search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவள்ளூர்"

    • தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
    • தரைப்பாலத்தில் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லை.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் கிராமம் உள்ளது. இந்த கிராமம் வழியாக செல்லும் கூவம் ஆறு திருமழிசை, பூந்தமல்லி வழியாக சென்னைக்குள் வருகிறது.

    புதுச்சத்திரம் கிராமத்தில் கூவம் ஆற்றை வாகனங்கள் கடந்து செல்ல வசதியாக கடந்த 1950-ம் ஆண்டு தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த தரைப்பாலம் திருநின்றவூர் வழியாக, ஆவடி, பெரியபாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கியமானது ஆகும்.

    இந்த தரைப்பாலத்தில் புதுச்சத்திரத்தில் இருந்து, வேப்பம்பட்டு, திருநின்றவூர், செவ்வாப்பேட்டை, தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை, பெரியபாளையம், புதுவாயல் கூட்டுச்சாலை வழியாக, கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் அரசு, தனியார், தொழிற்சாலை பஸ்கள், கனரக வாகனங்கள் உட்பட தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

    பருவமழையின் போது, கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் இந்த தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்படும்.

    கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலத்த சேதம் அடைந்த இந்த தரைப்பாலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைத்தனர். 13 ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு ரூ.90 லட்சம் செலவில் இந்த தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.

    ஆனால் பயன்பாட்டிற்கு வந்த 3-வது நாளிலேயே சீரமைக்கப்பட்ட தரைப்பாலம் மீண்டும் சேதமடைந்தது. அதன் பின்னர் மீண்டும் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

    முக்கியத்துவம் வாய்ந்த இந்த தரைப்பாலத்தில் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லை. கரையின் இருபக்கமும் எந்த வித தடுப்பு சுவரும் இல்லாமல் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது.

    இந்த தரைப்பாலத்தில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு விபத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்புக்காக சவுக்கு கம்புகளை தடுப்புகளாக அதிகாரிகள் கட்டி வைத்துள்ளனர். இந்த கம்புகளும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டவை.

    தற்போது கம்புகள் அனைத்தும் சேதம் அடைந்து உடைந்து விழுந்து கிடக்கிறது. மேலும் இந்த தரைப்பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. தரைப்பாலப்பகுதியில் தெரு மின்விளக்குகள் எதுவும் கிடையாது.

    இரவு நேரத்தில் தரைப்பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடு வதற்காக சாலையோரம் திருப்பும் போது வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்த படி அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.

    வாகன விபத்தை தடுப்பதற்காக தரைப்பாலத்தில் கட்டப்பட்டு உள்ள தடுப்பு கம்புகளை வாகன ஓட்டிகள் வேடிக்கையுடன் பார்த்து செல்கிறார்கள்.

    எனவே மாவட்ட நிர்வாகம் புதுச்சத்திரம் கூவம் ஆற்றில் வாகனங்கள் எளிதில் சென்று வர வசதியாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, புதுச்சத்திரம் கூவம் ஆற்று தரைப்பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. இந்த பகுதியில் இரவு நேரத்தில் வாகனங்களை ஓட்டி செல்வது சவாலானது.

    கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் சென்றால் கூவம் ஆற்றிற்குள் விழும் அபாயம் உள்ளது. தரைப்பாலத்தில் எந்த தடுப்புகளும் இல்லை.

    இதில் விபத்தை தடுப்பதற்காக தரைப்பாலத்தின் பக்கவாட்டில் சவுக்கு கம்புகளை கட்டி வைத்தி ருப்பதுதான் வேடிக்கையாக உள்ளது. இந்த கம்புகள் விபத்தில் சிக்கும் வாகனங்கள் அதிவேகத்தில் வந்தால் எப்படி தடுக்கும்.

    எதன் அடிப்படையில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு இருக்கிறது என்றே தெரிய வில்லை. இது அதிகாரிகளுக்கு தெரியாதா? தரைப்பாலத்தில் மின்விளக்குகள் கிடையாது. இதனால் இரவு நேரத்தில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    எனவே புதுச்சத்திரம் கூவம் ஆற்று தரைப்பாலம் உள்ள இடத்தில் உயர்மட்ட பாலம் அமைத்தால் பருவமழையின் போதும் பாதிப்பு ஏற்டாமல் செல்ல முடியும் என்றனர்.

    • காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்ல தடை.
    • அவசர தேவைக்கு ஆம்புலன்சுகள் கூட செல்ல முடியாத அளவுக்கு நெரிசல்.

    பொன்னேரி:

    காட்டுப்பள்ளி துறைமுகம், அத்திப்பட்டு புதுநகர், காமராஜர் துறை முகம் மற்றும் அப்பகுதுயை சுற்றி உள்ள ஏராளமான தொழிற்சாலைகளுக்கு சாம்பல் கழிவு, நிலக்கரி, கண்டனர் லாரிகள், கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தச்சூர், பொன்னேரி, இலவம்பேடு, நாலூர், மீஞ்சூர்வழியாக தினமும் சென்று வருகிறன்றன.

    இதனால் பொன்னேரி, மீஞ்சூர் பஜாரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு பள்ளி, கல்லூரிக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டு வந்தது.

    மேலும் தொடர்ந்து விபத்துக்களும் ஏற்பட்டன. அவசர தேவைக்கு ஆம்புலன்சுகள் கூட செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    வண்டலூர் சாலையில் சென்றால் 2 டோல்கேட் மற்றும் கூடுதல் தொலைவு என்பதால் தச்சூர்-பொன்னேரிய சாலையில் சென்று வந்தன.

    இதுபற்றி பொதுமக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார்கள் தெரிவித்தனர். இதைத்தொடரந்து பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கத் பல்வந் உத்தரவுப்படி தச்சூரில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர் வழியாக கனரக வாகனங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக பொன்னேரி போக்குவரத்து இன்ஸ்பெ க்டர் கமலக்கண்ணன் தலைமையில் போலீசார் எச்சரிக்கை பதாகைகள் ஆங்காங்கே வைத்து உள்ளனர்.

    மேலும் தடையை மீறி வரும் கனரக வாகனங்களுக்கு ரூ.1500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் கனரக வாகனங்களை கண்காணித்தபடி வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    • மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    • பட்டாபிராம் ரெயில்வே மேம்பாலத்தை விரைவில் திறக்க பொதுமக்கள் கோரிக்கை.

    ஆவடி:

    பட்டாபிராம், சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையின் குறுக்காக அமைக்க ப்பட்டுள்ள ரெயில்வே பாதை வழியாக சென்னையில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசலும், அவரச தேவைக்கு செலவோரும் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக கடந்த 2010-ம் ஆண்டில் ரூ.33 கோடி செலவில் அப்பகுதியில் நான்கு வழிச்சாலையுடன் ரெயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரெயில்வே துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, ரெயில்வே துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை திட்டத்தை மறுமதிப்பீடு செய்தது.

    இதன்படி, திட்ட மதிப்பீடு ரூ.52.11 கோடியாக உயர்ந்தது. திருத்திய மதிப்பீட்டின்படி கடந்த 2018-ம்ஆண்டு ரெயில்வே மேம்பால பணிகள் தொடங்கப்பட்டன.

    இதனை 2 ஆண்டுகளில் முடிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம் வழியாக திருவள்ளூர், திருத்தணி, திருப்பதிக்கு இயக்கப்படும் வாகனங்கள் தற்போது மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.

    பட்டாபிராம் போலீஸ் நிலையம் அருகே தண்டுரை, அன்னம்பேடு வழியாக மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக சென்று அங்கிருந்து நெமிலிச்சேரி ரவுண்டானாவை கடந்து சென்னை- திருத்தணி நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும். இதனால், வாகனங்கள் சுமார் 6 முதல் 9 கிமீ தூரம் வரை மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    பல்வேறு காரணங்களால் பட்டாபிராம் ரெயில்வே மேம்பாலப்பணி முடிவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.

    இதையடுத்து கடந்த சில மாதங்களாக ரெயில்வே மேம்பாலப்பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது.

    கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த மேம்பால பணி தற்போது நிறை வடைந்து உள்ளது. பாலத்தில் தடுப்புகள் அமைத்து வர்ணம் பூசப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

    இதில் பாலத்தில் சென்னை- திருவள்ளூர் நோக்கி வாகனங்கள் செல்லும் பாதை முழுவதும் பணிகள் முடிந்து உள்ளன.

    திருவள்ளூர்-சென்னை செல்லும் பாதையில் மட்டும் சில பணிகள் முடிக்க வேண்டி உள்ளது. இதுவும் வரும் நாட்களில் விரைந்து முடிக்கப்பட்டு விடும் என்று தெரிகிறது.

    எனவே பொதுமக்களின் நலன்கருதி பட்டாபிராம் ரெயில்வே மேம்பாலத்தை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • குடும்ப தலைவிகளுக்கு நேரடியாக ரூ.1000 மாதா மாதம் செலுத்தப்பட்டு வருகிறது.
    • ஜூலை 15-ந்தேதி முதல் ரூ.1000 பணம் செலுத்தப்படும்

    சென்னை:

    குடும்ப தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்திருந்தது.

    இதையடுத்து தி.மு.க. வெற்றி பெற்று முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.1000 மாதா மாதம் செலுத்தப்பட்டு வருகிறது.

    ஆரம்பத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு மொத்தம் 1.63 கோடி பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் மட்டுமே உரிமைத்தொகை செலுத்தப்பட்டது. மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

    இதனையடுத்து 2-ம் கட்டமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேலும் 7.35 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    ஆக மொத்தம் 1 கோடி யே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்களுக்கு மாதா மாதம் ரூ.1000 சென்றடைகிறது. இதுதவிர மேலும் 11.85 லட்சம் பெண்கள் ரூ.1000 கேட்டு மேல் முறையீடு செய்திருந்தனர்.

    இந்த மனுக்கள் மீது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மனு செய்திருந்த ஒவ்வொருவர் வீட்டுக்கும் பணியாளர்கள் சென்று கள ஆய்வு செய்தனர். அவர்கள் பார்க்கும் வேலை, வருமானம், வசதி எந்த அளவுக்கு என்பது பற்றியும் விசாரித்தனர்.

    இதன் அடிப்படையில் புதிய பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்தது.

    இந்த பட்டியல்படி மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு உரிமைத் தொகை எப்போது வழங்கப் படும் என்று கேள்விகள் எழுந்தன. இதனையடுத்து இது தொடர்பான முக்கிய அறிவிப்பை விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டு உள்ளார்.

    அவர் கூறுகையில் மகளிர் உரிமைத் தொகை கேட்டு மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியான வர்களாக 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வங்கிக் கணக்கில் இந்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி முதல் ரூ.1000 பணம் செலுத்தப்படும் என்று கூறினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந்தேதி திருவள்ளூர் மாவட்டம் சென்று அரசு உதவிபெறும் பள்ளி களிலும் மாணவ-மாணவிகளுக்கான காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த விழாவில் மேலும் 1.48 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தையும் தொடங்கி வைக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் இன்று திருவள்ளூர் சென்று விரிவான ஆலோசனையும் நடத்தினார்கள்.

    • அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
    • வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரம் வேக மாக வளர்ந்து வருகிறது. இங்குள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.

    தினந்தோறும் ஏராளமானோர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆடி, தை அமாவாசை நாட்கள் மற்றும் மற்ற நாட்களில் வரும் அமாவாசை நாட்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் திருவள்ளூர் நகர் பகுதியில் மாடுகள் அதிக அளவில் கூட்டம், கூட்டமாக சாலையில் ஹாயாக சுற்றி வருகின்றன. சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை உட்பட முக்கிய சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் நிற்பதால் வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதன் பின்னர் சில நாட்கள் சாலையில் சுற்றிய மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    தற்போது அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் திருவள்ளூர் நகர் பகுதியில் மாடுகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. எந்த சாலையில் திரும்பினாலும் மாடுகள் ஹாயாக சுற்றி வருகின்றன.

    குறிப்பாக திருவள்ளூரின் முக்கிய பகுதியான ரெயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை செல்லும் சாலையில் பஸ், லாரி, ஆட்டோ, ஆம்னி வேன், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை வழிமறித்து மாடுகள் கூட்டமாக செல்வதால் அந்த சாலையில் போக்கு வரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. போக்குவரத்து போலீசாரும், வாகன ஓட்டிகளும் சாலையில் நிற்கும் மாடுகளை விரட்ட கடும்பாடுபட்டு வருகிறார்கள்.

    கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காமராஜர் சிலை வரை தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் வாகனங்க ளுக்கு இடையே புகுந்து சாலையில் படுத்து கொள்கின்றன. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்தபடி பயணம்செய்து வருகிறார்கள்.

    மேலும் முக்கிய சாலையின் சிக்னல் கம்பம் அருகேயும் மாடுகள் படுத்து கொள்வதால் போக்குவரத்து போலீசார் அதனை விரட்ட தினந்தோறும் தவித்து வருகிறார்கள்.

    எனவே திருவள்ளூர் நகர் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக விபத்து ஏற்படும் வகையில் சுற்றும் மாடுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து ஈக்காடு பகுதியைச் சேர்ந்த சுனில் என்பவர் கூறும்போது, `நான் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். தினமும் திருவள்ளூரில் உள்ள ரெயில் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் செல்வேன்.

    காலையில் வீட்டில் இருந்து செல்லும்போதும், இரவு நேரத்தில் திரும்பி வரும் போதும் தேரடி முதல் ரெயிலடி வரை ஜெ.என் சாலையில் மாடுகள் படுத்து கிடந்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகின்றன. மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

    எனவே சாலையில் சுற்றும் மாடுகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

    பெரியகுப்பத்தை சேர்ந்த சம்பத் கூறும்போது, திருவள்ளூரில் உள்ள பள்ளியில் படித்து வரும் எனது மகனை தினமும் மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வேன். சாலையில் சுற்றும் மாடுகளால் விபத்து அபாயத்தில்தான் தினந்தோறும் செல்ல வேண்டி உள்ளது.

    பலர் மாடுகள் மீது மோதி விழுந்து செல்கிறார்கள். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

    • லாக்கரை உடைக்க முடியாததால் மதுபாட்டில்களை அள்ளி சென்றனர்.
    • மின் இணைப்பை துண்டித்தும், கண்காணிப்பு காமிராவை உடைத்தும் கைவரிசை.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கம் அருகே பெரும் பேர்கண்டிகை டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டி சென்றனர்.

    இன்று அதிகாலை 2.30 மணி அளவில் மர்ம கும்பல் மதுக்கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயன்றும் முடியாததால் மதுபாட்டில்களை பெரிய பையில் அள்ளினர்.

    அந்த நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் அப்பகுதியில் வாகனத்தில் ரோந்து வந்தனர். உடனே மதுக்கடையில் இருந்த கும்பல் அங்கிருந்து மதுபாட்டில்களுடன் தப்பி ஓட்டம் பிடித்தனர். போலீசார் பிடிக்க முயன்றும் முடிய வில்லை.

    போலீசார் மதுக்கடைக்குள் வந்து பார்த்தபோது அங்கிருந்த லாக்கரை கொள்ளையர்கள் உடைக்க முயன்று இருப்பது தெரிந்தது. மேலும் கடையில் மின் இணைப்பை துண்டித்தும், கண்காணிப்பு காமிராவை உடைத்தும் கைவரிசை காட்டி உள்ளனர்.

    லாக்கரை உடைக்க முடியாததால் மதுபாட்டில்களை பையில் அள்ளி சென்று உள்ளனர். கொள்ளையர்கள் தப்பி ஓடியபோது ஒரு பையில் இருந்த மதுபாட்டில்களை விட்டு சென்று இருக்கிறார்கள்.

    மேலும் அவர்கள் அணிந்து இருந்த 2 சட்டைகளையும் விட்டுச் சென்றுள்ளனர். இதனை கைப்பற்றி போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    லாக்கரில் ரூ.12 லட்சம் விற்பனை பணம் இருந்தது. லாக்கரை உடைக்க முடியாததால் அந்த பணம் தப்பியது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்துஇருந்த ரேகைகளை ஆய்வு செய்தனர். இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முத்தங்கி சேவையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் காட்சி அளித்தார்.
    • கோவிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆனி அமாவாசையான இன்று சாமி தரிசனம் செய்ய திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவே ஏராளமான பக்தர்கள் வந்து கோவிலை சுற்றி உள்ள பகுதியில் தங்கி இருந்தனர்.

    இன்று அதிகாலை கோவில்குளக்கரை மற்றும் காக்களூர் ஏரிக்கரையில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு வீரராகவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திரண்டனர்.

    ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோவிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஆனி அமாவாசையை முன்னிட்டு கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதேபோல் முத்தங்கி சேவையில் வருகிற 7-ந்தேதி வரை மூலவர் வீரராகவ பெருமாள், கன கவல்லி தாயார் காட்சியளிப்பர்.

    இன்று மாலை 6 மணியளவில் உற்சவர் வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் கோவில் குளத்தில் தெப்பத்தில் எழுந்தருள்கிறார். குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இதேபோல் நாளையும் மற்றும் நாளை மறுநாளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    • நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை பலகை வைத்தனர்.
    • வீடுகள் கட்டி வரும் பயனாளிகள் கதறி அழுதனர்.

    திருவள்ளூர்:

    ஆர்.கே.பேட்டை தாலுகா எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 100 பேருக்கு கடந்த 2000-ம் ஆண்டு திருத்தணி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மூலம் பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    பட்டா வழங்கி பல ஆண்டுகளாகியும், ஒரு சிலர் மட்டுமே அப்பகுதியில் வீடு கட்டினர். இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வருவாய்த் துறையினர் இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்ட இடம் அரசுக்கு சொந்தமானது அந்த இடத்தில் யாரும் வீடுகள் கட்டக்கூடாது என்றும் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை பலகை வைத்தனர்.

    எனினும் வீட்டுமனை பட்டா பெற்றுள்ள பயனாளிகள் வீடுகள் கட்டிக்கொள்ள அனுமதி வழங்க கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கி இருந்தனர்.

    இந்த நிலையில், இன்று காலை ஆர்.கே.பேட்டை தாசில்தார் விஜயகுமார் தலைமையில் வருவாய் துறையினர் 6 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அனுமதியின்றி அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடித்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீடுகள் கட்டி வரும் பயனாளிகள் கதறி அழுதனர்.

    சுமார் 50-க்கும்மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்ட மாக்கப்பட்டது. திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் எஸ்.வி.ஜி.புரத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்புணியில் ஈடுபட்டனர்.

    • கடைக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    • 182 கிலோ பிளாஸ்டிக் பைகள் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் அறிவுரையின்படி, திருவள்ளூர் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவசங்கரன் மற்றும் திருவள்ளூர் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் திருவள்ளூர் பஸ் நிலையம், பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், ஓட்டல், டீக்கடை, பூக்கடைகளில் ஆய்வு செய்தனர்.

    அப்போது உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்த 5 கடைக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

    மேலும் 3 இனிப்பகத்தில் இனிப்புகளுக்கு அதிகப்படியாக வண்ணம் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த 3 கடைகளில் இருந்த வண்ணம் சேர்க்கப்பட்டிருந்த 10 கிலோ இனிப்பு மற்றும் கார வகைகளை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் 3 பிரியாணி கடையில் சிக்கனில் அதிகப்படியான வண்ணம் சேர்க்கப்பட்டிருந்த 6 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து கடைக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    11 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை இருந்ததால் தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. 182 கிலோ பிளாஸ்டிக் பைகள் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

    2 கடைகளில் உணவுப் பொருட்களில் காலாவதியான 100 பாக்கெட் சிப்ஸ், பிஸ்கட், முறுக்கு உள்ளிட்ட பொருட்கள் 5 லிட்டர் எண்ணை பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைகளுக்கும் தலா ரூ.1,000 அபராதம் விதித்தனர்.

    • மரங்களை வெட்டி அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்று இருக்கிறார்கள்.
    • போலீசார் பனைமரங்கள் வெட்டப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை

    பொன்னேரி:

    சோழவரம், செங்குன்றம்,பொன்னேரி, காரனோடை, பழைய எருமை வெட்டிபாளையம் புதிய எருமை வெட்டி பாளையம், பூதூர் உள்ளிட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.

    அழிந்து வரும் பனைமரங்களை பாதுகாக்க அதனை வெட்டுவதற்கு அரசு கட்டுப்பாடு விதித்து உள்ளது. மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்ற பின்னரே தனியார் நிலத்தில் உள்ள மரத்தினை அகற்ற வேண்டும் எனவும் அரசு நிலத்தில் உள்ள பனை மரங்களை அகற்ற உரிமை கிடையாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் சோழவரம் அடுத்த பூதூர் கிராமத்தில் அரசு நிலத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. இரவில் வந்த மர்மகும்பல் எந்திரத்தால் மனைமரங்களை வெட்டி அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்று இருக்கிறார்கள்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வருவாய்த்துறையினருக்கும், சோழவரம் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் பனைமரங்கள் வெட்டப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. அரசு நிலத்தில் இருந்த பனை மரங்களை நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் எந்திரத்தால் வெட்டி சாய்த்து உள்ளனர். அதனை வெட்டிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • திருப்போரூரில் உள்ள Godrej உற்பத்தி ஆலை வருகிற டிசம்பர் திறக்கப்பட உள்ளது.
    • ஓசூரில் கண்டிப்பாக விமான நிலையம் அமையும்.

    தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவித்தார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 1,500 ஏக்கர் பரப்பளவில் புதிய SIPCOT தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 1,000 ஏக்கர் பரப்பளவில் புதிய SIPCOT தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.

    கரூர் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதம் புதிய மினி Tidel Park அமைக்கப்படும்.

    அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் வட்டத்தில் சுமார் 175 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.

    திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மற்றும் மன்னார்குடி வட்டங்களில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

    காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

    சென்னை வெளிவட்டச் சாலையை ஒட்டி சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.

    தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு 2,100 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.

    திருப்போரூரில் உள்ள Godrej உற்பத்தி ஆலை வருகிற டிசம்பர் திறக்கப்பட உள்ளது.

    தமிழ்நாட்டை விண்வெளி தொழிலில் முன்னணி மாநிலமாக மேம்படுத்த விண்வெளி தொழில் கொள்கை வெளியிடப்படும்.

    சுழற்பொருளாதார துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டு, தமிழ்நாடு சுழற்பொருளாதார முதலீட்டு ஊக்குவிப்பு கொள்கை வெளியிடப்படும்

    முதலீடுகளை ஊக்குவிக்க உதவியாக 'Guidance TamilNadu' நோடல் ஏஜென்ஸியின் கிளை அலுவலகம் கோயம்புத்தூரில் அமைக்கப்படும்.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 'Guidance TamilNadu' நோடல் ஏஜென்ஸியின் ஊக்குவிப்பு அமைவு(Japan Desk) உருவாக்கப்படும்.

    ஓசூரில் புதிய விமான நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெளியே இருக்கும் சிலர், இதில் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

    தீவிர ஆய்வுக்கு பிறகே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கண்டிப்பாக விமான நிலையம் அமையும். கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் வெகுவிரைவில் தொடங்கும். சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு நிலம் எடுப்பு தொடங்கிவிட்டது.

    தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு 2100 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.

    ஆலங்குளம் சிமெண்ட் ஆலையில் எம்-சாண்ட் உற்பத்தி ஆலை சுமார் 25 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்து கலெக்டரிடம் மனு.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாராட்சி, தாமரைக்குப்பம், பேரண்டூர், செஞ்சியகரம் ஆகிய நான்கு ஊராட்சிகளை பேரூராட்சியோடு இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதற்கு இந்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தங்கள் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் தாராட்சி உள்பட 4 ஊராட்சியை சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் ஊராட்சியை, பேரூராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்து கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.

    அப்போது கலெக்டர் வெளியே சென்று இருந்ததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திடீரென மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    இதையடுத்து திருவள்ளூர் டவுன் போலீசார் எவ்வித அனுமதியும் இன்றி நெடுஞ்சாலையில் ஊர்வலமாக வந்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையுறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 100 பெண்கள் உள்பட 131 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    ×