என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் ரேஸ்"

    • பைக் ரேசில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
    • தி.நகர் துணை கமிஷனரின் தனிப்படை போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் பைக் ரேசில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கோட்டூர்புரத்தை சேர்ந்த ராகுல், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணவம்சி, கொருக்குபேட்டை அஜய், லோகேஷ் ஆகிய 4 வாலிபர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தி.நகர் துணை கமிஷனரின் தனிப்படை போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    • நடைபாதை அருகே கற்கள் மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
    • சம்பவம் தொடர்பாக பரங்கிமலை புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் நள்ளிரவில் வாலிபர்கள் பைக் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்காக மெரினா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு தொழுகையை முடித்த பின்பு இளைஞர்கள் சிலர் கூட்டமாக இருசக்கர வாகனங்களில் சென்று பைக் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபட்டனர். இதனை தடுப்பதற்காக சென்னையில் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் முக்கிய சாலைகளில் கண்காணித்தனர்.

    அதன்படி நேற்று சென்னை அண்ணாசாலை, தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாலிபர்கள் பைக் சாகசம் மற்றும் ரேசில் ஈடுபட்டதாக 33 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். 33 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்தனர்.

    அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டுதல், உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக வாலிபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இன்று அதிகாலை 4 மணிக்கு ஆலந்தூர் சுரங்க பாதை அருகே 14 வயது சிறுவர்கள் 2 பேர் ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக தாம்பரம் நோக்கி சென்று உள்ளனர்.

    அப்போது நடைபாதை அருகே கற்கள் மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் வாகனத்தை ஒட்டி வந்த ஆலந்தூரை சேர்ந்த 14 வயது சிறுவனின் தலை மெட்ரோ தூணில் மோதியது. சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு சிறுவனின் இரண்டு கைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பரங்கிமலை புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நத்தம் பறக்கும் பாலத்தில் பைக் ரேசில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

    மதுரை

    மதுரை-நத்தம் சாலையில் புதிதாக பறக்கும் பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் கீழ்பகுதியில் பயங்கர சத்தத்துடன் வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர்.

    விபத்தை ஏற்படும் வகையில் பொதுமக்களை அச்சுறுத்திய இந்த சம்பவம் குறித்து தல்லாதளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்றார்.

    அங்கு பைக் ரேசில் ஈடுபட்ட 14 வாலிபர்கள் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் செல்லூர் இருதயராஜபுரம் சேக்சுந்தர் மகன் முகமது சலீம், உத்தங்குடி வளர் நகர் முகமது மகன் ஹைதர் அலி, புதூர் முத்துராமலிங்கபுரம் சித்திக் ராஜா மகன் முஹம்மது ஆசிக், புதூர் ராமவர்மா நகர் நாகூர் மகன் சையது சிராபுதீன், அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் நகர் ஷேக்தீன் மகன் அப்துல் ரகுமான்.

    முகமது சிக்கந்தர் மகன் முகமது இப்ராகிம், முஹம்மது மிசானி மகன் முகமது அப்துல் அக்கீம், முகமது ஜஹாங்கீர் மகன் அப்துல் ரகுமான், உத்தங்குடி சிக்கந்தர் பாஷா மகன் அப்துல் அஜீஸ், உத்தங்குடி முத்துமுகமது மகன் சல்மான் கான், அய்யர் பங்களா முத்து செல்வம் மகன் ஆனந்தகுமார், புதூர் ஷேக் மைதீன் மகன் அப்துல் ரசாக், சையது அபுதாகீர் மகன் முகமது சம்சுதாவித், சிம்மக்கல் ராதாமணி மகன் விஷ்ணு என்பது தெரிய வந்தது. மேற்கண்ட 14 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ரேசுக்கு பயன்படுத்திய 10 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் இதுபோன்ற சாகச செயல்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    இதை கட்டுப்படுத்த போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • ஆபத்தான “பைக்” ரேசில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர்.
    • சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.

    மதுரை

    மதுரையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கவும் வெளிமாவட்ட பகுதிகளுக்கு விரைந்து செல்ல வசதியாகவும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மதுரை-நத்தம் சாலையில் தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    சுமார் ரூ.615 கோடி செலவில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் பாலத்தில் ஐயர் பங்களா, திருப்பாலை பகுதிகளில் இறங்குவதற்கு வசதியாக சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி களுக்கும், நத்தம் உள்ளிட்ட வெளியூர்களுக்கும் செல்லும் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பகல் நேரங்களில் அதிக அளவில் செல்லுகிறது.

    ஆனால் இரவு நேரங்களில் சொற்ப அளவி லேயே கார், இருசக்கர வாகனங்கள் பறக்கும் பாலத்தில் சென்று வருகின்றன. இதனால் பறக்கும் மேம்பால பகுதிகளில் அடிக்கடி சமூக விரோத செயல்கள் நடை பெறுவதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் இரவு நேரங்களில் போலீசார் அவ்வப்போது ரோந்து பணிகளிலும் ஈடுபடு கிறார்கள். பறக்கும் மேம்பாலத்தில் குறைந்த அளவே வாகனங்கள் செல்வதால் சாலைகளில் சாகசம் செய்பவர்களின் அட்டகாசமும் அவ்வப் போது அறங்கேறி வருகிறது. அதிவேகத்தில் பைக் ரேஸ் சென்று அந்த காட்சிகளை இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்களில் பதிவிட்டு அதிக 'லைக்' களை பெறுவதும் இளசுகளின் தெளியாத கனவாக உள்ளது. இளம்பெண்களும் பாலத்தின் மையப் பகுதிகளிலிருந்து நடனமாடி அதனை சமூக வலைத்த ளங்களில் வெளியிடுவதும் சமீப காலமாக டிரெண்டாகி வருகிறது.

    இதனை போலீசார் கடுமையாக எச்சரித்து வருகின்ற நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நத்தம் பறக்கும் மேம்பா லத்தில் நான்கு இரு சக்கர வாகனங்களில் வாலிபர்கள் அதிவேகத்தின் சைரன் ஒலிக்க முன்பக்க சக்கரத்தை உயரே தூக்கிய படி அதிவேகத்தில் சென்று சாகசம் என்ற பெயரில் அபாயகரமான பைக் ரேஸில் ஈடுபட்டனர்.

    இது அந்த வழியாக வாகனத்தில் சென்ற வர்களை கடும் பீதிக்கு உள்ளாக்கியது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வருவதற்குள் இந்த பைக் ரேஸ் இளைஞர்கள் மாயமாய் மறைந்து விட்டனர்.

    இது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள் ளனர். இந்த நிலையில் பறக்கும் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனங்களில் அசுர வேகத்தில் சென்று பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேஸ் செல்வது சமூக விரோத செயலாகும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    நத்தம் மேம்பாலத்தில் பைக் ரேஸ் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பலமுறை எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இதனை மீறி தொடர்ந்து மதுரை நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் தேவை யின்றி வாகனங்களை நிறுத்துவது பாலத்தின் மேலே நின்று செல்பி எடுப்பது, வாகனங்களில் அதிவேகமாக சென்று சாகசம் என்ற பெயரில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது, பாலத்தின் மேலே அமர்ந்து கொண்டு கேக் வெட்டுவது, பாலத்தின் இருபுறங்களில் உள்ள பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருந்து பொழுது போக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.

    • மகன் ஆசையாக கேட்டார் என்பதற்காக மகனுக்கு விலை உயர்ந்த பைக் வாங்கி கொடுத்துள்ளார்.
    • பைக்கை தீ வைத்து எரித்ததோடு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

    பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் பைக் கேட்டு அடம்பிடிப்பது அதிகரித்து வருகிறது.

    செல்லக்குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பெற்றோரும் தங்கள் மகன்கள் கேட்கும் பைக்கை வாங்கி கொடுக்கிறார்கள்.

    ஆனால் மகன்களோ அந்த பைக்கில் விபரீத சாகசங்கள் செய்து பிரச்சினையில் சிக்கி கொள்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் மலேசியாவில் நடைபெற்றுள்ளது.

    மலேசியா கோலாலம்பூரை சேர்ந்த ஷா ஆலம் என்பவர் தனது மகன் ஆசையாக கேட்டார் என்பதற்காக மகனுக்கு விலை உயர்ந்த பைக் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அவரது மகனோ அந்த பைக் மூலம் பந்தய போட்டிகளில் பங்கேற்பதை வாடிக்கையாக கொண்டதோடு, வீட்டிற்கு மிகவும் தாமதமாக வந்துள்ளார்.

    இதனால் மகனின் பாதுகாப்பு பற்றி கவலையடைந்த அவர், மகனுக்கு அறிவுரை கூறி திருத்த முயன்றார். ஆனால் அவரது மகன் தந்தையின் அறிவுரைகளை கண்டுகொள்ளாததால் மகனுக்கு பாடம் புகட்ட ஷா ஆலம் முடிவு செய்தார்.

    அதன்படி ஷா ஆலம் தனது மகனுக்கு ஆசையாக வாங்கி கொடுத்த பைக்கை அவரே தீ வைத்து எரித்ததோடு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

    அந்த வீடியோ வைரலானதோடு ஷா ஆலமின் செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
    • வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.

    அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜூன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இதனிடையே, இன்னும் 7 நாட்களுக்கான படப்பிடிப்பு பணிகள் மீதி இருப்பதாகவும் அதை படக்குழு வருகிற 15-ந்தேதி தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில், பைக், கார் ரேசில் அதிக ஆர்வம் கொண்ட அஜித் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 13 வினாடிகளே ஓடும் வீடியோவில் கார் ரேசை ஆர்வமுடன் எட்டிப் பார்க்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • ரேசில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்க கூடாது என அறிவுறுத்தல்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக சென்னை காவல்துறை பொது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

    குறிப்பாக, பைக் வீலிங், ரேஸ் உள்ளிட்டவற்றில் ஈடுபட போலீசார் தடை விதித்திருந்தனர். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மதுபோதை, அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல், சாலையில் ரேஸ் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்களிடம் இருந்து 242 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பைக்குகளுக்கு அபராதம் விதிக்காமல் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களால் வனவிலங்குகளுக்கு இடையூறு.
    • வனவிலங்குகள் ஆத்திரமடைந்து வாகனஓட்டிகளை தாக்கும் அபாய நிலை உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் உள்ள யானைகள், மான், காட்டு மாடு, காட்டுப்பன்றி, சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊட்டி மற்றும் கோத்தகிரி சாலையை கடந்து வனப்பகுதியின் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்கின்றன.

    நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு குன்னூர், கோத்தகிரி சாலை வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

    இந்த நிலையில் அந்த சாலைகளில் இரவு நேரங்களில் கோத்தகிரி வியூ பாயிண்ட் செல்வதாக கூறி ஒருசில இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.

    மேலும் ரேஸ் செல்லும் மோட்டார் சைக்கிள்களில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.


    இதன்காரணமாக வனவிலங்குகள் ஆத்திரமடைந்து வாகனஓட்டிகளை தாக்கும் அபாய நிலை உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும் விபத்துக்களில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

    எனவே மேட்டுப்பாளை யம்-கோத்தகிரி சாலையில் வனத்துறையினரும், போலீ சாரும் இணைந்து வாகன சோதனை நடத்துவதுடன் ரோந்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமென வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தொடர்ந்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினரும், மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் தலைமையிலான போலீசாரும் இணைந்து மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் இரண்டு-நான்கு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் வாகனங்களில் அதிவேக மாக உலா வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் போலீசார் கூறுகையில், வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ள சாலைகளில் இரவு நேரங்களில் பாதுகாப்பு, கவனம் மற்றும் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும்.

    மேலும் வனவிலங்குகளை கண்டால் கூட்டாகவோ, தனியாகவோ சேர்ந்து விரட்ட முயற்சிக்கக் கூடாது. வன விலங்குகளை ஆத்திர மூட்டும் செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.

    மேலும் சாகச நோக்கத்துடன் ஊர்வலமாக வந்திருந்த பல்வேறு வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டன.

    • போலீசார் வருவதற்குள் ரேசில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
    • கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    ஆவடியில் இருந்து திருநின்றவூர் நோக்கி சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் சீறிப்பாய்ந்தனர். அவர்கள் ரேசில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் முந்தி சென்றனர். இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

    பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பயங்கர சத்தத்துடன் மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்டவர்கள் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருவதற்குள் ரேசில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதில் திருநின்றவூர் முருகன் கோவில்தெருவை சேர்ந்த கதிரேசன் (24) என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்டது தெரிந்தது.

    கதிரேசனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூர் அருகே 7 வயது சிறுவனான மோகித் பைக்கை ஓட்ட தங்கராஜ் பின்னால் அமர்ந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா நாச்சனம்பட்டி பிரிவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40), பைக் மெக்கானிக். இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு கீர்த்திகா (15), கேசிகா (13) என்ற மகள்களும், மோகித் (7) என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் தந்தையிடம் மகன் மோகித் பைக் கேட்டார். இதனால் தங்கராஜ் பழைய பைக்கை வாங்கி அவற்றை மகன் ஓட்டும்படி சிறியதாக மாற்றி வடிவமைத்தார். கியர் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோலில் 40 கி.மீ. தூரம் செல்லும் படி 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ரேஸ் பைக் போல அதனை உருவாக்கினார். தொடர்ந்து மகனுக்கு அதனை பரிசாக வழங்கினார்.

    இந்த நிலையில் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூர் அருகே 7 வயது சிறுவனான மோகித் பைக்கை ஓட்ட தங்கராஜ் பின்னால் அமர்ந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதற்கிடையே தீவட்டிப்பட்டி வி.ஏ.ஒ. ராமசந்திரன் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதில் சிறுவன் தந்தையை அமர வைத்து பைக் ஓட்டும் வீடியோ பரவியதால் அதை பார்க்கும் சிறுவர்கள் இது போன்ற அபாய செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது.

    அதனால் தங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். அதன்படி தங்கராஜ் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட 11 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேசில் ஈடுபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
    ராயபுரம்:

    சென்னை மெரினா கடற்கரை சாலை மற்றும் ஈ.சி.ஆர். சாலைகளில் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி ‘பைக்ரேஸ்’ நடந்து வருகிறது.

    இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து பைக்ரேசில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் மெரினா கடற்கரை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட வாலிபர்கள் சிக்கி உள்ளனர். மெரினா கடற்கரை சாலையில் நேற்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிவேகத்தில் மோட்டார் சைக்கிள்கள் சீறிப்பாய்ந்தன. அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பைக்ரேசில் ஈடுபட்டது தெரிந்தது.

    இதையடுத்து 11 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேசில் ஈடுபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    டி.ஆர்.பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘46’ திரைப்படம் இல்லீகல் பைக் ரேஸின் கொடூரத்தை தோலுரித்து காட்ட வருகிறது. #46Movie
    விஜய் நடித்த வேலாயுதம், ஜில்லா மற்றும் புலி ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் டி.ஆர்.பாலா. மேலும் 25க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இவர் தற்போது '46' என்கிற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார்.

    இந்தப்படத்தில் காத்திருப்போர் பட்டியலில் நடித்த சச்சின் மணி மற்றும் பீச்சாங்கை ஹீரோ கார்த்திக் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். புதுமுகங்களான மீனாட்சி, நவினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க முக்கிய வேடங்களில் கலக்கப்போவது யாரு புகழ் குரேஷி மற்றும் கியான் ஆகியோர் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் தேனப்பன் மற்றும் சண்டக்கோழி-2வில் நடித்துள்ள பிரின்ஸ் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர்.

    சென்னையில் ஞாயிறு தோறும் இரவு நேரங்களில் நடைபெறும் இல்லீகல் பைக் ரேஸ் பற்றிய கதை தான் இந்தப்படம். இதில் பந்தயம், சூதாட்டம் என மிகப்பெரிய அளவில் பணம் புழங்குகிறது. இதுபற்றி தீவிரமான ஒரு ஆய்வு மேற்கொண்டு, இது ஏன் நடக்கிறது, இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என மிகவும் விரிவாக அதேசமயம் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த பொழுதுபோக்கு படமாக இதை உருவாக்கி வருகிறார்கள்.

    இந்த இல்லீகல் பைக் ரேஸினால் என்ன பின்விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை அறியாமல் பணம் மற்றும் ஆர்வம் காரணமாகவே இந்த இல்லீகல் பைக் ரேஸில் பலரும் கலந்துகொள்கிறார்கள். இவர்களின் தவறுகளையும் இந்த திறமையை சிலர் தங்களது சுயலாபத்துக்காக எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இதில் சுட்டிக்காட்டியுள்ளார்களாம். அந்தவகையில் இது முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான படம். 



    "இந்த பைக் ரேஸ் காட்சி தரூபமாக வரவேண்டும் என்பதற்காக பெசன்ட் நகர் பீச்சில் சுமார் 50 பைக் ரேஸர்களை வரவழைத்து, நிஜமான டிராபிக்கை உருவாக்கி, அதில் மிகவும் பரபரப்பாக படப்பிடிப்பை நடத்தினோம். இதற்காக தெலுங்கு திரையுலகில் இருந்து ஹைடெக்கான தொழில்நுட்ப உபகரணங்களை வரவழைத்து படப்பிடிப்பை நடத்தினோம்.. குறிப்பாக இந்த ரேஸில் குழந்தை ஒன்று விபத்தில் சிக்கும் காட்சியை மிகத் தத்ரூபமாக எடுத்துள்ளோம்" என்கிறார் இயக்குநர் டி.ஆர்.பாலா. 

    "சென்னையில் நிறைய பைக் மற்றும் ஆட்டோக்களில் 46 என்கிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இவர்களெல்லாம் இந்த ஸ்ட்ரீட் ரேஸ் விரும்பிகள் தான். வேலன்சியோ ரோஸ்ஸி என்கிற பைக் ரேஸ் ஜாம்பவானின் பைக் எண் தான் 46.. அதை பற்றிய படம் என்பதாலேயே படத்திற்கும் '46' என்றே டைட்டில் வைத்துவிட்டோம்" என்கிறார் இயக்குநர் TR.பாலா.
    ×