search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு வெடிவிபத்து"

    • வெடி விபத்து ஏற்பட்ட அறையில் பற்றிய தீயானது அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது.
    • பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்ததால் உடனடியாக தீயணைப்பு படையினரால் நெருங்க முடியவில்லை.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்த கையோடு பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் உள்ளிட்டவைகளுக்காக மீண்டும் இந்த ஆலைகள் பட்டாசு உற்பத்தியை தொடங்கின.

    இதற்கிடையே அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி வடமாநிலங்களில் இருந்து அதிகளவில் வந்திருந்த ஆர்டர்களின் பேரில் பட்டாசு உற்பத்தி சூடுபிடிக்க தொடங்கியது. இதற்காக அதிகப்படியான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

    விருதுநகர் அருகே உள்ள வச்சகாரப்பட்டி காமராஜர்புரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ளது. இந்த ஆலையில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே ஊழியர்கள் வழக்கம் போல் வேலைக்கு வந்தனர். ஆலையில் உள்ள மருந்து சேமிக்கும் அறையில் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலவையை தயார் செய்யும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த அறையில் 'திடீர்' வெடிவிபத்து ஏற்பட்டது.

    இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த தொழிலாளர்கள் கூக்குரலிட்டனர். வெடி விபத்து குறித்து தகவலறிந்த விருதுநகர், சிவகாசி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    ஆனாலும் தொடர்ந்து வெடி விபத்து ஏற்பட்ட அந்த அறையில் பற்றிய தீயானது அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. இதில் மற்ற 3 அறைகள் உள்பட 4 அறைகள் இடிந்து தரைமட்டமானது. இருந்தபோதிலும் அங்கு பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்ததால் உடனடியாக தீயணைப்பு படையினரால் நெருங்க முடியவில்லை.

    இந்த பயங்கர விபத்தில் கன்னிசேரிபுதூரை சேர்ந்த காளிராஜ் (வயது 20), முதலிப்பட்டியை சேர்ந்த வீரக்குமார் (50) ஆகிய இருவரும் தரைமட்டமான அறைகளில் இடிபாடுகளுக்குள் சிக்கியும், உடல் சிதறியும் பலியானார்கள். மேலும் இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (18), தம்ம நாயக்கன்பட்டியை சேர்ந்த சரவணக்குமார் (25) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

    தீயை கட்டுக்குள் கொண்டு வந்தபிறகு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பலியானோர் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த விபத்து தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கிப்ட் பேக் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வெளியில் தப்பிக்க வழியின்றி அந்த அறைக்குள்ளேயே உடல் கருகினர்.
    • ரெங்கபாளையம் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக எம்.புதுப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கங்காகுளத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 43). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த எம்.புதுப்பட்டி அருகே ரெங்கபாளையம் கிராமத்தில் கம்மாபட்டி பகுதியில் கனிஷ்கர் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அதன் அருகிலேயே கனிஷ்கர் டிரேடர்ஸ் என்ற பெயரில் பட்டாசு விற்பனை கடையும் வைத்திருந்தார்.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்த கடையின் பின்புறம் அனுமதி பெறாமல் விதிகளை மீறி தகர செட் அமைத்து உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கிப்ட் பாக்ஸ் பேக்கிங் செய்து வந்தார். நேற்று மதியம் 1.30 மணி அளவில் அங்கு பட்டாசு வாங்க வந்த வெளியூரை சேர்ந்த நபர்கள் சரவெடி ஒன்றை பரிசோதனை முறையில் கடையின் முன்பாக வெடித்து பார்த்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக அதிலிருந்து தீப்பொறி பறந்து விபத்து ஏற்பட்டது. அடுத்த வினாடி அங்கிருந்த அனைத்து வெடிகளும் வெடித்து சிதறின. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிப்ட் பேக் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வெளியில் தப்பிக்க வழியின்றி அந்த அறைக்குள்ளேயே உடல் கருகினர்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய ஊர்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து சுமார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ முழுமையாக அணைப்பட்ட பிறகே பலியானவர்களின் உடலை மீட்கும் பணி நடந்தது.

    இதில் அங்கு பணியாற்றிய வடக்கு அழகாபுரியைச் சேர்ந்த மகாதேவி (50), பஞ்சவர்ணம் (35), பாலமுருகன் (30), தமிழ்ச்செல்வி (55), எஸ்.அம்மாபட்டியை சேர்ந்த முனீஸ்வரி (32), அழகாபுரியைச் சேர்ந்த தங்கமலை (33), அனிதா (45), லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த பாக்கியம் (35), குருவம்மாள் (55), இந்திரா (45), லட்சுமி (28), செல்லம்மாள் (40), முத்துலட்சுமி (36) ஆகிய 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    மேலும் படுகாயம் அடைந்த சின்னத்தாய் (35), பொன்னுத்தாய் (55) ஆகிய இருவரும் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கரிக்கட்டையாக மீட்கப்பட்ட பலியான 13 பேரின் உடல்களும் அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களும் ஒப்படைக்கப்பட்டது.

    அதேபோல் சிவகாசி அருகே மாரனேரி கிச்சநாயக்கன்பட்டியில் உள்ள முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசு உற்பத்திக்காக மருந்து கலவை செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் நதிக்குடியை சேர்ந்த வேம்பு (60) என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். ஒரே நாளில் பட்டாசு ஆலை விபத்துகளில் 14 பேர் பலியாகினர்.

    12 பெண்கள் உள்பட 13 பேரை உயிரை பலி வாங்கிய ரெங்கபாளையம் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக எம்.புதுப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முடிவில் ஆலை உரிமையாளர் சுந்தரமூர்த்தி, போர்மேன் கனகு என்ற கனகராஜ் (41), மேலாளர் ராம்குமார் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது பட்டாசு தயாரிக்கும் வெடி மருந்துகளை முறையாக கையாளாதது, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாதது, பட்டாசுகளை பாதுகாப்பின்றி விதிகளை மீறி வைத்திருந்தது என்பது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர்களை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    பட்டாசு ஆலை விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தொழிற் பாதுகாப்புத் துறை இணை இயக்குனர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.

    • விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து பெங்களூரு பகுதியில் வெவ்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் கடந்த 7-ந்தேதி, நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 14 இளைஞர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து பெங்களூரு பகுதியில் வெவ்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள உள்ள வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்த தினேஷ் குமார் (17) என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    பெங்களூர் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கர்நாடக மாநிலம் முல்பாகலை சேர்ந்த வெங்கடேஷ் (25) என்ற வாலிபரும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து, பட்டாசு கடை தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்தது.

    • தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
    • புதிதாக அதே ஊரைச் சேர்ந்த 3 பெண்கள் வேலைக்கு சென்றுள்ளனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டுவெடி தயாரிப்பு ஆலையில் நேற்று முன்தினம் காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிவகாசி, விருதுநகர், அரியலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்களின் உடல் பாகங்களை தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் ஒன்று சேர்த்து பின்னர் அவர்கள் யார்? யார்? என அடையாளம் கண்டனர்.

    தொடர்ந்து காயம் அடைந்த 13 பேரில் 7 பேர் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரியிலும், 6 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் பட்டாசு ஆலையின் உரிமையாளர் ராஜேந்திரன் ஆலையை நடத்தி வந்த அவரது மருமகன் அருண்குமார் ஆகியோர் மீது விபத்து, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், ஆபத்தான வெடி பொருட்களை வைத்து இருந்தது உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த சில மாதங்களாக பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், புதிதாக அதே ஊரைச் சேர்ந்த 3 பெண்கள் வேலைக்கு சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு வேகமாக வேலை நடைபெற்று வந்த நிலையில், இவர்களுக்கு அங்கு எப்படி வேலை செய்ய வேண்டும் என தெரியாமல் அமோனியம் பாஸ்பேட் இருந்த பெட்டியை வேகமாக இழுத்ததாக தெரிகிறது. அப்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அங்கு வேலை செய்து லேசான காயத்துடன் உயிர் தப்பிய சிவகாசியை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவரும் உறுதி செய்துள்ளார். மேலும் இங்கு பாதுகாப்பு இல்லாமல் குப்பைகளை போல வெடி மருந்துகளை குவித்து வைத்திருந்ததும் ஒரு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • அரசின் வழிகாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு கடைகள் இயங்க வேண்டும்.
    • விசாரணை முடிவில் அரசுக்கு அறிக்கை வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளது. இங்கு இரு மாநில ஆர்ச் அருகில், தேசிய நெடுஞ்சாலையையொட்டி,10 பட்டாசு கடைகள் அமைந்துள்ளன. கடந்த 7-ந் தேதி மாலை, அந்த பகுதியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் நடந்த பயங்கர தீ விபத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 14 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து அத்திப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.வெடி விபத்து நடந்த இடத்தை கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்த வழக்கை சி.ஐ.டி. பிரிவு போலீசார் விசாரிப்பார்கள் என்று அவர் அறிவித்தார்.

    அதன்படி கர்நாடக மாநில சி.ஐ.டி. பிரிவு எஸ்.பி.வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் நேற்று வெடி விபத்து நடந்த அத்திப்பள்ளிக்கு வந்தனர். அங்கு வெடி விபத்து நடந்த கடையை ஆய்வு செய்தனர். வெடி விபத்தில் சேதமடைந்த பிக்அப் வேன்கள், எரிந்த லாரி, டூவீலர்கள் மற்றும்கட்டிட சுவர்கள் என அனைத்தையும் அவர்கள் ஆய்வு செய்து போட்டோ எடுத்துக் கொண்டனர். அப்போது சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி.பி. மதுக்கர் பவார், அத்திப்பள்ளி நகர அலுவலர் மஞ்சுநாத் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    இதுகுறித்து அத்திப்பள்ளி நகர அலுவலர் மஞ்சுநாத் கூறியதாவது:-

    அரசின் வழிகாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு கடைகள் இயங்க வேண்டும். இங்கு எந்த விதிமுறைகளும் கடை பிடிக்கப்படவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசின் 25 வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அதில் எதையும் இங்கு கடைபிடிக்கவில்லை. குறிப்பாக பட்டாசு கடைகள் அமைந்துள்ள இடத்தில் மணல் வாளிகள் வைத்திருக்க வேண்டும். தண்ணீர் நிரப்பப்பட்ட லாரிகள் வைத்திருக்க வேண்டும்.

    தீ தடுப்பு கருவிகள் இருக்க வேண்டும். அவசர கால வழிகள் இருக்க வேண்டும். இதில் எதுவும் இந்த பட்டாசு கடையில் இல்லை. காவல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், வணிக வரித்துறை, தீயணைப்பு துறை என்று பல்வேறு துறை அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்து கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். இங்கு விதிமுறைகளை மீறி பட்டாசு கடை அனுமதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    குறிப்பாக பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வைத்திருக்க வேண்டும். ஆனால் அதிக ஒலி எழுப்ப கூடிய பட்டாசுகள் இங்கு இருந்துள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில் அரசுக்கு அறிக்கை வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த வாரம் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் வாணவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது.
    • அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடைக்கு கன்டெய்னர் லாரியிலிருந்து வெடிகளை இறக்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர்.

    பொதுவாக பட்டாசு ஆலைகளில் தீ விபத்து நடந்தால் தீ வேகமாக பரவுவதாலும், வெடிகள் வெடிப்பதாலும் அருகில் சென்று தீயை அணைப்பது சிரமமானதாகும். இதனால் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. பட்டாசு ஆலைகளை இயக்குவதற்கு அரசு வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் முறையாக கடைபிடிக்கப்படாததாலும் விபத்துகள் நிகழுகின்றன.

    கடந்த வாரம் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் வாணவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வாணவெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் வாணவெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

    ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடைக்கு கன்டெய்னர் லாரியிலிருந்து வெடிகளை இறக்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். கடை உரிமையாளர் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். மேலும், 11 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

    • பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் 8 பேர் ஈடுபட்டு இருந்தனர்.
    • படுகாயம் அடைந்த பக்கிரிசாமி, மாசிலாமணி, மாரியப்பன் மணிவண்ணன் ஆகிய 4 பேர் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள தில்லையாடி கிராமத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் நாட்டு வெடிகள், திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும் வாணவெடிகள் மற்றும் தீபாவளி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அடுத்த மாதம் (நவம்பர்) தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் இங்கு தீவிரமாக நடந்து வந்தது. இந்த ஆலையில் 11 பேர் வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் 8 பேர் ஈடுபட்டு இருந்தனர். மாலை 3 மணி அளவில் திடீரென பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதனால் வெடித்து சிதறிய பட்டாசுகளுக்கிடையே தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனா்.

    அந்த பகுதி முழுவதும் கடுமையான புகை மண்டலம் கிளம்பி பட்டாசு ஆலை முழுவதும் கரும்புகை மூட்டமாக மாறியது. பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்ட கட்டிடமும் இடிந்து தரைமட்டமானது.

    வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது போல பட்டாசுகளின் சத்தம் விண்ணை பிளக்கும் வகையில் இருந்ததால் சம்பவ இடத்துக்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்கள், பட்டாசு ஆலையில் இருந்த தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது 4 வாலிபர்கள் உடல் சிதறி இறந்தது தெரிய வந்தது. அவர்களின் உடல் பாகங்கள் 500 மீட்டர் தூரம் வரை 18 இடங்களில் சிதறி கிடந்தன.

    இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த பொறையாறு போலீசார், வெடிவிபத்தில் பலியான 4 வாலிபர்களின் உடல்களை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    கவிசாரணையில், பலியான வாலிபர்கள் கிடங்கல் மாமாகுடியை சேர்ந்த பக்கிரி மகன் மாணிக்கம் (வயது 32), மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் மதன்(21), சித்தர்காட்டை சேர்ந்த மணிமாறன் மகன் நிகேஸ்(22), மூவலூரை சேர்ந்த ராஜ்மோகன் மகன் ராகவன்(22) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்களில் உயிரிழந்த நிகேஸ் கல்லூரி மாணவர் ஆவார்.

    மேலும் படுகாயம் அடைந்த பக்கிரிசாமி, மாசிலாமணி, மாரியப்பன் மணிவண்ணன் ஆகிய 4 பேர் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் பட்டாசு ஆலையின் உரிமையாளர் மோகனிடம் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா விசாரணை நடத்தி வருகிறார். வெடி விபத்து நடந்த இந்த பட்டாசு தொழிற்சாலை லைசென்ஸ் பெற்று இயங்கி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 4 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் பொறையாறு பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • தயாரித்து காய வைப்பதற்காக கொட்டப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் மீதும் தீ பற்றியது.
    • தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு ஆலைகள் முழு வீச்சில் தயாரிப்பு பணியில் இறங்கியுள்ளன.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகே காங்கர் செவல்பட்டி கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த ராஜேந்திரராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. நாக்பூர் மாநில பதிவு கொண்ட இந்த ஆலையில் 30-க்கும் மேற்பட்ட அறைகளும், அங்கு 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மருந்து கலவை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்தது. அந்த சமயத்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் கீழே தயாரித்து காய வைப்பதற்காக கொட்டப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் மீதும் தீ பற்றியது. அடுத்தடுத்து பரவிய தீயில் பணியில் ஈடுபட்டிருந்த லட்சுமியாபுரத்தை சேர்ந்த கணேசன் (வயது 42), ராஜா (38) மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த முத்தம்மாள் (35) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் சிவகாசி உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜா, கணேசன் ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாத விக்டோரியா பட்டாசு ஆலை உரிமையாளர் ராஜேந்திர ராஜா, எலக்ட்ரிக்கல் போர் மென் சங்கையா ஆகிய இருவர் மீதும் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு ஆலைகள் முழு வீச்சில் தயாரிப்பு பணியில் இறங்கியுள்ளன. அதேபோல் தயாரான பட்டாசுகள் குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக கையாள மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    • வெடிவிபத்தில் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காங்கர்செவல்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தான் இன்று மாலையில் திடீரென்று பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நிகழ்ந்தது. அங்கு தயாரித்து வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

    பட்டாசு ஆலை வெடிவிபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவர்கள் 3 தொழிலாளர்களை மீட்டனர். இருப்பினும் அவர்கள் படுகாயம் அடைந்து இருந்தனர். விசாரணையில் கணேசன், ராஜா, முத்தம்மாள் ஆகியோர் வெடிவிபத்தில் படுகாயமடைந்து இருந்தது தெரியவந்தது. இவர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு படுகாயமடைந்தது தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரும் உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பட்டாசு வெடிவிபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்து பட்டாசுகளும் படபடவென வெடித்து சிதறியது.
    • இரண்டு பேர் கண் சிகிச்சைக்காக பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள சித்தம்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஜெகதீசன்(வயது56) என்பவர் மாரடைப்பால் நேற்று முன்தினம் பலியானார்.

    இந்நிலையில், அவரது இறுதி ஊர்வலம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டில் இருந்து சித்தம்பாக்கம் கிராமத்தில் உள்ள மயானத்துக்கு கொண்டு சென்று அன்று மாலை அடக்கம் செய்தனர். அவரது உடலை கொண்டு சென்ற வாகனத்தின் முன் பகுதியில் பட்டாசுகள் இருந்த பையை மாட்டி வைத்திருந்தனர். அப்பொழுது ஒரு ராக்கெட் வெடித்ததில் அதிலிருந்து நெருப்பு சிதறி பட்டாசு வைத்திருந்த பையில் விழுந்தது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்து பட்டாசுகளும் படபடவென வெடித்து சிதறியது.

    இதனால் இறுதி ஊர்வலத்தின் வாகனத்தின் அருகே நின்று கொண்டிருந்த ஜெகதீசனின் மகன் விவேக் என்பவரது நண்பர்களான முகேஷ்(வயது18), சுரேஷ், அஸ்வின் உள்ளிட்ட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆறு பேரையும் மீட்டு சென்று திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இந்நிலையில், ஜெகதீசனின் உடல் அடக்கமும் நடைபெற்றது.

    ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பேரில் முகேஷ் என்பவர் போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இரண்டு பேர் கண் சிகிச்சைக்காக பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இச்சம்பவம் இப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

    • நாங்கள் கிருஷ்ணகிரி, காந்தி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு ஓட்டல் நடத்தி வருகிறோம்.
    • காந்தி சாலை ஓட்டலில் இருந்து உணவுப்பொருட்கள் இங்கு எடுத்து வருவோம்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி, பழையபேட்டை நேதாஜி சாலையில் பட்டாசு குடோனில் கடந்த 29-ந் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில், 9 பேர் பலியாகினர். இந்த விபத்திற்கு பட்டாசு குடோன் அருகில் ஓட்டலில் சிலிண்டர் வெடித்ததே காரணம் என தடயவியல் நிபுணர்கள் கூறி இருந்தனர்.

    இந்த நிலையில் விபத்து குறித்து விசாரிக்க சிப்காட் நில எடுப்பு பிரிவின் தனி மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி, சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது 1884 வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    பட்டாசு குடோன் விபத்து நடந்த இடத்தில் அதிகாரி பவணந்தி தலைமையிலான அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள். அப்போது விபத்தில் இறந்த ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரியின் மகள் சரண்யா, மருமகள் வினிதா ஆகியோர் விபத்துக்கு சிலிண்டர் வெடிப்பு காரணம் இல்லை என மனுவை அளித்தனர்.

    பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் கிருஷ்ணகிரி, காந்தி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு ஓட்டல் நடத்தி வருகிறோம். தற்போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை, போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் வியாபாரம் குறைந்தது. இதையடுத்து பழையபேட்டையில் ஒரு ஓட்டல் கடை தொடங்கினோம்.

    காந்தி சாலை ஓட்டலில் இருந்து உணவுப்பொருட்கள் இங்கு எடுத்து வருவோம். அவசர தேவைக்கு டீ, ஆம்லெட் போடுவதற்கு கியாஸ் சிலிண்டர் அடுப்புகளை பயன்படுத்துவோம். விபத்தில் ராஜேஸ்வரிக்கு சிறு தீக்காயம் கூட ஏற்படவில்லை சிலிண்டர்களை வெடிக்காத நிலையில் எடுத்துள்ளார்கள். ஆனால் ஓட்டல் சிலிண்டர் வெடித்ததாக கூறுகிறார்கள்.

    இது தொடர்பாக அதிகாரிகளே விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு கூற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கண்ணீருடன் கூறினார்கள்.

    • பட்டாசு குடோன் வெடிவிபத்தில் 9 பேர் பலியானார்கள். 15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
    • நியமனம் செய்யப்பட்டுள்ள 30 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த 29-ந் தேதி காலை பட்டாசு குடோனில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் பலியானார்கள். 15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழக கவர்னர் ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பிரதமரும், முதல்-அமைச்சரும் விபத்தில் பலியானவர்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் நிவாரண நிதி உதவி அறிவித்துள்ளார்கள்.

    இந்த நிலையில் விபத்து தொடர்பாக நீது விசாரணை நடத்திட (கிரிமினல் ப்ரொசீஜர் கோட் 21-ன்படி) சிறப்பு கூடுதல் மாவட்ட நிர்வாக நீதிபதியாக குருபரப்பள்ளி சிப்காட் நிலம் எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தியை நியமித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு உத்தரவிட்டுள்ளார்.

    நியமனம் செய்யப்பட்டுள்ள 30 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் விபத்து நடந்த இடத்தின் அருகில் வசிக்கக்கூடிய குடியிருப்புவாசிகளிடமும், கடைகளின் உரிமையாளர்களிடமும் விபத்து குறித்து கேட்டறிந்து அதை எழுத்துபூர்வமாக பதிவு செய்து வருகிறார்கள்.

    இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை கலெக்டரிடம் அவர்கள் தாக்கல் செய்ய உள்ளனர்.

    ×