search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளையல் அலங்காரம்"

    • ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் தான் அம்மன் தோன்றினாள்.
    • ஆண்டாள் தோன்றிய தினம் ஆடிபூரம்.

    ஆடி மாதம் முழுவதும் அம்மனை விதம், விதமாக அலங்கரித்து வழிபடுவார்கள். குறிப்பாக ஆடிப்பூரம் தினத்தன்று அம்மனுக்கு வளையல் அணிவித்து செய்யப்படும் வழிபாடு மிகவும் சிறப்பானது. ஏனெனில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் தான் அம்மன் தோன்றினாள். இதனால் தமிழ்நாடு முழுவதும் வளையல் வழிபாடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

    திருமணத் தடை உள்ள கன்னிப்பெண்களும், குழந்தைச் செல்வம் கேட்டு அம்பாளின் அருள் பெறுவதற்காக பிரார்த்திக்கும் பெண்களும் இந்த வளையல் சாற்று வைபவத்தில் கலந்து கொண்டு பலன் பெறுவார்கள்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா 'முளைக்கொட்டு விழா' என்ற பெயரில் மிகச் சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா நடைபெறும் பிரகாரத்திற்கு 'ஆடி வீதி' என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வளைகாப்பு விழா பதினாறு கால் மண்டபத்தில் ஆடிப்பூரத்தன்று மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் அன்று தீமிதி வைபவமும் நடைபெறும்.

    திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர், ஸ்ரீ காந்திமதி அம்பாள் ஆலயத்தில் அம்பிகைக்கு 'பூரம் கழித்தல்' எனப்படும் ருது நீராடல் வைபவமும், வளைகாப்பும் சிறப்பாக நடைபெறும்.

    இதே போல் திருக்கருகாவூர் அம்மனுக்கும் ருது சாந்தி விழா வைபவம் நடைபெறும். அப்போது பக்தர்கள் கண்ணாடி வளையல்களை அம்மனுக்கு சமர்ப்பித்து, அர்ச்சித்து பெற்றுக் கொள்வார்கள்.

    நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சி அம்மன், தனிக்கோவிலில் எழுந்தருளியுள்ளாள். இங்கு ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்குப் பூரம் கழித்தல் எனப்படும் ருது நீராடல் வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும். அப்போது ஒன்பது கன்னிப்பெண்களை வரிசையாக உட்காரவைத்து நலங்கு வைத்து வெற்றிலைப்பாக்கு, பழம், பூ, சீப்பு, குங்குமச்சிமிழ் மற்றும் ரவிக்கைத்துணி ஆகியவற்றை வழங்குவார்கள்.

    திருச்சி உறையூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அன்னை குங்குமவல்லி அம்மனுக்குத் தை மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று வளையல் சாற்று வைபவம் நடத்தப்படும்.

    என்றாலும் ஆடிப்பூரத்தன்று சுமங்கலிகளும், கன்னிப்பெண்களும், குழந்தை வரம் வேண்டி காத்திருக்கும் தம்பதிகளும், சுகப்பிரசவம் வேண்டும் கர்ப்பிணிப்பெண்களும் அம்மனுக்கு வளையல்களை அர்ச்சனையின் போது பூஜைத்தட்டில் சமர்ப்பித்து, அர்ச்சித்து, அதனைப்பிரசாதமாகப் பெற்று தங்கள் கைகளில் அணிந்து கொள்வார்கள்.

    சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோவில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், திருச்சி திருவனைக்கா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி கோவில் உள்பட தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிப்பூரம் பெருவிழாவாக இன்று சிறப்பாக கொண்டாடப்படும்.

    சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் உள்ள புட்லூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் நிறைமாத கர்ப்பிணியான வடிவத்தில் காட்சி தந்தாள். இதனால் தேவலோக பெண்கள் அம்பாளுக்கு வளையல்களை அணிவித்து அலங்காரம் செய்தார்கள். இதனால் அம்மனின் மனம் குளிர்ந்தது.

    ஸ்ரீமகாவிஷ்ணு, விநாயகர் முன் தோப்புகரணம் போட்டதால் இன்றுவரை விநாயகர் முன் நாம் தோப்புகரணம் போடுவதுபோல, அம்மனுக்கு தேவலோகத்தினர் வளைகாப்பு நடத்தி, வளையல் அணிவித்து அம்மனை மகிழ்வித்ததால் இன்றுவரை அம்பாளின் பக்தர்களாகிய நாமும் அம்பாளுக்கு வளையல்களை அணிவித்து அம்மனின் மனதை சந்தோஷப்படுத்துகிறோம்.

    அதுபோலவே இன்னும் ஒரு சம்பவமும் இருக்கிறது. பொதுவாகவே பெண்களுக்கு கைநிறைய கலர் கலராக வளையல் அணிந்து அழகு பார்க்க ஆசைப்படுவார்கள். அம்மனுக்கும் அந்த ஆசை இருக்காதா?. அவளும் பெண்தானே.

    சக்திதேவி தன் ஆசையை எப்படி நிறைவேற்றிக்கொண்டாள் தெரியுமா? ஒரு வளையல் வியாபாரி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வளையல்களை விற்க வருவது வழக்கம். ஒருநாள் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த வளையல்களில் பாதி விற்றுவிட்டார் மீதி இருந்த வளையலை மறுநாள் விற்கலாம் என்று நினைத்தார்.

    பெரியபாளையம் வரும்போது அவருக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது. நடக்க முடியாத அளவில் சோர்வடைந்தார். இதனால், அங்கு இருந்த ஒரு வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு அந்த வளையல் வியாபாரி அங்கேயே தூங்கிவிட்டார். நல்ல தூக்கம்.

    சில மணி நேரத்திற்கு பின் கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு பதறினார். சுற்றுமுற்றும் தேடினார். கிடைக்கவில்லை. கவலையுடன் தன் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுவிட்டார்.

    அன்றிரவு, அந்த வளையல் வியாபாரியின் கனவில் அம்மன் தோன்றினாள். "நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார். என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன்.

    பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும்." என்றாள் அம்பாள். தான் கண்ட கனவை தன் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் சொன்னார் வியாபாரி. அத்துடன் சென்னைக்கு அவர்களை அழைத்து வந்து, பெரியபாளையம் மக்களிடத்திலும் தான் கண்ட கனவை பற்றி சொன்னார்.

    இதன் பிறகுதான் பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்தார்கள். அம்மனுக்கும் கைநிறைய வளையல் அணியவேண்டும் என்று ஆசை ஏற்பட்டதால்தான் அந்த வளையல் வியாபாரி வைத்திருந்த வளையல்களை எடுத்துக்கொண்டார் அம்பாள்.

    வளையல் அணிய வேண்டும் என்ற ஆசையால்தான் புற்றில் இருந்தும் வெளிப்பட்டாள். அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுபிட்சங்கள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

    அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும். அதேபோல ஆண்டாள் தோன்றிய தினம் ஆடிபூரம்.

    இந்த நன்னாளில் ஆண்டாளை தரிசித்து பூமாலை, வளையல்களை கொடுத்து வணங்கி ஆண்டாளின் ஆசியை பெற்ற வளையல்களில் இரண்டு வளையல்களை அணியலாம்.

    அதேபோல ஆண்கள் ஆண்டாளுக்கு அணிவித்த மலர்களை சிறிது வாங்கி தங்கள் சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டாலும் நல்ல முயற்சிகள் வெற்றி பெறும். மங்களங்கள் யாவும் கைகூடும்.

    • ஆடிப்பூரத்தையொட்டி நடந்தது
    • திரளான பக்தர்கள் தரிசனம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. இதையொட்டி மூன்று முகம் கொண்ட முத்தாரம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடந்தது. மாலையில் அம்மனுக்கு மா காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாயரட்சை தீபாராதனை நடந்தது.

    பின்னர் இரவு 8 மணிக்கு முத்தாரம்மனுக்கு 1008 வளையல்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகளும் விசேஷ பூஜைகளும் நடந்தது. முன்னதாக விநாயகருக்கு முதல் பூஜை நடந்தது.அதன்பிறகு முத்தாரம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. மேலும் இந்த கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களான உச்சிமாகாளி அம்மன், பைரவர் சுவாமி, சுடலை மாடசுவாமி, புலமாடசுவாமி, இசக்கி அம்மன், ஆகிய பரிவார சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

    இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொணடு அம்மனுக்கு வளையல் வழங்கி வழிபாடு செய்தார்கள். பின்னர்பக்தர்களுக்கு அந்த வளையல் அருள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • அம்பாளுக்கு வளையல் அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம ஸம்வர்த்தினி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதில் எண்ணெய் காப்பு செய்து திரவியத்தூள், மஞ்சள் தூள், அரிசி மா வு, தேன், பால், தயிர், இளநீர், சர்க்கரை, சந்தனம், பன்னீர், குங்குமம் போன்ற அபிஷேகப் பொருட்களால் அம்பாளுக்கு அபிஷேகம் செய் யப்பட்டது. இதையடுத்து இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்பாலுக்கு ஆயிரக்கணக்கான வளைல்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×