search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலாஷேத்ரா விவகாரம்"

    • இரண்டு சட்டப்பிரிவுகளுடன் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    திருவான்மியூர் கலாசேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பேராசிரியர் அரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பரபரப்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு போட்டுள்ளனர்.

    இந்திய தண்டனை சட்டம் 509 என்கிற சட்ட பிரிவு பெண்ணின் கற்புக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சட்டப்பிரிவாகும். இந்த சட்டப்பிரிவின்கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் ஓராண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    354-ஏ.ஐ.பி.சி. என்கிற சட்டப்பிரிவும் கடுமையான சட்டப்பிரிவாகவே பார்க்கப்படுகிறது. பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் வகையில் பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக நடந்து கொள்ளுதல் என்பது இந்த சட்ட பிரிவின் சாராம்சமாகும். இதன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த இரண்டு சட்டப்பிரிவுகளுடன் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த 3 சட்டப்பிரிவுகளின் கீழும் பேராசிரியர் அரிபத்மன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் கைதானால் உடனடியாக பெயில் கிடைக்காது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிறைவாசம் அனுபவித்து போலீசார் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் மட்டுமே இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஜாமீன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது மாணவிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். இதனை வாக்குமூலமாக பதிவு செய்துள்ள அவர் இது தொடர்பான அறிக்கையை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அரசிடம் தாக்கல் செய்ய உள்ளார். இந்த அறிக்கையின்படியும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர் மற்றும் 3 நடன உதவியாளர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    • கலாஷேத்ராவில் நடந்தது என்ன? என்பது பற்றிய தகவல்களை திரட்டுவதற்காக மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
    • சுமார் 100 மாணவிகள் கலாஷேத்ராவில் இதுவரை நடந்துள்ள சம்பவங்கள் தொடர்பாக விரிவாக பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    1936-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கலாஷேத்ரா கவின் கல்லூரி மிகவும் புகழ்பெற்ற நிறுவனமாகும்.

    ருக்மிணிதேவி அருண்டேல் மற்றும் அவரது கணவர் ஜோர்ஜ் அருண்டேல் ஆகியோரால் தொடங்கப்பட்ட கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பரத நாட்டியம், கதகளி, வாய்ப்பாட்டு பல்வேறு கலைகளும் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை அடையாறில் உள்ள பிரம்மஞான சபையில் உள்ள தோட்டத்திலேயே முதல் முறையாக கலாஷேத்ரா தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் பிரபல தத்துவஞானியாக அறியப்பட்ட ஜோர்ஜ் அருண்டேலும் அவரது மனைவி ருக்மிணி ஆகியோர் கலாஷேத்ராவில் மேற்கொண்ட பணிகள் பெரிதும் பாராட்டை பெற்றன. கைதேர்ந்த திறமையான கலைஞர்களை கொண்டு கலாஷேத்ராவில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதனால் அதன் புகழ் வெளிச்சம் பரவ தொடங்கியது. ஒரே ஒரு மாணவியுடன் மட்டுமே தொடங்கப்பட்ட கலாஷேத்ரா நிறுவனத்தில் தற்போது ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    1962-ம் ஆண்டு அடையாறில் இருந்து திருவான்மியூருக்கு கலாஷேத்ரா நிறுவனம் மாற்றப்பட்டு தற்போது வரையில் அங்கேயே செயல்பட்டு வருகிறது. பின்னர் 1993-ம் ஆண்டு கலாஷேத்ரா நிறுவனத்துக்கு பாராளுமன்றம் மூலமாக பெரிய அங்கீகாரம் கிடைத்தது. அங்கு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கலாஷேத்ரா தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக அங்கீகாரம் செய்யப்பட்டது.

    கலாஷேத்ரா நடத்திய நிகழ்ச்சிகளில் பல்வேறு முக்கிய பிரபலங்களும் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். கலாஷேத்ரா தொடங்கப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் 2016-ம் ஆண்டு மிகப்பெரிய விழா எடுக்கப்பட்டுள்ளது. அப்போது நிறுவனர் ருக்மிணி தேவி நினைவாக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு உள்ளன.

    இப்படி பேரோடும் புகழோடும் விளங்கி கொண்டிருக்கும் கலாஷேத்ராவில்தான் பேராசிரியர் மற்றும் நடன உதவியாளர்கள் 3 பேர் மீது கூறப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

    இதையடுத்து கலாஷேத்ராவில் நடந்தது என்ன? என்பது பற்றிய தகவல்களை திரட்டுவதற்காக மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    அப்போது சுமார் 100 மாணவிகள் கலாஷேத்ராவில் இதுவரை நடந்துள்ள சம்பவங்கள் தொடர்பாக விரிவாக பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    கலாஷேத்ராவில் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு அத்துமீறல் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதாக மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார்களை தெரிவித்துள்ளனர். பாலியல் ரீதியாக அருவருக்கத்தக்க வகையில் பேசுதல், வாய் மொழியாக தேவையில்லாத வார்த்தைகளை பேசி அவமானப்படுத்துதல், உடலின் அங்கங்களை குறிப்பிட்டு பேசி மனரீதியாக துன்புறுத்தலில் ஈடுபடுதல், நிறத்தை குறிப்பிட்டு பேசி மனதை நோகடித்தல் போன்ற செயல்களில் அங்கு பணிபுரியும் பலர் ஈடுபட்டு வருவதாகவும் மாணவிகள் புகார் கூறி உள்ளனர்.

    இதுபோன்ற குற்றச்சாட்டுகள் குறித்து கலாஷேத்ரா நிர்வாகத்திடம் எத்தனை முறை முறையிட்டாலும் நடவடிக்கை எடுப்பது இல்லை என்றும் மாணவிகள் புகார் கூறி இருக்கிறார்கள்.

    மாநில மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையின் போது மாணவிகள் பலர் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் பாதிப்புகள் தொடர்பாக துணிச்சலுடன் புகார்களை தெரிவித்து இருக்கிறார்கள். இதை தொடர்ந்து கலாஷேத்ரா பாலியல் விவகாரத்தில் மேலும் பல மறைக்கப்பட்ட தகவல்கள் வெளிச்சத்துக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே கேரள முன்னாள் மாணவி அளித்திருக்கும் புகாரில், தான் கலாஷேத்ராவில் படித்த போது என்னை வீட்டுக்கு அழைத்தும், கல்லூரி வளாகத்தில் வைத்தும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி உள்ளார். இவரை போன்று கலாஷேத்ராவில் எத்தனை மாணவிகளுக்கு செக்ஸ் கொடுமை நடந்துள்ளது என்பதே இப்போது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

    அதனை வெளிக்கொண்டு வந்து சம்பந்தப்பட்ட அனைவரையும் குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டியது காவல்துறையின் கடமையாகும்.

    • மாணவி அளித்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
    • கலாஷேத்ரா பாலியல் விவகாரத்தில் பேராசிரியர் அரிபத்மன் மீது எந்த நேரத்திலும் கைது நடவடிக்கை பாயலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் பரத நாட்டியம் உள்ளிட்ட கலைகளில் ஆர்வம் கொண்ட ஏராளமான மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகிறார்கள். பாரம்பரியம் மிக்க இந்த கலாஷேத்ரா கவின் கல்லூரியில் நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளை சேர்ந்த மாணவிகளும் கலைகளை கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.

    இப்படி புகழ்பெற்ற கலாஷேத்ராவில் படித்து வரும் மாணவிகள் பேராசிரியர் மற்றும் நடன உதவியாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி இருக்கும் சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் கலாஷேத்ரா நிர்வாகத்திடம் முதலில் புகார் அளித்தனர். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பேராசிரியர் அரிபத்மன், நடன ஆசிரியர்களான சாய் கிருஷ்ணா, சஞ்சித்லால், ஸ்ரீநாத் ஆகிய 4 பேர் மீது மாணவிகள் குற்றச்சாட்டுகளை கூறி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.

    இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையமும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்த நிலையில் இந்த விவகாரம் மூடி மறைக்கப்படுவதாகவும், புகாருக்குள்ளான நபர்கள் அனைவரும் சுதந்திரமாக சுற்றி திரிவதாகவும் மாணவிகள் குற்றச்சாட்டுகளை கூறினார்கள்.

    இதை தொடர்ந்து கலாஷேத்ரா கல்லூரி வளாகத்திலேயே மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தீவிரமானதை அடுத்து ஏப்ரல் 6-ந் தேதி வரை கலாஷேத்ரா கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த சில நாட்களாகவே கலாஷேத்ராவில் நடைபெற்ற பாலியல் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் பாதிப்புக்கு உள்ளான மாணவிகள் யாரும் போலீசில் புகார் அளிக்காமல் தயக்கம் காட்டி வந்தனர்.

    இதனால் போலீசார் நடவடிக்கை எடுப்பதில் முட்டுக்கட்டை நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான கேரள முன்னாள் மாணவி ஒருவர் போலீசில் துணிச்சலாக சென்று புகார் அளித்தார். அதில் பேராசிரியர் அரிபத்மன் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியது தொடர்பாக பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். அடையாறு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தனது தோழியுடன் நேரில் சென்ற அந்த மாணவி எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததை தொடர்ந்து உடனடியாக போலீஸ் நடவடிக்கை தீவிரமானது.

    மாணவி அளித்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தென் சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்ஹா, அடையாறு துணை கமிஷனர் மகேந்திரன் ஆகியோரது மேற்பார்வையில் மாணவியின் புகார் குறித்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அடையாறு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, பேராசிரியர் அரிபத்மன் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

    இந்திய தண்டனை சட்டம் 509 ஐ.பி.சி., 354-ஏ மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பேராசிரியர் அரிபத்மன் மீது வழக்கு போடப்பட்டு உள்ளது.

    பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் அரிபத்மன், கலாஷேத்ரா கல்லூரியில் கேரள மாணவியை போன்று எத்தனை பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்? என்பது பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதை பற்றி அறிந்ததும் வெளியூர் சென்றிருந்த அரிபத்மன் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் உடனடியாக சென்னை திரும்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதை தொடர்ந்து மகளிர் போலீசார் இன்று அரிபத்மனிடம் விசாரணை நடத்தி பாலியல் தொல்லை தொடர்பாக வாக்குமூலத்தை பதிவு செய்ய உள்ளனர். கல்லூரிக்கு நேரில் சென்றும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    போலீஸ் பிடி இறுகி இருப்பதை தொடர்ந்து பேராசிரியர் அரிபத்மனை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    பேராசிரியரிடம் விசாரணை நடத்தி அவரிடம் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்கும் போலீசார் கேரள மாணவியின் புகாருக்கு உரிய பதிலை அளிக்கவும் கோரியுள்ளனர். கலாஷேத்ரா விவகாரம் தமிழக சட்டசபையிலும் நேற்று எதிரொலித்தது.

    இது தொடர்பாக விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருந்தார்.

    இதன்படி போலீசாரும் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் கலாஷேத்ரா பாலியல் விவகாரத்தில் பேராசிரியர் அரிபத்மன் மீது எந்த நேரத்திலும் கைது நடவடிக்கை பாயலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தமிழக அரசு, கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் தெரிவித்திருக்கும் புகாருக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்.
    • இனிமேல் மாநிலத்தில் எங்கும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் நடைபெறாமல் இருக்கவும் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் கல்லூரியில் மாணவிகளுக்கு பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும் மாணவிகள் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கல்லூரி வளாகத்துக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு புகார் தெரிவித்தனர்.

    எனவே தமிழக அரசு, இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை ஒரு காலக்கெடுவிற்குள் கண்டறிந்து, பணி நீக்கம் செய்யவும், தண்டனை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு, கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் தெரிவித்திருக்கும் புகாருக்கு உரிய நியாயம் கிடைக்கவும், இனிமேல் மாநிலத்தில் எங்கும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் நடைபெறாமல் இருக்கவும் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மாணவிகள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தினர்.
    • அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தினர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் மகளிர் ஆணைய தலைவர் குமரி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அதன்பின்னர் ஏராளமான மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்துள்ளனர். கடந்த 2008 முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக புகார் மனுவில் கூறியுள்ளனர்.

    இந்நிலையில், மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் வன்கொடுமை, பெண்ணின் மாண்பிற்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது. 

    • கடந்த 2008 முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
    • 12 மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி உள்ளேன்.

    சென்னை:

    கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை புகார் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி இன்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:

    கலாஷேத்ரா மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி உள்ளோம். ஏராளமான மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்துள்ளனர்.

    12 மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி உள்ளேன். சுமார் 100 மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். 4 பேரின் மேல் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த 2008 முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

    போராட்டங்களை நிறுத்திவிட்டு விடுதிக்கு சென்று படிக்குமாறு அறிவுறுத்தி உள்ளேன்.

    வரும் திங்கட்கிழமை விசாரணை அறிக்கையை அரசிடம் ஒப்படைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் கலாஷேத்ரா விவகாரத்தில் போராட்டத்தை கைவிட மாணவிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கலாஷேத்ரா விவகாரம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன், மாவட்ட ஆட்சித் தலைவரோடு தொடர்பு கொண்டு, விவரங்களை அறிந்தேன்.
    • குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இங்கு படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது.

    சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அங்கு படிக்கும் மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த பிரச்சினை இன்று தமிழக சட்டசபையிலும் கிளப்பப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), எஸ்.எஸ்.பாலாஜி (விடுதலை சிறுத்தைகள் கட்சி), செல்வப் பெருந்தகை (காங்கிரஸ்), அருள் (பா.ம.க.), ராமச்சந்திரன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு) ஆகியோர் பேசினார்கள்.

    பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டு உள்ள மாணவிகளுக்கு நீதி வழங்க வேண்டும். மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை நடைபெறுவதாக தகவல் வெளியாகி வருகிறது.

    எனவே இதில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் பேசினார்கள்.

    இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    கலாஷேத்ரா பவுண்டேஷன் விவகாரம் குறித்து உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, தி.வேல்முருகன், கு.செல்வப்பெருந்தகை, ராமச்சந்திரன் ஆகியோர் அவையினுடைய கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையிலே இங்கே உரையாற்றி இருக்கிறார்கள். அதற்குரிய விளக்கத்தை உங்கள் அனுமதியோடு நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

    ஒன்றிய அரசினுடைய கலாச்சாரத் துறையின்கீழ் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய, கலாஷேத்ரா பவுண்டேஷன் விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும், தேசிய மகளிர் ஆணையம் முதலில் தானாக முன்வந்து "பாலியல் தொல்லை" என டுவிட்டர் செய்தி போட்டு, 21-3-2023 அன்று நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஜி.பி.-க்கு கடிதம் எழுதியது. இது தொடர்பாக, கலாஷேத்ரா பவுண்டேஷன் இயக்குநர், நமது மாநில காவல்துறைத் தலைவரை சந்தித்து, தங்களது நிறுவனத்தில் பாலியல் புகார் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.

    பிறகு தேசிய மகளிர் ஆணையமே செய்தியின் அடிப்படையில் விசாரித்தோம்; அந்த விசாரணையை முடித்து வைத்து விட்டோம்" என 25-3-2023 அன்று டி.ஜி.பி.-க்குக் கடிதம் எழுதி தெரிவித்து இருக்கிறார்கள்.

    பின்னர், கடந்த 29-3-2023 அன்று மீண்டும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரே வந்து கலாஷேத்ராவில் இருக்கக்கூடிய 210 மாணவிகளிடம் விசாரித்து விட்டுச் சென்று உள்ளார். அப்போது காவல்துறை தங்களுடன் வரத் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.

    இந்த நிலையில், மாணவிகள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தின் விளைவாக, கலாஷேத்ரா பவுண்டேஷனில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகளை விட்டு மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

    இந்த விவகாரம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன், மாவட்ட ஆட்சித் தலைவரோடு தொடர்பு கொண்டு, விவரங்களை அறிந்தேன். இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மேலும் விவரங்களை அறிவதற்காக, வருவாய்க்கோட்ட அலுவலர், வட்டாட்சியர், காவல் இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் அலுவலர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டார்கள்.

    இன்று காலையில், மீண்டும் வருவாய்த் துறை மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்று, மாணவிகள் மற்றும் நிர்வாகத்தினருடன் பேசி வருகிறார்கள். மேலும், அங்குள்ள மாணவிகளின் பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, அங்கு ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

    அரசை பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என தெரிவித்து அமைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்தபோதும் யாரும் புகாரளிக்கவில்லை.
    • தவறான தகவல்களை யாரும் சமூக வலைதளத்தில் பரப்ப வேண்டாம்.

    சென்னை:

    தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்தபோதும் யாரும் புகாரளிக்கவில்லை. எழுத்துப்பூர்வமாக யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை.

    புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தவறான தகவல்களை யாரும் சமூக வலைதளத்தில் பரப்ப வேண்டாம்.

    கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவல்துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்படவில்லை.
    • கலாஷேத்ரா விவகாரத்தில் அரசு உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    சென்னை:

    கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

    இதையடுத்து கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஒன்றிய அரசின் கலாசார துறையின் கீழ் கலாஷேத்ரா அறக்கட்டளை இயங்கி வருகிறது.

    கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. 210 மாணவிகளிடம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது.

    காவல்துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    கலாஷேத்ரா விவகாரத்தில் அரசு உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறது. தவறு நடந்திருந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    • பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் 4 பேரும் பார்வையாலேயே கொன்று விடும் வகையில் செயல்படுவார்கள்.
    • மாணவிகளின் குற்றச்சாட்டு காரணமாக கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் ஏராளமான மாணவிகள் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை பயின்று வருகிறார்கள். இவர்கள் பேராசிரியர்கள் மற்றும் நடன உதவியாளர்கள் 3 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி அதிர வைத்துள்ளனர்.

    கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பேராசிரியர் மற்றும் நடன உதவியாளர்கள் எந்தெந்த வகையில் பாலியல் தொல்லை கொடுத்தனர்? என்பது பற்றி சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.

    இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து மாணவிகள் கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகளும் போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவிகள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் கலாஷேத்ரா கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கலாஷேத்ராவில் பேராசிரியரும், நடன உதவியாளர்களும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது எப்படி? என்பது பற்றி மாணவிகள் சிலர் கண்ணீர் மல்க அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ளனர்.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கூறியதாவது:-

    என்னிடம் பேராசிரியரும், நடனம் சொல்லி கொடுக்கும் உதவியாளர்கள் 3 பேரும் ஆபாசமாக நடந்து கொண்டனர். செல்போனில் குறுஞ்செய்திகளை அனுப்புவது... வீடியோ காலில் ஆபாசமாக தோன்றி பேசுவது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர். சில நேரங்களில் அவர்கள் பார்க்கும் பார்வையே ஆபாசமாக இருக்கும். இதனால் பலமுறை நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்.

    இவ்வாறு அந்த பெண் கூறியுள்ளார்.

    பாதிக்கப்பட்ட இன்னொரு பெண் கூறும்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் 4 பேரும் பார்வையாலேயே கொன்று விடும் வகையில் செயல்படுவார்கள். அவர்களின் பார்வையால் உடம்பே கூசும். இதுபோன்ற நேரங்களில் நான் ஆடையில்லாமல் இருப்பது போன்றும் உணர்ந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    மாணவிகளின் இந்த குற்றச்சாட்டு காரணமாக கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக தென் சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்ஹா இன்று விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கலாஷேத்ரா மாணவிகளிடம் சீனியர் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க விரும்புபவர்கள் போலீசில் தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் மாணவிகள் தற்போதைய சூழலில் போலீசில் புகார் அளிக்க விரும்பவில்லை என்றே தெரிவித்துள்ளனர். இதனால் காவல்துறை தரப்பில் கிரிமினல் விசாரணை எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே திருவான்மியூர் கலாஷேத்ராவில் மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி இன்று நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த விசாரணையின்போது மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் தொல்லை புகார் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் நேரில் விசாரணை நடத்த உள்ளது.

    சென்னை:

    சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் மத்திய கலாசார அமைச்சகத்தின் நேரடி நிதிஒதுக்கீட்டின் கீழ் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்து வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கல்லூரியின் முன்னாள் இயக்குனர், சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு தேசிய மகளிர் ஆணையம், தமிழக போலீசாருக்கு நோட்டீசு அனுப்பி இருந்தது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'எங்களுக்கு நீதி வேண்டும்' என்ற ஒற்றை கோஷத்தை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

    கல்லூரி நிர்வாகம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

    இந்நிலையில் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கல்லூரி மாணவர்கள் அமைப்பு கடிதம் அனுப்பி உள்ளது.

    இதையடுத்து கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் தொல்லை புகார் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் நேரில் விசாரணை நடத்த உள்ளது. தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி நேரில் ஆய்வு செய்கிறார். பாலியல் தொல்லை புகார் குறித்து கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகத்திடம் மகளிர் ஆணைய தலைவர் கேட்டறிய உள்ளார்.

    ×