search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைகள் கொள்ளை"

    • சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் தோட்டத்துக்கு சென்றார்.
    • செயின், மோதிரம் உள்பட 3 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் விஷ்ணு பிரசாத் (வயது 29). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் தோட்டத்துக்கு சென்றார். இரவு தோட்டத்து வீட்டில் தங்கினார்.

    நள்ளிரவு விஷ்ணு பிரசாத் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம் உள்பட 3 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து விஷ்ணு பிரசாத் டவுன் கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயி வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • பேருந்தில் ஏறிய பின்னர், தான் கொண்டு வந்த பையை பார்த்துள்ளார்.
    • பையின் ஜிப் பகுதி திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பார்வதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 30). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து, அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள கந்தசாமிபுதூர் கிராமத்தில் தனது உறவினர் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு திருச்சி வழியாக நேற்று துறையூர் பேருந்து நிலையம் வந்தார்.

    அதன் பிறகு சேலம் செல்லும் பேருந்தில் ஏறிய பின்னர், தான் கொண்டு வந்த பையை பார்த்துள்ளார். அப்பொழுது பையின் ஜிப் பகுதி திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து பையை திறந்து பார்த்த பொழுது, பைக்குள் வைக்கப்பட்டிருந்த நான்கு பவுன் எடையுள்ள செயின், தோடு உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    சம்பவம் தொடர்பாக பார்த்திபன் துறையூர் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூரில் பட்டப் பகலில் பேருந்து நிலையத்திலேயே மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிகிச்சை முடிந்து நடேசன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தனது வீட்டிலிருந்த 35 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது.
    • மேலும் பரோட்டா மாஸ்டர் திடீரென வேலையை விட்டு நின்றுள்ளதும் தெரியவந்தது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன் (வயது 50). இவர் திருச்செங்கோட்டில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவர் உடல்நிலை கோளாறு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்து வந்தார்.

    அப்போது தனது ஓட்டலில் வேலை பார்த்த பரோட்டா மாஸ்டர் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த விஜயகுமார் (35) என்பவரிடம் ஓட்டலை கவனித்து கொள்ளுமாறு கூறியிருந்தார்.

    பின்னர் சிகிச்சை முடிந்து நடேசன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தனது வீட்டிலிருந்த 35 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. மேலும் பரோட்டா மாஸ்டர் திடீரென வேலையை விட்டு நின்றுள்ளதும் தெரியவந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த நடேசன் இது குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் விஜயகுமார் (35) தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், விரைந்து சென்று பேச்சிப்பாறையில் பதுங்கி இருந்த விஜயகுமாரிடம் இருந்து 12 பவுன் நகைகள் மீட்டனர். பின்னர் போலீசார், அவரை கைது செய்து திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.

    • கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகைகள் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • உண்டியலையும் உடைத்துள்ளனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் கூவத்தூர் அருகே உள்ள வடுகர்பாளையம் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் அப்பகுதி மக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக அம்மனுக்கு தாலி, காசு, குண்டுமணி உள்ளிட்ட தங்கத்திலான அணிகலன்களை அணிவித்து காணிக்கை செலுத்தி வந்துள்ளனர்.

    இந்நிலையில் கோவில் பூசாரி தினமும் காலை, மாலை வேளைகளில் விளக்கு போடுவது பின்னர் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சாமிக்கு அர்ச்சனை செய்வது உள்ளிட்ட வேலைகள் முடித்து விட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். அதேபோல் நேற்று மாலை கோவில் முன்பக்க கேட்டை 2 பூட்டுகள் போட்டு பூட்டி விட்டு சென்றுள்ளார்.

    இந்நிலையில் கோவில் பூசாரிக்கு கோவில் கேட் திறந்து கிடப்பதாகவும், உண்டியலில் இருந்து காசுகள் சிதறி கிடைப்பதாகவும் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சென்று பார்த்ததில் கருவறையிலுள்ள மாரியம்மன் சிலை கழுத்திலிருந்த சுமார் 22 கிராம் மதிப்பிலான தாலி, காசு, குண்டுமணி உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் உண்டியலில் இருந்த சுமார் 30 ஆயிரம் பணம் உள்ளிட்டவை திருடுபோய் இருந்தது தெரிந்தது.

    நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் கோவிலின் முன்பக்க கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே தடயம் ஏதும் தெரியாமல் இருக்க கோவிலில் இருந்த எண்ணையை தடவி கைரேகை பதியா வண்ணம் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி விசாரித்து வருகின்றனர்.

    • மூதாட்டி தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தனது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.
    • மூதாட்டி முகத்தில் ரத்த காயங்கள் இருந்ததால் அவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை அருகே உள்ள சேதராப்பட்டு காமராஜர் வீதியை சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி உண்ணாமலை, (வயது75). இவருக்கு ஆதிகேசவன், நாராயணமூர்த்தி ஆகிய மகன்களும் கவுரி, ராணி, கண்ணகி ஆகிய மகள்களும் உள்ளனர்.

    அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். கணவரை இழந்த உண்ணாமலை தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    அருகில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தனது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். மேலும், பசு மாடுகள் வளர்த்து கூட்டுறவு சொசைட்டியில் பால் ஊற்றி வந்தார். பால் மூலமாக கிடைக்கும் வருவாய், வீட்டு வாடகை வருமானத்தால் எப்போதும் பண புழக்கத்துடன் மூதாட்டி இருந்துள்ளார். தங்கச் செயின், மூக்குத்தி, கம்மல் உள்ளிட்ட 10 சவரன் தங்க நகைகளை அணிந்திருப்பதும் வழக்கம்.

    இந்நிலையில், நேற்று பால் சொசைட்டிக்கு உண்ணாமலை செல்லவில்லை. மேலும், வீட்டு வாசலிலும் தண்ணீர் தெளிக்கப்படாமல் கதவு மூடி கிடந்தது. இதனால் அருகே வசித்துவரும் உறவினர்கள் நேற்று மாலை 4 மணியளவில் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, மூதாட்டி உண்ணாமலை ரத்தக்காயங்களுடன் குப்புற கவிழ்ந்தபடி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மகன்களுக்கும் மற்றும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த சேதராப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார், தடயங்களை சேகரித்து உண்ணாமலை உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் இறந்து கிடந்த மூதாட்டி அணிந்திருந்த தங்க செயின், கம்மல், வளையல் உள்ளிட்ட தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது உறுதியானது.

    மூதாட்டி முகத்தில் ரத்த காயங்கள் இருந்ததால் அவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். மூதாட்டி வடமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டிருந்ததால் மூதாட்டியை வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×