search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சாவூர் விபத்து"

    • சங்கீதா என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
    • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், வளம்பக்குடி அருகில் இன்று காலை சுமார் 7 மணியளவில் கந்தர்வகோட்டையில் இருந்து சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுகொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராதவிதமாக ஈச்சர் வாகனம் மோதிய விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், கல்லாக்கோட்டை ஊராட்சி, கண்ணுகுடிபட்டியைச் சேர்ந்த முத்துசாமி, ராணி, மோகனாம்பாள் மற்றும் மீனாஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும், இவ்விபத்தில் தனலட்சுமிஎன்பவர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    இவ்விபத்தில், பலத்த காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சங்கீதா என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    • மினிலாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி எதிர்பாராதவிதமாக பாதயாத்திரை பக்தர்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
    • விபத்தால் திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வல்லம்:

    புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே கண்ணுக்குடிபட்டியை சேர்ந்த 6 பக்தர்கள் ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி, கண்ணுக்குடிபட்டியில் இருந்து சமயபுரம் நோக்கி பாதயாத்திரையாக புறப்பட்டனர். பாதயாத்திரையாக தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே வளம்பக்குடி பகுதியில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியே வந்து கொண்டிருந்த மினிலாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி எதிர்பாராதவிதமாக பாதயாத்திரை பக்தர்கள் மீது அடுத்தடுத்து மோதியது.

    இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட முத்துசாமி (வயது 60), முருகன் மனைவி ராணி (37), ரமேஷ் மனைவி மோகனா, கார்த்திக் மனைவி மீனா (26) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், செல்வராஜ் மனைவி தனலட்சுமி (30), சங்கீதா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீனா உள்ளிட்ட 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த சங்கீதா, தனலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. சங்கீதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தால் திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மினி லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ரோட்டில் தாறுமாறாக ஓடி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதிக்கொண்டே சென்று மின்கம்பத்தில் மோதி நின்றது.
    • சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன் பலத்த காயமடைந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து இன்று மதியம் தனியார் மினி பஸ் மருத்துவ கல்லூரிக்கு புறப்பட்டது. இந்த பஸ்ஸில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    இந்த மினி பஸ் மருத்துவ கல்லூரி சாலை பாலாஜி நகர் பகுதியில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. ரோட்டில் தாறுமாறாக ஓடி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதிக்கொண்டே சென்று மின்கம்பத்தில் மோதி நின்றது.

    இதில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மின்கம்பம் பலத்த சேதம் அடைந்தது. மேலும் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன் பலத்த காயமடைந்தார். இது தவிர சிலர் லேசான காயமடைந்தனர்.

    தகவல் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×