search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாமல்லபுரம்"

    • அர்ச்சுனன் தபசுக்கு அருகில் உள்ள குடைவரை மண்டபத்தின் தூண் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
    • விரிசல் பகுதி எப்போது இடிந்து விழுமோ என்ற பயத்துடன் சுற்றுலா பயணிகள் அங்கு சுற்றி பார்த்துவிட்டு செல்கின்றனர்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பராம்பரிய நகரமாக திகழ்கிறது. இங்குள்ள பல்லவர் கால குடைவரை மண்டபங்கள், குடைவரை சிற்பங்கள், ரத கோவில்கள் அதிகம் உள்ளன.

    இதனை கண்டுகளிக்க நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனை மத்திய தொல்லியல் துறை பராமரித்து பாதுகாத்து வருகிறது.

    இந்த நிலையில் அர்ச்சுனன் தபசுக்கு அருகில் உள்ள குடைவரை மண்டபத்தின் தூண் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இந்த விரிசல் வழியாக மழை நீர் கசிவதால் அந்த மண்டபத்தை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் விரிசல் பகுதி எப்போது இடிந்து விழுமோ என்ற பயத்துடன் சுற்றுலா பயணிகள் அங்கு சுற்றி பார்த்துவிட்டு செல்கின்றனர். எனவே தொல்லியல் துறை நிர்வாகம் குடைவரை மண்டபத்தில் உள்ள விரிசல் பகுதியை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாமல்லபுரம் சிற்பங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை.
    • நவீன தொழில்நுட்ப காலத்தில் சிற்பங்களை அதன் தன்மை மாறாமல் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.

    சென்னையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது மாமல்லபுரம். தமிழ்நாட்டின் சிற்பக்களஞ்சியம் எனப்படும் மாமல்லபுரத்துக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகின்றனர். இங்கு குகை கோவில்கள், சிற்பங்கள் அமைந்துள்ளன. இவை உலக பிரசித்திபெற்று திகழ்கிறது. பல்லவர் கால சிற்பங்கள் பார்க்க பரவச மூட்டும் வகையில் அமைந்து உள்ளன.

    யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட கிருஷ்ண மண்டபம் என அழைக்கப்படும் பாறை குடை சிற்பம் மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் கோவிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ளது. இந்த சிற்பம் பெரிய பாறையில் குடைந்து உருவாக்கப்பட்டதாகும்.

    இந்த குடைவரை சிற்ப வளாகத்தில் உள்ளே இருக்கும் பாறையில் கிருஷ்ணர் பசுவின் மடியில் பால்கறப்பது போன்றும், அவரது குறும்புத்தனம், லீலைகள் குறித்து சிற்பங்களாக செதுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

    சுற்றுலா பயணிகளை கவரும் கிருஷ்ணரின் வெண்ணை பந்து எனப்படும் கருங்கல் பிரமாண்டமாக அமைந்துள்ளது. அர்ஜூனன் தபசு பகுதியில் 2 யானைகள் உள்பட பல சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நிலையில் உள்ளன. அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், ஐந்து ரதம், கடற்கரை கோவில் என மாமல்லபுரத்தில் ஒருநாள் முழுவதும் இருந்து பார்த்து ரசிக்கும் இடங்கள் உள்ளன.

    கடற்கரையில் இருக்கும் இந்த சிற்பங்கள் கடல் காற்றினால் சேதம் அடைகின்றன. காற்றின் மூலம் உப்புத்துகள்கள் பரவி சிற்பங்களின் மேல் பட்டு அரிப்பதால் சிற்பங்களின் நுட்பமான வேலைப்பாடுகள் வெளியில் தெரியாமல் பாதிக்கின்றன. உப்பு அரித்த இடங்களில் சிறு சிறு துளைகள் ஏற்பட்டு மழைநீர் மற்றும் அசுத்தங்கள் சேர்ந்து பாதிப்பை அதிகமாக்குகின்றன.

    தூசிகள் சிற்பங்கள் முழுவதும் பரவி சிற்ப வளாக பகுதிகளை பாதிப்படைய செய்கிறது. அதேபோல் காக்கை, குருவி, குரங்கு போன்றவற்றின் எச்சங்கள் மூலமாகவும் ஒருபுறம் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பை தவிர்க்க தொல்பொருள் ஆய்வுத்துறை ஆண்டுக்கு ஒருமுறை ரசாயன கலவை கலந்த தண்ணீர் மூலம் சுத்தம் செய்து உப்பு படிமங்களை அகற்றி வருகிறது. என்றாலும் பாதிப்புகளை முழுமையாக சரிசெய்ய இயலாத நிலைதான் உள்ளது. இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் சிற்பங்களை அதன் தன்மை மாறாமல் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். இதுபற்றி தொல்லியல் ஆர்வலர்கள் கூறியதாவது:-

    கடல் உப்புகள் மற்றும் மணல் நிறைந்த காற்று ஆகியவை கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள வரலாற்று கட்டிடங்களுக்கு இயற்கை மாசுபாட்டிற்கான நிரந்தர காரணங்களாகும். மாமல்லபுரம் சிற்பங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை.

    நம் முன்னோர் விட்டுச்சென்ற வரலாற்று பொக்கிஷங்களான இவற்றை நம் எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாத்து வைக்க வேண்டியது நமது கடமை. எனவே இன்னும் கூடுதல் அக்கறை எடுத்து சிற்பங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • கடலில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்வையிட தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் மாமல்லபுரம் சுற்றுலாவருபவர்கள் மாமல்லபுரம், கல்பாக்கம், உய்யாலிகுப்பம், புதுப்பட்டினம் கடற்கரை பகுதிக்கு சென்று அங்குள்ள கடற்கரையில் பொழுதை கழிப்பது வழக்கம். அப்போது பலர் ஆபத்தை உணராமல் கடலில் இறங்கி குளித்து வருகிறார்கள். இதனால் கடலில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

    இந்த கடற்கரை பகுதி மணல் திட்டு நிறைந்த ஆழமான பகுதியாகும். கடலில் இறங்கினால் மேடாக இருக்கும் மணல் திட்டானது, திடீரென ஆழமாகும். இதனால் கடலில் மூழ்கி பலர் உயிர் இழப்புக்கும் சம்பவங்கள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வேண்டாம் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்த எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுதொடர்பாக கடற்கரையோரத்தில் எச்சரிக்கை பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    • சென்னை, புதுச்சேரி செல்லும் பயணிகள் பஸ்சுக்காக அங்கு பயத்துடன் காத்து நிற்கின்றனர்.
    • ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் சந்தேகத்துக்கு இடமான செயின் பறிப்பு நபர்கள் சுற்றுவதாகவும் கூறப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பையாஸ் பகுதியில் உள்ள மின் விளக்குகள் ஒரு வாரமாக எரியாததால் அப்பகுதி இருட்டாக காணப்படுகிறது.

    சென்னை, புதுச்சேரி செல்லும் பயணிகள் பஸ்சுக்காக அங்கு பயத்துடன் காத்து நிற்கின்றனர்.

    சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிகளவில் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளும் அங்கு பஸ்சுக்கு குடும்பமாக, குழந்தைகளுடன் நிற்கின்றனர். போதை ஆசாமிகள் அவர்கள் வெளியூர் ஆட்கள் என தெரிந்து கொண்டு, அவர்களிம் மது அருந்த பணம் கேட்பதாகவும், ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் சந்தேகத்துக்கு இடமான செயின் பறிப்பு நபர்கள் சுற்றுவதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாமல்லபுரம் இ.சி.ஆர் மின் விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • 7 டி.எக்ஸ் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் விரைவில் கட்டப்பட உள்ளது.
    • நிகழ்ச்சியில் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாமல்லபுரம்:

    கோவளம் அடுத்த முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் படுகு குழாம் உள்ளது. இங்கு ரூ.50லட்சம் செலவில் புதிய சுகாதார மையம், குழந்தைகள் விளையாட்டு மையம், கழிவுநீர் சுத்திகரிப்பு, காற்றில் இருந்து குடிநீர் உற்பத்தி உள்ளிட்டவை அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சுற்று லாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாமல்லபுரத்தில் உள்ள புரான சின்னமான அர்ச்சுனன் தபசு அருகில் ரூ.5 கோடி மதிப்பில், 7 டி.எக்ஸ் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் விரைவில் கட்டப்பட உள்ளது.

    இதில் மாமல்லபுரம் புராதன சின்னங்களின் வரலாறு குறித்து "3டி லேசர்" ஒளி, ஒலி காட்சி ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வரும் நாட்களில் மற்ற இடங்களும் மின்னொளியில் ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    • இரவு 9மணிவரை ஏராளமான சுற்றுலா பயணிகள் மின்னொளியில் கடற்கரை கோவிலை பார்த்து ரசித்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் இங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்சுணன்தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட இடங்களை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.

    புராதன சின்னங்களை மின்னொளியில் இரவிலும் பார்வையிட ஏற்பாடு செய்யவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று முதல்(15-ந்தேதி) புராதன சின்னங்களை இரவில் மின்னொளியில் ரசிக்கலாம் என்று மத்திய தொல்லியல் துறையினர் அறிவித்து இருந்தனர். இரவு 9மணி வரை அலங்கார மின்னொளியுடன், புராதன சின்னங்கள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று இரவு புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்சுணன்தபசு, வெண்ணை உருண்டை பாறை பகுதிகளை மின்னொளியில் ரசிக்கலாம் என எதிர் பார்த்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்தனர். ஆனால் கடற்கரை கோவிலை மட்டும் மின்னொளியில் சுற்றுலா பயணிகள் ரசிக்க அனுமதி வழங்கப்பட்டது. மற்ற இடங்களில் மின்னொளி ஏற்பாடுகள் செய்யப்பட வில்லை. பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஆட்கள் பற்றாக்குறை காரணமாக மத்திய தொல்லியல்துறை கடற்கரை கோவிலை மட்டும் முதல் கட்டமாக மின்னொளியில் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி அளித்து உள்ளதாக தெரிகிறது.

    வரும் நாட்களில் மற்ற இடங்களும் மின்னொளியில் ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். புராதன சின்னங்களில் இரவு மின்னொளி காட்சியை அறிந்து விடுதிகளில் தங்கியிருந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மாலையில் கடற்கரை கோவில் வளாகத்தில் திரண்டு இருந்தனர். உள்நாட்டவர்களுக்கு ரூ.40, வெளிநாட்டவர்களுக்கு- ரூ.600-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இரவு 9மணிவரை ஏராளமான சுற்றுலா பயணிகள் மின்னொளியில் கடற்கரை கோவிலை பார்த்து ரசித்தனர். செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, கடற்கரைகோவில் போல் ஐந்துரதம், அர்சுணன்தபசு, வெண்ணை உருண்டை பாறை பகுதிகளும் மின்னொளியில் காட்சியளித்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்றனர்.

    • 2019ல் பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரம் வந்த போது மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள் தொல்லியல் துறை உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, பகுதிகளை இரவிவிலும் பார்த்து ரசிப்பதற்காக, கடந்த 2019ல் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரம் வந்த போது மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டது. இரவு 9 மணிவரை சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று பார்க்க அனுமதியும் வழங்கப்பட்டது. பின்னர் ஓரிரு வாரத்தில் பராமரிப்பு இல்லாமல், பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டது.

    இந்த இரவு ஒளிக்காட்சி குறித்து அறிந்து உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் மாலை நேரத்தில் வந்தனர். ஆனால் அவர்கள் ஒளிக்காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    அதன்பின்னர், மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட், ஜி-20 சர்வதேச கூட்டங்கள், காத்தாடி திருவிழா, அலைச்சறுக்கு என சர்வதேச நிகழ்ச்சிகள் நடைபெற்றதால், நிகழ்ச்சிக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் புராதன சின்னங்களை இரவிலும் பார்வையிட மீன்டும் அலங்கார ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டன. இதை சுற்றுலா பயணிகளும் கண்டு ரசிக்கும் வகையில் இரவு 9 மணி வரை, ஒளிவிளக்குகளை எரியவிட்டு, உள்ளே அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் தொல்லியல் துறை உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதையடுத்து வரும் 15ஆம் தேதியில் இருந்து இரவு 9 மணி வரை அலங்கார மின்னொளியுடன், புராதன சின்னங்கள் திறந்திருக்கும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி மற்றும் வெளி மாநிலம் என 14 இடங்களுக்கு 9 மணிவரை அனுமதி வழங்கியுள்ளது.

    • சிறப்பு அதிகாரி சால்வ்குர்ணி குழுவினர் அனைத்து புராதன சின்னங்களிலும் விளக்குகளை எரிய விட்டு பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னொளியில் சுற்றுலா பயணிகள் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் புராதன சின்னம் பகுதிக்கு கடந்த 2019-ம் ஆண்டு சீன அதிபரும், இந்திய பிரதமர் மோடியும் வந்தபோது, இங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோவில், அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்துரதம் பகுதிகளை இரவிலும் பார்த்து ரசிக்கும் வண்ணம், அலங்கார மின்விளக்கு அமைக்கப்பட்டது. பின்னர் ஓரிரு வாரங்களில் அவை நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே புராதன சின்னங்களை பார்வையிட ஜி-20 மாநாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வந்த போது அவர்கள் ரசிக்க மின் விளக்குகள் பழுது நீக்கி கூடுதல் விளக்குகள் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து புராதன சின்னங்களை பார்வையாளர்களுக்கு தொடர்ந்து தினமும் குறிப்பிட்ட நேரம் வரை அல்லது விடுமுறை நாட்களில் மட்டும் இரவு நேரத்தில் மின்னொளியில் பார்த்து ரசிக்க தொல்லியல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து நேற்று இரவு டெல்லியில் இருந்து மாமல்லபுரம் வந்த தொல்லியல்துறை சிறப்பு அதிகாரி சால்வ்குர்ணி குழுவினர் அனைத்து புராதன சின்னங்களிலும் விளக்குகளை எரிய விட்டு பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அதற்கான மின் கட்டண விபரம், கூடுதல் காவலாளி நியமனம், தொடர் பாதுகாப்பு, நுழைவு கட்டணம் உள்ளிட்ட விபரங்களை கேட்டரிந்து சென்றார். எனவே விரைவில் இரவிலும் மாமல்லபுரம் புராதன சின்னங்களை தினமும் அல்லது விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னொளியில் சுற்றுலா பயணிகள் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடற்கரை பகுதியில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியும் பலர் ஆபத்தை உணராமல் கடலில் குளித்ததையும், காண முடிந்தது.
    • ரூ.40 நுழைவு சீட்டு வாங்குவதற்காக தொல்லியல் துறையின் கட்டண கவுண்ட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது கோடைகாலம் மற்றும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை முன்னிட்டு மாமல்லபுரத்திற்கு உள்நாட்டு பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    நேற்று கோடை விடுமுறையின் ஞாயிற்றுகிழமை என்பதாலும், இன்னும் 2 வாரங்களில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அரசு பஸ்களிலும் சுற்றுலா வாகனங்களிலும் கூட்டம், கூட்டமாக வந்து இருந்ததை காண முடிந்தது.

    கடற்கரை கோவில் ஐந்தரதம், வெண்ணை உருண்டைக்கல் போன்ற புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் களைகட்டி காணப்பட்டது. அங்குள்ள பாறை சிற்பங்களை ரசித்து பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    கடற்கரை பகுதியில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியும் பலர் ஆபத்தை உணராமல் கடலில் குளித்ததையும், காண முடிந்தது. மேலும் கடற்கரையில் பாறைகள் உள்ள ஆபத்தான பகுதிகளில் குளிக்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் போலீசார் அவ்வப்போது எச்சரித்து, அறிவுறுத்தி கொண்டே இருந்தனர். குறிப்பாக பள்ளிகள் மூடப்பட்டதால் தங்கள் பெற்றோர்களுடன் கோடை விடுமுறையை கழிக்க வந்த சிறுவர், சிறுமிகளும் பள்ளி விடுமுறை விடப்பட்ட உற்சாகத்தில் கடலில் மகிழ்ச்சியுடன் குளித்ததை காண முடிந்தது.

    ரூ.40 நுழைவு சீட்டு வாங்குவதற்காக தொல்லியல் துறையின் கட்டண கவுண்ட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து நுழைவு சீட்டு வாங்கி சென்றதை காண முடிந்தது. கடற்கரையில் திருட்டு சம்பவங்களை தடுக்க மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் நேற்று சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, கடற்கரை சாலை பகுதியில் கடும் நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் சாலையில் சென்ற வாகனங்களை நெரிசலில் சிக்கிவிடாமல் இருக்க மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலும், மாமல்லபுரம் நகர பகுதியிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியதை காண முடிந்தது. மாமல்லபுரம் நகர பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மாமல்லபுரம் சாலவான்குப்பம் பகுதியில் உள்ள புலிக்குகை புராதன சின்னத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    • மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட சிற்பக்கூடங்கள் உள்ளது.
    • மாமல்லபுரம் சர்வதேச கற்சிற்ப பகுதி என அறிவிக்கபட்டு அதற்கான புவிசார் குறியீடும் வழங்கப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்குள்ள புராதன சிற்பக்கலை சின்னங்களை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் ரசித்து செல்கிறார்கள்.

    மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட சிற்பக்கூடங்கள் உள்ளது. இதில் பல சிற்ப கூடங்கள் போக்குவரத்து மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக கற்களை சாலை ஓரம் மற்றும் வீதிகளில் போட்டு அறுத்து வருகிறார்கள். இதனால் தூசு பறந்து சுற்றுலா பயணிகள் மற்றும் அவ்வழியே செல்பவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    மாமல்லபுரம் சர்வதேச கற்சிற்ப பகுதி என அறிவிக்கபட்டு அதற்கான புவிசார் குறியீடும் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது சர்வதேச விளையாட்டு போட்டிகள், கருத்தரங்கங்கள், மாநாடுகள் மற்றும் வெளிநாட்டு தலைவர்கள் அதிகளவில் வந்து செல்லும் முக்கிய சுற்றுலா பகுதியாக மாறி வருகிறது.

    இதைத்தொடர்ந்து சிற்பக்கூடங்களை ஒழுங்குபடுத்தும் விதமாக மத்திய-மாநில அரசுகள் பங்களிப்புடன் சிற்ப பூங்கா அமைக்க அரசு முடிவு செய்தது.

    கைவினைத் தொழில் மேம்பாடு, சிற்பக்கூடங்கள் ஒழுங்குமுறை கருதி சிட்கோ நிறுவனம் மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலையில் "சிட்கோ" சிற்ப பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்து உள்ளது. இது 19 ஏக்கர் நிலப்பரப்பில், 23கோடி செலவில் அமைய உள்ளது.இதற்கான முதல்கட்ட பணியாக நில அளவை தொடங்கி நடந்து வருகிறது. சிற்பபூங்கா அமைய உள்ளதால் மாமல்லபுரம் சிற்பக்கலை சிற்பிகள், ஸ்தபதிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
    • மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பூமியின் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று காலை வரை கனமழை பெய்தது. மழை காரணமாக, கிருஷ்ணர் மண்டபம் வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதேபோல் ஐந்து ரதம் நுழைவு வாயில், கலங்கரை விளக்கம் சாலை, கடற்கரை சாலை பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது இதனால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், இந்த கனமழையால் மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பூமியின் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுகிறது.

    • உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு அனைத்து சுற்றுலா பயணிகளும் இலவசமாக பார்க்கலாம் என தொல்லியல்துறை அறிவித்தது.
    • மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டனர்.

    மாமல்லபுரம்:

    உலகின் பாரம்பரிய நினைவு சின்னங்களை பாதுகாத்து அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, யுனெஸ்கோ அமைப்பினர் ஆண்டுதோறும் ஏப்ரல் 18-ந் தேதியை உலக பாரம்பரிய தினமான கடைபிடித்து வருகிறார்கள். மத்திய தொல்லியல் துறை சார்பில் நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களில் இன்று உலக பாரம்பரிய தினம் கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி தமிழ்நாட்டில் மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னை கோட்டை மியூசியம், மாமல்லபுரம் புராதன சின்னங்கள், செஞ்சிகோட்டை, தஞ்சாவூர், தாராசுரம் கோயில், வேலூர் கோட்டை, கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட பகுதிகளை, இன்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு அனைத்து சுற்றுலா பயணிகளும் இலவசமாக பார்க்கலாம் என தொல்லியல்துறை அறிவித்தது.

    அதன்படி இன்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டனர். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டை பாறை, புலிக்குகை, மற்றும் குடவரை கோயில் பகுதிகளை இலவசமாக பார்த்து ரசித்து சென்றனர். இதனால் வழக்கத்தை விட இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ×