search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ள அபாய எச்சரிக்கை"

    • திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காவிரியில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது.
    • வெள்ள அபாய எச்சரிக்கை உள்ள காலங்களில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தடை.

    காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் ஆற்றில் இறங்கி நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அ.தி.பரஞ்ஜோதி தகவல் வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஈரோடு மாவட்டத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழுள்ள காவிரி ஆற்றங்கரை அருகில் அமைந்துள்ள கீழ்கண்ட திருக்கோயில்களில் வெள்ள அபாய எச்சரிக்கையினை தொடர்ந்து பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

    பவானி. அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில். கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் திருக்கோயில், காங்கேயம்பாளையம், அருள்மிகு நட்டாட்ரீஸ்வரர் திருக்கோயில், நஞ்சைகாளமங்கலம், அருள்மிகு மத்தியபுரிஸ்வரர் கல்யாண வரதராஜ பெருமாள் அருள்மிகு குலவிளக்கம்மன் திருக்கோயில், அம்மாபேட்டை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோயில், ஊஞ்சலூர், அருள்மிகு மாரியம்மன், செல்லாண்டியம்மன், பாசூர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நஞ்சை கிளாம்பாடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் மற்றும் காவிரி ஆற்றங்காரையின் அருகே உள்ள சிறிய திருக்கோயிலுக்கு வரும் பக்கதர்கள் காவிரியில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது.

    மேலும், எதிர்வரும் 03.08.2024 மற்றும் 04.08.2024 ஆகிய தேதிகளில் ஆடி 18 மற்றும் ஆடி அமாவாசை ஆகிய தினங்கள் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை உள்ள காலங்களில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காவிரியில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • மதியம் நிலவரப்படி 20 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • நாளை காலைக்குள் மேட்டூ அணை தனது முழுகொள்ளளவை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

    இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 117.38 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 89.38 டிஎம்பியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. 1,21,934 கனஅடியாக குறைந்துள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து நேற்று மாலை டெல்டா பாசனத்திற்காக 12 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டது.

    அதை படிப்படியாக உயர்த்தி இன்று காலை 11 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. மதியம் நிலவரப்படி 20 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக காவி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதே நிலையில் நீர்வரத்து நீடித்தால் இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் மேட்டூர் அணை தனது முழுகொள்ளளவை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    அணையின் பாதுகாப்பு கருதி கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றின் வழியாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    • தென்மேற்கு பருவமழை கொட்டி வருகிறது.
    • கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு, மடிக்கேரி, மைசூரு, மாண்டியா மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டுகிறது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதில் கர்நாடகம் மற்றும் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் காவிரி ஆற்றின் குறுக்கே மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணை தனது முழுகொள்ளவை எட்டிவிட்டது.

    கே.ஆர்.எஸ். அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி உயரம் ஆகும். தற்ேபாது 123.34 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 66 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    அதன்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நேற்று 1 லட்சத்து 31 ஆயிரத்து 234 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து இன்று 1 லட்சத்து 30 ஆயிரத்து 867 கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் சீறிப்பாய்ந்தபடி காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.

    அதே போல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே 84 அடி நீர்மட்டம் உயரம் உள்ள கபினி அணை கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே தனது முழுகொள்ளளவையும் எட்டிவிட்டது. இந்த அணையில் 82.05 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த அணைக்கு 32 ஆயிரத்து 867 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி 35 ஆயிரம் கன அடி நீர் கபிலா ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபிலா ஆற்று தண்ணீர் டி.நரசிப்புரா அருகே திருமாகூடலு பகுதியில் காவிரியில் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வருகிறது.

    இன்று காலை 2 அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரத்து 867 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் கரைபுரண்டபடி தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நீரானது தமிழக-கர்நாடகா எல்லையான பிலிகுண்டு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று இரவு 1 லட்சத்து 41 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    தொடர்ந்து ஒகேனக்கல்லில் இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள பெருக்கு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், உள்ளிட்ட அருவிகள் தெரியாத வகையில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    மேலும் காவிரி ஆற்றங்கரையோரமுள்ள பகுதிகளான முதலை பண்ணை, சத்திரம், நாகர்கோவில், ஊட்டமலை, தளவகாடு ஆகிய பகுதிகளில் கரைகளை தொட்டு சென்று தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது. இந்த பகுதிகளில் தண்ணீர் வீடுகளில் சூழ்ந்து காணப்படுவதால், அங்குள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாற்று இடம் செல்ல முடியாதவர்களை ஒகேனக்கல்லில் உள்ள தனியார் மண்டபங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்கவும் அருவிகளில் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் தடை நீடித்து வருகிறது. மேலும் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், காவிரி கரையோரப் பகுதிகளில், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல்லில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலுமாக அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகளை போலீசார் சோதனை சாவடியிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் இரவு அணைக்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று மதியம் 1 லட்சத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை நேற்று 71-வது முறையாக 100 அடியை எட்டியது.

    நேற்று இரவு 1 லட்சத்து 23 ஆயிரத்து 184 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1 லட்சத்து 34 ஆயிரத்து 115 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 107.69 அடியாக உயர்ந்தது. நேற்று காலை முதல் இன்று காலை வரை ஒரே நாளில் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதனால் அணையில் தண்ணீர் கடல் போல காட்சி அளிக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

    சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழாவை (ஆடி 18) மக்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கு இதுவரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் வருகிற 3-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா நடைபெற உள்ளது.

    இதையொட்டி மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் ஆகஸ்டு 3-ந் தேதி வரை ஒரு வார காலத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதன்படி இன்று மேட்டூர் அணையில் இருந்து ஆடிப்பெருக்குக்காக வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1.65 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும், ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் கிருஷ்ணகிரி (பிலிகுண்டு), தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்ட கலெக்டர்களிடம் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் காவிரி கரையோர பகுதிகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    அதன்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வருவாய்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் காரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர். 

    • கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை.
    • தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்.

    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளும் தனது முழு கொள்ளளவை எட்டியது.

    கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 57 ஆயிரத்து 706 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது.

    இதனால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் நாமக்கல் பள்ளிப்பாளையம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    எந்த நேரத்திலும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால், கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தொடர்ந்து மழை பெய்வதால் அணைக்கு தொடர் நீர்வரத்து உள்ளது.
    • நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்ட த்தில் பி.ஏ.பி.பாசனத்தி ட்டத்தின்கீழ் அமைந்துள்ள ஆழியாறு அணைக்கட்டு 120 அடி உயரம்கொண்டது. இங்கு 3864 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும்.

    ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் சேகரிக்கப்படும் தண்ணீர் பழைய-புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகள் மற்றும் குடிநீர் ஒப்பந்தப்படி கேரளாவுக்கும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் கடந்தாண்டு பருவமழை கைகொடுக்காததால் ஆழியாறு அணை நிரம்பவில்லை. ஆனால் இந்தாண்டு நவமலை, வால்பாறை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைக்கு தொடர்நீர்வரத்து உள்ளது.

    அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வாரமாக ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

    அந்த வகையில் கடந்த 16-ந்தேதி 91 அடி என்ற அளவில் இருந்த நீர்மட்டம் 18-ந்தேதி 100 அடியை தொட்டது. நேற்று காலை 8 மணிக்கு 109.30 அடியாக இருந்தது. பின்னர் மதியம் 2 மணிக்கு 110 அடியாக உயர்ந்தது.

    ஆழியாறு அணைக்கு தற்போது வினாடிக்கு 2634 கனஅடி நீர்வரத்து உள்ளது. மேலும் அணையில் இருந்து 84 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஆழியாறு அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியதை தொடர்ந்து நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில்ஆழியாறு, ஆனைமலை, கோட்டூர், மயிலாடுதுறை, ரமணமுதலிபுதூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு சென்றுவிடவேண்டுமென ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ஆழியாறு அணையின் நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், `ஆழியாறு நீர்மட்டம் 115 அடியை தாண்டியதும் 2-வது கட்ட மற்றும் இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். தொடர்ந்து 118 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்து நீர்வரத்தும் அதிகமாக இருந்தால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்படும்' என்று தெரிவித்து உள்ளனர்.

    • மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
    • போலீசார், ஊர்க்காவல் படையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் கண்காணித்து வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.

    இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 65 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் என காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. கர்நாடகா அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே ஒகேனக்களுக்கு நாளை காலை நேரத்திற்குள் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் செய்யவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து இன்று 5-வது நாளாக நீடிக்கிறது.

    காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது நாடார் கொட்டாய், ஊட்டமலை, சத்திரம், மற்றும் நெருப்பூர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் போலீசார், ஊர்க்காவல் படையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் கண்காணித்து வருகின்றனர்.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை காவிரி நுழைவிடமான கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 94.50 கன அடியாக உள்ளது.
    • போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளையும் செய்ய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் தயாராக உள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரமாக கனமழை பெய்து வருகிறது. நேற்றும் மழை நீடித்தது.

    புறநகர் பகுதியான மேட்டுப்பாளையம், சிறுமுகை, அன்னூர், காரமடை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது.

    இதனால் சாலைகளில் சென்ற வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடியே சென்றன. பலத்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் நகரில் உள்ள பல வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.

    மேட்டுப்பாளையம்-அன்னூர் ரோட்டில் உள்ள தியேட்டரின் அருகே உள்ள சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் வெளியேறி சாலையில் வழிந்தோடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். பல்வேறு தெருக்களிலும் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 94.50 கன அடியாக உள்ளது.

    அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து பவானி ஆற்றில் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 3 மாதங்களுக்கு பிறகு மின் உற்பத்தியும் தொடங்கப்பட்டுள்ளது.

    அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கான நீர் வரத்து எந்த நேரத்திலும் அதிகரிக்கும் என்பதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

    இதனால் பவானி ஆற்று கரையோர பகுதிகளான தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, ஆலாங்கொம்பு, வச்சினம்பாளையம், சிறுமுகை, வெண்ணல்நாயுடு வீதி, ஒடந்துறை, இந்திரா நகர், குஞ்சவண்ணான் தெரு, சீரங்க ராயன் ஓடை, வெள்ளிப்பாளையம் உள்ளிட்ட ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவின் பேரில் தாசில்தார், நகராட்சி ஆணையாளர், காவல்துறையினர் ஆகியோர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வாய்ப்புள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பெயரில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்டால் போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளையும் செய்ய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் தயாராக உள்ளனர்.

    வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கருமலை, பச்சமலை, சின்னக்கல்லார், நீரார்அணை, சின்கோனா, ஈடியார், பண்ணிமேடு, சேக்கல் முடி, தலானார், ரொட்டிக்கடை, உருளிகல் ஆகிய எஸ்டேட் பகுதிகளில் மிக கனமழை பெய்தது.

    இந்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கூழாங்கல் ஆறு மற்றும் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீடித்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 12 செ.மீ மழையும், வால்பாறை பி.ஏ.பியில் 11 செ.மீ, பில்லூர் அணை, சின்னக்கல்லாறில் 7 செ.மீ மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    விமான நிலையம்-33, தமிழ்நாடு வேளாண் பல்லைக்கழகம்-29, பெரியநாய க்கன்பாளையம்-57, மேட்டுப்பாளையம்-69, பில்லூர் அணை-74, அன்னூர்-42, கோவை தெற்கு-29, சூலூர்-58, வாரப்பட்டி-29, தொண்டாமுத்துர்-70, சிறுவாணி அணை-24, சின்கோனா-67, சின்னக்கல்லார்-78, வால்பாறை பி.ஏ.பி-115, வால்பாறை தாலுகா-120.

    • 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
    • மதுரையில் மதியம் 2.30 மணி அளவில் இடி மின்னலுடன் மற்றும் பலத்த காற்றுடன் மழை.

    குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது. மலை மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் இன்று காலை வரை 34 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் திடீரென்று சுமார் 2.30 மணி அளவில் இடி மின்னலுடன் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. 

    குறிப்பாக, மதுரையில் உள்ள அண்ணாநகர், கேகே நகர், தெப்பக்குளம், கோரிப்பாளையம், அண்ணா பேருந்து நிலையம், சிம்மக்கல், தெற்கு வாசல், காளவாசல், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம், கிராஸ் ரோடு, செல்லூர், தத்தனேரி, சர்வேயர் காலனி ஐயர் பங்களா என்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.

    மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மதுரை வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் எதிரொலியால், வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • 141 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை.
    • 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு.

    முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளா பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று 7 மணி நிலவரப்படி 141 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டியது.

    இதனால், கேரளா பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, முழு கொள்ளளவான 44.28 அடியில், நீர் இருப்பு 24.44 அடியாக உள்ளது.
    • நுரை பொங்கி செல்வதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளான பெங்களூர் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, முழு கொள்ளளவான 44.28 அடியில், நீர் இருப்பு 24.44 அடியாக உள்ளது.

    கடந்த சில மாதங்களாக கெலவரப்பள்ளி அணையில் ஷட்டர் மதகுகள் மற்றும் பராமரிப்பு காரணமாக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அணையில் நீர் தேக்கி வைக்கப்படுவதில்லை. இதனால் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று வினாடிக்கு 1,234 கனஅடி நீர் வந்தது. இன்றும் அதேஅளவு தண்ணீர் அணைக்கு வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 1,120 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனிடையே பெங்களூர் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் மற்றும் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் கலப்பதால் அணைக்கு வரும் வரும் நீர், ரசாயன கலவையுடன் நுரையும் நுங்குமாக துர்நாற்றத்துடன் பொங்கி வருகிறது.

    அதேபோல அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரும், நுரை பொங்கி செல்வதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    • 49 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 39 அடி அளவு உயர்ந்துள்ளது.
    • பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மாரண்டஅள்ளி:

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளதால் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட 13 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இந்நிலையில் மாலையில் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் கனமழையாக பெய்ய தொடங்கி விடிய, விடிய பெய்தது.

    இதைத்தொடர்ந்து பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அனணயின் நீர்வரத்து பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் எல்லை பகுதியான தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை மற்றும் பஞ்சப்பள்ளி உள்ளிட்ட காப்புக்காடு பகுதிகளிலும் தொடர் கனமழை காரணமாக இன்று காலை திடீரென நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இதனால் சின்னாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடியது. சின்னாற்றில் வெள்ள பெருக்கு காரணமாக பாலக்கோட்டில் உள்ள பஞ்சப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. 49 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 39 அடி அளவு உயர்ந்துள்ளது.

    சின்னாறு செல்லும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆத்துக்கொட்டாய், கரகூர், அத்திமுட்லு, மாரண்டஅள்ளி. பஞ்சப்பள்ளி, சாமனூர், தொல்லகாது உள்ளிட்ட பகுதிகளில் ஆறு செல்லும் வழித்தடங்களில் வெள்ள பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாக உள்ள நிலையில் தற்போது நீரின் அளவு 117 அடியை எட்டி உள்ளது.
    • மழையின் காரணமாக வினாடிக்கு 3000 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணையின் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்ட மக்களின் தண்ணீர் தேவை மற்றும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்ட விவசாயிகளின் விவசாய தேவைக்கான தண்ணீர் தேவைகளை சாத்தனூர் அணை பூர்த்தி செய்து வருகிறது.

    சாத்தனூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக வினாடிக்கு 3000 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாக உள்ள நிலையில் தற்போது நீரின் அளவு 117 அடியை எட்டி உள்ளது.

    அணையில் இருந்து இன்று காலை 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் 4 மாவட்டங்களின் அணையின் கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றில் இறக்கவும் கூடாது என நீர்ப்பாசன துறை மற்றும் வருவாய் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து மேலும் கூடுதல் நீர் அணையில் இருந்து திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×