search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பணை"

    • அணைக்கட்டு முழுமையாக நிரம்பி சுமார் 1 அடி உயரத்திற்கு 2250 கனஅடி தண்ணீர் அணைக்கட்டில் இருந்து வழிந்தோடுகிறது.
    • நீர்நிலைகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த சீமாவரம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் இருந்து வெளிவரும் தண்ணீரால் வல்லூர் தடுப்பணை முழுமையாக நிரம்பி வழிகிறது. அணைக்கட்டு முழுமையாக நிரம்பி சுமார் 1 அடி உயரத்திற்கு 2250 கனஅடி தண்ணீர் அணைக்கட்டில் இருந்து வழிந்தோடுகிறது.

    இந்த தடுப்பணையில் இருந்து வழியும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குதித்து நீச்சலடித்தும், டைவ் அடித்தும், குளித்தும் குதூகலமடைந்துள்ளனர். இந்த அணைக்கட்டில் இருந்து நிரம்பி வழியும் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றின் வழியே எண்ணூர் கடலுக்கு செல்ல உள்ளது. கனமழையால் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் வல்லூர் அணைக்கட்டு உள்ளிட்ட நீர்நிலைகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    பொன்னேரி ஆரணி ஆற்றில் லட்சுமிபுரம் அணைக் கட்டில் இருந்து 900 கன அடி வெளியேறும் மழை நீர் பழவேற்காட்டில் கடலில் கலக்கின்றன. பெய்து வரும் மழையினால் பொன்னேரி பகுதிகளில் 28 வார்டுகளில் மழைநீர் தேங்கியும் பொன்னேரி- மீஞ்சூர் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற முடியாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டுள்ளனர்.

    பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட துரைசாமி நகர், ஏ ஏ எம் நகர், பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மழை நீர் சூழ்ந்து காணப்படுகின்றன.

    • சிவகங்கை மாவட்டம், மகிபாலன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • தென்னை மரம் நடுதல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பத்தூர்

    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புகழ்பெற்ற பாடலை தந்த கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊரான "பூங்குன்ற நாடு" என்று அழைக்கப்படும் சிவகங்கை மாவட்டம், மகிபாலன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. மன்ற தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.

    முன்னதாக ஊராட்சி வரவு செலவு கணக்குகள் கிராம மக்கள் முன்னி லையில் சமர்ப்பிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கணியன் பூங்குன்றனாருக்கு திருப்பத் தூர் பொன்னமராவதி செல்லும் சாலையில் மகிபாலன்பட்டி விலக்கு ரோட்டின் முன்பு அவருக்கென்று நினைவு வளைவு ஒன்றை எழுப்புதல், பிறந்த ஊரான இம்மண்ணில் மணிமண்ட பம் ஒன்று அமைத்தல், மேலும் மகிபாலன் பட்டிய லில் இருந்து வேலங்குடி கிராமத்திற்கு செல்லும் வனப்பகுதி பாதையை தார் சாலையாக மாற்றுதல், சமுதாய கூடம் கட்டுதல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

    கொன்னத்தான்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு மன்ற தலைவர் அழகு பாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கொன்னத்தான் பட்டி மற்றும் துவார் ஆகிய இரு ஊராட்சிகளை இணைக்கும் அயிரக்குடி பெரிய கண்மாயிக்கு பருவ மழை காலங்களில் தண்ணீர் வரும் விருசுளி ஆற்றின் வரத்து கால்வாயின் குறுக்கே ஆயகட்டுதாரர்கள் பயன்பெறும் வகையில் புதிய தடுப்பணை கட்டுதல்,சமுதாய கூடம் கட்டுதல், அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல்,அனைத்துசமுதாயத்தினருக்கான பொது மயான கரையில் தண்ணீர் தொட்டி கட்டுதல், 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொன்னைத்தான் குடிநீர்ஊரணி சுற்றிலும் தடுப்பு வேலி அமைத்து அதன் உள்ளே தென்னை மரம் நடுதல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டங்களில் ஊராட்சி மன்ற செயலர்கள், வார்டு உறுப்பினர்கள், அங்கன் வாடி பணியா ளர்கள், மகளிர் சுயநிதி குழுக்கள், கிராம பொது மக்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவ லர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    • மருச்சுக்கட்டி தடுப்பணை நடப்பாண்டில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
    • இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் புத்தேந்தல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணுசந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றுக் கொண்டார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    இதுபோன்ற கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் பொழுது பொதுமக்கள் முழுமையாக கலந்து கொண்டு வளர்ச்சிக்கும், தனிநபரின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அரசு வழங்கும் திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்திட வேண்டும்.

    பொதுமக்கள் முக்கிய கோரிக்கையான மருச்சுக்கட்டி தடுப்பணை நடப்பாண்டில் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள் ளப்படும். அதேபோல் காவேரி கூட்டு குடிநீர் இணைப்பு வரும்வரை ஆழ்துளை கிணறு மூலம் தேவையான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் கூரியூர் கிராமத்திற்கு பஸ் நிறுத்தம், புதிய நியாய விலைக்கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும், கிராம சாலைகள் சீரமைக்கவும், தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கவும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் கால்நடைத்துறை, வேளாண்மைத்துறை மூலம் பொதுமக்களுக்கு தேவை யான திட்டங்களை கால தாமதமின்றி செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியுடைய பயனாளிகளுக்கு மேல்முறையீட்டில் உரிமைத் தொகை பெற்று தரப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரபா கரன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சரஸ்வதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தோசம், ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம், ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தாமரை செல்வி, சேவுகப்பெருமாள், செயல் அலுவலர் முத்துராமலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த ஆட்சி காலத்தில், பாலாற்றின் குறுக்கே 7 தடுப்பணைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    • ஈசூர், வள்ளிபுரம் பகுதியிலும் என இரண்டு தடுப்பணைகள் உருவாக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    பருவமழையின் போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் செய்யாறு, பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி தண்ணீர் வீணாகி வந்தது. இதனை தடுக்கும் வகையிலும், தண்ணீரை ஆற்றில் தேக்கி வைக்கும்படியும் பாலாறு, செய்யாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பது விவசாயிகள் நீண்ட காலகோரிக்கையாக இருந்தது.

    மாவட்டத்தில் பாயும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டினால் குடிநீர் ஆதாரம் மற்றும் விவசாய பணிகளுக்கு பெரிதும் உதவும் என விவசாய சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆட்சி காலத்தில், பாலாற்றின் குறுக்கே 7 தடுப்பணைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழையசீவரம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் வாயலூர் பகுதியிலும், ஈசூர்,வள்ளிபுரம் பகுதியிலும் என இரண்டு தடுப்பணைகள் உருவாக்கப்பட்டது.

    இதேபோல் மாகரல் கிராமப் பகுதியில் செல்லும் செய்யாற்றின் குறுக்கே ரூ.8 கோடி மதிப்பில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் அந்த பகுதிகளின் ஆற்றுப்படுகையில் மழை நீர் தேங்கி, குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. மேலும் விவசாயிகளுக்கும் பெரிதும் உதவியது.

    இந்த நிலையில் உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட சிலாம்பாக்கம் - புதுப்பாளையம் கிராமங்களுக்கு இடையே செல்லும் செய்யாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.35 கோடியே 21 லட்சம் மதிப்பில் கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் உத்திரமேரூர் எம்.எல்.ஏ.சுந்தர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தடுப்பணைக்கான பணிகளை தொடங்கி வைத்தார். இந்த பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த தடுப்பணை பணிகளை வருகிற பருவ மழைக்கு முன்னர் முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர். தற்போது தடுப்பணை பணி 50 சதவீதம் முடிந்து உள்ளது.

    சிலாம்பாக்கம் - புதுப்பாளையம் இடையே செய்யாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிலாம்பாக்கம், வெங்காரம், ஒழுகரை, மாகரல் ஆகிய கிராமங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுப்பாளையம், அரசாணை பாளையம், வயலாத்தூர், உள்ளிட்ட கிராமங்கள் என மொத்தம் சுமார் 1,623 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, சிலாம்பாக்கம் - புதுப்பாளையம் இடையே செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என்பது சுற்றி உள்ள கிராமமக்களின் நீண்ட நாள்கோரிக்கை ஆகும். இந்த தடுப்பணையால் ஆற்றில் வீணாக செல்லும் தண்ணீர் தேங்கும். இதன் மூலம் சுற்றி உள்ள விவசாயிகள் பலன் அடைவார்கள். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். விவசாயம் ஆண்டு முழுவதும் நடைபெறும்.

    தற்போது இந்த தடுப்பணை பணிகள் மெதுவாக நடந்து வருகிறது. இப்பணிக்காக செல்லும் வழித்தடங்கள் முறையாக இல்லாததால், பணிகள் தாமதமாகவும் அவ்வப்போது நிறுத்தப்படுகிறது. இதனை விரைவு படுத்தி வருகிற பருவமழைக்கு முன்னர் தடுப்பணை பணிகளை முழுவதும் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • செக்கடி அகழியின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடந்து முடிந்தன.
    • புது ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையிலும் அகழிகள் கடந்த 2018-ம் ஆண்டு தூர்வாரப்பட்டது.

    இதில் 18 மற்றும் 19-வது வார்டுக்கு உட்பட்ட செக்கடி பகுதியில் உள்ள அகழியும் தூர்வாரப்பட்டது.

    இந்த நிலையில் புது ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் மழை நீர் தேக்கி வைப்பதற்காக செக்கடி அகழியின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்தன.

    இதையடுத்து புது ஆற்றில் இருந்து தண்ணீர் அகழிக்கும் வந்தடைந்தது. அந்தத் தண்ணீர் தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதனை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அகழி தண்ணீரில் மலர் தூவி வரவேற்றார்.

    இந்த தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் மேத்தா, தமிழ்வாணன், சசிகலா அமர்நாத், உதவி பொறியாளர் கார்த்திக்கேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் பிஞ்சிவாக்கம், புட்லூர் ஆகிய 2 இடத்தில் தடுப்பணை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
    • வரும் பருவமழையின்போது இந்த தடுப்பணை வீணாகும் தண்ணீரை சேமித்து வைக்க பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே கேசாவரம் பகுதியில் கல்லாற்றின் கிளை ஆறாக கூவம் ஆறு உருவாகிறது.

    இது பேரம்பாக்கம், கடம்பத்தூர், மணவாளநகர், அரண்வாயல் வழியாக 72 கி.மீ. தூரம் ஓடி, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது.

    இந்த ஆற்றில் கேசவபுரம், ஜமீன் கொரட்டூர், பருத்திப்பட்டு ஆகிய இடங்களில் ஏற்கனவே அணைகள் உள்ளன. அதிக மழை பெய்யும்போது கூவம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வீணாக கடலில் கலந்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து மழை காலங்களில் அதிக அளவில் வீணாகும் தண்ணீரை தடுக்கும் வகையில் கூவம் ஆற்றில் மேலும் முக்கிய இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் பிஞ்சிவாக்கம், புட்லூர் ஆகிய 2 இடத்தில் தடுப்பணை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில் அதிகத்தூர் கிராம எல்லையின் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே நீர்வளத் துறை மூலம் 3-வது தடுப்பணை ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டது.

    இந்த தடுப்பணை கடந்த பிப்ரவரி மாதம் 200 மீட்டர் நீளத்தில் அதிகத்தூர்-ஏகாட்டூர் கிராம எல்லை பகுதிகளில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே கட்டும் பணி தொடங்கியது. தற்போது இதில் 85 சதவீத பணிகள் முடிந்து உள்ளன. அடுத்த மாதம் (ஆகஸ்டு) முழுஅளவில் தயாராகி விடும் என்று தெரிகிறது.

    இந்த தடுப்பணையில் 50 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்க முடியும். எனவே வரும் பருவமழையின்போது இந்த தடுப்பணை வீணாகும் தண்ணீரை சேமித்து வைக்க பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்ணையில் தண்ணீர் தேங்கும்போது அதிகத்தூர், ஏகாட்டூர், சேலை, தண்டலம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் அதிகரிக்கும். மேலும் அப்பகுதியில் உள்ள 600 ஏக்கர் விவசாய நிலங்கள், நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்சாகுபடி, கால்நடைகள், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து பயன்தரும். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது,

    கூவம் ஆற்றின் குறுக்கே அதிகத்தூர் அருகே ரூ. 17.70 கோடி மதிப்பில் தடுப்பணை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த தடுப்பணை பயன்பாட்டுக்கு வரும்போது சுற்றி உள்ள கிராமங்களில் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கு நிலத்தடி நீர் அதிகரிக்கும். தடுப்ணையில் தண்ணீர் தேங்கும்போது தற்போது 35 அடி ஆழத்தில் இருக்கும் நீர்மட்டம், 15 அடியாக மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

    • கடந்த ஆண்டு ரூ.4.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளுக்கான பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டது.
    • கலெக்டர் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டம்,திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அகலங்கண்ணு கிராமத்தில் புதுச்சேரி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை கட்டி பல வருடங்கள் ஆகியதால் தடுப்பணையின் கான்கிரீட் தளம் மிகவும் சேதமடைந்து காணப்பட்டதால் அணையின் உறுதி தன்மை கேள்விக்குறி யானது. இதனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ரூ.4.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளுக்கான பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டது.

    இப்பணிகள் நடைபெறும் அகலங்கன்னு பாலத்தை காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செயற்பொறியாளரிடம் கூறிய கலெக்டர் இந்த மாதத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • அமராவதி ஆறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் வசதி அளிக்கிறது.
    • தடுப்பணை அமைக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் கம்பிளியம்பட்டியில் நீர்வளத்துறையின் சார்பில் ரூ.13.29 கோடி மதிப்பீட்டில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட உள்ளது. அப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். கணேசமூர்த்தி எம்.பி., முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்ததாவது:- அமராவதி ஆறு கேரள மாநிலம் மேற்குதொடர்ச்சி மலை, மூணாறு மலைப்பகுதி மற்றும் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த ஆனைமலைப் பகுதியிலிருந்து உற்பத்தி ஆகிறது. அமராவதி ஆற்றின் குறுக்கே அமராவதி நகரில் அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. இது காவிரி ஆற்றின் முக்கிய உபநதிகளில் ஒன்று. அமராவதி ஆறு அமராவதி அணையிலிருந்து 227 கி.மீ., பாய்ந்தோடிய பின் கரூர் மாவட்டத்தை சார்ந்த குளித்தலை வட்டம் மாயனூருக்கு அருகே திருமுக்கூடலூர் கிராமத்தில் காவிரியோடு இணைகிறது.

    இந்த அமராவதி ஆறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் வசதி அளிக்கிறது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டத்தில் உள்ள கம்பிளியம்பட்டி கிராமம், குமாரசாமி கோட்டை, அணைப்பாளையம், சின்னம்மன் கோவில்பாளையம் ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீரை சேமித்து குடிநீர் ஆதாரத்தை பெருக்குவதற்காக அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். அதன் அடிப்படையில் ரூ.13.29 கோடி மதிப்பீட்டில் இத்தடுப்ப ணையானது அமராவதி ஆறு சரகம் 104.00 கி.மீ.,ல் கம்பிளியம்பட்டி கிராமம்அருகே அமைக்கப்படவுள்ளது.

    இத்தடுப்பணையானது 170 மீட்டர் நீளத்திலும், 1.50 மீட்டர் உயரத்திலும் சுமார் 3.18மி.கன.அடி கொள்ளளவு நீரை தேக்கி வைக்க வசதியாக அமையும். இத்தடுப்பணைஅமைக்கப்படுவதால் 65 கிணறுகள் 542 ஏக்கர் விளை நிலங்கள், மற்றும் 110 ஆழ்துளைக்கிணறுகள் மூலமாக பாசன வசதி மேம்படுவதுடன், கம்பிளியம்பட்டி, சின்னம்மன்கோவில்பாளையம் ஆகிய கிராமங்களில் கால்நடை மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தியடையும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன்,மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், பொதுப்பணித்துறைசெயற்பொறியாளர் (நீர்வளத்துறை) கோபி, உதவிப் செயற்பொறியாளர் .சினீவாசன் மற்றும் இலக்கம நாயக்கன்பட்டி கிராம ஊராட்சி தலைவர் சேடன் குட்டை பழனிச்சாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகநாதன், வெள்ளகோவில் தி.மு.க. நகர செயலாளர் சபரி எஸ், முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் கேரளா மாநிலம் அட்டப்பாடி வழியாக பில்லூர் அணைக்கு வருகிறது.
    • சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு 3 தடுப்பணைகளை கட்டி வருகிறது .

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி பேசியதாவது:- திருப்பூர் மாநகர் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக நான்காவது குடிநீர் திட்டத்திற்காக நிதி 1350 கோடி ரூபாய் ஒதுக்கி தந்து திருப்பூர் மக்களின் தாகம் தீர்த்த தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்,முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி.வேலுமணி,அதற்காக முழு முயற்சி எடுத்த சட்டமன்ற உறுப்பினர்கே.என்.விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன் ஆகியோருக்கு திருப்பூர் மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    இதே போல் இந்த மாபெரும் திட்டத்தை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுஇரவு, பகல் பாராமல் உழைத்திட்டஅதிகாரிகளுக்கும், அதற்கு உறுதுணையாகவும், ஊக்கமும், ஆக்கமும்ஆலோசனையும் வழங்கிய மேயர் மற்றும் ஆணையாளர் அவர்களுக்கும் மக்களின்சார்பாகவும், அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் சார்பாகவும் நன்றியினைதெரிவித்துக் கொள்கிறோம்.

    அதே நேரத்தில் இந்த சிறப்பான திட்டத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் கேரளா மாநிலம் அட்டப்பாடிவழியாக பவானி ஆறாக பில்லூர் அணைக்கு வருகிறது. இச்சூழலில் பவானிக்குசெல்லும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு 3 தடுப்பணைகளை கட்டி வருகிறது .இந்த நடவடிக்கையால் எதிர்காலத்தில் நமது திருப்பூருக்கு வரக்கூடிய தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய சூழல் உள்ளது.

    எனவே சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு கட்டிவரும் தடுப்பணையை உடனடியாக தடுத்து நிறுத்த மாநகராட்சி மாமன்றத்தில் சிறப்புதீர்மானம் கொண்டுவர வேண்டும். மேலும் மத்திய மாநில அரசு கவனத்திற்கு கொண்டு சென்று போர்க்கால அடிப்படையில் உடனடியாக தடுத்துநிறுத்த மேயர் மற்றும் ஆணையாளர் அனைத்துமுயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    மேலும் அனைத்துக் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சிஅதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து நேரில் சென்று மேற்படி இடத்தை ஆய்வுசெய்து தடுப்பணை கட்டுவதை நிறுத்த ஆவண செய்ய வேண்டும் என்றார்.

    • அரசலாறு மூலம் 84 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.
    • ரூ.146 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது அந்த பணிகள் முடியும் நிலையில் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள மேட்டுத்தெருவில் காவிரியிலிருந்து அரசலாறு பிரிகின்றது.

    இந்த காவிரி ஆற்றின் மூலம் 1 லட்சத்து 56 ஆயிரம் ஏக்கரும், அரசலாறு மூலம் 84 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    இந்த காவிரி-அரசலாறு பிரியும் அணை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பல்வேறு பணிகளுக்காக பொதுப்பணித்துறை மூலம் நீட்டித்தல், விரிவாக்குதல், புணர மைப்பு திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.146 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது அந்தப்பணிகள் முடியும் நிலையில் உள்ளது.

    இந்த நிதியின் ஒரு பகுதியில் காவிரி-அரசலாறு பிரியும் பகுதியில் புதிய தடுப்பணை கட்டுவ தற்கான கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதேபோல் சுவாமிமலை அருகே உள்ள இன்னம்பூரில் தூர்வாரப்பட்டு வரும் வாய்க்காலையும் பார்வை யிட்ட அவர், இந்த வாய்க்கா லில் மீதமுள்ள 800 மீட்ட ரையும் தூர்வார வேண்டும் என உத்தரவிட்டார்.

    பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முத்துமணி, உதவி பொறியா ளர்கள் முத்துக்குமார், வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • வெள்ளாற்றில் உள்ள தடுப்பணையில் தேக்கி வைத்திருந்த பாசன நீரை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திறந்து விட்டதால் வீணாக ஆற்றில் நீர் வெளியேறும் அவல நிலை உருவாகியுள்ளது.
    • மர்மநபர்கள் நீரை திறந்து விடுவதால் சேமித்து வைத்திருந்த தண்ணீர் வீணாக ஆற்றில் வெளியேறி கடலில் கலக்கிறது.

    கடலூர்:

    வெள்ளாற்றில் உள்ள தடுப்பணையில் தேக்கி வைத்திருந்த பாசன நீரை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திறந்து விட்டதால் வீணாக ஆற்றில் வெளியேறும் அவல நிலை உருவாகியுள்ளது.  கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த கூடலூர் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே அரியலூர் மாவட்டத்தை இணை க்கும் தடுப்பணை வெள்ளாற்றில் ரூ.16 கோடியில் கட்ட ப்பட்டது. இந்த தடுப்பணை யால் 4.14 மில்லியன் கன அடி நீரைச் சேமிக்க முடியும்  இந்த தடுப்பணைக்கு கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழை நீர் மற்றும் அருகில் இருந்து ஓடை வழியாக தடுப்பணைக்கு வந்து முழு கொள்ளளவை எட்டியயது. கூடலூர் கிராம மக்கள் குருவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கும் என நம்பிக்கையோடு இருந்தனர்.

    இந்நிலையில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தடுப்பணையின் கதவுகளை திறந்து விடுவதும் அதை சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள் மூடுவதும் தொடர் கதையாக உள்ளது.திறந்து விடுவதால் சேமித்து வைத்திருந்த தண்ணீர் வீணாக ஆற்றில் வெளியேறி கடலில் கலக்கிறது இதனால் விவசாயிகளுக்கு பாசன நீர் தற்போது கேள்விக் குறியாக மாறி வருகிறது.5 அடிக்கு மேல் தேங்கியி ருந்த நீர் நிலையில் தற்போது 3 அடி யாக குறைந்துள்ளதால் விவசா யிகள் வேதனை யடைந்துள்ளனர். தடுப்பணை யில் இருந்து தண்ணீரை திறந்து விடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளில் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • சிறுவாணி அணையில் பெரும் மழை பெய்யும் போதும் 50 அடி உயரமுள்ள அணையில் 45 அடிக்கு மேல் தண்ணீர் நிரப்ப கேரளா அரசு அனுமதிப்பதில்லை.
    • கேரளா மாநில அரசு மீண்டும் ஒரு தடுப்பணை கட்டியுள்ளது. தமிழர்களை வஞ்சிக்கும் செயல் ஆகும்.

    கோவை:

    கோவை காந்திபுரத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    அட்டப்பாடியில் சித்தூர் சாலையில் கூலிக்கடவு என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டியுள்ளது. இதன்மூலம், கோவை மாவட்டத்திற்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படும் பில்லூர் அணைக்கு வரும் தண்ணீர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறுவாணி அணையில் பெரும் மழை பெய்யும் போதும் 50 அடி உயரமுள்ள அணையில் 45 அடிக்கு மேல் தண்ணீர் நிரப்ப கேரளா அரசு அனுமதிப்பதில்லை. சிறுவாணி அணையை பராமரிக்க கேரளா அரசுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்குகிறது.

    ஆனாலும், சிறுவாணி அணைக்கு சாடிவயல் வழியாக செல்லும் பாதையை சீரமைக்காமல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வுக்குகூட சிறுவாணி அணைக்கு சாடிவயல் வழியாக செல்ல முடியாமல், ஆனைக்கட்டி வழியாக சுற்றி செல்லக்கூடிய நிலை உள்ளது.

    இந்நிலையில், கேரளா மாநில அரசு மீண்டும் ஒரு தடுப்பணை கட்டியுள்ளது. தமிழர்களை வஞ்சிக்கும் செயல் ஆகும். எனவே, கேரளா அரசின் இந்த போக்கை கண்டித்து கேரளா பேருந்துகளை சிறைபிடிக்கும் போராட்டம் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் காந்திபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழகம் பஸ் நிலையத்தில் நடைபெறும்.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில், காங்கிரஸ் சார்பில் வக்கீல் தாமஸ், இந்மிய கம்யூனிஸ்ட் சார்பில் சிவசாமி, ம.தி.மு.க. சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ், சேதுபதி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் சுசி. கலையரசன், இலக்கியன், வணிகர் சங்கம் சார்பில் மாணிக்கம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இப்ராகீம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் சர்புதீன், எஸ்.டி.பி.ஐ சார்பில் ஆசிப், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஸ்டான்லி உள்பட 20-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    ×