search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்எல்சி"

    • 35 ஜே.சி.பி. இயந்திரம் மூலம் நிலங்களை சமன் படுத்தும் பணி தொடக்கம்
    • அறுவடைக்கு இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் நெற்பயிர்கள் அழிப்பு

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் 2-வது சுரங்க விரிவாக்க மையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    இன்று காலை சேத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாய நிலத்தை அழித்து கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் இங்குள்ள விவசாய நிலத்தில் 20-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் விவசாய நிலத்தை அழித்து கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சுமார் 1500 மீட்டர் நீளத்திற்கு கால்வாய் வெட்டப்பட உள்ளது. ஆனால் இன்று காலை சுமார் 450 மீட்டர் நீளத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டது. தற்போது அங்கு பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்குகூட தயாராக இல்லாத நிலையில் பச்சை பயிற்களை அழித்து கால்வாய் வெட்டுவதால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். பயிர்கள் அறுவடைக்கு பின் கால்வாய் வெட்ட வேண்டும். மேலும் கையகப்படுத்தும் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினர்.

    ஆனால் விவசாயிகள் போராட்டம் நடத்தகூடும் என்பதால் அங்கு எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் தடுக்க நேற்று இரவு முதலே விழுப்புரம் மாவட்ட டி.ஐ.ஜீ. ஷியாவுல்ஹக் மற்றும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் தலைமையிலான 600-க்கும் மேற்பட்ட போலீசார் வளையமாதேவியிலிருந்து சேத்தியாதோப்பு வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நிலம் கையகப்படுத்துவதை அறிந்த விவசாய நிலத்தின் விவசாயிகள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். ஆனால் அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விவசாய நிலத்திற்கு அனுமதிக்காமல் அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். மேலும் இந்த நிலம் கையகப்படுத்துவதற்கு வழங்கப்படும் பணம் உரிய முறையில் வழங்கவில்லை என்று அங்கு கூடியிருந்த விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

    சரியான முறையில் பணம் வழங்காமல் விவசாய நிலத்தை எந்தவித அறிவிப்புமின்றி காலை முதலே அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் கொண்டு அளிக்கின்றனர் என்று அவர்கள் கூறினர். இதற்கு அதிகாரிகள் தரப்பில் நிலம் கையகப்படுத்துவது குறித்து கடந்த மாதமே நாங்கள் அறிவித்தோம் என்று கூறினர். இதனால் என்.எல்.சி அதிகாரிகளுக்கும் பாதிக்கப்பட்டு உரிய முறையில் இழப்பீடு பணம் பெறாத விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் இங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் பீச் அடிக்கும் எந்திரம், தீயணைப்பு, 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்களுடன் இந்த பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் மேல்வளையமாதேவி பகுதி பெரும் பரபரப்பாக உள்ளது.

    • ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது.
    • என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிலக்கரி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஏராளமான நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இங்கு பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நிறைவேற்றப்படாததால் இன்று (15-ந்தேதி) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

    இது குறித்த சமாதான பேச்சுவார்த்தை கட லூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்டாட்சியர் (பொறுப்பு) பூமா தலைமை தாங்கினார். இதில் என்.எல்.சி. உதவி பொது மேலாளர் உமா மகேஸ்வரன், பயிற்சி துணை கலெக்டர் அபிநயா, நெய்வேலி டி.எஸ்.பி. ராஜ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க சிறப்பு தலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது என்.எல்.சி. உயர் அதிகாரிகளிடம் பேசி இது குறித்து நடவடிக்கை எடுக்க கால அவகாசம் வேண்டும் என கோட்டாட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் இதற்கு ஒப்பந்த தொழிலாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.

    தங்கள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்று (சனிக்கிழமை) இரவு முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு தலைவர் சேகர் கூறும் போது, ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது.

    இன்று மாலை வரை அரசிடம் பேசி உத்தரவாதம் அளிக்காவிட்டால் இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என்.எல்.சி.யால் புதிதாக 1,800 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
    • என்.எல்.சி.யில் தற்போது 18 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட 25 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.

    கடலூர்:

    என்.எல்.சி. நிறுவன தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி கடலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்கு, தற்போது உடனடியாக 80 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. நிலக்கரி பற்றாக்குறையால் தற்போது 5 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு 80 ஹெக்டேர் நிலம் கிடைத்தால், நிலக்கரி உற்பத்தி மூலம் மின்சாரத்தை சீராக உற்பத்தி செய்ய முடியும்.

    என்.எல்.சி.யால் புதிதாக 1,800 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் முழுவதுமாக உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

    மேலும் வேலைவாய்ப்பில் 20 போனஸ் மதிப்பெண்கள் நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    என்.எல்.சி.யில் தற்போது 18 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட 25 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். ஒப்பந்த தொழிலாளர்களில் 95 சதவீதம் பேர் தமிழர்கள். அதுபோல் நிரந்தர தொழிலாளர்களிலும் 83 சதவீதம் பேர் தமிழர்கள் தான் உள்ளனர். தமிழர்களுக்கு என்.எல்.சி.யில் வேலைவாய்ப்பு இல்லை என்பதில் உண்மை இல்லை.

    நிலம் கையகப்படுத்தும் பணி நடந்தால், பற்றாக்குறையான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை உடனடியாக ஈடு செய்ய முடியும். இந்த ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசுக்கு என்.எல்.சி. நிறுவனம் 2 ரூபாய் 30 பைசா என்ற தொகையில் கொடுக்கின்றது. அதே வேளையில் மின்சாரத்தை தமிழக அரசு, வெளிச்சந்தையில் வாங்க வேண்டும் என்றால் யூனிட்டுக்கு 10 அல்லது 12 ரூபாய் கொடுக்க வேண்டும். மேலும் என்.எல்.சி. நிறுவனம் தனியார் மயமாவதற்கு வாய்ப்பே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உழவர் குறைதீர்க்கும் கூட்டத்தின் நோக்கமே உழவர்களின் குறைகளை தீர்ப்பது தான்.
    • என்.எல்.சி நிறுவனமும், அதன் செயல்பாடுகளும் கடலூர் மாவட்ட மண்ணுக்கும், மக்களுக்கும் எதிரானது.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற உழவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெ. ரவீந்திரன் தலைமையில் என்.எல்.சி நிலப்பறிப்பு குறித்து உழவர்கள் சிக்கல் எழுப்ப முயன்ற போது, அதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் தடை விதித்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.

    உழவர் குறைதீர்க்கும் கூட்டத்தின் நோக்கமே உழவர்களின் குறைகளை தீர்ப்பது தான். அடிப்படை சிக்கலான என்.எல்.சி நிலப்பறிப்பு பற்றி பேசக்கூடாது என்றால், எதற்காக உழவர் குறை தீர்க்கும் கூட்டம்? என்.எல்.சி. நிலங்களை பறிக்கவில்லை என்றால், என்.எல்.சியால் கடலூர் மாவட்ட மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றால், அது குறித்து விவாதிக்கவே கடலூர் மாவட்ட நிர்வாகமும், கெலக்டரும் அஞ்சுவது ஏன்? மடியில் கனமில்லை என்றால், வழியில் பயம் ஏன்? என்.எல்.சி நிறுவனமும், அதன் செயல்பாடுகளும் கடலூர் மாவட்ட மண்ணுக்கும், மக்களுக்கும் எதிரானது. அடக்கு முறைகள், அர்த்தமற்ற தடைகள் ஆகியவற்றின் மூலம் என்.எல்.சிக்கு எதிரான உணர்வுகளைத் தடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் அனைத்து அடக்கு முறைகளையும் முறியடித்து மக்கள் சக்தி வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிராமசபைக் கூட்டங்களில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் எடுப்பதை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்களை மக்கள் நிறைவேற்றியுள்ளனர்.
    • என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்தை அனுமதிக்க முடியாது என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    என்.எல்.சி நிலக்கரி சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக போராடி வரும் கடலூர் மாவட்ட மக்களும், உழவர்களும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் தடைகளை தகர்த்து என்.எல்.சி சுரங்க நிலப்பறிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

    கிராமசபைக் கூட்டங்களில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் எடுப்பதை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்களை மக்கள் நிறைவேற்றியுள்ளனர். அதற்கும் கூட அதிகாரிகள் மூலம் பல்வேறு வழிகளில் முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. ஆனால், அவற்றையெல்லாம் தகர்த்து தான் கடலூர் மாவட்ட மக்கள் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றனர்.

    கடலூர் மாவட்ட மக்களும் தமிழ்நாடு அரசின் ஆளுகைக்குள் உள்ளவர்கள் தான். அவர்களைக் காக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. எனவே, கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும், உடல் நலனையும் கருத்தில் கொண்டு, கிராமசபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் கேட்டுக்கொள்ளப்பட்டவாறு, என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்தை அனுமதிக்க முடியாது; அதற்காக நிலம் கையகப்படுத்தி தரமாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • என்.எல்.சி.க்கு நிலம் மற்றும் வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட கிராம விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பட்டாடம் நடைபெற்றது.
    • என்.எல்.சி. நிர்வாகம் பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் சம அளவில் இழப்பீடு வழங்க வேண்டும்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் என்.எல்.சி.க்கு நிலம் மற்றும் வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட கிராம விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பட்டாடம் நடைபெற்றது.

    என்.எல்.சி. நிர்வாகம் பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் சம அளவில் இழப்பீடு வழங்க வேண்டும். இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார தொகை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அருண்மொழித் தேவன், பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். மேலும், முன்னாள் எம்.பி. சந்திர காசு, முன்னாள் எம்.எல்.ஏ. முருகமாறன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என்.எல்.சி விவகாரம் குறித்து தமிழக அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்கவேண்டும்.
    • ஒரு அரசியல் கிளர்ச்சியாக மாற்றாமல் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு அளித்த போட்டியில் கூறி இருப்பதாவது:

    தமிழக கவர்னர் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே கருதுகிறார். மீண்டும் தற்போது கூட்டப்படும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான தடையை அமல்படுத்தி ஆளுநருக்கு அனுப்பினால் சட்டம் 200-வது பிரிவின் கீழ் அதற்கு அவர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் .

    என்.எல்.சி விவகாரம் குறித்து தமிழக அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்கவேண்டும். ஏற்கனவே நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு இடம் அளித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. அதை ஒரு அரசியல் கிளர்ச்சியாக மாற்றாமல் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். நிச்சயம் தமிழக அரசு செய்யும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெய்வேலியில் விளைநில பகுதியில் நடத்தும் சுரங்க விரிவாக்கத்தால் அந்த பகுதி விவசாயம் முற்றிலும் அழிந்து பாலைவனமாகிவிடும்.
    • 8 அடியில் கிடைத்து வந்த நிலத்தடி நீர் நெய்வேலி சுரங்கங்களால் இப்போது ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுவிட்டது.

    சென்னை:

    நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு 3 நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. இதில் 2-வது சுரங்கத்தை விரிவாக்கும் பணியை நிர்வாகம் தொடங்கி உள்ளது.

    இந்த விரிவாக்கத்தால் வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதியில் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி அந்த பகுதியில் நிலங்களை சமன்படுத்தும் பணியை தொடங்கி உள்ளார்கள்.

    பொதுமக்களுக்கு ஆதரவாக கடலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு பா.ம.க. அழைப்பு விடுத்தது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

    நெய்வேலியில் விளைநில பகுதியில் நடத்தும் சுரங்க விரிவாக்கத்தால் அந்த பகுதி விவசாயம் முற்றிலும் அழிந்து பாலைவனமாகிவிடும்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை விட கடலூர் என்.எல்.சியால் பாதிப்புகள் அதிகம். கடலூர் மாவட்டத்தில் 8 அடியில் கிடைத்து வந்த நிலத்தடி நீர் நெய்வேலி சுரங்கங்களால் இப்போது ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுவிட்டது.

    என்.எல்.சி.யால் காற்று மாசடைந்து ஆஸ்துமா போன்ற வியாதிகள் அதிகரித்துள்ளது. ஏற்கனவே என்.எல்.சி.க்கு நிலம் வழங்கியவர்கள் குடும்பத்தினருக்கு வேலை வழங்கவில்லை.

    கடலூரில் இன்று நடந்து வரும் போராட்டம் வெற்றிகரமாக அமைந்தாலும் அதனால் மகிழ்ச்சி அடையவில்லை. மக்கள் பாதிப்படைய வேண்டும் என்பதற்காக பா.ம.க. இந்த போராட்டத்தை நடத்தவில்லை. மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கவே இந்த போராட்டம்.

    இந்த பகுதியில் உள்ள விவசாயத்துறை அமைச்சரும், கடலூர் மாவட்ட கலெக்டரும் என்.எல்.சி.க்கு ஏஜெண்டுகளாக செயல்படுகிறார்கள்.

    எதற்கெடுத்தாலும் மத்திய அரசை எதிர்க்கும் தி.மு.க. இந்த விஷயத்தில் மவுனமாக இருப்பது ஏன்? விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பிடுங்கி தனியாருக்கு கொடுக்க துடிப்பது ஏன்? இன்னும் ஒரு வருடத்தில் என்.எல்.சி. தனியார் மயம் ஆக்கப்படும் என்று அறிவித்துவிட்டார்கள். அதற்குள் ஏன் இந்த அவசரம்.

    இது பா.ம.க.வின் பிரச்சினை அல்ல. எல்லா கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். சில கட்சியினர் புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள். இந்த பிரச்சினை கடலூர் மாவட்ட பிரச்சினை மட்டுமல்ல. கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம் உள்பட 6 மாவட்டங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை.

    இன்று நடப்பது ஒரு அடையாள போராட்டம் தான். இன்னும் போராட்டம் தீவிரமாகும். இதை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடலூரில் 100 சதவீதம் அரசு பேருந்துகளும் 50 சதவீதம் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
    • கடையை மூட வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி தெரிவித்துள்ளார்.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து இருந்தார்.

    ஆனால் கடலூர் மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்கள் ஓடும், அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று தொடங்கியது.

    கடலூரில் 100 சதவீதம் அரசு பேருந்துகளும் 50 சதவீதம் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அப்பகுதியில் இயல்பு நிலை காணப்பட்டது. கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. கடைகள், சந்தையில் வியாபாரிகள் வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.

    கடலூரில் கடைகள் திறக்கலாம், வாகனங்களை இயக்கலாம் என்று ஏற்கெனவே மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ள நிலையில், இன்று வியாபாரிகள் அச்சமின்றி கடையை திறக்கலாம்; கடையை மூட வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி தெரிவித்துள்ளார்.

    மேலும் கடலூரில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக பாமகவினர் 55 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • நிர்வாகத்துக்காக நிலங்களை கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
    • குடும்பத்தில் ஒருவருக்கு பணி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர என்.எல்.சி. நிர்வாகத்துக்கு அழுத்தம் தர வேண்டும்

    சென்னை:

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் தனது 2-வது நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில் நெய்வேலி என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று சந்தித்து பேசினார்கள்.

    மாக்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

    என்.எல்.சி. நிர்வாகத்துக்காக நிலங்களை கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

    நிர்வாகத்துக்காக நிலங்களை கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு மாற்றாக புதிய இடங்கள் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு பணி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர என்.எல்.சி. நிர்வாகத்துக்கு அழுத்தம் தர வேண்டும் என்று அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர்.

    • சேத்தியாத்தோப்பை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    • கலவரம் ஏதேனும் நடந்தால் அதனைக் கட்டுப்படுத்த வஜ்ரா, வருண் போன்ற வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

    சேத்தியாத்தோப்பு:

    என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நெய்வேலி அருகேயுள்ள ஆணைவாரி, எரும்பூர், காரிவெட்டி, வளையமாதேவி, கத்தாழை போன்ற பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்தது. இதற்கு அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கிராமத்திற்குள் விடாமல் தடுத்து நிறுத்தினர்.

    மேலும், இக்கிராம மக்களுக்கு ஆதரவாக பா.ம.க., த.வா.க. போன்ற கட்சிகளும் களம் இறங்கின. அதில் குறிப்பாக என்.எல்.சி. நிறுவனம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் பா.ம.க. தலைவர் அண்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டார்.

    இதனையடுத்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கடலூர் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் என்.எல்.சி. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.

    இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும் பணியை இன்று தொடங்கியது. இதில் முதற்கட்டமாக எல்லைகளில் வாய்க்கால் வெட்டும் பணிகள் நடக்கிறது. ஒவ்வொரு முறையும் பணிகளை தொடங்கும் போது கிராம மக்களின் போராட்டம், பா.ம.க. போன்ற கட்சிகளின் போராட்டம் நடைபெறும். அது போல இந்த முறை போராட்டம் நடைபெற்றால் அதனை தடுக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

    இவர்கள் சேத்தியாத்தோப்பை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    என்.எல்.சி. சுரங்க விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வினர் மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டிலும், வடக்குத்து ஜெகன், செல்வமகேஷ் தலைமையில் வளையமாதேவியிலும் மறியலில் ஈடுபட்டனர்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், துணை சூப்பிரண்டு ரூபன்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அங்கு மறியலில் ஈடுபட்டிருந்த பா.ம.க.வினரை கைது செய்தனர்.

    மேலும், கலவரம் ஏதேனும் நடந்தால் அதனைக் கட்டுப்படுத்த வஜ்ரா, வருண் போன்ற வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சேத்தியாத்தோப்பு பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.

    • புவனகிரி ஒன்றியம் மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
    • கடந்த காலங்களில் என்.எல்.சி. நிர்வாகத்தால் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.6 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது.

    சேத்தியாத்தோப்பு;

    என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை கிராமங்களுக்குள் வரவிடாமல் தடுத்து வருகின்றனர். இதையடுத்து என்.எல்.சி. நிர்வாகம், கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் குடும்பத்திற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை, ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு, மாற்று இடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இக்கிராமங்களில் நடைபயணம் மேற்கொண்டார். என்.எல்.சி. நிர்வாகம் தனியாரிடம் விற்பனை செய்யப்பட உள்ளது. எனவே, இந்த நிர்வாகம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷத்துடன் நடைபயணத்தை நடத்தி சென்றார்.

    இந்நிலையில் புவனகிரி ஒன்றியம் மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு கடந்த காலங்களில் என்.எல்.சி. நிர்வாகத்தால் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.6 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. இவர்களுக்கும் ஏக்கருக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். வீட்டிற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று நள்ளிரவு கிராமங்களின் பொது இடங்களிலும், 300-க்கும் மேற்பட்டோர் வீடுகளிலும் கருப்பு கொடியேற்றி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

    தகவலறிந்து இன்று விடியற்காலையில் புவனகிரி டி.எஸ்.பி தீபன்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இன்று நாடு முழுவதும் குடியரசு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே, பொது இடங்களில் கருப்பு கொடி ஏற்றக்கூடாது என்று கிராம மக்களிடம் அறிவுறுத்தினார். இதையேற்ற கிராம மக்கள் பொது இடங்களில் இருந்து கருப்பு கொடியை அப்புறப்படுத்தினர். அதே வேளையில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி பறந்து வருகிறது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    ×