search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள் அவதி"

    • டெல்லி விமான நிலையத்தில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி.

    மீனம்பாக்கம்:

    டெல்லியில் கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.

    டெல்லி விமான நிலையத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சென்னை-டெல்லி இடையே தினமும் இண்டிகோ ஏர்லைன்ஸ் 22 விமானங்கள் இயக்கப்படும். இதில் 2 வருகை மற்றும் 2 புறப்பாடு என 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய 9 விமானங்களும், டெல்லியில் இருந்து சென்னை வரக்கூடிய 9 விமானங்களும் சுமார் 30 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக சென்று வந்தன.

    ஆனால் டெல்லி விமானங்கள் குறித்த விவரங்கள் பயணிகளுக்கு முன் கூட்டியே தெரிவிக்காததால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். சென்னை-டெல்லி இடையே செல்லக்கூடிய மற்ற விமான நிறுவன விமானங்கள் பாதிப்பின்றி இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பா.ஜ.க. ஆட்சியில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம், தேர்தல் முடிந்தவுடனே மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
    • இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.

    தமிழ்நாட்டில் சுங்க கட்டணம் உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    "நாடு முழுவதும் உள்ள 1228 சுங்கச்சாவடிகளில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, 5 முதல் 10 சதவிகிதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியதன் அடிப்படையில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயணக் கட்டணம் ரூபாய் 5 முதல் 20 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூபாய் 100 முதல் 400 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

    பா.ஜ.க. ஆட்சியில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம், தேர்தல் முடிந்தவுடனே மீண்டும் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருப்பது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    2023 டிசம்பரில் சி.ஏ.ஜி. அளித்த அறிக்கையில் ஒன்றிய நெடுஞ்சாலைத்துறையின் 7 திட்டங்களை ஆய்வு செய்ததில், ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி முறைகேடுகள் நடந்ததாக அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை எழுப்பின. ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு சி.ஏ.ஜி. தெரிவித்த முறைகேடுகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது தேர்தல் முடிந்தவுடனேயே தமிழகத்திலுள்ள 36 சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அப்படி திரும்பப் பெறவில்லையெனில், பாதிக்கப்பட்ட மக்களே அந்தந்த சுங்கச்சாவடிகளில் போராட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
    • கட்டண உயர்வு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த 1992-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    இந்நிலையில் மார்ச் 31 நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

    கடந்த ஏப்ரல் 1-ந்தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மக்களவை தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றுமுதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.

    அதன்படி மணகதி, கல்லக்குடி, வல்லம், தென்மாதேவி உள்பட 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஒரு முறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரையிலும் உயர்ந்துள்ளது.

    பரனூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.70, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.110, மாதாந்திர கட்டணம் ரூ.2,395. இலகுரக சரக்கு வாகனங்கள் சிற்றுந்துகளுக்கு ஒருமுறை பயணம் செய்ய ரூ.115, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.175, பஸ், சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.245, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.365 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    3 அச்சுகள் கொண்ட வர்த்தக வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.265, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.400 கட்டணம் ஆகும். 4 சக்கர, 6 சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.380, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.570 கட்டணம். கடும் கனரக கட்டுமான வாகனங்கள் மற்றும் கூடுதல் சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.465, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.695 கட்டணம் ஆகும்.

    உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாதம் ரூ.340 உத்தேச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுங்க சாவடியில் கட்டண உயர்வு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    • ரெயிலில் படுத்திருந்ததால் வாலிபர் அங்கும் இங்கும் உருண்டு கொண்டிருந்தார்.
    • பயணிகள் கழிவறைக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    அரக்கோணம்:

    சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்டிரலில் இருந்து புறப்பட்டது.

    இந்த ரெயிலில் ஏ.சி.பெட்டியின் கழிவறை அருகே வாலிபர் ஒருவர் படுத்திருந்தார். ஓடும் ரெயிலில் படுத்திருந்ததால் வாலிபர் அங்கும் இங்கும் உருண்டு கொண்டிருந்தார்.

    இதனால் பயணிகள் கழிவறைக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். ரெயில் பயணிகள் வாலிபரை எழுப்ப முயன்றனர். முடியாததால் இதுகுறித்து டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் புகார் அளித்தனர்.

    டிக்கெட் பரிசோதகர் வாலிபரை எழுப்ப முயன்றார். அப்போது தான் அவர் மது போதையில் படுத்திருந்தது தெரிந்தது.

    இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரெயில் அரக்கோணம் வந்ததும், தயாராக இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கழிவறையின் அருகே படுத்திருந்த போதை வாலிபரை தூக்கி வெளியே இழுத்து பிளாட்பாரத்தில் போட்டனர்.

    இதனால் ரெயில் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். போதை வாலிபர் எழுந்திருக்க முடியாமல் பிளாட்பாரத்திலும் படுத்துக்கொண்டு உருண்டார்.

    மேலும் அந்த நபர் யார்? எங்கிருந்து பயணம் செய்கிறார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வந்தே பாரத் ரெயில் 40 நிமிடம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நின்றன.
    • ரெயில்வே ஊழியர்கள் சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கோளாறை சரி செய்தனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள மேல்பாக்கம் ரெயில் நிலையத்தில் இன்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

    இதனால் சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், கோயமுத்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை 20 நிமிடம் காலதாமதமானது.

    மேலும் அந்த வழியாக வந்த வந்தே பாரத் ரெயிலும் 40 நிமிடம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நின்றன.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கோளாறை சரி செய்தனர்.

    அதன் பின்னர் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக அதன் வழித்தடத்தில் இயக்கப்பட்டன.

    இதனால் ரெயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    • மின்சாரத்தால் இயங்கி வந்த ரெயிலில் திடீரென்று மின்சார இணைப்பு கிடைக்காததால் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது.
    • நெல்லிக்குப்பம் ரெயில் நிலையத்திற்கு சுமார் 25 நிமிடம் காலதாமதமாக சென்றது.

    கடலூர்:

    மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலூர், நெல்லிக்குப்பம் வழியாக பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியில் பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று நடுவழியில் நின்றது. இதனால் அதிர்ச்சிடைந்த பயணிகள் மற்றும் ரெயில் டிரைவர் கீழே இறங்கி பார்த்தனர். பின்னர் ரெயில் டிரைவர் மற்றும் ஊழியர்கள் ரெயில் நின்றதற்கான காரணத்தை உடனடியாக பார்வையிட்டனர். அப்போது மின்சாரத்தால் இயங்கி வந்த ரெயிலில் திடீரென்று மின்சார இணைப்பு கிடைக்காததால் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே வெள்ளகேட், கருப்பு கேட், காராமணிக்குப்பம், நெல்லிக்குப்பம் போன்ற பகுதிகளில் ரெயில் வருவதற்காக கேட் மூடப்பட்டிருந்தது.

    ஆனால் நடுவழியில் திடீரென்று ரெயில் நின்றதால் சிக்னல் கிடைக்காமல் ரெயில்வே கேட்டை திறக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து நான்கு பகுதிகளிலும் நீண்ட நேரமாக பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் பரிதவித்து காத்துக் கொண்டிருந்தனர். மேலும் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலை ஓரத்தில் நின்று நடுவழியில் திடீரென்று நின்ற ரெயிலுக்கு வேறு ஏதேனும் பிரச்சனையா? என பார்த்துக் கொண்டிருந்தனர். சுமார் 20 நிமிடம் ரெயில்வே ஊழியர்கள் என்ஜின் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு ரெயிலை இயங்க வைத்தனர். இதனை தொடர்ந்து நெல்லிக்குப்பம் ரெயில் நிலையத்திற்கு சுமார் 25 நிமிடம் காலதாமதமாக சென்றது.

    • வெள்ளகோவிலில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி வேலை செய்கின்றனர்.
    • ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.

    வெள்ளகோவில்: 

    வெள்ளகோவில், திருப்பூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். வெள்ளகோவிலில் 200-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன, விசைத்தறிக்கூடங்கள், ஆயில் மில்கள், பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. வெள்ளகோவிலில் பல ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தங்கி வேலை செய்கின்றனர். வெள்ளகோவில் வழியாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருப்பூர், ஊட்டி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. விசேஷ தினங்களில் பயணிகளுக்கு போதிய பஸ் வசதி இருப்பதில்லை.

    இதனால் மணிக்கணக்கில் பயணிகள் காத்திருந்து கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. நீண்ட நேரத்திற்கு பிறகு வரும் பஸ்சில் பயணிகள் நின்று கொண்டும், படியில் தொங்கியவாறும் பயணிக்கின்றனர். அதைத் தொடர்ந்து வரும் பேருந்துகள் ஒரே நேரத்தில் ஒன்றின் பின் ஒன்றாக போதிய பயணிகள் இல்லாமல் ஒரே வழித்தடத்திற்கு செல்கின்றன. இதனால் போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் வெள்ளகோவில் பஸ் நிலையத்தில் போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஒரு கண்காணிப்பாளரை நியமனம் செய்து பயணிகளின் தேவைக்கேற்ப பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமாறு பயணிகள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளகோவில் நகராட்சி பஸ் நிலைய வளாகத்தில் போக்குவரத்து கழகத்திற்கு என்று தனியாக ஒரு அறையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறக்கி விடப்பட்டனர்.
    • ெரயிலை பிடிக்க வேண்டும் என கூறி டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி அரசு பஸ் சென்றது. நேற்று இரவு 9 .20 மணியளவில் விக்கிரவாண்டி டோல் பிளாசாவை கடக்க முயன்ற போது சுங்கவரி செலுத்தாததால் விழுப்புரம் நோக்கி செல்லவிடாமல் அந்தபஸ் நிறுத்தப்பட்டது. பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறக்கி விடப்பட்டனர்.இதனால் பஸ்சில் வந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து மாற்று பஸ்சில் செல்ல முடியாமல் தவித்தனர்.

    மேலும் பஸ்சில் வந்த பயணிகள் விழுப்புரம் ெரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டம் நோக்கி செல்லும் ெரயிலை பிடிக்க வேண்டும் என கூறி டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடத்திற்கு பிறகு இரவு 10.05 மணிக்கு விழுப்புரம் நோக்கி சென்ற வேறு அரசு பஸ்சில் பயணிகள் ஏறி சென்றனர்.இதனால் டோல் பிளாசா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • பஸ்நிலையத்தை விரிவுபடுத்தும் பணி

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழமை வாய்ந்தது வாலாஜா நகரம் ஆகும். மேலும் தமிழ்நாட்டின் முதல் நகராட்சி என்ற பெருமையும் உடையது.

    வர்த்தக நகரமாகவும் விளங்கி வருகிறது. சிறப்புகள் வாய்ந்த வாலாஜா நகரத்திற்கான பஸ் நிலையம் நகரின் மையப்பகுதியில் வாலாஜா நகராட்சி அலுவலகத்திற்கு அருகிலேயே உள்ளது.

    சிறிய அளவிலேயே இருந்தாலும் இந்த பஸ் நிலையத்தின் வழியே தான் சென்னை, திருத்தணி, காஞ்சிபுரம், சோளிங்கர், அரக்கோணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கான பஸ்கள் வந்து செல்கிறது.

    சுற்றுப்புற கிராமங்களுக்கான அனைத்து பஸ்களும் இந்த பஸ் நிலையத்திற்கு வருவதால் கிராமங்களிலிருந்து வேலை நிமித்தமாகவும், அத்தியாவசிய தேவைகளுக்காகவும் வரும் பொதுமக்கள், பயணிகள் இந்த பஸ் நிலையத்திற்கு அதிகம் வந்து செல்கின்றனர்.

    இவ்வாறு பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் பஸ் நிலையத்திற்குள் இருந்த கடைகளின் முன்பாக வெயில், மழை காலங்களில் ஒதுங்கி நின்று காத்திருந்து பஸ் ஏறி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் வாலாஜா நகராட்சி சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.2 கோடியே 8லட்சம் மதிப்பில் பஸ் நிலையத்தை விரிவுபடுத்தி புனரமைக்கும் பணி மேற்கொள்ள முடிவு செய்து பூமி பூஜையும் போடப்பட்டது.

    பஸ்நிலையத்தை விரிவுபடுத்தும் பணிக்காக பஸ் நிலையத்திலிருந்த அனைத்து கடைகளும் இடிக்கப்பட்டு விட்டதால் பொதுமக்கள் வெயிலுக்கோ, மழைக்கோ ஒதுங்கி நிற்க கூட இடமில்லாமல் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் நின்றபடியே காத்திருந்து பஸ் ஏறி செல்கின்றனர்.

    மழைக்காலம் தொடங்கி விட்டதால் அவ்வப்போது திடீரென மழை பெய்து வருகிறது. இதனால் மழையில் நனையாமல் ஒதுங்கி நிற்க கூட இடமில்லாமல் பொதுமக்கள், பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பஸ் நிலையத்தை பார்வையிட்டு பஸ் நிலைய பணிகள் முடிவடையும் வரை பொதுமக்கள், பயணிகள் பயன் பெறும் வகையில் தற்காலிக நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பயணிகள் நிழல்குடை இல்லாததால் சாலையோரம் நின்றே பஸ்களை கைகாட்டி நிறுத்தி ஏறுகின்றனர்.
    • வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அருகே உள்ள வெங்கம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பஸ் நிறுத்தத்தில் நிழல்குடை இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை, திருவான்மியூர், பாண்டிச்சேரி, மதுராந்தகம், கூவத்தூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு வந்து செல்லும் ஒப்பந்த ஊழியர்களின் முக்கியமான பஸ் நிறுத்தம் இது.

    பயணிகள் நிழல்குடை இல்லாததால் சாலையோரம் நின்றே பஸ்களை கைகாட்டி நிறுத்தி ஏறுகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றர். பயணிகளின் பாதுகாப்பு கருதி நெடுஞ்சாலை துறையினர் அப்பகுதியில் நிழல்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், பஸ் பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பழனி ரெயில்நிலையத்தில் கடந்த சில நாட்களாக வாகன நிறுத்தம் செயல்பாடு இல்லாமல் உள்ளது.
    • வாகன நிறுத்தம் பூட்டி கிடப்பதால் மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற நிலையில் நிறுத்திச் செல்கின்றனர்.

    பழனி:

    பழனி வழியாக கோவை, பாலக்காடு, திருச்செந்தூர், திருவனந்தபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. இந்த ரெயில்களில் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்று வட்டார பகுதி மக்கள் என தினமும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர்.

    குறிப்பாக பழனி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் நிறுவன பணியாளர்கள் திண்டுக்கல், உடுமலை செல்லும்போது தங்கள் வாகனங்களை பழனி ரெயில்நிலைய வாகன நிறுத்தத்தில் விட்டுவிட்டு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் பழனி ரெயில்நிலையத்தில் கடந்த சில நாட்களாக வாகன நிறுத்தம் செயல்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் அங்கு மோட்டார் சைக்கிள்களை நிறுத்த முடியாமல் ரெயில்நிலையத்தின் வெளிப்பகுதியில் பயணிகள் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

    வாகன நிறுத்தம் பூட்டி கிடப்பதால் மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற நிலையில் நிறுத்திச்செல்கின்றனர். இதனால் வாகன திருட்டு அபாயமும் உள்ளது. எனவே ரெயில்நிலையத்தில் வாகன நிறுத்த வசதியை மீண்டும் கொண்டுவர நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, வாகன நிறுத்தத்துக்கான ஒப்பந்தம் இன்னமும் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. எங்களின் மோட்டார் சைக்கிள்களை ரெயில்நிலையத்தின் வெளிப்பகுதியில் நிறுத்தி வருகிறோம். எனவே மீண்டும் வாகன நிறுத்தம் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

    • கடந்த 1 மணி நேரத்திற்கும் மேலாக ரெயிலை நிறுத்தி வைத்திருப்பதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
    • எண்ணூர் ரெயில் நிலையத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை-கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் பழுது காரணமாக எண்ணூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எண்ணூர் ரெயில் நிலையத்தில் உயர்மின் அழுத்த கோளாறு காரணமாக புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 1 மணி நேரத்திற்கும் மேலாக ரெயிலை நிறுத்தி வைத்திருப்பதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ரெயில் சேவை பாதிப்பால் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அலுவலகம் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் பொன்னேரி ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எண்ணூர் ரெயில் நிலையத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

    கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×