search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்குனி திருவிழா"

    • நாளை இரவு தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
    • 8-ந்தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பங்குனி திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் அம்மன் இரவு சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி காட்சியளித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (புதன்கிழமை) பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் குடும்பத்துடன் வந்து கோவிலை சுற்றி ஆங்காங்கே பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்துவர். மேலும் கோவிலுக்கு வர முடியாத பக்தர்கள் கோவில் திசையை நோக்கி பொங்கல் வைத்து வழிபாடு செய்வதும் வழக்கம்.

    நாளை இரவு மின் அலங்காரத்துடன் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் பால்குடம், அக்னி மற்றும் அலகு குத்துதல், அங்க பிரதட்சணம், மாவிளக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை ஊஞ்சல் வைபவம் நிகழ்ச்சியும், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    8-ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. பங்குனி விழாவை முன்னிட்டு இன்று முதல் தாயமங்கலம் கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை, பரமக்குடி, சிவகங்கை, காரைக்குடி, காளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடசேன் செட்டியார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • பம்பை ஆற்றில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் ஐயப்ப சாமிக்கு ஆராட்டு நடைபெறுகிறது.
    • திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவுபெறும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 9-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் நடந்தன. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் உத்சவ பலி நடைபெற்றது,

    அதைத்தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடந்தது. அதற்கு முன்னதாக இரவு 8 மணிக்கு சன்னிதானத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஐயப்ப சாமியை மேள, தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பள்ளி வேட்டைக்கு பின் யானை ஊர்வலம் மீண்டும் புறப்பட்டு இரவு 12 மணிக்கு சன்னிதானத்தை அடைந்தது.

    திருவிழாவின் நிறைவாக இன்று (புதன்கிழமை) பகல் 11.30 மணிக்கு பம்பையில் ஆராட்டு விழா நடக்கிறது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஐயப்பனை அமர வைத்து மேளதாளம் முழங்க காலை 8 மணிக்கு சன்னிதானத்தில் இருந்து பக்தர்கள் புடை சூழ ஊர்வலம் புறப்படுகிறது. பம்பை ஆற்றில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் ஐயப்ப சாமிக்கு ஆராட்டு நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து பகல் 1 மணிக்கு பம்பை கணபதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு பின் சாமி ஊர்வலம் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சன்னிதானத்தை வந்தடைகிறது. அங்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். பின்னர் திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவுபெறும்.

    இதே போல், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆராட்டு இன்று (புதன்கிழமை) சங்குமுகம் கடற்கரையில் நடைபெறுகிறது.

    இதற்காக பத்மநாபசாமி கோவிலின் மேற்கு நடையில் இருந்து மாலை 5 மணிக்கு சாமி ஊர்வலம் புறப்படும். இந்த ஊர்வலம் விமான நிலையம் வழியாக கடந்து செல்லும் என்பதால் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 5 மணிநேரம் திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்படும். இதன் காரணமாக மாலை 4 மணி முதல் 9 மணி வரை விமான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம்.
    • இன்று ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும்.

    பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத் தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளா கவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும்.

    ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம். அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும். பங்குனி உத்திரத்தன்று நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம். வேலை உள்ளவர்கள் "ஓம் சரவண பவ" என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். இதன் மூலம் நமது மனமானது இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும். அதனால் மனம் செம்மை அடையும்.

    பங்குனி உத்திர தினத்தன்று ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கபட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம். நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

    அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோவிலுக்கு செல்லலாம். முடிந்தால் பகல் வேளையில் ஏழை- எளியவர் களுக்கு அன்னதானம் செய்யலாம். இந்த திருநாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்குபவர் வளம் பெறுவார்கள். மாலையில் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது முருகன் சன்னதி உள்ள கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வரலாம். பிறகு இரவில் சாத்வீகமான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

    திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குனி உத்திரம் தினத்தன்று விரதம் இருந்து இறைவனை வழிபாட்டால் நிச்சயம் விரைவில் திருமணம் கை கூடும். பங்குனி உத்திர விரதம் இருந்தால் சிறப்பான நல்லதொரு வரன் கை கூடி வரும் என்பது முன்னோர்கள் வாக்கு. அதனாலேயே பங்குனி உத்திரம் விரதத்திற்கு திருமண விரதம் என்றொரு பெயரும் உண்டு.

    பங்குனி உத்திரம் தினத்தன்று ரங்கநாத பெருமாள் கோவிலில் நடக்கும் வைபவத்தை காண்பது விஷேசம். இதனை கண்டால் களத்திர தோஷம் விலகி திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

    திருமணமான தம்பதியினர் இருவருக்குள்ளும் ஏதாவது ஒரு பிரச்சினை அடிக்கடி நேர்ந்தால் பங்குனி உத்திரத்தன்று விரதம் இருப்பதன் மூலம் அந்த பிரச்சி னைகள் விலகும். கணவன் மனைவி இருவரும் நீண்ட ஆயுளோடு அன்பில் திளைத்திருக்க பங்குனி உத்திர விரதம் உதவும். அதோடு வீட்டில் உள்ள பண கஷ்டங்கள் யாவும் விலகி செல்வ செழிப்போடு வாழ இந்த விரதம் உதவும்.

    பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக் கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத்திருமணங்களை தரிவிப்பதே நம் வீட்டில் மங்கள விழாக்கள் நடக்க வேண்டியதை நாம் சிந்திப்பதற்காக அமைந்தவைகள் ஆகும். இந்த திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசிக்க திருமணம் கூடிவரும்.

    இறைவன் அவதரித்த ஆராட்டு விழாக்களை பங்குனி உத்திரம் தினத்தன்று நினைப்பதன் மூலம் குழந்தை பாக்கியம் உண்டாகும். பங்குனி உத்திரம் விரதம் இருந்து நாராயணர் லட்சுமிதேவியை அடைந்ததைப் போல் நம் வீட்டு பெண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் மூலம் வற்றாத செல்வம் உண்டாகும்.

    கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள். இந்த விரதத்தால் உத்யோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன் சொந்தங்களின் அனுசரனையும் அமைந்து குடும்ப ஒற்றுமையுடன், குடும்ப பாரம்பரிய ஒற்றுமையும் உண்டாகும்.

    • அருணகிரிநாதர் பழனி முருகனை பற்றி 99 திருப்புகழ் பாடல்களை பாடி உள்ளார்.
    • நாமும் இறைவனின் திருவடியை காண அவன்பால் பாடல்களை பாடி பக்தியை வெளிப்படுத்துவோம்.

    சங்க காலத்தில் கோவில்கள் இலக்கியங்களை தோற்றுவிக்கும் பாடு களங்களாக விளங்கின. கோவிலின் சிறப்பு, வரலாறு போன்றவற்றை விளக்க தல புராணம் இருந்தது. காலப்போக்கில் கோவில்களை மையப்படுத்தி பல சிற்றிலக்கியங்களும் தோன்றியது. தமிழில் உள்ள சிற்றிலக்கியங்களில் பெரும்பாலும் பக்தியை பறைசாற்றுபவையாக உள்ளது. எனவே தான் பக்தி இலக்கிய காலத்தில் சிற்றிலக்கியங்கள் வளர்ந்தோங்கின.

    இறைவனை பாடுபொருளாக கொண்ட பிள்ளைத்தமிழ், உலா, தூது, பள்ளு, குறவஞ்சி, கோவை, பரணி போன்ற சிற்றிலக்கியங்கள் பக்தி சார்ந்தவைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். இதில் எட்டு பாடல்களில் வரும் அட்டமங்கலம், ஒன்பது பாடல்களால் வரும் நவமணிமாலை, பத்துப்பாடல்களால் வரும் பதிகம், இருபது பாடல்களால் வரும் இருபா, முப்பது பாடல்களால் வரும் மும்மணிமாலை, மும்மணி கோவை, நாற்பது பாடல்களால் வரும் நான்மணி மாலை, அறுபது பாடல்களால் வரும் மணிமலை, நூறு பாடல்களால் வரும் இணை மணிமாலை போன்றவை பக்தியை பற்றி பாடப்பட்டு உள்ளது.

    அதன்படி பழனியில் குடிகொண்ட முருகப்பெருமானை பற்றி பதிகம், மாலை, ஒருபா, அந்தாதி, விருத்தம் முதலிய பல சிற்றிலக்கியங்கள் பாடப்பெற்று உள்ளன. இலக்கியத்தில் 3-ம் படைவீடாக குறிப்பிடும் திருஆவினன்குடியின் சிறப்பு பத்துப்பாட்டின் முதல் பாட்டான திருமுருகாற்றுபடை விளக்குகிறது. அருணகிரிநாதர் பழனி முருகனை பற்றி 99 திருப்புகழ் பாடல்களை பாடி உள்ளார். இதேபோல் வையாபுரிப்பள்ளு, பழனி பிள்ளைத்தமிழ், பழனியாண்டவர் சமயமாலை போன்றவை பழனியை பற்றி பாடப்பட்டுள்ள சிற்றிலக்கியங்கள் ஆகும்.

    இலக்கிய மரபு மட்டுமல்லாமல் வாய்மொழி மரபும் பழனி முருகன் கோவிலை மையமாக கொண்டு வளர்ந்துள்ளன. இதை கோவில் திருவிழாக்களின்போது பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வெளிப்படுத்தும் காவடிப்பாட்டு, கும்மிப்பாட்டு, கோலாட்டம், வழிநடை சிந்து பாடல்கள் போன்றவற்றில் காணலாம். நாமும் இறைவனின் திருவடியை காண அவன்பால் பாடல்களை பாடி பக்தியை வெளிப்படுத்துவோம்.

    • இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை நடக்கிறது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில சாஸ்தா கோவில்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    இந்த மாவட்டங்களில் உள்ள சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாஸ்தா கோவில்களில் பொதுமக்கள் திரண்டு வழிபடுவார்கள். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை நடக்கிறது.

    இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில சாஸ்தா கோவில்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடை பெற்றது.

    அந்த வகையில் சிறப்பு பெற்ற தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜையுடன் தொடங்கியது. இரவு 8 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இன்று அதிகாலை தாமிரபரணி ஆற்றில் புனித நீர் எடுத்துவரப்பட்டு கற்குவேல் அய்யனார், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.

    இதில் கலந்து கொள்வதற்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மட்டுமின்றி சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று கோவிலில் வந்தனர்.

    பங்குனி உத்திரத்தையொட்டி நாளை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இன்று மகாவீரர் ஜெயந்தி விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.

    மேலப்புதுக்குடி எட்டு பங்கு இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா இன்று தொடங்கியது. காலை 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதலே கோவிலில் குவிந்தனர். அவர்கள் அருஞ்சுனை தீர்த்தத்தில் புனித நீராடிய பின்னர் கோவிலில் வழிபட்டனர். பிற்பகல் சிறப்பு அலங்கார தீபாராதனை, உபய நிமித்தங்கள் செலுத்தி அய்யனாரை வழிபடுதல் உள்ளிட்டவை நடைபெற்றது.

    பங்குனி உத்திர திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினரான ஆத்திக்கண் நாடார், செந்தில் நாடார், அகோபால் நாடார், நாராயணராம் நாடார், உதயகுமார் நாடார், சுப்பிரமணியன் நாடார், தினேஷ் நாடார், கண்ணன் நாடார் ஆகியோர் செய்திருந்தனர்.

    ஆண்டுதோறும் பாப நாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் திரள்வார்கள். இங்கு நாளை பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது.

    வழக்கமாக முந்தைய நாளே பொதுமக்கள் வேன், கார், மோட்டார் சைக்கிள்களில் வந்து கோவில் அருகே குடில் அமைத்து தங்குவார்கள். இந்த ஆண்டு நாளை பங்குனி உத்திர திருவிழா நடப்பதை யொட்டி இன்று முதலே பொதுமக்கள் அங்கு குவியத் தொடங்கி உள்ளனர். இன்று இரவு முதல் பொதுமக்கள் கோவிலுக்கு சென்று தங்குவதற்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. வள்ளியூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சித்தூர் மகாராசுவரர் கோவிலில் நாளை பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது.

    இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சாஸ்தா வழிபாடு நாளை நடைபெற உள்ளது. பக்தர்கள் வசதிக்காக நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.

    • உற்சவர் முருகப்பெருமானுக்கு 250 பால்குட அபிஷேகம் நடந்தது.
    • பொது வழியில் மூலவரை தரிசிக்க, 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா இன்று விமரிசையாக நடை பெற்றது. இதைதொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கவேல், தங்ககீரிடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தனர். 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள், மயில்காவடிகள் எடுத்தும், 250 பெண்கள் பால்குடம் தலையில் சுமந்தும், மலையடிவாரத்தில் உள்ள திருக்குளத்தில் இருந்து மலைப்படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர்.

    காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு, விபூதி, நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்தம் மற்றும் 250 பால்குட அபிஷேகம் நடந்தது.

    மதியம் 1 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாரா தனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பங்குனி உத்திரம் விழாவையொட்டி மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொளுத்தும் வெயிலால், பக்தர்களின் வசதிக்காக மலைக்கோவில் வளாகத்தில் வெள்ளை வண்ணம் பூசப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

    • தீர்த்தக்குடங்களை அலங்கரிக்க காவடி கயிறுகள் பயன்படுகின்றன.
    • காவடி கயிறுகள் மிக அழகான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும்.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், கார்த்திகை திருவிழா, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் சிறப்பு பெற்றதாகும். தேவர்களை காக்க பன்னிரு கைகள், அறுமுகங்களோடு முருகப்பெருமான் சூரர்களுடன் போரிட்டு வெற்றி கண்டார். அதைத்தொடர்ந்து முருகனுக்கு இந்திரன் தன் மகள் தெய்வானையை பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் திருமணம் செய்து கொடுக்கின்றார். இந்த நாளே பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    பங்குனி உத்திர திருவிழாவில் கொங்கு பகுதி மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து மேள, தாளம் முழங்க பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். பின்னர் முருகப்பெருமானுக்கு தாங்கள் கொண்டு வந்த தீர்த்தத்தை அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

    தீர்த்தம் நிறைந்த செம்பை தீர்த்தக்குடம் என்றும், தீர்த்தக்காவடி என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். தீர்த்தக்குடங்களை அலங்கரிக்க காவடி கயிறுகள் பயன்படுகின்றன. காவடி கயிறுகள் மிக அழகான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். குடத்தை மூடுவதற்கு வண்ண, வண்ண பட்டு துணிகளை பயன்படுத்துகின்றனர். தீர்த்தக்காவடி குடத்தை பக்தர்கள் தங்களது தலையில் வைத்து கைகளால் 2 புறத்தில் உள்ள கயிற்றை பிடித்து சுமக்கின்றனர்.

    பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவின்போது கொடுமுடியில் இருந்து தீர்த்தக்காவடி கொண்டு வருவதற்கு கொங்கு பகுதி கிராமங்களில் பழனி முருகன் கோவில் தீர்த்தக்காவடி சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். தீர்த்தக்குடத்தில் பழம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, இனிப்பு வகைகளை உள்ளே போட்டு துணியால் மூடி கட்டுகின்றனர். இந்த தீர்த்தக்காவடி எடுப்பதன் மூலம் நம்மை பிடித்துள்ள பாவ, கர்ம வினைகள் நீங்கும். ஆயுள், செல்வம் பெருகும்.

    • தெய்வ திருமணங்கள் பல, பங்குனி உத்திர நாளில்தான் நிகழ்ந்தன.
    • காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்தது பங்குனி உத்திரத்தன்று தான்.

    * தெய்வ திருமணங்கள் பல, புனிதமான இந்த பங்குனி உத்திர திருநாளில்தான் நிகழ்ந்தன.

    * மீனாட்சி-சுந்தரேசுவரர், முருகன்-தெய்வானை, ஆண்டாள்-ரெங்கமன்னார், ராமர்-சீதா தேவி திருமணங்கள் பங்குனி உத்திர திருநாளில் நடந்தன.

    * முருகனின் துணைவியான குறமகள் வள்ளி, ஐயப்பன், வில்வித்தையில் சிறந்தவரும், பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் ஆகியோர் பங்குனி உத்திர நாளன்று பிறந்தனர்.

    * சிவபெருமான், தனது நெற்றிக்கண் கொண்ட நெருப்பினால் சாம்பலாக்கிய பின், ரதியின் வேண்டுகோளை ஏற்று மன்மதனை எழுப்பியதும் பங்குனி உத்திர நாளில்தான்.

    * இந்திராணியை பிரிந்து, பின்னர் கடும் விரதம் மேற்கொண்ட தேவலோக அதிபதி இந்திரன் மீண்டும் மனைவியை அடைந்தது பங்குனி உத்திரத்தன்று தான்.

    * மகாலட்சுமி உத்திர விரதத்தை அனுசரித்து விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றது பங்குனி உத்திர திருநாளில் தான்.

    * 27 கன்னியர்களை தனது மனைவிகளாக சந்திரன் ஏற்றுக் கொண்டது பங்குனி உத்திர நாளில் தான்.

    * காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்தது பங்குனி உத்திரத்தன்று தான்.

    • தாரகாசூரன், சிறுவன் என முருகனை கேலி செய்தான்.
    • கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார்.

    பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் வரும் நாள், பங்குனி உத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில்தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப் பெருமான் தன் தாய், தந்தையை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். குதிரைகள் பூட்டிய தேரில் முருகப்பெருமானுக்கு வாயு பகவான் சாரதியாக இருக்க முருகனின் படைகள் அணிவகுத்துச் சென்றன.

    அப்போது வழியில் ஒரு சிறியமலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாகப் பெரிதாகவளர ஆரம்பித்தது. காரணம் அறியாது அனைவரும் திகைத்து நின்றனர். அங்கிருந்த நாரதர் அம்மலையைப் பற்றிச் சொல்ல தொடங்கினார்.

    இந்த மலை ரவுஞ்சன் என்னும் அசுரனாக இருந்து, எல்லோருக்கும் எல்லையில்லா தீமைகளை புரிந்த தீயசக்தி ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னைக் கடந்து செல்பவர்களை ஏமாற்றித் தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்று மலையைப் பற்றிச் சொன்னவர், இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில் சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் சொன்னார்.

    அதைக் கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்துக் கொண்டுபோய், தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படிக் கட்டளையிட்டார். தலைவரின் கட்டளைப்படி வீரபாகுவின் தலைமையில் முருகனின் படைகள் மாயாபுரி பட்டினத்திற்குள் நுழைந்தன. விஷயமறிந்து தாரகாசுரனும், பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். ஆயுதங்களும், அஸ்திரங்களும் மோதின. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர்.

    போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்படையின் வீரரான வீரகேசரியைத்தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்ததைக் கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனைக் கடுமையாகத் தாக்கினான். கோபம் கொண்ட தாரகாசுரன் தினமும் பூஜை செய்யப்பட்ட சிவசக்தியை எறிய, தன் கூர்மையான திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மூர்ச்சையாகி விழுந்த வீரபாகுவையும், முருகப்பெருமானையும் தாரகாசுரன் எள்ளி நகையாட, தலைமையற்ற நிலையில் முருகப் படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின.

    மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு மூர்க்கத்தனமாகத் தாக்க, எதிர்தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும் அவனைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலைதன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது வேறுவழியின்றி மலைக்குள் அகப்பட்டு நிற்கும் வேளையில், வெளியில் தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்படைகளைப் பெரிய அளவில் தாக்கி அழித்தன.

    தளபதியும், வீரர்களும் இடர்பட்டும், தாக்கப்பட்டும் நிற்பதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க்களத்திற்கு வந்தார். வந்தவரின் வலிமையறியாத தாரகாசுரன், சிறுவன் என எள்ளி நகையாட, கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனைக் கடுமையாகத்தாக்க ஆரம்பித்தார். தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளைக் காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான் தன் வேலாயுதத்தைக் கையில் எடுத்து வீசி எறிந்தார்.

    துள்ளி வந்த வேல், கிரவுஞ்ச மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து தாரகா சுரனைக் கொன்றது. தாரகாசுரனைக் கொன்ற முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும். பங்குனி உத்திரத்தன்று விரதமிருந்து, திருமுகனை வேண்டினால், பிறவிப்பலனையும், நாற்பத்தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து இவ்விரதம் இருந்து வந்தால் அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீகத்தன்மையையும் அடையலாம் எனப் புராணங்கள் கூறுகின்றன.

    • கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி படப்பு போட்டு வழிபாடு நடத்துவார்கள்.
    • சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல நாளை இரவு முதல் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது

    தென்மாவட்டங்களில் பொதுமக்கள் கொண்டாடும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழாவும் ஒன்றாகும். இந்நாளில் மக்கள் தங்களது குல தெய்வமான சாஸ்தாவை குடும்பத்துடன் சென்று வழிபட்டுவது வழக்கம்.

    குலதெய்வத்தை வழிபடுவதால் நமக்கு முன்னோர்களின் ஆசியும், ஆண்டவனின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். சாப விமோசனம், திருமண தடை நீங்கும். மனதில் நினைத்த காரியம் நடக்கும்.

    இந்த சாஸ்தா கோவில்கள் பெரும்பாலும் கிராம பகுதியிலும், காட்டு பகுதியிலும், குளக்கரையிலும் தான் அதிகம் இருக்கின்றன. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கிறது. இந்த 3 மாவட்டங்களிலும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாஸ்தா கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில்களில் சாஸ்தா அதாவது அய்யனார், பூரண, புஷ்கலை என்ற தேவியரோடு காட்சி தருவார். சாஸ்தாவுக்கு பிரதான காவல் தெய்வமான கருப்பசாமி எதிரே குதிரை வாகனத்துடன் காட்சி தருவார். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    அன்று அதிகாலை 5 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கும். பக்தர்கள் பொங்கலிட்டு, சைவ படப்பு போட்டு வழிபடுவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு பிறகு கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி படப்பு போட்டு வழிபாடு நடத்துவார்கள்.

    இதற்காக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சாஸ்தா கோவில்களில் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி கோவிலில் சுவாமியின் பூடங்கள் கழுவி சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான கோவில்களில் வர்ணம் பூசி புதுப்பிக்கும் பணிகள் முடிவடைந்து பந்தல் போடுதல், வண்ண விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில், சேரன்மாதேவி செங்கொடி சாஸ்தா, பூதத்தான் குடியிருப்பு பொன்பெருமாள் சாஸ்தா, கல்லிடைக்குறிச்சி மலையன்குளம் பாடக மகாலிங்க சாஸ்தா, பிராஞ்சேரி வீரியபெருமாள் கரையடி மாடசாமி சாஸ்தா, நெல்லை டவுன் முருங்கையடி சாஸ்தா, மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா உள்ளிட்ட ஏராளமான சாஸ்தா, அய்யனார் கோவில்களில் பங்குனி உத்திரத்திருவிழா நாளை நடக்கிறது. இதனையொட்டி கோவில்களில் நாளை காலை முதல் நாளை மறுநாள்(புதன்கிழமை) இரவு வரை சிறப்பு பூஜை களும், அன்னதானங்களும் நடக்கிறது.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டும் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல மேலப்புதுக்குடியில் உள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா நாளை விமரிசையாக நடக்கிறது.

    தென்காசி மாவட்டத்திலும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சாஸ்தா வழிபாடு நாளை நடைபெற உள்ளது.

    ஆண்டுதோறும் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திரளான பொதுமக்கள் வேன், கார், மோட்டார் சைக்கிள்களில் வந்து முந்தைய நாளே கோவில் அருகே குடில் அமைத்து தங்குவார்கள். இந்த ஆண்டு நாளை மறுநாள்(புதன்கிழமை) அங்கு பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.

    இதற்காக நாளை இரவு முதல் பொதுமக்கள் கோவிலுக்கு சென்று தங்குவதற்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதையொட்டி நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து உள்மாவட்டத்திற்கு மட்டுமல்லாது தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 8-ந்தேதி ஹோமம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
    • 9-ந்தேதி தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நடக்கிறது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவமும் ஒன்றாகும்.

    இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு அன்று காலை 10.30 மணிக்கு மேல் பகல் 12 மணிக்குள் சாமி சன்னதியில் சாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

    முன்னதாக கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. அன்று இரவு 8 மணி அளவில் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள கொடிமரம் முன்பு சாமியும், அம்மனும் எழுந்தருளி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும்.

    இரவு 11 மணி அளவில் திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவர் திருக்கல்யாணம் நடைபெறும். தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் சாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி உலா வருகின்றனர்.

    அதனைத்தொடர்ந்து 5-ந் தேதி இரவு 8 மணி அளவில் கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டகப்படி நிகழ்ச்சியும், 6-ந் தேதி இரவு கோவிலில் திருக்கல்யாண மண்டபத்தில் நலங்கு உற்சவம் நடக்கிறது. மறுநாள் 7-ந் தேதி காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் ஹோமம் மற்றும் இரவு ஊஞ்சல் உற்சவமும், 8-ந் தேதி காலை ஹோமம் மற்றும் இரவு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

    9-ந் தேதி பகல் 12 மணிக்கு தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சியும், தாமரைக்குளம் ராஜா மண்டபத்தில் அபிஷேகமும் மாலையில் குமர கோவிலில் மண்டப படியும் நடக்கிறது. அன்று இரவு காமாட்சி அம்மன் கோவில் தெரு வழியாக சாமி வீதி உலாவும் நடைபெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் ஏகாம்பரேஸ்வரர், காசி விஸ்வநாதர் ஆகிய கோவில்களில் வருகிற 4-ந் தேதி மாலை 5 மணிஅளவில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

    இதை முன்னிட்டு காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடக்கிறது. மாலை 5 மணிஅளவில் சீர்வரிசை நிகழ்ச்சி, மாலை 6 மணிஅளவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

    இரவு 7.30 மணிஅளவில் பஞ்ச மூர்த்திகளுடன் சாமி திருவீதி உலாவும் நடக்கிறது.

    • குலதெய்வம் வழிபாடு அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும்.
    • பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.

    நாம் நினைக்கும் போது உதவி செய்யும் தெய்வமே குலதெய்வம் ஆகும். நம்முடைய சமுதாயத்தில் ஒவ்வொரு குடும்ப வகைகளுக்கும்,ஒவ்வொரு குல தெய்வம் இருக்கும்.

    குலதெய்வம் வழிபாடு அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். நம்முடைய வீட்டில் எந்த சுபகாரியங்கள் செய்தாலும், முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் ஆரம்பிக்கவேண்டும். எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து விட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும். மேலும் வருடந்தோறும் நம்முடைய குலதெய்வத்தை வழிபடுவதால் நன்மைகளும்,சந்தோசங்களும் குடும்பத்தில் நிலவும் என்பது உண்மை.

    நீங்கள் எந்த சுப காரியங்கள் செய்யும் முன், குலதெய்வத்தை நேரில் தரிசிக்க முடியாவிட்டால், ஒரு தேங்காயை எடுத்துக்கொள்ளுங்கள். வீட்டின் வாசலுக்கு வந்து சூரியனை கும்பிட்டுவிட்டு உங்க வீட்டிற்கு எந்த திசையில் உங்கள் குலதெய்வம் இருக்கிறதோ, அந்த திசையை பார்த்து குலதெய்வத்தை மனதுக்குள் துதித்துக்கொண்டே தேங்காயை உடைத்து விட்டு நீங்க செய்யப்போகும் சுப காரியத்தை செய்யுங்கள். கண்டிப்பாக குலதெய்வம் உங்களை எப்போதும் பாதுகாக்கும். இதை, குலதெய்வ ஆலயத்திற்கு தொலை தூரத்தில் இருப்பவர்கள் செய்யலாம். மற்றபடி குல தெய்வ ஆலயங்களின் அருகில் இருப்பவர்கள் கட்டாயம் எந்த சுப காரியங்களை செய்வதற்கு முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு செய்வது தான் நல்லது.

    பங்குனி உத்திரம் நாளில் குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.. மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.

    குலதெய்வ கோவில்களான காவல் தெய்வங்கள் என அழைக்கப்படும் கோவில்களுக்கு பங்குனி உத்திரத்தன்று சென்று வழிபடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த குலதெய்வ வழிபாட்டை கார்த்திகை மாதம் திருகார்த்திகையின்போதும், பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும் மேற்கொள்வார்கள். இதில் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும்.

    இந்த ஆண்டு 2023,ஏப்ரல் / 5 ஆம் நாள் ( 5-4-2023) பங்குனி உத்திர நட்சத்திர நாள் ஆகும். அன்றைய தினம் பௌர்ணமி என்பதால் வழிபட, மிகமிக உகந்த நாளாகவும் அமைகிறது. மற்ற நாட்களில் குலதெய்வத்தை வழிபடுவதுடன், பங்குனி உத்திரம் நாளில் சென்று வழிபடுவது மேலும் நல்ல நற்பயனைப் பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது !

    பங்குனி மாத பௌர்ணமியில் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை தரிசித்து வாருங்கள். வழக்கமாக உங்கள் முன்னோர்களால் செய்யப்படும் பூஜைகள், அபிஷேகங்கள் செய்து பொங்கல் இட்டு குடும்பத்தோடு ஒற்றுமையாக வழிபட்டால் புண்ணிய பலன்களோடு முன்னோர்களது ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வழிபாடு முடிந்ததும் அங்கேயே சமைத்து பந்தி போட்டு பரிமாறி வீடு திரும்புவதும், குலதெய்வத்தை திருப்திப்படுத்தும்.

    பங்குனி உத்திரத்தன்று வெளியூரிலும், வெளிநாடுகளிலும் வசிப்பவர்கள் தவிர்க்க இயலாத காரணத்தினால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லையென்றால் வீட்டின் பூஜையறையில் இருக்கும் குலதெய்வத்துக்கு படையல் இட்டு மனம் உருகி வழிபாடு செய்யலாம். குலம் சிறக்கவும், குடும்பம் மேன்மை பெறவும் குலதெய்வத்தை மகிழ்விக்க பங்குனி உத்திர நாளே நல்ல நாள்... ஒருவரது குலத்தை வழி வழியாக பாதுகாக்கும் வலிமையும், சக்தியும் குலதெய்வத்துக்கே உண்டு.

    மேலும் இந்த பங்குனி உத்திர தினம் ஒரு அற்புதமான தினம். இந்த தினத்தில் அனைத்து தெய்வங்களுக்கும் திருமணம் நடந்தது. குறிப்பாக சபரி சாஸ்தா என சொல்லக்கூடிய ஐயப்பன் அவதரித்தது பங்குனி உத்திர தினம் அன்றுதான். முருகப்பெருமான் திருமணமும் அன்றுதான். இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திரத்தன்று குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை பூஜை செய்து இறைவனின் ஆசியைப் பெறுவோம்...!

    தொடர்புக்கு:- 9442729693

    ×