search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி வெள்ளி"

    • ஆடி மாதம் வானில் `அகத்தியர்' என்ற நட்சத்திரம் தோன்றும்.
    • காவிரி டெல்டா பகுதியில் விவசாய பணிகளை தொடங்குவார்கள்.

    ஆடி மாதம் புனிதமான மாதம். தெய்வீக உணர்வை அதிகரிக்க செய்யும் மாதம். அதனால் தான் மற்ற எந்த மாதத்தையும் விட இந்த மாதத்தில் நிறைய வழிபாடுகள் உள்ளன.

    ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடி சுவாதி, ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடி பதினெட்டாம் பெருக்கு என்று மாதம் முழுவதும் மங்களகரமாக இருக்கும்.

    இந்த பண்டிகை நாட்களில் `ஆடிப்பெருக்கு' எனும் ஆடி பதினெட்டாம் பெருக்கு மகத்துவமும், தனித்துவமும் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் மிகச்சரியாக ஆடி 18-ந் தேதியன்று இந்த விழா நடைபெறும்.

    சங்க கால தமிழர்கள் ஆடிபெருக்கு தினத்தை, மற்ற எந்த விழாக்களையும் விட மிக, மிக கோலாகலமாக கொண்டாடினார்கள். அதற்கு முக்கிய காரணம் காவிரி நதியை நம் முன்னோர்கள் தெய்வமாக, தாயாக கருதியது தான்.

    சங்க காலத்தில் ஆடி பெருக்கு தினத்தன்று காவிரி நதியில் புதுவெள்ளம் கரை புரண்டோடும். பொதுவாக காவிரி நதி பாயும் பகுதிகளில் மக்களின் பயன்பாட்டுக்காக படித்துறைகள் அமைத்து இருப்பார்கள்.

    அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும். ஆடி மாதம் இந்த 18 படிகளும் மூழ்கி விடும் அளவுக்கு வெள்ளம் ஓடும். அந்த புது வெள்ளத்தை வணங்கி, வரவேற்க தமிழர்கள் `ஆடி பதினெட்டு' விழாவை கொண்டாடியதாக குறிப்புகள் உள்ளன.

    ஆடி மாதம் வானில் `அகத்தியர்' என்ற நட்சத்திரம் தோன்றும். இது மலைப்பகுதிகளில் பலத்த மழையை பெய்யச்செய்து காவிரியில் வெள்ளப்பெருக்கை உண்டாக்கும். உடனே காவிரி டெல்டா பகுதியில் விவசாய பணிகளை தொடங்குவார்கள்.

    இந்த சமயத்தில் நெல், கரும்பு பயிரிட்டால் தான், தை மாதம் அறுவடை செய்ய முடியும் என்பதை கணக்கிட்டு நம் முன்னோர்கள் செயல்பட்டார்கள்.

    அதன் தொடக்கமாகத்தான் ஆடிப்பெருக்கை பெரும் விழாவாக கொண்டாடினார்கள். சங்க காலத்தில் இந்த விழா எப்படி கொண்டாடப்பட்டது தெரியுமா?

    ஆடி 18-ந் தேதி காலையில், ஒவ்வொரு குடும்பத்தினரும் குளித்து, புத்தாடை அணிந்து அலை, அலையாக நதி கரைக்கு வந்த விடுவார்கள். முதலில் காவிரித்தாய்க்கு வழிபாடு நடத்துவார்கள்.

    காவிரி கரையோரம் வாழை இலை விரித்து அதில் புது மஞ்சள், புது மஞ்சள் கயிறு, குங்குமம், புத்தாடை மற்றும் மங்கல பொருட்கள் வைத்து தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபத்தை காவிரித்தாயை கங்கா தேவியாக நினைத்து, ஆராதனை செய்து வழிபடுவார்கள்.

    பிறகு சுமங்கலி பூஜை நடத்துவார்கள். குடும்பத்தில் வயது முதிர்ந்த பெண் ஒருவர் தம் குடும்பத்து சுமங்கலி பெண்களுக்கு புதிய தாலிக்கயிற்றை எடுத்துக் கொடுப்பார். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள்.

    பிறகு திருமணம் ஆகாத பெண்களும், காவிரி அன்னையை வணங்கி மஞ்சள் கயிறை கட்டிக் கொள்வார்கள். அப்படி செய்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கையாகும்.

    புதுமணத்தம்பதிகள் அதிகாலையிலேயே காவிரி கரைக்கு சென்று அங்கு அரசு, வேம்பு மரத்தை சுற்றி வலம் வந்து வணங்கி மஞ்சள் நூலை கட்டுவர். அரசமரமும், வேப்ப மரமும், சிவசக்தி அம்சமாக கருதப்படுகிறது. அரச மரத்தை விருட்சராஜன் என்றும், வேப்ப மரத்தை விருட்ச ராணி என்றும் அழைப்பர்.

    சக்தி ரூபமாக திகழும் வேப்ப மரத்தை சுற்றி பெண்கள் மஞ்சள் நூலை கட்டுகிறார்கள். இவ்வாறு செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் நல்ல கணவர் கிடைப்பார் என்றும், திருமணமான பெண்களுக்கு சந்தானலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

    தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி, காவிரி டெல்டாவின் கடை மடை பகுதி வரை இந்த கொண்டாட்டம் அந்தந்த பகுதி மண்வாசனைக்கு ஏற்ப இருக்கும். காவிரி கரையோரங்களில் மட்டுமின்றி வைகை, தாமிரபரணி நதிக்கரைகளிலும் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஒரு காலத்தில் கோலாகலமாக நடந்தது.

    நதிக்கு பூஜை செய்து முடித்ததும், கரையோரங்களில் அமர்ந்து புளியோதரை, பொங்கல், தயிர் சாதம், வடை மற்றும் இனிப்பு வகைகளை சாப்பிடுவார்கள். நாள் முழுவதும் இந்த கொண்டாட்டம் இருக்கும்.

    ஆனால் இன்று ஆடி பெருக்கு விழா காவிரி கரையோரங்களில் சில இடங்களில் மட்டும், ஓரிரு மணி நேரம் மட்டுமே நடைபெறுகிறது. சாதாரண விழா போல மாறிவிட்டது. காவிரியை நாம் வெறும் நதியாக பார்ப்பதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால் நம் முன்னோர்கள் காவிரியை தெய்வமாக, தாயாக கருதினார்கள். காவிரியை ஈசன் மனைவி பார்வதியாக கருதினார்கள். காவிரித் தாய்க்கு மசக்கை ஏற்பட்டதாக நினைத்தனர்.

    பஞ்ச பாண்டவர்களின் மனைவி பாஞ்சாலி தன் சபதம் நிறைவேறியதும் காவிரியில் புனித நீராட வந்ததால், காவிரி பெருக்கெடுத்து ஓடுவதாக நம்பினார்கள். அது மட்டுமல்ல, ராமபிரான் அசுரர்களை கொன்ற பாவம் நீங்க காவிரியில் நீராடி புனிதம் பெற்றதாக நம்பினார்கள்.

    காவிரி நதியில் 66 கோடி தீர்த்தங்கள் இருப்பதாக சங்க கால தமிழர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டனர். எனவே அவர்கள் காவிரியை கடவுளாக பார்த்தனர்.

    காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடும்போது, கடவுள் உற்சாக பெருக்குடன் வந்து தங்களை வாழ்த்துவதாக கருதினார்கள். அந்த சமயத்தில் காவிரி கரையோரம் வழிபாடு செய்தால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்று மக்கள் மனதில் ஆழமான நம்பிக்கை இருந்தது.

    அன்றைய தினம் எந்த புதிய முயற்சியைத் தொடங்கினாலும், அது ஆடி பெருக்கு போல பெருக்கெடுக்கும் என்று கருதினார்கள்.

    * புதிய தொழில் தொடங்கலாம்.

    * புதிய வாகனம் வாங்கலாம்.

    * சேமிப்பை ஆரம்பிக்கலாம்.

    * காய்கறி தோட்டம் போடலாம்.

    * நகை வாங்கலாம்.

    * புதிய பொருட்கள் வாங்கலாம்.

    இப்படி ஆடிப்பெருக்கு தினத்தன்று நீங்கள் எந்த நல்ல காரியம் செய்தாலும் அது இரட்டிப்பு பலன்களைத் தரும். அன்றைய தினம் காலை காவிரியில் நீராடுவது, எல்லா தோஷங்களையும் நீங்கச் செய்யும்.

    ஆடிப்பெருக்கு தினத்தன்று மாலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ரங்கநாத பெருமாள் காவிரிக் கரைக்கு எழுந்தருளி காவிரித் தாய்க்கு சீர்வரிசை பொருட்களை சமர்ப்பணம் செய்வார். இதை கண்டால் `கோடி புண்ணியம் கிடைக்கும்' என்பது ஐதீகமாகும்.

    • சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    ஆடி மாதத்தின் 4-ம் வெள்ளிக்கிழமையான இன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், அலங்காரமும் நடந்தது.அம்மன் கோவில்களில் பக்தரகள் கூழ் ஊற்றி ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபட்டனர்.

    ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஆடி 4-ம் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், ஆராதனை களும் நடைபெற்றது. பாலமுருகனுக்கு வண்ண மலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர் பாலாற்றங்கரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ஜலகண்டேஸ்வரர் கோவில், சலவன்பேட்டை ஆனை குளத்தம்மன் கோவில், வேலூர் காட்பாடி சாலையில் உள்ள விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில், தோட்டப் பாளையத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில், சைதாப்பேட்டை மலையடிவாரத்தில் உள்ள தேவி கருமாரியம்மன், மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கருமாரியம்மன் மற்றும் வேலூரில் உள்ள வேம்புலியம்மன், சோளாபுரி அம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    வெட்டுவாணம்

    குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில், பிச்சனூர் காளியம்மன்பட்டி காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    குடியாத்தம் கோபால புரம் கெங்கையம்மன் கோவிலில் ஆடி வெள்ளி முன்னிட்டு மூலவர் வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்தார்.

    வெட்டுவாணம்

    வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடி 4-ம் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சாமிதரிசனம் செய்வதற்கு காலையில் இருந்து கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    கோவில் வளாகத்திலும், கோவிலுக்குச் செல்லும் சாலையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபட்டனர்.

    • சூளையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • பெருமாள் கோவில்களில் உள்ள மகாலட்சுமி தாயார் சன்னதிகளிலும் இன்று வழிபாடுகள் நடைபெற்றன.

    ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று சென்னையில் உள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். பெண்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டார்கள்.

    சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் முண்டக கண்ணி அம்மன் கோவில், கோலவிழி அம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சியம்மன், திருமுல்லைவாயல் பச்சையம்மன், பிராட்வே காளிகாம்பாள், திருவொற்றியூர் வடிவுடை அம்மன், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்களில் இன்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதேபோல் ராயபுரம் உச்சிகாளி அம்மன், எருக்கஞ்சேரி முத்துமாரியம்மன், கன்னிகாபுரம் முத்து மாரியம்மன், செங்குன்றம் கங்கையம்மன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வகையான அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. அனைத்து அம்மன் கோவில்களிலும் அதிகாலையிலேயே திரளான பக்தர்கள் அம்மனுக்கு பொங்கலிட்டனர். மதியம் அம்மன் கோவில்களில் கூழ்வார்த்து வழிபாடு நடத்தப்பட்டது. சில பகுதிகளில் பக்தர்கள் அலகு குத்திவந்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சென்னை சூளையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இங்கு பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

    திருமணமான பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரித்து நீண்ட நாட்கள் சுமங்கலியாக இருப்பதற்கு ஆடி கடைசி வெள்ளியில் நோன்பிருந்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பது வழக்கம்.

    அதன்படி பெருமாள் கோவில்களில் உள்ள மகாலட்சுமி தாயார் சன்னதிகளிலும் இன்று வழிபாடுகள் நடைபெற்றன. சென்னை பெசன்ட் நகரில் அஷ்டலட்சுமி ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    சூளையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    சூளை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கலிட்டனர்.

    • கடைசி ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • சோழவந்தான், காடுபட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர் உள்பட 21 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து சண்முகவேல் அர்ச்சகர்பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.

    சோழவந்தான் வடக்கு வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் மகளிர் குழு சார்பில் தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது. மேளதாளத்துடன் 4 ரத வீதியும் சுற்றி வந்து ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக கம்பத்தில் அபிஷேகம் செய்தனர். பின்னர் கூழ் வார்த்து பக்தர்களுக்க வழங்கினர்.

    திரவுபதி அம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், உச்சி காளியம்மன் கோவில், தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோவில், உச்சி மகா காளியம்மன் கோவில், திருவேடகம் விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ஏடகநாதர்-ஏலவார் குழலி அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. சோழவந்தான், காடுபட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு பால், பன்னீர்புஷ்பம், தேன், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகை திவ்ய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.

    இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் பல்வேறு வாகனங்களிலும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து மாவிளக்கு, அக்கினிச்சட்டி, பறக்கும் காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவர்.

    இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று கடைசி வெள்ளியை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் சாத்தூரிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு பால், பன்னீர்புஷ்பம், தேன், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகை திவ்ய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அலங்காரம் செய்து சிறப்பு பூஜை தொடங்கியது.

    இதன் பின்னர் சின்னமாரியம்மன் கோவிலில் இருந்து உற்சவர் அம்மன் இன்று மதியம் 2 மணிக்கு ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து அர்ச்சுனா ஆற்றை கடந்து சந்நதி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக மருத்துவ வசதிக்காக சுகாதார மையங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை செய்துள்ளனர். கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான (பொறுப்பு) வளர்மதி, பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • ஆடி பூரத்தன்று மீனாட்சியம்மன் உற்சவர் கருவறைக்கு எழுந்தருள்வார்.
    • வெற்றிலையை அடுக்கடுக்காக தைத்து மாலை போல் சூட்டுவர்.

    சக்தி தலங்களில் முதன்மையான தலங்களில் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு சித்திரை மாதம் தொடங்கி ஆடி மாதம் வரை நான்கு மாதங்கள் அம்பிகை பட்டத்தரசியாக மூடி சூட்டிக் கொண்டு ஆட்சி செய்வதாக ஐதீகம்.

    ஆடியில் மீனாட்சியம்மனுக்குரிய தனி விழாவாக முளைக்கொட்டுத் திருவிழா நடக்கும். இந்த விழா பத்து நாட்கள் நடக்கும். கோவிலுக்குள் இருக்கும் ஆடி வீதியில் மீனாட்சியம்மன் தினமும் வாகனத்தில் பவனி வருவதை தரிசிக்கலாம்.

    விழா நடக்கும் மாதத்தின் பெயரையே இந்த வீதிக்கு சூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆடி பூரத்தன்று மீனாட்சியம்மன் உற்சவர் கருவறைக்கு எழுந்தருள்வார். அங்கு மீனாட்சிக்கும், உற்சவருக்கும் ஒரே சமயத்தில் சடங்கு உற்சவம் (பூப்புனித நீராட்டு) நடத்துவார்கள்.

    வெற்றிலை அலங்காரம்

    ஆடிப்பூரம் அம்மனுக்கு மட்டுமல்ல வீரபத்திரருக்கும் சிறப்பான ஒரு தினமாகும். வீரபத்திரருக்குரிய அலங்காரங்களுள் ஒன்று வெற்றிலையைக் கொண்டு செய்யப்படுகிறது. அதாவது வெற்றிலையை அடுக்கடுக்காக தைத்து மாலை போல் சூட்டுவர்.

    சில ஆலயங்களில் வெற்றிலைக்குள் பாக்கு வைத்து சுருட்டி, அந்தச் சுருளை மாலையாக்கி அணிவிப்பார்கள்.

    பல தெய்வங்கள் வீராவேசம் கொண்ட போர் தெய்வங்களாக, வெற்றிக் கடவுளாகத் திகழ்ந்தாலும் வீரபத்திரருக்கு மட்டுமே வெற்றிலைப்படல் உற்சவம் உண்டு. ஆடிப்பூரமே அதற்குரிய விசேஷ நாள். அன்று சென்னை அருகே அனுமந்தபுரத்தில் உள்ள வீரபத்திரருக்கு 12,800 வெற்றிலைகளால் அணிவித்து வழிபடுவது பாரம்பரிய பழக்கமாக உள்ளது.

    • ஆடி வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மாவிளக்கு போடுவார்கள்.
    • ஆடி மாதம் எள் தீபம் ஏற்றுங்கள் இது எதிர்ப்பு சக்தியை நமக்குத்தரும்.

    1. திருமாலுக்கு வாகனமாக அமைந்தவர் கருடன். இவர் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்.

    2. ஆடி மாதத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.

    3. ஆடி மாதம் என்றாலே மல்லிகை மணமும் கூடவே வரும். அம்மன் கோவில்களில் பூக்களால் அலங்கார பூஷிணியாக அம்மன் அமர்ந்திருப்பாள்.

    4. ஆடி மாதத்தில் தான் சதுர்மாஸ் விரதம் தொடங்குகிறது. அதாவது சன்யாசி போன்ற பிரியர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து பூஜை புனஸ்கரங்களை தொடருவர். இந்த காலத்தில் தான் பல ஊர்வன வகையை சேர்ந்த ஜீவராசிகள் மழை வெள்ளத்தை தாங்க முடியாமல் தங்கள் இருப்பிடத்தில் இருந்து வெளிவரும். அப்போது நடந்தால் அவைகள் மிதிபட்டு, துன்பப்பட்டு இறக்க நேரிடும் என்பதால் சன்யாசிகள், சாதுக்கள் ஒரு இடத்தில் போய் அமர்ந்து நாலு மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பர். வியாச பூஜையும் நடக்கும். இது ஆடி பவுர்ணமியில் குரு பூர்ணிமா என்ற பெயரில் நடக்கும்.

    5. ஆடி மாதம் வரும் ஏகாதசியை மகாராஷ்டரத்தில் ஆஷாட ஏகாதசி என்று மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள். காவடி போல் தோளில் இரு பக்கமும், பால் அல்லது தயிர் எடுத்துக் கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலை தரிசனம் செய்துவிட்டு வருவார்கள். பண்டரிபுரம் வரை பொடி நடைதான். நடுநடுவே செல்வந்தர்கள் அவர்களுக்கு உணவு பந்தல் ஏற்பாடு செய்திருப்பார்கள்.

    6. ஆடி மாதத்திலேதான் ஜீவ நதிகளுக்கு பூஜை செய்யப்படுகிறது. இதை ஜலப்பிரவாஹப்பூஜை என்று சொல்கிறார்கள். காவேரி அம்மனுக்கு மசக்கை என்று ஆடி பதினெட்டாம் பெருக்கை கொண்டாடுகிறார்கள்.

    7. அன்னை காமாட்சியும் சிவனை நோக்கித் தவம் இருந்து பின் ஈசனை அடைந்த மாதம் இந்த ஆடி மாதம்தான். ஆடி மாதம் சிலர் தேவியை வாராஹியாக வழிபடுவர். இவள் நமக்கு தைரியத்தை வழங்கி சத்ருவை அடக்குகிறாள்.

    8. அன்னையை பரா சக்தியாக கண்ட ஸ்ரீ அரவிந்தர் பிறந்த தினம். ஆகஸ்டு 15-ல் வருகிறது. ஷீரடியில் ஷீரடி பாபா உத்சவம் ஆடி மாதம் பிரமாதமாக நடக்கும்.

    9. உடலெல்லாம் தீக்காயங்களுடன் வந்த ரேணுகாதேவிக்கு, ஏழைகளான சலவைத் தொழிலாளர்கள் வேப்பிலை ஆடையும் உணவும் கொடுத்த நிகழ்ச்சி நடந்ததும் ஆடி மாதத்தில்தான். அதன் காரணமாகவே ஆடி மாதத்தில் வேப்பிலைச் சேலை கட்டி அம்மனை வலம் வருவதும், அவளுக்கு கஞ்சி, கூழ் வார்க்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    10. தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஆடி வெள்ளியும் தென் மாவட்டங்களில் ஆடிச் செவ்வாயும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆடி வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் கோவில்களில் பெண்கள் அம்பாளுக்கு மாவிளக்கு போடுவார்கள். இல்லத்தரசிகள் குத்து விளக்கு பூஜை செய்வர். ஸ்ரீதுர்காதேவிக்கு எலுமிச்சை பழ தீபம் ஏற்றுவார்கள்.

    11. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசியில் கோ பத்ம விரதம் (பசு வழிபாடு) கடைப்பிடித்தால் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பர்.

    12. ஆடி மாதத்தில் அவதரித்த நாயன்மார்கள்& சுந்தரமூர்த்தி நாயனார். கலிய நாயனார், புகழ்சோழர், மூர்த்தி நாயனார் ஆகியோர் ஆவர். ஆளவந்தார், புண்டரி காஷர், கந்தாடை தோழப்பர், பத்ரி நாராயணர் போன்ற ஆழ்வார்கள் அவதரித்ததும் ஆடி மாதத்தில்தான்.

    13. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைக்கொட்டு விழா நடைபெறும் பத்து நாட்களில், ஆடி வீதி நான்கிலும் அம்மன் வலம் வருவார். ஆடி சுவாதியில் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும் புறப்பாடும் நடைபெறும்.

    14. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் ஆண்டாளுக்கு ஆடிப்பூர உற்சவம் மூன்று நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும். உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத்தில், உதங்க முனிவருக்கு ஜவண்ணங்காட்டி அருளியதன் நினைவாக பஞ்சப் பிராகார விழா நடைபெறும்.

    15. கொடு முடி மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் கோவில் ஆடிப்பதினெட்டில் மும்மூர்த்திகளும் காவிரிக்கு எழுந்தருள்வார்கள். அன்று இரவு பச்சை மண்ணில் பானை செய்து, மாவிளக்கு, காதோலை, கருகமணி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு முதலியவற்றை அதில் வைத்துவிட்டு வருவர்.

    சர்க்கரைக் காப்பு

    திருவல்லிக்கேணி அருள்மிகு எல்லை அம்மன் திருக்கோவிலில், ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் அடுக்கி சுவாசினி பூஜை நடைபெறுகிறது. இப்பூஜை, சுமார் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த அம்மனுக்கு ஸ்ரீசக்ர மாலை உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், இந்த அம்மனுக்கு சர்க்கரைக் காப்பு செய்து வழிபட குணம் பெறலாம் என்கிறார்கள். சர்க்கரையுடன் நெய் சேர்த்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து, முந்திரிப் பழங்களால் அலங்காரம் செய்வது வழக்கம்.

    எள் எண்ணை ஏற்றுங்கள்

    ஆடி மாதம் காற்று அதிகமாக வீசும். இது தொற்று நோய்களை பரவச் செய்து விடும். இதை தடுக்கும் ஆற்றல் எள் எண்ணை தீபத்துக்கு உண்டு. எள் எண்ணையில் இரும்புச்சத்து உள்ளது. எள் எண்ணை ஊற்றி தீபம் ஏற்றும் போது, அது சூடாகி பிராண சக்தியை அதிகப்படுத்தும். இந்த பிராண சக்தி தொற்று நோய் எதிர்ப்பு சக்தியை நமக்குத்தரும். எனவே ஆடி மாதம் அடிக்கடி எள் தீபம் ஏற்றுங்கள்.

    • மீனாட்சி அம்மன் வேடத்தில் சிவகாமியம்மனை அலங்கரித்து வழிபாடு நடைபெற்றது.
    • இரவு 7:30 மணியில் இருந்து 9 மணிக்குள் ஓதுவார் பாட்டு பாட மேல தாளங்களுடன் பள்ளியறை பூஜை சிவகாமி அம்மன் பூலாநந்தீஸ்வரருக்கு நடைபெற்றது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் சிவகாமிஅம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. கோவிலைச் சுற்றி வயல்வெளிகளும், கரும்புத்தோட்டங்களும், தென்னந்தோப்புகளும் என இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது. பூலாநந்தீஸ்வரருக்கு பிரதோஷ காலங்களில் அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும்.

    ஆடிவெள்ளியையொட்டி துர்க்கை அம்மன், சிவகாமிஅம்மன், பூலாநந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் மீனாட்சி அம்மன் வேடத்தில் சிவகாமியம்மனை அலங்கரித்து வழிபாடு நடைபெற்றது. இரவு 7:30 மணியில் இருந்து 9 மணிக்குள் ஓதுவார் பாட்டு பாட மேல தாளங்களுடன் பள்ளியறை பூஜை சிவகாமி அம்மன் பூலாநந்தீஸ்வரருக்கு நடைபெற்றது.

    இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆடி முதல் வெள்ளியான இன்று, வீடுகளில் திருக்கலசம் எழுந்தருளச்செய்து, அதில் அம்மன் முகத்தை போன்ற உருவ அமைப்பை ரவிக்கை துணியில் ஏற்படுத்தி, அதற்கு அணிகலன்கள் மலர் மாலைகள் சூட்டி அலங்கரித்து வழிபட்டனர்.
    • பெண்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடைகளில் வந்து, அம்மனை வழிபட்டனர்.

    திருப்பூர்:

    ஆடி மாத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு தான். ஒவ்வொரு வெள்ளியன்றும் வித்தியாசமாக கொண்டாடுகின்றனர்.முதல் வெள்ளியான இன்று, வீடுகளில் திருக்கலசம் எழுந்தருளச்செய்து, அதில் அம்மன் முகத்தை போன்ற உருவ அமைப்பை ரவிக்கை துணியில் ஏற்படுத்தி, அதற்கு அணிகலன்கள் மலர் மாலைகள் சூட்டி அலங்கரித்து வழிபட்டனர்.

    வீட்டு முற்றத்திலும், பூஜை அறையிலும் மாக்கோலமிட்டு, மாவிலை, தென்னை தோரணங்கள் சூட்டினர். சர்க்கரை பொங்கல், எலுமிச்சை, தேங்காய், புளி, தயிர் சாதங்களை தயாரித்து, அம்பாளுக்கு படைத்தனர்.

    அம்பாளை துதித்து போற்றி, மாலைகளை பாராயணம் செய்தனர். தொடர்ந்து, முப்பெரும் தேவியரை துதித்து, வீடுகளுக்கு சுமங்கலிப்பெண்களை அழைத்து விருந்து பரிமாறி, வளையல், ரவிக்கை, மஞ்சள், குங்குமம், பூ உள்ளிட்ட மங்கல பொருட்களை கொடுத்து மகிழ்ந்தனர். இப்படி ஆடிப்பண்டிகையை சுமங்கலிப்பெண்கள் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக கொண்டாடினர்.

    திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், ஏ.பி.டி., ரோடு பட்டத்தரசிம்மன் கோவி்ல், தில்லை நகர் ராஜ மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம் போலீஸ்லைன் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், ெபருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவில், அவிநாசியை அடுத்துள்ள கருவலூர் மாரியம்மன் கோவில் உள்பட உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில், இன்று சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.

    அம்மன் கோவில்களில் இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பெண்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடைகளில் வந்து, அம்மனை வழிபட்டனர். கோவில்களில், பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தக்காளி சாதம், தயிர்சாதம் போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டது.மேலும் கூழ் வார்த்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    இன்று முதல் ஆடி வெள்ளி என்பதால் குறைந்திருந்த பூக்கள் விலை மெல்ல உயர துவங்கியுள்ளது.

    திருப்பூர் பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் கிலோ, 300 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ நேற்று கிலோவுக்கு, 150 ரூபாய் உயர்ந்து 450 ரூபாய்க்கு விற்றது. முல்லை கிலோ 250 ரூபாயில் இருந்து 320 ரூபாய்க்கு விற்பனையானது. ஆடி வெள்ளி என்றாலே அம்மன் கோவில்கள் தான் பிரசித்தம். கோவிலுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் அரளி பூ விலையும் உயர்ந்துள்ளது.

    ஒரு வாரமாக கிலோ 80 முதல் 120 ரூபாய் இருந்த ஒரு கிலோ அரளி நேற்று 200 முதல் 240 ரூபாய்க்கு விற்றது. துளசி ஒரு கட்டு 20 ரூபாய், செவ்வந்தி 300 ரூபாயாக விலை உயர்ந்தது. ஒரு சில வியாபாரிகளிடம் மட்டும் அரளி பூ இருந்ததால், அதனை வாங்க சில்லறை வியாபாரிகள் பலர் போட்டி போட்டனர். வரத்து குறைவால், மக்களுக்கு அரளி கிடைக்கவில்லை; வியாபாரிகள் மொத்தமாக விற்பனைக்கு அள்ளிச்சென்றனர்.

    பூ வியாபாரிகள் கூறுகையில், காற்றின் வேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், பூக்கள் உதிர்ந்து வருகிறது. வரத்து குறைந்து வரும் இவ்வேளையில் ஆடி வெள்ளி விற்பனை சற்று அதிகரித்ததால் விலை உயர்ந்துள்ளது. இருப்பினும் ஓரிரு நாளில் விலை குறைந்து விடும். ஆவணி முகூர்த்தம் வரை மல்லிகை பூ விலையில் பெரிய ஏற்றம் இருக்காது என்றனர்.

    • ஆடி முதல் வெள்ளிக்கிழமையில் அம்மன் கோவிலில் பெண்கள் குவிந்தனர்.
    • நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    மதுரை

    தமிழ் மாதங்களில் அம்ம–னுக்கு மிகவும் உகந்த மாத–மாக கருதப்படுவது ஆடி மாதமாகும். ஆடி மாதங்க–ளில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடை–பெறும். அதில் ஆலயங்களில் கூழ்வார்த்தல், நேர்த்திக் கடன் செலுத்துதல் உள் ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும்.

    இன்று ஆடி முதல் வெள் ளிக்கிழமை என்பதால் மது–ரையில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்க–ளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவி–லில் காலையில் நீண்ட வரி–சையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், ரிசர்வ்லைன் மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோவில், ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் கோவில்,

    மறவர் சாவடி தசகாளி–யம்மன் கோவில், முடக்கு சாலை காளியம்மன் கோவில், சொக்கலிங்க நகர் சந்தன மாரியம்மன் கோவில், பழங்காநத்தம் நேரு நகர் அங்காள ஈஸ்வரி கோவில், புதூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் அம்ம–னுக்கு சிறப்பு அலங்கா–ரங்கள் செய்யப்பட்டு தீபா–ராதனை காண்பிக்கப்பட்டது.

    அழகர்கோவில் நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவிலில் அம்மன் பல் வேறு வண்ண மலர்க–ளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித் தார்.

    இதனால் இக்கோவில்க–ளில் கூட்டம் அலைமோதி–யது. திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்ம–னுக்கு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலிலுக்கு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி சங்க–ரன்கோவில், திருவேங்கடம் தூத்துக்குடி, விளாத்தி குளம், கோவில்பட்டி போன்ற பல ஊர்களில் இருந்தும் அதிக அளவிலான பக்தர்கள் வந்திருந்தனர்.

    அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், அம்ம–னுக்கு தீச்சட்டி, அங்கப்பி–ரதட்சணம், பால்குடம், ஆயிரம் கண் பானை, கரும்பு தொட்டில், மாவி–ளக்கு போன்ற நேர்த்திக்க–டனை எடுத்து செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில், காரைக்குடி கொப்பு டையம்மன் கோவில், மடப்புரம் காளி–யம்மன் கோவில், சோழவந்தான் ஜனகை மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    • ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.
    • ஒளவை நோன்பு கடைப்பிடிப்பதால் கன்னிப் பெண்களுக்குத் திருமணமும் சுமங்கலிகளின் கணவர்களுக்கு நீண்ட ஆயுளும் குழந்தை வரமும் கிடைக்கும்.

    தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார்.

    சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.

    மழைக் காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல் நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும் எலுமிச்சையும் கூழும் அம்மனுக்கு விருப்பமானவைகளே. இவை உடல் நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.

    ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப்பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகளாகும்.

    ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச்சீர் செய்து மாப்பிள்ளை - பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ஆடிப்பால் என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து அவரை மட்டும் அனுப்பி விட்டு, பெண்ணைத் தாய் வீட்டிலேயே ஆடி முழுதும் தங்க வைத்துக் கொள்வார்கள்.

    ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும். தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம் கஷ்டத்தைத் தரும் என்பதால் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். (ஆடி வரை கருத்தரிக்காத புதுமணப் பெண்ணுக்குத் தான் இவை). இதை இன்னமும் பின்பற்றுகின்றனர். இதனால் 'ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி' என்பார்கள்.

    ஆடி மாதப் பழமொழிகள் பல. 'ஆடிப் பட்டம் தேடி விதை', 'ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்', 'ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்', 'ஆடிச் செவ்வாய் தேடிக்குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி', 'ஆடிக் கூழ் அமிர்தமாகும்'.

    ஆடிச் செவ்வாய்

    ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகள் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்நாட்களில் பெண்கள் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆடிச் செவ்வாய் ஒளவையாருக்குச் செய்யும் விரத பூஜையாகும். ஒளவை நோன்பு கடைப்பிடிப்பதால் கன்னிப் பெண்களுக்குத் திருமணமும் சுமங்கலிகளின் கணவர்களுக்கு நீண்ட ஆயுளும் குழந்தை வரமும் கிடைக்கும்.

    பச்சரிசி மாவுடன் வெல்லம் கலந்து உப்பில்லாமல் செய்யும் கொழுக்கட்டைதான் நோன்பின் சிறப்பு பிரசாதமாகும். இதைப் பெண்கள் மட்டும்தான் செய்வார்கள். அன்று இரவு 10.00 மணியளவில் வீட்டில் உள்ள மூத்த வயதான பெண் தலைமையில் அத்தெருவில் உள்ள பெண்கள் அவர் வீட்டில் கூடுவார்கள். அதற்கு முன் ஆண்கள் - சிற ஆண்பிள்ளைகள் உட்பட வெளியேற்றப்படுவார்கள். அவர்கள் பார்க்கவோ, கேட்கவோ, பிரசாதம் சாப்பிடவோ கூடாது.

    பின் பூஜை நடைபெறும். ஒளவையார் கதையையும் அம்மன் கதையையும் வயதான பெண்மணி கூறுவார். சிறு பெண் குழந்தை முதல் பெரியவர்கள் வரையிலும் அனைவரும் கலந்து கொண்டு பூஜை முடிப்பார்கள். பின் கொழுக்கட்டைகளை மீதமின்றி சாப்பிட்டு முடித்து, வீட்டைத் தூய்மைப்படுத்திய பின்தான் காலையில் ஆண்கள் அங்கு வர வேண்டும். இதுதான் ஒளவை நோன்பு.

    ஆடி வெள்ளி

    அன்றைய தினம் வாசலில் கோலமிட்டு பூஜையறையில் குத்து விளக்கேற்றி, நிவேதனமாக பால்பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து, லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும். அன்று வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும். அவர்களை அம்மனாகப் பாவித்து அமுதளிக்க வேண்டும்.

    ஆடி வெள்ளியில்தான் வரலட்சுமி விரதம் வரும். சில வருடங்களில் இது ஆவணியிலும் அமைந்துவிடும். இவ்வாண்டு ஆவணி முதல் வெள்ளியில் வரலட்சுமி விரதம் வருகிறது.

    பொதுவாக ஆடி வெள்ளிகளில் மாலை ஆலயங்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறும். 108, 1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வார்கள்.

    • வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்தமானவை.
    • ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச் சீர் செய்து மாப்பிள்ளை-பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள்.

    தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.

    மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்தமானவை. கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.

    ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகளாகும்.

    ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச் சீர் செய்து மாப்பிள்ளை-பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ஆடிப் பால் என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து அவரை மட்டும் அனுப்பி விட்டு, பெண்ணைத் தாய் வீட்டிலேயே ஆடி முழுவதும் தங்க வைத்துக் கொள்வார்கள்.

    ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும்; தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம் கஷ்டத்தைத் தரும் என்பதால் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். (ஆடி வரை கருத்தரிக்காத புதுமணப் பெண்ணுக்குத்தான் இவை). இதை இன்னமும் பின்பற்றுகின்றனர். இதனால் 'ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி' என்பார்கள்.

    திருக்குற்றாலத்தில் ஆடி மாதம் மிகவும் விசேஷமாகும். சுற்றுலா செல்ல ஏற்ற மாதம் இது. 'ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்' என்பார்கள். குற்றால அருவி நீரில் மூலிகைச் சத்துகள் கலந்து வருவதால் அது மக்களுக்கு அதிக நன்மை தரும். அதனால் குற்றால அருவி நீராடல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

    திருச்சியருகேயுள்ள திருநெடுங்களநாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுதும் சூரிய ஒளி மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடைபெறும். இது ஒரு சிறப்பு என்றால், இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு ஆகும்.

    ஆடி மாதப் பழமொழிகள் பல. 'ஆடிப் பட்டம் தேடி விதை', 'ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்', 'ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்', 'ஆடிச் செவ்வாய் தேடிக் குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி', 'ஆடிக் கூழ் அமிர்தமாகும்'.

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் அம்மன் வீதி வலம் வருவது சிறப்பான ஒன்றாகும்.

    சேலம் ஏழுபேட்டைகளில் ஆடிப் பெருவிழா மிகவும் விசேஷம். ஒவ்வொரு பேட்டையிலும் ஒவ்வொரு விழா. இங்குள்ள அன்னதானப் பட்டியில் ஆடிப் பெருவிழாவின் பொங்கல் படையல், அடுத்த நாளில் குகை வண்டி வேடிக்கை ஒரு சிறப்பான விழாவாகும். அந்த ஒருநாள் மட்டும் வேறு எந்த ஊரிலும் இல்லாத விதமாக செருப்படித் திருவிழா நடக்கும். வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு தட்டில் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம், வேப்பிலை வைத்து பூசாரியிடம் தர, அவர் அதை பக்தர்கள் தலையில் மூன்று முறை நீவிவிடுவார். இதுதான் செருப்படித் திருவிழாவாகும். உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு வந்து அம்மனை வணங்குவார்கள். இதற்கு சேத்துமுட்டி விழா என்று பெயர். அடுத்த விழா சத்தாபரண விழா. இப்படி பல விழாக்கள் விதம்விதமான மாங்கனிகள் தரும் சேலத்தில் நடைபெறுகின்றன.

    திருநின்றவூரில் உள்ள நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்து மஞ்சளாடை தரித்து பயபக்தியுடன் ஒரு மண்டலம் விரதமிருந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். மேல்மருவத்தூர் அம்மன் ஆலயத்திலும் இதுபோல் செய்வார்கள். அவ்வாலயம் வரும் பெண்களை அங்குள்ளோர் சக்தி என்றுதான் அழைப்பார்கள்.

    கோவை ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில் முத்தேவியர் ஒன்றாக அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். நடுவே மகாலட்சுமியும் வலப்புறம் துர்க்கையும் இடப்புறம் சரஸ்வதியும் அமைந்துள்ளனர். தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரை நடுவேயுள்ள லட்சுமி முகத்தில் சூரிய ஒளிபடும். பகல் 12 மணிக்கு மூன்று தேவியர் முகங்களிலும் சூரிய ஒளிபடும் தரிசனத்தைக் கண்டு மகிழலாம். ஆடி மாதம் முழுதும் இவ்வாலயம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.

    ×