search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்குவாரி"

    • லாரிகளை மடக்கி பொதுமக்கள் வாக்குவாதம்
    • அதிகாரிகள் உத்தரவின் பேரில் கலைந்து சென்றனர்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை அடுத்த முசிறி கிராமத்தில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரியிலிருந்து லாரிகள் மூலம் அதிக பாரத்தில் கற்களை ஏற்றிக்கொண்டு முசிறி-வாலாஜாப்பேட்டை சாலையில் செல்வதாக கூறப்படுகிறது.இதனால் முசிறி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் கற்கள் மேலே விழுமோ என்ற அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லாததால், நேற்று கற்களை ஏற்றி கொண்டு வந்த லாரிகளை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் அதிக பாரம் ஏற்றி வந்த இரு லாரிகளை பறிமுதல் செய்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அளித்த உத்தரவின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கல் குவாரியில் அதிக அளவில் விதிமீறல்கள் உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் துங்காவி பகுதிக்கு வந்து உடுமலை-தாராபுரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    உடுமலை :

    மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பல கல் குவாரிகளில் விதி மீறல்கள் இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் மடத்துக்குளத்தையடுத்த துங்காவி மலையாண்டிபட்டினம் பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் அதிக அளவில் விதிமீறல்கள் உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை கல்குவாரிக்கு சென்ற 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனால் சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் துங்காவி பகுதிக்கு வந்து உடுமலை-தாராபுரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கல் குவாரியில் கற்களை உடைக்க, விதிகளை மீறி அதிக சக்தி வாய்ந்த வெடி வைக்கப்படுகிறது.மேலும் அனுமதியற்ற பகுதிகளிலும் தொடர்ச்சியாக அதிக ஆழத்தில் கற்கள் எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் இரவு பகலாக கனரக வாகனங்கள் தொடர்ந்து அதிக வேகத்தில் இயக்கப்படுகிறது.குறிப்பாக இரவு நேரத்தில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.இதனால் ரோடு முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி விட்டது. மேலும் லாரிகளில் அதிக அளவில் கற்கள் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.மேடு பள்ளங்களில் லாரி ஏறி இறங்கும்போது கற்கள் ரோட்டில் விழுகிறது.

    இதனால் ரோட்டில் செல்லும் பொதுமக்களுக்கு உயிருக்கு உத்தரவாதமற்ற சூழல் நிலவுகிறது.இதுவரை கற்கள் விழுந்து பலர் காயமடைந்துள்ளனர்.தோள்பட்டையில் கல் விழுந்து பலத்த காயமடைந்தவரைப் பற்றி நிர்வாகத்தினரிடம் கூறிய போது,தோளில் தானே விழுந்தது.தலையில் விழவில்லையே என்று அலட்சியமாக பதில் சொல்கின்றனர். விதிமீறல்கள் குறித்து தாசில்தார்,ஆர்டிஓ, கலெக்டர், கனிமவளத்துறை என அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தண்ணீர் லாரியை ஓட்டி வந்த டிரைவர்,பிரேக் பிடிக்கலை என்று கூச்சலிட்டு எதிரே வருபவர்களை விலகச் சொல்லியபடியே வந்திருக்கிறார். அப்போது எதிரில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஒருவர் முட்புதருக்குள் வண்டியை விட்டதால் உயிர் தப்பினார்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால் பல மணி நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வரவில்லை.எனவே வேறு வழியில்லாமல் சாலை மறியலில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே கல் குவாரியில் ஆய்வு செய்து விதி மீறல்களைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழுதடைந்த ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும்.கல் குவாரிக்கு இயக்கப்படும் வாகனங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.பொதுமக்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க வேண்டும்'என்று பொதுமக்கள் கூறினர்.சம்பவ இடத்துக்கு தாசில்தார் உட்பட உயர் அதிகாரிகள் யாரும் வராத நிலையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • அத்துமீறி குவாரிக்குள் நுழைந்து லாரியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • பல்லடம் போலீசில் புகார் செய்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

    இந்நிறுவனத்தின் லாரி குவாரியில் இருந்து மண் எடுத்து வரும்போது அவிநாசியை சேர்ந்த விஜயகுமார் ,சக்திவேல், விஜயன், கணேஷ் , மகாசாமி உள்ளிட்ட 5 நபர்கள் அத்துமீறி குவாரிக்குள் நுழைந்து லாரியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக குவாரி மேற்பார்வையாளர் திருநாவுக்கரசு பல்லடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • விவசாயி விஜயகுமார் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • கல்குவாரி நிறுவனம் விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்குவதாக கூறி உண்ணாவிரத்தை தொடங்கியுள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள இச்சிப்பட்டி ஊராட்சி கொத்துமுட்டிபாளையத்தில் உள்ள தனியார் கல்குவாரி நிறுவனம் அரசின் சட்டவிதிமுறைகளை மீறி இயங்கி வருவதாக கூறி கடந்த 7 நாட்களாக அப்பகுதியை சேர்ந்த விவசாயி விஜயகுமார் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரிடம் பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால், பல்லடம் மாசுக்கட்டுபாடு வாரிய உதவி பொறியாளர் வனஜா உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    இந்தநிலையில் அதன் அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் புதியதாக உரிமம் வழங்கப்பட்டு மண் மட்டுமே தோண்டி எடுக்கப்பட்டு வரும் தனியார் கல்குவாரி நிறுவனம் விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்குவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து தனியார் கல்குவாரி நிறுவனத்தினர் கூறுகையில் ,அரசின் விதிமுறைகளை பின்பற்றி தான் கல்குவாரி உரிமம் வழங்கப்பட்டு. தற்போது குழி எடுத்து மண் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் ஏரி அமைக்கப்பட்டு அதில் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

    தரிசாக இருக்கும் இடங்களில் மரக்கன்று நடப்பட்டுள்ளது.பாறை எடுக்க 6 மாத காலங்கள் ஆகும். இந்தநிலையில், தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
    • தாசில்தார் மற்றும் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,பல்லடம் ஒன்றியம் ,இச்சிப்பட்டி ஊராட்சி -கொத்துமுட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40).இவர் கடந்த மாதம் 30-ந்தேதி வீட்டின் முன்பு கூடாரம் அமைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.இவர் கொத்துமுட்டிபாளையம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி இன்று (செவ்வாய்க்கிழமை) 8-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று ( திங்கட்கிழமை ) தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் , மற்றும் பல்வேறு இயக்கங்கள் , விவசாயிகள்,பொதுமக்கள் இணைந்து கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி கல்குவாரியில் குதிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர் .இதனைத் தொடர்ந்து நேற்று காலை விஜயகுமார் வீட்டில் பல்லடம் தாசில்தார் நந்தகோபால் மற்றும் போலீசார் ஆகியோர் கல்குவாரியில் குதிக்கும் போராட்டத்திற்கு தயாராக இருந்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் .பின்னர் சாமளாபுரம் வருவாய்த்துறை அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல்லடம் டி.எஸ்.பி, கோட்டாட்சியர், பல்லடம் தாசில்தார், மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் முன்னிலையில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    அப்போது விவசாயிகள் அதிகாரிகளிடம் "கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்" என தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் விவசாயிகளிடம் "கல்குவாரியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது,ஆய்வின் அறிக்கையின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தனர். அதிகாரிகள் "கல்குவாரியை ரத்து செய்யப்படும்"என உத்திரவாதம் அளிக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் விவசாயி விஜயகுமாரின் வீட்டில் இருந்து கல்குவாரியை நோக்கி கல்குவாரியில் குதிக்கும் போராட்டத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.பின்னர் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.இதனால் போலீசாருக்கும் ,விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.

    கல்குவாரிக்கு செல்லும் வழியில் போலீசார் பேரிகார்டு வைத்திருந்தனர். இதனால் கல்குவாரியில் குதிக்கும் போராட்டத்திற்கு ஊர்வலமாக சென்ற விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் தர்ணா வில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பல்லடம் டி.எஸ்.பி.விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது தர்ணாவில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் போலீசாரிடம்" தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்கங்கள், பல்வேறு இயக்கங்கள் இணைந்து வருகிற 9-ந்தேதி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விஜயகுமாருக்கு ஆதரவாக 25 விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்குவதாக தெரிவித்து விட்டு சென்றனர். 

    • 6-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
    • வீட்டின் முன்பு கூடாரம் அமைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்பல்லடம் ஒன்றியம் ,இச்சிப்பட்டி ஊராட்சி கொத்துமுட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40).இவர் கடந்த 30-ந்தேதி வீட்டின் முன்பு கூடாரம் அமைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.இவர் கொத்துமுட்டிபாளையம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி இன்று 6-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வருவாய்த்துறை அதிகாரிகள் , கனிமவளத்துறை அதிகாரிகள், மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பல்லடம் ஒன்றியம் ,கொத்துமுட்டிபாளையம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் விதிகளை மீறி கல்குவாரி செயல்படுகிறதா என ஆய்வு செய்தனர். பின்னர் ஆய்வு முடிவடைந்த பின்னர் பல்லடம் தாசில்தார் நந்தகோபால் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி விஜயகுமாரிடம் " கல்குவாரியில் ஆய்வு செய்துள்ளோம்.ஆகவே உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். எனினும் பேச்சுவார்த்தையில் சமரசம் அடையாத விஜயகுமார் "கோடங்கிபாளையம்பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்தார். தற்போது தொடர்ந்து 6-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    சமீபத்தில் பல்லடம் எம்.எல்.ஏ.,எம்.எஸ்.எம்.ஆனந்தன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி விஜயகுமாரை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் விவசாயி விஜயகுமாரின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாளை 5-ந்தேதி( திங்கட்கிழமை ) தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் விவசாயிகள் இணைந்து கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் விவசாயிகள் குதிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குவாரிகள், ஜல்லி உற்பத்தி நிலையங்கள், தார் கலவை தொழிற்சாலைகள் ஆகியவற்றின் முறைகேடுகள்.
    • சட்டமீறல்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்திட வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் தாசில்தார் நந்தகோபால் மற்றும் மாவட்ட மாசுக்கட்டுப்பாடு சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் வனஜா ஆகியோரிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;

    பல்லடம் தாலூக்கா கோடங்கிபாளையம், இச்சிப்பட்டி, சாமளாபுரம், பூமலூர், 63 வேலம்பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள குவாரிகள், ஜல்லி உற்பத்தி நிலையங்கள், தார் கலவை தொழிற்சாலைகள் ஆகியவற்றின் முறைகேடுகள், சட்டமீறல்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், மனுதாரர், மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரையும் உள்ளடக்கி ஆய்வுக் குழு அமைத்து முறைகேடுகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சட்ட விரோதமாக கல்குவாரி இயங்கி வருவதாக பொதுமக்கள் புகார்.
    • புதிய குவாரிகளுக்கு அங்கு அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு வட்டம் அங்கேரிப்பாளையம் எம்.எஸ்.எம். மணி நகரில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-எங்கள் பகுதியில் குடிநீர், தார்ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகிறோம்.

    எங்கள் பகுதியில் இருந்த பாறைகுழியை மூடியதற்கு பிறகு குப்பை கழிவுகளை எங்கே கொட்டுவது என்று திண்டாடி வருகிறோம். தெருக்களில் மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டியும் அமைக்கப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. சாலைகள் பள்ளம் மேடாக உள்ளது. வாகனங்களில் செல்ல முடியவில்லை. இப்படியாக கடந்த 15 வருடங்களாக அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிட்ம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே இந்த பகுதியில் போதிய அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • இக்கல் குவாரி அமையவுள்ள இடத்துக்கு 300 மீட்டா் சுற்றளவில் குடியிருப்புகள் இல்லை என்று சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கொடுமணல் அகழ்வாய்வு கூடம், விஜயமங்கலம் சமணா் கோயில்கள் ஆகியவை இருப்பதை அறிக்கையில் மறைத்துள்ளதாக சுற்றுச்சூழல் செயல்பாட்டாளா்கள் மீது பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள மொரட்டுப்பாளையத்தில் தனியாா் கல் குவாரி மற்றும் கிராவல் குவாரி அமைப்பது தொடா்பான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.ஊத்துக்குளி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இக்கல் குவாரி அமையவுள்ள இடத்துக்கு 300 மீட்டா் சுற்றளவில்கு டியிருப்புகள் இல்லை என்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் குவாரி அமையவுள்ள இடத்தில் இருந்து 300 மீட்டா் தொலைவுக்குள் 15 வீடுகள் உள்ளன.மேலும், 15 கிலோ மீட்டா் சுற்றளவில் அகழ்வாய்வு இடங்கள், தொல்லியல் சின்னங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொடுமணல் அகழ்வாய்வு இடம், விஜயமங்கலம் சமணா் கோயில்கள் ஆகியவை இருப்பதை அறிக்கையில் மறைத்துள்ளதாக சுற்றுச்சூழல் செயல்பாட்டாளா்கள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

    மேலும்இந்தப் பகுதியில் கல் குவாரி அமைக்கக் கூடாது என்று எதிா்ப்பு தெரிவித்தனா்.இதையடுத்து, கல் குவாரி அமைப்பது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆய்வு நடத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்தாா்.கூட்டத்தில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் சரவணகுமாா், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் முகிலன், சூழலியல் செயல்பாட்டாளா் பாரதி, ஊா் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    ×