search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிகே சிவக்குமார்"

    • கட்சிக்கு துரோகம் செய்தவருக்கு தோல்வி கொடுக்க வேண்டும்.
    • மே 13-ந்தேதியுடன் பா.ஜனதாவுக்கு இறுதிச்சடங்கு நடக்கும்.

    மைசூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல்கட்சி தலைவர்கள் சவால் விடுவதும், குற்றச்சாட்டுகளை கூறும் சம்பவங்களும் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் உப்பள்ளியில் நடந்த வீரசைவ-லிங்காயத் சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேசுகையில், சிலர் பா.ஜனதாவில் அனைத்து பதவிகளையும், அதிகாரத்தையும் பெற்றுக்கொண்டு வேறு கட்சிக்கு சென்றுள்ளனர். பா.ஜனதாவுக்கு துரோகம் செய்துவிட்டு சென்ற ஜெகதீஷ் ஷெட்டரை வெற்றி பெற விடக்கூடாது. அவருக்கு நாம் யார் என்று பாடம் புகட்ட வேண்டும். இனி அவரது பெயரை நான் குறிப்பிட மாட்டேன். துரோகி என கூறுவேன். கட்சிக்கு துரோகம் செய்தவருக்கு தோல்வி கொடுக்க வேண்டும். நான் எனது ரத்தத்தில் எழுதி தருகிறேன், கர்நாடகத்தில் இந்த முறை பா.ஜனதா தனி மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வரும் என்று பேசினார்.

    இந்த நிலையில் நேற்று காலை மைசூருவில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் எடியூரப்பாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து கூறியதாவது:-

    எடியூரப்பா இந்த முறை பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் ரத்ததால் எழுதி தருவதாக கூறியுள்ளார். அந்த கட்சி 40 சதவீத கமிஷன் பெற்றுள்ளது. இதனால் 40 சதவீத கமிஷன் போல் 40 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும். கர்நாடகத்தில் இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என நான் எனது ரத்தத்தில் எழுதி கொடுக்கிறேன்.

    இரட்டை என்ஜின் அரசு இட ஒதுக்கீடு விவகாரத்தில் மோசடி நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. பா.ஜனதா ஒரு துரோக கட்சி என்பது சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரியும். தேர்தல் நேரத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் தேன் கூட்டில் கைவைத்து பா.ஜனதாவினர் ஏமாற்றியுள்ளனர்.

    அமித்ஷாவும், நீங்களும் இடஒதுக்கீடு விவகாரத்தில் உறுதியாக இருக்கிறீர்களா? அல்லது பொய் சொல்லி ஏமாற்றுகிறீர்களா?. லிங்காயத்துகளும், ஒக்கலிகர்களும் பிச்சைக்காரர்களா?. அந்த சமுதாயத்தினருக்கு தலா 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக நீங்கள் நாடகமாடுகிறீர்கள்.

    வருகிற மே 13-ந்தேதியுடன் பா.ஜனதாவுக்கு இறுதிச்சடங்கு நடக்கும். அனைவருக்கும் சம பங்கீடு கொடுப்போம். இதையே நாங்கள் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எலகங்கா தொகுதியில் இருந்து இன்று முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளேன்.
    • நடிகர் சுதீப் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார்.

    பெங்களூரு :

    பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    பா.ஜனதாவின் அணை உடைந்து, தண்ணீர் காலியாகி இருப்பதாக டி.கே.சிவக்குமார் கூறி இருக்கிறார். முதலில் காங்கிரஸ் குளத்தில் தண்ணீர் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் தண்ணீர் எப்படி பாய்ந்து ஓடும். முதலில் காங்கிரசில் என்ன நடக்கிறது என்பதை டி.கே.சிவக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும். பா.ஜனதா கட்சி பற்றி அவர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

    எங்கள் கட்சியின் மேலிடம் மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. கட்சிக்குள் எந்த பிரச்சினை வந்தாலும், அதனை சரிசெய்யும் சாமர்த்தியம் இருக்கிறது. எடியூரப்பா மற்றும் மத்திய மந்திரி ஷோபாவை கட்சியில் இருந்து ஒழிக்க சதி நடப்பதாக டி.கே.சிவக்குமார் கூறி இருப்பது வேடிக்கையாக உள்ளது. சித்தராமையாவை காங்கிரஸ் கட்சியினர் எப்படி முடக்கினார்கள் என்பது தெரியவில்லையா?.

    கடந்த சட்டசபை தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா தோல்வி அடைய காங்கிரஸ் கட்சியே காரணம். தற்போது கூட வருணா தொகுதியில் சித்தராமையாவை தோற்கடிக்க டி.கே.சிவக்குமார், அக்கட்சியின் தலைவர்கள் முயற்சிக்கிறார்கள். இது இந்த நாட்டுக்கே தெரிந்த விஷயம். கடந்த 2013-ம் ஆண்டு லிங்காயத் சமூகத்தை அழிப்பதற்காக, தனி மத அங்கீகாரம் கொடுப்பதாக கூறினார்கள். தேர்தல் முடிவுகள் என்ன ஆனது என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்கு தெரியும்.

    டி.கே.சிவக்குமாரின் பேச்சு காரணமாக இந்த முறை லிங்காயத் சமூகத்தினர் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். லிங்காயத் சமூகத்தை பலப்படுத்தும் வேலையை காங்கிரசாரே செய்கின்றனர். அதுபற்றி பா.ஜனதா கவலைப்படவில்லை.

    சவதத்தி-எல்லம்மா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. யாருடைய வேட்பு மனுவை ஏற்க வேண்டும், யாருடைய வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையம், அதிகாரிகளின் பணியாகும். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் எதுவும் செய்ய சாத்தியமில்லை.

    டி.கே.சிவக்குமார், தனது வேட்பு மனு விவகாரத்தை 2 நாட்கள் கையில் எடுத்து அரசியல் செய்தார். நாளை முதல் (அதாவது இன்று) எலகங்கா தொகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்க உள்ளேன். நடிகர் சுதீப் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார். சுதீப் எங்கெல்லாம் பிரசாரம் செய்ய உள்ளார் என்ற தகவல்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார்.
    • சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா.

    பெங்களூரு :

    கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா. இருவரும் ஒரே கட்சியில் முக்கிய தலைவர்களாக இருந்தாலும், முதல்-மந்திரி பதவிக்காக 2 தலைவர்களும் மோதிக் கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியில் சித்தராமையா தலைமையில் ஒரு பிரிவினரும், டி.கே.சிவக்குமார் தலைமையில் மற்றொரு பிரிவினரும் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் யார் முதல்-மந்திரி ஆவார்கள்? என்பதில் தான் 2 தலைவர்களும் மோதிக் கொள்கிறார்கள். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் இடையே ஒற்றுமை இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.

    சமீபத்தில் கோலாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட முதலில் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற தலைவர்கள் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும், முதல்-மந்திரி யார்? என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், பெங்களூருவில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற சித்தராமையாவும், டி.கே.சிவக்குமார் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினார்கள். டி.கே.சிவக்குமார் தோள் மீது சித்தராமையா கைபோட்டு நிற்பது, சித்தராமையாவின் சட்டையில் டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் சின்னம் இருந்த பேட்ஜை மாட்டியது போன்ற புகைப்படங்கள் வெளியானது. சட்டசபை தேர்தலையொட்டி தாங்கள் 2 பேரும் ஒற்றுமையாக இருப்பது போல் இந்த புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டு இருப்பதாக பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.

    • டி.கே.சிவக்குமாருக்கு எதிராக பா.ஜனதாவினர் சதி செய்கிறார்கள்.
    • கடந்த 5 ஆண்டுகளில் டி.கே.சிவக்குமாரின் சொத்து மதிப்பு 68 சதவீதம் அதிகரித்துள்ளது.

    பெங்களூரு :

    மே 10-ந்தேதி நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. நேற்று வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் ஆகும். இதனால் தேர்தல் அலுவலகங்களில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்தனர்.

    இந்த நிலையில் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கடந்த 17-ந்தேதி மனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் அந்த தொகுதியில் போட்டியிடும் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் ஆர்.அசோக்கின் சொந்த தொகுதியான பத்மநாபநகரில் அவரை எதிர்த்து டி.கே.சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி. போட்டியிடுவார் என்று பேசப்பட்டது.

    கடைசி நாளான நேற்று அவர் அந்த தொகுதியில் மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக டி.கே.சுரேஷ் கனகபுரா தொகுதியில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் பத்மநாபநகரில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரகுநாத் நாயுடு மாற்றப்படாமல் போட்டியில் நீடிப்பது உறுதியாகியுள்ளது.

    கனகபுராவில் மனு தாக்கல் செய்தது குறித்து டி.கே.சுரேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "டி.கே.சிவக்குமாருக்கு எதிராக பா.ஜனதாவினர் சதி செய்கிறார்கள். இந்த சதியை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் முன்எச்சரிக்கையாக நான் கனகபுராவில் மனு தாக்கல் செய்துள்ளேன். வருமான வரித்துறை மூலம் எங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார்கள்.

    வருமான வரித்துறை கடந்த 4, 5 நாட்களுக்கு முன்பு எங்களுக்கு நோட்டீசு அனுப்பி உடனே நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது. அதற்கு நாங்கள், தற்போது தேர்தல் நடைபெறவதால், அதில் நாங்கள் பரபரப்பாக இயங்கி வருகிறோம், அதனால் தேர்தலுக்கு பிறகு நேரில் ஆஜராவதாக தெரிவித்துள்ளோம்" என்றார்.

    இதற்கிடையே கனகபுரா தொகுதியில் டி.கே.சிவக்குமாரின் வேட்பு மனு தள்ளுபடி செய்ய வாய்ப்பு உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 17-ந்தேதி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரமும் தாக்கல் செய்துள்ளார். அதில் அவருக்கு ரூ.1,414 கோடி சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 68 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அவர் வருமான வரி கணக்கில் காட்டியுள்ள வருவாய்க்கும், தற்போது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள், டி.கே.சிவக்குமாரின் சொத்து விவரங்களையும், அவர் தாக்கல் செய்த வருவாய் விவரங்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதில் ஏதாவது வித்தியாசம் இருப்பது கண்டறியப்பட்டால், டி.கே.சிவக்குமாரின் வேட்புமனு தள்ளுபடி செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான் கனகபுரா தொகுதியில் அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி. நேற்று கடைசி நாளில் மனு தாக்கல் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கர்நாடக அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காங்கிரஸ் கட்சி 141 முதல் 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
    • எடியூரப்பாவின் கண்ணீரை துடைக்க பா.ஜனதாவால் முடியவில்லை.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் எங்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகிறார்கள். காங்கிரசின் ஒற்றுமை யாத்திரைக்கு நீங்கள் (தொழில் அதிபர்கள்) கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக என்னை அந்த அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதனால் பா.ஜனதா வருமான வரித்துறையை தவறாக பயன்படுத்தி காங்கிரசாரை மிரட்ட முயற்சி செய்கிறது. வருமான வரித்துறையினர் எவ்வளவு மிரட்டினாலும் நாங்கள் மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி நல்லாட்சி நிர்வாகத்தை நடத்துவோம்.

    பா.ஜனதாவின் மோசமான ஆட்சி நிர்வாகத்தால் வெறுப்பில் உள்ள கர்நாடக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மே 10-ந் தேதி தேர்தல் நாள் மட்டுமல்ல, மாற்றத்தை ஏற்படுத்த கூடிய நாள். ஊழலை விரட்டியடிக்கும் நாள். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் நாள், வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நாள், படித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை கிடைக்கும் நாள் ஆகும்.

    காங்கிரஸ் கட்சி 141 முதல் 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே இந்த திட்டங்கள் குறித்து முடிவு எடுத்து அமல்படுத்துவோம். எங்கள் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பட்டீலை இழுக்க பா.ஜனதா கடந்த 3 மாதங்களாக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அவரிடம் நான் பேசியுள்ளேன்.

    எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கினர். அவரை பா.ஜனதா சரியான முறையில் நடத்தவில்லை. நாங்கள் லிங்காயத் சமூகத்திற்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்கிறோம். லிங்காயத் சமூகங்களின் மடாதிபதிளை பா.ஜனதா தவறாக பயன்படுத்த முடியாது. எடியூரப்பாவின் கண்ணீரை துடைக்க பா.ஜனதாவால் முடியவில்லை. எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் அனைவரும் பா.ஜனதாவை விட்டு விலகியுள்ளனர். பசவண்ணரின் கொள்கையே காங்கிரசின் கொள்கை.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • எம்.டி.பி. நாகராஜுக்கு ரூ.1,510 கோடி சொத்துகள் உள்ளன.
    • டி.கே.சிவக்குமாருக்கு ரூ.1,347 கோடி உள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தோ்தலையொட்டி தற்போது வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. நேற்று நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி எம்.டி.பி.நாகராஜ் ஒசக்கோட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளார். இதில் அவரின் சொத்து மதிப்பு ரூ.1,510 கோடி என்று காட்டியுள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை இடைத்தேர்தலில் அவர் போட்டியிட்டார். அப்போது அவரது சொத்து மதிப்பு ரூ.1,015 கோடியாக இருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.495 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. அவரிடம் ரொக்கமாக ரூ.6.48 கோடி, அவரது மனைவியிடம் ரூ.34.29 லட்சமும், வங்கி டெபாசிட் அவரது சேமிப்பு கணக்கில் ரூ.29.12 கோடி, மனைவி பெயரில் ரூ.6.16 கோடி, நிலையான டெபாசிட் அவரது பெயரில் ரூ.33 கோடி, மனைவி பெயரில் 1.99 கோடி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அவர் ரூ.105.91 கோடியை பிறருக்கு கடன் வழங்கியுள்ளார். அவரது மனைவி ரூ.19.93 கோடி கடன் வழங்கி இருக்கிறார். அவரிடம் 993 கிராம் தங்க நகைகள், ரூ.98.93 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், 234 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளன. இந்த தங்க நகைகள், வைரம், வெள்ளி பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2.41 கோடி ஆகும்.

    அவரது மனைவியிடம் 2 கிலோ 879 கிராம் தங்க நகைகள், 26 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளன. அவரிடம் உள்ள தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூ.1.64 கோடி ஆகும். எம்.டி.பி.நாகராஜிடம் உள்ள அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.372.42 கோடி. அவரது மனைவியிடம் உள்ள அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.163.78 கோடி ஆகும்.

    எம்.டி.பி.நாகராஜிடம் உள்ள அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.798.38 கோடி ஆகும். அவரது மனைவியிடம் ரூ.274.97 கோடி சொத்துக்கள் உள்ளன. வங்கிகள் உள்ளிட்ட பிற நிதி நிறுவனங்களில் அவருக்கு ரூ.71 கோடியும், அவரது மனைவிக்கு ரூ.27.35 கோடியும் கடன் உள்ளது. எம்.டி.பி.நாகராஜ், அவரது மனைவியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,607 கோடி.

    இதில் அவர்களின் கடன்களை கழித்தால், சொத்து மதிப்பு ரூ.1,510 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் பிரமாண பத்திரத்தில் இடம் பெற்றுள்ளன.

    இதுபோல் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று கனகபுராவில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவுடன் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கும், அவரது மனைவிக்கும் சோ்த்து சுமார் ரூ.1,347 கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அவரது மனைவி பெயரில் ரூ.133 கோடி சொத்துக்கள் உள்ளன. மீதமுள்ள சொத்துக்கள் டி.கே.சிவக்குமார் பெயரில் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு ரூ.840 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.507 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. டி.கே.சிவக்குமாருக்கு ரூ.226 கோடியும், அவரது மனைவிக்கு ரூ.34 கோடியும் கடன் உள்ளது.

    இவர்களைவிட பெங்களூரு சிக்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் டிக்கெட் கேட்டு வந்த கே.ஜி.எப். பாபு தற்போது தனது மனைவி சஜியா தரணத்தை சுயேச்சையாக களம் நிறுத்தி உள்ளார். அவரது மனைவி பெயரில் ரூ.1,662 கோடி சொத்து இருப்பதாக அவர் பிரமாண பத்திரத்தில் கணக்கு காட்டி இருக்கிறார். இதன்மூலம் அவர் கர்நாடகத்தில் பணக்கார வேட்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜனதா 65 முதல் 70 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்.
    • எனது வாழ்க்கை போராட்டத்தால் நிறைந்தது.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கனகபுரா தொகுதியில் என்னை எதிர்த்து மந்திரி ஆர்.அசோக் போட்டியிடுவதாக பா.ஜனதா அறிவித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். அவருக்கு நல்லது நடக்கட்டும். அரசியல் என்பது கால்பந்து விளையாட்டு அல்ல, அது சதுரங்க ஆட்டத்தை போன்றது. சதுரங்க விளையாட்டை யார் வேண்டுமானாலும் விளையாடட்டும். அரசியலில் போட்டி இருக்க வேண்டும்.

    அரசியலில் போராட்டம் என்பது எனக்கு புதிது அல்ல. 1985-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு எதிராக போட்டியிட்டேன். குமாரசாமிக்கு எதிராகவும் தேர்தல் களம் கண்டுள்ளேன். தற்போதும் போராடுகிறேன். எனது வாழ்க்கை போராட்டத்தால் நிறைந்தது. பத்மநாபநகரில் ஆர்.அசோக்கிற்கு எதிராக நாங்கள் பலவீனமான வேட்பாளரை நிறுத்தவில்லை.

    அவரது தொகுதியில் ஆர்.அசோக்கிற்கு எதிராக அதிருப்தி அதிகமாக உள்ளது. அங்கு முஸ்லிம் வாக்குகள் அதிகமாக உள்ளன. அதை கருத்தில் கொண்டு நாங்கள் நாயுடு சமூகத்தை சேர்ந்த ரகுநாத் நாயுடுவை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அவர் வெற்றி பெறுவது உறுதி. தேர்தலில் காங்கிரஸ் கட்சி 141 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி.

    பா.ஜனதா 65 முதல் 70 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும். அதிருப்தியில் உள்ள பா.ஜனதாவினர் என்னை சந்தித்தது குறித்து விவரங்களை தற்போது வெளியிட மாட்டேன். பா.ஜனதாவில் இருந்து பலர் விலகி வருகிறார்கள். அவர்களை நாங்கள் தொடர்பு கொள்ளவில்லை.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • பா.ஜனதாவில் தான் உள்கட்சி பிரச்சினை உள்ளது.
    • பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    போவி சமூகத்திற்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்குவதாக பா.ஜனதா உறுதியளித்து இருந்தது. ஆனால் அந்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. அதனால் அந்த சமூகத்தை சேர்ந்த பாபுராவ் சின்சனசூர் பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்தார். ஒக்கலிகர்கள், லிங்காயத் சமூகங்களுக்கு தலா 2 சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீட்டை இந்த அரசு உயர்த்தி வழங்கியுள்ளது. அதுவும் முஸ்லிம் சமூகத்தின் இட ஒதுக்கீட்டை பறித்து வழங்கியுள்ளனர். அதனால் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், இந்த இட ஒதுக்கீட்டு உத்தரவை நாங்கள் ரத்து செய்வோம்.

    அதே போல் தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு உயர்வையும் அரசியல் சாசனத்தில் சேர்க்கவில்லை. பா.ஜனதா அரசு எதையும் சட்டப்படி செய்யவில்லை. பா.ஜனதா அரசு சமீபத்தில் எடுத்த அனைத்து முடிவுகளும், மக்களை முட்டாளாக்கும் வகையில் அமைந்துள்ளன. இதன் தாக்கம் வருகிற தேர்தலில் எதிரொலிக்கும். பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    இந்த பா.ஜனதா அரசு செய்த தவறுகளை நாங்கள் சரிசெய்து அனைத்து தரப்பினருக்கும் நீதியை நிலைநாட்டுவோம். எங்கள் கட்சியின் தேர்தல் குழு கூட்டம் 4-ந் தேதி (நாளை) நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக நாளை (இன்று) நான் டெல்லி செல்கிறேன். இதில் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த விஷயத்தில் இறுதி முடிவை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எடுப்பார்.

    எங்கள் கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. பா.ஜனதாவில் தான் உள்கட்சி பிரச்சினை உள்ளது. அதனால் தான் அவர்கள் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. ஜனதா தளம் (எஸ்) கட்சியிலும் மோதல் நிலை உள்ளது. அதனால் தான் அந்த 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள். சித்தராமையா 2 தொகுதியில் போட்டியிட உள்ளதாக சொல்கிறீா்கள். டிக்கெட் வேண்டும் என்று கேட்பவர்களை வேண்டாம் என்று கூற முடியுமா?. ஆதரவாளர்கள் கேட்பதில் தவறு இல்லை. இந்த விஷயத்தில் கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • ஜனதாதளம் (எஸ்) கட்சியை கலைக்க போவதாக குமாரசாமி கூறி இருக்கிறார்.
    • எந்த மாதிரியான வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்பது குமாரசாமிக்கு தெரியவில்லை.

    பெங்களூரு :

    பெங்களூருவில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    ஜனதாதளம் (எஸ்) கட்சியை கலைக்க போவதாக குமாரசாமி கூறி இருக்கிறார். குமாரசாமியின் இந்த பேச்சால், அந்த கட்சியில் இருக்கும் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அவ்வாறு குழப்பத்தில் இருக்கும் ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் காங்கிரசில் சேரலாம். அந்த கட்சி தொண்டர்களுக்கு நானே அழைப்பு விடுக்கிறேன்.

    எனது கனகபுரா தொகுதியில் இருந்து மாநிலம் முழுவதும் பல தொகுதிகளில் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருப்பவர்கள் காங்கிரசில் தொடர்ந்து சேர்ந்து வருகின்றனர். ஜனதாதளம் (எஸ்) கட்சி மீது நான் எந்த குற்றச்சாட்டும் கூறுவதில்லை, அந்த கட்சியின் தலைவர்களுடன் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருவதாக கூறுவது உண்மை இல்லை.

    ஏனெனில் சமீபமாக ஜனதாதளம் (எஸ்) கட்சியினர், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். ஒரு அரசியல் கட்சியின் தலைவர் எந்த மாதிரியான வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்பது குமாரசாமிக்கு தெரியவில்லை. குமாரசாமி ஜனதாதளம் (எஸ்) கட்சியை கலைப்பதாக தனது வாயால் சொல்லி முடித்து விட்டார். அந்த கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெறாது என்று நான் சொல்லவில்லை.

    அந்த கட்சி தலைவர்கள் ஒரு மாதிரியான கொள்கையின் அடிப்படையில் அரசியல் செய்கிறார்கள். அரசியலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி இருக்க வேண்டும். இது காங்கிரஸ் கட்சி மற்றும் என்னுடைய நிலைப்பாடு ஆகும். ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் மென்மை போக்கை கடைப்பிடிப்பதை தவிர்ப்பதற்காக, தினமும் காலையில் எழுந்தவுடன், அந்த கட்சி தலைவர்களுடன் என்னால் சண்டை போட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நேற்று மதியம் கலபுரகி விமான நிலையத்தில் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் அரசின் பாத்திரம் இல்லை என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகின்றனர். முதல்-மந்திரியும் கூறி வருகிறார். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு கைதான நபர்கள், ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். பெரிய முறைகேடு நடந்திருக்கும் பட்சத்தில் இந்த வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன் எப்படி கிடைக்கிறது.

    அரசு மற்றும் பா.ஜனதா தலைவர்களின் ஆதரவு இல்லாமல் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதானவர்களுக்கு ஜாமீன் கிடைக்க சாத்தியமே இல்லை. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் அரசின் பங்கும், பா.ஜனதா தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பது உறுதி. இதனை மூடி மறைக்கவே போலீஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது, என்றார்.

    • பா.ஜனதா அரசு மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறது.
    • தற்போதைய பா.ஜனதா ஆட்சியால் பெண்கள் அவதிப்படுகிறார்கள்.

    ஹாசன் :

    கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் தனித்தனியாக யாத்திரை நடத்தி வருகிறது. மேலும் 3 கட்சிகளின் முக்கிய தலைவர்களும் மாநிலம் முழுவதும் சுற்றப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரம் நடத்தி வருகிறார்கள். இதனால் கர்நாடகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் சார்பில் பிரஜா சக்தி யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரை நேற்று ஹாசன் மாவட்டத்தில் நடந்தது.

    ஹாசன் தண்ணீருஹல்லா பகுதியில் பிரஜா சக்தி யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட பலர் வந்தனர். டி.கே.சிவக்குமார், சித்தராமையாவுக்கு ஹாசன் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிரேன் மூலம் அவர்கள் 2 பேருக்கும் பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.

    பின்னர் மேடைக்கு சென்று டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் பிரஜா சக்தி யாத்திரை பொதுக்கூட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மேலும் நகரில் முக்கிய பகுதிகள், சர்க்கிள்களில் காங்கிரஸ் கட்சியின் பேனர்கள், கொடிகள் கட்டப்பட்டு இருந்தது.

    இந்த பொதுக்கூட்டத்தில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:- ஹாசனில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்த பிரமாண்ட வரவேற்பை பார்த்து ஒரு குடும்பத்தினருக்கு (ஜனதாதளம்(எஸ்) கட்சி) அச்சம் ஏற்படும். இங்குள்ள 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இதற்கு இங்கு திரண்டிருக்கும் மக்களே சாட்சி.

    தற்போதைய பா.ஜனதா ஆட்சியால் பெண்கள் அவதிப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சி எப்போதும் பா.ஜனதாவை விலக்கி வைக்கவே விரும்புகிறது. இதனால் தான் கடந்த முறை காங்கிரசை விட குறைந்த இடங்களில் வெற்றி பெற்ற ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்து குமாரசாமியை முதல்-மந்திரி ஆக்கினோம். ஆனால், ஓராண்டில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதற்கு காரணம் குமாரசாமி தான்.

    பா.ஜனதா அரசு மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறது. கொரோனா சமயத்தில் கூட இந்த அரசு பணத்தை கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருந்தது. விலைவாசி உயர்வு, மக்களின் பிரச்சினை பற்றி பா.ஜனதாவினருக்கு கவலை இல்லை. ஆட்சி அதிகாரம், பணத்தை கொள்ளையடிப்பதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.

    பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள். அனைவரும் காங்கிரசை ஆதரிக்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சியை காங்கிரஸ் வழங்கும். லஞ்சம், ஊழலை ஒழிக்க மக்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும். 200 யூனிட் மின்சாரத்தை எப்படி வழங்க முடியும் என்று எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு அதனை அனைவரும் பார்ப்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • தெருவோர வியாபாரிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்.

    பெங்களூரு:

    தெருவோர வியாபாரிகள் சங்கங்களின் மாநாடு பெங்களூரு டவுன் ஹாலில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:- உங்களின் (தெருவோர வியாபாரிகள்) எண்ணிக்கை குறைவு இல்லை. உங்களால் சொந்தமாக கடையை நடத்த முடியவில்லை. நீங்கள் தவறான வழியில் போகாமல் நேர்மையாக உழைத்து சுயமரியாதையுடன் வாழ்க்கையை நடத்துகிறீர்கள். உங்களின் குறைகள் என்ன என்பதை நான் அறிவேன். உங்களின் சுயமரியாதை வாழ்க்கைக்கு உதவுவது எங்களின் கடமை. அதை நாங்கள் செய்வோம்.

    நமது நாட்டிற்கு நீங்கள் அனைவரும் சொத்து. தரமான பொருட்களை நீங்கள் குறைந்த விலைக்கு விற்கிறீர்கள். நான் மாணவராக இருந்தபோது, தெருவோர கடையில் உணவு சாப்பிட்டது உண்டு. உங்களின் மீது காங்கிரஸ் அதிக அக்கறையுடன் செயல்படுகிறது. உங்களின் வாழ்க்கையை தினசரி வட்டி நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

    வங்கிகளில் உங்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. நிலத்தை உழுபவரே அதன் உரிமையாளர் என்று சட்டத்தை கொண்டு வந்ததும் காங்கிரசே. இதன் மூலம் நிலம் இல்லாதவர்களுக்கும் நிலம் கிடைத்தது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒருவருக்கு 7 கிலோ வரை இலவச அரிசி வழங்கும் அன்ன பாக்கிய திட்டத்தை நாங்கள் தொடங்கினோம்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளால் உங்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டசபை தேர்தலையொட்டி நாங்கள் பெலகாவியில் இருந்து பஸ் யாத்திரையை தொடங்கியுள்ளோம். முதல் நாளில் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்துள்ளோம்.

    குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் அமல்படுத்துவோம். விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் இந்த திட்டங்களை அமல்படுத்தினால் அது நடுத்தர மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். தெருவோர வியாபாரிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இந்த பா.ஜனதா ஆட்சியில் மக்களுக்கு தேவையான எந்த திட்டத்தையும் அமல்படுத்தவில்லை.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

    • காங்கிரஸ் ஆட்சியில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
    • சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 140 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

    பெங்களூரு:

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் கூட்டாக மக்கள் குரல் என்ற பெயரில் பஸ் யாத்திரையை தொடங்கியுள்ளனர். அந்த யாத்திரையையொட்டி ஹாவேரியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-

    கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதாவை ஆதரிக்குமாறு அக்கட்சி தலைவர்கள் கேட்கிறார்கள். நீங்கள் எதற்காக அந்த கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்?. 40 சதவீத கமிஷன் பெறுவதற்கா?, இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க பணம் வாங்குவதற்கா?. ஒவ்வொரு அரசு வேலைக்கும் லஞ்சம் இவ்வளவு என்று நிர்ணயித்து வாங்குகிறார்கள். விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக அதிகரிப்பதாக மத்திய அரசு கூறியது. அதன்படி விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளதா?.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கல்யாண-கர்நாடக பகுதியின் வளர்ச்சிக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். சமீபத்தில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.10 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். அப்படி என்றால் அவரது சொந்த மாவட்டமான ஹாவேரிக்கு எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன?.

    காங்கிரஸ் ஆட்சியில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. மாநிலத்தின் மின் உற்பத்தி திறனை 10 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து 21 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்தினோம். நாங்கள் 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சூரியசக்தி மின் உற்பத்தி பூங்காவை அமைத்தோம்.

    காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கிருஹஜோதி திட்டத்தை அமல்படுத்தி வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ளோம். பெண்களுக்கு அதாவது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம்.

    பிரதமர் மோடி கர்நாடகம் வந்துள்ளார். ஒப்பந்ததாரர்கள் 40 சதவீத கமிஷன் பெறுவதாக புகார் அளித்துள்ளனர். இதற்கு அவர் பதிலளிக்க வேண்டும். நீர்ப்பாசன திட்டங்களை அமல்படுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும். வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 140 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    ×