search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்த மருத்துவம்"

    • ஞாபக மறதிக்கு சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன.
    • உடற்பயிற்சி, தியானம் நல்லது.

    ஞாபக மறதி நோய் 'டிமென்ஷியா' மற்றும் 'அம்னீஷியா' என்று இரு வகைகளில் அடங்கும். 'அம்னீஷியா' என்பது மூளையில் ஏற்படும் பக்கவாத பாதிப்புகள், மூளைக்காயங்கள், மூளைக்கட்டிகள், வலிப்புகள் இவற்றை தொடர்ந்து ஏற்படும். கடந்த கால, நிகழ்கால ஞாபக மறதியைக் குறிக்கும் 'டிமென்ஷியா' வில் ஞாபக மறதி, மன அழுத்தம், பழக்கவழக்க மாற்றங்கள், கனவுகள் இவை காணப்படும். இது அல்சீமர் நோய் பாதிப்பு, பார்க்கின்சன் நோய், மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் ஏற்படும் பாதிப்பு, டோபமைன், செரட்டோனின் குறைபாடு போன்ற காரணங்களால் வருகிறது.

    ஆனால் திடீர் ஞாபக மறதி 'டோர்வே எபக்ட்' எனப்படும். நம் கண் முன்னால் ஒரு பொருள் இருந்தும் அவசர கதியில் அதைக் கவனிக்காமல் எங்கே வைத்தோம் என்று தேடுவது, கையில் கொண்டு செல்லும் பொருளை எங்காவது வைத்துவிட்டு, பிறகு அதைத் தேடுவது, ஏற்கனவே அறிமுகமான நபரைத் திடீரென பார்த்தவுடன் அவரது பெயர் நினைவுக்கு வராமல் சமாளிப்பது, போன்றவை இந்த திடீர் ஞாபக மறதியில் வந்துவிடும்.

    ஞாபக மறதிக்கு சித்த மருத்துவத்தில் உள்ள மருந்துகள்:

    1) பிரமி நெய் 5 மி.லி. வீதம் காலை, இரவு சாப்பிடலாம்,

    2) வல்லாரை மாத்திரை 2 காலை, இரவு எடுக்க வேண்டும்.

    3) அமுக்கரா லேகியம் 2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    4) நெல்லிக்காய் லேகியம் 2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    5) சங்கு புஷ்ப மலர்களை டீ போட்டு குடிக்கலாம். இவை மூளை நரம்புகளுக்கு சிறந்த பலனைத் தரும்.

    6) அக்கரகாரம் என்ற மூலிகை வேரிலிருந்து எடுக்கப்படும் `பைரித்ரின்' நரம்பு களுக்கு உற்சாகத்தை தருகிறது.

    வல்லாரை, பிரமி கீரை, துளசி செடி இவைகளில் வகைக்கு இரண்டு இலைகளை எடுத்து இரவு முழுவதும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை குடித்து வர மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ஞாபக சக்தி பெருகும். வெண்டைக்காய், நெல்லிக்காய், எலுமிச்சை, புதினா, கேரட், திராட்சை, ஆப்பிள், பேரீச்சை, முட்டை, பசலைக்கீரை, பாதாம் பருப்பு, வால்நட், முருங்கைக்காய் போன்றவைகளை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பெர்ரி வகைப் பழங்கள், பூசணி விதைகள், பாதாம், வால்நட், வேர்க்கடலை இவைகளில் உள்ள விட்டமின் ஈ, விட்டமின் டி, ஒமேகா-3, துத்தநாகம் போன்றவைகள் ஞாபகசக்தியை அதிகப்படுத்துகின்றன. உடற்பயிற்சி, தியானம், பிரார்த்தனைகள் நல்லது.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • இது ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு பரவாது.
    • பாரம்பரியமாக வருவதற்குரிய வாய்ப்புகள் உண்டு.

    'சொரியாசிஸ்' என்பது 'ஆட்டோ இம்யூன்' வகையைச் சார்ந்த ஒரு தோல் நோயாகும். நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியே நம் உடலைத் தாக்கி ஒரு நோயை உருவாக்குமானால் அதையே 'ஆட்டோ இம்யூன்' என்கிறோம். சாதாரணமாகத் தோலின் வெளி அடுக்கு 28 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை உதிர்ந்து, புதிய தோல் உருவாகிறது. ஆனால், சொரியாசிஸ் நோயில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தோல் உதிர்ந்து செதில்களாக மாறிவிடுகிறது. இது உடலின் எந்த பாகத்திலும் வரலாம். இது ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு பரவாது. பாரம்பரியமாக வருவதற்குரிய வாய்ப்புகள் உண்டு. ஒரு நபருக்கு சொரியாசிஸ் ஒருமுறை வந்து சரியான பின்னரும் மீண்டும் வராது என்று உறுதியாக சொல்ல முடியாது.

    இது கட்டேட், பஸ்டுலார், எரித்ரோடெர்மிக், பிளேகு, இன்வெர்ஸ் என்று பல வகைப்படுகிறது. ஒரு சிலருக்கு நகத்தில் மட்டும் வரும், சிலருக்கு உள்ளங்கை, உள்ளங்காலில் வருகிறது. இது 'பால்மர் மற்றும் பிளான்டர் வகை சொரியாசிஸ்' என்றும், தலையில் மட்டும் வந்தால் 'ஸ்கால்ப் சொரியாசிஸ்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்தநோய் வந்தவர்கள் கவலை, பயம், பதற்றம் இல்லாமல் இருக்க வேண்டும்.

    இந்த நோய் குணமாக உதவும் சித்த மருந்துகள்: 1) அமுக்கரா மாத்திரை 2 வீதம், மூன்று வேளை சாப்பிடவும். 2) பரங்கிப்பட்டை சூரணம் ஒரு கிராம், பலகரைப் பற்பம் 200 மி.கி, சிவனார் அமிர்தம் 200 மி.கி. இவைகளை மூன்று வேளை, வெந்நீர் அல்லது தேனில் சாப்பிடலாம். 3) பரங்கிப்பட்டை ரசாயனம் 500 மி.கி இருவேளை உணவுக்குப் பின்பு எடுக்கவும். 4) வெட்பாலைத் தைலம் 2 சொட்டு வீதம் உள்ளுக்கு சாப்பிட்டு, பாதித்த இடங்களிலும் பூசவும். 5) ஆடு தீண்டாப்பாளைத் தைலம் வெளியே பூசி வரவேண்டும்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • கொழுப்பு சேராமலிருந்தால் விரைவில் வயிற்று தசைகள் இறுக்கமாகும்.
    • வயிற்றை குறைப்பது பற்றி பார்க்கலாம்.

    கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றவாறு வயிற்று சதைகள் நெகிழ்வடைவதால் வயறு பெரிதாக தோற்றமளிக்கிறது. பிரசவத்திற்கு பின்பு வயிற்று தசையை இறுக்கமாக்கி வயிற்றை குறைப்பது பற்றி பார்க்கலாம்.

    1) தாய்மார்கள் குழந்தைகளுக்கு தவறாமல் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால் சுமார் 500 முதல் 600 கலோரிகள் உடலில் இருந்து வெளியேறி, வயிற்றுப்பகுதியில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. கொழுப்பு சேராமலிருந்தால் விரைவில் வயிற்று தசைகள் இறுக்கமாகும்.

    2) குழந்தை பிறந்த இரண்டு வாரத்திற்கு பின்பு இடுப்பு பகுதிகள் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் உள்ள கொழுப்பை குறைக்கவும், வயிற்றுப் பகுதி, இடுப்பு பகுதி தசைகளை உறுதியாக்கவும், புஜங்காசனம், திரிகோணாசனம், உஸ்த்ராசனம் போன்ற யோகா பயிற்சிகளை செய்ய வேண்டும்.

    3) குழந்தை பிறந்த மூன்று முதல் நான்கு வாரத்திற்கு பின்பு இடுப்பு வயிற்றை சுற்றி 'போஸ்ட் பார்டும் அட்ஜஸ்டபிள் அப்டாமினல் பெல்ட்' பயன்படுத்த வேண்டும்.

    4) குழந்தை பிறந்த அடுத்த நாளிலிருந்து லவங்கப்பட்டை, எலுமிச்சை சாறு சேர்ந்த டீ இருவேளை குடிக்க வேண்டும்.

    5) குழந்தை பிறந்த பின்பு தினம் ஒரு வேளை 'கொள்ளு குடிநீர்' குடிக்கலாம்.

    கொள்ளு குடி நீர் தயாரிக்கும் முறை: வறுத்த கொள்ளு பொடி 2 டீஸ்பூன், பூண்டு 3 பல், ஒரு சிட்டிகை வறுத்த பெருங்காயம், மிளகு 5, தேவையான அளவு உப்பு. இவைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். இது வயிற்றைக் குறைப்பதுடன், தாய்ப்பால் சுரப்பையும் அதிகரிக்கும்.

    6) சித்த மருத்துவத்தில் ஏலாதி சூரணம் ஒரு கிராம், குங்கிலியப் பற்பம் 200 மி.கி., முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி. இவற்றை வெந்நீரில் காலை, இரவு இருவேளை எடுக்க வேண்டும்.

    7) தினமும் சிறிது நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி (பிரணாயாமம்) மற்றும் வயிற்றுத் தசைகள், இடுப்புத் தசைகளை உறுதிப்படுத்தும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • பல்வேறு மூலிகைகள் மெனோபாஸ் பித்தம் சார்ந்த குறிகுணங்களுக்கு நற்பலன் தரும்.
    • மெனோபாஸ் நெருங்கும் பெண்கள் தண்ணீர்விட்டான் கிழங்கு எடுத்துக்கொள்ள நன்மை செய்யும்.

    பெண்களுக்கு மெனோபாஸ் தருணத்தில் பித்தத்தின் சார்பாக அதிகம் கோபம், அடிக்கடி எரிச்சலாதல், அதிக உடல் சூடு, அதிக வெப்பத்தை உணருதல், அதிக வியர்வை, முகப்பரு, சில சமயம் தோல் தடிப்பு ஆகிய குறிகுணங்கள் உண்டாகி வருத்துவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. இத்தகைய குறிகுணங்களில் பித்தத்தை குறைக்கும்படியான உணவும், மருந்தும் நல்ல பலனைத் தருவதாக உள்ளது.

    பித்தத்தை குறைக்குப்படியான பல்வேறு மூலிகைகள் மெனோபாஸ் பித்தம் சார்ந்த குறிகுணங்களுக்கு நற்பலன் தரும். அதிமதுரம், தண்ணீர்விட்டான் கிழங்கு, சந்தனம்,சீரகம், வெந்தயம், வெட்டிவேர், வெண்பூசணி, சோற்றுக்கற்றாழை போன்ற மூலிகைகள் அவற்றுள் சில. இவை முக்கியமாக மெனோபாஸ் நிலையில் பெரும்பாலான பெண்கள் அவதியுறும் 'ஹாட் பிளஷஸ்' எனும் 'திடீர் வெப்ப உணர்வு' குறிகுணத்தினை குறைக்க உதவுவதாக உள்ளன.

    அதிமதுரம், சீரகம், சோம்பு இவை மூன்றையும் கலந்து பாலுடன் சேர்த்து பால் கசாயமிட்டு குடிக்க பித்தம் சார்ந்த அனைத்து குறிகுணங்களுக்கும் நல்ல பலனை அளிக்கும். முக்கியமாக அதிமதுரத்தில் உள்ள டெர்பீன்கள், சபோனின் ஆகிய வேதிப்பொருட்கள் ஹாட் பிளஷஸ் குறிகுணத்தை குறைப்பதாக உள்ளது. ஆனால் அதிக ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு அதிமதுரம் ஏற்புடையது அல்ல. சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள பித்தத்தைக் குறைக்கும் 'சீரக சூரணம்' எனும் மருந்து மேற்கூறிய குறிகுணங்களை குறைக்க உதவும்.

    தண்ணீர்விட்டான் கிழங்கு எனும் சித்த மருத்துவ மூலிகை மெனோபாஸ் நிலையில் உண்டாகும் பல்வேறு குறிகுணங்களுக்கு நல்ல பலனை தருவதாக உள்ளதை பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. மெனோபாஸ் நெருங்கும் தருவாயில் பெண்கள் தண்ணீர்விட்டான் கிழங்கு பால் கசாயமிட்டு எடுத்துக்கொள்ள பித்தவாதம் குறைந்து பெரும்பாலான குறிகுணங்கள் குறைந்து பெண்களுக்கு நன்மை செய்யும். அல்லது சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள 'தண்ணீர்விட்டான் நெய்' அல்லது 'சதாவேரி லேகியம்' ஆகிய மருந்துகளை ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நல்லது.

    இதில் உள்ள தாவர ஈஸ்ட்ரோஜன், பிற ஹார்மோன்களை சமநிலைப்படுத்தக்கூடியதாக உள்ளது. மேலும் இதனால் இறுதி மாதவிடாய்க்கு பின்னர் உண்டாகும் கருவாய் வறட்சி, எரிச்சல் ஆகிய குறிகுணங்களும் நீங்கும். பெண்கள் மேற்கூறிய பித்தம் சார்ந்த குறிகுணங்கள் ஏற்படும்போது சீரக தண்ணீர் எடுத்துக்கொள்வதும், வெட்டிவேர் மற்றும் சந்தனம் ஊறல் நீர் குடிப்பதும் கூட குறிகுணங்களை சமாளிப்பதில் ஏதுவானதாக இருக்கும்.

    வெந்தயம் எனும் எளிய கடைசரக்கு அதிகப்படியான டெஸ்டோஸ்டீரோன் செயல்பாட்டை தடுப்பதன் மூலம் மெனோபாஸ் நிலையில் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆக அவ்வப்போது வெந்தயத்தை நீரில் ஊற வைத்து எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒவ்வாமை, ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வெந்தயம் ஏற்புடையது அல்ல.

    பித்தத்தை குறைத்து நன்மை பயக்கும் சோற்றுக்கற்றாழையை அவ்வப்போது சாறாகவோ அல்லது குமரி எண்ணெய், குமரி லேகியம் போன்ற சித்த மருந்துகளாக எடுத்துக்கொள்ள பெண்களின் ஆரோக்கியத்திற்கு அடித்தளமிடும். நாம் உணவில் பயன்படுத்தும் வெண்பூசணி பித்தத்தை குறைப்பதில் பயனளிக்கும். ஆக, சித்த மருந்தான வெண்பூசணி நெய் கூட பயன்படும். மூலிகைகளை கடந்து சங்கு பற்பம், பவள பற்பம், வெள்வங்க பற்பம் போன்ற இன்னும் பல பற்ப, செந்தூர சித்த மருந்துகள் பயன்படும் வகையில் உள்ளது.

    மெனோபாஸ் நிலையில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு இயற்கையாகவே குறைவதால் உண்டாகும் பல்வேறு வளர்ச்சிதை மாற்றங்களில் முக்கியமான ஒன்று உடல் எடை கூடுதல். இதனால் எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து, எச்.டி.எல் எனும் நன்மை பயக்கும் கொழுப்பின் அளவு குறையக்கூடும். ஆகையால் பெண்கள் கருஞ்சீரகம், சீரகம் ஆகிய இரண்டையும் வறுத்துப்பொடித்து எடுத்துக்கொள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறையும்.

    தொடர்புக்கு: drthillai.mdsiddha@gmail.com

    • பனிக்காலத்தில் மூக்கடைப்பு, சளி, இருமல் போன்ற நோய்கள் ஏற்படும்.
    • பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன

    பனிக்கால நோய்களில் இருந்து உடலை காக்க சித்த மருத்துவ முறைகள் குறித்து இம்ப்காப்ஸ் இயக்குனரும், வேலூரை சேர்ந்த சித்த மருத்துவருமான டி.பாஸ்கரன் கூறியதாவது:-

    பொதுவாக பனிக்காலம் என்பது (முன்பனி, பின்பனி) மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் வரக்கூடியது.

    இந்த பனிக்காலத்தில் மூக்கடைப்பு, சளி, இருமல் போன்ற நோய்கள் ஏற்படும். இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு போன்ற பண்டங்களை உட்கொள்ள வேண்டும்.

    நீரை கொதிக்க வைக்கும்போது ஒரு டீஸ்பூன் மிளகு அல்லது லவங்கம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். காலையில் எழுந்து மூச்சுப்பயிற்சி செய்து துளசி, மிளகு, வெற்றிலை மற்றும் தேன் சேர்த்த பானத்தை அருந்தினால் மூச்சுப்பாதை சீராகி கோழையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் வராமல் தடுக்கப்படும். அத்துடன் உடலுக்கு குளிரைத் தாங்கும் சக்தி ஏற்படும்.

    மேலும் பருவ மாற்றத்தால் ஏற்படக்கூடிய சுரம் (காய்ச்சல்), சளித் தொல்லையைப் போக்க திரிகடுகு சூரணத்தை தேன் சேர்த்துச் சாப்பிடலாம். நெஞ்சில் சளி கட்டுதல், தொண்டையில் டான்சில் வீக்கம், ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் நோய்கள் வர வாய்ப்பு உள்ளதால் கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டையை நீரில் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்து வருவது நல்லது.

    பனிக்காலத்தில் காற்றில் பிராணவாயு குறைவாக இருப்பதால் சுவாசிப்பதில் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. இதற்கு கல்யாண முருங்கை இலையை வடை அல்லது அடை செய்து சாப்பிட்டு வருவது நல்ல தீர்வைத் தரும். சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் முற்றிய முருங்கை விதையைச் சாப்பிட்டு அந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் சளி, இருமல் மட்டுமின்றி மலக்கட்டினையும் தடுக்கலாம். மேலும் இந்த காலக்கட்டத்தில் எப்போதும் குளிர்ந்த சூழல் நிலவுவதால் அந்த குளிர்ந்த காற்றை சுவாசிக்கும்போது ஜலதோஷத்துடன் தும்மல், மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    இந்தச் சூழலில் வாய் வழியாக சுவாசிக்க நேர்வதால் மூச்சுக்குழாய்க்குள் கிருமிகள் எளிதாக நுழைந்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. நொச்சி, வேப்பிலை, நுணா போன்றவற்றை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது மூக்கடைப்பிலிருந்து விடுபட உதவும். மிளகை தீயில் எரித்து அதன் புகையை சுவாசித்தால் மூக்கடைப்பு விலகும். கற்பூரவல்லி, தூதுவளை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் சளித்தொல்லையை மட்டுமல்ல மூட்டு வலியையும் தவிர்க்கலாம். மூட்டு வலி உள்ளவர்கள் அவ்வப்போது முடக்கத்தான் கீரையை தோசை செய்து சாப்பிடுவது, ரசம் வைத்து சாப்பிட்டு வருவது நல்லது.

    பனிக்காலத்தின்போது வாரத்தில் இரண்டு நாட்கள் சுக்கு மற்றும் நொச்சித் தைலத்தை உடல் முழுவதும் தடவ வேண்டும். முக்கியமாக எல்லா மூட்டுகளிலும் இந்த தைலங்களைத் தடவி குளித்தால் மூட்டுவலி நன்றாகக் குறையும். அத்துடன் உடல் வறட்சியும் குறையும். உடல் வறட்சி அதிகம் உள்ளவர்கள் குளிப்பதற்கு 10 நிமிடத்துக்கு முன் உடலில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். பனிக்காலத்தில் காலை எழுந்ததும் வரும் அடுக்குத் தும்மல், மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சினைகளுக்கு ஒரு டம்ளர் பாலில் 10 பூண்டுப்பற்களை உரித்துப்போட்டு நன்றாக வேகவைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் தீர்வு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூக்கம் குறைவானாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும்.
    • தாய்ப்பாலை சுரக்க வைக்கும் உணவுகளை அதிக அளவில் சாப்பிடுங்கள்.

    60% பெண்கள் தாய்ப்பால் எனக்கு சரியாக சுரக்கவில்லை எனக் கருதி, தாய்ப்பால் கொடுப்பதை சீக்கிரமாகவே நிறுத்திவிடுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

    புரொலெக்டின் ஹார்மோன் மற்றும் ஆக்சிடோசின் ஹார்மோன் சீராக இருந்தால் நன்றாக பால் சுரக்கும். இவைகளை அதிகப்படுத்தி பால் சுரப்பை மேம்படுத்த உதவும் சித்த மருந்துகள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் வருமாறு:

    தண்ணீர் விட்டான் கிழங்கு அல்லது சதாவேரி பொடி அல்லது லேகியம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிடலாம். சவுபாக்கிய சுண்டி லேகியம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிடலாம்.

    வெந்தயத்தை பொடித்து நல்லெண்ணெய் சேர்த்து களியாக கிண்டி காலை, இரவு இருவேளை கொடுக்க வேண்டும். பூண்டு, பால் சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். அல்லது பூண்டு குழம்பு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அம்மான் பச்சரிசி இலையைக் கீரையாக சாப்பிட்டு வரவேண்டும். பெருஞ்சீரகம் பால் சுரப்பை அதிகரிக்கும். பெருஞ்சீரக டீ அல்லது பெருஞ்சீரகத்தை வறுத்து சாப்பிடலாம்.

    பாதாம் பால் குடிக்கலாம். கருப்பட்டியில் செய்த கறுப்பு எள்ளுருண்டை சாப்பிட வேண்டும். பசலைக்கீரை, அரைக்கீரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பப்பாளிக்காயை கூட்டு வைத்து சாப்பிட வேண்டும். பால், தயிர், கேரட், கேழ்வரகு, முருங்கைக்காய், பாலாடைக்கட்டி, சுறாமீன், பாறை மீன், ஓட்ஸ் கஞ்சி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூசணி சாறு இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு தூங்க வேண்டும். இதனால் புரொலெக்டின் மற்றும் அன்புக்குரிய ஹார்மோன் ஆக்சிடோசின் இவை அதிகரித்து பால் சுரப்பை அதிகப்படுத்தும்.

    குழந்தைக்கு ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுக்கும்போது, சரியான நிலையில் நீங்களும் குழந்தையும் இருக்க வேண்டும். தாய்ப்பால் சுரப்புக்காக நீங்கள் மார்பகத்தை அவ்வபோது அழுத்தி விடுங்கள். மார்பகத்தை அளவாக பம்ப் செய்யுங்கள். தாய்ப்பால் நன்றாக சுரக்கும். தாய்ப்பாலை சுரக்க வைக்கும் உணவுகளை அதிக அளவில் சாப்பிடுங்கள். நீங்களும் குழந்தையும் நன்கு தூங்க வேண்டும். தூக்கம் குறைவானாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும்.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • சிலருக்கு முகத்தில் அங்கும் இங்குமாக பல இடத்தில் கருந்திட்டுகள் இருக்கும்.
    • கருந்திட்டுகள் பிரச்சனைக்கு சித்த மருத்துவத்தில் நிரந்தர தீர்வு உண்டு.

    முகத்தில் உள்ள கருமை நிறத் திட்டுகள் நீங்க உதவும் சித்த மருந்து குங்குமாதி லேபம். இதை இரவு நேரங்களில் முகத்தில் பூசி வர வேண்டும். அடுத்து, ஒரு ஜாதிக்காய், 2 பாதாம் பருப்பு எடுத்து நன்றாக பொடி செய்து அரைத்து அதை கருந்திட்டு உள்ள இடத்தில் பூசி வர வேண்டும்.

    ஜாதிக்காயிலுள்ள 'மிரிஸ்டிசின்' என்னும் சத்து, தோல் கருமை, தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து, முதுமையிலும் இளமையான தோற்றத்தை தரும். வாரம் இருமுறை சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இது முகத்திற்கு இயற்கை சூரிய எதிர்ப்பு கவசமாகத் திகழும். இதனால் முகத்தில் ஏற்படும் கருந்திட்டுகள் மறையும்.

    100 மில்லி அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் குங்குமப்பூ ஒரு கிராம் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். சூரியக்கதிர்கள் உடலில் படும் இடங்களான முகம், கழுத்து, கை, கால்களில் இதை தினமும் தடவி வர வேண்டும். இதன்மூலம் சூரியக் கதிரினால் வரும் கருமையை நீக்கி தோலுக்கு இளமையான வசீகரத்தைப்பெறலாம்.

    வைட்டமின் ஏ சத்துள்ள உணவுகள் தோலின் கொலாஜன் மற்றும் எலாஸ்டிக் தன்மையை அதிகப்படுத்தும். இவற்றிலுள்ள ரெட்டினாய்டுகள் தோலுக்கு பளபளப்பைக் கொடுக்கும். ஆகவே, வைட்டமின் ஏ சத்து நிறைந்த மாம்பழம், பப்பாளி, கேரட், முருங்கைக்காய், கீரை, முட்டை, மீன், இறைச்சி, பால் மற்றும் தர்ப்பூசணி பழம், வெள்ளரிக்காய் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முகத்தை அடிக்கடி தண்ணீரில் கழுவி வர வேண்டும்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • கொழுப்பு செரிமானத்திற்கு பித்த நீர் இன்றியமையாதது.
    • பித்தப் பை பேரிக்காய் வடிவிலிருக்கும் ஜீரண உறுப்பு.

    பித்தப் பை பேரிக்காய் வடிவிலிருக்கும் ஜீரண உறுப்பு. பித்தப்பையில் தான் கல்லீரலில் சுரக்கும் பித்த நீர் சேகரிக்கப்பட்டு உணவு செரிமானத்தின் போது சிறு குடலை வந்தடையும். சுமார் 30-50 மி.லி. பித்த நீர் பித்தப் பையில் இருக்கும். கொழுப்பு செரிமானத்திற்கு பித்த நீர் இன்றியமையாதது. கல்லீரல் சுரக்கும் பித்த நீரில் கொழுப்பு அதிக அடர்த்தியாக இருப்பது, பித்த நீரில் பிலிரூபின் அதிகமாக இருப்பது, பித்தப் பை சரியாக சுருங்கி, விரியாமல் இருப்பது, இவை பித்தப் பையில் கற்கள் உருவாகுவதற்கான பொதுக் காரணங்கள்.

    இவை தவிர பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரப்பது, சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, குறிப்பாக காலை உணவைத் தவிர்ப்பது, அதிக எண்ணெய் பலகாரங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது, உடல் பருமன் போன்ற காரணங்களால் பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன.

    சித்த மருத்துவத்தில் பித்தப்பை மற்றும் பித்தத்தாரை கற்களுக்கான சிகிச்சை முறைகள் வருமாறு:

    இஞ்சிச்சாறு, பூண்டுச்சாறு, பழச்சாறு, புதினா சாறு இவைகளை சமஅளவில் எடுத்து, அதனுடன் சமஅளவு ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து கலந்து பிரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை 10 மி.லி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

    மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை எடுத்து பழச்சாற்றில் கலந்து குடிக்க வேண்டும். கீழாநெல்லி பொடி அல்லது கீழாநெல்லி சாறு மற்றும் கரிசாலை பொடி அல்லது கரிசாலைச் சாறு எடுத்து மோருடன் கலந்து காலை, இரவு என இருவேளை குடித்து வரவேண்டும்.

    கீழாநெல்லி மாத்திரை காலை, மதியம், இரவு 2 மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும். சாந்த சந்திரோதய மாத்திரை காலை, மதியம், இரவு 2 மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும்.

    பிடங்கு நாறி இலைப்பொடி, மஞ்சள், கடுக்காய்த் தோல் இவை மூன்றையும் பொடித்து வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் பொடியை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் குடிக்க வேண்டும். இது பிடங்கு நாறிக் குடிநீர் எனப்படும். மண்டூராதிக் குடிநீர், வெடியுப்புச் சுண்ணம், வெடிஅன்னபேதிச் செந்தூரம் இவைகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளலாம்.

    நார்ச்சத்து அதிகமுள்ள அவரை, பீன்ஸ், கோவைக்காய், சுரைக்காய், பாகற்காய், புடலங்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, கீரைகள் இவைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், பேக்கரி உணவுகளை தவிர்க்க வேண்டும். தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீரை கட்டாயம் குடிக்க வேண்டும்.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • சுகாதாரமான உணவுகளை சாப்பிட வேண்டும்
    • காரமான, புளிப்பான உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள்.

    வயிற்றுப்புண் குணமடைய நேரம் தவறாமல் உணவு சாப்பிடுங்கள். காரமான, புளிப்பான உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள். இரவு நெடுநேரம் கண்விழித்து டி.வி, மொபைல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும், மனச்சோர்வு, மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். சுகாதாரமான உணவுகளை சாப்பிட வேண்டும், சுகாதாரமற்ற தண்ணீர், உணவுகளால் ஹெச்.பைலோரை பாக்டீரியா தொற்றினாலும் குடல் புண் வரும்.

    இதற்கான சித்த மருந்துகள்: வில்வாதி லேகியம், சீரக வில்வாதி லேகியம் இவைகளில் ஒன்றை காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிடுங்கள். அடுத்து, ஏலாதி சூரணம் ஒரு கிராம், சங்கு பற்பம் 200 மி.கி. எடுத்து மூன்று வேளை, நெய்யுடன் கலந்து சாப்பிட வேண்டும். மேலும், குன்ம குடோரி மெழுகு கால் டீ ஸ்பூன் (250 மி.கி) காலை, இரவு உணவுக்குப் பின்பு சாப்பிடுங்கள்.

    உணவில் மோர், தயிர், பிரண்டைத் தண்டு துவையல், மணத்தக்காளி கீரை, சுண்டை வற்றல் குழம்பு மற்றும் பழைய சாதத்துடன் சின்ன வெங்காயம், இஞ்சி, மோர் கலந்து சாப்பிடுங்கள். பழங்களில் மாதுளம்பழம், செவ்வாழைப்பழம், ஆப்பிள் சாப்பிடுங்கள்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • உடல் பருமனுள்ளவர்களுக்கு அதிகமாக வருகிறது.
    • நின்றுகொண்டே வேலை பார்ப்பவர்களுக்கு வரும்.

    வெரிகோஸ் வெயின் பிரச்சினை என்பது பெரும்பாலும் கால்களில் தோலுக்கு அருகிலுள்ள ரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் ஒழுங்காக செயல்படாமல் இருப்பது, அல்லது செயலற்று போவதால் ரத்தம் கீழ்நோக்கி தேங்கி, நாளங்கள் வீங்கி, சுருண்டு காணப்படும் நோயாகும். இது பெரும்பாலும் நின்றுகொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும், உடல் பருமனுள்ளவர்களுக்கும் அதிகமாக வருகிறது. இந்நோயில் ரத்தம் தேங்கி நிற்பதால் நிற மாற்றமடைந்து நீலம் கலந்த கருப்பு நிறத்தில் காணப்படும், அரிப்பு, புண்கள் எளிதில் வருகிறது.

    இதற்கான சித்த மருந்துகள்: அமுக்கரா சூரணம் 1 கிராம், முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி., நாக பற்பம் 100 மி.கி., எடுத்து தேன், பால் அல்லது வெந்நீரில் மூன்று வேளை சாப்பிடலாம். பாதிக்கப்பட்ட பகுதியில் எட்டித் தைலம் தேய்க்கலாம். அரிப்பு இருந்தால் அருகன் தைலமும், புண் இருந்தால் பச்சை எண்ணெய்யும் அந்த இடத்தில் போடலாம். அவுரியை அரைத்து வெரிகோஸ் வெய்ன் பிரச்சினை உள்ள இடத்தில் கட்டலாம்.

    சிறப்பு சிகிச்சையாக "அட்டை விடுதல் சிகிச்சை" செய்யலாம். இது சித்தர் பெருமான் அகத்தியர் அருளியது. இந்த சிகிச்சையில் வலி இருக்காது. தொடர்ந்து அட்டை விடும் போது இந்த வெரிகோஸ் வெய்ன் பிரச்சினை நன்றாக சரியாகிவிடும். இது ஒரு பாதிப்பில்லாத எளிய சிகிச்சை முறை. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனையில் இந்த சிகிச்சை இலவசமாக கிடைக்கும்.

    வெரிகோஸ் வெய்ன் பாதிப்புள்ளவர்கள் நெடுந்தூரம் நடக்கும் போது அல்லது வெகு நேரம் நிற்கும் போது பாதிக்கப் பட்ட இடத்தில் இறுக்கமாக துணி அல்லது பேண்டேஜ் கட்டுவது நல்லது.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • ஆறாவது சித்த மருத்துவ தின விழா நடைபெற உள்ளது
    • திருச்சியில் வருகிற 8, 9-ந்தேதிகளில்

    திருச்சி

    தேசிய சித்த மருத்துவ கவுன்சில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் 6-வது சித்தர் தின விழா வருகிற ஜனவரி 8, 9 ஆகிய நாட்கள் கொண்டாப்படுகிறது. இது குறித்து திருச்சி புத்தூர் அரசு சித்த மருத்துவமனையில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அலுவலகத்தில் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் மீனா குமாரி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ்காமராஜ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- இந்த சித்தர் தின விழாவானது திருச்சி கருமண்டபம எஸ்.பி.எஸ். மஹாலில் நடைபெறுகிறது. மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நடவடிக்கை காரணமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதில் சித்த மருத்துவத்தின் பங்களிப்பு மகத்தானதாக இருந்தது. ஒருங்கிணைந்த சிகிச்சை முறையின் காரணமாக இந்திய அளவில் தமிழகத்தில் கொரோனா இறப்பு சதவீதம் மிகக் குறைவாக இருந்தது. முதல் அலையின் போது தமிழகத்தில் 30 சித்தா கேர் சென்டர்கள் தொடங்கப்பட்டன. அதன் பின்னர் இரண்டாவது அலை மிகப் பெரிய சவாலாக விளங்கியது. அப்போதும் சித்த மருத்துவத்தின் பங்கு பெரிய அளவில் இருந்தது. தற்போது பிரதமர் மோடி குஜராத்தில் ஆயுஷ் அமைச்சகம் மூலம் ஒரு ஆய்வு மையத்தை உலக சுகாதார மையத்துடன் இணைந்து ரூ.300 கோடியில் ஆய்வு மையத்தை தொடங்கியுள்ளார். இதில் மண்ணின் மரபு சார்ந்த மருத்துவத்தை அறிவியல் பூர்வமாக கொண்டு செல்ல பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மரபு சார்ந்த மருத்துவமும் அறிவியலே என்பதை அலோபதி மருத்துவர்களும் ஒத்துக்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். எதிர்காலத்தில் இதய நோய் சர்க்கரை வியாதி உள்ளிட்ட மருத்துவ சிகிச்சையிலும் சித்த மருத்துவத்தின் பயனை உலகம் விரைவில் அறியும். திருச்சியில் நடைபெறும் இந்த சித்த தின விழாவில் மத்திய அமைச்சர்கள் மாநில அமைச்சர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மூலிகை கண்காட்சி மற்றும் பேரணி நடைபெற உள்ளது. மேலும் குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


    • நாம் உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
    • மலக்கட்டு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வேலூரைச்சேர்ந்த சித்த மருத்துவரும் இம்ப்காப்ஸ் இயக்குனருமான டி.பாஸ்கரன் கூறியதாவது:-

    மூட்டு வலியைப் பொறுத்தவரை மூட்டுகளில் (கீல்) வலியின் ஆதிக்கம் அதிகரித்து நோய் உண்டாகும். மூட்டுகளில் வீங்குவது, குத்துவது, நோவது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி கால்களை மடக்கவும், நீட்டவும், அசைக்கவும் முடியாமல் செய்யக்கூடியது இந்த மூட்டு வலி. 60-70 வயதில் ஏற்பட்ட இந்நோய் தற்போதைய சத்தற்ற உணவு மற்றும் நீரின் காரணமாக சிறு வயதினரையும் பாதிக்கிறது.

    இதுபோன்ற சூழலில் முடக்கத்தான் இலைச்சாற்றையும் விளக்கெண்ணெயையும் சம அளவு எடுத்து கலந்து காய்ச்சி வடிகட்டி சர்க்கரை சேர்த்து வேளைக்கு ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம். இதை தினமும் இரண்டு தடவை வீதம் சாப்பிட்டால் முழங்கால் வலி தீரும்.

    வாதநாராயணன் இலைகளை நிழலில் காயவைத்துப் பொடியாக்கி தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் வாதநோய்கள் விலகும்.

    நொச்சிஇலை (5), மிளகு (5) போன்றவற்றை நீர் விடாமல் அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து வெந்நீர் கலந்து சாப்பிடுவது நல்லது.

    இதைச் சாப்பிட்டால் ஓரிரு வேளையிலேயே வாய்வு பிடிப்பு நீங்கிவிடும். சிற்றரத்தையை பால் விட்டு அரைத்து பாலில் கரைத்துக் காய்ச்சி வடிகட்டிச் சாப்பிடலாம். இதனுடன் தகுந்த அளவு சர்க்கரை சேர்த்து தினமும் இரண்டுவேளை பருகி வந்தால் வாத நோய் விலகும்.

    மூட்டு வீக்கம்

    கைப்பிடி அளவு வாதநாராயணன் இலையுடன் ஆறு மிளகு, சிறிது உப்பு சேர்த்து இடித்து சாறு பிழிந்து தினமும் காலையில் அருந்த வேண்டும். இதை 10 நாட்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் வாத வீக்கம் மற்றும் குடைச்சல் நீங்கும்.

    கட்டுக்கொடியின் வேர், சுக்கு, மிளகு போன்றவற்றை 5 கிராம் வீதம் எடுத்து சிதைத்து குடிநீராக்கி அருந்தினால் வாத வலிகள் தீரும். இதேபோல் முருங்கை ஈர்க்கினை சிதைத்து நீர் விட்டுக் காய்ச்சிக் குடித்தால் உடல் வலி மற்றும் அசதி தீரும்

    உணவு முறைகள்

    மூட்டு வலி, வாத நோய்களால் வரக்கூடிய மூட்டுவலிகளுக்கு நாம் உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். மலக்கட்டு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கிழங்கு வகைகளைத் தவிர்த்து உளுந்து, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சி, நாட்டுக்கோழி, முட்டை போன்றவற்றைச் சேர்க்கவும். கீரை, பச்சைக் காய்கறிகள், பிரண்டைத் துவையல், முருங்கைக்கீரை மற்றும் அதன் பூ போன்றவற்றை சாப்பிட வேண்டும். பாதாம், அக்ரோட், பேரீச்சம்பழம், நல்லெண்ணெய் போன்றவையும் நல்லது.

    மூட்டுவலிக்கு எண்ணெய் துத்தி இலை, குப்பைமேனித் தழை, சோற்றுக் கற்றாழை, கோவை இலை போன்றவற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்து தனித்தனியாக இடித்து சாறு பிழிய வேண்டும். இத்துடன் 750 மில்லி அளவு வேப்பெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவினால் வாத வலி நீங்கும்.

    தழுதாழை இலையை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது விளக்கெண்ணெய் கலந்து வதக்கி மூட்டுவலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். மூன்று நாட்கள் தொடர்ந்து ஒத்தடம் கொடுத்தால் மூட்டு வலி நீங்கும்.

    பழங்கள்

    உணவில் வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்து கருப்பட்டி, வெல்லம் சேர்க்க வேண்டும். செக்கில் ஆட்டிய எண்ணெய் பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கேழ்வரகு, சாமை, தினை போன்ற சிறுதானிய உணவுகளையும் மூங்கிலரிசியையும் பயன்படுத்த வேண்டும். முருங்கைக்காய், முருங்கைக் கீரை, பூண்டு, முடக்கத்தான், தேங்காய், நெல்லிக்காய், கைக்குத்தலரிசி சேர்க்கவும். பழங்களில் சப்போட்டா, மாதுளை, அன்னாசி சேர்த்துக்கொள்ள வேண்டும். வெள்ளாட்டுக்கறி, வெள்ளாட்டு கால்கள் சிறந்த உணவு. குறிப்பாக நீர் வடிவமாக எடுத்துக் கொள்ளும்போது தேவையான புரதச்சத்து கிடைக்கும். இரவில் ஊற வைத்த கருப்பு எள்ளினை காலையில் வெறும் வயிற்றில் உண்ணலாம். பாசிப்பருப்பு சுண்டல், கொண்டைக்கடலை சுண்டலை மாலையில் எடுத்துக்கொள்ளலாம்.

    வெளிப் பிரயோகம்

    வேம்பு, புங்கன், இலுப்பை, நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற ஐங்கூட்டு எண்ணெய் 10 கிராம் எடுத்து அதனுடன் ஐந்து பழுத்த எருக்கு இலை, பச்சைக் கற்பூரம் சேர்த்து காய்ச்சி பூசினால் வலி உடனே குறையும். 100 மில்லி நல்லெண்ணெயுடன் பூனைக்கண் குங்கிலியம் 10 கிராம் சேர்த்துக் காய்ச்சி பூசலாம். தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி அதில் கற்பூரம் சேர்த்து பயன்படுத்தலாம். இரண்டு டீஸ்பூன் உளுந்துடன் ஒரு டீஸ்பூன் ஆவாரை இலைப் பொடி நீர் சேர்த்துப் பற்றிடலாம். இவற்றையெல்லாம் முறைப்படி செய்தால் மூட்டு வலியில் இருந்து விடுபடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சித்த மருத்துவர் டி.பாஸ்கரன்.

    ×