்கழகங்கள், அங்கு சேருவதற்கு முன்பு போட வேண்டிய தடுப்பூசிகளின் பட்டியலை வெளியிட்டிருக்கும்.

    அதில் தட்டம்மை, ரூபெல்லா, ஹெபடைடிஸ் பி, கொரோனா தடுப்பூசிகள், பூஸ்டர்கள் ஆகியவை அடங்கும். சர்வதேச பயணங்கள் மேற்கொள்வதற்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்ற தடுப்பூசிகளில் எவையெல்லாம் அவசியம் போட வேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விமான டிக்கெட் புக்கிங் செய்வதற்கு காலம் தாழ்த்தக்கூடாது. அங்கு சென்று படிப்பது உறுதியாகிவிட்ட உடனேயே விமான டிக்கெட் புக்கிங் செய்துவிடுவதுதான் நல்லது. கடைசி நேரத்தில் புக்கிங் செய்வது தேவையற்ற பதற்றத்தை வரவழைக்கும். டிக்கெட்டின் விலையும் அதிகமாக இருக்கும். ஆரம்பத்திலேயே டிக்கெட் முன் பதிவு செய்யும்போது சவுகரியமான பயணத்திற்கு திட்டமிட்டு விடலாம். பயண சலுகைகளையும் பெறலாம்.

    வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது பண விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். கூடுமானவரை டிஜிட்டல் பணமாக வைத்திருப்பதுதான் சிறந்தது. அங்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் சர்வதேச வங்கிகளின் ஏ.டி.எம்., கிரிடிட் கார்டுகளை கைவசம் வைத்திருப்பது நல்லது.

    அத்தகைய கார்டுகளை பயன்படுத்துவது பாதுகாப்பானது. வெளிநாட்டில் வங்கிக்கணக்கைத் திறக்கும் வரை ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு அவற்றை பயன்படுத்தலாம்.

    வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வது அவசியமானது. அவசிய தேவை இருப்பின் டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து, மாத்திரைகளின் சீட்டுகளை உடன் எடுத்துச் செல்லலாம்.

    இரண்டு வாரங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்லலாம். அந்த பொருட்களை விமானத்தில் எடுத்து செல்ல அனுமதி இருக்கிறதா? என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியமானது.

    விமான வழிகாட்டு நெறிமுறைகளை படித்து பார்த்துவிட்டு பயணத்தை மேற்கொள்ள வேண்டும். சில நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விஷயங்கள் மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்டதாக இருக்கலாம். அதனால் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

    • அறிவு சார்ந்த புத்தகங்கள் விற்று மற்றவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கிறேன்.
    • தினமும் காலையிலிருந்து எனது பணியை தொடங்கி வீதி வீதியாக நடந்தே சென்று புத்தகங்கள் விற்கிறேன்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பிள்ளையார்பட்டி அருகே உள்ள பூக்கொல்லையை சேர்ந்தவர் அப்துல்முனாப் (வயது 54).

    இவரது மனைவி பரக்கத். இவர்களுக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    அப்துல்முனாப் கடந்த 35 ஆண்டுகளாக புத்தகங்கள் விற்பனை செய்து வருகிறார்.‌

    அதாவது நடந்தே சென்று பல இடங்களில் புத்தகங்கள் விற்று வருகிறார்.

    தான் சரியாக படிக்கவில்லை என்றாலும் புத்தகங்கள் விற்பனை செய்து அதனை படிப்பவர்களுக்கு அறிவு களஞ்சியத்தை மேம்படுத்தி கொள்ள தன்னால் ஓரளவு முடிகிறதே எண்ணி பெருமை கொள்கிறார்.

    இது குறித்து அப்துல் முனாப் கூறும் போது:-

    நான் தொடக்கப் பள்ளியை தாண்டவில்லை.

    இருந்தாலும் அறிவு சார்ந்த புத்தகங்கள் விற்று மற்றவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கிறேன்.

    குழந்தைகளுக்கான வாய்ப்பாடு முதல், இந்தியா, உலக மேப், சமையல் கலை புத்தகம், ஜோதிட புத்தகம், நகைச்சுவை புத்தகம், காந்தியடிகள், பாரதியார் உள்ளிட்ட பல்வேறு தேச தலைவர்களின் வரலாற்று புத்தகங்கள், சிந்திக்க தூண்டும் புத்தகங்கள் என பல்வேறு வகையான புத்தகங்களை விற்று வருகிறேன்.

    இதற்காக வாரத்தில் ஒரு நாள் திருச்சிக்கு சென்று புத்தகங்களை மொத்தமாக கொள்முதல் செய்கிறேன்.

    பின்னர் தஞ்சை நகரில் தினமும் காலையிலிருந்து எனது பணியை தொடங்கி வீதி வீதியாக நடந்தே சென்று புத்தகங்கள் விற்கிறேன்.

    மேலும் சீர்காழி ,மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் பஸ், ரயில்களில் சென்று அங்கும் எனது பணியை தொடர்கிறேன்.

    தினமும் ஓரளவுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.

    இந்த வருமானத்தைக் கொண்டுதான் எனது மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்தேன்.

    மற்றவர்களுக்கு அறிவு களஞ்சியத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் எனது பணி இருப்பதால் மகிழ்ச்சி தான். தினமும் ஒரளவு வருமானம் வருவதால் தடையின்றி புத்தகங்கள் விற்று வருகிறேன்.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் குறைந்த அளவு வருமானம் கிடைத்தது.

    தற்போது நிலைமை சீராகி இயல்பு நிலை திரும்பியதால் வழக்கம்போல் எனது புத்தகங்கள் விற்கும் பணி தடையின்றி தொடர்கிறது.

    புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு குறைந்த விலையில் அதனை கொடுக்கிறேன் என்றார்.

    • பி.எஸ்.சி. விஸ்காம் பாடத்திட்டம் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
    • இத்துறை பட்டதாரிகள் கலையை உருவாக்குவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

    விஸ்காம் என்பது விஷுவல் கம்யூனிகேஷன் என்பதன் சுருக்கமாகும். விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை அறிவியல் (பி.எஸ்.சி.) என்பது மூன்று வருடப் பட்டப் படிப்பாகும். இந்த இளங்கலை பட்டப்படிப்பானது முழு நேரமுறையில் ஆறு மாதங்களுக்கு ஒரு செமஸ்டர் என்ற வகையில் ஆறு செமஸ்டர்களைக் கொண்டதாகும்.

    இது இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வெகுஜன தொடர்பு படிப்புகளில் ஒன்றாக சிறப்பான முறையில் வழங்கப்படுகின்றது. பி.எஸ்.சி. விஷுவல் கம்யூனிகேஷன் பாடநெறியானது பொது தகவல் தொடர்பு மற்றும் ஊடகத்தில் காட்சி மற்றும் எழுதப்பட்ட அம்சங்களில் கவனம் செலுத்துகிறது.

    இந்தப் பாடநெறியானது மாணவர்களுக்கு திரைப்படங்கள் மற்றும் ஊடகத் தயாரிப்பு மற்றும் தயாரிப்புக்கு பிந்தைய செயல்முறைகள் பல்வேறு பட மற்றும் காணொளி தொகுப்பாக்க மென்பொருள், அனிமேஷன் மென்பொருள் மற்றும் எழுதுதல், பிற தகவல் தொடர்பு திறன்களைப் பயன்படுத்துவதற்கு சிறந்த பயிற்சியை அளித்து அவர்களைத் திறமையானவர்களாக உருவாக்குகின்றன.

    கல்வித்தகுதி

    இந்த மூன்று வருட இளங்கலை பட்டப்படிப்பில் சேருவதற்கு +2வில் அறிவியலை முதன்மை பாடமாகப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில கல்லூரிகள் இப்பட்டப்படிப்பில் இணைவதற்கு தனியாக நுழைவுத் தேர்வு மற்றும் நேர்காணலை நடத்தி மாணவர்களைத் தேர்ந்தெடுக்கின்றன.

    பாடங்கள்

    மனித இணைப்பு, காட்சி எழுத்தறிவு, வரைதல், கலை மற்றும் அழகியல், திரைப்படக் கூறுகள், திரைப்படப் பாராட்டு, வானொலி பிரதிநிதித்துவம், விளம்பர அடிப்படைகள், ஸ்கிரிப்ட் எழுதுதல், கிராஃபிக் வடிவமைப்பு, விளம்பர படைப்பாற்றல், ஊடக கலாச்சாரம் மற்றும் சமூகம், விளம்பரத்தில் ஊடக திறன்கள், புகைப்படம் எடுத்தல், காட்சி அழகியல், நடிப்புத் திறன், காட்சி பகுப்பாய்வு, தொடர்பு கோட்பாடுகள், ஊடக ஆராய்ச்சி முறைகள், தொடர்பு மேம்பாடு, தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு, காட்சிப்படுத்தல் மற்றும் விளக்கம், தொழில்முறை புகைப்படம் எடுத்தல், நகல் எழுதுதல், ப்ராஜெக்ட், ஆய்வு காகிதம் (ஸ்டடி பேப்பர்), கட்டுரைகள், இன்டர்ன்ஷிப், ஊடக விளக்கத்திறன்கள் மற்றும் ஊடக மேலாண்மை இவை அனைத்தையும் இந்த மூன்று வருட பட்டப் படிப்பானது மாணவர்களுக்கு பாடங்களாக வைத்து கற்றுத் தருகின்றது.

    பி.எஸ்.சி. விஸ்காம் படிப்பை வெற்றிகரமாக முடித்த பிறகு எம்.எஸ்.சி. வெகுஜன தொடர்பு (மாஸ் கம்யூனிகேஷன்), விஸ்காம், ஒளிபரப்பு, விளம்பரம், சந்தைப்படுத்தல், டிஜிட்டல் ஊடகம் போன்ற துறைகளில் முதுகலை பட்டப்படிப்பை படிக்கலாம். எம்.எஸ்.சி. மட்டுமல்லாமல் முதுகலை டிப்ளமோ படிப்பையும் தேர்ந்தெடுக்கலாம். பி.எஸ்.சி. பட்டதாரிகள் முதுகலை எம்.பி.ஏ. படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு முக்கிய காரணம் எம்.பி.ஏ. முடித்தவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பும் உயர்ந்த ஊதியமுமே ஆகும்.

    கற்பனை மற்றும் படைப்பாற்றல் குறைவான மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பி.எஸ்.சி. விஸ்காம் பாடத்திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துறை பட்டதாரிகள் கலையை உருவாக்குவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

    வேலை வாய்ப்புகள்

    * ஊடகத் தொழில் துறை

    * திரைப்படத்துறை

    * வீடுகளை வடிவமைத்தல்

    * ப்ரொடக்ஷன் ஹவுசஸ்

    * விளம்பரத்துறை

    * தொலைக்காட்சி தயாரிப்பு

    * வீடியோ கேமிங்

    * வலைத்தளம்

    பதவிகள்

    * கிராபிக் ஆர்டிஸ்ட் - இவர்கள் காட்சி கருத்துக்களை கையால் அல்லது கணினி மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கி நுகர்வோரை வசீகரிக்கிறார்கள்.

    * டெஸ்கிடாப் பப்ளிசர்ஸ் - கணினி மென்பொருளைப் பயன்படுத்தி செய்தித் தாள்கள், பத்திரிகைகள், புத்தகங்கள், சிற்றேடுகள் மற்றும் பிற பொருட்களுக்கான பக்க தாளவமைப்புகளை வடிவமைக்கின்றனர்.

    * புகைப்படக் கலைஞர்

    * அனிமேட்டர்

    * கார்டூனிஸ்ட்

    * வெப் டிசைனர்

    இதுபோன்ற இன்னும் பல பதவிகள் இளங்கலை விஸ்காம் பட்டதாரிகளுக்கும் காத்துக் கிடக்கின்றன.

    இத்துறையில் வேலைக்கு புதியதாக நுழைபவர்களுக்கு துவக்க வருமானம் குறைந்த அளவில் இருந்தாலும் ஆர்வமும், கற்பனைத் திறனும், அனுபவமும் அவர்களுக்கு எதிர்காலத்தில் மிக நல்ல வருமானத்தை ஈட்டித்தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

    • இந்த படிப்புகள் பொது மற்றும் தனியார் துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
    • இந்தப் படிப்பு நவீன வீட்டு பராமரிப்புடன் மாணவர்களை தொடர்பு படுத்துகிறது.

    ஹோம் சயின்ஸ் என்பது வீட்டு அறிவியல் என்று எளிமையாக கூறப்பட்டாலும் அது ஒரு அறிவியல் மட்டுமல்ல ஒரு கலையும் கூட. நம்மில் பெரும்பாலானவர்கள் ஹோம் சயின்ஸ் என்பது வெறும் சமையல், சலவை தையல்வேலை ஆகியவை மட்டுமே என்று நினைக்கிறார்கள். ஆனால், இது இயற்பியல், உயிரியல், சமூக அறிவியல், கலை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட அறிவைக் பயன்படுத்தும் இடைநிலை ஆய்வுத்துறை ஆகும்.இந்தப் படிப்பு நவீன வீட்டு பராமரிப்புடன் மாணவர்களை தொடர்பு படுத்துகிறது.

    ஒவ்வொரு நாளும் வீட்டு வேலைகளில் பயன்படுத்தப்படும் அறிவியல் கோட்பாடுகள் (சூடு, குளிர்ச்சி, ஊட்டச்சத்து, பாதுகாத்தல் போன்றவை) குறித்த அறிவை வழங்குவதால் இது ஒரு அறிவியல் சார்ந்த படிப்பு என்று சொல்லலாம். சிறந்த வாழ்க்கைக்கான கல்வி என்று கூறப்படும் இந்த வீட்டு அறிவியலின் அடிப்படை குடும்ப அமைப்பாகும்.

    இயற்கையாக அமைந்திருக்கும் குடும்பத்திற்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட சூழல்களுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை கையாள்வதற்கு இந்தப் படிப்பு பெருமளவில் உதவி செய்கின்றது.இல்லற வாழ்வு, குடும்ப வாழ்க்கை, அறிவார்ந்த சிந்தனை மற்றும் இந்த வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தி, வீட்டையும் குடும்பத்தையும் சமூகக் கட்டமைப்பின் பயனுள்ள பகுதிகளாக மாற்றி, வாழ்க்கையை மிகவும் அழகாகவும்,பயனுள்ளதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ள ஒரு நவீன அறிவியல் என்று ஹோம் சயின்ஸ் படிப்பைக் கூறலாம்.

    ஹோம் சயின்ஸ் படிப்பிற்கான அடிப்படை தகுதி

    இளங்கலை பட்டப்படிப்பை படிப்பதற்கு பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை முதன்மைப் பாடங்களாக படித்தும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சில கல்வி நிறுவனங்களில் இந்த இளங்கலை பட்டப் படிப்பிற்கு பன்னிரண்டாம் வகுப்பில் எந்த பாடத்திட்டத்தை எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் சேர்க்கைஅனுமதிக்கப்படுகின்றது .இந்தப் பட்டப் படிப்பின் முதல் வருடத்தில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலின்

    அடிப்படைகளை கற்க வேண்டி இருப்பதால் சில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் அறிவியல் பின்னணியில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே இத்துறை படிப்பிற்கான சேர்க்கையை அனுமதிக்கிறார்கள்.

    கல்லூரிகள்

    சண்டிகர், புனே, உதய்பூர், தார்வாட், பங்கா, புது தில்லி மற்றும் தமிழ்நாட்டிலும் பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஹோம் சயின்ஸ் படிப்புகளை சிறப்பாக வழங்கி வருகிறார்கள்.

    பாடநெறிகள்

    * பிஎஸ்சி ஹோம் சயின்ஸ்:இது 3 ஆண்டு கால தொழில்முறை பட்டப் படிப்பாகும். ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் வளர்ச்சி அளவீடுகள் போன்ற அறிவியலின் பல்வேறு துறைகளை இந்தப் படிப்பு உள்ளடக்கி இருக்கின்றது. சுற்றுப்புறம் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் பல்வேறு அறிவியல் சிக்கல்களை கையாள்வதும் இதில் அடங்கும். இந்த இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் மேற்கொண்டு படிக்க விரும்பினால் ஊட்டச்சத்து, உடை, குடும்ப உறவுகள், வீட்டு மேலாண்மை, குழந்தை மேம்பாடு போன்ற சிறப்பு பிரிவுகளில் உயர்கல்வியைத் தொடரலாம்.

    * பிஏ ஹோம் சயின்ஸ்: இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்த மூன்று ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பானது மிகவும் சிறப்பாக வழங்கப்படுகின்றது. பல்வேறு வளங்களை திறம்பட நிர்வகிப்பதில் இந்தப் பாடநெறி கவனம் செலுத்துகிறது. ஒருவரது வீட்டு வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை மற்றும் அறிவுசார் சிந்தனைத் திறனை வளர்ப்பதற்கான அறிவியலும் இதில் அடங்கும். இத்துறை பட்டதாரிகளுக்கு ஆடை விற்பனை, உணவு விடுதிகள், நலன்புரி நிறுவனங்கள் போன்ற தொழில்களில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன..இந்தப் பட்டப் படிப்பில் மாணவர்களுக்கு கோட்பாடு, நடைமுறைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ஆகியவை கொடுக்கப்படுகின்றன.

    * டிப்ளமோ ஹோம் சயின்ஸ் மற்றும் பிஜி டிப்ளமோ ஹோம் சயின்ஸ்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் இந்தப் படிப்பில் இணைந்து படிக்க முடியும்.

    * எம்எஸ்சி ஹோம் சயின்ஸ்: பிஎஸ்சி ஹோம் சயின்ஸ் அல்லது அதற்கு சமமான இளங்கலை பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முடித்தவர்கள் இந்த முதுகலை பட்டப் படிப்பில் இணைந்து படிக்க முடியும்.

    தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள்

    ஹோம் சயின்ஸ் படிப்புகள் பொது மற்றும் தனியார் துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. மாநில அரசுத்துறைகளில் பல்வேறு வேலைகளில் இத்துறை பட்டதாரிகள் பணி அமர்த்தப்படுகிறார்கள்.

    உணவு நிபுணராக இருக்கும் இத்துறை பட்டதாரிகளுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் மிகப்பெரிய அங்கீகாரம் உள்ளது. இந்தத் துறை பரந்த அளவிலான வேலைவாய்ப்புகளை வழங்கிவருகிறது.. கற்பித்தல், உணவுத்தொழில் , சுகாதார பாதுகாப்பு துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் இத்துறை பட்டதாரிகள் பணியாற்ற முடியும். உற்பத்தித் தொழிற்சாலைகள், சுற்றுலா மற்றும் சேவை நிறுவனங்கள், உணவு மற்றும் ஊட்டச்சத்து, ஜவுளித் தொழில் மற்றும் ஆடை நிறுவனங்கள், வள மேலாண்மை, சுய வேலைவாய்ப்பு என பலவிதமான வேலை வாய்ப்புகளை ஹோம் சயின்ஸ் பட்டதாரிகள் பெற முடியும்.

    *வகிக்கும் பதவிகள்

    ஆடைத் தொழிற்சாலைகளில் உற்பத்தி மேலாளர்கள், வண்ண ஆலோசகர்கள், உணவு ஆலோசகர்கள், பேஷன் டிசைனிங், உட்புற வடிவமைப்பாளர்கள், ஆசிரியர்கள்.

    ×