search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுர்வேதம்"

    • சினைப்பை நீர்க்கட்டிகள் என்பது 'பி.சி.ஓ.எஸ்', 'பி.சி.ஓ.டி.' என்று இரு வகைப்படுகிறது.
    • தினமும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

    சினைப்பை நீர்க்கட்டிகள் என்பது 'பி.சி.ஓ.எஸ்', 'பி.சி.ஓ.டி.' என்று இரு வகைப்படுகிறது. ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் கோளாறு, பாரம்பரியம் போன்றவை காரணமாக இந்த நோய் வருகின்றது. இந்தப்பிரச்சினை இருந்தால் உடல் பருமன், ஒழுங்கற்ற மாதவிடாய், முகத்தில் முடி வளர்வது, தலைமுடி உதிர்வது, முகப்பரு, உறக்கமின்மை, மன அழுத்தம், குழந்தையின்மை போன்றவை காணப்படலாம்.

    இதற்கான உணவு மற்றும் சித்த மருத்துவத் தீர்வுகள் வருமாறு:

    உணவுகள்: சோயா பீன்ஸ், எள்ளுருண்டை, வெந்தயக்களி, உளுந்தங்களி, 'பிளாக்ஸ் சீட்' எனப்படும் அலிசி விதைகளை தினசரி உணவில் எடுக்க வேண்டும்.

    மருந்துகள்:

    1) சதக்குப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் இந்த மூன்று மருந்துகளையும், சம அளவில் எடுத்து பொடித்து பனை வெல்லத்தில் சேர்த்து மூன்று மாத காலம் உட்கொள்ளலாம்.

    2) அசோக மரப்பட்டை, கழற்சிக்காய் இரண்டும் சம அளவு எடுத்து சிறிதளவு மிளகு சேர்த்து பொடித்து காலை, இரவு வெந்நீர் அல்லது தேனில் மூன்று மாத காலம் உட்கொள்ளலாம்.

    3) கற்றாழை ஜெல்லுடன் இஞ்சி சேர்த்து மோரில் கலந்து காலையில் குடிக்க வேண்டும்.

    4) தினமும் பகல் வேளையில் வெண்பூசணி சாறு குடிக்கலாம்.

    5) பப்பாளிப் பழச்சாறு இரவு வேளைகளில் குடிக் கலாம்.

    6) சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் மூன்றையும் சம அளவில் பொடித்து காலை 2 கிராம், இரவு 2 கிராம் வீதம் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக எடுக்கலாம்.

    7) மலைவேம்பு இலைச் சாறு 5 மி.லி. வீதம் வாரம் ஒரு முறை அதிகாலையில் குடித்து வரலாம்.

    8) கழற்சிக் கொட்டை 1, மிளகு 3 இவைகளை பொடித்து பசுமோரில் கலந்து குடிக்க வேண்டும்.

    9) குமரி லேகியம் 1-2 கிராம் தினமும் இருவேளை சாப்பிட வேண்டும்.

    10) சதாவேரி லேகியம் 1-2 கிராம் தினமும் இருவேளை சாப்பிட வேண்டும்.

    தினமும் நடைப் பயிற்சி, கருப்பை, இடுப்பு தசைகளை பலப்படுத்தும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். மன அழுத்தம், சோர்வு, கவலை குறைய பிராணாயாமம், தியானம், இறை பிரார்த்தனைகள் செய்ய வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.
    • தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    மூல நோய் ஏற்படும் காரணத்தை 'அனில பித்த தொந்தமலாது மூலம் வராது' என்று தேரையர் சித்தர் கூறுகிறார். வயிற்றில் அதிகரித்த வாயுவின் அழுத்தம், உடல் சூடு, நாள்பட்ட மலச்சிக்கல், அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு, உடல் பருமன், பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அடி வயிற்றில் ஏற்படும் அழுத்தம், பிரசவ நேரத்தில் ஏற்படும் வலி, அழுத்தம், நாள்பட்ட கல்லீரல் நோய்கள், ஆசனவாய் அருகில் உள்ள தசைகளில் ஏற்படும் பலவீனம், தண்ணீர் குறைவாக குடிப்பது, மாவுச்சத்துள்ள உணவுகள், எண்ணெய் பலகாரங்களை அதிகமாக உண்பது, எப்போதும் உட்கார்ந்து இருப்பது, நார்ச்சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது போன்ற காரணங்களால் மூல நோய் வருகிறது.

    இந்த நோய்களை குணமாக்கும் சித்த மருந்துகள்:

    1) திரிபலா சூரணம் ஒரு கிராம், நாகப்பற்பம் 100 மில்லி கிராம், நத்தை பற்பம் 100 மில்லி கிராம், இவைகளை வெந்நீரில் மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    2) கருணைக்கிழங்கு லேகியம், தேற்றான் கொட்டை லேகியம் இவைகளை தலா ஒரு கிராம் வீதம் காலை இரவு இரு வேளை உண்ண வேண்டும்.

    3) நிலவாகை சூரணம் ஒரு கிராம் வீதம் இரவு ஒரு டம்ளர் வெந்நீரில் தூங்குவதற்கு முன்பு சாப்பிட வேண்டும்.

    4) மூலக்குடார நெய் 5 மி.லி. இரவு ஒரு வேளை சாப்பிட வேண்டும்.

    உணவுகள்: துத்திக் கீரையுடன் சிறு வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசிய வைத்து இரவு உண்ணலாம். கருணைக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி புளி சேர்த்து குழம்பாக வாரம் இரு முறை பயன்படுத்தி வரலாம். பிரண்டைத் தண்டை துவையல் அல்லது பொடியாக செய்து பயன்படுத்தலாம். முள்ளங்கி காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கோவைக்காய், கீரைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    • தண்ணீரை கொதிக்க வைத்துப் பருக வேண்டும்.
    • உடலில் நோய் தொற்றுகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    குளிர்காலத்தில் உடலின் முக்குற்றங்களுள், பித்தம் அதிகரித்து இருப்பதால் இயல்பாகவே உடலின் வலு சற்று குறைந்திருக்கும். இக்காலங்களில் உடலில் நோய் தொற்றுகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக ரைனோ வைரஸ், ஃப்ளூ காய்ச்சல் (இன்புளூயன்சா) போன்றவை அதிகமாகப் பரவும். இவை ஒருவரிடம் இருந்து அவர்களின் தும்மல், இருமல் மூலம் மற்றவருக்கு வேகமாக பரவும். ஆகவே, இக்காலங்களில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். இக்காலங்களில் தண்ணீரை கொதிக்க வைத்துப் பருக வேண்டும்.

    சாதாரண சளி, இருமலுக்கு:

    1) ஆடாதோடை இலை - 2, கற்பூரவள்ளி இலை - 2, துளசி இலை - 10 என்ற எண்ணிக்கையில் எடுத்து அவற்றைபிழிந்து சாறு எடுத்து தேனுடன் சூடுபடுத்தி காலை, இரவு இருவேளை கொடுக்க வேண்டும். இதனால் நெஞ்சு சளி, இருமல் மூலமாக வெளியேறும்.

    2) தூதுவளை, மிளகு ரசம் வைத்து மதிய உணவை சாப்பிட வேண்டும்.

    3) சிற்றரத்தை, அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி இவைகள் வகைக்கு 10 கிராம் அளவில் எடுக்கவும், கொத்தமல்லி 50 கிராம் எடுத்து இவைகளை எல்லாம் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும்போது ஒரு டீ ஸ்பூன் பொடியை எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும். தொண்டை கரகரப்பு, தொண்டை வலி, தொண்டை கட்டு போன்றவை நீங்கும். நல்ல பசியைத் தரும்.

    4) நண்டு ரசம், நாட்டுக்கோழி ரசம் இவைகளும் சிறப்புடையது.

    சித்த மருத்துவத்தில் தாளிசாதி வடகம் இரண்டு மாத்திரைகளை வாயிலிட்டு மென்று சாப்பிட வேண்டும். துளசி மாத்திரை 1-2 மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும். குளிர்காலங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நிலவேம்பு குடிநீர் 30 முதல் 60 மி.லி. வீதம் தினம் ஒருவேளைக் குடிக்கலாம். இது வைரஸ் நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்தது. இரவு தூங்கும் முன்பு மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு இவைகளை பாலில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் சளி, இருமல் குறையும். ஆடாதோடை மணப்பாகு 5 மி.லி. காலை, இரவு இருவேளை குடிக்க வேண்டும்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    • நகங்களை ஒழுங்காக வெட்டவேண்டும்.
    • வெளியே போகும் போது காலணி போட்டுத்தான் செல்ல வேண்டும்.

    நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தேவையை விட அதிகமாக இருப்பது ஆகும். மிகவும் தாகமாக உணர்வது, வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழித்தல், மிகவும் சோர்வாக உணர்வது, உடல் எடை குறைதல், கால்கள் மரத்துப்போதல், வாய்ப்புண் அடிக்கடி ஏற்படுதல், கண் பார்வை மங்குதல், புண்கள் ஏற்பட்டால் எளிதில் குணமடையாத நிலை, தாம்பத்யத்தில் ஆர்வம் இல்லாத நிலை போன்றவை நீரிழிவு நோயில் காணப்படும் பொதுவான அறிகுறிகள். இது நபருக்கு நபர் வேறுபடும்.

    சித்த மருத்துவத்தில் நீரிழிவு, இனிப்பு நீர், மதுமேகம் என்றழைக்கப்படுகிறது, நீரிழிவு நோய் கட்டுப்பாடில்லாமல் இருந்தால் ஏழு உடல் தாதுக்களையும் பாதித்து உடலை உருக்கி விடும். ஆங்கில மருத்துவமுறையில் டைப் 1, டைப் 2 என்று நீரிழிவு நோய்கள் இரண்டுவிதமாக அழைக்கப்படுகின்றன. இது தவிர கர்ப்ப காலத்தில் வரும் ஜெஸ்டேசனல் நீரிழிவு, சிறு குழந்தைகளுக்கு வரும் ஜுவைனல் நீரிழிவு நோய்களும் உண்டு.

    சித்த மருத்துவ தீர்வுகள்:

    1) மதுமேக சூரணம் 1 முதல் 2 கிராம் அல்லது மதுமேக மாத்திரை 1 முதல் 2 மாத்திரை வீதம், காலை, இரவு சாப்பிட வேண்டும்.

    2) திரிபலா சூரணம் அல்லது திரிபலா மாத்திரை காலை, இரவு எடுக்கலாம்.

    3) சீந்தில் சர்க்கரை 500 மி.கி. காலை, இரவு எடுக்க வேண்டும்.

    4) ஆவாரை குடிநீர் பொடி 1 முதல் 2 கிராம் அளவில் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, இரவு குடிக்க வேண்டும்.

    5) சர்க்கரைக் கொல்லி பொடி காலை, இரவு 500 மி.கி. முதல் ஒரு கிராம் வெந்நீரில் சாப்பிடலாம்.

    சிலர் தேன் காய் அல்லது மகாகனி என்றழைக்கப்படுகிற ஸ்வெட்டீனியா தாவரத்தின் விதையை பொடித்து சாப்பிடலாமா என்று கேட்கிறார்கள், ரத்த சர்க்கரை அளவையும், ரத்த அழுத்தத்தையும் இது குறைக்கும். சித்தமருத்துவரின் ஆலோசனையின்பேரில் இதை சாப்பிடலாம். ஆனால் கல்லீரல் நோய் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

    கால் எரிச்சல் நீங்க

    நீரிழிவு நோயில் வருகிற கால் மத மதப்பு, கால் எரிச்சல், கால் பலவீனம் இவைகளுக்கு காரணம் கால், மற்றும் பாதங்களில் மேலோட்டமாக உள்ள ரத்த குழாய்களில் ஏற்படும் சீரற்ற ரத்த சுழற்சி ஆகும். இதற்கு சித்த மருத்துவத்தில்,

    1) திரிபலா சூரணம் பொடி 1 கிராம் எடுத்து அதனுடன் முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி., ஆறுமுகச் செந்தூரம் அல்லது அயக்காந்த செந்தூரம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி. சேர்த்து காலை, இரவு இருவேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

    கால்கள், பாதங்களில் வாத கேசரி தைலம் அல்லது சிவப்பு குக்கில் தைலம் அல்லது விடமுட்டி தைலத்தை தேய்த்து வரவேண்டும். உள்ளங்கால், கால் தசைகளை நன்றாக பிடித்து விடவேண்டும். நீரிழிவு நோயாளிகள் கால் மற்றும் பாதங்கள், விரல்களின் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நகங்களை ஒழுங்காக வெட்டவேண்டும். வெளியே போகும் போது காலணி போட்டுத்தான் செல்ல வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • சாதாரண கட்டிகள் என்று இருப்பினும் இதனால் உண்டாகும் துன்பங்கள் ஏராளம்.
    • பெண்கள் முறையான சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

    'பைப்ரோஅடினோமா' எனப்படும் தசைக்கட்டிகள் இன்றைய வாழ்வியலில் பல்வேறு பெண்களுக்கு மார்பகத்தில் உண்டாகிறது. முக்கியமாக 20 முதல் 35 வயதுள்ள பெண்களுக்கு பெரும்பாலும் ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் இதன் அளவு கூடுகிறது. ஆனால் இந்த வகை கட்டிகள் சாதாரணமான கட்டிகள் தான். இருப்பினும் ஆயிரத்தில் இரண்டு பேருக்கு இது புற்றுக்கட்டியாக மாறும் வாய்ப்புள்ளதாக நவீன அறிவியல் கூறுகின்றது.

    ஆகவே அவ்வப்போது இதனை பரிசோதனை செய்துகொள்வது நல்லது. சித்த மருத்துவ தத்துவத்தின் படி, வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் கபமும் வாதமும் சீர் கேடடைந்து கபவாதம் என்ற நிலை உருவாகி இத்தகைய கட்டிகளை மார்பகத்தில் உண்டாக்குவதாக கூறுகின்றது.

    ஆக கபவாதத்தை சீர் செய்யும் மருந்துகளையும், கட்டிகளை கரைக்கும் மூலிகைகளையும், மருந்துகளையும் எடுத்துக்கொள்ள நோய் நிலையில் முன்னேற்றம் வரும். இவை சாதாரண கட்டிகள் என்று இருப்பினும் இதனால் உண்டாகும் துன்பங்கள் ஏராளம். ஆக, பெண்கள் முறையான சிகிச்சை மேற்கொள்வது நல்லது. கட்டிகளை கரைக்கும் சித்த மருத்துவ மூலிகைகளாகிய அமுக்கராக் கிழங்கு, மஞ்சள், சேராங்கொட்டை, கொடிவேலி, கழற்சிக்காய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சித்த மருந்துகளை நாடுவது நல்லது.

    இதில் அமுக்கராக் கிழங்கு கட்டிகளை கரைப்பதோடு மட்டுமின்றி, அது சார்பாக பெண்களுக்கு உண்டாகும் மன அழுத்தத்தைப் போக்கி நன்மை பயக்கும். சேராங்கொட்டை எனும் கொடிய நஞ்சுடைய பாலினை கொண்ட மூலிகையின் நஞ்சினை போக்கி மருந்தாக சித்த மருத்துவம் பயன்படுத்துகிறது. இது சேரும் மருந்துகள் தசைக்கட்டி மட்டுமல்லாது புற்றுக்கட்டிகளிலும் நல்ல பலன் தருவதாக உள்ளது. மஞ்சள் எனும் மாமருந்து தசைகட்டிக்கும் நல்ல பலன் தரும். தினசரி பாலில் மஞ்சள் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து எடுத்துக்கொள்ள கட்டியை கரைக்க உதவும். இன்னும் பல தாது கலப்பு மருந்துகள் மார்பக தசைக்கட்டிகளில் உதவக்கூடியதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சித்த மருத்துவ மூலிகை கடைசரக்கான வெந்தயம் பால் சுரப்பிகளுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. மார்பக அழற்சி எனும் வீக்கநிலையில் வெந்தயத்தை பயன்படுத்த பித்தம் குறைந்து வீக்கம் தணியும். அதற்கு வெந்தயத்தை அரைத்து பற்றாக்கி மார்பகத்தின் மீது போடலாம்.

    இவை அனைத்தும் ஒரு புறமிருக்க மார்பகம் சார்ந்த குறிகுணங்களான, சுற்றி நெறிக்கட்டிகள் காணுதல், மார்பகத்தின் வடிவம் மற்றும் பருமன் மாறுபட்டு காணுதல், வழக்கத்திற்கு மாறான கசிவு, மார்பகத்தின் மேல் ரத்த நாளங்கள் விரிந்து காணுதல், மார்பகம் கடினமாக தோன்றுதல் ஆகிய குறிகுணங்களில் ஒன்றோ அல்லது பலவோ சேர்ந்து தோன்றினால் பெண்கள் எந்த வித தயக்கமும் இன்றி மருத்துவரை அணுகுவது அவசியம். முறையான பரிசோதனை முறைகள் மூலம் மார்பகம் சார்ந்த நோய்களை முன்னதாகவே கணிக்க முடியும். சித்த மருத்துவம் மூலம் தீர்வு தந்து நலமான வாழ்வை நோக்கி நகர முடியும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • இது அரிய வகை மூலிகைளில் ஒன்றாகும்.
    • சித்தர்கள் இதை மகா மூலிகை என அழைத்தனர்.

    நத்தை சூரி என்றவுடன், இது ஏதோ ஒரு உயிரினத்தின் பெயர் என்று நினைக்க வேண்டாம். இது அரிய வகை மூலிகைளில் ஒன்றாகும். இதன் வித்தியாசமான பெயருக்கு ஏற்ப, பல வித நோய்களை போக்கும் தன்மை உடையது. இம்மூலிகை, சித்து வேலைகள் உட்பட பல்வேறு நோய்களை குணமாக்க பயன்பட்டதால், சித்தர்கள் இதை மகா மூலிகை என அழைத்தனர்.

    நத்தை சூரி மூலிகையில் நான்கு வகைகள் உள்ளன. இந்த விதையே ஆண்மை குறைபாடு, விந்து முந்துதல், விந்து கலிதம், சொப்பன கலிதம் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

    சித்த மருத்துவ மருந்துகளில் விதைகளை முறைப்படி சுத்தி செய்து சூரணமாக்கி (துணை மருந்துகளும் உள்ளடக்கியது) ஆண்மை சம்பந்தபட்ட நோய்களுக்கு கொடுக்கப்படும்.

    நத்தை சூரி சூரணத்தையும், அமுக்கரா சூரணத்தையும் இருவேளையும் தளா ஒரு கிராம் அளவு பாலில் சாப்பிட்டுவர விந்து கெட்டிப்படும்.

    நத்தை சூரி விதையை பொன்வறுவலாக வறுத்து 400 மில்லி தண்ணீர் விட்டு 100 மில்லியாக சுண்டவைத்து அதனுடன் ஒரு டம்ளர் சுத்த பசும்பால் விட்டு இருவேளை குடித்து வர உடலில் தங்கியுள்ள உள்ள தேவையற்ற கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை குறைக்கும். ஆண், பெண் இருவருக்குமுள்ள, வெள்ளை நோய், வெட்டை நோய் குணமாகும்.

    நத்தை சூரி சூரணத்தை தொடந்து சில மாதங்கள் சாப்பிட்டு வர உடல் எடை குறைந்து தளர்ந்த தசைகள் இறுகும். புறா நத்தை சூரி விதைகளை விரும்பி உண்ணுவதனாலயே புறாவின் தசைகள் இறுக்கமாக உள்ளது.

    நத்தை சூரியின் விதையை, லேசாக வறுத்து பொடியாக்கி, ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து, காலை, மாலை அருந்தினால், உடல் சூடு தணிவதுடன், உடலில் உள்ள, தேவையற்ற, ரசாயன வேதிப் பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகக் கல்லடைப்பை தடுக்கும். மேலும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். நத்தைச்சூரியின் விதையை பொடித்து, தினமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டால், சீதபேதி மற்றும் வயிற்றோட்டம் போக்கும்.

    பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும், அதிக உதிரப் போக்கைத் தடுக்கும். வெள்ளைப் படுதலை குணமாக்கும். 10 கிராம் நத்தை சூரி வேரை, காயவைத்து, பொடியாக்கி, பசும்பாலில் கலந்து, கொதிக்க வைத்து அருந்தி வந்தால், தாய்ப்பால் பெருகும்.

    இதன் வேர் நோய் நீக்கும் தன்மை கொண்டது. உடலைத் தேற்றவும், விந்து பலத்தை அதிகரிக்கவும், விதை தாதுக்களின் எரிச்சலைத் தவிர்க்கவும், தாது வெப்பத்தைத் தணிக்கவும் பயன்படுகின்றது. நத்தைச் சூரி விதையை அரைத்து, நெல்லிக்காயளவு எடுத்து, ஒரு டம்ளர் பாலுடன் கலந்து, 2 வேளை சாப்பிட்டு வர, உடல் பலமடையும்; ஆண்மை பலம் அதிகரிக்கும்.

    • இது பொதுவான நோய்களில் ஒன்றாகும்.
    • தினமும் மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளுதல் நல்ல பலன் அளிக்கும்.

    சைனசைடிஸ் நோய்க்கு சித்த மருத்துவத்தில் சிறந்த சிகிச்சை இருப்பதாக வேலூர் சித்த மருத்துவ டாக்டர் திவ்யா கூறினார்.

    வேலூர் சத்துவாச்சாரியில் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை உள்ளது. இங்கு பணிபுரியும் சித்த மருத்துவர் டாக்டர் எம். திவ்யா சைனசைடிஸ் நோய்க்கான அறிகுறிகள், அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான வாழ்வியல் முறைகள் மற்றும் மருத்துவ முறைகள் குறித்து கூறியதாவது:-

    சைனசைடிஸ்

    இந்த காலத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை சைனசைடிஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது பொதுவான நோய்களில் ஒன்றாகும். சித்த மருத்துவத்தில் இதனை பீனிசம், நீர் கோவை, மூக்கடைப்பு நோய் போன்ற பெயர்களால் குறிப்பிடுவர். நமது முகம் மற்றும் தலைப்பகுதிகளில், மூக்கின் இரு பக்கம், நெற்றி, புருவம் ஆகிய பகுதிகளில் குழிகள் போன்ற காற்றறைகள் உள்ளன. இவையே 'சைனஸ்' எனப்படும். இவற்றில் குளிர்ந்த காற்று, தூசி போன்றவற்றால் நீர்த்தேக்கம் ஏற்படும். அதைத் தொடர்ந்து அதில் நோய் தொற்று, அழற்சி, வீக்கம், தும்மல் போன்ற குறி குணங்கள் ஏற்பட்டு சைனசைடிஸ் என்ற நோய் நிலையை அடையும்.

    காரணிகள்

    பண்பான பித்தத்தில் சேத்துமம் கூடி பரிசித்தால் பீனிசமும்' என்ற சதகநாடியின் படி உடலில் பித்தம் முற்றும் மிகுந்துள்ளபோது கபத்தை பெருக்கக் கூடிய செயல்களால் பிறந்த கபபித்த நோயை பீனிசம் ஆகும். உடற்சூடு அதிகரித்துள்ள போது குளிர் காற்றில் ஈடுபடுதல், குளிர்ந்த பானம் அருந்துதல், வெயிலில் அலைந்து வந்த மறுகணம் குளிரூட்டப்பட்ட அறையில் இருத்தல். புகை, தீங்கு விளைவிக்கும் வாயு, தூசி போன்றவற்றை நுகர்தல், ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை உட்கொள்ளல்.

    குறிகுணங்கள்

    தும்மல், மூக்குநீர்பாய்தல், மூக்கடைப்பு, தலைவலி மூக்கில் இருந்து சளி, சீழ் போன்றவை வெளியாதல், கண் சிவந்து நீர் வடிதல், தலைபாரம், மூக்கின் துளை சிவந்து காணல், முகம் மற்றும் காது முதலானவை நோதல்.

    வெளி மருத்துவ முறைகள்

    தும்பை, நொச்சி, வேப்பிலை, எலுமிச்சை முதலியவற்றின் இலைகள், மஞ்சள் முதலியவற்றை கொண்டு நீராவி பிடித்தல்.

    மூக்கடைப்பிற்கு ஓம பொட்டணமிடல். மூலிகை எண்ணெய் குளியல். தைலங்களை கொண்டு நசியமிடல் வர்ம சிகிச்சை முறை மேற்கொள்ளல்.

    மூக்கடைப்பு மற்றும் அழற்சிக்கு மூலிகையாலான வர்த்தி கொண்டு புகையிடல்.

    அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டியவை

    சைனசைடிஸ் நோயிலிருந்து தற்கால தற்காத்துக் கொள்ள அதிக உடல் சூட்டை குறைக்கும் படியான வாழ்வியலை மேற்கொள்ள வேண்டும். உடல் சூட்டை அதிகரிப்பதற்கான காரணங்களானவை; நேரம் தவறி உண்ணுதல், இரவு வெகு நேரம் கண்விழித்தல். உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை அதிக அளவு உட்கொள்ளுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    கரிசாலை, மணத்தக்காளி கீரை, கத்தரிபிஞ்சு முருங்கைக்காய், கருணைக்கிழங்கு, வரப்பு நண்டு முதலியவற்றை உணவில் சேர்த்தல் வேண்டும். தினமும் மூச்சுப் பயிற்சி (பிரணாயாமம்) மேற்கொள்ளுதல் நல்ல பலன் அளிக்கும். வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து தலைமுழுகுதல் வேண்டும். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் உணவுகளான தூதுவளை, மிளகு, புதினா, துளசி, சுக்கு, மஞ்சள் முதலியவற்றை தினசரி சேர்த்தல் வேண்டும். புகை பிடித்தல் மற்றும் மது அருந்துவதை கைவிட வேண்டும்.

    வீட்டு வைத்திய முறை

    மிளகு பாவனம், தூதுவளை ரசம், நண்டு ரசம் முதலியவற்றை அருந்த வேண்டும். இலவங்கப்பட்டை தூள் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் கலந்து அருந்துதல் வேண்டும். மஞ்சள் தூளில் துளசி இலைச்சாறு, தும்பை பூச்சாறு, கற்பூரவல்லி இலைச்சாறு முதலிய சாறுகளை இட்டு நெற்றி மற்றும் மூக்கின் இரு பக்கங்களில் பற்றிடல் வேண்டும்.

    சைனசைடிஸ் நோய்க்கான தக்க சித்த மருத்துவ உள் மருந்துகளை டாக்டரின் ஆலோசனையின் படி எடுத்துக் கொண்டு நலம் பெற்று வாழ்வோம்.

    • மலச்சிக்கல் கூடினால் வாதம் கூடுவதாகப் பொருள்.
    • மார்பக வலிக்கு காரணம் உடலில் அதிகமாகும் வாதம் தான் என்கிறது சித்த மருத்துவம்.

    பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது மார்பக வலியினால் தான். கிட்டத்தட்ட 65% பெண்கள் மார்பக வலியால் அவதிப்படுவதாக அறிவியல் தரவுகள் கூறுகின்றன.

    மாதவிடாய்க்கு முன்பாக இத்தகைய வலியுடனும் வேதனையுடனும் பல பெண்கள் துன்பப்படுகிறார்கள். முதல் பூப்பினை எய்தும் போதும், கர்ப்ப காலத்திலும், கர்ப்பத்திற்கு பின் பாலூட்டும் காலத்திலும் கூட பல பெண்களுக்கு மார்பக வலி பல்வேறு உடல் செயலியல் மாற்றங்களால் உண்டாகிறது. இறுதி மாதவிடாய் என்று கருதப்படும் மெனோபாஸ் நிலைக்கு பின்னும் பல பெண்களுக்கு மார்பக வலி உண்டாகும். இது 'சைக்ளிக் அல்லாத மார்பக வலி' என்று கருதப்படும். இவற்றிற்கு சித்த மருத்துவம் தரும் தீர்வுகளையும், உணவு முறைகளையும் பின்பற்றுவது, வலியை குறைத்து நல்ல முன்னேற்றம் தரும்.

    மார்பக வலிக்கு காரணம் உடலில் அதிகமாகும் வாதம் தான் என்கிறது சித்த மருத்துவம். எனவே வாதத்தை குறைக்க எளிமையான ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தலாம். அதனை மார்பகத்தின் மேலேயும் பூசி வரலாம். அவ்வப்போது ஆமணக்கு எண்ணெயை தேக்கரண்டி அளவு உள்ளுக்கும் குடிக்க வாதம் குறைந்து வலி குறையும். சிறிது சமைக்கவும் பயன்படுத்தி, குடும்பத்தில் உள்ள அனைவரின் வாதத்தையும் குறைத்து உடலை கெடாமல் பாதுகாத்து கொள்ளலாம்.

    வாதத்தை தூண்டும் பதப்படுத்தப்பட்ட, எண்ணெய் தோய்ந்த உணவுகளை தவிர்த்து, லேசான, எளிதில் சீரணிக்கும் படியான உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம். உணவில் அதிக நார்ச்சத்துக்களை கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் பயன்படுத்துவதும் அவசியம். மலச்சிக்கல் கூடினால் வாதம் கூடுவதாகப் பொருள்.

    இதனால் மார்பகவலி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் மலச்சிக்கலை உண்டாக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. காபி மற்றும் தேநீரில் உள்ள மெத்தில்சேந்தின் எனும் வேதிப்பொருள் மாதவிடாயின் போது மார்பகவலியை அதிகரிப்பதாக உள்ளது. இன்றைய வாழ்வியலில் காபி, டீ-க்கு அடிமையாகிவிட்ட பல பெண்கள் இதை அவசியம் தெரிந்துகொண்டு இயற்கை பானங்களை நாடுவது நலம் பயக்கும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • பல்வேறு காரணங்களால் இந்த பிரச்சனை வருகிறது.
    • சித்த மருத்துவத்தில் இதற்கு தீர்வு உண்டு.

    தொப்புள் அருகில் வலியில்லாமல் வீங்குவது 'அம்ப்ளிக்கல் ஹெர்னியா' என்ற குடல் இறக்கம் நோயில் தான் பெரும்பாலும் காணப்படும். தொப்புள் பகுதியில் உள்ள வயிற்று தசை சுவரின் வலு குறைவதால் தொப்புள் வழியாக குடல் இறங்கிவிடும்.

    வயிற்றுக்குள் ஏற்படும் வாயுவின் அழுத்தம், உடல் பருமன், வயிற்று தசைகளில் அதிகமான கொழுப்பு படிவது, நாள்பட்ட இருமல், மலச்சிக்கல், மலத்தை முக்கி கழிப்பது, அதிக பளுவுள்ள பொருட்களை தூக்குவது போன்ற காரணங்களால் குடலுக்கு முன் உள்ள தசை வலுவிழந்து விடுவதால் குடல் இறக்கம் ஏற்படுகிறது.

    இதற்கான சித்தமருத்துவம்:

    1) மலச்சிக்கல் ஏற்படாமல் எளிதாக மலம் கழிய சித்த மருத்துவத்தில் மூலக் குடார நெய் - இரவு 5 முதல் 10 மி.லி. எடுக்க வேண்டும்.

    2) வயிற்றில் உள்ள வாயுவின் அழுத்தத்தை குறைக்க குன்ம குடோரி மெழுகு 250 முதல் 500 மி.கி. இருவேளை சாப்பிட வேண்டும்,

    3) வாயுவைப் பெருக்கும் உணவு வகைகளான கிழங்குகள், மொச்சை இவைகளை அளவோடு எடுக்க வேண்டும். நாட்பட்ட இருமல் இருந்தால் உடனே அதற்குரிய மருத்துவம் செய்ய வேண்டும். வீக்கம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருந்தால் கட்டாயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை.
    • சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. அளவு வாயு தான் இருக்கும்.

    சித்த மருத்துவத்தில் வாயுக்கள் பத்து வகைப்படும். அவை: பிராணன் (உயிர்க்காற்று), அபானன் (கீழ் நோக்கு காற்று), வியானன் (பரவு காற்று), உதானன் (மேல் நோக்கு காற்று), சமானன் (நடுக்காற்று), நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் ஆகும். இவை நாடி, நரம்புகளில் இயங்குகின்றன என்று திருமூலர், திருமந்திரத்தில் கூறுகிறார்.

    வாயுப் பிரச்சினை என்றால் என்ன, வாயு எவ்வாறு? எப்படி? வயிற்றில் உருவாகிறது என்று பார்ப்போம்.

    உணவை அவசர அவசரமாக சாப்பிடுவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது, தண்ணீரை அண்ணாந்து குடிப்பது, டீ, காபி, பாட்டில் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும் போது, நம்மை அறியாமலே காற்றையும் விழுங்கி விடுகிறோம். குடலில் உணவு செரிக்கும்போது, அங்கு இயல்பாகவே இருக்கும் லேக்டோ பேசில்லை போன்ற நன்மை தரும் பாக்டீரியாக்கள் நொதித்தல் செயல் மூலம் வேதி மாற்றங்கள் நிகழும் போது ஹைட்ரஜன், நைட்ரஜன், மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, ஆக்சிஜன் போன்ற பல வாயுக்கள் தினமும் சுமார் 2 லிட்டர் வரை உற்பத்தியாகின்றன. இவை பெரும்பாலும் ரத்தத்தால் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப்பாதை வழியே வெளியேறுகிறது.

    சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. அளவு வாயு தான் இருக்கும். குடலில் உள்ள வாயுக்கள் ஏப்பம் மூலம் வாய் வழியாக அல்லது ஆசன வாய் வழியாக வெளியேறும். நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை. வாயு மேல் நோக்கி அல்லது கீழ்நோக்கி வெளியேறவில்லை என்றால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து முதுகுப்பிடிப்பு, நெஞ்சு வலி, விலாப்பக்கத்தில் வலி, தலைவலி போன்றவற்றை உருவாக்குகிறது.

    மொச்சை, பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பாலில் செய்த இனிப்புகள், வெங்காயம், காலிபிளவர், முட்டைக்கோஸ் இவைகளை வாயுப்பிரச்சினை உள்ளவர்கள் அளவோடு சாப்பிடுவது நல்லது.

    வாயுப் பிரச்சினை தீர உதவும் உணவுப் பழக்கம்:

    1) தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், உணவை காலந் தவறாமல் எடுக்க வேண்டும்.

    2) உடல் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தும் சீரகத்தண்ணீரை தினமும் குடித்து வந்தால் வாயுப்பிரச்சினை குறையும்.

    3) சீரகம், ஓமம், பெருங்காயம், மிளகு, சுக்கு, கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றல் இவைகளை வறுத்து பொடித்து வைத்து, சோற்றில், உப்பு, நெய் சேர்த்து சாப்பிட வாயுப்பிரச்சினை நீங்கும்.

    4) மோரில் வறுத்த பெருங்காயத்தூள், சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து குடிக்கலாம். 5) ஓமத்தீநீர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம்.

    சித்த மருத்துவத்தில்: 1) ஏலாதி சூரணம் 1 டீஸ்பூன் அல்லது இரண்டு மாத்திரை வெந்நீரில் எடுக்க வேண்டும். 2) சீரக வில்வாதி லேகியம் அல்லது வில்வாதி லேகியம் காலை, இரவு சாப்பிட வேண்டும். 3) குன்ம குடோரி மெழுகு 250-500 மி.கி. இருவேளை சாப்பிட வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது மார்பக வலியினால் தான்.
    • சித்த மருத்துவத்தில் இதற்கு நிரந்தர தீர்வு உண்டு.

    மார்பகம் என்பது பெண்கள் பூப்பு அடைந்தபின் வளர்ச்சி அடையும் உறுப்பாக பலர் கருதுகின்றனர். உண்மையில் தாயின் கருவில் இருக்கும் போதே, ஆறாவது வாரம் முதல் எட்டாவது வாரத்தில் மார்பகத்தின் வளர்ச்சி உண்டாவதற்கான ஆயத்தம் உடலில் உண்டாகி விடுகிறது. அதன் பின் மார்பகம் சார்ந்த பல்வேறு பகுதிகள் ஒவ்வொன்றாக உண்டாக துவங்கி விடுகின்றன. இத்தகைய வளர்ச்சியில் ஹார்மோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன. பெண் ஹார்மோனாக கருதப்படும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டெரோன் மட்டுமல்லாது மூளையில் உள்ள பிட்யூட்டரி எனும் நாளமில்லா சுரப்பியில் சுரக்கும் புரோலாக்டின் எனும் ஹார்மோனும் முக்கிய பங்காற்றுகிறது. இந்த புரோலாக்டின் ஹார்மோன் தான் தாய்ப்பால் சுரப்பிற்கும் முதன்மையானது.

    பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது மார்பக வலியினால் தான். கிட்டத்தட்ட 65% பெண்கள் மார்பக வலியால் அவதிப்படுவதாக அறிவியல் தரவுகள் கூறுகின்றன.

    மாதவிடாய்க்கு முன்பாக இத்தகைய வலியுடனும் வேதனையுடனும் பல பெண்கள் துன்பப்படுகிறார்கள். இது 'சைக்ளிக் மாஸ்டால்ஜியா' என்று அழைக்கப்படும். இது மட்டுமில்லாது முதல் பூப்பினை எய்தும் போதும், கர்ப்ப காலத்திலும், கர்ப்பத்திற்கு பின் பாலூட்டும் காலத்திலும் கூட பல பெண்களுக்கு மார்பக வலி பல்வேறு உடல் செயலியல் மாற்றங்களால் உண்டாகிறது. இறுதி மாதவிடாய் என்று கருதப்படும் மெனோபாஸ் நிலைக்கு பின்னும் பல பெண்களுக்கு மார்பக வலி உண்டாகும். இது 'சைக்ளிக் அல்லாத மார்பக வலி' என்று கருதப்படும். இவற்றிற்கு சித்த மருத்துவம் தரும் தீர்வுகளையும், உணவு முறைகளையும் பின்பற்றுவது, வலியை குறைத்து நல்ல முன்னேற்றம் தரும்.

    மார்பக வலியின் போது சித்த மருத்துவ கடைசரக்குகள் பயனுள்ளதாக உள்ளதை ஆய்வுத் தரவுகள் கூறுகின்றது. கருஞ்சீரகம், சோம்பு, இஞ்சி, மஞ்சள், ஆளி விதை ஆகியன அதில் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. கருஞ்சீரகத் தைலத்தை கொண்டு மேலை நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் சைக்ளிக் மார்புவலிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக முடிவுகள் கூறுகின்றன. மாதவிடாயின் போது உண்டாகும் வயிற்றுவலிக்கு சோம்பு கசாயம் (பெருஞ்சீரகம்) கைகண்ட மருந்து. அதைப்போல் மார்பக வலிக்கும் பயன் தருவதாக உள்ளது. ஒமேகா-3 எனும் மருத்துவ குணமிக்க கொழுப்பு அமிலத்தை இயற்கையில் கொண்டுள்ள சித்த மருத்துவ மூலிகை ஆளி விதை. பெண்களின் மார்பக வலியை குறைப்பதில் இதுவும் பயனளிக்கும்.

    மஞ்சள் பெண்களின் மாதவிடாய் சமயத்தில் உண்டாகும் மார்பக வலிக்கும் சிறந்த பலன் தருவதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. காரணம் இதில் உள்ள குர்குமின் வேதிப்பொருள் உடலில் வலி மற்றும் வீக்கத்திற்கு காரணமாகும் ப்ரோஸ்டாகிலாண்டின் என்ற வேதிப்பொருளின் செயலை தடுப்பதாக உள்ளது.

    இஞ்சியில் உள்ள 'ஜின்ஜிபேரின்' எனும் அல்கலாய்டு வேதிப்பொருள் உடலில் வீக்கம் மற்றும் வலியை உண்டாக்கும் ப்ரோஸ்டாகிலாண்டின் மற்றும் லியூகோட்ரின் ஆகியவற்றின் செயலை தடுத்து வலியை குறைக்கும் தன்மையுடையது. ஆக பெண்கள் ஒரு கோப்பை இஞ்சி டீ எடுத்துக்கொள்வது பெண்களின் மார்பக வலியை குறைக்கும் இயற்கை அலுப்பு மருந்தாக உள்ளது. இது சித்த மருத்துவத்தில் எளிமையே வலிமைக்கு உதாரணம்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • மாதம் ஒரு முறை கூட தாம்பத்தியம் பண்ண முடியவில்லை.
    • உயிர்ச்சத்துக்கள் குறைவில்லாமல் பார்க்க வேண்டும்.

    மனித உடலானது உணர்வுகளால் பின்னிப்பிணைந்தது, அன்பு, பாசம், மகிழ்ச்சி, கோபம், கவலை, பயம் போன்ற மனதின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக உள்ளது. தற்போதுள்ள வேலை, மனஅழுத்தம், உணவுமுறை போன்ற பல்வேறு காரணங்களால் பலருக்கு மாதம் ஒரு முறை கூட தாம்பத்தியத்தில் ஆர்வம் வருவதில்லை என்ற குறைபாடு உள்ளது.

    தாம்பத்திய வாழ்வும், உடலோடும், உள்ளத்தோடும் தொடர்புடைய ஒன்றாகும். இது கணவன்-மனைவி உறவை பிணைக்கக்கூடிய முக்கியமான ஒன்று. உங்களைப்போன்று பலர் இந்த பாதிப்பினால் அவதிப்படுகிறார்கள். வைட்டமின்களில் பி3, பி9, சி, டி, ஈ இவைகளில் குறைபாடு இருந்தாலும் தாம்பத்திய குறைபாடுகள் ஏற்படலாம். ஆகவே இந்த உயிர்ச்சத்துக்கள் குறைவில்லாமல் பார்க்க வேண்டும்.

    அதற்கான சித்த மருந்துகள்:

    1) சாலாமிசிரி லேகியம் ஒரு டீ ஸ்பூன் காலை, இரவு இருவேளை உணவுக்கு பின் சாப்பிடலாம்.

    2) அமுக்கரா லேகியம் காலை, இரவு ஒரு டீ ஸ்பூன் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.

    3) பூமி சர்க்கரை கிழங்கு பொடி அல்லது அமுக்கரா பொடி ஒரு டீஸ்பூன், நாக பற்பம் 100 மி.கி., பூரண சந்திரோதயம் 100 மி.கி. கலந்து காலை, இரவு இருவேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.

    சிறப்பான தாம்பத்தியத்திற்கு உதவும் உணவுகள்: சைவ உணவுகளில் கேரட், பீட்ரூட், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளி, முருங்கை காய், தூதுவளை கீரை, தாளிக்கீரை, பசலைக்கீரை, பூசணி விதைகள், சோயாபீன்ஸ், வேர்க்கடலை, பட்டர் பீன்ஸ், கடற்பாசிகள், பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, சாக்லேட், கருப்பு திராட்சை, சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி அரிசி. அசைவ உணவுகளில் சிக்கன், வான்கோழி, சிகப்பு இறைச்சி வகைகள், முட்டை, பால், வெண்ணெய், சூரை மீன், கணவாய், இறால், நண்டு, சுறா மீன், மத்திச் சாளை, கணவாய் மீன். பழங்களில்- நேந்திரம், செவ்வாழை, அவகோடா, பேரிச்சை, அத்தி, மாதுளம்பழம், மாம்பழம், பலாப்பழம், துரியன் பழம், தர்ப்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை பழங்கள். இவைகள் விறைப்புத்தன்மை குறைபாட்டை நீக்கி உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை தரும். முறையான உடற்பயிற்சிகளும் அவசியம்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    ×