search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 226542"

    • இறுதி நாளான இன்று காலை 7 மணிக்கு மலையேற வனத்துறை அனுமதி அளித்தது.
    • பக்தர்கள் மாலை 3 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமா வாசை பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா குறைந்ததையடுத்து சதுரகிரிக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி கடந்த 25-ந்தேதி முதல் இன்று (30-ந்தேதி) வரை பக்தர்கள் சதுரகிரியில் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் கடந்த 6 நாட்களில் சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பெண்கள், குழந்தைகள் என 50 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர்.

    கடந்த 27-ந்தேதி முதல் சதுரகிரி மலை பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த கனமழையால் மலை பாதைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சிக்கிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மீட்டனர். மழையை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் சதுகிரிக்கு மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

    இறுதி நாளான இன்று காலை 7 மணிக்கு மலையேற வனத்துறை அனுமதி அளித்தது.

    அடிவாரத்தில் குவிந்திருந்த பக்தர்களின் உடமைகள் பரிசோதனை செய்யப்பட்டு தாணிப்பாறை வழியாக அனுமதிக்கப்பட்டனர். இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்த வண்ணம் இருந்தனர். பக்தர்கள் மாலை 3 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது.

    • யார் அவர்? என போலீஸ் விசாரணை
    • ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

    கன்னியாகுமரி:

    ஆடி அமாவாசையான இன்று கன்னியாகுமரி கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலையில் இருந்து குவிய தொடங்கினார்கள்.

    இதனால் கன்னியாகுமரி யில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது இந்த நிலையில்கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடு ரோட்டில் "திடீர்"என்று மயங்கி சுருண்டு விழுந்தார். உடனே அங்கு இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. அவர் ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி கடலில் புனித நீராட வந்த பக்தரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காவிரி ஆற்றின் மறு கரையில் காவிரி, பவானி மற்றும் அமுதநதி என 3 நதிகளும் சங்கமமாகும் பவானி கூடுதுறை உள்ளது.
    • ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களும் பொதுமக்களும் ஆற்றில் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றின் மறு கரையில் காவிரி, பவானி மற்றும் அமுதநதி என 3 நதிகளும் சங்கமமாகும் பவானி கூடுதுறை உள்ளது. இங்கு சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களும் பொதுமக்களும் ஆற்றில் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து ஆயிரக்க ணக்கான மக்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் பரிகார பூஜை செய்து முக்கூடல் ஆற்றில் புனித நீராடினர். அதன் பிறகு சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மன், ஆதிகேசவ பெருமாள், லட்சுமி நரசிம்மர், வள்ளி தேவசமேத ஆறுமுகக்கடவுள் என அனைத்து மூலவர் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

    முக்கூடல் ஆற்றில் ஆன்மீக பக்தர்கள் புனித நீராடவும் பின்னர் உடைகளை மாற்றிக்கொள்ளவும் கோவில் நிர்வாகத்தினர் தனித்தனி இடங்களை ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் ஆற்றில் இறங்கி குளிக்க முடியாதவர்களுக்கு ஆற்றங்கரை படிகட்டுகள் அருகில் சிமெண்ட் தொட்டிகள் கட்டப்பட்டு அதில் காவிரி ஆற்று நீர் நிரப்பப்பட்டு குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.

    ஆற்றில் நீராடும் போது பக்தர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டால் அவர்களை காப்பாற்ற பரிசல்களுடன் பரிசல் வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பவானி போலீஸ் டி.எஸ்.பி சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    கடந்த 2 வருடங்க ளாக கொரானா நோய்த்தொற்றால் பவானி கூடுதுறை ஆற்றில் பரிகாரம் செய்து புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தடைகள் நீக்கப்பட்டதால் ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திருப்பூர், கோவை மாவட்டம் உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பெருமளவில் கலந்து கொண்டு புனித நீராடினர்.

    • மூலவர் வீரராகவரை 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
    • கோவில் நுழைவாயிலில் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டு சென்றனர்.

    திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் அமாவாசை தினங்களில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு செல்வது வழக்கம்.

    இன்று ஆடி அமாவாசை என்பதால் நேற்று இரவே சென்னை, காஞ்சீபுரம், மற்றும் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திர மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவள்ளூரில் குவிந்தனர். அவர்கள் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் தங்கி இருந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு வீரராகவர்கோவில் நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரளான பக்தர்கள் வந்தனர்.

    அவர்கள் கோவில் குளக்கரை அருகேயும், காக்களூர் பாதாளவிநாயகர் கோவில் அருகேயும் புரோகிதர்கள் மூலம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் வீரராகவர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதல் நிரம்பி வழிந்ததால் மூலவர் வீரராகவரை சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும் ரூ.250 கட்டணத்தில் சிறப்பு தரிசனமும் அனுமதிக்கப்பட்டது.

    கோவிலுக்குள் அதிக அளவு கூட்டம் இருந்ததால் பெரும்பாலான பக்தர்கள் கோவில் நுழைவாயிலில் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டு சென்றனர்.

    திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தாணிப்பாறை வழியாக செல்வது மட்டுமே அங்கிகரிக்கப்பட்ட பாதையாக உள்ளது.
    • பக்தர்களுக்கு சமூக ஆர்வலர்கள் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஆடி அமாவாசை தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருவது வழக்கம். இந்த கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக செல்வது மட்டுமே அங்கிகரிக்கப்பட்ட பாதையாக உள்ளது. ஆனால் ஆடிஅமாவாசை தினத்தன்று தேனி மாவட்டம், வருசநாடு அருகே உள்ள உப்புத்துறை பகுதியில் இருந்து மலைப்பாதை வழியாக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.

    அந்த வகையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு வருசநாடு மலைப்பாதை வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நடைபயணமாக செல்ல தொடங்கியுள்ளனர்.

    உப்புத்துறை பகுதியில் இருந்து சுமார் 23 கி.மீ.தூரம் கரடு முரடான மலைப்பாதையில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நடந்து செல்கின்றனர். இந்த வனப்பகுதி புலிகள் காப்பமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்கள் கடுமையான சோதனைக்கு பின்னர் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்து செல்ல வனத்துறையினர் அனுமதித்துள்ளனர்.

    இந்த மலைப்பகுதியில் 3 இடங்களில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் பக்தர்கள் கொண்டு வரும் பைகளை சோதனை செய்து, பிளாஸ்டிக் பைகள், தீப்பெட்டி, பத்தி, சூடம், நெய்விளக்கு போன்றவற்றை பறிமுதல் செய்துவிட்டு நடந்து செல்ல அனுமதிக்கின்றனர். வனத்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்தாலும் சதுரகிரி மகாலிங்கத்தை தரிசனம் செய்தால் போதும் என்ற மனநிலையில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த வழியாக செல்லும் பக்தர்களின் நலனுக்காக சில சமூக ஆர்வலர்கள் 4 நாட்களுக்கு தொடர்ந்து அன்னதானமும், மருத்துவ சேவையும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

    • தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும் என்பது ஐதீகம்.
    • பக்தர்கள் அணைக்கட்டு முனியப்பனுக்கு படையலிட்டு சிறப்பு தரிசனம் செய்தனர்.

    ஆடி அமாவாசை நாளில் நாடு முழுவதும் உள்ள பொது மக்கள் நீர் நிலைகளில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அப்படி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும் என்பது ஐதீகம்.

    அதன்படி இன்று காலை முதலே நீர் நிலைகளில் திரண்டு பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். இதையொட்டி சேலம் மாவட்டத்தில் முக்கிய ஆறான மேட்டூர் காவிரி புதுப்பாலம் மற்றும் பழைய பாலப்பகுதிகளில் இன்று காலை முதலே அதிக அளவில் பக்தர்கள் திரண்டனர். பின்னர் வாழை இலையில் அரிசி மாவில் பிண்டம் செய்து, நெல், தேங்காய் பழங்கள் வைத்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தற்போது 16 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. காவிரி தணணீரில் நீராடிய பக்தர்கள் அணைக்கட்டு முனியப்பனுக்கு படையலிட்டு சிறப்பு தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி மேட்டூர், பூலாம்பட்டி உள்பட சேலம் மாவட்ட காவிரி கரையோர பகுதிகளில் மக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். அவர்களின் பாதுகாப்பு கருதி கூடுதல் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றில் ஆபத்தான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் போலீசார் எச்சரித்த படியே இருந்தனர்.

    சேலம் மாவட்டத்தில் முக்கிய நதிகளான வஷிஷ்ட நதி, சரபங்கா நதி மற்றும் சேலம் மூக்கனேரி, சுகவேனேஸ்வரர் கோவில், அணை மேடு உள்பட பல பகுதிகளிலும் பொது மக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    • முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர்.
    • தர்ப்பணம் கொடுத்தவர்கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றினர்.

    தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் இந்துக்கள் நீர்நிலைகளில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர் நினைவாக தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக நீர் நிலைகளில் பொதுமக்கள் கூடவும், வழிபாடு நடத்தவும் அரசு தடை விதித்து இருந்தது. இந்த ஆண்டு கொரோனா கட்டுக்குள் இருக்கும் நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அந்த வகையில் ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர்.

    இதற்காக 500-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில் திரண்டிருந்தனர். மேலும் காவிரியில் தற்போது தண்ணீர் இருகரைகளையும் தொட்டு கரைபுரண்டு செல்வதால் ஆற்றில் இறங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    தர்ப்பணம் கொடுப்பவர்கள் அனைவரும் மண்டப கரைகளில் அமர வைக்கப்பட்டனர். இதில் ஒரு சில இடங்களில் 10 முதல் 30-க்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் வரிசையாக அமர வைத்து அவர்களது மூதாதையர்களின் பெயர்களை கூறி வேத மந்திரங்களை ஓதினர்.

    பின்னர் பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம், தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிண்டமாக பிடித்து மந்திரங்கள் ஓதிய பின் அவற்றை ஆற்றில் கரைத்து தங்கள் முன்னோர்களை நினைத்தும், அவர்களின் ஆசி வேண்டியும் வழிபட்டனர்.

    காவிரியாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பக்தர்கள் அம்மா மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த தொட்டிகளில் நிரப்பப்பட்ட தண்ணீரில் புனித நீராடினர். மற்றொரு புறம் தடுப்புக்கட்டைகள் கட்டி அதில் நீராடி அனுமதிக்கப்பட்டனர்.

    தர்ப்பணம் கொடுத்தவர்கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றினர். மேலும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை தானமாக வழங்கினர். இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆடி அமாவாசை தினத்தையொட்டி திரளான பக்தர்கள் முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். பின்னர் வீடுகளில் விரதம் இருந்து, காகங்களுக்கு உணவிட்டு தாங்களும் சாப்பிட்டனர்.

    • வயதானவர்கள் டோலி உதவியுடன் மலைக்கு சென்று வந்தனர்.
    • பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். சித்தர்களின் பூமியாக கருதப்படும் இங்கு சுயம்புவாக எழுந்தருளியுள்ள சிவனை வழிபட்டால் புண்ணியம் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    மலை அடிவாரத்தில் இருந்து 5.5 கி.மீ. தூரத்தில் மேலே அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பகதர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சதுரகிரியிலும் வருடந்தோறும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது உண்டு. இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த 25-ந்தேதி முதல் பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டதால் முதல் நாளில் இருந்தே கணிசமான அளவில் பக்தர்கள் சதுரகிரிக்கு வரத்தொடங்கினர்.

    ஆடி மாத பிரதோஷமான 26-ந்தேதி 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரியில் சாமி தரிசனம் செய்தனர். இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சதுரகிரிக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர். கார், வேன், பஸ்களில் வந்த பொதுமக்கள் மலை அடிவாரத்தில் உள்ள தோப்புகளில் தங்கினர்.

    நேற்று அதிகாலை 5 மணி முதலே பக்தர்களின் எண்ணிக்ககை அதிகரித்ததால் மலையேற அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று பிற்பகல் முதல் சதுரிகிரியில் அவ்வப்போது மழை பெய்ய தொடங்கியது. மாலை முதல் மிதமான மழை பெய்துகொண்டே இருந்ததால் மலைப்பாதையில் உள்ள மாங்கனி ஓடை, பிலாவடி கருப்பசாமி கோவில் முன்பு உள்ள ஓடை, சங்கிலிப்பாறை, வழுக்குப்பாறை ஆகிய பகுதிகளில் ஓடைகளில் கணிசமான நீர்வரத்து அதிகரித்தது.

    இதன் காரணமாக மலை மேல் இருந்த பக்தர்கள் கீழே இறங்கவும், அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. நடு வழியில் சிக்கியிருந்த பக்தர்கள் மழைக்கு ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் தவித்தனர். அவர்களை வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பாக அடிவாரத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    திடீர் மழையால் சதுரகிரிக்கு செல்ல தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டதால் அடிவாரத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

    நள்ளிரவு நேரத்தில் மழை நின்று வானிலை மாறியது. இதனைத் தொடர்நது ஆடி அமாவாசையான இன்று அதிகாலை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அடிவார கேட் திறக்கப்பட்டதும் பக்தர்கள் சாரை, சாரையாக பக்தி கோஷம் முழங்க மலையேற தொடங்கினர். வயதானவர்கள் டோலி உதவியுடன் மலைக்கு சென்று வந்தனர்.

    இன்று மட்டும் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலையாக காட்சியளித்தது. அடிவாரமான தாணிப்பாறையில் மடங்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆனால் கோவில் பகுதியில் குறைவானவர்களுக்கு மட்டுமே அன்னதானம் கிடைத்தது. மலைப்பாதையில் அடிப்படை வசதிகளும் போதுமானதாக இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    இன்று மாலை 3 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இடைப்பட்ட நேரத்தில் மழை பெய்தால் அனுமதி வழங்கப்படாது என வனத்துறை தெரிவித்துள்ளது. பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருவதால் சதுரகிரியே திருவிழா கோலம் பூண்டுள்ளது.

    முன்னதாக ஆடி அமாவாசையான இன்று சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    கடைசி நாளான நாளை மறுநாள் வரை பக்தர்கள் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடி மாவாசையை முன்னிட்டு விருதுநகர், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர், பேரிடர் மீட்பு குழுவினர் மலைப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

    • தினமும் முன்னோரை வழிபடவேண்டும்.
    • முன்னோர்களுக்கு நன்றி சொல்லும் நன்னாள்தான் அமாவாசை.

    தாயும் தந்தையும் இல்லை என்றிருப்பவர்கள் அவசியம் தர்ப்பணம் செய்யவேண்டும். நம் தாய் தந்தையரைத் தவிர, முந்தைய முன்னோர்களை நமக்குத் தெரிந்திருக்கலாம். தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்களை மனதால் நினைத்து, அவர்களுக்கு நன்றி சொல்லும் நன்னாள்தான் அமாவாசை தினங்கள். முக்கியமாக... ஆடி அமாவாசையில் வணங்கவேண்டும்.

    'எனக்கு அப்பா இருக்கிறார். அம்மா இல்லை', 'எனக்கு அம்மா உண்டு, அப்பா இல்லை', எனக்கு அப்பா அம்மா இரண்டுபேருமே இல்லை, இறந்துவிட்டார்கள்' என்றால் அவர்கள் நிச்சயமாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

    'என் அண்ணன் இருக்கிறார். அவர்தான் கொள்ளிவைத்தார். தம்பி உண்டு. அவர்தான் கொள்ளிவைத்தார்' என்றாலும் தாயாரை அல்லது தந்தையை அல்லது இருவரையும் இழந்த சகோதரர்கள் அனைவருமே தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் விடவேண்டும். 'என் அண்ணன் தர்ப்பணம் செய்கிறாரே. நானும் செய்யவேண்டுமா?' எனும் கேள்விக்கே இடமில்லை.

    மகன்கள் அனைவருக்கும் சொத்தில் எப்படி பங்கு உண்டோ, மகன்கள் அனைவருக்கும் பெற்றோரின் கடனை அடைப்பது எப்படிக் கடமையோ, அதேபோல், மகன்கள் எல்லோருமே தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் அப்படிச் செய்யாததெல்லாம் பாவமாக, நம் தலையிலும் நம் சந்ததியினரின் தலையிலும் வந்துவிடும் என்றும் விவரிக்கிறது சாஸ்திரம்.

    ஆகவே, அமாவாசை நாளில், ஆடி அமாவாசை நாளில், பித்ருக்களுக்கு நன்றி சொல்லும் நல்லவாய்ப்பாக எடுத்துக்கொண்டு தர்ப்பணம் செய்து வழிபடுவோம். அவர்களுக்கு மானசீகமாக நன்றி சொல்லுவோம்.

    இன்று ஆடி அமாவாசை. முன்னோர்களை வணங்குவோம். அவர்களுக்கு புண்ணியங்களைக் கொடுத்து, புண்ணியங்களைப் பெறுவோம். நம் சந்ததியினருக்கும் புண்ணியங்களைச் சேர்த்துக் கொடுப்போம்.

    • தர்ப்பணம் என்றால் எள்ளும் தண்ணீரும் விடவேண்டும்.
    • அமாவாசை என்றால் எள்ளும் தண்ணீரும் விடவேண்டும்.

    ஆத்மாவில் பாவம் செய்த ஆத்மாக்கள், புண்ணியம் செய்த ஆத்மாக்கள் உண்டுதானே. ஆத்மாக்களும் பாவம் புண்ணியம் என்று இரண்டும் உண்டுதான். அந்த பாவ புண்ணியங்களைக் கொண்டுதான், பித்ருலோகத்தில் அவர்களுக்கான இடம் அமையும் என்பதாகச் சொல்கிறது சாஸ்திரம்.

    அமாவாசை முதலான நாளில், முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்யும் போது, அது நம் முன்னோர்களைப் போய்ச் சேரும். அதனால் அவர்கள் செய்த பாவங்களின் கெடுபலன்கள் குறையும். புண்ணியங்கள் பெருகும். நாமும் முன்னோரை வணங்கிய பலனைப் பெறலாம். முன்னோருக்குப் புண்ணியம் சேர்த்த, பாவங்களைக் குறைத்த புண்ணியத்தைப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    தினமும், முன்னோரை வழிபடவேண்டும். நம்மை இந்த உலகுக்கு வரக் காரணமாக இருந்த முன்னோர்களை தினமும் வழிபடுவதில் தப்பே இல்லை. அதேசமயம் முன்னோர் வழிபாட்டை வருடத்துக்கு 96 முறை தர்ப்பணம் செய்யவேண்டும், எள்ளும் தண்ணீரும் விடவேண்டும் என்றும் விவரிக்கிறது சாஸ்திரம்.

    அதாவது, மன்வாதி 14 நாட்கள், யுகாதி 4 நாட்கள், மாதப் பிறப்பு 12 நாட்கள், அமாவாசை 12 நாட்கள், மஹாளய பட்சம் 16 நாட்கள், வியதீபாதம் 12 நாட்கள், வைத்ருதி 12 நாட்கள், அஷ்டகா 4 நாட்கள், அன்வஷ்டகா 4 நாட்கள், பூர்வேத்யு 4 நாட்கள் என்று தர்ப்பணம் செய்யவேண்டும்.

    • வீடு, வாசல் இல்லாத ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது சிறந்த பலனைத் தரும்.
    • அன்னதானம் செய்ய முடியாதவர்கள், ஒரு பசு மாட்டிற்கு 9 வாழைப்பழத்தை வழங்கலாம்.

    சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் ஒன்றையொன்று சந்திக்கும் தினம், அமாவாசை. இந்த நாளில் இறந்து போன நம் முன்னோர்களின் ஆன்மாக்கள், புண்ணிய லோகத்தில் இருந்து பூமிக்கு வரும். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணித்து, அவர்கள் தொடங்கும் காரியங்களை கனிவோடு பார்ப்பார்கள். அந்த காரியம் வெற்றிபெற ஆசிர்வதிப்பார்கள். எனவே இந்த நாளும் நல்ல நாள்தான்.

    எனவே பித்ருக்கள் என்று அழைக்கப்படும் நம் முன்னோர்களை வழிபட்டு, அவர்களுக்கு மரியாதை செய்யும் அமாவாசை தினத்தில், புதிய காாியங்களைத் தொடங்கினால், அது நிச்சயம் நல்லவிதமாகவே நடைபெறும். அமாவாசை மாதம் தோறும் வந்தாலும், தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை சிறப்புக்குரியதாக போற்றப்படுகிறது.

    இன்று நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதோடு, வீடு, வாசல் இல்லாத ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது சிறந்த பலனைத் தரும். ஆடி அமாவாசை என்று இல்லாமல், ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை போன்ற ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்க வேண்டும்.

    அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றை குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். அதுவும் இயலாதவர்கள் வீட்டில் வைத்து செய்யலாம். அன்னதானம் செய்ய முடியாதவர்கள், ஒரு பசு மாட்டிற்கு 9 வாழைப்பழத்தை வழங்கலாம்.

    அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் உள்ள கடல் அல்லது நதியில் நீராடலாம். ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அது முடியாதவர்கள், ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்தாலே, ஆண்டு முழுவதும் தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைத்து விடும்.

    • நொய்யல் ஆற்றங்கரையில் புரோகிதர்களை கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
    • இன்று பேரூரில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்று ஆடி அமாவாசை தினம். இந்த நாளில் இந்துக்கள் ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் நீராடி தங்கள் முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்வது வழிபடுவது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக ஆடி அமாவாசை தினத்தில் நீர் நிலைகளில் கூடுவதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைவு காரணமாக பக்தர்கள் நீர்நிலையில் கூடி தர்ப்பணம் கொடுக்க தடை எதுவும் விதிக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் திரண்டு ஆடி அமாவாசை வழிபாடு செய்தனர்.

    கோவையில் உள்ள பக்தர்கள் பேரூர் சென்று அங்குள்ள நொய்யல் ஆற்றங்கரையில் புரோகிதர்களை கொண்டு முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். அதன்படி இன்று அதிகாலை 4 மணி முதலே ஏராளமான பக்தர்கள் நொய்யல் ஆற்றங்கரையில் குவியத் தொடங்கினர். நேரம் ஆக, ஆக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

    ஆற்றங்கரையில் தயார் நிலையில் இருந்த புரோகிதர்களை கொண்டு பக்தர்கள், முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர். வாழை இலையில் தர்ப்பை புல், காய்கறி, அரிசி, எள், சாதம் உள்ளிட்டவற்றைகளை படைத்து பூஜை செய்தனர். பின்னர் அவற்றை எடுத்துச் சென்று ஆற்றில் போட்டு மூதாதையரை வணங்கினர். தொடர்ந்து இலையில் சூடன் ஏற்றி ஆற்றில் விட்டு வழிபட்டனர்.

    அதன்பின் ஆற்றங்கரையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகரையும், சப்த கன்னியரையும் வணங்கினர். அங்கிருந்து பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். அதன்பிறகே வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

    இதனால் நொய்யல் ஆற்றங்கரை மற்றும் பேரூர் கோவில் முன்பு இன்று காலை பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்தது. ஏராளமான வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. காலை வேளையில் அங்கு போதுமான அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. இதன்காரணமாக மெயின் ரோட்டில் இருந்து ஆற்றங்கரைக்கு செல்ல பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    அதன்பிறகே ஏராளமான போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். ஆங்காங்கே பேரிகார்டுகள் அமைத்து வாகனங்கள் மற்றும் பக்தர்கள் செல்ல வழிவகை செய்தனர். இதேபோல செல்வபுரம் பகுதியிலும் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று பேரூரில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஆலாந்துறை மற்றும் மாதம்பட்டியில் இருந்து வந்த வாகனங்கள் பேரூர் செட்டிப்பாளையத்தில் இருந்து சுண்டாக்காமுத்தூர், கோவைப்புதூர் வழியாக திருப்பி விடப்பட்டன. கோவை மாநகரில் இருந்து பேரூர் சென்ற வாகனங்கள் ஆண்டிப்பாளையம் கல்லூரி அருகே பக்தர்களை இறக்கி விட்டு திரும்பிச் சென்றன.

    பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் ஆற்றங்கரையிலும் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு ஆடி அமாவாசை வழிபாடு செய்தனர்.

    இதனால் அம்பாரம்பாளையம் ஆற்றங்கரை பகுதியிலும் இன்று பக்தர்கள் கூட்டமும், வாகன நெரிசலும் காணப்பட்டது.

    ×