என் மலர்
நீங்கள் தேடியது "பக்ரீத் பண்டிகை"
- பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
- தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் கோழி, இறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது.
நெல்லை:
தென்மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்று மேலப்பாளையம் கால்நடை சந்தை ஆகும். இங்கு ஆடுகளுடன், மாடு, கோழி, கருவாடும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 100-க்கணக்கான வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் மேலப்பாளையம் சந்தையில் கூடுவார்கள். இங்கு வாரந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல் ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூடுதலாக விற்பனை செய்யப்படும்.
இந்நிலையில் பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் இன்று ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால் சந்தை களைகட்டி காணப்பட்டது. இன்று சுமார் 2,500 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.
தரத்திற்கேற்ப அவை விற்பனை செய்யப்பட்டது. குறைந்தபட்சம் ரூ. 7 ஆயிரம் முதல் அதிகபட்சமாக நாட்டுக்கிடா வகை ஒன்று ரூ. 40 ஆயிரம் வரை விலை போனது. வியாபாரிகள் பலரும் மொத்தமாக ஆடுகளை வாங்கி சென்றனர். பொதுமக்களும் தங்களுக்கு ஏற்ற ஆடுகளை வாங்கினர். அடுத்த வாரம் ஆடுகளை வாங்க கூட்டம் அதிகரித்து காணப்படும் என கூறப்படுகிறது.
தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் கோழி, இறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது. மேலப்பாளையம் சந்தையில் கோழிகளும் விற்கப்படுவதால் அதனை வாங்கவும் ஏராளமானவர்கள் திரண்டனர்.
- பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் ஆடுகளை குர்பானி கொடுப்பது வழக்கம்.
நெல்லை:
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக விளங்கும் எட்டயபுரம் ஆட்டுச்சந்தைக்கு அடுத்தப்படியாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கால்நடை சந்தை புகழ்பெற்றது.
செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்த சந்தைக்கு தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம். அன்றைய தினம் சந்தைக்கு ஆயிரக்கணக்கில் ஆடுகள் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படும். இங்கு ஆடுகள் மட்டுமின்றி மாடுகள், கோழிகள், மீன், கருவாடு உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் தனித்தனி இடங்களில் நடைபெறும்.
வழக்கமாக சுமார் ரூ.2 கோடி அளவில் வர்த்தகம் நடைபெறும் நிலையில் ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் சுமார் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை நடக்கும்.
இந்நிலையில் பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் ஆடுகளை குர்பானி கொடுப்பது வழக்கம். இதையொட்டி இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தைக்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேல் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதிகளவில் செம்மறி ஆடுகள் வந்திருந்தது. இதேபோல் வெள்ளாடுகளும் வந்தன.
அவற்றை வாங்குவதற்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த வியாபாரிகள் குவிந்தனர். அவர்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். பிற்பகலில் செம்மறி ஆடுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. ஆடுகள் தரத்திற்கேற்ப ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
அதிகபட்சமாக பொட்டு வகை ஆடுகள் ரூ. 35 ஆயிரத்திற்கு விற்பனையானது. இதனால் இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தை களைக்கட்டி காணப்பட்டது. இது தொடர்பாக வியாபாரிகள் கூறும்போது, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செம்மறி, வெள்ளாடு என ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தோம். இதில் செம்மறி ஆடுகள் விற்றுத்தீர்ந்த நிலையில் வெள்ளாடுகள் மட்டும் குறைந்த அளவில் உள்ளன. இன்று சுமார் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது. இதனால் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடந்துள்ளது.
ஆயிரக்கணக்கான பொது மக்களும், நூற்றுக்கணக்கான வியாபாரிகளும் திரளும் மேலப்பாளையம் கால்நடை சந்தையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் அனைவரும் வெயில், மழையில் நிற்கும் நிலை உள்ளது. எனவே ஷெட்டுகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கி குவித்தனர்
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்த வார சந்தைக்கு காட்டுசெல்லூர், வட குரும்பூர், கிளியூர், மடப்பட்டு ,சேந்தநாடு, ஆசனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வழக்கமாக இந்த சந்தையில் சுமார் 25 லட்சம் முதல் 50 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடை பெறும்.
இந்த நிலையில் அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது. இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சந்தையில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கி குவித்தனர்
8 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையான நிலையில் சுமார் 3 மணி நேரத்தில் ஆடுகள் 3 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையிலும் ஆயிரக்கணக்கான ஆடுகள் ஆண்டுதோறும் வெட்டப்படுவது வழக்கம்.
- தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்காக வருகிறது.
சென்னை:
தமிழகம் முழுவதும் வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் இறைச்சிக்காக ஆடுகள் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டி இருக்கிறது.
ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையிலும் ஆயிரக்கணக்கான ஆடுகள் ஆண்டுதோறும் வெட்டப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு 50 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்காக வரவழைக்கப்படுகிறது.
தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்காக வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க பொதுச் செயலாளரான ராயபுரம் அலி கூறும்போது, "இந்த ஆண்டு ரம்ஜானுக்காக வருகிற 23-ந்தேதி மாலையில் இருந்தே ஆடுகள் விற்பனைக்காக வர இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்காக வருகின்றன. ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரையில் ஆடுகள் தரத்துக்கு ஏற்ப விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில ஆடுகள் மட்டுமே ரூ.40 ஆயிரம் வரையில் விலை போகும் என்று எதிர்பார்க்கிறோம். எப்போதுமே பக்ரீத் பண்டிகையை ஒட்டி கொம்பு வளர்ந்த ஆடுகளையே விரும்புவார்கள்.
அந்த வகையில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஆடுகளே கொம்புகளுடன் காணப்படும். இதன் காரணமாகவே தென் மாநிலங்களை சேர்ந்த ஆடுகளுக்கு பக்ரீத் பண்டிகையையொட்டி கிராக்கி இருக்கும் அந்த வகையில் இந்த ஆண்டும் கொம்பு வைத்த ஆடுகளே வர வழைக்கப்படுகின்றன.
ஒடிசா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள ஆடுகளுக்கு கொம்பு இருக்காது. இதனை பக்ரீத் பண்டிகையை யொட்டி வெட்டுவதற்கு விரும்ப மாட்டார்கள். சென்னையில் ரெட்டேரி சந்தை, புளியந்தோப்பு, ஆட்டு தொட்டி, தாம்பரம் சந்தை, வில்லிவாக்கம் சந்தை உள்ளிட்ட இடங்களில் ஆடுகள் விற்பனை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
- செம்மறி ஆடு 1 ஜோடி ரூ.80 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
- 10 கிலோ கொண்ட வெள்ளாடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு திண்டுக்கல், கரூர், திருச்சி, தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு, கோழிகள், சேவல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதனை வாங்குவதற்காகவும் பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று சந்தைக்கு ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
இதனை வாங்குவதற்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகாலையிலேயே சந்தையில் குவிந்தனர். செம்மறி ஆடு 1 ஜோடி ரூ.80 ஆயிரம் வரை விற்கப்பட்டது. 10 கிலோ கொண்ட வெள்ளாடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது.
மருக்கை ஆடுகளையும் விவசாயிகள் வளர்ப்புக்காக அதிக அளவில் வாங்கிச் சென்றனர். நாட்டுக்கோழி ரூ.380 முதல் ரூ.450 வரை விற்கப்பட்டது. கட்டுச்சேவல்கள் ரூ.3000 முதல் ரூ.30,000 வரை விற்பனையானது. சேவல்களை சந்தையிலேயே விளையாட வைத்து அதன் தரத்தை ஆய்வு செய்து வாங்கிச் சென்றனர்.
வழக்கமாக காலை 5 மணிக்கே ஆடு, கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இன்று சந்தை தொடங்கிய 2 மணி நேரத்தில் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் தற்போது பல்வேறு கிராமங்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் அதற்காகவும் ஆடுகள் வாங்கிச் செல்லப்பட்டன.
மதுரையைச் சேர்ந்த ஒரு கிராமத்தினர் 100 ஆடுகளை மொத்தமாக வாங்கிச் சென்றனர். இதனால் சந்தையில் கூட்டம் அலைமோதியது. இதுகுறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் ஆடுகளை தங்கள் வீட்டில் ஒரு வாரத்துக்கு முன்பே வளர்த்து பண்டிகை நாளில் அதன் இறைச்சியை 3 கூறுகளாக பிரிப்பார்கள். ஒரு பகுதியை இயலாதவர்களுக்கும், மற்றொரு பகுதியை தங்கள் உறவினர்களுக்கும், மீதமுள்ள பகுதியை தங்கள் குடும்பத்துக்கும் பயன்படுத்திக் கொள்வார்கள்.
வருடத்தில் ஒரு முறை குர்பானி கொடுக்க வேண்டும் என்ற இஸ்லாமியர்களின் கடமையை நிறைவேற்றும் வகையில் இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் அய்யலூர் சந்தைக்கு ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை வாங்க குவிந்தனர்.
வழக்கமாக தீபாவளி பண்டிகையின் போது மட்டுமே இது போன்ற விற்பனை நடைபெறும் நிலையில் தற்போது பக்ரீத் பண்டிகைக்கும் விற்பனை அதிகரித்துள்ளது என்றனர்.
- 25 கிலோ எடை கொண்ட செம்மறியாடு ஒன்று ரூ.17 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
- 25 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடுகள் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் அன்று கூடுகிறது. இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.
இந்த சந்தையில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், நீலகிரி மற்றும் புளியம்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.
இந்நிலையில் இன்று கூடிய ஆட்டு சந்தையில் வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 400-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதில் 25 கிலோ எடை கொண்ட செம்மறியாடு ஒன்று ரூ.17 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
மேலும் 25 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடுகள் ரூ.30 ஆயிரம் வரையும் விற்பனையானது. மொத்தம் இன்று கூடிய ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி செம்மறியாடுகள் ரூ.70 லட்சத்துக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- பக்ரீத் பண்டிகையொட்டி அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தது.
- 5000 முதல் 15 ஆயிரம் வரை உள்ள ஆடுகள் விற்பனைக்கு வந்தது.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் திரு.வி.க நகர் அருகே உள்ள வியாழக்கிழமை தோறும் நடைபெறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம். வருகின்ற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகையொட்டி அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தது. இதில் 4 மணி நேரத்தில் ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை வரவுள்ள நிலையில் ஆடுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் வியாபாரிகள் சந்தைகளில் ஆடுகளை விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் சின்னசேலம் வார சந்தையில் காலை 5 மணி முதல் வியாபாரிகள் ஆடுகளை விற்க தொடங்கினர். சுமார் 5000 முதல் 15 ஆயிரம் வரை உள்ள ஆடுகள் விற்பனைக்கு வந்தது.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- ஒரு ஆடு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையில் தரத்திற்கேற்ப விற்பனையானது.
- இந்த ஆண்டு ஏராளமான பெண்களும் ஆடுகளை வாங்குவதற்கு பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தைக்கு அதிகம் வந்திருந்தனர்.
தென்காசி:
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி இஸ்லாமியர்கள் ஆடுகளை குர்பானி கொடுப்பது வழக்கம். இதனால் கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் ஆட்டுச்சந்தைகளுக்கு ஆடுகள் அதிகளவில் கொண்டு வரப்பட்டு கோடிக்கணக்கில் வருவாயும் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் அரசு ஆட்டுச் சந்தையில் இன்று காலை முதலே பொதுமக்களும், குவியத் தொடங்கினர்.
பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளான கீழப்பாவூர், மேலப்பாவூர், திப்பணம்பட்டி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், கடையம், கல்லூரணி, ராமச்சந்திர பட்டணம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
ஒரு ஆடு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையில் தரத்திற்கேற்ப விற்பனையானது. ஆடுகளை வாங்குவதற்காக கடையநல்லூர், மேலப்பாளையம், தென்காசி, கடையம், ரவண சமுத்திரம், பொட்டல்புதூர், வீராணம், புளியங்குடி, சங்கரன்கோவில் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்திருந்தனர்.
எப்பொழுதும் ஆடுகளை வாங்குவதற்கு ஆண்களே அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில் இந்த ஆண்டு ஏராளமான பெண்களும் ஆடுகளை வாங்குவதற்கு பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தைக்கு அதிகம் வந்திருந்தனர்.
இன்று ஒரு நாள் மட்டும் பாவூர்சத்திரம் அரசு ஆட்டுச் சந்தையில் ஒரு கோடி வரையில் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
- பக்ரீத் பண்டிகை வருவதால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது.
பொள்ளாச்சி:
தமிழகத்திலேயே மிகப்பெரிய கால்நடை சந்தையாக பொள்ளாச்சி மாட்டுச்சந்தை உள்ளது.
இந்த சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கம். இங்கு பொள்ளாச்சி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து ஆடு மற்றும் மாடுகளை வாங்கி செல்வார்கள்.
நேற்றும் வழக்கம் போல சந்தை கூடியது. வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன.
ஆடுகளை வாங்குவதற்கும் வியாபாரிகள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். பக்ரீத் பண்டிகை வருவதால் ஆடுகளின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.
எடைக்கு ஏற்ப ஆடுகள் விற்பனையானது. ஒரு ஆடு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விலை போனது.
இதுகுறித்து ஆட்டு வியாபாரிகள் கூறுகையில், பக்ரீத் பண்டிகை வருவதால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது.
ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்ததால் வர்த்தகம் ரூ.1 கோடியை தாண்டியது என்றார்.
- வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- இன்று நடந்த சந்தையில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஆடுகள் விற்பனையாகின.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சி சந்தைக்கு அடுத்தப்படியாக பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுச்சந்தையில் ஒவ்வொரு வாரமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாத புரம், சிவகங்கை, கோவில்பட்டி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து ஆடுகள், கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். அதிகாலையில் இருந்து காலை 9 மணி வரை கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும்.
இந்நிலையில் வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு திருமங்கலம் ஆட்டுச்சந்தை தொடங்கியது. வழக்கத்தை விட இன்று வியாபாரிகள் அதிகளவில் திரண்டனர். இதனால் சந்தை கடுமையான கூட்டத்துடன் காணப்பட்டது.
இதனால் ஆடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. வழக்கமாக ஆட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்கப்படும். ஆனால் இன்று கடும் கிராக்கி இருந்ததால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல்தான் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்று நடந்த சந்தையில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஆடுகள் விற்பனையாகின. 7 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வியாபாரிகள் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் வளர்க்கும் ஆடுகளை தவிர்த்து இந்திய அளவில் நாட்டினம் குறும்பை கொங்கு ஆந்திரா கிடா, ராஜஸ்தான் கிடா உள்ளிட்ட கிடாக்கள் இந்த சந்தையில் பார்க்கலாம். சண்டைக்கு வளர்க்கும் குட்டிகள் இங்கு கிடைக்கும். இந்த சந்தையில் கடந்த வாரத்தை விட விலை அதிகமாக இருந்தாலும், ஆடுகளின் வரத்து அதிகமாக உள்ளது.
மேலும் வியாபாரிகளும் அதிகளவில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்துள்ளனர். இன்று அதிகப்படியாக 90 ஆயிரம் ரூபாய்க்கு கிடாக்கள் வந்துள்ளது. இது 60 கிலோ கறி உள்ளதாகும். ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள சண்டை செய்யும் கிடாக்கள் விற்பனைக்கு உள்ளது.
பக்ரீத்திற்கு இதுபோல கிடாக்கள் வாங்குவதில் எங்களுக்கு சந்தோஷமாக உள்ளது. திருமங்கலம் சந்தையை பொறுத்தவரை திருப்தி அடைந்து தான் சென்றுள்ளனர். ஆடுகளின் விலை வழக்கத்தை விட ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கூடுதலாக உள்ளது. தற்போது ஆட்டுக்கறி விலை 800 ரூபாய் விற்கப்படுகிறது. ஆனால் சந்தையில் ஒரு கிலோ 1,200 ரூபாய் கறி அளவுக்கு மதிப்பு கூடுதலாக விற்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கூடுதலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- கிராமப்பகுதிகளிருந்து ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். செஞ்சி சந்தையில் மிகவும் பிரசதிப் பெற்றது கருவாடு மற்றும் ஆட்டு சந்தை ஆகும்.
சேலம், தர்மபுரி, வேலூர், ஆம்பூர் மற்றும் புதுவை, பெங்களூரு போன்ற மாநிலங்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து இங்கு நடைபெறும் சந்தையில் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.
வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கூடுதலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று செஞ்சி வாரசந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. பெங்களூரு மற்றும் சேலம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொள்முதல் செய்ய செஞ்சி வார சந்தைக்கு வந்து குவிந்தனர்.
அதற்கேற்றார் போல் கிராமப்பகுதிகளிருந்து ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் பக்ரீத் பண்டிகை குர்பானிக்காக ஆடுகள் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்கப்பட்டது. மேலும் தனி ஆடு அதிகபட்சமாக ரூ 20 ஆயிரம் வரை விலை போனது. இது விவசாயிகளுக்கு நல்ல விலையாகும். இந்த வார சந்தையில் மட்டும் சுமார் ரூ 6 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆகி இருக்கலாம் என உள்ளூர் வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும். அதன் படி இன்று நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பக்ரீத் பண்டிகையையொட்டி இந்த வாரம் ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கிருஷ்ணகிரி, தருமபுரி, ஓசூர் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன.
- இன்று ஒரே நாளில் ரூ.6 முதல் 8 கோடி வரை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி:
நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை 29-ந்தேதி முஸ்லிம் மக்களால் கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆடுகள் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக கொண்டு வரப்பட்டன.
கிருஷ்ணகிரி, தருமபுரி, ஓசூர் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன.
இன்று அதிகாலை 5 மணி முதல் சந்தையில் ஆடுகள் விற்பனை தொடங்கியது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கோலார் மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம், சித்தூர் மற்றும் தமிழகத்தில் வேலூர், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.
வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட ஆடு, 12 ஆயிரம் ரூபாய் விலை போகும். ஆனால், பக்ரீத் பண்டிகை விற்பனை என்பதால் சற்று விலை அதிகரித்து, 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு, 15 ஆயிரம் முதல், 17 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது.
குறைந்த பட்சம் ஒரு ஆடு 10 ஆயிரம் ரூபாய் முதல், அதிகபட்சமாக ஒரு ஆடு 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனை ஆனது.
இன்று ஒரே நாளில் ரூ.6 முதல் 8 கோடி வரை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.