search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 240408"

    • நுரையீரலுக்குள் நூற்றுக்கணக்கான காற்றுக் குழாய்கள் உள்ளது.
    • ஆஸ்துமா என்பது மூச்சு விடுவதற்கு சிரமத்தை தருகின்ற நோய் ஆகும்.

    இரைப்பு நோய் (ஆஸ்துமா) என்பது மூச்சு விடுவதற்கு சிரமத்தை தருகின்ற நோய் ஆகும். நுரையீரலுக்குள் நூற்றுக்கணக்கான காற்றுக் குழாய்கள் உள்ளது. பெரிதாக உள்ள காற்று குழாய்களுக்கு பிராங்கை (Bronchi) என்றும், சிறிய காற்றுக் குழாய்களுக்கு பிராங்கியோல்ஸ் (Bronchioles) என்றும் பெயர். இந்த காற்றுக் குழாய்களை இயக்கும் தசைகள் தான், இவை சுருங்கவும் விரியவும் செய்கிறது.

    நாம் சுவாசிக்கும் காற்றானது இந்த காற்றுக் குழாய்களின் வழியே சென்று நுரையீரல்களில் உள்ள கோடிக்கணக்கான மிகச்சிறிய பலூன் போன்ற காற்றுப் பைகளுக்குள் நிரம்புகிறது. இந்தச்சிறிய காற்றுப் பைகளுக்கு 'ஆல்வியோலை' (Alveoli) என்று பெயர். இரைப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுக்காற்றை சுவாசித்து, வெளிவிடுவதற்கு முயற்சிக்கும் போது காற்றுக் குழாய்கள் விரிவடைவதற்கு பதிலாக, தசைகளின் இறுக்கத்தால் சுருங்கி விடுகின்றன. இதற்கு 'பிராங்கோஸ்பாசம்' (Bronchospasm) என்று பெயர். இதனால் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். இதையே இரைப்பு (ஆஸ்துமா) என்கிறோம்.

    நோய் காரணங்கள்: 1) பாரம்பரியம், 2) காற்றிலுள்ள தூசிகளின் ஒவ்வாமை (மகரந்தத் தூள், கழிவுப்பொருட்கள், சில ரசாயனப் பொருட்கள்), 3) புகை, பனி, குளிர் காற்று, காற்று மாசுபாடு, வாசனைப் பொருட்கள், குறிப்பிட்ட உணவுகள், 4) ஹிஸ்டமின் (Histamine), அசைட்டைல் கோலைன் (Acetyl choline) போன்றவை ரத்தத்தில் அதிகரிக்கும் போது, 5) உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பில் உள்ள மாறுபாடுகளால் ரத்தத்தில் 'இம்யூனோகுளோபுலின் ஈ' அதிகரித்து இருப்பது, 6) தீவிர உடற்பயிற்சி, மலைப்பகுதிகளில் பயணம் செய்வது, தீவிர இதய மற்றும் சிறுநீரக நோய், நுரையீரலை தீவிரமாக பாதிக்கும் பாக்டீரியா, வைரஸ் நோய்கள் போன்ற பல காரணங்களால் இந்த நோய் வருகிறது. இரைப்பு நோயைக் குணப்படுத்த துளசி, ஆடாதோடை, கஞ்சாங்கோரை, கரிசலாங்கண்ணி, கண்டங்கத்திரி, தூதுவளை, நஞ்சறுப்பான் என்று ஏராளமான மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளது.

    சித்த மருந்துகள்: 1) தாளிசாதி சூரணம் ஒரு கிராம், கஸ்தூரி கருப்பு 100 மி.கி., சிவனார் அமிர்தம் 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி., இவைகளை தேன் அல்லது வெந்நீரில் மூன்று வேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

    2) சுவாசகுடோரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் காலை, மதியம், இரவு 3 வேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

    3) கஸ்தூரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.

    4) கண்டங்கத்திரி லேகியம், தூதுவளை நெய், ஆடாதோடை மணப்பாகு இவைகளில் ஒன்றை காலை, இரவு உணவுக்கு பின் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    5) குளிர்ந்த பொருள்கள் சாப்பிடுதல், பனிக்காற்றில் நடமாடுதல், ஊதுபத்தி, கொசுவர்த்தி சுருள்களின் புகை, புகைப்பழக்கம், ஒட்டடை அடித்தல் போன்றவற்றை இரைப்பு நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • நோய்க்கு காரணத்தை கண்டு பிடித்து முறையாக சிகிச்சை பெற வேண்டும்.
    • சித்த மருத்துவத்தில் 32 வகையான புற சிகிச்சை முறைகள் உள்ளன.

    பொதுவாக மக்களுக்கு கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகு தண்டு வட வலி ஏற்படுகிறது என்றால் அதை சாதாரண வலி என்று விட்டு விடக்கூடாது. இவைகள் தண்டு வட நரம்புகள் பாதிப்படைய (Radiculopathy generation) காரணமாகி விடும்.

    நோய்க்கு காரணத்தை கண்டு பிடித்து முறையாக சிகிச்சை பெற வேண்டும். முதலில் பத்தியத்துடன் மருந்துகள் கொடுத்து வீக்கம், வலி குறைந்து இளக்கம் கண்டபின் எளிய பயிற்சிகள் கொடுப்பதோடு தண்டு வட புற சிகிச்சை முறைகள், தண்டு வடம் சீராகவும், ஜவ்வுகளின் அழுத்தங்களை குறைத்து வலுப்பெற செய்கிறது.

    மேலும் எலும்பு மூட்டுக்கள் உறுதி பெற மூட்டுக்களில் எண்ணெய் பசை சீராவதற்கான ரசாயனங்கள், லேகியங்கள், பஸ்பங்கள் முதலிய சக்தி வாய்ந்த மருந்துகள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது.

    உட்கொள்ளும் மருந்துகள் மட்டுமல்லாமல் புற மருத்துவ சிகிச்சைகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. சித்த மருத்துவத்தில் 32 வகையான புற சிகிச்சை முறைகள் உள்ளன. இவற்றுள் ஒன்று தான் 'மசாஜ்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் புற சிகிச்சை முறை. இதற்கு சித்த மருத்துவத்தில் தொக்கணம் என்று பெயர்.

    தொக்கண முறைகள் தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தசையில் தளர்ச்சியை நீக்கி புத்துணர்ச்சியை தரும். உடல் முழுவதும் நிணநீர் ஓட்டத்தை சீராக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உடலின் மென்தசைகள், மூட்டுகளில் உள்ள இணைப்பு திசுக்களுக்கு வலிமை தரும். நெடுந்தூரம் தினமும் மோட்டார் சைக்கிள் அல்லது பஸ்களில் பயணம் செய்பவர்கள், உடல் உழைப்பு உள்ளவர்கள் தொக்கணம் செய்தால் உடல் சோர்வு மாறும்.

    இவ்வாறு நரம்பு சம்பந்தமான நோய்கள், மூட்டுகளில் ஏற்படும் நோய்கள், ரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச்சினைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, தசைகளில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு தொக்கணம் எனப்படும் புற சிகிச்சை மிகவும் அவசியம்.

    குமரி மண்ணில் 7-வது தலைமுறையில் சித்த மருத்துவ சேவையாற்றி வருகிறோம் என டாக்டர்கள் குணசிங்க வேதநாயகம், பிரசாந்த் சிங் தெரிவித்தனர்.

    ஆனக்குழி ஆசான், டாக்டர் குணம் மருத்துவமனை, ஆனக்குழி, பாலப்பள்ளம் அஞ்சல்-629159. தொடர்புக்கு: 04651 226354. 227827 செல் எண்: 91 97867 77828.

    • மூக்கடைப்புக்கு இது நல்ல மருந்து.
    • தோல் நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்து.

    கருஞ்சீரகத்தில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்புக் குறைய உதவும். மேலும், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவையும் இதில் உள்ளன. 

    சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகச் செயல்படும் கருஞ்சீரகம், வீக்கம் தணிக்க உதவும். ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள் நெருங்காமல் உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும். இதயநோய், புற்றுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக கருஞ்சீரகம் கருதப்படுகிறது. இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கி, புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாதபடி பாதுகாக்கும். குறிப்பாக, கணையப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

    மிகச் சாதாரணமாகப் பலரையும் பாடாகப்படுத்தி வரும் மூக்கடைப்புக்கு இது நல்ல மருந்து. ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை 50 மி.லி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் இரண்டு சொட்டு மூக்கில்விட்டால் மூக்கடைப்பு விலகும். ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை வெந்நீர், தேன் கலந்து பருகினால் சிறுநீரகக் கற்களும் பித்தப்பைக் கற்களும் கரையும். இதை காலை, மாலை இரண்டுவேளையும் சாப்பிட்டு வரவேண்டியது அவசியம். 

    தொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம். இது நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்றும். தோல் நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்து.

    மாதவிடாய்க் கோளாறுகளின்போது அடிவயிறு கனமாகி, சிறுநீர் கழிக்கச் சிரமப்படும் பெண்களுக்கு இது நல்ல மருந்து. வறுத்துப் பொடித்த கருஞ்சீரகத்துடன் தேன் அல்லது கருப்பட்டி கலந்து, மாதவிடாய் தேதிக்கு 10 நாள்கள் முன்பிருந்தே ஒரு டேபிள்ஸ்பூன் சாப்பிடலாம். இது வயிற்று வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட மாதவிடாய்ச் சிக்கல்களை சரி செய்யும்; வயிறு கனம் குறைந்து நன்றாகச் சிறுநீர் வெளியேற உதவும். 

    பிரசவத்துக்குப் பின்னர் கர்ப்பப்பையில் சேரும் அழுக்கை நீக்க, ஒரு டேபிள்ஸ்பூன் கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம். குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து காலை, மாலை என ஐந்து நாள்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இதேபோல் வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து கருக விடாமல் வறுத்துப் பொடியாக்க வேண்டும். இதை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்டதும் வேறு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்களும் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேறும்; தேவையற்ற கொழுப்பு நீங்கும்; ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ரத்த ஓட்டம் சீராகும். 

    பல மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு உத்தரவாதம் தரும்.

    • சிலருக்கு காலநிலை ஒவ்வாமையால் உதடுகள் கருத்து, வெடிப்புகளும் ஏற்படும்.
    • உதட்டின் கருமைக்கு சித்த மருத்துவத்தில் நிரந்தர தீர்வுகள் உள்ளன.

    பொதுவாக ஒருவரின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பலருக்கு உதடுகள் மென்மையின்றி, தோலுரிந்து, கருப்பாக இருக்கும். இப்படி உதடுகளின் அழகு பாழாவதற்கு அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்களின் தாக்கம், காப்ஃபைன், புகைப்பிடித்தல் போன்ற பல விஷயங்கள் காரணங்களாக உள்ளன.

    அதிக குளிர், அதிக வெப்பம் காரணமாகவும் சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு காலநிலை ஒவ்வாமையால் உதடுகள் கருத்து, வெடிப்புகளும் ஏற்படும்.

    இதனை கவனிக்கமால் விட்டால் இன்னும் கருப்பாக மாற்ற வாய்ப்பு இருக்கும். இதனை எளியமுறையில் கூட நீக்க முடியும். 

    தற்போது உதட்டு கருமை நீக்க சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

    இதற்கான மருத்துவம்: பீட்ரூட் சாறுடன், சிறிதளவு குங்குமப்பூ கரைத்து உதட்டில் தடவி வந்தால் உதடு வெடிப்பு, கருப்பு நீங்கும். பாலாடையுடன், நெல்லிக்காய் சாறு கலந்து அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெண்ணெயுடன், ஆரஞ்சு பழச்சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தாலும் வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும். ரோஜா இதழ்களின் சாறு, கேரட் சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால் உதடு கருப்பு நீங்கும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • மாதவிடாய் காலங்களில் ஒரு சிலருக்கும் அதிகளவு ரத்தப்போக்கு இருக்கும்.
    • அடுத்த மாதவிடாய் வருவதற்கு முன்பாகவே இடையிலும் ரத்தப்போக்கு வரும்.
    பெண்களுக்கு சாதாரணமாக 3 முதல் 7 நாட்கள் இருக்கும் மாதவிடாய் காலங்களில் சராசரியாக 100 முதல் 200 மி.லி ரத்தம் வெளியேறும். இது நபருக்கு நபர் வேறுபடும். இந்தக் காலங்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு 'பெரும்பாடு' (மெனோரேஜியா-Menorrhagia) என்று அழைக்கப்படுகிறது.

    மாதவிடாய் காலங்களில் ஒரு சிலருக்கும் அதிகளவு ரத்தப்போக்கு இருக்கும். மேலும் கை, கால் வலி, உடல் சோர்வாக இருக்கும். ஒரு சிலருக்கு அடுத்த மாதவிடாய் வருவதற்கு முன்பாகவே இடையிலும் ரத்தப்போக்கு வரும்.

    காரணங்கள்: கருப்பை சளிக்கவசம் கருப்பை உள்ளுறுப்புகளில் வளருதல் (Endometriosis), கருப்பை தசையான மயோமெட்ரியத்தில் எண்டோமெட்ரியம் வளருதல் (Adenomyosis), கருப்பையில் வளரும் சாதாரண தசைக் கட்டிகள் (Fibroid uterus), சினைப்பையில் வளரும் நீர்க்கட்டிகள் (PCOD), சாக்கலேட் கட்டிகள் (Chocolate cyst), கருப்பை தசை கடினமடைதல் (Adenomyomas), பெண்மைக்குரிய ஹார்மோன்களான புரஜஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன் இவைகளின் ஒழுங்கற்ற செயல்பாடுகள், கருத்தடைக்காக வைக்கப்படும் காப்பர்-டி போன்ற உபகரணங்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு அதிகமாக இருப்பது போன்ற பல காரணங்களால் மாதவிடாய் காலங்களில் அதிகரித்த குருதிப்போக்கு காணப்படுகிறது. இன்னும் கருப்பை புற்றுநோயிலும் ரத்தப்போக்கு ஒரு அறிகுறியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. என்ன காரணத்தினால் அதிக ரத்தப்போக்கு ஏற்படுகிறது என்பதை தகுதியான மருத்துவரைப் பார்த்து பரிசோதனை செய்து அதற்கு ஏற்ப மருத்துவம் பார்ப்பது சிறந்தது.

    சித்த மருத்துவ தீர்வுகள்:

    1) திரிபலா சூரணம் ஒரு கிராம், அன்னபேதி செந்தூரம் 200 மி.கி., படிகார பற்பம் 100 மி.கி. அளவு எடுத்து காலை, மாலை இருவேளை தேனில் உட்கொள்ள வேண்டும்.

    2) கொம்பரக்கு சூரணம் ஒரு கிராம் எடுத்து, நெய் அல்லது தேனில் கலந்து காலை, மாலை என ஏழு நாட்கள் சாப்பிடவும்,

    3) திரிபலா சூரணம் ஒரு கிராம், அயப்பிருங்கராஜ கற்பம் 200 மி.கி, சங்கு பற்பம் 200 மி.கி. அளவு எடுத்து தேனில் காலை, மாலை இருவேளை ஏழு நாட்கள் உண்ணவும்.

    4) வாழைப்பூ வடகம் ஒன்று அல்லது 2 வீதம் காலை, இரவு சாப்பிட வேண்டும்,

    5) பூங்காவி செந்தூரம் 200 மி.கி. காலை இரவு இருவேளை சாப்பிடலாம்,

    6) இம்பூறல் மாத்திரை ஒன்று அல்லது 2 காலை, இரவு இருவேளை சாப்பிட்டு வர வேண்டும்.

    7) உணவில் வாழைப்பூ, மாதுளம்பழம், நாவல் பழம், அத்திப்பழம், கறிவேப்பிலை சாதம், முருங்கை கீரை, சிவப்பு தண்டுக்கீரை, செவ்வாழைப்பழம் இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • இன்றைய காலகட்டத்தில் வீட்டில் ஒருவருக்காவது நீரிழிவு உள்ளது.
    • எளிய யோகாசனங்களை 20 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

    வேலூர் சத்துவாச்சாரியில் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை உள்ளது. இங்கு சித்த மருத்துவராக டாக்டர் பிரியங்கா பணிபுரிகிறார். அவர் சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது? அதற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்து கூறியதாவது:-

    சர்க்கரை நோய் என்பது ஒரு வளர்ச்சிதை மாற்றக் கோளாறே அன்றி தனி நோய் அல்ல. சித்த மருத்துவத்தில் இதனை மதுமேகம் அல்லது நீரிழிவு என்று கூறுவர். பொதுவாக உணவு உட்கொண்ட பிறகு அதில் உள்ள சர்க்கரை சத்து கிளைகோலைசிஸ் (சர்க்கரை சிதைவு) என்னும் முறைப்படி குளுக்கோஸ் ஆக உடைகிறது. கணையம், வெளிப்பட்டுள்ள குளுக்கோஸ் அளவை பொறுத்து தானாகவே இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இதுவே ரத்தத்தில் உள்ள குளுக்கோசை எலும்பு, தசை முதலியவை உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது.

    நீரிழிவுக்கான காரணம்

    கணையத்திலிருந்து இன்சுலின் தேவைக்கும் குறைவாக சுரப்பது அல்லது முற்றிலும் உற்பத்தியாகாமல் இருப்பது அல்லது உடலில் உள்ள உயிரணு அதனை ஏற்காமல் மறுத்தல் என்ற காரணங்களால் நீரிழிவு நோய் உருவாகிறது.

    இன்றைய காலகட்டத்தில் வீட்டில் ஒருவருக்காவது நீரிழிவு உள்ளது. நோய்க்கான மருந்தும், மருந்தின் பக்க விளைவுகளை தவிர்க்க ஒரு மருந்து என மருந்துகளின் பட்டியல் நீள்கிறது. சரியான உணவு, மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவத்தில் இன்சுலின் சுரப்பை வைத்து இதனை டைப்-1 மற்றும் டைப்-2 என இருவகைப்படுத்துகின்றனர். குழந்தைகளுக்கு வரும் நீரிழிவு நோயை இளம் நீரிழிவு என வகுத்துள்ளனர். இன்சுலின் முற்றிலும் சுரக்கப்படாத நிலையிலேயே நவீன மருத்துவத்தின் ஆலோசனை தேவைப்படுகிறது.

    இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், இரவில் அதிக நாவறட்சி, அதிகப்பசி, நன்றாக உண்டாலும் உடல் நாளுக்கு நாள் மெலிவடைந்து கொண்டே வருதல். தோல் வறண்டு சுருங்கி காணப்படல், எப்போதும் களைப்பாக இருத்தல், எளிதில் ஆறாத புண், கால் மரத்து போதல், உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல் ஆகியவை நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

    கட்டுப்படுத்தும் முறைகள்

    நாம் உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். எளிய யோகாசனங்களை 20 நிமிடங்கள் செய்ய வேண்டும். கணையத்திற்கு ஆற்றலைத் தரும் யோகாசனங்களை தகுந்த வழிகாட்டுதலின்படி செய்யலாம். புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இருதயம் மற்றும் ரத்தநாளங்கள் பாதிப்படையும். மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதுடன், உடல் எடையும் கூடுகிறது.

    காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை அருந்தி வருவதால் உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் மற்றும் வியர்வையின் மூலம் வெளியேற்றப்படும்.

    சேர்க்க வேண்டிய உணவுகள்

    துவர்ப்பு மற்றும் கசப்பு தன்மை அதிகம் உள்ள காய்கனிகளை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். வாழைப்பூ, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், கொத்தவரங்காய், முருங்கை பிஞ்சு, இளநீர் முதலியவற்றை சேர்க்க வேண்டும். நாவல் பழத்தில் உள்ள ஜம்போலின் க்ளுக்கோசைட் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பயன்படுகிறது. நெல்லிக்காயில் உள்ள தாவர ரசாயனங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

    கருப்பு கவுனி, கருங்குருவை, காட்டுயானம், மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய அரிசிகளை சமைத்து உண்ணலாம். கோதுமை, சம்பா கோதுமை, கேழ்வரகு இவைகளால் செய்யப்பட்ட உணவுகளை உண்ணலாம். சர்க்கரை நோயாளிகள் முற்றிலும் இனிப்புத் தன்மை கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது தவறான கருத்தே. பனைவெல்லம், தேன் முதலியவற்றை மருத்துவரின் அறிவுரையின்படி தக்க அளவு அன்றாடம் உண்ணலாம்.

    தவிர்க்க வேண்டியவை

    மைதா, உயர் கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ள காரணங்களால் ரத்த சர்க்கரை அளவு மிகவும் அதிகமாகிறது. மைதாவில் உள்ள பிளீச்சிங் ஏஜென்ட் நச்சுத்தன்மை உள்ளது. கிட்டத்தட்ட 97 சதவீதம் நார்ச்சத்து கோதுமைகளில் இருந்து இழக்கப்பட்ட நிலையில் மைதா தயாரிக்கப்படுகிறது.

    பதப்படுத்தப்பட்ட சர்க்கரை சேர்ந்த உணவுகளையும், முதிர்ந்த பழங்களையும், அதிக மாவு சத்து நிறைந்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    கால்கள், பாதங்களை பராமரிக்க வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை நோய் கண்டறிதல் பரிசோதனையை செய்து கொள்வது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, உயர் ரத்த அழுத்த பரிசோதனை முதலியவற்றை செய்து கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் வரக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளதால் முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    எளிய மூலிகை மருத்துவம்

    வெந்தயம், பாகற்காய், நெல்லிக்காய், ஆவாரம் பூ, சீந்தில், சர்க்கரை கொல்லி வில்வம், மஞ்சள், பூண்டு, வேப்பிலை சாறு, துளசி, சோயாபீன்ஸ், வெங்காயம், பசலைக்கீரை, வெள்ளரி, இலந்தைபழம், முளைத்தானியங்கள் முதலியவை நல்ல பலன் அளிக்கும்.

    நடைப்பயிற்சி, யோகா பயிற்சி மேற்கொள்ளுதல் மூலமும், சித்த மருந்துகளை டாக்டரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது மூலமும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு காரணங்களால் வெண்புள்ளி வருகிறது.
    • இந்த பிரச்சனை மனச்சோர்வை தரும்.

    தோலின் எபிடெர்மிஸ் பகுதியில் உள்ள மெலனோசைட்ஸ் என்னும் செல்கள் தோலுக்கு நிறத்தை தருகின்ற 'மெலனின்' என்ற நிறமியை உருவாக்குகிறது. இந்த மெலனோசைட்ஸ் செல்கள் மெலனின் நிறமியை உருவாக்காமல் இருக்கும் நிலையை தான் 'வெண்புள்ளி' என்கிறோம்.

    இதற்கான காரணங்கள்: உடலின் நோய் எதிர்ப்பாற்றல், தவறுதலாக சொந்த செல்களை பாதிப்படைய செய்வதால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள மெலனோசைட்ஸ் மெலனின் நிறமியின் உற்பத்தியை நிறுத்துகிறது. இதை 'ஆட்டோ இம்யூன்' வகை எனக் கூறலாம். அடுத்து, வைட்டமின் பி குறைபாடுகள், தைராய்டு சுரப்பி நோய்கள், தீப்பட்ட காயங்களால் மெலனோசைட்ஸ் செல்கள் அழிவது போன்ற காரணங்களாலும் வெண்புள்ளி வருகிறது.

    இதற்கான சித்த மருத்துவம்: 1) கார்போகரிசி பசையை வெண்புள்ளி உள்ள இடங்களில் பூசி சிறிது நேரம் வெயிலில் நிற்க வேண்டும். 2) கருஞ்சீரகத்தை வறுத்து பொடி செய்து காலை, இரவு ஒரு கிராம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும். 3) கரிசாலை சூரணம் 1 கிராம், இருநெல்லி கற்பம் 100 மி.கி., அயபிருங்க ராஜ கற்பம் 100 மி.கி., பலகரை பற்பம் 200 மி.கி. ஆகியவற்றை மூன்று வேளை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா,

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • ரத்த அழுத்தம் ஒருவரது வயது, உடல்நிலை, பரம்பரை ஆகியவற்றை பொறுத்து மாறுபடுகிறது.
    • ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான இயற்கை மருத்துவ முறைகளை பார்க்கலாம்.

    ஒரு மனிதனின் சராசரியான ரத்த அழுத்த அளவாக 120/80 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு கீழாக செல்வது குறைந்த ரத்த அழுத்தம் என்றும், அதிகமானால் உயர் ரத்த அழுத்தம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம் ஒருவரது வயது, உடல்நிலை, பரம்பரை ஆகியவற்றை பொறுத்து மாறுபடுகிறது. ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கவும், ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதை குறைப்பதற்கான இயற்கை மருத்துவ முறைகளை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    செம்பருத்தி இதழ் 5, வெண் தாமரை இதழ் 5, எலுமிச்சை பழச்சாறு போன்றவைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி குடிக்கலாம்.

    சீரகம், கொத்தமல்லி போன்றவைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.

    வெண்தாமரை சூரணம் ஒரு டீஸ்பூன் காலை, இரவு சாப்பிடலாம்.

    சீரகம் சேர்ந்த அசைச்சூரணம் ஒரு டீஸ்பூன் வீதம் காலை, இரவு சாப்பிட வேண்டும்.

    இதயத்தை வலுப்படுத்த மருதம்பட்டை சூரணம் ஒரு கிராம் வீதம் மூன்று வேளை சாப்பிடலாம்.

    வெள்ளைப்பூண்டு 5 பல் எடுத்து சுட்டு அல்லது தண்ணீரில் வேக வைத்து சாப்பிடலாம்.

    தூக்கமின்மைக்கு ஒரு கிராம் கசகசாவை அரைத்து பாலில் கலந்து காய்ச்சி தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக குடிக்கலாம்.

    சின்ன வெங்காயம் 5 எடுத்து சிறு துண்டுகளாக்கி மோரில் கலந்து சாப்பிட்டு வர பல்லாண்டு வாழலாம்.

    • வாய்ப் புண் இருந்தால் சரியாக சாப்பிட முடியாது.
    • காரமான, சூடான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    பல்வேறு உடல் பிரச்சனைகளால் வாய்ப்புண் வருகிறது. வாய்ப் புண் இருந்தால் சரியாக சாப்பிட முடியாது. குறிப்பாக சூடாகவோ அல்லது காரமாகவோ சாப்பிட முடியாது. இதிலிருந்து மீள சித்த மருத்துகள் துணைபுரியும்.

    1) திரிபலா பொடி (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்)- இதை இளம் சூடான தண்ணீரில் கலந்து வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும்.

    2) நெல்லிக்காய் லேகியம் காலை, இரவு இருவேளை எடுக்க வேண்டும், இதில் வைட்டமின் சி ஏராளமாக இருப்பதால் விரைவில் வாய்ப்புண் ஆறும். ஏலாதி சூரணம் -1 கிராம், சங்கு பற்பம்-200 மிகி சேர்த்து நெய்யில் சாப்பிட வேண்டும்.

    3) வெங்கார மது மருந்தை வாய்ப்புண் உள்ள இடங்களில் போட வேண்டும்.

    மேலும், காரமான, சூடான உணவுகளை தவிர்க்க வேண்டும். உணவில் மணத்தக்காளி கீரை, பொன்னாங்கண்ணி கீரை, மாதுளம்பழம், நெல்லிக்காய், சுண்டை வற்றல், மோர் , தயிர், சின்ன வெங்காயம் இவைகளை அதிகளவில் எடுக்க வேண்டும். இரவு நெடுநேரம் கண்விழித்து டிவி, மொபைல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் உடல் சூடு அதிகரிக்கும்.

    • இன்றைய அவசர உலகில் தூக்கம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
    • சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

    தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு சித்த மருத்துவத்தின் மூலம் தீர்வு பெறலாம் என சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் தெரிவித்தார். வேலூரை சேர்ந்த சித்த மருத்துவரும், இம்ப்காப்ஸ் இயக்குனருமான டி.பாஸ்கரன் கூறியதாவது:-

    நம்மில் பலர் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று உடல்மீது அக்கறை காட்டுவோம். உடல் மட்டுமல்ல, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் என்பது பலருக்கு தெரியவில்லை. உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருந்தால்தான் ஒட்டுமொத்த செயல்பாடும் சிறப்பாக இருக்கும். அதற்கு தூக்கம் மிகவும் இன்றியமையாததாகும். இன்றைய அவசர உலகில் தூக்கம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி நன்மைகளை பெற்றுத்தந்தாலும், அதன் மூலம் பலர் தூக்கமின்றி தவிக்கிறார்கள்.

    மன அழுத்தம் அதிகரித்ததன் விளைவாக தூக்கம் வருவதில் சிரமம், ஆழ்ந்த தூக்கம் வருவதில் சிரமம், தூக்கத்தின்போது இடையிடையே கண் விழிப்பது என பிரச்சினை தொடர்கிறது. தூக்கமின்மைக்கு இதுபோன்ற மனரீதியான காரணங்கள் மட்டுமன்றி தைராய்டு பிரச்சினை, அதிக ரத்த அழுத்தம், நாள்பட்ட சர்க்கரை நோய், ஆஸ்துமா, நடுக்கு வாதம், பெண்களை பாதிக்கும் மெனோபாஸ் காலத்துக்கு பிறகு வரக்கூடிய ஹார்மோன் மாற்றம் என பல காரணங்களை சொல்லலாம். அதிக மதுப்பழக்கம், மன உளைச்சல், மனப்பதற்றம் போன்ற காரணங்களாலும்கூட தூக்கமின்மை ஏற்படுகிறது.

    தூக்கமின்மை பிரச்சினையானது மூளைக்கு போதுமான அளவு பிராணவாயு சேமிப்பு இல்லாததால் ஏற்படுகிறது. மனித மூளையில் 400 ஆயிரம் கோடி பிராணவாயு உள்ளதாக சித்த மருத்துவம் சொல்கிறது. அதில் ஏற்படும் பற்றாக்குறையால்தான் தூக்கமின்மை ஏற்படுகிறது. மெலடோனின் என்ற ஹார்மோனின் உற்பத்தி இரவில்தான் நடக்கும். அதன் உற்பத்தி குறைவதால் தூக்கமின்மை ஏற்படுகிறது என்று நவீன மருத்துவம் கூறுகிறது. சித்த மருத்துவத்தில் தியானம், பிராணயாமம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றின் மூலம் மெலடோனினை இயல்பாக உற்பத்தி செய்ய முடியும். அதற்காகத்தான் சித்த மருத்துவத்தில் உடல் நோய், உள்ள நோய் என இரண்டையும் இணைக்கும்விதமாக சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

    கீரை

    அதிலும் குறிப்பாக வில்வம், செம்பருத்தி போன்ற மூலிகைகளுக்கு அதற்கான அபூர்வ சக்தி இருக்கிறது. அமுக்கரா, சடா மஞ்சில் போன்றவற்றுக்கு தூக்கமின்மை பிரச்சினையை சரி செய்யும் சக்தி உள்ளது. எண்ணெய் குளியலுக்கு வாதத்தை சமநிலை செய்யும் தன்மை உள்ளது. எனவே, தவறாமல் வாரத்தில் 2 நாள் எண்ணெய் குளியல் செய்ய வேண்டும். ஜாதிக்காய் தூளை வெந்நீரில் கலந்து குடிப்பது, தேனில் குழைத்துச் சாப்பிடுவது மற்றும் இரவில் திரிபலா சூரணத்தை வெந்நீரில் கலந்து சாப்பிடுவது, அமுக்கரா சூரணத்தை பாலில் கலந்து சாப்பிடுவதும் தூக்கமின்மையை போக்கும். வல்லாரை கீரையை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம், பிரம்மி நெய் பயன்படுத்தலாம். தூக்கம் வர வேண்டுமென்றால் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதேநேரத்தில் தூக்கமின்மை பிரச்சினைக்காக தொடர்ந்து மருந்துகள் எடுக்கக் கூடாது. தூக்கமின்மை ஏன் ஏற்பட்டது என்ற மூலகாரணத்தை கண்டறிய வேண்டும். தூக்கமின்மை பிரச்சினை உள்ளவர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்களுக்கு எதனால் இந்தப்பிரச்சினை ஏற்பட்டது என்று கேட்டறிந்து மருத்துவம் செய்வது சிறந்த தீர்வு தரும்.

    மூலிகை தலையணை

    தூக்கமின்மை பிரச்சினையிலிருந்து விடுபட மூலிகைத் தலையணைகூட உதவுகிறது. நொச்சி இலை, வேப்பிலை, புங்கை இலை, மருதாணி இலை உள்ளிட்ட சுமார் 10 மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தலையணையில் தலை வைத்து இரவில் தூங்கினால் ஆழ்ந்த தூக்கம் வரும். குறிப்பாக இதில் சேர்க்கப்பட்டுள்ள மருதாணி இலை மற்றும் புங்கை இலை போன்றவை மனதை அமைதிப்படுத்தக்கூடியவை என்பதால் இந்த மூலிகைத் தலையணை நல்ல தீர்வு தரும். இது அல்லாமல் மருதாணிப்பூக்களை தலையணை அருகே வைத்து தூங்கினாலும் நிம்மதியான தூக்கம் வரும். வெள்ளைப்பூண்டு பற்களை நசுக்கி தலையணை அருகே வைத்தாலும் தூக்கம் வரும். ஆக்சிஜனை அதிகம் வரவழைக்கும் தாவரங்களை நாம் தூங்கும் அறையில் வைத்தாலும் தூக்கம் வரும்.

    உடல் சூடு

    தூக்கமின்மை பிரச்சினைக்கு உடல் சூடும்கூட காரணமாக இருக்கிறது. ஆகவே, உடல் சூடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிலரது உடல்வாகு சூடு நிறைந்து காணப்படுவதால் அவர்கள் எண்ணெய் குளியல் செய்வது நல்லது. இரவு தூங்கும்போது தொப்புளில் எண்ணெய் வைத்துக்கொண்டு தூங்கினால் சூட்டைக் குறைப்பதுடன் ஆழ்ந்த தூக்கம் வர உதவும். உள்ளங்கை மற்றும் கால் விரல்களில் மருதாணியை அரைத்துப்பூசினால் உடல் சூடு குறைவதுடன் தூக்கம் வரும். இரவு தூங்கச் செல்வதற்கும் முன் பாலில் பூண்டுப்பற்களை வேக வைத்து மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டாலும் தூக்கம் வரும்.

    கசகசாவை அரைத்து பாலில் கலந்து குடிப்பது, கசகசா துவையல் சாப்பிடுவதும் தூக்கம் வர உதவும்.

    இரவு உணவுடன் வேக வைத்த சின்ன வெங்காயத்தைச் சாப்பிடுவதும்கூட தூக்கமின்மை பிரச்சினையைப் போக்க உதவும். இதுபோன்று இன்னும் பல்வேறு எளிய முறைகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி தூக்கமின்மை பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, குரல் பாதிப்பு போன்றவை ஏற்படுவதுண்டு.
    • இதை குணப்படுத்த உதவும் சித்தமருந்துகள் பற்றி பார்ப்போம்:

    பருவ காலம் மாறும்போதும், புதிய ஊர்களுக்கு சென்று அங்குள்ள தண்ணீர் குடிக்கும்போதும், அங்குள்ள தட்பவெப்ப நிலை காரணமாகவும் தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, குரல் பாதிப்பு போன்றவை ஏற்படுவதுண்டு. இதை குணப்படுத்த உதவும் சித்தமருந்துகள் பற்றி பார்ப்போம்:

    ஆடாதோடை இலை 2, மிளகு 5 எடுத்து, பனை வெல்லம், நாட்டு சர்க்கரை, தேன் இவைகளில் ஏதாவது ஒன்றுடன் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

    சாம்பார் வெங்காயம் 5 எடுத்து நாட்டு வெல்லத்துடன் மென்று சாப்பிட வேண்டும்.

    பாலுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும்.

    முட்டையை ஆஃப் பாயில் செய்து அதனுடன் மிளகு, மஞ்சள், சீரகம் சேர்த்து சாப்பிட வேண்டும்.

    சிற்றரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி, கொத்தமல்லி, அதிமதுரம் இவைகளை சேர்த்து பொடித்த, பொடி சிறிதளவு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.

    பூண்டு சாறுடன் தேன் கலந்து அதை தொண்டையினுள் தடவி வர வேண்டும்.

    வெந்நீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும்.

    சித்த மருத்துவத்தில் தாளிசாதி வடகம் 1 அல்லது 2 மாத்திரை கடித்து சாப்பிட வேண்டும்.

    தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா,

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • மசாலா உணவை சாப்பிட்டாலும் இந்த பிரச்சனை வரும்.
    • இந்த பிரச்சனைக்கு சித்த மருத்துவத்தில் நிரந்தர தீர்வு உள்ளது.

    வழக்கமாக நாம் சாப்பிடும்போது உணவுடன் கொஞ்சம் காற்றையும் விழுங்கி விடுகிறோம். அது வயிற்றில் சேர்ந்து விடுகிறது. அதிலும் அவசர அவசரமாக உண்ணும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும் போது, காற்றடைத்த பானங்களை குடிக்கும்போது, அண்ணாந்து தண்ணீர் குடிக்கும்போது காற்று விழுங்கும் அளவு அதிகமாக இருக்கும்.

    வெங்காயம், முட்டைக்கோஸ், காலிபிளவர், பச்சைப்பட்டாணி, அவரை, எண்ணெய்யில் பொரித்த உணவுகள் சாப்பிடும்போது செரிமானத்தின் போது அதிகமான வாயு உருவாகிறது. மசாலா பொருட்கள், வயிற்றில் தங்கி உள்ள காற்றை வெளிப்படுத்துகிறது. இதற்கு கடைப்பிடிக்க வேண்டிய உணவுமுறைகள் மற்றும் சித்த மருந்துகள் பற்றி பார்ப்போம்.

    1) மோருடன் பெருங்காயம், சீரகம், சேர்த்து குடிக்க வேண்டும்,

    2) காலை-இரவு நேரத்தில் சீரகத்தண்ணீர் ஒரு டம்ளர் வீதம் குடிக்க வேண்டும்,

    3) சித்த மருத்துவத்தில் அஷ்டாதி சூரணம் ஒரு கிராம் வீதம் காலை, இரவு வெது வெதுப்பான வெந்நீரில் எடுக்க வேண்டும்.

    காலை, மதியம் வேளைகளில் சாப்பிட்ட உடன் ஒரு குறுநடை நடந்த பின்னர் தான் உட்கார வேண்டும். இரவு சாப்பிட்ட பிறகும் ஒரு குறுநடை நடந்து ஒரு மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும். இளஞ்சூடான வெந்நீர் குடிப்பது வயிறு பிரச்சினைகளுக்கு சிறந்தது. உணவில் மோர், தயிர், சுண்டை வற்றல், மணத்தக்காளி வற்றல், கருவேப்பிலை பொடி, பிரண்டைத் தண்டு துவையல் இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா,

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    ×