search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 300966"

    • நண்பர்கள் கால பட்ஜெட்டில், வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமில்லை.
    • இந்தியாவின் எதிர்காலத்தை கட்டமைக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை.

    புதுடெல்லி:

    மத்திய பட்ஜெட்டில் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க எந்த திட்டமும் இல்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்த நாட்களை மத்திய அரசு அமிர்த காலம் என அழைத்து வருகிறது. அமிர்த காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த முதல் பட்ஜெட் நாட்டை வளர்ந்த நாடாக்குவதற்கு அடித்தளமிட்டு உள்ளதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.

    ஆனால் மத்திய அரசு தனது கார்பரேட் நண்பர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குவதாக குற்றம் சாட்டி இந்த காலத்தை 'நண்பர்கள் காலம்' என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அந்தவகையில் இந்த பட்ஜெட்டை 'நண்பர்கள் கால பட்ஜெட்' என அவர் குறைகூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    நண்பர்கள் கால பட்ஜெட்டில், வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமில்லை. விலைவாசியை கட்டுப்படுத்த திட்டமில்லை. சமத்துவமின்மையைத் தடுக்கும் நோக்கம் இல்லை.

    1 சதவீத பணக்காரர்களுக்கு 40 சதவீத செல்வம் உள்ளது. 50 சதவீத ஏழைகள் ஊதியத்தின் 64 சதவீதத்தை ஜி.எஸ்.டி.யாக செலுத்துகிறார்கள். 42 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.

    இருந்தாலும் பிரதமர் மோடிக்கு கவலை இல்லை.

    இந்தியாவின் எதிர்காலத்தை கட்டமைக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்பதை இந்த பட்ஜெட் நிரூபிக்கிறது.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    • மத்திய பட்ஜெட்டில் மறைமுக வரிகள் குறைக்கப்படவில்லை.
    • பெட்ரோல், டீசல், சிமெண்டு, உரங்கள் போன்றவற்றின் விலைகளில் குறைப்பு இல்லை.

    புதுடெல்லி:

    மத்திய பட்ஜெட் பெரும்பாலான மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துள்ளதாக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 'மத்திய பட்ஜெட்டில் மறைமுக வரிகள் குறைக்கப்படவில்லை. கொடூரமான மற்றும் பகுத்தறிவற்ற ஜி.எஸ்.டி விகிதங்களில் எந்தக் குறைப்பும் இல்லை. பெட்ரோல், டீசல், சிமெண்டு, உரங்கள் போன்றவற்றின் விலைகளில் குறைப்பு இல்லை. மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படாத பல கூடுதல் கட்டணம் மற்றும் செஸ்களில் எந்தக் குறைப்பும் இல்லை' என குற்றம் சாட்டினார்.

    மேலும் அவர், 'இந்த பட்ஜெட்டால் யாருக்கு லாபம்? நிச்சயமாக ஏழைகளுக்கு அல்ல. வேலை தேடும் இளைஞர்கள், வேலை இழந்தவர்கள், பெரும்பகுதி வரி செலுத்துவோர், இல்லத்தரசிகள் ஆகியோருக்கும் அல்ல. மொத்தத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மக்களுக்கானது அல்ல' என தெரிவித்தார்.

    • பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கப் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும்.
    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூடநிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

    சென்னை:

    மத்திய பட்ஜெட் அறிவிப்பு குறித்து தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். வழக்கம் போல மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2023-24-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த விதத் திட்ட அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூடநிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது. மத்திய பட்ஜெட்டில் "தனிநபர் வருமான வரியில் கொண்டு வந்துள்ள மாற்றம், இருக்கின்ற 157 மருத்துவக் கல்லூரிகளில் புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, மாநிலங்களுக்கு மூலதனச் செலவினங்களுக்காக வட்டியில்லாக் கடன், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்களாக இருப்பது ஆறுதல் என்றாலும், தனிநபர் வருமான வரி மாற்றங்கள் வெறும் New regime (புதிய முறைக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது ஒரு சாராருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருக்கிறது. ஆகவே இந்த மாற்றங்களை, Old regime (பழைய முறைக்கும்) அறிமுகப்படுத்த வேண்டும்.

    ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவதைக் குறைந்தது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கோரிக்கை ஏற்கப்படாததும், தேர்தல் நடைபெறப் போகும் மாநிலங்களை மட்டுமே குறிவைத்து வளர்ச்சித் திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்படுவதும் மத்திய பட்ஜெட் அனைத்து மாநிலத்திற்குமானது என்பதிலிருந்து முற்றிலும் விலகிச் செல்வதைக் காட்டுகிறது.

    மாநிலங்களுக்கு மூலதனக் கடன் வழங்குவதற்குப் பல்வேறு நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கு முழுப் பயனும் வராது. இது, மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடன் என்பதால், எந்த ஒரு நிபந்தனையுமின்றி மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இத்திட்டம் வழிவகை செய்ய வேண்டுமே தவிர, இப்படி பல நிபந்தனைகளை விதித்துப் பயனைத் தடுப்பது முறையாகாது.

    மேலும், இத்திட்டத்தில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கப் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும். நகர்ப்புர கட்டமைப்பு மேம்பாட்டிற்கு UIDF என்ற புதிய நிதியை உருவாக்கியிருந்தாலும், இதற்கான 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவாக உள்ளது.

    பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் ஒதுக்கீடு 48,000 கோடி ரூபாயிலிருந்து 79,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு வீட்டின் கட்டுமான விலையை (Unit cost) உயர்த்தாவிட்டால், மாநிலங்களுக்கு அது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே, மத்திய அரசு இத்திட்டத்தின்கீழ். உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப தனது பங்கை உயர்த்திட வேண்டும்.

    மத்திய அரசின் திட்டங்கள் Results based financing என்ற ஒரு புதிய வழிமுறைப்படி தொடக்க முயற்சியாக (pilot basis) செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியாயமாக மாநிலங்களுக்கு வரவேண்டிய உரிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்காக ஒரு கருவியாக இது பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆபத்து இதில் இருக்கிறது. ஆகவே இத்திட்டத்தை மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பின்னர், மாநிலத்திற்கு வர வேண்டிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்கு வாய்ப்பில்லாத வகையில் மாற்றிச் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், இத்திட்டங்களுக்காக தனி நிதி ஒதுக்கீடு செய்யாதது வருந்தத்தக்கது. கோவிட் பெருந்தொற்றிலிருந்து நம் நாடு மீண்டு வரும் இச்சூழலில் மத்திய அரசின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்பு இன்று பொய்த்துப் போயிருக்கிறது. இது மத்திய அரசின் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில், குறிப்பாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பட்ஜெட் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது.

    நாட்டில் நிலவும் வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், பணவீக்கம் ஆகியவற்றைப் புறக்கணித்து, மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்திற்கு எந்த வித ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்காமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டானது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எந்த ஒரு நம்பிக்கையையும் அளிக்கவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த மத்திய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது.
    • கிச்சன் சிம்னிகளுக்கான இறக்குமதி வரி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

    மத்திய பட்ஜெட்டில் தங்கம், சிகரெட் மீதான இறக்குமதி வரி கூடுதலாக அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீது விதிக்கப்படும் தேசிய பேரிடர் நிவாரண நிதி வரி 16 சதவீதம் அதிகரிக்கப்படும்.

    தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது. கிச்சன் சிம்னிகளுக்கான இறக்குமதி வரி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

    கூடுதல் வரி விதிப்பு காரணமாக சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விலை உயர்கிறது. ஏற்கனவே தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தங்கம் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தி இருப்பதால் வரும் நாட்களில் தங்கம், வெள்ளி விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது.

    • அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட்.
    • விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரும் பயனடைவர்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. இதை தொடர்ந்து மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்ட நிதி மந்திரி, துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார்.

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

    மேலும் பிரதமர் மோடி கூறியதாவது:- அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட். விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரும் பயனடைவர். புதிய இந்தியாவுக்கு வலுவான அடித்தளமிடும் பட்ஜெட் என கூறியுள்ளார்.

    • நிதி சார்ந்த சேவைகளுக்காக கே.ஒய்.சி. என்ற தனி நபர் விவர முறை எளிதாக்கப்படும்.
    • ஆதார், பான், டிஜிலாக்கர் முறை ஆகியவை தனி நபர் அடையாளத்திற்காக பிரபலப்படுத்தப்படும்.

    மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்ட நிதி மந்திரி, துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார்.

    மத்திய பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-

    பான் கார்டு இனி முக்கிய அரசுத் துறை கொள்கை சேவைகளில் பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும். அனைத்து அரசு சேவைகளிலும் அடையாள ஆவணமாக பான் எண் பயன்படுத்தப்படும். நிதி சார்ந்த சேவைகளுக்காக கே.ஒய்.சி. என்ற தனி நபர் விவர முறை எளிதாக்கப்படும்.

    ஆதார், பான், டிஜிலாக்கர் முறை ஆகியவை தனி நபர் அடையாளத்திற்காக பிரபலப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்திராகாந்தி மந்திரி சபையில் நிதி மந்திரியாக பதவி வகித்த ஆர்.வெங்கட்ராமன் 1980, 1981 ஆகிய வருடங்களில் 2 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
    • ப.சிதம்பரம் எம்.பி. 9 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

    சென்னை:

    மத்திய அரசின் பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

    2019-ம் ஆண்டு அருண் ஜெட்லி மறைவுக்கு பிறகு நிதி மந்திரியாக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் இதுவரை 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

    நிர்மலா சீதாராமனுடன் இதுவரை 6 பேர் சுதந்திர இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்கள்.

    முதல் தமிழ் மந்திரி

    சுதந்திரம் பெற்றதும் 1947-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி இந்தியரின் முதல் பட்ஜெட்டை தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார்.

    கோவையை பூர்வீகமாக கொண்ட இவர்தான் இந்தியாவின் முதல் நிதி மந்திரி ஆவார்.

    டி.டி.கிருஷ்ணமாச்சாரி

    மத்திய மந்திரியாக பதவி வகித்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி 1957, 1958, 1964, 1965 ஆகிய 4 ஆண்டுகள் பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளார்.

    திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். அதே கல்லூரியில் பொருளியல் துறையில் வருகை பேராசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.

    சி.சுப்பிரமணியம்

    1975-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை 3 முறை இந்திராகாந்தி ஆட்சியில் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இவரது பூர்வீகம் பொள்ளாச்சி.

    ஆர்.வெங்கட்ராமன்

    இந்திராகாந்தி மந்திரி சபையில் நிதி மந்திரியாக பதவி வகித்த ஆர்.வெங்கட்ராமன் 1980, 1981 ஆகிய வருடங்களில் 2 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

    தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட இவர் 1950-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக பதவி வகித்தவர். தொழில் துறை மற்றும் பாதுகாப்பு துறை மந்திரியாகவும் பணியாற்றியவர்.

    இந்தியாவின் 8-வது ஜனாதிபதியாக 1987-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர். இந்திய அரசியலில் இலங்கை சிக்கல், போபர்ஸ் ஊழல், ராஜீவ் படுகொலை, பங்கு சந்தை ஊழல் என நெருக்கடியான கால கட்டத்தில் 4 பிரதமர்களுடன் பணியாற்றியவர்.

    நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பாகிஸ்தானுக்கு சென்று வந்த முதல் ஜனாதிபதியும் இவர்தான்.

    ப.சிதம்பரம்

    ப.சிதம்பரம் எம்.பி. 9 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து மத்திய நிதி மந்திரியாக பதவி வகித்தவர்களில் அதிக தடவை பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் ப.சிதம்பரம் மட்டுமே.

    இதுவரை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள 75 பட்ஜெட்டுகளில் 6 தமிழர்கள் 23 பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்கள்.

    • இது காகிதமில்லா பட்ஜெட் ஆகும்.
    • நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக தாக்கல் செய்கிற 5-வது பட்ஜெட் ஆகும்.

    புதுடெல்லி :

    மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட் என்பதால் சலுகைகள் பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது.

    ஜனாதிபதி உரையைத்தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கலானது. இதில் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து அடுத்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று (1-ந் தேதி) காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட், அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்கிற 5-வது பட்ஜெட் ஆகும்.

    இது காகிதமில்லா பட்ஜெட் ஆகும். மடிக்கணினி மூலம்தான் இந்த பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

    அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் நடக்க உள்ளதால், இதுதான் அவர் தாக்கல் செய்கிற முழுமையான கடைசி பட்ஜெட், அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும்.

    இந்த மத்திய பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையான பட்ஜெட் என்பதால், இதில் கவர்ச்சிகரமான அம்சங்களுக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.

    அவை பற்றிய ஒரு பார்வை:-

    * புதிய வரி விதிப்புகள் தவிர்க்கப்படலாம்.

    * மாதச்சம்பளதாரர்களுக்கு வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2½ லட்சமாக இருப்பதை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது. இது குறைந்தபட்சம் ரூ. 3 லட்சமாக உயர்த்தப்படலாம்.

    * வருமான வரிச்சட்டம் பிரிவு 80-சியின்கீழ் வழங்கப்படுகிற வரி விலக்கு சலுகை ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படக்கூடும்.

    * வருமான வரி விதிப்பு அடுக்கில் மாற்றம் வரலாம்.

    * மின்சார வாகனங்களின் உற்பத்தி, விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்படலாம்.

    * உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கும், 100 நாள் வேலை திட்டத்துக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    * விவசாயிகளுக்கு கூடுதல் கடன்கள் வழங்க திட்டம் எதுவும் அறிவிக்கப்படலாம்.

    * பெண்களை கவரும் விதத்தில் அவர்களுக்கான சிறப்பு திட்டங்கள் ஏதாவது வரக்கூடும்.

    * இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் புதிய வேலை வாய்ப்பு திட்டங்கள் அறிவிக்கப்படலாம்.

    இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன.

    சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் இருக்கும் என்று பிரதமர் மோடி கூறி இருப்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

    இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு 13-ந் தேதி முடிவு அடைய இருந்தது. அதை முன்கூட்டியே 10-ந் தேதி முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சிகள் எழுப்பி உள்ளன. 11-ந் தேதி, 12-ந் தேதி சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி 10-ந் தேதியே முதல் அமர்வை முடிக்கலாம் என்று கட்சிகள் கேட்டுள்ளன.

    அலுவல் ஆய்வு குழு முன் இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறி உள்ளார் என பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

    • ஏழைகள் நலன் காக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டி உள்ளது.
    • பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளோம்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

    ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில் பாராளுமன்ற அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கம். அதன்படி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

    கடந்த ஆண்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்முவின் முதல் கூட்டுக்கூட்ட உரை இதுவாகும்.

    பாராளுமன்றத்தில் உரையாற்ற திரவுபதி முர்மு ஜனாதிபதி மாளிகையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டார். குதிரைப்படையினர் புடை சூழ பாராளுமன்றத்துக்கு சென்றார்.

    பாராளுமன்றத்துக்கு வந்தடைந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை சபாநாயகர் ஓம்பிர்லா, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

    பாராளுமன்றத்துக்குள் ஜனாதிபதி திரவுபதி முர்மு நுழைந்ததும் எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று கைகூப்பி வரவேற்றனர்.

    பின்னர் பாராளுமன்ற மைய மண்டபத்துக்கு திரவுபதி முர்மு சென்றார். இதையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

    அதன் பின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுதந்திரத்தில் 75-வது ஆண்டு கொண்டாடப்படும் நிலையில் உரையாற்றுகிறேன். இந்தாண்டில் தன்னிறைவு பெற்ற நாடாக நாம் தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகிறோம்.

    2047-ம் ஆண்டுக்குள் பொன்னான அத்தியாயங்களை கொண்ட ஒரு தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

    புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். அதில் பழங்காலத்து பெருமையும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும் இருக்க வேண்டும்.

    இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் சவால் நிறைந்ததாக இருக்கும். 2047-ம் ஆண்டில் முழு வளர்ச்சியை காண்பதற்காக அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஏழைகள் இல்லாத புதிய இந்தியா உருவாகும். அனைத்து தரப்பினரும் நல்ல நிலையில் இருக்கும் நிலை அடுத்த 25 ஆண்டுகளில் உருவாக வேண்டும்.

    வெளிநாடுகளில் ஆதரவில் இருந்த நாடு சொந்த காலில் நிற்க ஆரம்பித்துள்ளது. சுய சார்பு நாடாக மாறி உள்ளது. இந்தியா நவீன கட்டமைப்பை நோக்கி நாடு முன்னேறி வருகிறது. இந்தியா பொருளாதாரத்தில் 5-வது இடத்தை அடைந்திருக்கிறது.

    9 ஆண்டுகளில் இந்தியா வின் மதிப்பும் மரியாதையும் கூடி உள்ளது.

    நிலையான, அச்சமற்ற, தீர்க்கமான அரசு பெரிய கனவுகளை நனவாக்கும் நோக்கில் செயல்படுகிறது. சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட விஷயங்களில் அரசு தீர்க்கமாக முடிவு எடுக்கிறது.

    நாட்டின் இளைஞர்களும், பெண்களும் முன்னணியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் பார்வையில் இந்தியாவின் நிலை என்பது பெருமளவில் மாறியுள்ளது. உலகின் அமைதிக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது. மற்ற நாடுகள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கின்றன. இந்தியா தனது பிரச்சினைகளை தீர்க்க பிற நாடுகளை சார்ந்திருக்காது.

    நாட்டின் கட்டமைப்பு வசதிகள் மிகப்பெரிய அளவில் மேம்பட்டுள்ளன. ஏழைகளுக்காகவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் மத்திய அரசு தீவிரமாக பணியாற்றுகிறது. வறுமை இல்லாத, நடுத்தர வர்க்கம் செழிப்பாக, இளைஞர்கள் முன்னணியில் நிற்கும் இந்தியாவாக இருக்க வேண்டும்.

    ஜி.எஸ்.டி. மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகியவை இந்தியாவின் வரப்பிரசாதங்கள் ஆகும். முன்பு வரி திரும்பப்பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இன்று வருமான வரி கணக்கை தாக்கல் செய்த சில நாட்களுக்குள் பணம் திரும்ப பெறப்படுகிறது. ஜி.எஸ்.டி. மூலம் வெளிப்படைத் தன்மையுடன் வரி செலுத்துவோரின் கண்ணியமும் உறுதி செய்யப்படுகிறது.

    கொரோனா காலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு பாதுகாப்பு அரணாக விளங்கியது. கொரோனாவை இந்தியா கையாண்ட விதத்தை பார்த்து உலகமே பாராட்டியது.

    கொரோனா காலத்தில் ஒரு ஏழைக்கூட பசியுடன் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். 220 கோடி கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

    துல்லிய தாக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. இதனால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் இருந்து ஊழலை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஊழல் என்பது நாட்டுக்கு அச்சுறுத்தல் என்பதால் முறைகேடு இல்லாத இலக்கை நோக்கி அரசு பயணிக்கிறது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

    ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கு ஊழல் மிகப்பெரிய எதிரி என்பது அரசின் தெளிவான கருத்து ஆகும். கடந்த ஆண்டுகளாக ஊழலுக்கு எதிரான தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

    ஊழலை ஒழித்து பினாமி தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஊழலில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. ஊழலை ஒழித்திருக்கிறோம்.

    குற்றமிழைத்து வெளிநாட்டுக்கு தப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உள்ளோம். சரியாக முடிவுகள் காரணமாக பிற நாடுகளை காட்டிலும் இந்தியாவின் நிலை சிறப்பாக உள்ளது.

    நிலையான மற்றும் உறுதியான முடிவெடுக்கும் அரசால் நாட்டு மக்கள் பலன் பெறுகின்றனர். பழங்குடியினத்துக்கு முன்னெப்போதும் இல்லாத முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் வளர்ச்சி குறித்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    பழங்குடி பெண்கள் முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எந்த ஒரு பணித்துறையிலும் பெண்களுக்கு எந்த தடையும் இல்லை என்பதை அரசு உறுதி செய்துள்ளது. இதனால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

    அரசின் திட்டங்களால் பெண் குழந்தைகள் பள்ளியில் இருந்து இடை நிற்பது குறைந்துள்ளது. பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளோம்.

    ஏழைகள் நலன் காக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டி உள்ளது. முன் மாநில மாவட்டங்கள் திட்டம் மேலும் 500 பகுதிகளுக்கு விரிவாக்கப்பட உள்ளது.

    நாடு முழுவதும் 50 கோடி பேர் அரசின் இலவச மருத்துவ சேவைகளை பெற்று வருகின்றனர். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ஏழை, எளியோர் மருத்துவ வசதி பெற்று உள்ளனர்.

    கரீப் கல்யாண் யோஜன திட்டம் மூலம் கோடிக் கணக்கான ஏழை மக்கள் தடையற்ற உணவை பெறு கின்றனர்.

    2014-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் 260 மருத்துவ கல்லூரிகளை அரசு கட்டியுள்ளது. மாவட்டங்கள் தோறும் மருத்துவ கல்லூரி அமைப்பதில் முனைப்பு காட்டி வருகிறோம். புத்தாக்க தொழில்கள் எண்ணிக்கை பெரும் வளர்ச்சி பெற்று உள்ளது.

    நாட்டில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுடன் பெண்களின் ஆரோக்கியத்திலும் மேம்பாடு ஏற்பட்டுள்ளது.

    இந்திய விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் உலக அரங்கில் நமக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    கேலோ இந்தியா திட்டம் மூலம் திறமையான விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் அரசியல் சூழல், பொருளாதாரம் நிலையாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அடிமைத்தனம், காலனி ஆதிக்கத்தை நினைவூட்டம் விஷயங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. ராஜ பாதையை கடமை பாதை என பெயர் மாற்றியதன் மூலம் அடிமைத்தன விசயங்கள் மாற்றப்பட்டுள்ளன. பிரமோஸ் ஏவுகணைகளின் வளர்ச்சி நாட்டின் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

    அரசின் புதிய முயற்சிகளால் நமது பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 6 மடங்கு அதிகரித்துள்ளது. ஐ.என்.எஸ். விக்ராந்த் விமான தாங்கி கப்பலை நாமே கட்டியுள்ளோம். தனியார் நிறுவனம் கூட செயற்கைகோளை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பசுமை வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்துகிறது. ஜி.20 உறுப்பு நாடுகளுடன் இணைந்து உலகளாவிய சவால்களுக்கு கூட்டுத் தீர்வுகளை காண இந்தியா முயற்சிக்கிறது.

    இவ்வாறு ஜனாதிபதி உரையில் கூறப்பட்டுள்ளது.

    2023-24-ம் ஆண்டுக் கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

    பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கூட்டங்களாக நடைபெற உள்ளது. கூட்டத்தொடரில் முதல்கட்டம் பிப்ரவரி 14-ந்தேதி வரையும், 2-வது கட்டம் மார்ச் 12-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரையும் நடைபெறும்.

    பட்ஜெட் கூட்டத்தொட ரின்போது இரு அவைகளும் 23 அமர்வுகளில் கூடவுள்ளது. இதில் 36 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    • டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பின் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.
    • பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக்கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்து வருகிறது.

    இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி வருகிறார். திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பாராளுமன்றத்தில் உரையாற்றி வருகிறார். அவர் கூறியதாவது:

    * கொரோனா காலத்தில் மக்கள் பசியாற பிரதமர் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது. நவீனத்துவம் மூலம் மக்களை அணுகுவதால் இந்த திட்டங்கள் அனைவரையும் சென்றடைகின்றன.

    * ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 11 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பெரும்பாலான ஏழை மக்கள் பயன்பெறுகிறார்கள்.

    * ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன. ஆயுஷ்மான் பாரத் மற்றும் மக்கள் மருந்தகம் மூலம் நாட்டு மக்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்துள்ளது.

    * டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பின் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு அமைப்பிலும் நேர்மைக்கு மதிப்பளிக்கப்படுவதை உறுதி செய்துள்ளோம். ஏழ்மையை அகற்றுவோம் என்பது வெறும் முழக்கமே இல்லாமல் செயல்படுத்தப்படுகிறது

    * பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேசத்தை கட்டமைக்கும் கடமையுடன் மத்திய அரசு அயராது பணியாற்றி வருகிறது. அரசு துறையில் ஊழல் என்பது மக்களுக்கு எதிரானது. ஊழலை ஒழிக்க பினாமி தடை சட்டம் கொண்டுவரப்பட்டது

    * பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏழைகளுக்கு வலிமை, சக்தி அளிக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஏழைகளை காப்பாற்றும் அதே வேளையில் நவீனத்துவமும் கடைபிடிக்கப்படுகிறது. இரு முறை இந்த அரசை தேர்வு செய்த நாட்டு மக்களுக்கு நன்றி.

    * அரசு புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறது.

    * பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளோம்.

    * விளையாட்டு துறையில் திறமையானவர்களை ஊக்குவிக்க கேலோ இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    * இந்தியாவின் உற்பத்தி திறன் அதிகரித்து வருகிறது.

    * உலகம் முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட் அமைய உள்ளது.
    • நாட்டின் வளர்ச்சியை எடுத்து காட்டும் பட்ஜெட்டாக இருக்கும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் தொடங்குவதற்கு முன்பு பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது முதல் உரையை நிகழ்த்தும் முக்கியமான நாள் இன்று. அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவது மிக பெரிய கவுரவம். பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு பெண்மணி உரையாற்றுவது நாட்டுக்கே பெருமை.

    அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட் அமைய உள்ளது. நாட்டின் வளர்ச்சியை எடுத்து காட்டும் பட்ஜெட்டாக இருக்கும். நாட்டுக்கும், குடிமக்களுக்கும் முன்னுரிமை அளிப்பதே மத்திய அரசின் நோக்கமாகும்.

    மத்திய பட்ஜெட்டை ஒரு பெண் அமைச்சர் தாக்கல் செய்ய உள்ளதை உலகமே உற்று நோக்குகிறது.

    எதிர் கட்சிகள் தங்களது குரல்களை எழுப்பலாம். ஆனால் விவாதங்கள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். எதிர் கட்சிகளின் குரல்களை நாங்கள் மதிக்கிறோம். பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் அனைவரும் பேச உரிய நேரம் அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிமுகவின் மக்களவை தலைவர் என குறிப்பிட்டு ஓபிஎஸ்ஸின் மகன் எம்.பி.ரவீந்திரநாத்திற்கு அழைப்பு
    • நாடாளுமன்ற மாநிலங்களவை குழு தலைவர் தம்பிதுரைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்நிலையில், மத்திய பட்ஜெட் தொடர்பாக விவாதிக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, அதிமுகவின் மக்களவை தலைவர் என குறிப்பிட்டு ஓபிஎஸ்ஸின் மகன் எம்.பி.ரவீந்திரநாத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கூடிய விஷயங்கள், அவையை அமைதியாக நடத்துவது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவும் ஓ.பி.ரவிந்திரநாத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாடாளுமன்ற மாநிலங்களவை குழு தலைவர் தம்பிதுரைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ×