search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாகுபடி"

    • சீதோஷ்ண நிலை இருப்பதால் காலிபிளவர் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
    • பண்ணைகளில் நாற்று 1-க்கு 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர், பல்லடம் சுற்றுப்பகுதியிலும் மிதமான சீதோஷ்ண நிலை இருப்பதால் காலிபிளவர் சாகுபடிக்கு ஏதுவாக உள்ளதால் விவசாயிகள் காலிபிளவர் சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.

    குறைந்த அளவு தண்ணீரில் விளையக் கூடிய பயிராகவும் விவசாயிகளுக்கு தினமும் ஏற்படும் பணத்தேவையை தீர்க்கும் பயிராகவும் காலிபிளவர் உள்ளது. காலிபிளவர் நாற்றுகளை, தனியார் நாற்று பண்ணைகளில் நாற்று 1-க்கு 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 ஏக்கருக்கு 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் நாற்றுகள் வரை நடவு செய்யலாம். காலிபிளவர் சாகுபடியில் பூச்சி தாக்குதல்களுக்கு 2 முறை மருந்து தெளித்து, குறிப்பிட்டநாள் இடைவெளியில், நீரில் கரையும் உரங்களை காலிபிளவர் செடியின் வளர்ச்சிக்காக உபயோக்கின்றனர். காலிபிளவர் செடிநட்ட 80-வது நாளில் இருந்து காலிபிளவர் பூ அறுவடை செய்யலாம். தற்போது மார்க்கெட்டில் காலிபிளவர் 1 கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகிறது.

    • கோடை காலத்தில் அறுவடை செய்யும் வகையில் ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடியானது.
    • ஏக்கருக்கு 20 டன் வரை மகசூலும் எடுத்தனர்.

    உடுமலை :

    உடுமலை பகுதிக்கு ஆண்டுதோறும் சேலம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோடை சீசனுக்கு பல லோடு தர்பூசணி கொண்டு வரப்பட்டது. எனவே கோடை சீசனை இலக்காக வைத்து புதிய தொழில்நுட்பங்கள் உதவியுடன் கிணற்று ப்பாசனத்துக்கு, தர்பூசணி சாகுபடியிலும் உடுமலை பகுதி விவசாயிகள் களமிறங்கினர்.

    கடந்த2 ஆண்டுகளாக உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் கோடை காலத்தில் அறுவடை செய்யும் வகையில் ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடியானது.நிலப்போர்வை, சொட்டு நீர் பாசனம், நீர் வழி உரம் பயன்பாடு காரணமாக தர்பூசணி காய்களும் திரட்சி யாக பிடித்தது. ஏக்கருக்கு 20 டன் வரை மகசூலும் எடுத்தனர்.ஆனால் கடந்த கோடை சீசனில் ஊரடங்கு, வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இதற்கு விலை கிடைக்கவில்லை.

    அறுவடை செய்யாமல் அதை அப்படியே விளைநிலங்களில் விடும் நிலை உருவானது.இந்நிலையில் கோடை சீசன் மட்டுமல்லாது இடைப்ப ட்டத்திலும், பரவலாக தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கோடை சீசனில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் வகையில் இடைப்பட்டத்தில் தர்பூசணி சாகுபடி செய்துள்ளோம்.வீரிய ரக விதைகளை சாகுபடிக்கு பயன்படுத்துவதால் 70 முதல் 80 நாட்களில் தர்பூசணியை அறுவடை செய்ய முடிகிறது. தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது. பிற மாநில வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களுக்கே வந்து கொள்முதல் செய்கின்றனர். பருவமழை சீசன் துவங்கும் முன் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    • வெள்ள அபாயம் ஏற்பட்டால் தண்ணீர் வடிய வாய்ப்பில்லாமல் சாகுபடி வயல்கள் மூழ்க வாய்ப்புள்ளது.
    • வடிகால்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி ஆறுகளை தூர்வார வேண்டும்.

    திருத்துறைபூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்தில் உள்ள மாரியாறு வடிகால் என்பது பாண்டி கோட்டகம் ராஜன் வாய்க்காலிருந்து பிரிந்து இப்பகுதி வடிகாலாக மாரியாறு வடிகால் உருவாகி இங்கிருந்து கரையாங்காடு வழியாக தொண்டியக்காடு சென்று கடலில் கலக்கிறது.

    அதேபோல் இப்பகுதியில் உள்ள கள்ளிக்குடி வடிகால், பாண்டியான் போக்கு வடிகால், வளவனாறு வடிகால் என நான்கு வடிகாலும் குன்னலூர் எக்கல், தர்காசு போன்ற சுற்று பகுதியில் உள்ள சுமார் 125 கிராமங்களுக்கு வடிகாலாக உள்ளது.

    இந்நிலையில் வடிகால்கள் தூர்வாரப்படாததால் ஆறுகள் முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளது. மேலும், கடும் மழை மற்றும் வெள்ள அபாயம் ஏற்பட்டால் தண்ணீர் வடிய வாய்ப்பில்லாமல் கிராமங்கள் மற்றும் சாகுபடி வயலும் மூழ்க வாய்ப்புள்ளது.

    எனவே, வடிகால்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி ஆறுகளை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து, குன்னலூர் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி, துணைத்தலைவர் கதிர்வேல், ஒன்றிய கவுன்சிலர் அனிதா மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஊராட்சி செலவில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற முடிவு செய்தனர்.

    இதில் ஊராட்சி செலவில் வாய்க்கால்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை டிரோன் மூலம் மருந்து தெளித்து அழிக்க முடிவு செய்தனர்.

    அதன்படி, டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணிகள் முதற்கட்டமாக மாரியாறு வடிகாலில் தொடங்கியது.

    இது விவசாயிகள் மற்றும் கிராமமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    • நெல் மூட்டைகளை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பாததால் தேங்கியது.
    • குறுவை சாகுபடி நடைப்பெற்றுளதால் நடமாடும் கொள்முதல் நிலையங்களை தொடக்கி அதிகப்படுத்திட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொது ச்செயலாளர் சாமி.நடராஜன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டத்தில் ஒரு பகுதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பகுதி ஆகிய டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை வேகமாக நடைப்பெற்று வருகிறது.

    மேட்டூர் அணையில் இந்தாண்டு முன்கூட்டியே நீர் திறக்கப்பட்டதால் அரசு நிர்ணயித்த இலக்கையும் தாண்டி குறுவை சாகுபடி பரப்பளவு அதிகமாக செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை போதுமான அளவு திறக்கப்படவில்லை.

    திறக்கப்பட்டநிலைய ங்களிலும் விவசாயிக ளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படாததால் நெல்மூட்டைகள் ஒவ்வொரு மையங்களிலும் தேங்கிக்கிடக்கிறது.

    எனவே விவசாயிகள் கோரக்கூடிய இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.

    கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைப்பெ ற்றுளதால் நடமாடும் கொள்முதல் நிலையங்களை துவக்கி அதிகப்படுத்திட வேண்டும்.

    தற்போது விவசாயிகளிடம் உள்ள முக்கிய பிரச்சனையான 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது என்பது ஏற்புடையதல்ல மழைக்காலம் என்பதால் தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று 20 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சங்கத்தின் மாநிலதுணை செயலாளரும், மயிலாடுதுறை மாவட்ட செயலா ளருமான துரைராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் சிம்சன், குணசுந்தரி, மாவட்ட பொருளாளர் செல்லப்பா ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட டிராகன் பழங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் பலரும் இந்த பழங்களை தவிர்க்கும் நிலை உள்ளது.
    • ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட டிராகன் பழங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் பலரும் இந்த பழங்களை தவிர்க்கும் நிலை உள்ளது.

    குடிமங்கலம்:

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நகரப் பகுதிகளிலுள்ள பழ அங்காடிகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த டிராகன் பழங்கள் தற்போது குடிமங்கலம் பகுதி கிராமப்புற ரோட்டோரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் நமது கிராம விவசாயிகளும் டிராகன் பழங்களின் சாகுபடியைத் தொடங்கியிருப்பதே ஆகும். இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் டிராகன் பழங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் விருதுநகர், ஈரோடு, மதுரை, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் சிறிய அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் உடுமலை, குடிமங்கலம் பகுதிகளிலும் ஒருசில விவசாயிகள் டிராகன் பழங்கள் சாகுபடி செய்து வருகின்றனர். கள்ளி வகையைச் சேர்ந்த டிராகன் பழம் வெப்ப மண்டலப் பயிர் ஆகும். களிமண் தவிர்த்த, வடிகால் வசதியுடைய அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடியது. குறைந்த அளவு நீர்த் தேவை உள்ள பயிராக இருப்பதால் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற பயிராகும். செடிகள் நடவு செய்து 1½ முதல் 2 ஆண்டுகளில் மகசூல் கொடுக்கத் தொடங்கும். ஆனாலும் முழுமையான மகசூல் ஈட்டுவதற்கு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். முதல் அறுவடையில் ஆண்டுக்கு வெறும் 1 முதல் 1 ½ டன் மட்டுமே மகசூல் கிடைக்கும் நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு 8 முதல் 10 டன்கள் வரை மகசூல் கிடைக்கும். ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட டிராகன் பழங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் பலரும் இந்த பழங்களை தவிர்க்கும் நிலை உள்ளது.

    விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை கொள்முதல் செய்யப்படும் டிராகன் பழங்கள் வெளிச்சந்தையில் கிலோ ரூ.350-க்கு மேல் விற்கப்படுகிறது. ஒவ்வொரு பழமும் 400 கிராம் முதல் 700 கிராம் வரை எடை கொண்டதாக உள்ளது. இதனால் ஒரு பழம் ரூ.200 அளவுக்கு விற்பனை செய்யப்படுவதால் இது பணக்காரர்கள் சாப்பிடும் பழமாக உள்ளது.

    அத்துடன் டிராகன் பழங்களின் அழகிய இளஞ்சிவப்பு நிறம் குழந்தைகளை பெருமளவில் கவர்ந்து இழுத்தாலும் அதன் சுவை பெரிய அளவில் ரசிக்கப்படுவதில்லை. இதன் மருத்துவ குணங்களை கருத்தில் கொண்டே சிலர் இதனை வாங்கி சாப்பிடுகின்றனர். மேலும் டிராகன் பழம் உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க உதவுவதால், இறந்த தேவையற்ற செல்களால் ஏற்படும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. அத்துடன் ரத்தக் குழாய்கள் விறைப்புத் தன்மையுடன் இருப்பதை குறைக்க உதவுகிறது. எனவே இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பழமாக டிராகன் பழங்கள் கருதப்படுகிறது. மேலும் புற்று நோய்களைக் கட்டுப்படுத்த உதவுவதுடன் வயிறு சார்ந்த பிரச்சினைகள் மற்றும் உடல் எடை மேலாண்மையிலும் டிராகன் பழங்கள் சிறந்த பங்கு வகிக்கின்றன. ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரித்து ரத்த சோகையை சரி செய்கிறது. கண் பார்வையை மேம்படுத்த, பசி உணர்வை அதிகரிக்க, உடல் செல்களை பழுது பார்க்க என பல வகைகளில் மனிதனின் ஆரோக்கிய மேம்பாட்டுக்கு டிராகன் பழங்கள் உதவுகிறது. குறைந்த நீரில் சாகுபடி செய்து அதிக மகசூல் ஈட்டி சிறந்த வருமானம் தரும் டிராகன் பழங்களை சாகுபடி செய்ய தோட்டக்கலைத்துறையினர் வழிகாட்டல்கள் மற்றும் உதவிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • மானிய விலையில் வேளாண் இடு பொருட்கள் வழங்க வேண்டும்.
    • வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் உரங்கள், யூரியா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்காக இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து குறுவை சாகுபடி தீவிரமாக நடைபெற்ற நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குறுவை முடிந்து அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சம்பா, தாளடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, குலமங்கலம், தலையாமங்கலம், சின்னபொன்னாப்பூர், பனையகோட்டை, நெய்வாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சம்பா தாளடி நடவு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விவசாய பெண்கள் மகிழ்ச்சியாக பாடல் பாடி நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா தாளடி 12 லட்சம் ஏக்கருக்கு மேல் பணிகள் நடைபெற உள்ளன. இது குறித்து விவசாயிகள் கூறும்போது:-

    குறுவை சாகுபடியின் போது சில இடங்களில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டது. அதுபோன்று இல்லாமல் யூரியா உரம் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். சம்பா தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும். மானிய விலையில் வேளாண் இடு பொருட்கள் வழங்க வேண்டும். சம்பா தாளடி பணிகள் தொடங்கி விட்டதால் விதைநெல் மானிய விலையில் வழங்க வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க மூலம் உரங்கள் யூரியாக்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடன் வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சம் இன்றி கடன் வழங்க வேண்டும். வாய்க்கால்களை முறையாக தூர்வார வேண்டும் என்றனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு விவசாயிகளுக்கு போதுமான அளவு யூரியா வழங்கப்படும்.
    • விவசாயிகள் வேளாண் பணிகளை ஆர்வமுடன் மேற்கொண்டு பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர் பகுதி யில் உள்ள மேலாண்மை துறையின் உரக்கிடங்கு, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்அபோதுவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சம்பா பருவ நெல் விதைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை 312.7 மீ.மி மழை பெய்துள்ளது.

    இம்மழையினை கொண்டு விவசாயிகள் விதைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 31ஆயிரத்து 36 ஹெக்டர் வரை பயிர் விதைப்பு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நடப்பு மாதத்திற்கு யூரியா 4,695 மெ.டன் ஒதுக்கீடு பெறப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக இருப்பு வைத்துக் கொள்ளும் வகையில் கிரிப்கோ யூரியா 1,500 மெ.டன் ஒதுக்கீடு பெறப்பட்டு இதுவரை 373.5 மெ.டன் கிரிப்கோ யூரியா கொண்டுவரப்பட்டது, மேலும் தற்போது 30 மெ.டன் வரப்பெற்றுள்ளது.

    இதன் மூலம் 1579 மெ.டன் யூரியா, 1729 மெட்ரிக் டன் டி.ஏ.பி, 118 மெ.டன் பொட்டாஷ், 2570 மெ.டன் காம்ப்ளஸ், 50 மெ.டன் சூப்பர் பாஸ்பேட் என மேற்கண்ட உரவகைகள் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    எனவே விவசாயிகளுக்கு எந்தவித உரத்தட்டுப்பாடு இன்றி நடப்பு சம்பா பருவ சாகுபடிக்கு தேவையான உரங்கள் வழங்க தயார் நிலையில் உள்ளன. விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி வேளாண் பணிகளை ஆர்வமுடன் மேற்கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, வேளாண்மை துணை இயக்குனர் சேக் அப்துல்லா, வேளாண்மை உதவி இயக்குனர் நாக ராஜன், ராமநாதபுரம் மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததாலும் விவசாயிகளே தங்கள் முயற்சியால் வாய்க்காலை சுத்தப்படுத்தினர்.
    • சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு நேரடி தெளிப்பு முறையில் சம்பா சாகுபடியை மேற்கொண்டுள்ளனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த நாணலூர் என்ற இடத்தில் கோரை ஆற்றிலிருந்து, புதுப்பாண்டி ஆறு பிரிகிறது.

    நடப்பாண்டில் மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக மழை பெய்ததால் தாழ்வான பகுதியில் உள்ள ஆறுகளுக்கு தண்ணீர் குறைத்து கொடுக்க ப்பட்டதன் அடிப்படையில், புதுப்பாண்டி ஆற்றுக்கு தண்ணீர் பிரித்து கொடுக்க வில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இதன் காரணமாக குறுவை சாகுபடியை மே ற்கொள்ளாத விவசாயி கள் ஒருபோக சம்பா சாகுபடியை மட்டும் தொடங்கினர். மீனம்பநல்லூரில் உள்ள சாலுவனாறு தடுப்பணை கதவுகள், சட்டர்ஸ் ரெகுலேட்டர்கள் பழுதடைந்து வேலை செய்யாததாலும் வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததாலும் விவசாயிகளே தங்கள் முயற்சியால் வாய்க்காலை சுத்தப்படுத்தினர்.

    முன்கூட்டியே தண்ணீர் திறந்தும் கடைமடை பகுதியான இப்பகுதிக்கு தண்ணீர் வராததால் தற்போது புதுப்பாண்டி ஆற்றை நம்பி உள்ள வங்கநகர், வெள்ளங்கால், ஓவரூர், எழிலூர், இளநகர், பாண்டிக்கோட்டகம், குன்னலூர், மாங்குடி, மருதவனம், வேப்பஞ்சேரி மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு நேரடி தெளிப்பு முறையில் சம்பா சாகுபடியை மேற்கொண்டுள்ளனர்.

    தற்சமயம் இந்த சம்பா நெற்பயிர்கள் 30 நாட்கள் வயதுடைய நிலையில் உள்ளன.

    இவை அனைத்தும் தண்ணீரின்றி கருகி வருகின்றது.

    எனவே, சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஆய்வு செய்து கருகி வருகின்ற பயிரை காப்பாற்ற நடவடி க்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடியை படிப்படியாக குறைத்தனர்.
    • கிளி, மயில் உள்ளிட்ட பறவைகள் சூரியகாந்திக்கு அதிக சேதம் விளைவிக்கின்றன.

    திருப்பூர்:

    வெங்காயம், தக்காளி, கத்தரி உள்ளிட்ட காய்கறி பயிர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக விவசாயிகளுக்கு, கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை.காய்கறி பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு தொடர் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. விவசாயிகள் பாதுகாப்பான மாற்று பயிர் சாகுபடிக்கு மாற துவங்கியுள்ளனர்.முன்பு திருப்பூர் மாவட்டத்தில் கணிசமான பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது.

    காலநிலை மாற்றம், விலை வீழ்ச்சி போன்ற பிரச்னைகள்தலை தூக்கியதால் விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடியை படிப்படியாக குறைத்தனர்.வெள்ளகோவில், மூலனூர் பகுதியில் மட்டும் சிறிய பரப்பில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது சூரியகாந்தி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விலை போகிறது. நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் சூரியகாந்தியின் பக்கம் கவனம் செலுத்த துவக்கியுள்ளனர். விவசாயிகள் கூறுகையில், காலநிலை மாற்றத்தால் பருவம் தவறிப் பெய்யும் மழையால் மகரந்த சேர்க்கை ஏற்படாமல் விளைச்சல் கிடைப்பதில்லை. சூரியகாந்திக்கு கார்த்திகை மற்றும் வைகாசி பட்டம் சிறந்தது.அறுவடை நேரத்தில் நல்ல வெயில் கிடைக்க வேண்டும். உயிர்வேலி அழிப்பு, காடழிப்பு போன்றவற்றால் பறவைகளுக்கு உணவு தட்டுப்பாடு நிலவுகிறது.

    கிளி, மயில் உள்ளிட்ட பறவைகள் சூரியகாந்திக்கு அதிக சேதம் விளைவிக்கின்றன. சாகுபடி அதிகரிக்கும் போது சேதம் குறையும். பருவநிலை மாற்றம் சூரியகாந்தி சாகுபடியை தீர்மானிக்கிறது. இதற்கு அரசு தான் தீர்வு காண வேண்டும் என்றனர்.

    • 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
    • அரசு வழங்கிய பவர் டில்லர் பழுதடைந்து உழவு செய்தல் உள்ளிட்ட பணிகள் பாதித்தது.

    உடுமலை :

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்துக்குட்பட்டது ஈசல்திட்டு மலைவாழ் கிராமம். ஜல்லிபட்டி ஊராட்சி லிங்கம்மாவூர் சமவெளிப்பகுதியிலிருந்து 1,208 மீட்டர் உயரத்திலுள்ள மலையில் இந்த கிராமம் அமைந்துள்ளது.2மலைத்தொடர்களின் இடைவெளியில் அமைந்துள்ள இந்த கிராமத்தையொட்டி 400 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் அக்கிராம மக்கள் பாரம்பரியமாக விவசாயம் செய்து வருகின்றனர்.குறிப்பாக 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கம்பு, ராகி, மொச்சை ஆகிய மானாவாரி பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

    பிற சாகுபடி மேற்கொள்ளும் போது, சமவெளிப்பகுதிக்கு விளைபொருட்களை கொண்டு வர வழித்தடம் இல்லை. எனவே அப்பகுதியினருக்கு மொச்சை சாகுபடி மட்டுமே வாழ்வாதாரமாக உள்ளது.இந்நிலையில் கடந்த, 2009ல் அப்பகுதியினரின் விவசாய சாகுபடி பணிகளுக்காக அரசு வழங்கிய பவர் டில்லர் பழுதடைந்து உழவு செய்தல் உள்ளிட்ட பணிகள் பாதித்தது.

    தொடர் கோரிக்கை அடிப்படையில் சமீபத்தில் ஈசல்திட்டு மலைவாழ் கிராமத்துக்கு 2 பவர் டில்லர் எந்திரங்களை அரசு ஒதுக்கீடு செய்தது.அங்குள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் குழு வாயிலாக எந்திரத்தை பயன்படுத்தி சமீபத்திய மழைக்குப்பிறகு, சாகுபடிக்கு விளைநிலத்தை தயார் செய்துள்ளனர். ஆனால் விதைப்புக்கு தேவையான மொச்சை விதை கிடைக்காமல் பணிகள் முடங்கியுள்ளது.

    குறித்த நேரத்தில் விதைப்பு செய்யாவிட்டால், போதிய விளைச்சல் கிடைக்காது என்பதால் கவலையடைந்துள்ளனர். இது குறித்து ஈசல் திட்டு கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் கூறியதாவது:- பல்வேறு காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளாக, எவ்வித சாகுபடியும் மேற்கொள்ளவில்லை. தற்போது பவர் டில்லர் எந்திரம் வழங்கியுள்ளதால் சாகுபடி பணிகளை தீவிரப்படுத்தினோம். ஆனால் மொச்சை விதை கிடைக்கவில்லை.எனவே வேளாண்துறை வாயிலாக விதை வழங்கினால்,நூற்றுக்கணக்கான ஏக்கரில் இச்சாகுபடி மேற்கொள்ள முடியும். எங்களுக்கு வாழ்வாதாரமும் கிடைக்கும்.அதே போல் சாகுபடியில், பூச்சி, நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து தெளிப்பதற்கான ஸ்பிரேயரும் மானியத்தில் வழங்க வேண்டும். இதனால் சாகுபடியில் போதிய விளைச்சல் கிடைக்கும். இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்றார். 

    • சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.
    • சாகுபடி செய்த விவசாயிகள் கொள்முதல், குறைந்து விடுமோ என்ற கவலையில் உள்ளனர்.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் பகுதியில் குறுவை சாகுபடி செய்து அறுவடைக்கு தயிராக இருந்த நெல் மணிகள் மழையால் தரையில் சாய்ந்தது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்தில் 52 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.

    ராயபுரம், காளாஞ்சிமேடு, கடம்பூர், பரப்பனாமேடு, சித்தமல்லி மேல்பாதி, பூவனூர், அனுமந்தபுரம், பெரம்பூர், காளாச்சேரி, ராயபுரம், மேலபூவனூர், காணூர், அனுமந்தபுரம், தேவங்குடி, ரிஷியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நிலத்தடி நீரினை பயன்படுத்தி முன் கூட்டியே குறுவை சாகுபடிக்கு தொடங்கினர்.

    இவ்வாறு முன்கூட்டியே சாகுபடி செய்த நெல் பயிர்கள் தற்போது அறுவடைக்கு வரும் நிலையில் நெல் மணிகள் பழுத்து வருகிறது. இந்நிலையில் நீடாமங்கலம் பகுதியில் இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் மழையில் தரையில் சாய்ந்துள்ளது. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் கொள்முதல், குறைந்து விடுமோ என்ற கவலையில் உள்ளனர். வயல்களில் தேங்கிய மழை நீரை வடித்தெடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • விவசாயிகளின் போராட்ட கோரிக்கைகளை ஒப்புதல் அளித்தபடி உடன் அமல்படுத்த வேண்டும்.
    • குறுவை சாகுபடிக்கு காப்பீட்டு திட்ட இழப்பீட்டை வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்க வலியுறுத்தி டார்ச் லைட் அடித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய தலைவர் மாசிலாமணி, துணை தலைவர் தியாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் ஆர்ப்பாட்டத்தில் பேசினார். இதில் 13 மாத கால விவசாயிகளின் போராட்ட கோரிக்கைகளை ஒப்புதல் அளித்தபடி உடன் அமல்படுத்த வேண்டும், கோயில், மடம், அறக்கட்டளை, வக்போர்டு குத்தகை விவசாயிகள் தொடர் பேரிடர் பாதிப்புகளின் குத்தகை பாக்கியை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    குறுவை சாகுபடிக்கு காப்பீட்டுத் திட்ட இழப்பீட்டை வழங்க வேண்டும், 2021-22 சம்பா காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும், வேளாண் இடு பொருள்களான யூரியா, டி.ஏ.பி பொட்டாஷ் உரங்களை கூட்டுறவு வங்கி மூலம் தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×