search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோசடி பெண்"

    • திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சத்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
    • சத்யாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் புதிய தகவல் கிடைத்துள்ளது.

    தாராபுரம்:

    ஈரோடு மாவட்டம் கொடிமுடி அருகே உள்ள ஒத்தக்கடையை சேர்ந்தவர் சத்யா (வயது 35). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், கணவர் பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து பணம் சம்பாதிக்கவும், உல்லாச வாழ்க்கை வாழவும் ஆண்கள் பலரை திருமணம் செய்து ஏமாற்றி நகை-பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக அரசு அதிகாரிகள், வசதி படைத்த திருமணமாகாத வாலிபர்கள் ஆகியோரை குறி வைத்து இந்த செயலில் ஈடுபட்டார். இதற்காக திருமண வரன் பார்க்கும் மேட்ரிமோனியில் தனது தகவல்களை பதிவிட்டு இருந்தார்.

    இதன் மூலம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சத்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    தனக்கு திருமணமானதை மறைத்து அந்த வாலிபரை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர் சத்யா மீது சந்தேகமடைந்த அந்த வாலிபரின் உறவினர்கள் கொடிமுடி சென்று விசாரித்த போது அவர் ஏற்கனவே பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றி நகை-பணம் பறித்து வந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் மனமடைந்த வாலிபரின் தாத்தா தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இது குறித்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் சத்யாவை அழைத்து விசாரணை நடத்திய போது அவர், திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகள், சர்வேயர், டி.எஸ்.பி., சப்-இன்ஸ்பெக்டர், சாப்ட்வேர் என்ஜினீயர், திருமணமாகாத வாலிபர்கள், தொழிலதிபர்கள் உள்பட 53 பேரை ஏமாற்றி திருமணம் செய்து லட்சக்கணக்கில் நகை-பணம் பறித்தது தெரியவந்தது.


    தனது மோசடி செயல் போலீசாருக்கு தெரியவரவே, சத்யா போலீஸ் நிலையத்தில் இருந்து நைசாக தப்பி சென்று விட்டார். 53 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணியின் செயல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மீம்ஸ்களும் வெளியாகின.

    இதையடுத்து தலைமறைவான சத்யாவை பிடிக்க தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா (பொறுப்பு) தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சத்யாவின் செல்போன் சிக்னலை வைத்து கண்காணித்த போது அவர் புதுச்சேரியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் புதுச்சேரி சென்று சத்யாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை தாராபுரம் அழைத்து வந்தனர். தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பல்லடம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் சத்யாவை கோவை மகளிர் சிறையில் அடைத்தனர்.

    அவர் மீது கொலை முயற்சி, ஏமாற்றி பணம் பறித்தல், தனக்கு திருமணம் ஆனதை மறைத்து பல திருமணங்களை செய்தல், ஆபாசமான வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் சத்யாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் புதிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ள செல்போன் எண் மூலம் தன்னை தொடர்பு கொள்ளும் ஆண்களை சத்யா தனிமையில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது தன் அழகில் அவர்களை மயக்கும் அவர் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். ஓட்டலில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருக்கும் போது சத்யா ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார்.

    பின்னர் அந்த ஆபாச வீடியோ காட்சிகளை காண்பித்து தன்னிடம் உல்லாசமாக இருந்த ஆண்களிடம் நகை-பணம் பறித்துள்ளார். அவ்வப்போது செலவுக்கு ரூ.10ஆயிரம், 20ஆயிரம் என கேட்டுள்ளார். ஆபாச வீடியோ காட்சியை வைத்து மிரட்டியதால் பலர் பயந்து சத்யா கேட்கும் பணத்தை கொடுத்துள்ளனர். இவரிடம் திருமணம் ஆன ஆண்களின் குடும்பத்தினர், மானம் போய் விடும் என்று பயந்து கேட்டபோதெல்லாம் பணத்தை வாரி வழங்கியுள்ளனர். சொத்துக்களையும் எழுதி கொடுத்துள்ளனர். இதனால் சத்யாவால் பாதிக்கப்பட்ட பல குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

    தற்போது சத்யா போலீஸ் பிடியில் சிக்கியுள்ள நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பலர் ஆன்லைன் மூலம் தாராபுரம் போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர். இதுவரை 20க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ளனர். அதில் சத்யா மீது நடவடிக்கை எடுப்பதுடன், தாங்கள் கொடுத்த நகை-பணத்தை மீட்டு தருமாறு கூறியுள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திய சத்யாவிடம் இருந்து நகை-பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போன்களில் ஆபாச படங்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்து அதனை பறிமுதல் செய்யவும் உள்ளனர்.

    இதனிடையே சத்யாவின் இந்த செயலுக்கு உறுதுணையாக கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையை சேர்ந்த தமிழ்செல்வி இருந்துள்ளார். அவர்தான் புரோக்கராக செயல்பட்டு சத்யாவுக்கு ஆண்கள் பலரை திருமணம் செய்து வைத்து ஏமாற்றி பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் சிலர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே தலைமறைவான தமிழ்செல்வியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால் இந்த சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.

    • திருமணம் ஆகாத நபர்களை குறிவைத்து அவர்களிடம் தொடர் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
    • திருமண மோசடி திருவிளையாடல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் குமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 35 வயதான இவர் தாராபுரம் - உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் கால்நடை தீவனம் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். குமாருக்கு 35 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் முடிக்க பெண் கிடைக்காததால் இவரது உறவினர்கள் தீவிரமாக வரன் தேடி வந்தனர்.

    இதற்கிடையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு மேட்ரிமோனியல் ஆப் மூலம் மூலம் சந்தியா (35) என்பவருடன் குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து பேசி வந்தனர். அப்போது, தனது திருமணத்துக்கு தமிழ்ச்செல்வி என்ற இடைத்தரகர் வரன் தேடிக் கொண்டிருப்பதாக சந்தியா தெரிவித்ததுடன், தமிழ்ச்செல்வியையும் குமாருக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். அதோடு திருமண வரன் அமையாமல் இருந்ததால் சந்தியாவை திருமணம் செய்ய குமார் விரும்பியுள்ளார். இதனிடையே, இருவரும் நெருங்கி பழகி வந்த சமயத்தில் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை, வீட்டில் அவசரமாக திருமண ஏற்பாடு செய்கிறார்கள் எனக் கூறி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு குமாரிடம் சந்தியா வற்புறுத்தி உள்ளார்.

    இந்த நிர்பந்தத்தின் காரணமாக தமிழ்ச்செல்வி தலைமையில் குமாருக்கும் சந்தியாவுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பழனி அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை குமாரின் பெற்றோர் ஏற்றுக்கொண்ட நிலையில் சந்தியாவுக்கு 12 பவுன் நகைகள், புடவைகள் என அனைத்தையும் வாங்கி கொடுத்து நன்றாக பார்த்துக் கொண்டனர். இதனிடையே, இவர்களுடைய திருமண வாழ்க்கை 3 மாதங்கள் கடந்த நிலையில் சந்தியாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    சந்தியா தனக்கு 30 வயது எனக் கூறிய நிலையில் அவர் கூறிய வயதுக்கும், அவரது தோற்றத்திற்கும் பொருத்தம் இல்லாமல் இருந்ததால் அவரது அடையாள அட்டையை குமார் வாங்கி பார்த்துள்ளார். அதில், கணவர் பெயர் இடத்தில் சென்னையை சேர்ந்த வேறு ஒருவரின் பெயர் இருந்ததும், வயது அதிகமாக இருப்பதும் தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குமார், சந்தியாவிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது, குமார் தரப்பிற்கும் சந்தியாவிற்கும் கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில், கோபமடைந்த சந்தியா, குமாரையும், அவரது குடும்பத்தையும் மிரட்டினார்.

    இதனால் உஷாரான குமார், தனது மனைவி சந்தியாவை சமாதானம் செய்வதுபோல் பேசி நைசாக தாராபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசாரிடம் நடந்த சம்பவங்களை எடுத்து கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்தியா போலீஸ் விசாரணையின் போதே அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

    இதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் சந்தியா குறித்த தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில், சந்தியாவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த ஒரு நபருடன் திருமணம் முடிந்ததும் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரிவந்தது. அந்த நேரத்தில், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்தியா அவரை விட்டு பிரிந்தார். காலப்போக்கில் தனிமையில் இருந்த சந்தியா பணத்திற்காக வேறு திசையில் பயணிக்க தொடங்கினார். திருமணம் ஆகாத நபர்களை குறிவைத்து அவர்களிடம் தொடர் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். சந்தியாவின் திருமண மோசடி பட்டியலில் டிஎஸ்பி., ஒரு காவல் ஆய்வாளர், மதுரையில் மற்றொரு போலீசார், கரூரில் ஒரு பைனான்ஸ் அதிபர் என சுமார் 53 பேருடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

    தனக்கு திருமணம் நடந்த சில மாதங்களிலேயே கணவருடன் தகராறு செய்து கொண்டு நகை பணத்துடன் சந்தியா தலைமறைவாகி விடுவது தொடர் கதையாக நீடித்து வந்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருப்பூர், ஈரோடு, கோவை உள்பட பல்வேறு இடங்களில் திருமணத்திற்கு பெண் தேடும் 40 வயதுக்கு மேற்பட்டோர், திருமணம் ஆன ஆண்கள், அரசு அதிகாரிகள், சர்வேயர், சாப்ட்வேர் என்ஜினீயர் , போலீஸ் அதிகாரிகள் எனச் சந்தியாவின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கல்யாண ராணியான சந்தியாவின் இந்த திருமண மோசடி திருவிளையாடல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மீம்ஸ்களும் வெளியிட்டு வருகின்றனர்.

    இதையடுத்து சந்தியாவை பிடிக்க தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கீதா தலைமையில் 5 போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் சந்தியாவை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே சந்தியாவின் திருமண மோசடி குறித்து தினமும் புது புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    மேட்ரிமோனி மூலம் திருமணமாகாத வாலிபர்களை வலைக்கும் சந்தியா பின்னர் அவர்களுடன் நெருங்கி பழகுவதுடன் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர்களை காமவலையில் வீழ்த்தி அவ்வப்போது செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார். இதையடுத்து திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார். திருமணமானதும் வீட்டின் அறையில் இருந்து வெளியே வராமல் உள்ளே இருந்து நீண்ட நேரமாக செல்போனில் பேசியுள்ளார். இது பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விசாரணை நடத்தவே சந்தியா திருமண மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. அதன்பிறகு கணவர் வீட்டாரை மிரட்டி நகை, பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.

    அவருக்கு உடந்தையாக ஒரு வக்கீல், தமிழ்செல்வி மற்றும் வாலிபர் 4 பேர் இருந்துள்ளனர். சந்தியா சிக்கலில் மாட்டும் போது அந்த கும்பல் வந்து உதவியுள்ளனர். அவர்கள் வாலிபர் வீட்டினரை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளனர். மேலும் ஜீவனாம்சம், சொத்துக்களையும் கேட்டுள்ளனர். கொடுக்க முன்வராத நபர்களிடம் கற்பழிப்பு வழக்கு தொடர்வோம், விவாகரத்து தரமாட்டோம் என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போய் பலர் நகை-பணத்தை கொடுத்துள்ளனர். சிலர் இன்று வரை சந்தியாவுக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் கொடுத்து வருகின்றனர். இன்ஸ்பெக்டர் ஒருவரை காம வலையில் வீழ்த்திய சந்தியா 7 மாத கர்ப்பமாகி உள்ளார். பின்னர் கருவை கலைத்து விட்டார். சந்தியாவுக்கு நடவடிக்கை பிடிக்காததால் அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டார். தாய் பிரிந்து சென்று விட்டார்.

    சந்தியாவுக்கு தற்போது பக்கபலமாக தமிழ்செல்வி, ஒரு வக்கீல் உள்பட சிலர் இருந்து வருகின்றனர். அவர்களை பிடித்து விசாரிக்கும் பட்சத்தில் இந்த சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

    • விசாரணையில் தாய் மாமாவாக கூறப்பட்ட ரகுவரன் பெண்ணுக்கு 2-வது கணவர் என தெரியவந்தது.
    • உடனே சரண்யா, ரகுவரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரம் அம்மன் நகரை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 23). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் சரண்யா என்ற இளம்பெண் பழக்கமானார்.

    இருவரும் போனில் பேசி வந்தனர். தொடர்ந்து பேசி வந்த நிலையில் ஸ்டீபனை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சரண்யா கூறினார்.

    உடனே தனது பெற்றோரிடம் ஸ்டீபன் தெரிவித்தார். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி ஆத்தூரில் வைத்து சரண்யாவை, ஸ்டீபன் திருமணம் செய்தார். அப்போது சரண்யா தரப்பில் தாய்மாமா நாமக்கல் மாவட்டம் நடராஜபுரத்தைச் சேர்ந்த ரகுவரன் (32) என்பவர் வந்தார்.

    திருமணத்துக்கு பின்னர் ஸ்டீபன், சரண்யாவும் ஒரு மாத காலம் வாழ்ந்த நிலையில் சரண்யா அடிக்கடி வீட்டில் இருந்து வெளியே சென்று வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த தீபன் சரண்யாவுக்கு பல்வேறு நபர்களுடன் அவருக்கு பழக்கம் இருப்பதை அறிந்து கண்டித்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து 30 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை சுருட்டிக்கொண்டு சரண்யா தலைமறைவானார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டீபன் ஆத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி சரண்யாவை தேடினார். அப்போது நாமக்கல் நடராஜபுரம் 4-வது தெருவில் உள்ள ரகுவரன் வீட்டில் இருந்த சரண்யாவை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் தாய் மாமாவாக கூறப்பட்ட ரகுவரன் அவருக்கு 2-வது கணவர் என தெரியவந்தது. உடனே சரண்யா, ரகுவரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை ஆத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் சரண்யா தனது பெயரை மாற்றிக்கொண்டு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர்களை வலையில் வீழ்த்தி திருமணம் செய்து நகை-பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது.

    அந்த வகையில் ஸ்டீபனை 4-வதாக திருமணம் செய்து கொண்டதும், அதற்கு 2-வது கணவரான ரகுவரன் தாய் மாமனாக நடித்ததும் தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையில், சரண்யாவின் சொந்த ஊர் ஆத்தூர் சந்தனகரி. இவரது உண்மையான பெயர் அருள்ஜோதி. இவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருக்கு உறவினர்கள் திருமணம் செய்து வைத்தனர்.

    அங்கு முதல் கணவரிடம் இருக்கும்போது விபசார கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டு சில வாலிபர்களுடன் சரண்யா சுற்றி தெரிந்துள்ளார். அப்போதுதான் நாமக்கல்லை சேர்ந்த ரகுவரனை 2-வதாக திருமணம் செய்து கொண்டு கோவை வீரகேரளத்தில் வசித்து வந்தார்.

    அங்கிருந்தபோது சரண்யா வைத்து திருமண மோசடி செய்து பணம் சம்பாதிக்கலாம் என ரகுவரன் திட்டமிட்டார். அதன்படியே இருவரும் சேர்ந்து சென்னையை சேர்ந்த ஒரு வாலிபரை பேஸ்புக் மூலம் வலையில் வீழ்த்தி 3-வதாக திருமணம் செய்து ஏமாற்றியுள்ளனர்.

    4-வதாக ஆத்தூரில் ஸ்டீபனை திருமணம் செய்து 30 பவுன் நகை, 2 லட்சம் பணத்தை சுருட்டியுள்ளனர்

    தொடர்ந்து கைதான கல்யாண ராணி சரண்யாவிடம் இருந்து 12 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. மீதி நகை, பணத்தை என்ன செய்தார் என்பது குறித்தும் விசாரித்து வரும் போலீசார் இதுபோல் மேலும் வேறு யாரிடமும் ஏமாற்றினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். அப்போது வேறு சில நபர்களையும் இதுபோல ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து சரண்யாவை சேலம் பெண்கள் கிளை சிறையிலும், ரகுவரனை சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

    இன்று செல்போன் யுகமாகிவிட்ட நிலையில் பலரும் தங்கள் பிள்ளைகளுக்கு வரன் பார்க்க செல்போன் ஆப் மற்றும் சமூக வலைதளங்களை நாடுகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி அவர்களை கும்பல் மோசடி செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    ஏற்கனவே நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், சேலம் மாவட்டம் எடப்பாடி, திருப்பூர், புதுவை உள்ளிட்ட இடங்களில் இதுபோன்ற மோசடிகள் நடந்துள்ளன. இது பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு அதிரிச்சியை ஏற்படுத்தி உள்ளன. இதனால் பெரும்பாலான கிராம மக்கள் தங்கள் கிராமத்தை சேர்ந்த வரன்கள், உறவு முறை பெண், பையன்களை பார்க்க தொடங்கி உள்ளனர். 

    ×