search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வினாத்தாள் குளறுபடி"

    • தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வானது தொடங்கப்படாமல் காலதாமதம் ஏற்பட்டது.
    • தமிழ்நாட்டில் பல்வேறு தேர்வு மையங்களிலும் வினாத்தாளில் சீரியல் நம்பர் மாறி இருந்ததால் தாமதமாக தேர்வு தொடங்கியது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் இன்று குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு நடைபெற்றது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது. காலையில் தமிழ் மொழி தகுதி தாள் தேர்வும், மதியம் பொதுத்தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 186 மையங்களில் தேர்வு நடந்தது. முதலில் தமிழ் மொழி தகுதி தாள் தேர்வு நடந்தது.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை பாரத் அறிவியல் கல்லூரி, மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், சாஸ்திரா பல்கலைக்கழகம், கலைமகள் மேல்நிலைப்பள்ளி, அடைக்கல மாதா கல்லூரி ஆகிய 6 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 2025 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர்.

    இந்த நிலையில் தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வானது தொடங்கப்படாமல் காலதாமதம் ஏற்பட்டது. அதாவது தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் புக்லெட் சீரியல் நம்பர் மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். இதன் காரணமாக தேர்வு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உடனடியாக பாரத் கல்லூரிக்கு விரைந்து வந்தார். நிலைமையை கவனித்து சரியான வினாத்தாள் கொடுக்க உடனடி நடவடிக்கை எடுத்தார். தேர்வர்களிடம் நிலைமையை எடுத்து கூறி தற்போது வினாத்தாள் சரியான முறையில் கொடுக்கப்பட்டு விட்டது.

    இதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கும். இதில் அரைமணி நேரம் ஏற்பட்ட காலதாமதத்தை ஈடுகட்டும் வகையில் தேர்வு முடியும் நேரம் ஆன 12.30 மணிக்கு பதிலாக 1 மணிக்கு தேர்வு முடியும் என்று கூறினார்.

    மேலும் தேர்வு மையத்திற்கு வெளியே கூடியிருந்த தேர்வர்களின் பெற்றோர்களிடமும் நிலைமையை எடுத்துக் கூறினார். இதேபோல் கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவும் தேர்வு மையத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து மதியம் 1 மணி வரை தமிழ் மொழி தகுதி தேர்வு நடைபெற்றது.

    இதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு தேர்வு மையங்களிலும் வினாத்தாளில் சீரியல் நம்பர் மாறி இருந்ததால் தாமதமாக தேர்வு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    ×